Wednesday, January 29, 2020

இலங்கைப்பிரச்சினைப் பற்றி மு.வ.


இலங்கைப்பிரச்சினைப் பற்றி மு..

(1958 இல் ஈழத்தில் நடைபெற்றக் கொடுமைகளுக்குப் பின் தமிழா! விழித்து எழு! என்னும் நூலை ஈழத்தைச் சார்ந்த இணுவையூர் செ.நடராசன் 1958 இல் எழுதினார். இந் நூலுக்கு டாக்டர் மு.. போரிடுவதற்கு ஆசிரியரின் அன்பு நெறியே (அகிம்சை நெறியே) சிறந்தது என்னும் கருத்தை வரவேற்று வலியுறுத்தி முன்னுரை எழுதித் தந்தார். இம்முன்னுரை 27.12.58 இல் எழுதப்பட்டுள்ளது. ஈழத் தமிழர் இன்றைய சூழ்நிலையிலும் கூட இதுபற்றிச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.-தி.. மெய் கண்டார்).

இன்று வலிய பெரிய நாடுகள் சில வலிமையற்ற சிறிய நாடு களை அடக்கித் தம் ஆட்சியல் வைத்திருக்கும் கொடுமை கடிந்து பேசப்படுகிறது. உலக நாடுகளின் அமைப்பிலும் அப்பேச்சு அடிக் கடி கேட்கப்படுகிறது. வல்லரசுகள் சில அவ்வாறு செய்தல் பற்றிப் பழித்துரைக்கப்படுகின்றன. ஆனால் சிறுநாடுகள் தனித்தனியே உரிமையோடு வாழவிட வேண்டும் என்று கடிந்துரைக்கும் நல்ல நாடுகளில் அந்தக் கொடுமை நிகழாமல் இருக்கின்றதா? அந்த நாடுகளிலும் வலிமையுடைய பெரிய கூட்டம் வலிமையில்லாத சிறிய கூட்டத்தை அடக்கி வைத்திருக்க முயல்கிறது. உரிமையோடு பிரிந்து போகாத வகையில் தடுத்து வருகிறது. ஆகவே முக்கால் குருடன் முழுக் குருடனைக் குருடன் என்று பழிக்கும் நிலை யிலேயே இன்று உலக அரசியல் உள்ளது.

உலக வரலாற்றில் பழம் பெருமை உடைய இனம் தமிழனம். தமிழ் மன்னர்கள் வலிமையோடு  இருந்த காலத்தில் பிற நாடுகளை வென்றது உண்டு. ஆனால் அந்த நாடுகளை அடக்கி வைத்திருக் காமல் அப்போதே உரிமையோடு விட்டுவிட்டனர். ஆகவே, ஏகாதிபத்திய வெறியும் மற்றவர்களை ஆளும் கொடுமையும் இல்லாத அரசியல் முறை பழந்தமிழ் வேந்தரிடம் இருந்து வந்தது. ஆனால் இன்று தமிழினந்தான் வளர்ச்சியின்றி வாடும் நிலையில் உள்ளது. இலங்கைத் தமிழரின் நிலை இதற்கு நல்ல எடுத்து காட்டு. பிரிந்து வாழவிரும்பினாலும் வழி இன்றி உரிமையோடு கூட்ட ரசின் உறுப்பாக இருக்க முயன்றாலும் உதவி இன்றி இலங்கைத் தமிழினம் வாடுகின்றது. காலத்தின் கொடிய போக்கு இது.
பிறரை அடக்கி வைத்திருக்க வேண்டும் என்ற இந்தக் கொடிய நோக்கம் பழங்காலத் தமிழருக்கு இருந்திருந்தால் இலங்கை முழுவதும் தமிழே ஒரு மொழியாய் விளங்குமாறு செய்திருக்க முடியும். இந்தியாவிலும் ஒரு பாதி மக்களேனும் தமிழ் பேசுபவர் களாகச் செய்திருக்க முடியும். வேறு மொழிகள் வளர்ச்சி பெறாத காலம் அது. அவ்வாறு தமிழ் வேந்தர் அன்று செய்யத் தவறிய குறையால் இன்று தமிழ பேசுவோரின் தொகை குறைந்து மற்ற மொழிகள் பேசுவோரின் தொகை மிகுந்திருக்கக் காண்கிறோம். ஆகையால் மற்ற மொழியார் பெரிய பெரிய இனங்களாக வளர்ந்து இன்று யார்க்கும் தீமைசெய்தறியாத தமிழினத்தை அடக்கி வைத்திருக்க முயல்கின்றன.

