Thursday, March 17, 2011

நதி நீர் இணைப்பு மசோதா - வைகோ நாடாளுமன்றத்தில் பேச்சு -5

நதிகளை இணைப்போம்


11.08.2000 அன்று விவாதம் தொடர்கிறது...

அரசமைப்பு அதிகாரம்!

நீர்வளத்துறை அமைச்சர் (திரு. அர்ஜூன்சேத்தி) : தலைவர் அவர்களே! இந்த மதிப்புக்குரிய அவையில் திரு. வைகோ கொண்டு வந்த இந்த மாநிலங்களிடையே ஓடும் ஆறுகளை நாட்டுடைமையாக்குதல் மசோதாவை மீது மாண்புமிகு உறுப்பினர்கள் இந்த விவாதத்தின்போது தெரிவித்த கவலையிலும், அக்கறையிலும் நானும் பங்கு கொள்கிறேன்.

அனைத்துக் கட்சியினர் ஆதரவு!

திரு. வைகோ (சிவகாசி) : தலைவர் அவர்களே! முதலில்,இரு உறுப்பினர்களும், மாண்புமிகு அமைச்சரும் நீங்கலாக, இந்த மசோதாவை ஆதரிக்க முன்வந்த பல்வேறு அரசியல் கட்சிகளையும் சேர்ந்த மாண்புமிகு உறுப்பினர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களுடைய கவலையைக் கவனத்தில் எடுத்துக் கொள்வதற்கு அமைச்சர் உணர்வு பூர்வமாக ஒப்புக் கொண்டார். அதே சமயம், எனது நண்பர் மாண்புமிகு திரு. மணிசங்கர் ஐயர் அவர்கள், காவிரி நதி நீர்ப் பூசலின் கடுமையான பிரச்சினையை எடுத்துரைத்து அருமையாக உரையாற்றினார். மாண்புமிகு உறுப்பினர்கள் சுதர்சன நாச்சியப்பன், டாக்டர் நிதிக்ஷ் சென் குப்தா, கே. சுவைன், பேராசிரியர் ராசாசிங் ராவாத், வி. இராதாகிருக்ஷ்ணன், சிம்ரஞ்சித்சிங்மான், டாக்டர் சுசில் குமார் இந்தோரா, ஏ.சி. ஜோஸ், பி.எச். பாண்டியன், கிரிதாரிலால் பார்கவா, அரிபாவ் மகாலே, விஜேந்திரபால்சிங் ஆகியோர், மாநிலங்களிடையே ஓடும் நதிகளை நாட்டுடைமையாக்க வேண்டும் எனக் கோரி இந்த ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி நான் முன்மொழிந்த மசோதாவின் மீது அற்புதமான விவாதம் நடைபெறுவதற்கு உதவினார்கள்.

வி. இராதாகிருக்ஷ்ணன், தமது எதிர்ப்பை மிகத்தீவிரமாகக் காட்டினார். ஏனென்றால், மேற்கு நோக்கிப் பாயும் நதிகளிலிருந்து ஏராளமான நீர் அரபிக் கடலில் கலந்து வீணாவதைத் தடுத்து, அந்நீரை தமிழ்நாட்டுக்குத் திருப்பிவிடவேண்டும் என்று நாங்கள் வேண்டியபோது, அவர் தமது கவலையைத் தெரிவித்தார்.

குறுகிய நோக்கம்!

அரபிக் கடலில் வீணாகும் நீரைத் தமிழ்நாட்டுக்குத் திருப்பிவிடுவதால், கிடைக்கும் மின்விசை அவர்களுக்கும் பயன்படும். நீரின் பெயரால், அவர்களுக்கு உணவுத் தானியத்தையும் - அது அவர்களுக்கு எவ்வளவு தேவைப்பட்hலும் - நாங்கள் கொடுக்க முடியும். அவர் மிகவும் கடுமையாகத் தாக்கினார்; உணர்ச்சிவயப்பட்டுப் பேசினார். அவரைப் போன்ற நண்பர்கள் - உலகளாவிய கண்ணோட்டம் பற்றியும், பன்னாட்டுக் கண்ணோட்டம் குறித்தும் பேசுபவர்கள். ஆனால், எனது நண்பர் ஏ.சி. ஜோஸ் அவர்களை நான் பெரிதும் பாராட்டுகிறேன். அவரும் கேரளத்தைச் சேர்ந்தவர்தான். ஆயினும், மேற்கு நோக்கிப் பாயும் நீரைப் பயன்படுத்த வேண்டும் என்ற எங்கள் கருத்தை அவர் ஏற்றுக் கொண்டார்.

ஐயா! இந்த மசோதாவை நான் கொண்டு வந்ததற்கான நோக்கம் மிகத் தெளிவானது. மாநிலங்களிடையே ஓடும் ஆறுகள் அனைத்தின் மீதும் மத்திய அரசு தனி உரிமையும், கட்டுப்பாடும் கொண்டிருக்க வேண்டும். நீர் ஒதுக்கீட்டுக்காக வகுக்கப்படும் ஒரு திட்டத்தின்படி, மத்திய அரசு ஆறுகளின் நீரைப் பகிர்ந்தளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான், தொடர்புடைய மாநிலங்களின் நலன்கள் பாதிக்கப்படாமல், பல்வேறு மாநிலங்களிடையே நதிநீரைப் பகிர்ந்தளிக்க இயலும். அத்துடன், கிடைக்கக்கூடிய நீர் ஆதாரங்களை முறையாகப் பயன்படுத்துவதற்கும் முடியும்.

மசோதாவின் நோக்கம்!

ஐயா! ஏற்கெனவே இந்த விவாதத்தில் நான் நீண்ட உரையாற்றினேன். இந்த மசோதாவை என் நண்பர் திரு. மணிசங்கர் ஐயர் பாராட்டிப் பேசினார். அப்போது, இந்த மசோதாவின் நோக்கம், காவிரி நதிநீர்ப் பூசலை எல்லோருக்கும் எடுத்துரைப்பதுதான் என்று அவர் கூறினார். அதுவும் ஒரு காரணம்தான்; ஆனால் அது மட்டுமே காரணமில்லை. அண்மையில் இமாசலப்பிரதேசத்தில் ஏற்பட்ட அவல நிலையைப் பார்த்தோம். அங்கு விலைமதிக்க முடியாத உயிர்களை வெள்ளம் விழுங்கியிருக்கிறது.

இந்தியாவில் ஓரிடத்தில் வெள்ளப் பெருக்கினால் பயிர்கள் மட்டுமின்றி கிராமங்களும் அழிக்கப்படும் இயற்கையின் தண்டனையைக் காண்கிறோம். அதே சமயம், நாட்டின் சில பகுதிகளில், கடும் வறட்சியினால், மக்கள் அவதிப்படுவதைப் பார்க்கிறோம்.

“எங்கெங்கு காணினும் வெள்ளமடா!

குடிக்கத்தான் சொட்டுநீர் இல்லையடா!”

என்று ஒரு கவிஞர் கூறியது இங்கு நினைவுக்கு வருகிறது!

இன்று அமைச்சர் ஒப்புக் கொள்ளாமலிருக்கலாம். ஆனால், மாநிலங்களிடையே ஓடும் ஆறுகள் அனைத்தையும் நாட்டுடைமையாக்க வேண்டிய நாள் ஒன்று வந்தே தீரும். நம் நாட்டின் அந்த எதிர்காலக் காட்சியை என் கண்கள் காண்கின்றன. இந்தியா உலகில் ஒரு வல்லரசாக உருவாகும். உலகிலுள்ள எந்த நாட்டுடனும் ஒப்பிடமுடியாத அளவுக்கு இந்தியாவில் இணையற்ற வள ஆதாரங்கள் உண்டு. இந்த வள ஆதாரங்களுக்கு இணையான வளங்கள் உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லை. அபரிமிதமாக இருக்கின்ற அந்த வளங்கள் நாட்டின் நலனுக்காக - இந்நாட்டின் 100 கோடி மக்களின் நல்வாழ்வுக்காக - பயன்படுத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்துக்காக, என் மாண்புமிகு நண்பர் கூறியதுபோல், மாநிலங்களிடையே பாயும் ஆறுகள் அனைத்தையும் நாட்டுடைமையாக்குவதற்கான சட்டம் ஒன்றை அரசாங்கம் தானே கொண்டு வரும் நாள் ஒன்று வந்தே தீரும்.

பாரதியார் கனவு!

ஐயா! நாட்டின் ஒருமைப்பாடு பற்றிப் பேசுகிறோம். அப்போது நாம் வெள்ளையரை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தோம். இந்நாட்டின் தென்கோடியிலிருந்து நான் வருகிறேன். அங்கிருந்துதான் தலைவர் அவர்களே நீங்களும் வருகிறீர்கள். அங்குதான் கவிப்புயல் சுப்பிரமணிய பாரதியாரும் தோன்றினார். அவருடைய கவிதைகள் எரிமலைக் குழம்பாக வெடித்து வந்தன.

“கங்கை நதிப்புறத்துக்

கோதுமைப் பண்டம்

காவிரியின் வெற்றிலைக்கு

மாறு கொள்வோம்”

என்று பாரதியார் கனவு கண்டார். எனவே, கங்கைச் சமவெளியில் விளையும் கோதுமைக்கு, காவிரி வடிநில மக்கள் வெற்றிலையை பண்டமாற்றாகக் கொடுக்க முடியும்!

அதுதான் அவர் கண்ட கனவு! எனவே, இந்த நோக்கத்துக்காக, 1960களில் அமைச்சராக இருந்தவரும், தலைசிறந்த பொறியியல் வல்லுநராக விளங்கியவருமான டாக்டர் கே.எல். ராவ், கங்கையைக் காவிரியுடன் இணைப்பதற்கான ஒரு திட்டத்தை வகுத்தார். இத்திட்டத்துக்கு அபரிமிதமாகச் செலவாகும் என்றும், விந்தியத்துக்கு அப்பால் நீரை இறைப்பதற்கு மிகுந்த மின்விசை செலவாகும் என்பதால், இது நடைமுறையில் சாத்தியமில்லை என்றும் காரணங்கூறி இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

பிறகு அரசாங்கம், நதிநீருக்கான ஒரு தேசியக் கண்ணோட்டத்தை வகுத்தது. இது இருபகுதிகளைக் கொண்டிருந்தது. ஒன்று இமாலய நதிநீர்த் திட்டம்; இன்னொன்று தீபகற்ப நதிநீர்த் திட்டம். தீபகற்ப நதிநீர்த் திட்டத்தின்படி, நர்மதா, மகாநதி ஆறுகளின் நீரைத் தாமிரபரணி வரைக் கொண்டு செல்லலாம்.

எங்கள் உரிமையைக் கேட்கிறோம்

காவிரி நதிநீர்ப் பூசலைப் பொறுத்தவரையில், நாங்கள் எந்த மாநிலத்திடமிருந்தும் எந்தச் சலுகையையும் பிரச்சினையாகக் கேட்கவில்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக எங்களுக்கு இருந்துவந்த - நாங்கள் அனுபவித்து வந்த - உரிமையைக் கேட்கிறோம்.

நதிநீர்ப் பூசல்கள் குறித்து உலகெங்கும் நான்கு கோட்பாடுகள் நிலவுகின்றன. சூடானிலும் எகிப்திலும் நைல் நதிநீர்ப் பூசல்; ஐரோப்பாவில் ரைன் நதிநீர் பற்றிய பூசல்; மெக்சிக்கோவில் நதிகள் பற்றிய பூசல்; கானடாவில் நதிநீர்ப் பூசல். இந்தப் பூசல்கள் தொடர்பாக நான்கு கோட்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் அந்தப் பூசல்கள் சுமூகமாகத் தீர்க்கப்பட்டுள்ளன.

இந்த நான்கு கோட்பாடுகளில் ஒன்று ஹார்மோன் கோட்பாடு. இதனை நாம் ஏற்க முடியாது. இரண்டாவது, இயற்கை நீரோட்டக் கோட்பாடு. இதனையும் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. மூன்றாவது, முறையான நீர் ஒதுக்கீட்டுக் கோட்பாடு. கடைசியாக சமுதாய நலக் கோட்பாடு. ஹெல்சிங்கி உடன்பாட்டின்படி, இந்த நான்காவது கோட்பாடுதான் உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

எனவே, மாநிலங்களிடையே ஓடும் நதிகள் பற்றிய பிரச்சினைகளுக்கு ஒரு சுமூகமான தீர்வு காண்பதற்கு, நாட்டுக் குடிமக்கள் ஒவ்வொருவரின் ஒட்டுமொத்த நலன் கருதி, அந்த ஆறுகள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்படவேண்டும். இதுதான் இந்த மசோதாவின் நோக்கம்.

காவிரி நதிநீர்ப் பூசலைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டுக்கு 100 டி.எம்.சி. நீர் வந்திருக்க வேண்டும் என்று என் மாண்புமிகு நண்பர் சரியாகவே கூறினார். இடைக் காலத் தீர்ப்பில் 205 டி.எம்.சி. நீர் கொடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, ஆளுநரால் அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்கும் அளவுக்குக் கர்நாடக மாநிலம் சென்றது. அந்தச் சர்ச்சையில் இறங்க நான் விரும்பவில்லை. ஆனால், இந்தப் பிரச்சினை உச்சநீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்த அவசரச் சட்டங்கள் அரசமைப்பின் அடிப்படைக்கே முரணானது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்தது.

ஆகவே, வகுக்கப்பட்டுள்ள திட்டத்தின்படி, வாரவாரியாகவும், மாத வாரியாகவும், 205 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட நதியோர மாநிலம் கடமைப்பட்டதாகும். இதுதான் தத்துவம். புயலின்போது மாரி அன்னை வளமாகப் பொழியும்போது அவர்கள் தங்களைக் காத்துக் கொள்ள வேறு வழியில்லாமல் நீர் திறந்துவிட வேண்டியுள்ளது. இதைத்தான் அவர் விளக்கினார்.

எனவே, இந்த மசோதாவைக் கொண்டு வந்ததற்கான நோக்கம் தெள்ளத் தெளிவானது. இதனைப் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரித்தார்கள்.

நமது நண்பர் திரு. சிம்ரஞ்சித் சிங்மான், பஞ்சாபுக்கும் அரியானாவுக்குமிடையிலான நதிநீர்ப் பூசல் குறித்து உண்மையான கவலை கொண்டிருக்கிறார்.

மாண்புமிகு உறுப்பினர்கள் தங்கள் அரிய ஆலோசனைகளைக் கூறியதற்காக அவர்களுக்கு எனது நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது நோக்கம் நிறைவேறும் நாள் வரும்

தலைவர் : உங்கள் மசோதாவை ஆதரிக்கும்படி அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளுங்கள்!
(தொடரும்)

No comments: