Saturday, November 27, 2021

ஈழத்தில் நடந்த இனப்படுகொலை -மலேசியாவில் நடைபெற்ற கருத்தரங்கம்

திராவிடர் விடுதலைக் கழக இணையத்தில் செய்தி...

ஈழத்தில் நடந்த இனப்படுகொலை” தொடர்பான மலேசியா கருத்தரங்கம்

BY ADMIN · NOVEMBER 23, 2015

மலேசியாவின், பினாங்கு மாநில துணை முதல்வர் முனைவர் பேராசிரியர் இராமசாமி அவர்களின் ஒருங்கிணைப்பில், பினாங்கு தமிழர் முன்னேற்ற இயக்கத்தின் சார்பாக, 21-11-2015 அன்று நடைபெறவிருந்த “ஈழத்தில் நடந்த இனப்படுகொலை” தொடர்பான கருத்தரங்கில் உரையாற்ற சென்றிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணியை, 20-11-2015 அன்று மலேசிய திராவிடர் கழகத்தின் சிலாங்கு மாநிலத் தலைவர் தோழர் பரமசிவம், செயலாளர் தோழர் பொன்வாசகம், பொருளாளர் தோழர் அன்பழகன், பெரியாரிய எழுத்தாளர் கவி ஆகியோர் அவர் தங்கியிருந்த அறைக்கு வந்து சந்தித்தனர்.

அடுத்து, அவரை தங்கள் மகிழுந்தில் அழைத்துக் கொண்டு, கி.பி. 11ஆம் நூற்றாண்டில் இராசராச சோழனும், இராசேந்திர சோழனும் கடல் வழியாய் வந்து கால்பதித்த கடாரத்துக்கு ( இன்றைய கெடா மாநிலம் ) அழைத்து சென்று , அங்கு நடக்கும் அகழ்வாய்வு இடங்களையும், புஜாங்க் பள்ளத்தாக்கு எனும் மலை, ஆறு, பள்ளத்தாக்காக உள்ள இயற்கை அழகு கொஞ்சும் பகுதிக்கும் அழைத்து சென்றனர். அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள சோழர் கால காசு, சிலைகள், உலோகப் பாத்திரங்கள், கட்டியிருந்த கோவில்களின் சொச்சங்கள், கிடைத்த இரத்தினக் கற்கள் கொண்ட பழம்பொருட் கண்காட்சியைப் பார்த்தனர். 

திராவிடர்க் கழகத்தின் மூத்த தோழர் ஜெயராமன், கழக ஆதரவாளர் செல்லா ஆகியோர் உடன் வந்து உதவினர்.  ஐ.நா.வின் யூனெஸ்கோ புஜாங்க் பள்ளத்தாக்கை, எதிர்வரும் 2016ஆம் ஆண்ட்டின் சுற்றுலாத் தளமாக அறிவுத்துள்ள நிலையில், திராவிடர் இயக்கங்கள் அனைத்தும் அங்கு கூடி ஒரு மாநாட்டை நடத்த வேண்டுமென்றும், அதற்காகும் செலவைத் தானே முன்னின்று அங்கத்தைய அரசின் உதவியோடு நடத்தித் தர அணியமாக உள்ளதாகவும் கழக ஆதரவாளர் செல்லா அவர்கள் உற்சாகம் பொங்கக் கூறினார்.

திரும்பும் வழியில், கெடா மாநில திராவிடர் கழகத் தலைவர் தோழர் கதிரவன், கழகத் தலைவரை வரவேற்று மதிய உணவு வழங்கினார்.

மாலை 4-00 மணிக்கு பினாங்கில் மாநில திராவிடர்க் கழகத்தின் சார்பாக, கழகத் தலைவரை வரவேற்று ஒரு கலந்துரையாடலை நடத்தினர். பினாங்கு மாநில திராவிடர்க் கழகம், இரு அலுவலக அறைகள், கணிணி அறை, கூட்ட அரங்கு ஆகியவற்றுடன் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருவது குறிப்பிடத் தக்க ஒன்றாகும். 

மாநிலக் கழகத் தலைவர் மூத்த தோழர் அண்ணாமலை அவர்கள் தாங்கள் மானமிகு வீரமணி அவர்கள் தலைமையை ஏற்று இயங்குபவர்கள் எனினும், தங்கள் நாட்டுக்கும், மாநிலத்துக்கும் வந்திருக்கிற பெரியாரிய இயக்கத்தவர் என்ற தோழமையோடு, இந்த கலந்துரையாடலை நடத்துவதையும், இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்து மத வெறியர் ஆட்சியை எதிர்க்க நாம் இணைந்து நிற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்’

கழகத் தலைவர் அவர்கள் மத்தியில் அரை மணி நேரம் உரையாற்றினார். உரையைத் தொடர்ந்து கழகத் தோழர்கள் எழுப்பியக் கேள்விகளுக்கும் உரிய விளக்கங்களை தந்தார்.அதன் பின்னர் மலேசியத் திராவிடர் கழகத்தின் தேசியக் கழகம் வெளியிட்டுள்ள ஆண்டு மலரையும், பினாங்கு மாநிலக் கழகம் தங்கள் மாநிலக் கழக மாநில மாநாட்டை ஒட்டி வெளியிட்ட மாநாட்டு மலரையும் நினைவுப் பரிசாக வழங்கினர்.

அதன் பின்னர், சிலாங்கு மாநிலத் தோழர்கள், கருத்தரங்குக்காக வருகை தந்திருந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரைச்  சந்தித்து உரையாடினர். கழக நூல்களையும் அவர்கள் பரிசளித்தனர்.

Tuesday, November 23, 2021

சீமான் கைத் தட்டலுக்காகப் பேசுகிறார்

 *சீமான், விளம்பர விரும்பி... 

கைத்தட்டலுக்காகப் பேசுகிறார்!”


- கொளத்தூர் மணி.

நன்றி:- ஜூனியர் விகடன்

`ஆமாம், நாங்க தான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். இந்திய ராணுவத்தை அமைதிப்படை என்ற பெயரில் அனுப்பி, தமிழின மக்களை அழித்தொழித்த தமிழின துரோகி ராஜீவ் காந்தியை, தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும்’ - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இந்தக் கடும் சர்ச்சைப் பேச்சு தான் தமிழக, ஏன் இந்திய அரசியலில் ஹாட் டாபிக். 

தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவரும், சீமானின் அரசியல் முகம் அறியாத கால கட்டத்திலேயே தனது இயக்கத்தின் கூட்டங்களில் மேடையேற்றிப் பேச வைத்தவருமான திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியிடம் இது தொடர்பாக சில கேள்விகளை முன் வைத்தோம்.

“உங்களுக்கும் சீமானுக்குமான தொடர்பு எப்படி உருவானது?”

“திரைப்பட வாய்ப்பு தேடி கிராமங்களிலிருந்து புறப்பட்டு வரும் பலருக்கும் அடைக்கலம் கொடுப்பார் கவிஞர் அறிவுமதி. அப்படி வந்தவர் தான் சீமான். 2001 ஆம் ஆண்டு, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தொடக்க விழா மாநாடு சென்னையில் நடத்தினோம். அதில் பேச, அறிவுமதி வருவதாக இருந்தது. ஆனால், அவரால் வர இயல வில்லை. சீமானை அனுப்பி வைத்தார். மேடை ஏறிய சீமான், பெரியாரிய கொள்கைகளைத் திறம்படப் பேசினார். நட்பு உருவானது. தொடர்ந்து அவரை மேடை ஏற்றினோம்.”

“விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் சீமானுக்கும் நேரடி தொடர்பு இருந்ததா?”

“அப்படி இருந்ததாகத் தெரிய வில்லை. 2008 இல் விடுதலைப்புலிகளின் ஊடகவியல் பிரிவு சார்பில் திரைப்படம் எடுப்பதற்கு தொழில்நுட்பம் தெரிந்த ஓர் இயக்குநர் வேண்டும் என என்னிடம் கேட்டார்கள். சீமானைப் பரிந்துரைத்தேன். அதே போல, விடுதலைச் சிறுத்தைகளின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசிடமும் கேட்டிருக்கிறார்கள். அவரும் சீமானையே பரிந்துரைத்துள்ளார். அதையடுத்தே விடுதலைப்புலிகள் ஊடகவியல் பிரிவினருக்குப் பயிற்சியளிக்க ஈழத்துக்குச் சென்றார் சீமான். 10 நாள் பயிற்சி முடிந்து திரும்பி வரும் போது, ஊடகவியல் பொறுப்பாளர் சேரலாதனிடம் ‘நான் பிரபாகரனைப் பார்க்க வேண்டும்’ என வற்புறுத்தியுள்ளார்.

அன்றைய தினம், புலிகளின் ராணுவக் கல்லூரி பட்டமளிப்பு விழா. அதற்காகத் தலைவர் பிரபாகரன் புறப்பட்டுக் கொண்டிருந்த போது சீமான் சந்தித்துள்ளார். சீமான் நுழைவாயிலில் சென்று வெளிவருவதற்கு 12 நிமிடம் தரப்பட்டது. பல கட்ட சோதனைகளுக்குப் பிறகே தலைவரைச் சந்திக்க முடியும். இதை வைத்துப் பார்த்தால், நான்கு நிமிடங்களுக்கு மேல் அவர் தலைவருடன் கழித்திருக்க வாய்ப்பில்லை. புகைப்படம் மட்டுமே எடுத்திருக்க முடியும். அதனால், ‘தலைவருடன் ஆமைக்கறி தின்றேன்’, ‘போர்க்கப்பலில் அரிசி மூட்டையில் தலைவரோடு அமர்ந்து போர்ப்பயிற்சி எடுத்தேன்’ என்று சீமான் சொல்வதெல்லாம் நம்பும் படியாக இல்லை.”

“திராவிட இயக்கங்களை கடுமையாக விமர்சனம் செய்கிறாரே சீமான்?”

“திராவிட இயக்கங்களுடன் முரண்படுவதற்கான அடிப்படைக் காரணம் என்ன என்பதை, அவர் இதுவரை சொல்ல வில்லை. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, ஈழத்தமிழர்கள் விஷயத்தில் உண்மையாகச் செயல்படக் கூடியவர். ஈழத்தமிழர்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு இருக்கிறது. அதை, சீமானால் ஜீரணிக்க முடிய வில்லை. அவரை ஈழத் தமிழர்களிடமிருந்தும், தமிழக தமிழர்களிடமிருந்தும் பிரிப்பதற்காக திராவிட எதிர்ப்பு ஆயுதத்தைத் தூக்கியிருக்கலாம் என்று கருதுகிறேன்.”

“சீமான், ‘நாங்கள் தான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம்’ என்று பேசியிருப்பது...”

“தற்போது இதைப் பேசியிருப்பது தேவையற்றது. மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, மாநிலக் கட்சிகளே இல்லாமல் அழித்தொழிக்கும் வேலையைச் செய்கிறது, வரலாற்றைத் திரிக்கிறது. புதிய கல்விக்கொள்கையைப் புகுத்துகிறது. மொழியை அழித்து இந்தி திணிப்பு செய்கிறது. இந்தத் தருணத்தில் அதிகாரமற்ற காங்கிரஸை எதிர்க்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது? சீமான் ஒரு விளம்பர விரும்பி. கைத்தட்டலுக்காக இப்படிப் பேசுகிறார்.”

“சீமான் பேச்சால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழுவர் விடுதலையில் பாதிப்பு ஏற்படுமா?”

“ராஜீவ் காந்தியின் மனைவியும் மகனும் ‘சட்டப்படி விடுதலை செய்வதில், எங்களுக்கு எந்த ஓர் ஆட்சேபனையும் இல்லை’ என்று சொல்லிய பிறகும், நீதிமன்றம் அதற்கு ஒப்புதல் அளித்தும் பா.ஜ.க அரசு அவர்களை விடுதலை செய்யவில்லை. ஆகையால், சீமான் பேச்சால் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனாலும் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இப்படிப் பேசியிருப்பது சரியல்ல. தற்போது மதுரை உயர் நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகளுக்குத் தடை நீட்டிப்பு தீர்ப்பாயம் வரும் சூழ்நிலையில் அதற்கும் இடையூறு ஏற்படலாம்.”

“உண்மையில் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள்தான் கொன்றார்களா?”

“தலைவர் பிரபாகரன், ‘அது ஒரு துன்பியல் சம்பவம்’ என்று சொன்னார். ‘துன்பியல் சம்பவம்’ என்றதற்காக ராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள் தான் கொன்றார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? அவர்களின் பிரதிநிதிகள் சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம்.”

நன்றி :- சே.பிரபாகரன் பெரம்பலூர்

கிராமக் கோயில் பூசாரி நல வாரியம்

 கிராமக்கோயில் பூசாரி நல வாரியம்

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில்களில் பணியாற்றும் கிராமக் கோயில் பூசாரிகளின் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் கிராமக்கோயில் பூசாரிகள் நல வாரியம் அமைத்து அரசாணை(நிலை) 72, தமிழ் வளர்ச்சி-பண்பாடு மற்றும் அறநிலையத்துறை, நாள்.15.3.2001-ல் ஆணையிடப்பட்டது.

வாரியத்திற்கு அரசு கடிதம்(நிலை) எண்.191, தமிழ் வளர்ச்சி-பண்பாடு மற்றும் அறநிலையத்துறை, நாள்.25.9.2001-ல் விதிமுறைகள் அரசால் வகுக்கப்பட்டுள்ளன. மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இவ்வாரியத்தின் தலைவர் ஆவார்.

இவ்வாரியத்தில், அறநிலையத்துறை, நிதித்துறை, வருவாய்த்துறை மற்றும் சமூக நலத்துறை, அரசு செயலாளர்கள், தொழிலாளர் துறை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், நில நிர்வாகத் துறை இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் (பொது) மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (தலைமையிடம்) ஆகிய 9 அலுவலர்கள் அலுவல்சார்ந்த உறுப்பினர்கள் ஆவர்.

இவ்வாரியத்தின் விதிமுறைகளின்படி 9 அலுவல்சாரா உறுப்பினர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசால் நியமனம் செய்யப்படுவார்கள்.

இவ்வாரியத்தில் உறுப்பினராக ஆவதற்கு 25 வயது நிரம்பியிருக்கவேண்டும் எனவும், 60 வயதிற்குள் இருக்கவேண்டும் எனவும், உறுப்பினர் பணிபுரியும் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராமப்புற திருக்கோயிலாக இருக்கவேண்டும் எனவும், வழிபாடு ஆரம்பித்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கவேண்டும் எனவும், உறுப்பினர் பணிபுரியும் திருக்கோயில் அனைவரும் வழிபடும் திருக்கோயிலாக இருத்தல் வேண்டும் எனவும் வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Saturday, November 20, 2021

நீதிக்கட்சி நூற்றாண்டு நினைவுக் கட்டுரை

நீதிக் கட்சி நூற்றாண்டு நிறைவு

சிறப்புக் கட்டுரை....

அய்யா வாலாசா வல்லவன் பதிவு....

நீதிக் கட்சி ஆட்சியில் அரிஜனங்கள் எவரும் அமைச்சராக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை ம.பொ.சி.யின் 'தமிழ்நாட்டில் பிற மொழியினர் 'என்ற நூலிலிருந்து மேற்கொள் கொடுத்துள்ளார் வழக்குரைஞர் பா. குப்பன் (பக்கம் -81) இது வழக்கமான குற்றச்சாட்டுதான். 

இதே மேற்கோளைப்  பழ. நெடுமாறன் தனது 'உருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்துப் பாசிசமும்'  என்ற நூலிலும் கொடுத்துள்ளார். 

இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1919 இல் இயற்றப்பட்ட மாண்டேகு செம்போர்டு சீர்திருத்தச் சட்டப் படி நடைபெற்றது நீதிகட்சி ஆட்சி இரட்டை ஆட்சி முறையாகும் நீதிக் கட்சி ஆட்சிக் காலம் முழுவதும் ஒரு முதலமைச்சர் 2 அமைச்சர்கள் என மொத்தம் 3 பேர் மட்டுமே அமைச்சர்களாக இருந்தனர்.

1935 ஆம் ஆண்டு இயற்றபட்ட சட்டப்படி இரட்டை ஆட்சி முறை நீங்கி விட்டது. முழுப் பொறுப்பும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களுக்கே இருந்தது.

1937 இல் அமைந்த இராஜாஜி ஆட்சியில் முதலமைச்சர் உட்பட 10 பேர் அமைச்சர்களாக இருந்தனர். 10 அமைச்சர்களில் தாழ்த்தப்பட்டவர் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் அல்ல. 

10 அமைச்சர்களில் முதலமைச்சர் இராஜாஜி, டி. பிரகாசம், டாக்டர் டி. எ. எ. இராஜன், வி. வி. கிரி ஆகிய 4 பேர் பார்ப்பனர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள். 

சபாநாயகரும் புலுசு சாம்பமூர்த்தி என்ற ஆந்திரப் பார்ப்பனரே. 

இது நியாயமா என்பதை ம. பொ. சி அன்பர்கள்தான் கூற வேண்டும். 

இராஜாஜி ஆட்சியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த வி.ஐ.முனிசாமிப் பிள்ளை என்பவரை  பொம்மையாக ஆட்சியில் அமரவைத்துக் கொண்டு ஆதிதிராவிடர்களுக்கு எதிராகப் பல காரியங்களை இராஜாஜி செய்தாரே அது நியாயமா?

15.8.1938 அன்று எம்.சி.ராஜா ஆதிதிராவிடர்கள் கோயில் நுழைவு மசோதா ஒன்றைச் சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். உடனே பிரதம மந்திரியார் எழுந்து தடுமாற்றத்துடன், தர்க்கதியற்ற விதமாய், ஒருவரும் நம்ப முடியாத வகையில் அம் மசோதாவை எதிர்த்துப் பேசியது மிக்க ஆச்சரியத்தை விளைவித்தது.... 

பிறகு முதலமைச்சர் உருக்கமாகப் பேசி இந்த மசோதவை நிறுத்தி வைக்கும் படி எம்.சி.ராஜாவிடம் சொன்னார்.....  அதற்கு எம்.சி.ராஜா பதில் அளிக்கும் போது நான் அவரை (முதலமைச்சரை) நம்பினேன். ஆனால் இப்பொழுது அவர் கூறுவதைச் செவியுற்றுக் கேளுங்கள்! 

இம் மசோதாவை வாபஸ் பெற்றுக் கொள்ளவும். சபையிலே இவ்விஷயம் விவாதிக்கப்படாமலிருக்கவும் வேண்டிய முயற்சிகளை இப்பொழுது செய்கிறார் இப்பிரதம மந்திரியார். இது அவருக்கே நியாயமாகத் தோன்றுகிறதா? நான் இவ்விஷயத்தில் பெரிதும் ஏமாற்றமடைந்தேன் என்று சட்டசபையிலேயே பேசினார்.

முதலமைச்சர் இராஜாஜி 45 நிமிடங்கள் இம் மசோதாவை எதிர்த்துப் பேசிக் காங்கிரஸ் கட்சியினர் யாரும் இதற்கு வாக்களிக்கக் கூடாது என்று கூறினார். 

வாக்கெடுப்பில் எம்.சி.ராஜாவின் ஆதி திராவிடர் கோயில் நுழைவு மசோதாவுக்கு ஆதரவாக 24 வாக்குகளும் எதிராக 130 வாக்குகளும் கிடைத்தன.  (ஆதாரம்: ஆரிய ஆட்சி பதிப்பாசிரியர் வாலாசா வல்லவன் பக் - 50 முதல் 56 வரை.)  

நீதிக் கட்சி ஆட்சியில் ஆதிதிராவிடருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை  என்றாலும் அவர்களுக்கான  அடிப்படை உரிமைகளை மறுக்க வில்லை.

ஆனால் இராஜாஜி ஆட்சியில் பொம்மையாக ஒரு அமைச்சரை உட்காரவைத்துக் கொண்டு அவரை அந்தச் சமூகத்துக்கு எதிராக வாக்களிக்க வைத்தார் இராஜாஜி.

நீதிக்கட்சி ஆட்சியில் மாபெரும் சமூகப் புரட்சிக்கு வித்திடப்பட்டது. இதை வெறும் தெலுங்கர்கள் ஆதிக்கம் செலுத்திய ஆட்சி என்று புறந்தள்ளி விட முடியாது. 

நீதிக்கட்சி ஆட்சியைத் தெலுங்கர்கள் ஆதிக்கம் மிகுந்த ஆட்சி என்று குறை சொல்லும் தமிழ்த் தேசியர்கள் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இராஜாஜி முதல்வராக இருந்தபோது 1937, 1952 ஆண்டுகளில் என்ன நிலைமை என்பதை மூடி மறைக்கின்றனர்.

1937 இல் இராஜாஜி  முதல்வராக இருந்த போது அவர் உள்பட 10 பேர் அமைச்சர்களாக இருந்தார்கள். 

அதில் டி.பிரகாசம், வி.வி.கிரி, பெசவாட கோபால ரெட்டி, மூவர் ஆந்திராவைச் சேர்ந்த அமைச்சர்கள்.

தமிழ் நாட்டைச் சேர்ந்த ப.சுப்பராயன், வி.ஐ.முனிசாமிப் பிள்ளை, எஸ். இராமநாதன், டி.எஸ்.எஸ்.இராஜன் என்கிற பார்ப்பனர் ஆக நால்வர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர்களாக இருந்தார்கள். 

மற்ற அமைச்சர்கள் கேரளாவையும், கன்னடப் பகுதியையும் சேர்ந்தவர்கள். சபாநாயகர் புலுசு சாம்பமூர்த்தி ஒரு ஆந்திரப் பார்ப்பனரே.

1952இல்  இராஜாஜி அமைச்சரவையில் 15 பேர் அமைச்சர்களாக இருந்தார்கள். 

அதில் என். ரங்கா ரெட்டி, எம். வி. கிருஷ்ணாராவ், என். சங்கர ரெட்டி, பட்டாபி ராமராவ், டி. சஞ்சீவய்யா ஆகியோர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் .

ஆர். நங்கன்னகவுடா, ஏ.பி.ஏ.ஷட்டி  கர்நாடகப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

வெங்கடசாமி நாயுடு தமிழ்த் தேசியவாதிகள் பார்வையில் தெலுங்கர்.

குட்டி கிருஷ்ணன் நாயர், கேரளாவை சேர்ந்தவர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ப. சுப்பராயன், வி.சி.பழனிச்சாமி, எம்.ஏ.மாணிக்கவேலர் (உழைப்பாளர் கட்சியைக் கலைத்துவிட்டு வந்ததால் அமைச்சர் பதவி)  சண்முக ராஜேவர சேதுபதி என 15 பேர் கொண்ட இராஜாஜி அமைச்சரவையில் 4 பேர் மட்டுமே தமிழர்கள்.

இதையெல்லாம் ம.பொ.சி எழுதமாட்டார். ஏனெனில் ராஜாஜி அவருடைய குருநாதர், நீதிக்கட்சியைப்பற்றி குறைக் கூறும் தமிழ்த் தேசியவாதிகள் இனியேனும் உண்மையை உணர்வார்களா?

நீதிக்கட்சி ஆட்சியில் ஆதிதிராவிடர்கள் பெற்ற நன்மைகள்:

'பள்ளர்', 'பறையர்' என்று இழிவாக உள்ள பெயரை மாற்றி 'ஆதி திராவிடர்' என்ற பெயரை எங்கள் சமூகத்திற்கு இட்டு அழைக்க வேண்டும் என்று எம்.சி.இராசா 20.02.1922 சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். 

அத்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. அதன் அடிப்படையில் இனி இச்சமூகத்தினரை 'ஆதித்திராவிடர்கள்' என்றே அனைத்து ஆவணங்களிலும் பதியவேண்டும் என்று அரசாணை எண் 217 சட்டம் (பொது) நாள் 25.03.1902இல் பிறக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.

• ஆதிதிராவிடர் பிள்ளைகளைப் பொது பள்ளிகளில் கட்டாயமாகச் சேர்க்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.  GO.No87 கல்வி நாள் 6.1.1923.

• அரசு மானியம் பெறும் பள்ளிகளில் ஆதி திராவிடர் பிள்ளைகளைச் சேர்க்க மறுத்தால் அரசு மானியம் இரத்துச் செய்யப்படும் என அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.  G.O.No. 88. கல்வி நாள் 16.1.1923.

• திருச்சி மாவட்ட நிர்வாகம் (District Board) ஆதிதிராவிடர் பிள்ளைகளை தனி இடத்தில் தங்கி படிக்க அனுமதி கோரியதை அரசு ஏற்க மறுத்து, ஆதி திராவிடப் பிள்ளைகளையும், மற்ற சாதிப் பிள்ளைகளையும் ஒன்றாகத்தான் படிக்க வைக்க  வேண்டும் என்று ஆணைப்பிறப்பித்தது. G.O.No. 2015 கல்வி நாள் 11.2.1924.

• தொடக்கப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் கட்டத் தொடங்கும் போதே ஆதி திராவிடப் பிள்ளைகள் அணுக முடியுமா? ஏனெனில் கோவில், அக்கிரகாரம், போன்ற இடங்களில் ஆதி திராவிடர் பிள்ளைகளை மற்ற சாதியினர் அனுமதிக்க மறுப்பார்கள் என்பதால் அதை ஆய்ந்து பார்த்து ஆதி திராவிடர் பிள்ளைகள் வருவதற்குத் தடையில்லாத இடத்தில் பள்ளிக் கட்டிடங்களைக் கட்ட அரசு ஆணைப் பிறப்பிக்கப்பட்டது. G.O.No..2333 நாள் 27-11-1922

• இந்தியாவிலேயே முதன் முதலாக ஆதி திராவிட மாணவர்கள் இலவசமாகத் தங்கி படிக்க.  ஆதி திராவிடர் மாணவர் விடுதி திறக்கப்பட்டது. G.O.No.2563 நாள் 24.10.1923.

• இதைக் கட்டுவதற்கான பணம் முழுவதையும் ஆதி திராவிடர் தலைவர் எம்.சி.ராஜா அவர்களிடமே கொடுத்து கட்டுவித்தார்கள்.

• 1931க்குள் ஆதி திராவிட மாணவர்களுக்கு மூன்று விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன.(T.G.Boag  ICS.  Madras presidency 1881 - 1931  g¡f« 132)

• ஆதி திராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அரசாணைப் பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 1243. நாள் 5.7.1922)

• ஆதி திராவிட மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதத் தேர்வுக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 1241 சட்டம் (கல்வி) நாள் 17.10.1922)

• ஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிலையைப் பற்றிய விவரத்தை அரசுக்கு அளிக்கவேண்டும் என்று அரசாணைப் பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 859 நாள் 22.06.1923)

• ஆதி திராவிட வகுப்பு மாணவர்களுக்கு நான்காம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை வழங்கத அரசாணைப் பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 1568 சட்டம் (கல்வி) நாள் 06.11.1923)

• ஆதி திராவிட மாணவர்களுக்கு சில பள்ளிகளில் தனி வகுப்பறைகள் இருந்ததை அரசு கண்டித்தது. ஆதி திராவிட மாணவர்களை அதிக எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்களுக்கு அதிக அளவில் அரசின் பண உதவி அளிக்கப்படும் என்று அரசாணைப் பிறக்கப்பட்டது. (அரசாணை எண் 205 கல்வி நாள் 11.02.1924)

• மருத்துவக் கல்லூரியில் பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பின் தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக்  கல்வி உதவித்தொகை வழங்க அரசாணைப் பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 866 (பொது) சுகாதாரம் நாள் 17.06.1922)

• சிதம்பரத்தில், சாமி சகஜானந்தம் ஆதித் திராவிடப் பிள்ளைகளுக்கென 1916இல் ஒரு பள்ளியைத் தொடங்கினார். ஆங்கில அரசிடம் நிலம் கேட்டார். அவர்கள் கொடுக்கவில்லை. அவர் திண்ணைப் பள்ளி மாதிரி நடத்தினார். பனகல் அரசர் தான் 50 ஏக்கர் நிலம் கொடுத்து அதை நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தி அங்கீகாரம் கொடுத்து, ஆண்டு தோறும் அரசின் நிதியுதவி கிடைக்கவும் வழி செய்தார்.....

தேசீயத்தைக் காய்ச்சி

தேசீயத்தைக் காய்ச்சி . . .

குத்தூசி குருசாமி

சூத்திரன் வேதத்தைக் கேட்பானேயானால் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும், என்று மனுதர்மம் கூறுகிறது!

அந்தப் பாச்சா இப்போ பலிக்காது! சூத்திரனிலும் சூத்திரனான, மாக்ஸ்முல்லர் வேதத்தைப் படித்தான். இங்கிலீஷில் மொழி பெயர்த்தான்!  அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றாத காரணம் என்னவோ? இப்போது மிலேச்சன் என்றாலும், பழைய வரலாற்றுப்படி ஆரியர் இனத்தான் தானே என்று நினைத்தோ? அல்லது ஈயத் தோட்டாவை நெஞ்சுக்குள் பதிய வைப்பானே என்று பயந்தோ? போகட்டும்! தாயாதிகள் விஷயம்!

ஈயத்தைக் காய்ச்சும் நினைப்பு மனுவோடு நின்றுவிட்டதா?  அதுதான் இல்லை! இப்போது புது ஈயத்தைக் கண்டு பிடித்திருக்கிறது, நம்மைப் பீடித்திருக்கும் பார்ப்பனீயம்! அதற்குப் பெயர்தான் தேசீயம்! 

இதை நன்றாகக் காய்ச்சித் திராவிடன் காதில் ஊற்றுகிறார்கள், அவன் தூங்கும்போது! ஊற்ற வருவதற்கு முந்தியே விழித்துக் கொண்டால் பிழைத்தான்! இல்லாவிட்டால் பார்ப்பனீயத்திற்கு அடிமையாக வேண்டியதுதான், கம்பன் மாதிரி!

பத்திரிகையில் ஒரு செய்தி படித்தேன். திருச்சி தேசீயக் கல்லூரிக்கு (நேஷனல் காலேஷ்) வைரவிழா நடத்தப் போகிறார்களாம்! அதற்கு நிதி வேண்டுமாம்! இந்தக் கல்லூரியைப் பற்றி எனக்கும் கொஞ்சம் தெரியும். சொல்கிறேன். 

 கொடைவள்ளல் பெத்தாச்சி செட்டியார் என்று ஒருவர் இருந்தாரே! அவர் சங்கீத உலகத்திற்குப் பணத்தை வாரி இறைத்தது போலவே, கல்விக்காவும் வாரி இறைத்தார். அந்த நீர்ப்பாய்ச்சலால் முளைத்த மரம்தான் திருச்சி நேஷனல் காலேஜ். அதன் ஒவ்வொரு செங்கல்லும், ஒவ்வொரு பிடி சுண்ணாம்பும் பெத்தாச்சி செட்டியாரின் பணத்தால் வாங்கப்பட்டது. யார் பணமாயிருந்தால் என்ன?

 மூளை குறைந்தவன் கோவில் கட்டினால், மூளை மிகுந்தவன் குடிபுகுந்து விடுகிறான்! புற்றெடுப்பது கறையான் தானே! ஆனால் குடியிருப்பது நல்ல பாம்பல்லவா?

தேசீயக் கல்லூரிக்குச் செட்டியார் பணம் கொடுத்தார். ஆனால் அதை அநுபவிப்பது பூதேவர் கூட்டம், தேசீயத்தின் பேரால்! 

 இந்தக்! கல்லூரிக்கு நிர்வாகக் கமிட்டியொன்று இருக்கிறது. அதில் இரண்டு பேர் தவிர, பாக்கி எல்லோரும் உள்நாட்டு வெள்ளையர்! இதில் திராவிடரும் பங்குபெற வேண்டுமென்று 2 வருஷங்களுக்கு முந்தி கோயமுத்தூர் பணக்காரர்கள் முண்டிப் பார்த்தார்கள். என்ன ஆச்சு தெரியுமா?

வெளிநாட்டு வெள்ளையன் இந்தியாவை விட்டாலும் விடுவான்! இந்த வெள்ளையனா தன் இடத்தை விட்டுவிடுவான்? 

புதிய அங்கத்தினர்களைச் சேர்க்க முடியாது, என்று சொல்லி விண்ணப்பங்கள் திருப்பியனுப்பப்பட்டன.

நிர்வாகக் கமிட்டி மட்டும் இவர்களின் ஏகபோக மிராசு என்று நினைத்து விடாதீர்கள்! 

உபாத்தியாயர்கள் அத்தனைபேரும் ஆரியர் களே! (ஒருக்கால் ஒரே ஒரு தமிழ்ப் பண்டிதர் மட்டும் இருக்கிறாரோ, என்னவோ!)

20 வருஷங்களுக்கு முந்தி தோழர் காந்தியார் வந்திருந்தார், அந்தக் கல்லூரிக்கு! அப்போது சமஸ்கிருதத்தில் வரவேற்பு வாசித்தளித்தார்கள், அவருக்கு. 'இந்த மொழி எத்தனை பேருக்குத் தெரியும்? கைதூக்குங்கள்!' என்றார் காந்தியார். 

சமஸ்கிருத ஆசிரியர் மட்டும் கைதூக்கினார்.

 உங்களுக்குத் தெரியாத பாஷையில் படித்துக் கொடுக்க வெட்கமாயில்லையா? என்று கேட்டார். பல்லை இளித்தார்கள், எல்லோரும்.  

இந்தத் தேசீயக் கல்லூரி மட்டுந்தான் இப்படி இருக்கிறது என்று நினைக்காதீர்கள்! எந்த ஊரிலாவது தேசீயப் பள்ளிக்கூடம் என்ற பேரால் ஒன்று இருக்குமேயானால், அது ஒரே பார்ப்பனீய மயமாயிருப்பதைக் காணலாம், நம் மக்களுக்குக் கண்ணிருந்தால்.தேசீயத்திற்கும் பார்ப்பனீயத் திற்கும் உள்ள இரத்தக் கலப்பு எவ்வளவு அதிகம் என்பதை இப்போதாவது தெரிந்து கொண்டீர்களா?

இம்மாதிரி தேசீயப் பள்ளிக்கூடங்களுக்குப் பண உதவி செய்யும் திராவிடன் தன் தலையில் ஒரு கூடை மண்ணைப் போட்டுக் கொள்வதோடு, தன் குழந்தைகள் வாயிலும் மண்ணைப் போட்ட புத்திசாலியாகிறான் என்பதைப் பெத்தாச்சி செட்டியார் மூலமாகவாவது தெரிந்துகொள்ள வேண்டாமா?

இதைப் படிப்பவர்கள், எடுத்துச் சொல்லுங்கள், திராவிடப் பண மூட்டைகளுக்கு!

Thursday, November 18, 2021

வ.உ.சி. அவர்கள் மறைவுற்ற நிலையில், தந்தை பெரியார் அவர்கள், குடி அரசில் அவரது மறைவு குறித்து, எழுதிய துணைத்தலையங்கம், இன்றைய தலைமுறை அவசியம் அறிய வேண்டிய ஒன்றாகும்.


”சிதம்பரம் சிதைவு” எனும் தலைப்பில் பெரியார் எழுதுகிறார்:


”தோழர் வி.ஓ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் முடிவெய்திவிட்டார். தனக்கு இயங்கும் சக்தி இருந்து ஓடி ஆடி உசாவித் திரியும் காலமெல்லாம் தனக்குச் சரியென்று தோன்றிய வழிகளில் உழைத்துவிட்டு, ஒடுக்கம் ஏற்பட்டவுடன் அடக்கமாகி விட்டார். இது மக்கள் வாழ்க்கையின் நியாயமான நிலையே ஆகும்.


மிக்க மந்தமான காலத்தில் அதாவது மனிதன் பொது நலமென்றால், மத சம்பந்தமான காரியம் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், அரசியல் என்றால் அது தெய்வீக சம்பந்தமானது என்றும், எப்படி எனில், கூனோ-குருடோ, அயோக்கியனோ- கொள்ளைக்காரனோ, ஒருவன் புருஷனாய் அமைந்துவிட்டால், பெய்யெனப் பெய்யும் மழை என்பதற்கு இலக்காகவும், பின் தூங்கிமுன் எழுபவள் போலவும் இருப்பதுதான் பெண்ணின் கற்புக்கு குறியென்றும், அக்கூட்டு தெய்வீக சம்பந்தமாய் ஏற்பட்டதென்றும் சொல்வதுபோல், அரசன் எப்படிப்பட்டவனாய் இருந்தாலும், ஆட்சி எப்படிப்பட்டதாய் இருந்தாலும், அரசனை விஷ்ணுவாய் கருதி, ஆட்சியை வேதக் கோட்பாடாகக் கருதி வாழவேண்டும் என்று இருந்த பார்ப்பனிய ஆதிக்க காலத்தில் மற்றும் தண்டனை, சிறை என்பவைகள் மகாஅவமானகரமாகவும், மகா இழிவாகவும், மகா கொடுமையாகவும், துன்பமாகவும் இருந்த காலத்தில், தென்னாட்டில் முதல் முதல் வெளிவந்து, அரசனை எதிர்த்து, அரசியலை இகழ்ந்து, துச்சமாய் கருதி, தண்டனையை அடைந்து, சிறைக் கொடுமையை இன்பமாய் ஏற்று, கலங்காமல் மனம் மாறாமல் வெளி வந்த வீரர்களில் முதன்மை வரிசையில், முதன்மை லக்கத்தில் இருந்தவராவார் நமது சிதம்பரம். அதன் பலன் எப்படியோ ஆனாலும், அவராலேயே அநேக பார்ப்பனரல்லாத மக்கள் உண்மை வீரர்களாகவும், சுயநலமற்றவர்களாகவும் வெளிவர முடிந்தது.


தோழர் சிதம்பரம் ஒரு பார்ப்பனராய் இருந்திருப்பாரானால், லோகமானியர், முனீந்திரர், சிதம்பரம் கட்டடம், சிதம்பரம் உருவச்சிலை, சிதம்பரநாதர் கோவில், சிதம்பரம் பண்டு, காங்கிரஸ் மண்டபங்களில் காங்கிரஸ் பக்தர் வீடுகளில் சிதம்பரம் கருத்து, சிலை, சிதம்பரம் உருவப்படம் இருக்கும்படியான நிலையை அடைந்திருப்பார். ஆனால் அவர் பிள்ளை, அதுவும் சைவப்பிள்ளயானாலும், “சூத்திரப்பிள்ளை” ஆனதால், அவர் வாழ்வு அவருக்கே அவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்காமல் இருந்தது என்பதோடு, அவருக்காக ஏற்படுத்தப்பட்ட பண்டுகூட வெளியிட யோக்கியதை இல்லாததாய் இருந்து வருகிறது.


சிதம்பரம் பிள்ளையின் அனுபவத்தை மற்ற தேசாபிமான பார்ப்பனரல்லாதாரும் அறியட்டும் என்பதற்காகவே இதைக் குறிப்பிட்டோம்.


அரசியல் உலகம் அவர் இறங்கின காலத்தில் ஒரு விதமாகவும், இப்போது ஒரு விதமாகவும் இருக்கிறபடியால், ஒரு அளவுக்கு பார்ப்பனரல்லாத தேச பக்தர்களைப்பற்றி ஆறுதல் அடைகிறோம். எப்படியெனில், பார்ப்பனரல்லாத தேச பக்தர்களை பார்ப்பனர் ஒரு அளவுக்காவது, வேஷத்துக்காகவாவது, அணைத்துத்தீர வேண்டிய நிலையில் வேறு பல இயக்கங்கள் நிர்ப்பந்தித்துக் கொண்டிருப்பதால் அதிகம் பயப்பட வேண்டியதில்லை.


ஆகையால், சிதம்பரம் பிள்ளையை ஒரு உதாரணமாகக் கொண்டு மற்ற தேச பக்தர்கள் அதற்கேற்றபடி நடந்து கொள்வார்களாக.


(குடி அரசு – துணைத்தலையங்கம் – 22.11.1936)

Monday, November 8, 2021

சிவன் சொத்து குலநாசம் என்று ஊளையிடும் கோமாளிகள் இதற்கு பதில் சொல்வார்களா?

Puthurmedu Swamy அவர்களின் முகநூல் பதிவு...(8.11.2021)

சிவன் சொத்து குலநாசம் என்று ஊளையிடும் கோமாளிகள்  இதற்கு என்ன பதில் சொல்வார்கள்.... 

பாவம் கபாலீஸ்வரர் மூலப்பத்திரம் தேடுகிறார். 

மயிலை (சென்னை) கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ,குத்தகையோ கொடுக்காமல்  அனுபவித்துக்  கொண்டிருக்கும்

 "இந்து விரோதிகள்" பட்டியலை அக்கோவிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 473 பேரில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். இந்துக்கள் 471 பேரில் சில முதலியார்கள் நாடார்கள்  தவிர பெரும்பான்மையோர் அய்யர்,

அய்யங்கார்களாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

கபாலி கோவில் சொத்துக்களை கொள்ளையடிக்கும் பார்ப்பனர்களின் பட்டியல் பெரியது. 

வாடகை கொடுக்காத  இந்து விரோத பிராடுகளின் பட்டியலில் முக்கியமானது பாரதிய வித்யா பவன்.  கதர் அணிந்த காக்கி டவுசர்  பேர்வழியும், காந்தி கொலைக்குப் பின்னர் ஆர்எஸ்எஸ் மீதான தடையை அகற்றுவதில் முக்கிய பங்காற்றியவருமான கே.எம். முன்ஷியால்  தொடங்கப்பட்ட நிறுவனம் தான் பாரதிய வித்யாபவன். இதன் முக்கிய தூண்களில் ஒருவர் ராஜாஜி. கல்வியை பரப்புவது என்ற பெயரில் பார்ப்பனியத்தையும்  சமஸ்கிருதத்தையும் பரப்பி வரும் இந்த ஆர்எஸ் ஆர்எஸ்எஸ் பினாமி நிறுவனம் கபாலீஸ்வரருக்கு வைத்திருக்கும் வாடகை பாக்கி 32 லட்சம்.  

அடுத்து மயிலாப்பூர் கிளப். ஜனவரி 1, 1903 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பெரும் பணக்காரர்களின் தனி உடமை கிளப்பான இது, 3 அய்யர், 3 அய்யங்கார் மற்றும் ஒரு முதலியாரை உரிமையாளராக கொண்டது. பின்னர் இதன் தலைவரானர் எம்ஏஎம் ராமசாமி செட்டியார். கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டு மேட்டுக்குடி குலக்கொழுந்துகளைத் தயார்படுத்தும் பயிற்சித்திடல், உறுப்பினர்களுக்கு சீட்டாட்டம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஜிம், வட இந்திய, தென்னிந்திய உணவு விடுதிகள் மற்றும் 24 மணிநேர பார் போன்ற வசதிகள், சாஸ்திரி ஹால் என, பல கிரவுண்ட் கோவில் நிலத்தை குத்தகைக்கு வளைத்துப் போட்டிருக்கும் இந்த ஆன்மீக மெய்யன்பர்கள் கபாலிக்கு வைத்திருக்கும்  குத்தகை பாக்கி 3.5 7 கோடி ரூபாய்.

 "தேசிய தலைவர்" என "பெத்த பேரு" வாங்கிய தெலுங்கு  பார்ப்பனரான நாகேஸ்வரராவினால் ஆரம்பிக்கப்பட்டு, ஊருக்கெல்லாம் தலைவலி தைலம் தரும் அமிர்தாஞ்சன் நிறுவனம் கபாலீஸ்வரர் வைத்திருக்கும் குத்தகை பாக்கி 6 கோடியே 45 லட்சம். 

 கல்விக்கும் ஒழுக்கத்துக்கும் பெயர் போனதாக பெருமையாக கொள்ளப்படும் பி.எஸ். ஹைஸ்கூல் என்று அழைக்கப்படும் பெண்ணாத்தூர் சுப்பிரமணிய ஐயர் மேல்நிலைப்பள்ளி, கோவிலுக்கு சொந்தமாக 76 கிரவுண்ட்  நிலத்தை 1928-ல் குத்தகை எடுத்து, பின்னர் குத்தகை ஒப்பந்தம்  1979-இல் புதுப்பிக்க பட்டிருக்கிறது. ஒரு கிரவுண்ட் நிலத்தின் சந்தை விலை ரூ 5 கோடிக்கு மேலாகும்.பல பிரபல உயர் அதிகாரிகளை உருவாக்கியதாக பீற்றிக்கொள்ளும் இந்த பள்ளி,  76 கிரவுண்டுகளுக்கு ஆண்டு குத்தகையாகரூ .1250 ஐ  மட்டும் ஒரே ஒரு முறை தந்துவிட்டு, கபாலீசுவரரைக் கோர்ட்டுக்கு இழுத்து வாய்தாவுக்கு விட்டுக் கொண்டிருக்கிறது.

காமதேனு திரையரங்குக்கு எதிரே கபாலீஸ்வரருக்கு சொந்தமான 25 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமித்து இருப்பவர் பார்த்தசாரதி அய்யங்கார். 

இன்று அந்த நிலத்தின் மதிப்பு 100 கோடிக்கு மேல். 1901-இல் 99 வருட குத்தகை எடுத்து ஐயங்கார் , இதனை உள் குத்தகைக்கு விட்டு, அது பல கை மாறி இன்று வணிக வளாகங்கள் உட்பட கட்டிடங்கள் எழுப்பப்பட்டு, 35 பேர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இப்படி போகிற பட்டியல்

முதலை வாயில் சிக்கிய இந்த சொத்துக்களை ஒவ்வொன்றாக மீட்பதற்கு நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள். 

பராமரிப்பு மிக்க மிக பெரிய மனிதர்களின் கிளப்பு என்று கூறப்படும் மயிலாப்பூர் கிளப்பின் வாசலில், "இது கபாலீஸ்வரர் கோயில் சொத்து" என்று போர்டு எழுதி வைத்திருக்கிறது இந்து அறநிலையத்துறை. அய்யர், அய்யங்கார் இதையெல்லாம் பார்த்துக் கூச்சப்பட்டு கபாலீஸ்வரர் சொத்தை திருப்பி கொடுத்து விடுவார்களா என்ன? 


 அற்ப வாடகை பாக்கிய கூட கொடுக்காமல், அறநிலையத்துறையை இவர்கள்  கோர்ட்டுக்கு இருப்பதன்  நோக்கமே கோயில் சொத்தை விழுங்குவது தான். 

     

இப்போது புரிகிறதா?

 "இந்து கோயில்களை  இந்துக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்" என்று  சங்பரிவார் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறது என்று எதற்காக*!!!

Thursday, November 4, 2021

ஆந்திராவில் இராவண விழா - கொளத்தூர் மணி உரை

 ஆந்திராவில் ‘இராவண விழா’


கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார் 


ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் அகில இந்திய தலித் உரிமைகள் அமைப்பு ஆண்டுதோறும் இராவணன் விழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ‘இராவண விழா’ அக்டோபர் 9ஆம் தேதி விசாகப்பட்டினத்திலுள்ள ‘அம்பேத்கர் பவனில்’ எழுச்சி யுடன் நடந்தது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பு விருந் தினராகப் பங்கேற்று, தமிழ் நாட்டில் பெரியார் நடத்திய இராமாயண எதிர்ப்பு இயக்கங்களின் வரலாறுகளையும் ‘இராமன்’ எரிப்புப் போராட்டம் மற்றும் ‘இராமலீலா’வுக்கு எதிராக நடத்திய ‘இராவண லீலா’ நிகழ்வுகளையும் விவரித்து விரிவாக ஆங்கிலத்தில் பேசினார். கழகத் தலைவர் உரையை தெலுங்கு மொழியில் பேராசிரியர் பிரக்ஞா மொழி பெயர்த்துக் கூறியபோது கூட்டத்தினர் பலத்த கரவொலி எழுப்பி வரவேற்றனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் சுருக்கம்.


“இராம லீலா நடைபெறும் தருணத்தில் இராவணனின் மேன்மையைக் குறித்து பேச இங்கு கூடியிருக்கும் நம்மிடையே மூன்று கேள்விகள் எழுகின்றன. முதலாவதாக, இராமாயணம் என்பது வெறுமனே ஒரு கற்பனைக் கதை மட்டுமே என்பதை புரிந்து ஏற்றுக்கொள்ளும் நாம் அதற்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை என்ன? இரண்டாவதாக, இந்து மதத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கடவுள்களில் இராமனும் ஒரு கடவுள். அவ்வளவுதான். அப்படியிருக்க இராமனை மட்டும் நாம் இவ்வளவு தீவிரமாக எதிர்க்கவும் விமர்ச்சிக்கவும் தேவை என்ன?


இறுதியாக, இராமாயணம் ஒரு கதை என்ற அளவில், அக்கதையின் ஒரு பாத்திரமாக உள்ள இராவணனை நாம் கொண்டாட வேண்டிய தேவை என்ன? இது குறித்து பெரியாரின் சிந்தனைகளை நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் தமிழகத்தில் இராமாயண எதிர்ப்பு இயக்கத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இராவணனைத் தங்கள் இனத்தைச் சேர்ந்தவனாக கொண்டாடும் மரபு உள்ளது. இவற்றிற்கு காரணமாக இருந்தது பெரியாரும், பெரியார் இயக்கமுமே. திராவிட மக்களின் மாண்பையும் பகுத்தறிவையும் முடமாக்கி அவர்களை மனிதத் தன்மையற்றவர்களாக ஆக்க ஆரியர்கள் பயன்படுத்திய கருவிகளில் முதன்மையான பிரச்சாரக் கதைகளாக இராமாயணமும் மகாபாரதமும் இருப்பதாக பெரியார் கருதினார். இராமாயணம் ஒரு கதையாக இருந்த போதும் நாம் அதை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதை அவர் குறிப்பாக விளக்குகிறார். இராமாயணம் மனு தர்மத்தை வலியுறுத்துகிறது. நம் மக்கள் அதனை பின்பற்றத்தகுந்த அளவில் அதில் எவ்வித தெய்வீகத் தன்மையோ, நீதியோ, கற்க வேண்டிய பாடமோ இல்லை. உண்மையில் இராமாயணம் என்பது ஆரிய பார்ப்பனர்கள் மேலானவர்கள் என்பதை நிரூபிக்க மட்டுமே உருவாக்கப்பட்டக் கதையாகும். அக்கதை நெடுகிலும் திராவிடர்களுக்கு எதிரான ஆத்திரமும் பழி உணர்ச்சியும் அழுத்தமாக உள்ளது. பல முக்கிய வரலாற்று உண்மைகளை இழிவுப்படுத்தி, ஆரிய – திராவிடப் போரை தங்களது சொந்த கற்பனைகளுடன் அது விளக்குகிறது. திராவிடர்கள் இராட்சதர்கள், அரக்கர்கள், அசுரர்கள், குரங்குகள் என்றே அழைக்கப்பட்டுள்ளனர். திராவிட மக்கள், தாங்கள் எவ்வாறு இழிவுப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை அவர்கள் உணருமாறு செய்ய வேண்டியது மிக முக்கியமானது என்று பெரியார் கருதினார். மேலும் இராமன் ஒரு சூழ்ச்சி மிகுந்த நேர்மையற்ற ஒருவனாக, நம் சொந்த மக்களை அழிக்க நம்மவர்களான குகன், சுக்ரீவன், அனுமான், விபீடணன் போன்றவர்களை பயன்படுத்தியவனாக, அதாவது நம்  கையைக் கொண்டு நம் கண்ணைக் குத்துவதில் தேர்ந்தவனாகவே பெரியார் பார்க்கிறார். இந்தக் காரணங்களுக்காகவே இவற்றிற்கு எதிரான ஒரு கலகமாக பெரியார் இராவணனை முன்னிறுத்தத் தொடங்கினார்.


பெரியார் இராமனின் சூழ்ச்சி பாங்கையும் இராவணனின் உண்மையான வீரத்தையும் விளக்குகிறார். திராவிடர்களின் ஆயுதம் வேல். ஆரியர்களின் ஆயுதம் வில்லும் அம்பும். அதனால்தான் ஆரியர்கள் வேல், வேலாயுதம் எனும் பெயர்களை வைப்பதில்லை. தண்டபாணி, கோதண்டராமன் போன்ற பெயர்களை தான் வைப்பார்கள். வில் அம்பு என்பது எதிரியை மறைந்து இருந்து கொல்லும் வல்லமைக் கொண்டது. அந்த வகையில்தான் இராமன் வாலியை மறைந்திருந்து கொன்றான். இராமனுக்கும் வாலிக்கும் எந்த பகையும் இல்லை. ஆனால் நமது ஆயுதமான வேல் நேருக்கு நேர் நின்று எதிரிக்கு அருகில் சென்று அவனைக் கொல்லக் கூடியது. இதுதான் திராவிட போர் முறைக்கும் ஆரிய போர் முறைக்கும் உள்ள வேறுபாடு. அதே போல, தமிழர் போர் மரபில் ஒரு வழக்கம் உண்டு. எடுத்த உடனேயே நேரடியாக போரை தொடுத்துவிட மாட்டார்கள். முதலில் சென்று எதிரி நாட்டில் உள்ள ஆடு மாடுகளை கவர்ந்து வருவார்கள். அது ஒரு எச்சரிக்கை. இதற்கு ஆநிரை கவர்தல் என்று பெயர். இந்த வகையில்தான் இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றான். தனது எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாடகையைக் கொன்று, தனது காதலை தெரிவித்த சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து அவமானப் படுத்திய இராமனுக்குப் பாடம் புகட்ட இராவணன் விரும்பினான். இராமன் ஒரு மன்னனின் மகனாக இருந்த போதும் அச்சமயத்தில் அவன் ஏதுவுமற்றவனாகவே இருந்தான். அதனால் அவனது மனைவியான சீதையை இராவணன் தூக்கிச் சென்றான்.


சென்றாலும், அவளை அசோக வனத்தில் மிகுந்த பாதுகாப்பாக, பெண் காவலர்கள் துணையுடன் வைத்திருந்தான். அதிலும், தனது அரச குடும்பத்திலிருந்து ஒருத்தியை, தனது சொந்த தம்பி மகளான திரிசடையை அவளுக்கு ஏவல் புரிய அனுப்பி வைத்தான். ஆக ஆநிரை கவர்தல் என்ற முறையிலேயே சீதையை இராவணன் கவர்ந்து சென்றான்


அது போல போர்க்களத்தில் இராவணன் மரணத் தருவாயில் இருக்கும் போது இராமன், இராவணன் அருகில் சென்று ஆட்சித் திறன் நுணுக்கங்களை கேட்டறியுமாறு இலட்சுமணனிடம் கூறினான் என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறது. இதைதான் பெரியார் சொல்கிறார். இராமாயணம் ஒரு கதையாக இருந்த போதும் திராவிடர்களின் மகிமையை அவர்களால் முழுமையாக மறைக்க முடியவில்லை என்கிறார்.


காங்கிரசில் இருந்த போதே பெரியார் தனது இராமாயண எதிர்ப்பைத் தொடங்கிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியது 1925-ஆம் ஆண்டில்தான். ஆனால் அவர் காங்கிரசில் இருந்த போதே, 1922-ஆம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில், தாழ்த்தப்பட்ட மக்களின் கோயில் நுழைவை வலியுறுத்திய தீர்மானத்தை முன்மொழிந்தார். அதனை கடுமையாக எதிர்த்தும் மறுத்தும் வைத்தியநாத அய்யர் என்ற ஒருவர் பேசிய போது, இராமாயணம், மனு சாஸ்திரம் போன்ற புனித நூல்கள் கூட இவற்றைத் தவறு என்றுக் கூறுவதாகக் குறிப்பிடுகிறார். உடனே பெரியார், “நான் மனித உரிமைகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை முன்மொழிகிறேன். அப்படியான மனித உரிமைகளை இந்த நூல்கள் மறுக்குமாயின், அந்த இராமாயணத்தையும் மனு சாஸ்திரத்தையும் எரித்து விட வேண்டியதுதான்” என்று மிக எளிமையாக, ஆனால் வலுவாக தனது எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்.


1926-ஆம் ஆண்டு தனது வார இதழான ’குடி அரசில்’ இராமாயண ஆராய்ச்சி என்ற தலைப்பில் பேராசிரியர் இ.மு.சுப்ரமணியப் பிள்ளை என்பவர் எழுதிய கட்டுரைத் தொடரை வெளியிடுகிறார்.


தொடர்ந்து இராமாயணத்தை விமர்சித்து பல வாதங்களை பெரியார் முன் வைக்கிறார். ஆரியர்களின் நாயகர்களான இராமனும் கிருஷ்ணனும் நமது நாயகர்களாக, ஆரியர்களால் உள்வாங்கப்பட்ட மன்னர்களாக இருக்கலாம் என்கிறார் பெரியார். வர்ணாசிரமம் என்பது மனிதர்களை வர்ணம் எனப்படும் நிறத்தின் அடிப்படையில் படிநிலைப்படுத்துவது. அப்படி பார்த்தால் இராமனும் கிருஷ்ணனும் ஆரியர்களின் நிறத்தில் இல்லை. அவர்கள் கருப்பர்கள். ஆசிரமம் என்பது வாழ்வின் நான்கு நிலைகளான பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வனப்பிரஸ்தம், சன்னியாசம். ஆனால் இராமனும் கிருஷ்ணனும் கிரகஸ்த நிலையிலேயே மரணம் அடைந்து விடுகின்றனர். அவர்கள் வனப்பிரஸ்தத்திற்கும் செல்லவில்லை.


சன்னியாசியாகவும் ஆகவில்லை. எனவே ஏன் அவர்கள் ஆரியர்களால் வெல்லப்பட முடியாத நமது மன்னர்களாக இருக்கக் கூடாது என்று பெரியார் கேள்வி எழுப்பினார்.


இட ஒதுக்கீட்டால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். ஆன நமது அதிகாரிகளைப் பார்ப்பனப் பெண்கள் மணந்துகொள்வதின் வழியே அவர்கள் பார்ப்பனர்களுக்கு மட்டுமே பயன்படக் கூடியவர்களாய் மாற்றப்படுவதில்லையா?


ஜவகர்லால் நேரு உட்பட பலரும் மகாபாரதம் என்பது ஆரியர்களுக்குள் நடந்த போர் என்றும் இராமாயணம் என்பது ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் பெரியார் இராமாயணத்தை மிகக் கடுமையாக எதிர்த்ததற்கு காரணம் உள்ளது. தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களின் நாயகராக இன்றளவிலும் போற்றப்படும் இராஜகோபாலாச்சாரியார், “பார்ப்பனர்களுக்கு சிக்கல் வந்தால் இராமாயணத்தை புரட்டிப் பாருங்கள், வழி கிடைக்கும்” என்று பலமுறை குறிப்பிட்டுள்ளார். அந்த அளவுக்கு


பார்ப்பனர்களுக்கான நூலாக அது இருப்பதால்தான் நான் அதனை ஆராய முற்படுகிறேன் என்கிறார் பெரியார். தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள பார்ப்பனர்கள் இராமாயணத்தைப் பயன்படுத்தினால் அவர்களின் மேலாதிக்கத்தை தகர்க்க நான் இராமாயணத்தை விமர்சிக்கிறேன் என்றார் பெரியார்.


அதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு இராவணன், இரணியன், மேகநாதன் என்று ஆரியர்களால் அரக்கர்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்டவர்களின் பெயர்களை குழந்தைகளுக்குச் சூட்டத் தொடங்குகிறார். தொடர்ந்து ஆரிய எதிர்ப்பின் அடையாளமாக புத்தரின் பெயர்களான கவுதமன், ராகுலன், சித்தார்த்தன் போன்ற பெயர்களையும் சூட்டுகிறார். இன்று வரை அந்த மரபு தமிழ்நாட்டில் தொடர்கிறது.


நான் முன்பே குறிப்பிட்டதைப் போல இராமாயணம் குறித்து பெரியார் தொடர்ந்து எழுதுகிறார். இராமாயண குறிப்புகள், வால்மீகி இராமாயண சம்பாஷணைகள் என்று ஆய்வு நூல்கள் வெளிவருகின்றன. இந்தப் பிரச்சாரங்களினால் ஈர்க்கப்பட்டு, சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த பேரா. பூர்ணலிங்கம் பிள்ளை என்பவர் 1928-ஆம் ஆண்டு ‘சுயஎயயே – வாந பசநயவ’ என்ற ஆங்கில நூலை எழுதி வெளியிடுகிறார். பின்னர் அது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது.


இதற்கிடையே பல முறை இராமாயணம் எரிக்கப்பட வேண்டிய ஒரு நூல் என்பதை பெரியார் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.


இந்த குரல் வலுக்க வலுக்க, இதற்கு எதிர்ப்பும் எழுகிறது. 1943-ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நாவலர் சோமசுந்தர பாரதியார், பேராசிரியர் இரா. பி. சேதுப் பிள்ளை போன்ற புகழ்பெற்ற தமிழ் அறிஞர்களுக்கும் இடையே “எரிக்கப்பட வேண்டியதா இராமாயணம்” என்ற தலைப்பில் பல விவாதங்கள் நடந்தன. சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் வாதிட்டவர் பின்னர் தமிழக முதல்வரான சி. என். அண்ணதுரை ( அண்ணா ) யாவார்.


1944-ஆம் ஆண்டு “இராமாயண பாத்திரங்கள்” என்ற தலைப்பில் இராமனின் உண்மை முகத்தைத் தோலுரித்தும், இராவணனின் மேன்மையை விளக்கியும் நூல் ஒன்றினை பெரியார் எழுதி வெளியிடுகிறார். இதில் சிறப்பு என்னவெனில், இந்த நூலில் மேற்கோள் காட்டப்பட்டவை அனைத்தும் வால்மீகி இராமாயணத்தில் இருந்து எடுக்கப்பட்டவை மட்டுமே. ஆரியர்கள் போற்றும் நூலிலிருந்தே அவர்களுக்கு எதிரான வாதங்களை முன் வைத்தார்.


1944-ஆம் ஆண்டு கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய பிறப்படுத்தப்பட் டோர் மாநாட்டில் பங்கேற்ற பெரியார் இராமாயணத்தை விமர்சித்து நீண்ட உரை ஆற்றுகிறார். அவரது உரை முடிந்த உடன் கூடியிருந்த மக்கள், “இராவணாக்கி ஜே“ என்று முழக்கமிடுகின்றனர்.


இந்தத் தொடர் பிரச்சாரங்களினால், தமிழ் நாட்டில் சாதாரண மக்களிடம் கூட இராவணன் என்ற பெயருக்கான பிம்பம் முற்றிலுமாக மாறுகிறது. சுய மரியாதை இயக்ககத்தின் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், இராவணனின் மேன்மையைப் போற்றி பா ஒன்றை படைக்கிறார். அதனால் ஈர்க்கப்பட்ட புலவர் குழந்தை 1946- ஆம் ஆண்டு இராவணனை காவியத் தலைவனைக் கொண்டு “இராவண காவியம்” என்ற ஓர் காப்பியத்தைப் படைக்கிறார். 12-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழில் வெளியான காப்பிய வகை நூல் இது மட்டுமே.


இந்த நூல் 1948-ஆம் ஆண்டு தடை செய்யப்படுகிறது. அதே ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் 19-ஆவது மாநில மாநாட்டில் இராமாயண எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்குவதான அறிவிப்பு ஒரு தீர்மானமாக நிறைவேற்றப்படுகிறது.


1954-ஆம் ஆண்டு இராமனை கேலி செய்து “இராமாயணம்” என்ற தலைப்பிலான நாடகம் ஒன்றை எம். ஆர். இராதா மேடையேற்றுகிறார். இந்த நாடகத்தில் வால்மீகி இராமாயணத்தின் வரிகளை நேரடியாக மேடையிலேயே வாசித்து, அந்த வரிகளுக்கு ஏற்ப இராமன் ஒரு கையில் சோமபானமும் மறு கையில் மாமிசத்தையும் உண்டவாறு மேடையில் நுழைவார். பின்னர், பரத்வாஜரின் ஆசிரமத்திற்கு விருந்துண்ண சென்ற இராமனுக்கு பரத்வாஜர் கொழுத்த இளம் பசுங்கன்றின் மாமிசத்தை சமைக்கச் செய்வார். இதனை விளக்கும் வரிகளும் வால்மீகி இராமாயணத்தில் இருந்து வாசிக்கப்படும். இராமன் மாட்டுக்கறி உண்ணும் காட்சி மேடையில் அரங்கேறும். அவர் அந்த நாடகத்திற்கு இட்டத் தலைப்பு இராமாயணமாக இருந்த போதும், அதைத் தாங்கிக் கொள்ள இயலாதவர்கள் அதனை “கீமாயணம்” என்று விமர்சித்தனர்.


இந்நாடகத்திற்கு மக்கள் பெருங்கூட்டமாக எழுச்சியுடன் வந்ததைத் தொடர்ந்து இந்நாடகத்திற்கெனவே “தமிழ்நாடு நாடகக் கட்டுப்பாடு சட்டம் – 1954“ என்ற ஒரு புதிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியது. இந்நாடகத்திற்காகவே எம். ஆர். இராதா அவர்கள் 54 முறை கைது செய்யப்பட்டுள்ளார். அப்படி அவர் கைது செய்யப்படும் பல நேரங்களில், ஒரு கையில் சோமபானம் கொண்ட மொந்தையையும், மறு கையில் மாமிசத்தையும் ஏந்தியவாறு, இராமன் வேடத்திலேயே எம். ஆர். இராதா செல்வார். “இராமன் செல்ல வேண்டிய இடத்திற்குதான் செல்கிறான்” என்று கூறியவாறே அவர் காவலர்களுடன் செல்வார். அரசின் இந்த ஒடுக்குமுறையைக் கண்டு வெகுண்ட பெரியார், தனது அனைத்து நிகழ்ச்சி களையும் இரத்து செய்து விட்டு சென்னையில் ஒரு மாதம் முழுவதும் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரத்தை மட்டுமே மேற்கொண்டார். இந்த நிலையில் 1954-ஆம் ஆண்டு இராஜ கோபாலச்சாரி “சக்கரவர்த்தி திருமகன்” என்றதலைப்பில் தொடர் ஒன்றை எழுதத் தொடங்குகிறார். அவர் பதவியை இழக்கும் போதெல்லாம் இவ்வாறு ஏதாவது எழுதுவது வழக்கம். 1939-ஆம் ஆண்டு இதே போன்று முதலமைச்சர் பதவியை இழந்தபோது ’வியாசர் விருந்து’ என்று மகாபாரதத்தைக் குறித்து எழுதினார்.


 


பின்னர் 1954-இல் சக்கரவர்த்தித் திருமகன் என்று இராமாயணத்தைப் பற்றி எழுதத் தொடங்குகிறார். இதற்கு எதிர்வினையாக (பின்னர் தமிழத்தின் முதல்வரான) கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் “சக்கரவர்த்தியின் திருமகன்” என்ற தலைப்பில் கிண்டலாக எழுதத் தொடங்குகிறார். இராஜகோபாலாச்சாரியின் தந்தையின் பெயர் சக்கரவர்த்தி ஆகும். ஆக, இராமனையும் இராஜ கோபாலாச்சாரியையும் ஒரு சேர குறிக்கும் வகையில் அந்தத் தலைப்பை அவர் வைத்தார். பின்னர் கருணாநிதி “பரதாயணம்” என்றத் தலைப்பில் மற்றொரு தொடரையும் எழுதினார். நாளுக்கு நாள் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரம் வலுபெற்று வந்த நிலையில் 1956-ஆம் ஆண்டு புத்தரின் 2500-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இராமர் பட எரிப்புப் போராட்டத்தைப் பெரியார் அறிவித்தார். பெரியார் ஒரு நாத்திகராக அறியப்படுகிறார். அது உண்மைதான். அவர் கடவுள் மறுப்பாளர்தான்.


ஆனால் பெரியார் வெறுமனே நாத்திகர் மட்டுமல்ல. அவரது முதன்மைக் கொள்கை ஜாதி ஒழிப்பே. “நான் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றேன். அவர்கள் அது மதத்துடன் இணைந்தது என்றார்கள். அப்படி ஆண்ட மதத்தை ஒழிக்க வேண்டும் என்றேன். அது வேதங் களினால் உருவாக்கப்பட்டது என்றார்கள். நான் வேதங்களை ஒழிக்க வேண்டும் என்றேன். அது கடவுளால் அளிக்கப்பட்டது என்றார்கள். எனவே நான் கடவுளை கேள்விக்கு உள்ளாக்க வேண்டி வந்தது. கடவுளை அழித்தால்தான் ஜாதி ஒழியு மெனில் அந்த கடவுளை நான் அழிப்பேன்” என்கிறார் பெரியார்.


 


“இந்நாட்டில் மதம் என்பது மக்களை முட்டாளாக்கி, அவர்களை அடிமைப்படுத்தவே உதவுகிறது. எனவே நான் இந்த இந்து மதத்தை ஒழிப் பதையே என் குறிக்கோளாகக் கொண்டுள்ளேன்” என்கிறார் பெரியார். இந்த அடிப்படையிலேயே பெரியார் இராமர் எரிப்புப் போராட்டத்தை அறிவிக்கிறார். வெறுமனே நாத்திகப் போராட்டமாக அல்ல. இதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர்தான், இதே போன்றதொரு புத்தர் பிறந்த நாளில், விநாயகர் சிலை உடைப்புப் போராட்டத்தை அறிவித்து அதை செய்தும் காட்டியிருந்தார் பெரியார். எனவே இராமர் பட எரிப்புப் போராட்ட அறிவிப்பு பெரும் கொந்தளிப்பையும் எழுச்சியையும் ஏற்படுத்தியது. ஏறத்தாழ 6000 பேர் இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.


1959-ஆம் ஆண்டு குடி அரசுக் கட்சி (Republican Party) வட இந்தியாவில் பல இடங்களில் பெரியாரின் கூட்டங்களை நடத்தியது. இவற்றின் இறுதிக்கூட்டம் கான்பூரில் நடைபெற்றது. ஏற்கனவே 1957-ஆம் ஆண்டு பெரியார் எழுதிய “இராமாயண குறிப்புகள்” நூல் “சுயஅயலயயே – ய கூசரந சுநயனேைப” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து வெளியிடப்பட்டிருந்தது. அந்த ஆங்கில நூலினை லாலாபாய் சிங் யாதவ் என்பவர் “சச்சி இராமாயண்” என்ற தலைப்பில் இந்தியில் மொழிப் பெயர்த்து அம்மாநாட்டில் வெளியிடுகிறார். அந்த மாநாட்டிலேயே 3000 படிகள் விற்றுத் தீர்ந்தது. 1970-ஆம் ஆண்டு இந்நூல் உத்தர பிரதேசத்திலும் தில்லியிலும் தடை செய்தனர்.


பெரியார் இறந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு 1976-ஆம் ஆண்டு பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று இந்நூல் மீதான தடை உச்ச நீதிமன்றத்தால் இரத்துசெய்யப்பட்டது.


பெரியார் தொடர்ந்து இராமாயணத்தை விமர்சிப்பதைக் கண்டித்து பெரியார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் நாட்டு சட்டமன்றத்தில் காங்கிரசு கட்சியினர் கண்டனம் எழுப்புகின்றனர். இதனைத் தொடர்ந்து இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க அரசு முடிவு செய்கிறது. இதனை அறிந்த பெரியார், “நீங்கள் எங்கள் பிரச்சாரத்தைத் தடை செய்வீர் களானால், உண்மையில் அரசியல் சட்டத்திற்கு எதிராக உள்ள இராமாயணத்தைதான் நீங்கள் தடை செய்ய வேண்டும். அரசியல் சட்டம் அனைவருக்கு சம உரிமையும் வாய்ப்பும் வழங்க வேண்டும் என்று கூறுகிறது.


ஆனால் இராமாயணமோ சமத்துவத்திற்கு முற்றிலும் எதிரானதாக உள்ளது. எனவே இராமாயணத்தை தடை செய்யாமல், இராமாயணத்தை நான் விமர்சிப்பதற்காக நடவடிக்கை எடுப்பீர்களானால்… இதோ நான் அதை எரிக்கவே போகிறேன்” என்று அறிவிக்கிறார். 1966ஆம் ஆண்டு மைலாப்பூரில் அய்யாயிரம் பேருக்கு மேலாக கலந்துகொண்ட நிகழ்வில் இராமாயண எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.


1971ஆம் ஆண்டு பெரியார், தமிழகத்தின் முக்கிய நகரமான சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தினார். அந்த ஊர்வலத்தில், வால்மீகி இராமாயணத்தில் கூறியபடி, ‘அசுவமேதயாகம்’ என்ற (குதிரைகளுடன் தசரதன் மனைவியர் உறவுகொண்டு இராமன் பிறந்தான் என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறது) முறையில் இராமன் பிறந்ததையும், இந்து கடவுள்களின் புராணங்கள் கூறும் ஆபாச பிறப்புகளையும் படங்களாக சித்தரித்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.


அப்போது சில ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் (ஹிந்து மிஷன் ) ஊர்வலத்தின்மீது செருப்பு வீசினர். உடனே பெரியார் தொண்டர்கள் அந்த செருப்பை வீசியவர் மீது திருப்பி வீசாமல், ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட இராமன் படத்தின் மீது அடித்துக் கொண்டே ஊர்வலத்தில் வந்தனர். மாநாட்டின் இறுதியில் இராமனின் 10 அடி உயர உருவ பொம்மை எரிக்கப்பட்டது. அந்த நிகழ்வு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.


அதே 1971-ஆம் ஆண்டு பெரியார் ஓர் அறிவிப்பை வெளியிடுகிறார். “15 நாட்களுக்குள் இராமாயணத்தை தடை செய்யவில்லை எனில், எங்கள் ஆட்கள் குடிகார இராமனாகவும் விபச்சாரி சீதையாகவும் வேடமிட்டு மாநிலமெங்கும் சென்று சூத்திர சம்பூகன் எவ்வாறு வஞ்சகமாக கொல்லப்பட்டான் என்பதை நடித்துக் காட்டுவார்கள்” என்று அறிவித்தார்.


இதே போன்றதொரு போர்க் குணத்துடன் இருந்தவர்தான் பெரியார். அவரைத் தொடர்ந்து திராவிடர் கழகத்திற்கு தலைமையேற்ற மணியம்மை யார் அவர்கள். 1974ஆம் ஆண்டு மணியம்மையார் அவர்கள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கு ஓர் கடிதம் எழுதினார். “இராம லீலா என்ற பெயரில் எங்கள் திராவிடர் மன்னர்களான இராவணன் மற்றும் இந்திரஜித் ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. இதனை உடனே தடை செய்ய வேண்டும். ஏனெனில் இது திராவிடர்களாகிய எங்களை இழிவுப்படுத்துவதாகவும் எங்களை இரண்டாம்தர குடிமக்களாக சிறுமைப் படுத்துவதாக வும் உள்ளது” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடு கிறார். ஆனால் அந்த ஆண்டு அக்டோபர் 18-ஆம் நாள் இராம லீலா இந்தியாவெங்கும் கொண்டாடப் படுகிறது. இதற்கு எதிர்வினையாக, அதே ஆண்டு டிசம்பர் 24-ஆம் நாள், பெரியாரின் முதல் நினைவு நாள் அன்று நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் “இராவண லீலா” என்ற பெயரில் இராமன், இலட்சுமணன் மற்றும் சீதையின் பொம்மைகள் எரிக்கப்பட்டன. அதற்காக திராவிடர் கழகத்தின் முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.


அதன் பின்னர் 1996-ஆம் ஆண்டு திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்து தொடங்கப்பட்ட பெரியார் திராவிடர் கழகம் என்ற பெரியார் இயக்கம் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இராவண லீலாநடத்தியது. எதிர் வரும் அக்டோபர் 12 அன்று, தோழர் இராமகிருட்டிணன் தலைமையிலான பெரியார் இயக்கமான தந்தை பெரியார் திராவிடர் கழகம், சென்னை சமஸ்கிருத கல்லூரியின் வாசலில் இராவண லீலா நடத்த உள்ளது. இராமன், இலட்சு மணன் மற்றும் சீதையின் பொம்மைகள் எரிக்கப்பட உள்ளன. அதுவும் ஆரியர்களின் அடையாளமாக உள்ள சமஸ்கிருதக் கல்லூரியின் வாசலில்.


தற்போதைய காலக்கட்டத்தில் இராமனின் உண்மை முகத்தைக் காட்டவும் இராவணனைப் போற்றவும் நமக்கு முன்னெப்போதையும் விட அதிக காரணம் உள்ளது. இவை இரண்டுமே கற்பனை கதாபாத்திரங்கள் என்பதை நாம் அறிவோம். இராமாயணம் என்பது நாம் சிறு வயதில் படித்த கற்பனை தேவதைக் கதைகளை போன்ற ஒன்றேயன்றி வேறு இல்லை என்பதையும் நாம் அறிவோம். ஆனால் நாம் இராவணனை போற்ற வேண்டிய காரணம் என்ன?


இராமாயணத்தை நமக்கு சொல்பவர்கள் நமது சிந்தனையில் எதனை திணிக்க விரும்புகிறார்கள்? ஒரு காலத்தில் இராமனின் படங்கள் அவனது துறவு கோலத்தைக் குறிப்பதாக இருக்கும். காவியுடைஅணிந்து மனைவி சீதையுடனும் தம்பி இலட்சுமணனுடனும் காட்டுக்குச் செல்லும் இராமனின் படங்களையே நாம் அதிகமாக பார்த்திருப்போம்.


அதற்கடுத்தக் காலக்கட்டத்தில் இராமன் பட்டாபிஷேகப் படங்கள் அதிகமாக வெளியாயின.


தற்போது இந்துத்துவ அமைப்புகள் பெரும்பாலும் பயன்படுத்தும் இராமனின் படங்கள் போர்வீரன் கோலத்தில் கையில் வில்லேந்தியவையாக உள்ளன.


இப்போது கடவுளாக அல்லாமல் போர் வீரனாக இராமன் முன்னிறுத்தப்படுகின்றான்.


ஒரு காலத்தில் இந்து மதம் பக்தியை போதித்தது. அதற்கு துறவு இராமன் பயன்பட்டான். அதற்கடுத்தக் காலக்கட்டத்தில் ஆரியர்கள் வெற்றி பெற்றவர்கள் என்பதையும் திராவிடர்கள் தோற்றவர்கள் என்பதை யும் குறிக்க பட்டாபிஷேக இராமனின் படங்கள் பயன்பட்டன. தற்போது தனது எதிரிகளை அழித்தொழிக்கு போர் வீரனாக அவனை முன்னிறுத்துகின்றனர்.


யார் அவனது எதிரிகள்? : இராட்சர்கள் – யார் இக்காலத்திய இராட்சர்கள்? இசுலாமியர்கள், சூத்திரர்கள் மற்றும் தலித்துகள். எல்லா முஸ்லிம்களும், எல்லா சூத்திரர்களும் எல்லா தலித்துகளுமா? இல்லை. எதிர்த்து நிற்கும் முஸ்லிம்கள், சூத்திரர்கள் மற்றும் தலித்துகள். அனுமான்களும் உள்ளனர். அடிபணியும் சூத்திரர் களும் தலித்துகளும் முஸ்லிம்களும். அனுமன் எவ்வாறு இராமனின் காலடியில் உள்ளானோ அவ்வாறோ நமக்கு நமது இடத்தை காட்ட அவர்கள் விரும்புகிறார்கள். அப்துல் கலாம் போன்று பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு அடிபணிந்து செல்பவர்களை அவர்கள் போற்றுகிறார்கள். பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்ப்பவர்கள் அனைவரையும் அவர்கள் இராட்சசர்களாக, அரக்கர்களாக, தேச விரோதிகளாக முன்னிறுத்து கிறார்கள். அதிலும் பி.ஜே.பி அரசு பதவியேற்றப் பிறகு இது மிகுதியாக அதிகரித்துள்ளது.


தற்போதைய மோடி அரசு பதவியேற்ற பிறகு எவ்வளவு முனைப்புடன் சமஸ்கிருதத்தைத் திணிக்கிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம்.


ஆசிரியர் தின விழாவை குரு உத்சவ் என்பதும் பள்ளிகளில் குரு பூஜைகள் நடத்தச் சொல்வதும் நடக்கிறது. இது ஓர் எடுத்துக் காட்டு மட்டுமே.


இவ்வாறு பல வழிகளில் சமஸ்கிருதம் திணிக்கப்படும்


அதே வேளையில், இந்த இந்துத்துவ அரசு ஆரியர்கள் மேலானவர்கள் என்றும் திராவிடர்கள் கீழானவர்கள் என்றும் தொடர்ந்து மறைமுகமாகவும் நேரடியாகவும் வலியுறுத்தி வருகிறது.


இந்த நிலையில் இராவணனை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட தற்போது அதிகரித்துள்ளது. அது இராவணன் என்ற ஒரு கதா பாத்திரத்திற்காக அல்ல. மாறாக, திராவிடர்  களாகிய நமது சுயமரியாதையை நிறுவுவதற்காக.


இராவணன், மகிசாசுரன் என்ற திராவிடர் இன பாத்திரங்களை கொடூரமானவர்களாக சித்தரித்து அதன் மூலம் நமது சுயமரியாதைக்கு அவர்கள் இழுக்குத் இழைப்பதற்கு எதிராக… நமது வளமான திராவிட மரபை நினைவுகூரும் விதமாக… நாம் இதனைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது.


ஓணம் பண்டிகைக்கு மாற்றாக வாமன ஜெயந்தியை பா.ஜ.க முன்னிறுத்திய போது, கேரளாவின் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் இருவருமே அதனை எதிர்த்து “நாங்கள் எங்கள் திராவிட மரபை (னுசயஎனையைே டுநபயஉல) விட்டுக் கொடுக்க மாட்டோம். வாமன ஜெயந்தி என்று இதற்கு பெயர் சூட்ட முனைவதை கடுமையாக எதிர்க்கிறோம்” என்று அறிக்கை வெளியிட்டனர். இத்தகைய ஒன்றிணைந்த செயல்பாட்டினையே நாமும் மேற் கொள்ள வேண்டும் என்று கூறி விடைபெறுகிறேன்.


விழா நிகழ்ச்சி : ‘இராவணாடே மகாநீயுடு’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இராவண விழாவுக்கு அகில இந்திய தலித் உரிமைக்கான அமைப்பின் மாவட்ட தலைவர் கே. வெங்கட்டரமணா தலைமை தாங்கினார். ஆந்திர பல்கலைக்கழக மானுடவியல் துறைத்தலைவரும், மிகச் சிறந்த கருத்தாளர் பேச்சாளருமான முனைவர் பி.டி சத்யபால், விசாகப்பட்டினம் எஃகு தொழிற்சாலை துணை மேலாளர் முனைவர் மாதுரி சிறீனிவாசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் முன்னணி அமைப்பான ‘அய்த்வா’வின் ஆந்திர மாநில தலைவர் வி. பிரபாவதி, ஆந்திர மனித உரிமைக் கழக மாவட்ட தலைவர் கே. சிறீதர மூர்த்தி, ‘முல்னிவாஸ்சங்’ (மண்ணின் மைந்தர்கள் சங்கம்) அமைப்பைச் சார்ந்த இரவி சித்தார்த், கல்யாண் ராவ், நாத்திகர் மய்யத்தைச் சார்ந்த இலாசரஸ் ஆகியோர் நிகழ்வில் உரை யாற்றினர்.


– நமது செய்தியாளர்


பெரியார் முழக்கம் 27102016 இதழ்

Tuesday, November 2, 2021

பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடர் சேர்க்கை - உண்மை வரலாறு

 பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடர் சேர்க்கை : உண்மை வரலாறு


கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர், 

திராவிடர் கழகம்


‘இந்து தமிழ்’ நாளிதழில் 22.10.2021 அன்று வெளியான ம.வெங்கடேசனின் ‘பச்சையப்பன் கல்லூரியில் பட்டியலினத்தோர் சேர்க்கப் பட்டது எப்படி?’ கட்டுரையை வாசித்தேன். ‘நீதிக்கட்சி ஆதிதிராவிட மக்களுக்காக எது வும் செய்யவில்லை’ என்பதாக உருவாக்கப் படும் அவதூறுகள், கட்டுக்கதைகளின் ஒரு பகுதிதான் இது!


பச்சையப்பன் கல்லூரிப் பிரச்சினை பற்றி ரெட்டைமலை சீனிவாசன் 1893-இல் குறிப்பிடுகிறார். 1906-இல் அயோத்திதாசரின் ‘தமிழன்’ ஏட்டில் ஒரு குறிப்பு இருக்கிறது. 1917-இல் பிட்டி.தியாகராயர், தான் அறக்கட்டளையில் தலைவராக இருந்தபோதே பச்சையப்பன் கல்லூரியில் அனைத்து மாணவர்கள் சேர்க்கை மறுக்கப்பட்டது பற்றிப் பேசியிருக்கிறார். இதற்காக எம்.சி.ராஜா குரல் கொடுத்திருக்கிறார். 1921-ல் சட்டசபையிலேயே இப்பிரச்சினை பற்றி நீதிக்கட்சியின் ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனாரும் முகமது உஸ்மான்சாகிபும் பேசியிருக்கிறார்கள். இப்படிப் பல்வேறு காலகட்டங்களிலும் பேசப்பட்டுவந்த பிரச்சினைதான், 1927-இல் வழக்காக வந்து மீண்டும் கவனம் பெறுகிறது.


பச்சையப்பன் கல்லூரியில் மட்டுமில்லை; பெரும்பாலான இடங்களிலும் இதுதான் நிலை. ஆதிதிராவிடர் உள்ளிட்ட பிற மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் இருந்ததால்தான், இரட்டை ஆட்சி முறையில் இருந்த குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்டு, பள்ளிக் கல்வி தொடங்கி, கல்லூரிக் கல்வி வரை அனைத்து மக்களுக்கான உரிமைக்காகப் பல ஆணைகளை, உதவிகளை நீதிக்கட்சி அரசு செய்யத் தொடங்கியிருந்தது.


* நான்காம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்த ஆதிதிராவிட மாணவர்களுக்கு, மாதத்துக்கு இரண்டு ரூபாய் முதல் ஏழு ரூபாய் (ஒரு பவுன் 13 ரூபாயாக இருந்த காலகட்டத்தில்) கல்வி உதவித்தொகை.


* இலவச நண்பகல் உணவு.


* வணிகக் கல்வி படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்குக் கல்விக் கட்ட ணத்தைத் திருப்பியளித்தது.


* மருத்துவக் கல்லூரியில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை.


* பள்ளிகளில் ஆதிதிராவிட மாணவர் களுக்கென்று தனி வகுப்புகள் அமைக் காமல், எல்லா வகுப்புகளையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்பதற்கான ஆணை.


* ஆதிதிராவிட மாணவர்களை அதிகம் சேர்க்கும் பள்ளிகளுக்குக் கூடுதல் நிதி உதவி; சேர்க்காத பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட மாட்டாது என்ற ஆணை.


* கல்லூரிகளில் அனைத்து வகுப்பாரும் சேர்க்கப் படுவதற்கான மாணவர் சேர்ப்புக் குழுக்கள் அமைப்பு.


இப்படி, ஒவ்வொரு கட்டமாக ஆதிதிராவி டர்களுக்கான தடைகளெல்லாம் தகர்க்கப் பட்டு வந்தன நீதிக்கட்சியால்!


பெரியாரின் தாக்கம் தந்த மாற்றம்


காங்கிரசில் இருந்தபோதும், வெளியேறிய பிறகும் இத்தகைய ஜாதி-தீண்டாமை ஒழிப்புக் காகவும், சமூக நீதிக்காகவும்தான் பெரியார் போராடினார்; குரல்கொடுத்தார். 


‘‘பிராமணரல்லாத இந்துக்களுடைய வகுப் புவாரிப் பிரதிநிதித்துவத்தைவிட தீண்டப் படாத சமூகத்தின் வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் மிகவும் முக்கியமானது என்பதை நாம் கோபுரத்தின் மீதிருந்து சொல்லுவோம். ஏனெனில், அவர்கள் சமூகப் பெருக்கத்திற்குத் தக்கபடி கல்வியிலோ உத்தியோகத்திலோ மற்றும் பல பொது வாழ்க்கையிலோ முன்னே றவே இல்லை. சுமார் 25 வருடங்களுக்கு முன்பாகவாவது இச்சமூகங்களுக்கு வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருக்குமே யானால், இன்றைய தினம் இந்தியாவில் இருக்கும் இவ்வளவு அபிப்பிராய பேதங்களும், ஒற்றுமையின்மையும், பிராமணக் கொடு மையும் நமது நாட்டில் இருக்குமா?’’ என்று கேட்டவர் பெரியார். (குடிஅரசு 8.11.1925) இந்துக்களாகக் கருதப்பட்டு, ஆதிதிராவி டர்களும் சேர்க்கப்பட வேண்டும் என்பது மட்டும் பிரச்சினையில்லை. இந்துக்கள் அல்லாதோர் என்ற வகையில், இஸ்லாமி யருக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இடம் மறுக்கப் பட்டுவந்தது. அனைவருக்குமான பிரச்சினை யாகத்தான் அதை நீதிக்கட்சி அணுகியது.


நீதிக்கட்சியின் கடுமையான தீர்மானம்


1927 அக்டோபர் 22, 23 ஆகிய இரு நாட்கள் பனகல் அரசர், சர்.ஏ.ராமசாமி உள்ளிட்ட ஏராளமான நீதிக்கட்சித் தலைவர்கள் பங்கேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பெரியார் எழுச்சியுரை ஆற்றினார். அந்த மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவரான சுரேந்திரநாத் ஆரியா கொண்டு வந்த முக்கியமான தீர்மானம் எது தெரியுமா?


‘‘பச்சையப்பன் கல்லூரியிலும், அவர்களின் அறக்கட்டளை நிர்வகிக்கும் பள்ளிகள், மாணவர் விடுதிகளிலும் ஆதிதிராவிடர், முஸ்லிம், கிறித்துவ மாணவர்களும் படிக்கச் சேர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் கல்லூரியின் அறங்காவலர்களுக்கு வலியுறுத்தி இந்த மாநாடு கூறுகிறது.


...இந்தக் கோரிக்கையை அறக்கட்டளை ஏற்றுச் செயல்படத் தவறினால், அக்கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கும் மானியத்தை அரசு விலக்கிக்கொள்ள வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது” என்ற கடுமையான எச்சரிக்கையுடன் இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


இந்நிலை பச்சையப்பன் கல்லூரியில் மட்டும் இல்லை என்பதை, இதே மாநாட்டில் ஆர்.வி.சொக்கலிங்கம் என்பவர் முன்மொ ழிந்த தீர்மானம் எடுத்துக் காட்டுகிறது. கல்லூரி சேர்க்கைக் குழுக்களையும் தாண்டி, தனித்து வமான விதிமுறைகளைக் காட்டி பச்சையப்பன் அறக்கட்டளையில் இந்துக்கள் அல்லாதோர் தவிர்க்கப்பட்டுவந்த நிலையில், ஆதிதிராவிட மாணவர்களைச் சேர்க்க மறுக்கும் பள்ளி களுக்கு நிதி உதவி ரத்து என்ற ஆணையை (கல்வி.87, 16.1.1923) கல்லூரிகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என்பதைத்தான் இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.


என்.சிவராஜின் வரலாற்றில்


1927-இல் நடைபெற்ற வழக்கில், அறங் காவலர் குழுவின் முடிவு சாதகமாக இல்லாத சூழலில், வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. பிறகு, நீதிக்கட்சி ஆதரவோடு சட்டமன்றத்தில் இடம்பெற்றவரான என்.சிவராஜ், அவரது மாமனார் வி.ஜி.வாசுதேவப் பிள்ளை ஆகியோரின் முயற்சியாலும், நீதிக்கட்சியின் கோபதி நாராயணசுவாமி செட்டி அவர்களின் தலையீட்டாலும் 1928-இல் பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிட மாணவர்கள் சேர்க் கப்பட்டுள்ளனர். ஆனால், ம.வெங்கடே சனோ பிரச்சினை முடியும் வரை நீதிக்கட்சியும், பெரியாரும் இது பற்றி எதுவும் பேசவே இல்லை என்று உண்மைக்கு மாறான கருத்தை முன்வைக்கிறார்.


பனகல் அரசரின் ஆலோசனையிலேயே சுப்பராயன் செயல்படுகிறார் என்று கருதித் தானே, சைமன் கமிஷனை சாக்காக வைத்து சுயராஜ்ஜியக் கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டது; அதை திராவிடர் ஆதரவு ஆட்சி என்று குறிப்பிட்டதில் என்ன தவறு?


நன்றி: 'இந்து தமிழ் திசை' (1.11.2021)

Monday, November 1, 2021

பி.ஏ.கிருஷ்ணனுக்கு இன்னொரு மறுப்பு -ஆசீப் நியாஜ்

 பி.ஏ.கிருஷ்ணனுக்கு இன்னொரு மறுப்பு !

*********************************************************

- ஆசீப் நியாஜ் அவர்கள் 01.11.2017 இல் எழுதிய முகநூல் பதிவு


இப்போதெலாம் பெரியார் எனப் பார்த்தாலே கண்ணை மூடிக் கொண்டு அடித்து விடுவதில் பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுக்கு நிகர் அவரே ! இன்று ஒரு பதிவில் 1933 ஆம் ஆண்டு 9 மாதச் சிறைத் தண்டனை பெற்ற பெரியார் மன்னிப்புக் கடிதம் கொடுத்து 1934 மே மாதமே வெளிவந்துவிட்டார் என்கிறார். இது எதற்கு என்றால் சவர்க்கார் மன்னிப்புக் கடிதம் கொடுத்தது பற்றி விமர்சித்தது தவறாம். அவர் 10 ஆண்டுகள் அந்தமான் சிறையில் இருந்தாராம். அதனால் சவர்காரை பெரிய ஆளுமையாகவும், பெரியாரை வெத்து வேட்டாகவும் ஆங்கிலேய அரசு பார்த்ததாம்.


லண்டன் கர்சன் வில்லி கொலை (சுட்டது மதன் லால் டிங்கரா) மற்றும் நாசிக் கலெக்டர் ஜாக்சன் கொலை (சுட்டது ஆனந்த் லக்ஷ்மண் கான்ஹரே) என இரண்டுக்கும் மூளையாய்ச் செயல்பட்டதாய் லண்டனில் கைது செய்யப்பட சவர்கார் இந்தியா வரும் வழியில் கப்பலின் கழிவறை சன்னலை உடைத்துத் தப்பித்து மீண்டும் பிரான்ஸ் நாட்டில் பிடிபட்டார். யாரிடம் ஒப்படைப்பது என்ற வழக்கின் படி பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைக்கப்பட்ட சவர்காரை 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்தமானுக்கு அனுப்பியது. ஒரே ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதி வெளியே வரவில்லை. வந்த மூன்றாண்டுக்குள் நான்கு முறை மன்னிப்புக் கடிதம் எழுதினார். பின் பல முறை மன்னிப்புக் கடிதம் வழங்கிய பின் "என்னை விடுதலை செய்தால் நான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருப்பேன்" என எழுதிக் கொடுத்தே வெளி வந்தார்.எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா??  இதையேதான் பாரதியும் கடலூர் சிறையிலிருந்து எழுதிய மன்னிப்புக் கடித்தில் எழுதினார். (I once again assure your Excellency that I have renounced every form of politics, I shall ever be loyal to the British Government and law abiding.) என்ற பாரதியின் வரிகளைத்தான் சர்வாகாரும் எழுதினார்..பாரதி கடயத்தில் இருந்ததைப் போலவே சவார்காரும் சகலத்தையும் அடக்கிக் கொண்டு ரத்தினகிரியில் இருந்தார். 2 கொலை, வரும் போது தப்பி ஓட்டம், வரிசையா மன்னிப்புக் கடிதம்.. இதலாம் ஒரு பெருமையா ??? !!


1930-லேயே பொதுஉடமைக் கருத்துக்களைப் பேச ஆரம்பித்துவிட்ட பெரியார் 1932-ல் ரஷ்யா சென்று, அந்நாளைய சோவியத் யூனியன் ஜனாதிபதி காலினினை நேரில் சந்தித்து உரையாடியவர். செஞ்சதுக்க மே தின விழாவில் உரையாற்றியவர். ரஷ்யா செல்லும் முன்னரே மார்க்ஸ் & எங்கல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையையும் (4.10.1931), லெனினும் மதமும் என்ற நூலையும் (11.12.1931) வெளியிட்டார். பின் 29.12.1933-ல் ஈரோட்டில் தனது வீட்டில் சுயமரியாதைத் தொண்டர்களைக் கூட்டி 'சமதர்மத் திட்டத்தை' வெளியிட்டார்.இது "ஈரோட்டு பாதை" எனவும் அறியப்படும். தன்னுடைய சுய மரியாதை இயக்கத்தில் சமதர்மப் பிரிவு என ஒன்றை ஆரம்பித்து தமிழகமெங்கும்சமதர்மச் சங்கங்களைத் துவக்கினார். மே தினம் சமதர்மப் பெருநாள் என தமிழகம் முழுவதும் சுய மரியாதை இயக்கத்தாரால் கொண்டாடப்படும் என14.5.1933 குடி அரசில் அறிவித்தார்.


சரி, விசயத்திற்கு வருவோம் பொதுஉடைமை பேசியதற்காக 1933 டிசம்பரில் கைதாகி மன்னிப்புக் கொடுத்து வெளிவந்ததாகச் சொல்வது பொய் !


29.10.1933 அன்று குடி அரசில் "இன்றைய  ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?" என்றத் தலைப்பில் ஒரு அறிக்கை எழுதுகிறார். இதற்காகத்தான் பெரியார் மீது ராஜதுவேஷ குற்றச்சாட்டுச் சுமத்தப்படுகிறது. பெரியாரின் தங்கை கண்ணம்மாள் அவர்களும் குடி அரசு "பதிப்பாளர்" என்ற முறையில் இதே குற்றச்சாட்டிற்கு உள்ளாகிறார். அத்தோடு குடி அரசுக்கு ரூ.2000 ஜாமீன் தொகையாகக் கட்டவேண்டும் என்றது. 12.11.33 அன்று குடி அரசு தலையங்கத்தில் இது பற்றித் தெரிவிக்கிறார் பெரியார்.


"குடி அரசு பத்திரிக்கைக்கு இந்திய அரசாங்க அவசரசட்டப்படி பாணம் போட்டாய் விட்டது. அதாவது நவம்பர் மாதம் 20ம் தேதிக்குள் தோழர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் உண்மை விளக்கம் அச்சுக்கூட சொந்தக் காரர் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும், குடி அரசு பத்திரிக்கை யின் பிரசுர கர்த்தாவாகவும், வெளியிடுவோராகவும் இருக்கிறார் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும் ஆக 2000 ரூபாய் கோயமுத்தூர் ஜில்லா மேஜி°டிரேட்டிடம் ஜாமீன் கட்டவேண்டுமென்று நோட்டீஸ் சார்வு செய்யப்பட்டாய்விட்டது." - குடி அரசு – தலையங்கம் – 12.11.1933


அதே இதழில் தனக்கு வந்த நோட்டிசையும் காட்டியுள்ளார். (பார்க்க படம் 1). பணம் கட்டமுடியாமல் குடி அரசு தடை செய்யப்படுகிறது.


பெரியார் அந்த வாரமே "புரட்சி" என்ற இதழை ஆரம்பிக்கிறார். ஆசிரியர் அவரது அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி. புரட்சியின் முதல் தலையங்கம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. எதற்கு புரட்சி என்பதை பெரியார் சொல்கிறார்.


"“குடி அரசை” ஒழிக்கச் செய்த முயற்சியால் “புரட்சி” தோன்ற வேண்டியதாயிற்று. உண்மையிலேயே பாமர மக்களின் அதாவது பெரும் பான்மையான மக்களின் ஆக்ஷியாகிய குடி அரசுக்குஉலகில் இடமில்லையானால் கண்டிப்பாகப் புரட்சி தோன்றியே தான் ஆக வேண்டும்." "வெள்ளை முதலாளிகளை ஒழித்துக் கருப்பு முதலாளிகளைக் காக்கும் வேலைக்கு இன்று “புரட்சி” வெளிவரவில்லை. அல்லது வெள்ளை ஆட்சியை ஒழித்துக் கருப்பு ஆட்சியை ஏற்படுத்த “புரட்சி” தோன்றவில்லை. அதுபோலவே இந்து மதத்தை ஒழித்து, இஸ்லாம், கிறிஸ்து மதத்தைப் பரப்ப “புரட்சி” தோன்றியதல்ல. அதுபோலவே, இஸ்லாம், கிறிஸ்து மதத்தை ஒழித்து இந்து மதத்தை நிலைநிறுத்த புரட்சி வெளிவரவில்லை. சகல முதலாளி வர்க்கமும், சர்வ சமயங்களும் அடியோடு அழிந்து, மக்கள் யாவரும் சுயமரியாதையுடன் ஆண் பெண் அடங்கலும் சர்வ சமத்துவமாய்வாழச் செய்யவேண்டும் என்பதற்காக புரட்சி செய்யவே “புரட்சி” தோன்றியிருக்கிறது." - புரட்சி 26.11.1933


டிசம்பர் 1933 பெரியாரும், கண்ணம்மாளும் கைது செய்யப்பட்டு கோவைச் சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கு நடக்கிறது. 1 வாரம் கழித்து கண்ணம்மாள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


"இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு மாஜிஸ்திரேட் தோழர் கண்ணம்மாளை ஜாமீனில் விடுதலை செய்ய உத்திரவிட்டிருப்பதாகக் கூறினார். தோழர் டி.டி. ஆர் பிள்ளைக்கு உதவியாக தோழர்கள் ஈரோடு வேணு கோபால், சென்னை கே.எம்.பாலசுப்பிரமணியம், கோவை நஞ்சுண்டையா முதலிய வக்கீல்கள் ஆஜரானார்கள். “புரட்சி” பத்திரிகை பிரசுரகர்த்தாவும் பதிப்பாளருமான தோழர் எஸ். ஆர். கண்ணம்மாளை, அவர்மீது கொண்டு வரப்பட்டிருக்கும் வழக்கு விசாரனை முடியும் வரை ஜாமீனில் விட வேண்டுமென கோவை ஜில்லா மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் மனுச் செய்து கொள்ளப்பட்டது. ஜில்லா மாஜிஸ்டிரேட் அவரை ரூ.500 சொந்த ஜாமீனும், அதே தொகைக்கு மற்றும் ஒரு நபர் ரூ.500 ஜாமீனும் கொடுத்தால் விடுதலை செய்யும்படி உத்திரவிட்டார். தோழர் கண்ணம்மாள் ஜாமீன் கொடுத்து விடுதலையடைந்து அன்றிரவே மெயிலில் ஈரோடு வந்து சேர்ந்தார். தோழர் ஈ.வெ. ராமசாமி, எஸ்.ஆர். கண்ணம்மாள் இவர்கள் இருவர்மீதும் கொண்டு வரப்பட்டிருக்கும் வழக்கு ஜனவரி மாதம் 4 தேதி கோவை ஜில்லா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணை வரும்." - புரட்சி-துணைத் தலையங்கம் – 31.12.1933


இ.பி.கோ.  124-A  செக்ஷன்படி  தொடரப்பட்டுள்ள  “”பொதுவுடைமை”  பிரசாரத்திற்காகவும்  “”இராஜ  நிந்தனை”  என்பதற்காகவுமுள்ள  வழக்கு  கோவையில் ஆரம்பிக்கப்பட்ட  போது  தோழர்  ஈ.வெ.  இராமசாமி  அவர்கள்  கோவை  ஜில்லா  கலெக்டர்  G.W.  வெல்ஸ்  I.C.S  அவர்கள்  முன்  தாக்கல்  செய்த  அறிக்கையை பி.ஏ.கி பார்க்க வேண்டும் சவர்காருடன் ஒப்பிடும் முன்..


"வழக்குக்கு அஸ்திவாரமான  291033  தேதி  “”குடி  அரசின்”  தலையங்கத்தை  இப்போது  பலதரம்  படித்துப்  பார்த்தேன்.  அதை  நான்  எழுதினேன்  என்பதை  ஒப்புக்  கொள்ளுகிறேன். அதில் எழுதப்பட்டிருக்கும்  விஷயங்களுக்காவது  வாக்கியங்களுக்காவது  ராஜத்துவேஷக்  குற்றம்  சாட்டப்படுமானால்  இன்றைய  அரசாங்க  முறை,  நிர்வாக  முறை  முதலியவைகளைப்  பற்றி  ஆராய்ச்சி  செய்து  குறைகளை  எடுத்துச்  சொல்லவோ,  அவற்றால்  மக்களுக்கு  ஏற்படக்கூடிய  கஷ்டங்களை  விலக்கப்  பரிகாரம்  தேட  ஏற்பாடு  செய்யவோ  யாருக்கும்  சுதந்திரம்  கிடையாது  என்றுதான்  முடிவு  செய்யப்பட்டதாகும்."


"ஏதாவது ஒரு கொள்கைக்கு  பிரசாரம்  பரவ  வேண்டுமானால்  அக்கொள்கையில்  நம்பிக்கை  கொண்டவர்கள்  அக் கொள்கைக்கு  இடையூறு  செய்பவர்களால்  அடக்கு  முறைக்கு ஆளாக  வேண்டியதும்  அவசியமேயாகும். "


"இதனால் பொதுஜனங்களுடைய  கவனிப்பு  இன்னும்  அதிகமாவதோடு  அவர்களது  ஆதரவும்  பெற  நேர்ந்து  கிளர்ச்சிக்கு  பலமேற்படக்  கூடுமாதலால்  என்  மீது  சுமத்தப்பட்ட இந்த  வழக்கில்  ஒரு  ஸ்டேட்மெண்டை  மாத்திரம்  கொடுத்து  விட்டு  எதிர்  வழக்காடாமல்  இப்போது  கிடைக்கப்போகும்  தண்டனையை  மகிழ்ச்சியோடு  வரவேற்கின்றேன்." -  புரட்சி  அறிக்கை  21.01.1934


தன் மேல் சுமத்தப்பட்டக் குற்றத்தை ஒப்புக் கொண்டு, ஒரு கொள்கைக்கு  பிரசாரம்  பரவ  வேண்டுமானால் அடக்கு  முறைக்கு  ஆளாக  வேண்டியதும்  அவசியமே எனச் சொல்லி எதிர்வழக்காடாமல் தண்டனையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன் என்ற பெரியார் எங்கே, தப்பி ஓட முயன்று, பிடி பட்டு மன்னிப்புக் கோரிய சவர்கார் எங்கே ?????


ஜனவரி 24 அன்று வந்த தீர்ப்பு:


"ராஜநிந்தனை வழக்கை விசாரித்து வந்த கோவை ஜில்லா நீதிவான் ஆகிய தோழர் ஜி.டபள்யூ. வெல்ஸ், ஐ.சி.எஸ். அவர்கள் சென்ற ஜனவரி மாதம் 24ந் தேதியன்று கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்திருக்கிறார். அதாவது தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்களுக்கு 6 மாதம் வெறுங் காவல் தண்டனையும் 300 ரூபாய் அபராதமும் தோழர் சா.ரா. கண்ணம்மாள் அவர்களுக்கு 3மாதம் வெறுங் காவல் தண்டணையும் 300 ரூபாய் அபராதமும், அபராதத் தொகை செலுத்தாத பட்சம் மேற்கொண்டு தலா ஒவ்வொரு மாதத் தண்டனையென்றும் தீர்ப்பளிக்கப்பட்டு காவலிலிருந்து வருகிறார்கள்."


தீர்ப்பிலேயே 6 மாதச் சிறை (படம் 2)  என்றுதான் இருக்கிறது.. பி.ஏ.கி 9 மாதம் என்கிறார்..


பெரியார் சிறையிலிருக்கும் போது கூட "புரட்சி" பொது உடமைக் கருத்துக்களை எழுதுவதை நிறுத்தவில்லை.  22.4.1934-ல் புரட்சியில் மே தினம் கொண்டாடச் சொல்லி விஷேச அறிக்கை வந்தது. (படம் 3)

29.4.1934 புரட்சித் தலையங்கத்திலும் மே தினம் பற்றி எழுதுகிறார்.


டிசம்பரில் கைதான பெரியார் மே மாத மத்தியில் ராஜமகேந்திரம் சிறையிலிருந்து விடுதலை ஆகிறார். சாதாரண கைதியாகவே நடத்தப்பட்டதை புரட்சி துணைத் தலையங்கம் 20.5.1934 கூறுகிறது


."தோழர்  ஈ.வெ.ராமசாமி  அவர்கள்  15ந்  தேதி  ராஜமகேந்திரம்  ஜெயிலிலிருந்து  விடுதலையாகி,  16ந்  தேதி  சென்னை  வந்து  அங்கிருந்து  அன்றே  புறப்பட்டு  17ந்  தேதி  ஈரோடு  வந்து  சேர்ந்தார்.  அரக்கோணம்,  காட்பாடி,  ஜோலார்பேட்டை,  சேலம்  ஆகிய  ஸ்டேஷன்களுக்கு  ஆங்காங்குள்ள  சுயமரியாதை  இயக்கத்தைச்  சேர்ந்த  நண்பர்கள்  வந்து  சந்தித்துப்  பேசிப்  போனார்கள்." (படம் 4)


சிறையிலிருந்து வந்தததும் அதைப் பற்றி பெரியார் பேசியதுதான் சவர்கார்க்கும் பெரியார்க்கும் உள்ள வித்தியாசம். பெரியார் எழுதினது ஒரு சப்பை மேட்டர், அதுக்கு இந்தத் தண்டனை ரொம்ப அதிகம்.. தன்னிடம் கேட்டிருந்தால் வேற நலல அறிக்கையை எடுத்துக் கொடுத்திருப்பேன் எனப் பகடி செய்கிறார்.


"அதாவது  குடி  அரசு  பத்திரிகையில்  என்னால்  எழுதப்பட்ட  ஒரு  சாதாரணமானதும்,  சப்பையானதுமான  விசயத்திற்காகத்தான்  நான்  சிறைக்குப்  போக  நேரிட்டதே  தவிர,  மற்றப்படி  செல்லத்தக்க  ஒரு  சரியான காரியம்  செய்துவிட்டு  சிறைக்குப்  போகவில்லை.  சர்க்கார்  இந்தக்  “”குடி  அரசு”ப்  பத்திரிகையின்  பழைய  இதழ்களைப்  புரட்டிப்  பார்த்தால் என்னை வருடக்கணக்காய்  தண்டிக்கக்கூடியதும்,  நாடு  கடத்தக்கூடியதுமான  விசயங்கள்  நூற்றுக்கணக்காக  தென்படலாம். "


பெரியாரின் டிசம்பர் 33 - மே 34 சிறை வாசத்தில் இதுதான் நடந்தது.. விதிக்கப்பட்டத் தண்டனையை அவர் கிட்டத்தட்ட 95% முடிந்த பிறகே விடுதலை ஆகி வெளியே வந்தார். அதுவும் மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை !!


பெரியார் சிறையிலிருந்த சமயத்தில் தோழர்.ஜீவா புரட்சி இதழில் எழுத ஆரம்பித்திருந்தார்.. பின், மாவீரன் பகத்சிங் தான் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக எழுதிய “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” என்ற கட்டுரையை ஜீவா தமிழாக்கம் செய்தார். அதை தந்தைபெரியார் புரட்சி ஏட்டில் பதிப்பித்து வெளியிட்டார். அந்தக் கட்டுரையை வெளியிட்டதற்காக அரசு பெரியாரின் சகோதரர் கிருஷ்ணசாமிக்கும் (ஆசிரியர் என்ற முறையில்) , மொழி பெயர்ப்பாளர் ஜீவாவுக்கும் சிறைத் தண்டனை விதித்தது. பெரியார் சொன்னபடி ஈ.வெ.கி-யும் ஜீவா அவர்களும்  மன்னிப்புக் கடிதம் கொடுத்து விடுதலை ஆனார்கள். முதலில் மறுத்த ஜீவா,.கட்சி சொன்னதன் காரணமாக ஜீவாவும் மன்னிப்புக் கடிதம் கொடுத்து விடுதலையானார். இதுதான் "கடித" விசயத்தில் நடந்தது. இதில் பெரியார் கைதாகவே இல்லை.


பெரியார் தனது அண்ணனை மன்னிப்புக் கடிதம் கொடுக்கச் சொன்னது மட்டுமே உண்மை. ஈ.வெ.கி & ஜீவா கொடுத்த மன்னிப்புக் கடிதம் செய்தித் துணுக்காக  குடி அரசில் இருக்கிறது. (படம் 5)


"நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்” என்று பகத்சிங்கினால் எழுதப்பட்ட கடிதம் லாகூரிலிருந்து வெளியாகும் “”பீபிள்ஸ்” பத்திரிகையில் பிரசுரிக்கப் பட்டிருந்ததை அரசாங்கத்தாரால் பறிமுதல் செய்யப்பட்ட விஷயம் தங்களுக்குத் தெரியாதென்றும், ஆகவே அதை மொழி பெயர்த்ததும், அச்சிட்டுக் கொடுத்ததும் ராஜ துவேஷத்தை உண்டாக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் அல்ல வென்றும் அதற்காக மன்னித்துவிட வேண்டும்." - குடி அரசு  செய்தித் துணுக்கு   24.03.1935


ஜீவா சமதர்மம் என்ற இதழை ஆரம்பித்து மன்னிப்புக் கடிதம் கொடுத்தற்கு விளக்கம் அளித்தார். இது தேவையில்லா மனக்கசப்பை ஏற்படுத்தும் எனக் கருதிய பெரியார், இந்தக் கடிதத்திற்கு தானே பொறுப்பு என்றார்.


31.03.1935 குடி அரசு தலையங்கத்தில் இது பற்றி "எனது அறிக்கையின் விளக்கம்" என்றத் தலைப்பில் விரிவாக எழுதினர்.


"உண்மை விளக்கம் பிரஸ் பதிப்பாசிரியரான தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் மீதும், தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் மீதும் காலஞ்சென்ற பகத்சிங்கால் எழுதப்பட்ட “”நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்?” என்ற புஸ்தகத்தை முறையே பிரசுரித்ததற்காகவும், மொழி பெயர்த்ததற்காகவும் இந்தியன் பினல் கோர்ட் 124ஏ செக்ஷன்படி ராஜ துவேஷக் குற்றம் சாட்டி கைதியாக்கி சிறையில் வைத்து வழக்குத் தொடர்ந்திருந்தது வாசகர்கள் அறிந்ததாகும். அவ்வழக்கு மேல்கண்ட இரு தோழர்களாலும் ராஜ துவேஷத்தை உண்டாக்கவோ, அதைப் பிரசாரம் செய்யவோ எண்ணங் கொண்டு அப்புத்தகம் பிரசுரிக்கவில்லை என்று அரசாங்கத்திற்குத் தெரிவித்து ராஜதுவேஷம் என்று கருதத்தகுந்த காரியங்கள் பதிப்பிக்கப்பட்டு விட்டதற்காக மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதின் பேரில் அரசாங்கத்தார் வழக்கை வாபீஸ் வாங்கிக் கொண்டு தோழர்கள் ஈ.வெ.கி., ப.ஜீவா. அவர்களை விடுதலை செய்துவிட்டார்கள். இந்தப்படி இந்த இரு தோழர்களும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடுதலையடைந்தார்கள் என்பதற்கு அவர்களே முழு ஜவாப்தாரிகள் அல்ல என்பதையும் பெரும்பான்மையான அளவுக்கு நானே ஜவாப்தாரி என்பதையும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்." - குடி அரசு  தலையங்கம்  31.03.1935


மேற்கொண்டத் தரவுகள் மூலம் பி.ஏ.கி சொன்னது போல பெரியார் தனது 9 மாதத் தண்டனையை மன்னிப்புக் கடிதம் கொடுத்து விடுதலை ஆனார் என்பது உண்மையல்ல என்றும் பின்னர் வேறு பிரச்னைக்கு பெரியார் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஈ.வெ.கி & ஜீவா மன்னிப்புக் கடிதம் கொடுத்து விடுதலை ஆனதையும் நிறுவலாம். !!


விடுதலையாகி வெளியே வந்த யாரும் பாரதி/சவர்கார் சும்மா இருக்கவில்லை..அதே ஆண்டு அக்டோபரில், தமிழ்நாட்டில் உள்ள நாத்திகர்களை ஒன்றுபடுத்த வேண்டும் என்று நினைத்து சென்னை ராஜதானி நாத்திகர்கள் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். நாத்திகப் பிராச்சாரம், குட்டி குட்டி முதலாளித்துவமும், செவிட்டு அரசும் ஆகிய கட்டுரைகளை புரட்சி தொடர்ந்து வெளியிட்டது. இறுதியில் ஆங்கில அரசால் "புரட்சி" தடை செய்யப்பட்டது....


பெரியார் தொடர்ந்து சமதர்மம் பேசினார்.


28.04.1935 குடி அரசு  அறிக்கையில் "இந்த வருஷத்தில் மே தினத்தை மே மாதம் முதல் தேதியில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஜில்லாவிலும் உள்ள நகரங்கள் தோறும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைத் திரட்டி,வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டுகிறேன். தேசம், மதம், ஜாதி என்கின்ற தேசீய உணர்ச்சிகளை மறந்து உலகத் தொழிலாளர் எல்லாம் ஒரே சமூகமாய் ஒன்றுபட்டு எல்லா தேச, மத, ஜாதி மக்களுக்கும் வாழ்க்கையில் சம உரிமையும், சம சந்தர்ப்பமும் கிடைக்கும்படி கொண்டாட வேண்டும் என்றும், தொழிலாளர் சமதர்ம ராஜ்ஜியம் ஏற்பட வேண்டும் என்னும் ஒரே அபிப்பிராயம் ஏற்படும்படி தொழிலாளர்களிடையில் பிரசாரம் செய்யவும், வேறு சாதகங்கள் பெறவும், இம் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்."


01.05.1935 ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்ற மே நாள் விழாக் கொண்டாட்டத்தில் தலைமையேற்று ஆற்றிய முடிவுரையில் மே தினத்தை நாம் ஒரு பெரிய பண்டிகை போல் கொண்டாட வேண்டும் என்றார்.


08.09.1935 ஆம் நாள் தேவகோட்டையில் தோழர் லட்சுமிரதன் பாரதியார் வீட்டு மைதானத்தில் “சமதர்மம்’ என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு

"நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதிபேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதாயிருக்கிறது. ஜாதி, பேதம், பிரிவு ஆகியவை ஒழிந்தால் தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழ முடியும். பொருளாதார பேதத்துக்கும் சமூக ஜாதி பேத முறைதான் பெரிதும் காரணமாய், காவலாய் இருந்து வந்திருக்கிறது. இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதி பேதமே பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக்கூட இடம் தராமல் அடக்கி வருகின்றதுடன் பொருளாதார பேதத்துக்கு இடமளித்தும் வருகிறது."


19.10.1935  ஆம்  நாள்  திருச்சி  டவுன்ஹாலில்  பெரிய  கொட்டகையில்  நடைபெற்ற  திருச்சி  மாவட்ட  சுயமரியாதை  மாநாட்டில்  ஆற்றிய  தலைமையுரையில்

"ஈரோட்டு வேலைத் திட்டக் கூட்ட சமதர்ம திட்டத்துக்கு நாம் ஒருபோதும் பின் வாங்கக் கூடாது. ஆனால் அத்திட்டம் நிறைவேற்றப்படவேண்டிய விஷயத்தில் நமது பொறுப்பைக் கொண்டு செலுத்த அவற்றை அமுலுக்குக் கொண்டுவர, தக்க அனுபவ சாத்தியமான திட்டத்தோடு வேலை செய்ய வேண்டும். இவற்றிற்கு ஜஸ்டிஸ் கட்சியாரின் உதவியை எவ்வளவு தூரம் உபயோகப்படுத்திக் கொள்ள முடியுமோ அவ்வளவு தூரம் ஏற்றுக் கொள்ள வேண்டும். "


"சமதர்மம் என்பதைத் தமிழ்நாட்டு வாலிபருள்ளத்திற் புகுத்தித் தணல் விட்டெரியச் செய்தது, நான்தானென்று தோழர் ஜீவானந்தம் சொன்னார். “”சமதர்மம் ஒரு நாளில் ஏற்படக் கூடியதல்ல. ரஷியாவில்கூட ஒரு நாளில் சமதர்மம் ஏற்பட்டுவிடவில்லை. பல காலத்து வேலையால்தான் அதுவும் சந்தர்ப்பம் சரியாய் இருந்ததால்தான் முடிந்தது. முதலில் சமூகத் துறையில் சமதர்மம் ஓங்க வேண்டும்" -குடி அரசு  சொற்பொழிவு  27.10.1935


1936 மே தின கொண்டாட்ட வேண்டுகோள் -

"மற்ற தேசங்களில் தொழிலாளர் குறைபாடுகளை வெளிப்படுத்தி உலக அரசியலிலும், சமூக இயலிலும் தொழிலாளர்கள் சமத்துவமும் ஆதிக்கமும் பெறவேண்டுமென்று ஆசைப்பட்டு மே தினம் கொண்டாடுகிறார்கள். இந்தியர்களாகிய நாமும் சமூகத்துறையில் ஜாதி மத இழிவிலிருந்தும், பொருளாதாரக் கொடுமையில் இருந்தும் விடுதலை பெறவும், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி பொதுக்கூட்டம் கூட்டி நமது இழிவையும், கொடுமையையும் எடுத்துச் சொல்லி சகல மக்களுக்கும் சம உரிமையும், சம சந்தர்ப்பமும் கிடைக்கவேண்டுமென்று விளக்கிக் கொண்டாட வேணுமாய் வேண்டிக் கொள்ளுகிறேன்." -குடி அரசு அறிக்கை 19.04.1936


அத்தோடு பொது உடைமைத் தீர்மானங்களை நீதிக் கட்சிக்கு அனுப்பி அவற்றை நீதிக் கட்சியை ஏற்கவும் வைத்தார். இதில்தான் ஜீவா உட்பட சிலருக்கு பெரியாருடன் முரண்பாடு உண்டானது.


1936 ஆம் ஆண்டு நடந்த திருத்துரைப்பூண்டி தஞ்சை ஜில்லா 5 வது சுயமரியாதை மகாநாட்டில் சுய மரியாதை இயக்கத்திலிருந்து வெளியேறித் தனிக் கட்சித் தொடங்கிய ஜீவா போன்றோருக்கு பெரியார் பதில் கூறினார். இறுதியில் சுய மரியாதையா, பொது உடமையா என வரும் போது சுய மரியாதை இயக்கந்தான் முக்கியம் என்று பொது உடமைப் பிரசாரம் நிறுத்திக்கொண்டேன் என்றும் கூறினார்.


"நான் இப்போது சர்க்காருக்கு பயந்துவிட்டேன் என்றும், பொதுவுடமைப் பிரசாரத்தை விட்டு விட்டேன் என்றும் குறைகூறப்பட்டது. இதைப்பற்றி விஷமப் பிரசாரமும் செய்யப்பட்டு வருகிறது. இந்தச் சமயத்தில் எனது கருத்தை தைரியமாகவும், விளக்கமாகவும் வெளியிடுகிறேன். தயவு செய்து கவனித்துக் கேட்கவேண்டுமாய்க் கோருகிறேன். நான் ரஷ்யாவுக்குப் போவதற்கு முன்பே பொதுவுடைமைத் தத்துவத்தை சுயமரியாதை இயக்கத்துடன் கலந்து பேசி வந்தது உண்மைதான். ரஷ்யாவில் இருந்து வந்தவுடனும் அதை இன்னும் தீவிரமாய்ப் பிரசாரம் செய்ததும் உண்மைதான். அதோடு மாத்திரமல்லாமல் தமிழ் நாட்டில் சுமார் 150 சங்கங்கள் ஆங்காங்கு ஏற்படும்படி செய்து அவைகள் ஒரு அளவுக்கு வேலை செய்து வரும்படி செய்ததும், அவைகளுக்கு நான் சில உதவிகள் செய்து வந்ததும் உண்மைதான். ஒன்றையும் மறைக்கவில்லை. ஆனால் சர்க்காரார் பொதுவுடைமை கொள்கைகள் சட்ட விரோதமானது என்று தீர்மானித்து நமது சுயமரியாதை இயக்கத்தையே அடக்கி ஒடுக்கி ஒழித்துவிட வேண்டும் என்று கருதி இருக்கிறார்கள் என்று உணர்ந்த பிறகும், அதனால் பல கஷ்ட நஷ்டம், தொல்லை ஆகியவை ஏற்பட்ட பிறகும், காங்கிரஸ்காரர்கள் சர்க்கார் அடக்குமுறைக்கு முகம் கொடுக்க முடியாமல் அவர்கள் பின்னடைந்து விட்டதைப் பார்த்தும், நம்முடைய தோழர்கள் சிலர் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாலும், பலர் வெறும் வேஷ விளம்பரத்துக்கு அடிமைப்பட்டுவிட்டார்கள் என்பதை உணர்ந்ததாலும் எனக்கு புத்திசாலித்தனமாக சில காரியம் செய்யவேண்டியதாக ஏற்பட்டு விட்டது. அதுதான் பொதுவுடமைப் பிரசாரத்தை நிறுத்திக்கொள்ள வேண்டியது என்பதாக ஆகிவிட்டது."

"இப்பொழுதும் நான் ஒரு தினசரி நடத்த சகல ஏற்பாடுகளும் செய்து கொண்டு சர்க்காரை அனுமதி கேட்டதில் பெருவாரியான தொகை ஜாமீன் கட்ட வேண்டுமென்று உத்திரவு வந்து விட்டது. இந்த நிலையில் சுயமரியாதை இயக்கத்தை ஒழித்து விட்டு நான் மாத்திரம் வீரனாக ஆவதற்கு ஜெயிலில் போய் உட்கார்ந்து கொள்ளுவதா? அல்லது பொதுவுடமைப் பிரசாரத்தை நிறுத்தி வைத்துவிட்டு இயக்கத்தின் மற்ற திட்டங்களை நடத்துவதா என்று யோசித்துப்பாருங்கள். இதுதான் எனது உண்மை."


சுயமரியாதை இயக்கம் சந்தித்த அரசின் பல்வேறு அடக்குமுறைகளை பட்டியலிடும் பெரியார், சுயமரியாதைக் கொள்கையிலேயே சமதர்மமும் பொதுவுடைமையும் அடங்கியுள்ளது என்று விளக்குகிறார். “இந்த இயக்கம் எந்த தனிப்பட்ட மனிதனும் வீரனாவதற்கும், வீர சொர்க்கம் போய்ச் சேரவும் ஏற்பட்டதல்ல. எனக்கு வீர சொர்க்கத்தில் நம்பிக்கை கிடையாது” என்று கூறுவதோடு “புகழ் பெறுவதற்கு எவ்வளவு அயோக்கியத்தனம் செய்ய வேண்டுமென்பது நான் நன்றாய் அறிவேன். அத்துறையில் இருந்து பார்த்துவிட்டுத்தான் இந்த “இழிவு” பெறும் வேலைக்கு மனப்பூர்த்தியாகவே வந்தேன்” என்று குறிப்பிடுகிறார்.


“ஈ.வெ.ரா. விளக்கம்” எனும் தலைப்பில் பெரியார் தன்னைப் பற்றி எழுதி வெளிவந்துள்ள மற்றொரு தலையங்கம் இவ்வாறு கூறுகிறது.


இந்த இயக்கம் தோழர் ஈ.வெ.ரா. வுக்கு ஒரு ஜீவன மார்க்கமோ, சுயநல லாபமோ, புகழுக்கோ என்று இல்லாமல் வெறும் பொதுநல காரியத்துக்காகவே அவர் நடத்துகிறார். அதுவும் அவரது ஜீவன் உள்ள வரை ஒரு நேர்மையும், பொதுநலப் பயனும் உள்ள ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டுமே என்பதற்காகவே செய்கிறாரே ஒழிய மற்றப்படி இன்ன காரியத்தை சாதிப்பதற்காக கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதற்கோ அல்லது அதைச் செய்துதான் முடிக்க வேண்டும் என்கின்ற அவதாரத் தன்மைக்கோ, வீரத் தன்மைக்கோ அவர் அவ்வேலைகளைச் செய்யவில்லை. அன்றியும் அவர் காரிய “வீரரே” தவிர கொள்கை வீரரல்ல. கொள்கை சொல்பவர்கள் வண்டி வண்டியாக இருக்கிறார்கள். கொள்கை களைக் கொண்ட புத்தகங்களும் ஏராளமாய் இருக்கின்றன. சிறிது காரியமாவது செய்ய சௌகரியமாயிருந்தால் செய்துவிட்டுப் போவதுதான் மேலே ஒழிய கொள்கைகளை மாத்திரம் சொல்லிவிட்டு ஜெயிலுக்குப் போவது மேலானதாக ஆகிவிடாது என்கின்ற கருத்தும் கொண்டவர். ஆகையால்தான் காரியத்தில் சாத்தியமானதையே எவ்வளவோ எதிர்ப்புக்கும், தொல்லைக்கும் இடையில் செய்ய முயற்சிக்கிறார். இதற்கு பெயர் கோழை யென்றாலும், துரோகம் என்றாலும் அவருக்குக் கவலை இல்லை. கோழை என்பது செய்வதற்கு சவுகரியமுள்ள காரியங்களை விட்டு விட்டு ஓடுவதேயாகும். துரோகம் என்பது மக்களுக்குத் தொல்லை கொடுத்து விட்டு சுயநலத் துக்காகப் பின் வாங்குவதாகும். இன்று அவருக்கு செய்வதற்கு சவுகரியமுள்ள காரியம் எதையும் விட்டு விட்டு அவர் ஓடவில்லை. இரண்டாவதாக யாரிடத்திலும் எவ்வித வாக்குறுதி கொடுத்தோ கடுகளவாவது தன் சுயநலத்துக்கு பிரதி பிரயோஜனமடைந்தோ வேறு எந்தவித சுயநல காரியத்துக்கோ ஆசைப்பட்டு பின் வாங்கி விடவில்லை. - குடி அரசு தலையங்கம் 29.03.1936


ஆக சமதர்மத்தைப் பற்றி சற்று அதிகமாக பேசியதால் கைது செய்யப்பட்டார் என்பதும் மன்னிப்பு கேட்டப்பின் விடுதலை ஆனார் என்பதும் பொய் எனத் தெரிகிறது. ஏனெனில் 1934 - ல் விடுதலை ஆனப் பின்னேதான் நிறைய சமதர்மம் பேசுகிறார், 100-க்கும் மேற்ப்பட்ட சமதர்மச் சங்கங்களை ஆரம்பிக்கிறார்.


இத்தரவுகளைக் கொண்டு எனக்குத் தெரிவது என்னவென்றால் சவர்காரை குத்திய குத்தில் அவர் எழுதிய மன்னிப்புக் கடிதங்களைப் பார்த்த ஆங்கில அரசு "இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான், ரொம்ப நல்லவனு" வடிவேல் மாதிரித்தான் நடத்தியிருக்கிறார்கள். வெளியே போனாலும் இவரால் எந்தத் தொந்தரவும் இல்லை என்பதால்தான் அவரை விடுதலை செய்துள்ளனர். P.A.K அவர்களும் 1934-ல் விடுதலைக்கு பெரியார் எழுதிய மன்னிப்புக் கடிதத்தைக் காட்டி இதைப் போல் நிறுவினாரெனில் எம் கருத்தை மாற்றிக் கொள்ளத் தயாராய் இருக்கிறேன்.