உண்மையான உலக அமைதியையும் உரிமை நெறியையும் விரும்பும் அரசியல் தலைவர்கள் எந்த நாட்டையும் மதம், நில அமைப்பு, நிறம் முதலிய காரணம் பற்றிப் பிரிக்காமல் மிக இயற்கையான மொழிப்பற்றிப் பிரிப்பதற்கு உடன் பட வேண்டும். மதம் உள்ளத்தை ஒட்டியது. தனி மனிதரின் வாழ்வு பற்றியது. நில அமைப்பு அறிவியல் போக்குவரத்துக் கருவிகள் வளர்ந்துள்ள இக்காலத்தில் பொருட்படுத்த வேண்டாதது. நிறம் முதலிய வேறு பாடுகள், வாழ்வின் அடிப்படைக்குத் தேவையற்றவவை ஆயின், மொழி என்பதோ வாழ்வுக்கு  அடிப்படையானது. மக்கள் கூடி வாழ்வதற்கு  முதல் கருவியாக  உள்ளது. அறிவியல் எவ்வளவு முன்னேறிய போதிலும் அழிக்க முடியாதவாறு இயற்கையாக அமைந்துள்ளது. ஆதலின் மக்கள் வேறுகாரணங்களுக்காகப் பிரிந்து ஓர் இனமாக வாழ்வதைத் தடுத்து, மொழியின் காரணத்தால் இனமாகச் சேர்ந்து வாழ்வதைப் போற்ற வேண்டும். ஆயின் இந்த உண்மையை உணரும் தெளிவு இன்னும் அரசியலில் வளர வில்லை. அதனால் தொல்லைகள் பெருகுகின்றன.

இலங்கை யாழ்ப்பாணத்து திரு. செல்லையா நடராசன் எழுதியுள்ள இந்நூல் இந்த நல்ல நோக்கம் கொண்டு தமிழர்க்குப் புத்துணர்வு ஊட்ட முயல்வதாகும். வரலாற்று முறையிலும் இன்றைய பொருளியல் முறையிலும் தமிழர் சமுதாயத்தின் பெருமை சிறுமைகளை அவர் இந்நூலில் நன்கு எடுத்துரைத் துள்ளார். தமிழர் தம் உரிமைக்காகப் போராட வேண்டும் என்றும் அதற்காக ஒன்றுபட்டு விழித்துச் செயலாற்ற வேண்டும் என்றும் விளக்குகிறார்.  ஆயின் அவர் காட்டும் முறை அன்பு நெறியை- அகிம்சையை-அடிப்படையாகக் கொண்டது.

எங்களுக்கு முன்னே இரு வழிகள் உள்ளன. ஒன்று போர் நெறி. மற்றையது அன்பு நெறி. இந்த அணுயுகத்தில் போர் முறை உலகுக்கே கேடு சூழ்ந்துவிடும். போரில் வேண்டத்தகாத பேரரசுகள் தலையை நுழைத்துவிடும். பிறர் அழிவதோடு நாமும் அழிய வேண்டி ஏற்பட்டு விடும். ஆகவே போர் நெறி உதவாது. அன்பு நெறி தான் ஏற்றதுஎன்று அவர் கூறும் கருத்துக்கள் போற்றத் தக்கவை. அவர் தம் உள்ளத்தின் ஆர்வம் அளவற்றது. காட்டும் வழி தூயது. இலங்கைத் தமிழினம் இத்தகைய நல்லெண்ணங்களால் உருவாகி விளங்குவதாக உள்ளது.

No comments: