Thursday, October 26, 2023

இந்தியாவில் நவீன கல்விமுறை உருவான பின்னணி - பேரா.அ.மார்க்ஸ்

இந்தியாவில் நவீன கல்வி முறை உருவானதன் பின்னணியும்  : சில வரலாற்று நினைவுகளும்!

******************************

நாளந்தா, விகரம ஷீலம் முதலான பௌத்த கல்விமுறை இன்றைய மிக நவீனமான கல்விமுறையின் முன்னோடி.  பன்னாட்டு / பல்துறை அறிஞர்களும் ஒரு மையத்தில் கூடி பன்முக அறிவு வளர்ச்சியை சாதி, மதக் கொடூர வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்கட் பிரிவினரும் கற்கும் கல்வி முறை அது. சனாதன இந்தியாவில் அது அழித்தொழிக்கப்பட்டது.  மேல் வருணத்தாருக்கே கல்வி. சூத்திரர்களாயின் அவர்கள் இக் கல்விமுறைக்குள் நுழைய முனைந்தால் என்ன நிகழும் என்பதற்கு ஏகலைவன் வரலாறு ஒரு சான்று.  இந்தியக் கல்வி முறையில் இந்த நிலையில் பெரும் புரட்சி எப்போது ஏற்பட்டது?- சற்றே வரலாற்றைப் பின்னோக்கிப் பார்ப்போம்!

***********************************

ஏற்கனவே இது குறித்து சனாதனிகளால் இங்கு புகுத்தப்பட்டுள்ள கருத்துக்களைக் கொஞ்சம் நம் மூளையிலிருந்து கழற்றி எறிந்துவிட்டுத் திறந்த மனத்துடன் நாம் மெக்காலேயின் (தாமஸ் பேபிங்டன் மெக்காலே 1800 – 1859) காலகட்டத்திற்குச் செல்வோம். அவர் இந்தியாவிற்கு வந்து முக்கிய பொறுப்புக்களை ஏற்றுச் செயல்பட்ட காலம் 1834- 1838. அப்போது கப்பல் பயணம்தான். வருவதற்கும் போவதற்கும் பயணக் காலம் குறைந்த பட்சம் 6 மாதங்கள் என வைத்துக் கொண்டாலும் அவர் இங்கிருந்த காலம் சுமார் மூன்று அல்லது மூன்றரை ஆண்டுகள்தான். இந்த மூன்றான்டுகளில் அவர் இங்கு மேற்கொண்ட முக்கிய பணிகள் மூன்று. அவை:

1.புதிய ஆங்கிலக் கல்விச் சட்டம் (1935) இயற்றியது.

2.குற்ற நடைமுறைச் சட்டம் (Criminal Procedure Code) உருவாக்கியது.

 3.ஆங்கிலேயர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டிருந்த வழக்குகளில் மேல்முறையீடு செய்யும் உரிமையை இந்தியர்களுக்கும் அளிக்கும் வகையில் சட்டம் ஒன்று (கறுப்புச் சட்டம்) இயற்றியது ஆகியனவே அவர் இங்கு செய்த பணிகள்.

அவர் வந்த காலகட்டதில் இங்கு கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகம்தான் நடந்து கொண்டிருந்தது. முதல் சுதந்திரப்போர் எனக் கூறப்படும் 1857 பிரிட்டிஷ் எதிர்ப்புப் போருக்கு முந்திய காலகட்டம் அது. அப்போது இங்கு நேரடியான பிரிட்டிஷ் அரசியின் ஆட்சி நடைபெறவில்லை. இந்தியத் துணைக் கண்டம் முழுமையும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவும் இல்லை. ஆங்காங்கு பல்வேறு மொழிகள், பண்பாடுகள், தேச வழமைகள் என்பதாக இந்தியா தொடர்ந்தது.

மெக்காலே இங்கு வருவதற்கு முன்பே ஆங்கிலக் கல்விச்சட்டம் உருவாக்குவதற்கு இங்கொரு குழு உருவாக்கப்பட்டிருந்தது. 10 உறுப்பினர்களைக் கொண்ட அக்குழு இரு சரிபாதிகளாகப் பிரிந்து இரு எதிர் எதிர்க் கருத்துக்களைக் கொண்டிருந்தது. ஒரு குழு அப்போதுள்ள நிலை தொடர்ந்தால் போதுமானது என்றது. அப்போதுள்ள நிலை என்றால் ஒரு பக்கம் சமஸ்கிருதக் கல்வி, இன்னொறு பக்கம் முகலாய ஆட்சிகள் இருந்த பகுதிகளில் பெர்சியன் மற்றும் அரபிக் கல்விகள். மற்றொரு குழு ஆங்கிலக் கல்வியை முன்மொழிந்தது. கல்வித் திட்டம் வகுக்கும் பொறுப்பை ஏற்குமுன் மெக்காலே முதலில் இதற்கொரு முடிவு காணுதல் அவசியம் என்றார்,

இப்போது அன்றைய உலகக் கல்விச் சூழல் எவ்வாறு இருந்தது என்பதைச் சற்றுக் காண்போம். நவீனத்துவம், மறுமலர்ச்சி என்றெல்லாம் சொல்லும் புதிய விழிப்புணர்வு உலகெங்கும் ஏற்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. அப்படியான ஒரு விழிப்புணர்வு உருவாகாத மூட நம்பிக்கைகளின் நாடாக இந்தியா இருந்தது என்பதைத் தனது எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் பலமுறை, ஆம் பலமுறை தந்தை பெரியார் சுட்டிக் காட்டி இருப்பதை நாம் அறிவோம். தத்துவ வளர்ச்சியின் வரலாற்றில் மேலை நாடுகளில் உருவான “அறிவொளிக்காலம்” (Enlightenment) எனப்படும் தத்துவ மறுமலர்ச்சி இங்கு உருவாகவே இல்லை. சங்கரர், இராமானுஜர், மத்வர் ஆகியோருடைய காலத்தோடு இங்கு தத்துவ வளர்ச்சியில் ஒரு தேக்கம் ஏற்பட்டது. பௌத்த தத்துவ வளர்ச்சிகளும் காஞ்சி மற்றும் அமராவதி காலத்துடன் தேக்கமுறுகிறது.

கல்வி வளர்ச்சியைப் பொருத்தமட்டில் குருகுலக் கல்விக்கு மாற்றாக பௌத்தம் உருவாக்கிய நாளந்தா, விக்ரமஷீலம் முதலான பல்கலைக் கழகங்களும் அழிக்கப்பட்டன.

ஆனால் மேலை நாடுகளில் உருவாகியிருந்த அறிவொளிக்கால விழிப்புணர்வு கல்வித்துறையில் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கியது.

முதல் முதலாக நவீன மாதிரியான பல்கலைக் கழகம் என்கிற கருத்தாக்கம் அங்குதான் உருவானது. ஜெர்மனி இதில் முக்கிய பங்கு வகித்தது. புகழ்பெற்ற தத்துவ ஞாநிகள் ஃபிச்டே , ஹம்போல்ட் முதலானோர் அதற்கான Blue Print ஐ உருவாக்கித் தந்த வரலாற்றை லியோடார்ட் விரிவாக விளக்கியுள்ளார் (பார்க்க :எனது பின் நவீனத்துவம் தொடர்பான கட்டுரைகள்).

பல்வேறு புதிய கல்வித்துறைகள் உருவான இச்சூழலில் ஏற்கனவே கல்வி என்றால் லத்தீன் / கிரேக்க மொழிகளில்தான் பயிற்றுவிக்கப்பட வேண்டும் எனும் நிலை அங்கு இவ்வாறு தகர்ந்தது. பதிலாக நவீன மொழிகள் கல்வி மொழிகளாயின.

இங்கும் அப்படியான ஒரு புதிய கல்விமுறை உருவாவது தவிர்க்க இயலாத ஒன்றாக இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சி இங்கு அறிமுகப்படுத்திய நவீன மாற்றங்களின் ஊடாக அது நிகழ்ந்தது. ஆங்கிலேயர்களின் வணிகத் தொடர்பு மற்றும் அதை ஒட்டி மதம் பரப்ப இங்குவந்த கிறிஸ்தவப் பாதிரிமார்கள் உருவாக்கிய கல்விக்கூடங்களின் வழியாக நவீன கல்வி வளர்ச்சி இங்கே அரும்பத் தொடங்கியது. அது சமஸ்கிருதம், பெர்சியன் மொழிகளைத் தவிர்த்து ஆங்கில மொழியை ஊடகமாகக் கொண்டு நவீன கல்வியை இங்கே பெரிய அளவில் அறிமுகப் படுத்தியது.கல்வி முறையில் இங்கு பாரம்பரியமாக இங்கே நிலவிய சாதி, மத வேறுபாடுகள், தீண்டாமை முதலான ஒடுக்குமுறைகள் ஆகியன நிபந்தனையாக்கபடாத ஒரு கல்வி முறையாகவும் அது இருந்தது.

மெக்காலே இந்த இரண்டாவது போக்கை ஆதரித்தார். உயர் கல்வி ஆங்கிலத்திலும் அடிப்படைக் கல்வி ஆங்காங்குள்ள தாய்மொழிகளிலும் இருக்க வேண்டும் என்றார். ஆங்கிலத்தில் கற்கும் கல்வியை அவ்வாறு கற்கும் இந்தியர்கள் தத்தம் தாய்மொழிக்குக் கொண்டு வருவார்கள் எனும் நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார்.

“இந்திய மக்களை எப்போதுமே நமக்கு அடிமைகளாக வைத்துக் கொள்வதற்காக அவர்களை நாம் எப்போதுமே அறிவிலிகளாகவும் தற்குறிகளாகவும் வைத்துக் கொள்ள வேண்டுமா? அல்லது அவர்கள் மத்தியில் உயர் குறிக்கோள்களை நோக்கி ஆசைப்படாத ஒரு அறிவை மட்டும் அவர்களுக்குத் தந்தால் போதும் என்கிறோமா? அல்லது அவர்கள் மத்தியில் உயர் குறிக்கோள்களை விதைத்துவிட்டு அதற்கு வழி இல்லாமல் செய்யப்போகிறோமா? இந்தக் கேள்விகளில் யாதொன்றுக்காவது ‘ஆம்’ என யார் பதிலளிக்கப் போகிறார்கள்? எனினும் இந்த நாட்டு மக்களை உயர் பதவிகளிலிருந்து நிரந்தரமாக விலக்கி வைக்க விரும்பும் யாரும் இதில் ஏதேனும் ஒன்றிற்காகவாவது ‘ஆம்’ எனப் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். எனக்கு அச்சங்கள் இல்லை. கடமையின் பாதை இதோ தெளிவாக நம் முன்… அதுவே பேரறிவின் பாதை…தேசச் செழுமையின் பாதை.. தேசப் பெருமையின் பாதை..”- என்பதாக அவர் உரை அமைந்திருந்தது.

அன்று உருவாகியிருந்த ஒருவகை உலகளாவிய (utilitarian liberal universalism -Rudolphs) போக்குடன் இசைந்ததாக நமது கல்வியை நவீனப்படுத்துவது என்பதாக அவரது பார்வை அமைந்தது என்பது இங்கே கவனத்துக்குரியது. “சுவையிலும், ஒழுக்கத்திலும், கருத்துக்களிலும், மதிப்பீடுகளிலும் ஆங்கிலேயத் தன்மை மிக்க” இந்தியர்களையும் இந்தியாவையும் உருவாக்குதல் குறித்து மெக்காலே பேசியதை நாம் இப்படியும் புரிந்து கொள்ள வேண்டும். சாதி, தீண்டாமை, மதம், பல கண்மூடிப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் அடையாளம் காணப்பட்ட இந்தியாவை நவீன உலகிற்கு இட்டுச் செல்லுதல் என்பதான ஒரு நோக்கம் அதில் வெளிப்படுவதை நாம் கவனம் கொள்ள வேண்டும்.

ஆனால் 1850 க்குப் பின் இங்கு நிலைமை மாறியது. நவீன இந்தியாவின் முக்கியமான திருப்பப் புள்ளிகளில் ஒன்று 1857. சிப்பாய்க் கலகம், சிப்பாய்கள் மற்றும் விவசாயிகளின் கிளர்ச்சி, முதல் சுதந்திரப் போர் என்றெல்லாம் பலவாறாகச் சித்திரிக்கப்படும் இந்த எழுச்சி கம்பெனி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததோடன்றி இந்திய ஆளுகை பற்றிய காலனிய அரசின் அணுகல் முறையில் சில முக்கிய மாற்றங்களையும் ஏற்படுத்தியது. வில்லியம் பென்டிக், மெக்காலே, டல்ஹவுசி முதலானோரால் 1830 -50 காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் தாராளப் பொதுமை என்பதிலிருந்து சற்றே பின்வாங்கும் நிலையை விக்டோரியா மகாராணியின் பிரகடனம் (1858) வெளிப்படுத்தியது. 1857 எழுச்சியை அவர்கள் கொடுங் கரங் கொண்டு ஒடுக்கியபோதும் இந்திய மக்களின் எதிர்ப்பின் வன்மை அவர்களின் ஈரக்குலைகளில் நடுக்கத்தையும் ஏற்படுத்தியது.

இனி இந்தியர்களின் தேச வழமைகளில் தலையிடுதல், வாரிசு இல்லை என்றெல்லாம் சொல்லி வன்முறையாக அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளைக் கைப்பற்றல் (doctrine of lapse) என்பதையெல்லாம் கைவிட்டு, வேறுவகை அணுகல் முறைகளைக் கைக்கொண்டு தங்களின் காலனியச் சுரண்டலைத் தொடர்வது என்கிற நிலைக்கு இட்டுச் சென்றது.

விக்டோரியா மகாராணியின் அறிக்கை,

“இனி மதநம்பிக்கை, மற்றும் (அவை சார்ந்த) வழமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தப் பிரிவினருக்கும் சலுகைகள் காட்டுவதோ, இல்லை அவற்றின் அடிப்படையில் ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதோ இருக்காது. எல்லோரும் ஒன்றேபோல சமமான, பாரபட்சமற்ற சட்டப் பாதுகாப்புகளைப் பெறுவர். இனி எமது ஆட்சியின் கீழ் அதிகாரத்தில் உள்ள யாரும் மக்களின் மத நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு வழமைகளில் தலையிடக் கூடாது என உறுதியாக ஆணையிடப்படுவர்” – எனப் பிரகடனப் படுத்தியது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய பொதுமை என்பதான பயன்பாட்டுவாதிகளின் (utilitarian) அணுகல் முறைகளிலிருந்து சற்றே விலகுதல் என 1957 க்குப் பின் பிரிட்டிஷ் அரசு மேற்கொண்ட இந்த நிலைப்பாடு மக்களின் தனித்துவமான மதம் சார்ந்த ஒழுகல் முறைகள், சாதி முதலான பண்பாட்டு அடையாளங்கள் ஆகியன சட்டப் பாதுகாப்புகளுடன் இங்கு தொடர வாய்ப்பாக்கியது. இந்தியச் சனாதனத்துடன் பிரிட்டிஷ் ஆளுகை சமரசம் செய்து கொண்ட பின்னணி இதுதான்.

எனினும் கல்வித்துறையைப் பொருத்தமட்டில் இங்கு பிரிட்டிஷ் ஆட்சியின் ஊடாக உருவான புதிய கல்விமுறையும், ஏராளமான கல்விக்கூடங்களும் பெரிய அளவில் இதுகாறும் கல்வி மறுக்கப்பட்ட அடித்தள மக்கள் கல்வி பெற்று மேலெழ வாய்ப்பளித்தது.

மெக்காலே குறித்த சங்கிகளின் ‘ஃப்ராட்’ பரப்புரைகள்:

மெக்காலே இந்தியாவில் உலகளவில் உருவாகிக் கொண்டிருந்த அறிவு வளர்ச்சிக்கு உரிய வகையில் ஒரு பொதுக்கல்வி முறையை உருவாக்கினார்.

எனினும் சிப்பாய்கள் மற்றும் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட முதல் (1857) புரட்சிக்குப் பின் இந்தியர்களைக் கையாள்வதில் பிரிட்டிஷ் ஆட்சி சில எச்சரிக்கைகளைக் கடை பிடித்தது. அவ்வாறான எச்சரிக்கைகள் எல்லாமே பாராட்டுக்குரியவை அல்ல. குறிப்பாக இங்குள்ள சாதி, தீண்டாமை முதலான தேச வழமைகளில் பிரிட்டிஷ் அரசு தலையிடுவதில்லை என எடுத்த முடிவு அடித்தள மக்களைப் பொருத்த மட்டில் பெரிய இழப்பாகவே இருந்தது.

எனினும் கல்வித்துறையைப் பொருத்தமட்டில் இங்கு பிரிட்டிஷ் ஆட்சியின் ஊடாக உருவான புதிய கல்விமுறையும், ஏராளமான கல்விக்கூடங்களும் பெரிய அளவில் இதுகாறும் கல்வி மறுக்கப்பட்ட அடித்தள மக்கள் கல்வி பெற்று மேலெழ வாய்ப்பளித்தது.

இந்தப் புதிய கல்விமுறைக்கு இணையாக இங்கு இன்னொரு அறிவுப் புரட்சியும் நடந்து கொண்டிருந்தது. வடமொழிகளும் தென்மொழிகளும் முற்றிலும் வெவ்வேறான தனித்தன்மைகள் கொண்டவை என்கிற ஆய்வுகள், சிந்து வெளி அகழ்வுகள் முதலியன இந்திய மக்களிடையே புதிய விழிப்புணர்வுகளை உருவாக்கின.

அச்சுக்கலையின் ஊடாக இதுகாறும் அழிந்துகொண்டும் அழிக்கப்பட்டுக் கொண்டும் இருந்த தமிழ் சிரமண நூல்களில் எஞ்சியவை காப்பாற்றப்பட்டன.

புதிய கல்விமுறை இங்கு ஏற்படுத்திய விழிப்புணர்வுக்குச் சான்றாக ஒரு வரலாற்று நிகழ்வை முந்திய கட்டுரை ஒன்றில் நான் குறிப்பிட்டுள்ளேன். அறிஞர் உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள் தனது ஆசான் மாயவரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் குருகுலக் கல்வி பயின்றது குறித்து மிக விரிவாக எழுதியுள்ளார். அறுபதாயிரம் பாடல்கள் இயற்றியவர் என அறியப்படும் மீனாட்சி சுந்தரனாரிடம் கல்வி கற்றுத்தேறிய உ.வெ,சா அடுத்து அன்று புதிய ஆங்கில முறை நவீனக் கல்லூரியாக உருவாகியிருந்த குடந்தை அரசு கல்லூரியில் பணியில் சேர்ந்த பின்னர்தான் சீவகசிந்தாமணி முதலான சிரமண மரபில் வந்த பெருங்காப்பியங்கள் முதலானவற்றின் இருப்பையே அறிகிறார். பல ஆண்டுகள் பாரம்பரியக் கல்வியைக் கற்றிருந்தபோதிலும் அவற்றை அவரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பதை அவரது தன்வரலாற்றிலிருந்து நாம் அறிகிறோம்.


Monday, October 23, 2023

வரலாற்றின் வேர்கள்

 வரலாற்றின் வேர்கள்  -1                          -அண்ணாமலை சுகுமாரன்

கடந்த காலத்தின் இரத்தக்கறை படிந்த அடிச்சுவடுகளைப் பற்றியும் , அவ்வப்போது நடைபெற்ற போர்கள், அதில் அடைந்த வெற்றிகள் ,ஆக்கிரமித்த நாடுகள் இவைகளைப்பற்றி விவரிப்பதும் , வெற்றிபெற்ற மன்னர்களின் கீர்த்தியை சொல்வதும்தான் வரலாறு என்ற பொதுவான புரிதல் இருந்தாலும், வரலாறு (History) என்ற சொல் இறந்த காலத்தைப் பற்றிய தகவல்கள் விவரிப்பது என்னும் பொருளிலேயே பொதுப்படையாகப் பயன்படுகிறது.

ஆயினும் வரலாறு என்பது மன்னர்களைப்பற்றி மட்டும் இல்லாமல், அது அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த சாமான்ய மக்களைப்பற்றியும், அவர்களின் பொருளாதாரம், வாழ்வியல் முறைமைகள், கல்வி, இலக்கியம், பண்பாடு, மொழி என அனைத்தையும் விளக்குவதாக இருக்கவேண்டும். இந்த வரலாற்றை கணிக்க தக்க சான்றுகள் வேண்டும் .

ஆதாரங்கள் எனும் உறுதியான கற்களால் கட்டமைக்கப்பட்டதே வரலாறு .

வரலாறு தற்போது தொல்லியல் என அறிவுப்பூர்வமானதொரு விஞஞானம் போல் ஆகிவிட்டது . அதன் ஆய்வுக்கு இப்போது பல்வேறு துறைசார்ந்த அறிவும் அவசியமாகிவிட்டது .


தொல்லியல் என்பது, வரலாறு ,மானிடவியல், கலாச்சாரம் , பொருளாதாரம் இனவரலாறு, நீரடி தொல்லியல்,என பல்வேறு துறைகளின் அறிவு தேவைப்படுகிறது .

தொல்லியல் எதிர்கால மனித வாழ்க்கைக்கு ஒரு செய்தியை எப்போதும் கூறிவருகிறது. கடந்த காலத்தைப் பொறுத்தே வருங்காலம் அமைகிறது .

இப்போது வாழும் வாழ்க்கையின் விதை கடந்த காலத்தில்தான் இருக்கிறது .வரலாற்றை நிர்ணயிக்க சான்றுகள் மிக அவசியம் .

நமது நாட்டைப்பொறுத்தவரை சான்றுகளை போற்றிப்பாதுக்காக்க நாம் எப்போதும் கவனம் செலுத்தியதில்லை .

மேலும் இந்தியாவின் வரலாறு என்பது முகமதியர்களின் படையெடுப்பிலிருந்துதான் அறியப்பட்டிருந்தது. அதற்கு முன் இந்தப் பகுதியில் என்ன நடந்தது என்பதைப் பற்றி ஒரு தகவலும் இல்லை.

அலெக்சாண்டர், 326 BCயில் இந்தியாவுக்குப் படையெடுத்து வந்தார் என்ற ஒரு குறிப்பு மட்டுமே இருந்தது. அதற்கு முன்னும் பின்னும் ஒன்றும் தெரியாது. தமிழ் நாட்டிலோ இன்னமும் மோசம் தஞ்சை பெரியக்கோயிலே கரிகால் சோழன் கட்டியது என்று ஒரு கதை நிலவிவந்ததாக பொன்னியின் செல்வன் எனும் ஒரு குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒரு செய்தி விவாதத்தில் இருந்தது நினைவிருக்கிறது .

ஒவ்வொரு கோவிலுக்கும் பின்புலத்தில் ஒரு புராணக் கதை நம்ப முடியாதபடி இருக்கும் . வரலாற்று செய்தி அதில் மறைந்து கிடக்கும் .நெல் மணியை சேர்க்க ஆரபித்த குதிரில் நெல்லை விட பதர்கள் அதிகம் ஆனது போல் புராண கற்பனையில் வரலாற்று உண்மைகள் மறைந்து போயின .நெல் மணிகள் காணாமல் மறைந்து போயின .

திருப்பணி என்றபெயரில் நமது கோவில்களில் இடம்பெற்றிருந்த வரலாற்று ஆதாரங்களான கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டு வீசியெறியப்பட்டன .இன்னமும் தமிழ் நாட்டில் இதே நிலைதான் தொடருவது தான் வேதனைக்குரியது. மற்றொரு புறம் வேறு பலர் அறியாமையால் அவற்றை அழித்துக்கொண்டும் இருந்திருக்கிறார்கள். இந்த அழிப்பு, ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன்பாகவே தொடங்கிவிட்டது. இந்தியாவிற்குள் நுழைந்த முகமதியர்கள், நிறைய சேதங்கள் ஏற்படுத்தினார்கள். 

குதூப் மினார் இருந்த இடத்தில் 27 கோயில்கள் இருந்தனவாம். மதுராவில் நிறைய சிற்பங்கள் இருந்ததாகச் சீனப் பயணி சொல்லியிருக்கிறார். 

1857இன் சிப்பாய்க் கலகத்திற்குப் பிறகு ஆங்கிலேயர்கள் தங்கள் பங்கை அழிவில் செய்திருக்கிறார்கள். 

பல பழைய கோட்டைகள் ராணுவக் கிடங்காகவும், சில ராணுவ மருத்துவமனையாகவும், ராணுவ பேக்கரியாகவும், பயன்பட்டிருக்கின்றன. தாஜ் மஹால் விருந்து நடத்தும் இடமாக இருந்திருக்கிறது . தாஜ் மஹாலின் ஒரு பகுதி, தேன்நிலவுக்கு வந்தவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. ஆனால், இன்றுவரை இந்த சேதப்படுத்துதல்கள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றன?

இன்றும் பல கோட்டைகள் சுற்றுலா விடுதிகளாக சுதந்திர இந்தியாவிலும் இருக்கின்றன. (உதயகிரி) தரங்கம்பாடியில் இருக்கும் டேனிஷ் கோட்டை 30 ஆண்டுகளுக்கு முன் அரசாங்க ஒய்வு விடுதியாகப் பயன்பட்டதை நானே பார்த்திருக்கிறேன். பல அரண்மனைகள் தமிழ் நாட்டில் இன்னமும் அரசு அலுவலகங்களாக இருந்து வருகிறது .

இந்த நிலையில்தான் இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்ற வந்த வெள்ளையர்களில் சிலர், இந்தியாவைப் பற்றி அறிந்து கொள்வதில் தீவிரம் காட்டினர். அவர்கள் வந்தது என்னவோ வேறு வேலைக்கு ஆயினும் கம்பெனியின் ஆதரவு என்பதெல்லாம் இத்தகைய ஆய்வுகளுக்கு இல்லை; என்றபோதிலும் , இவர்கள் தங்களுடைய சொந்த ஆர்வத்தின் பேரில் இந்திய வரலாற்று சான்றுகளைப் பற்றிய ஆராய்ச்சியைச் தொடர்ந்திருக்கிறார்கள்.

அப்போது இருந்த காலகட்டத்தில் இந்தியர்களுக்கு நாகரீகம் எதுவும் கிடையாது. பிரிட்டிஷ் வருகைக்குப் பிறகுதான் எல்லாமே என்று எழுதிவைத்ததோடு , இந்தியர்கள் மனதில் ஒருவகை தாழ்வு மனப்பான்மையை குடி கொள்ளச் செய்தார்கள்.

அந்த நிலையில் சில கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்ற வந்த வெள்ளையர்களில் உள்ள மனசாட்சியுள்ள சிலர் தொல்லியல் சான்றுகளை மேலும் அழிவிலிருந்து காத்து இந்தியாவின் வரலாறு எனும் கட்டிடம் எழ உதவி செய்தனர் .

அத்தகையோரை பரவலாக அறியச் செய்வது வரலாற்றை அறிவதில் மிக முக்கியமானதாகும்.முதலில் வரலாறு உருவாக உதவி செய்த அயல் நாட்டினரைப் பற்றியும், அதனைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற முக்கிய தொல்லியல் நிகழ்வுகளையும் அதற்கு உறுதுணையாக இருந்த இந்தியா முழுவதும் இருந்த வரலாற்று ஆர்வலர்களைப் பற்றியும் அறிஞர்களையும் அறிமுகம் செய்யும் விதமாகவும் முக்கியமாக தமிழ் நாட்டில் வாழ்ந்த திருவாளர்கள் நீலகண்ட சாஸ்திரி அவர்கள், க. அப்பாதுரை அவர்கள் சதாசிவ பண்டாரத்தார் முதல் ஐராவதம் மகாதேவன் அவர்கள், நாகசாமிஅவர்கள், ராஜமாணிக்கனார்அவர்கள், புலவர் ராசு அவர்கள் ,நடன காசிநாதன் அவர்கள் ,தியாக சத்தியமூர்த்தி அவர்கள் குடவாசல் பாலசுப்ரமணியன் அவர்கள் , குடந்தை சேதுராமன்  அவர்கள், பத்மாவதி அவர்கள் போன்ற இன்னுமும் உழைத்துக் கொண்டிருக்கும் பலரையும், சொல்லாமல் விடுபட்ட இன்னமும் பலரை அறிமுகப்படுத்தும் தொடர் இது .

வாசகர்களாகிய உங்கள் ஆதரவு இருக்கும்வரை இத்தொடர் தொடர்ந்து வரும் .

பகுதி 1- அயல் நாட்டு அறிஞர்கள்

சர் வில்லியம் ஜோன்ஸ்

1746 இல் பிறந்த சர் வில்லியம் ஜோன்ஸ் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் சட்டம் பயின்று வக்கீலானார். வாரன் ஹேஸ்டிங் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தபோது 1783இல் கல்கத்தா உச்சநீதிமனறத்திற்கு நீதிபதியாக இந்தியா வந்தார், 

அவர் கிரேக்கம், இலத்தீன், பாரசீகம், ஹீப்ரு அரேபிய மொழிகளை சிறிய வயதிலேயே கற்றறிந்தார். இந்தியாவிற்கு வந்தபின் இந்தியாவின் பழம் மொழிகளில் ஒன்றான சம்ஸ்கிருதத்தைப் பற்றி அறிந்த பின்பு அதன் மீது ஆர்வம் ஏற்பட்டது.

அவர் அப்போது கல்கத்தாவில் பணிபுரிந்ததால்பெருமைமிகு  தமிழ் பற்றி அறியும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை 

தனக்கு சம்ஸ்கிருதம் போதிக்க ஓர் வங்காள பிராமண சம்ஸ்கிருத ஆசிரியர் ராம் லக்‌ஷ்ன் கவிபூசன் என்பவரை தேர்ந்தெடுத்தார். அந்த கவிபூசன் கல்கத்தாவில் நெருக்கடியான மக்கள் குடியிருப்பில் வசித்துவந்தார். அங்கே சென்று சர்.வில்லியம் ஜோன்ஸ் சம்ஸ்கிருதம் கற்றுவந்தார் . தினமும் வகுப்பு முடிந்ததும் ‘மிலேச்சன்’ உட்கார்ந்த இடத்தை தண்ணீர்விட்டு சுத்தம் செய்வாரம் அந்த ஆசிரியர். இதைப் பார்த்த வில்லியம் ஜோன்ஸ்க்கு அது பெரிய விஷயமாகப்பட வில்லையாம் ஆசிரியர்கள் செய்யும் ஒரு சடங்கு என்று நினைத்துக்கொண்டாராம்.

பின்னர் சம்ஸ்கிருதத்தில் அவர் தேர்ச்சி பெற்றபின்பு பல நூல்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். அதில் அபிக்ஞான சாகுந்தலம் என்பது முக்கியமானது. அவருக்கு ஏற்கனவே கிரேக்கம் இலத்தீன் மொழி ஞானம் இருப்பதால் சம்ஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன் மொழிகளுக்குள்ள ஒற்றுமையை ஆராய்ச்சி செய்தார். இலத்தீன் மொழியைவிட சம்ஸ்கிருதம் கிரேக்க மொழியுடன் நிறைய ஒற்றுமையிருக்கிறது, இந்த மூன்று மொழிகளிலும் ஒன்றிலிருந்து பிரிந்தவை என்று ஆய்வின் முடிவில் கண்டறிந்தார்.தென்னிந்தியா பற்றி அப்போது அவர்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லை .

வங்காளத்திற்கு நீதிபதியாக வந்த ஜோன்ஸ், அங்கே வந்த பதினாராவது வாரத்தில் 1784இல் ஏசியாட்டிக் சொசைட்டியைத் தொடங்குகிறார். 

சொசைட்டியின் நோக்கம், இந்தியாவில் இருக்கும் சகல விஷயங்களைப் பற்றியும் பதிவு செய்வது. மொழி, வானவியல் சாஸ்திரம், அறிவியல், மருத்துவம், நீதி, வரலாறு, புவியியல், விவசாயம், வணிகம், இசை, கட்டிடக்கலை, கவிதை இப்படி பல விஷயங்களைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை திரட்டுவதே அவர்களுடைய எண்ணம். மனிதனின் கால் பதியாத நாகரீகம் இல்லாத வனம் போன்ற ஒரு அடர்த்தியான இருட்டில் இருந்த பிரதேசமாக அவர்கள் இந்தியாவை நினைத்திருந்தார்கள் . எனவே கிடைத்த அத்தனையையும் ஆவணப்படுத்த – இந்தியாவெங்கும் அங்கங்கே இருந்த வெள்ளையர்கள் தாங்கள் கண்டதை ஏசியாட்டிக் சொசைட்டிக்கு கட்டுரைகளாக அனுப்பினார்கள். ஜோன்ஸ் இதையெல்லாம் தொகுத்து, முதல் தொகுப்பை 1789இல் வெளியிட்டார்.

ஜோன்ஸின் தனிப்பட்ட ஆர்வம் சமஸ்கிருத மொழியில் இருந்தது. அவர் சமஸ்கிருதத்தை இலத்தீன் கிரேக்க மொழிகளோடு ஒப்பிட்டார். சமஸ்கிருதக் கடவுளர்களையும் அவர் கிரேக்க கடவுளர்களுக்கு ஒப்பிட்டார். சமஸ்கிருத காப்பியங்களை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்தார். காளிதாஸரின் சாகுந்தலத்தை 1788இல் மொழிபெயர்த்து வெளியிட்டார். இந்தியாவுக்கு அவர் கொடுத்த கொடை, மெகஸ்தனிஸின் இந்தியாவைப் பற்றிய குறிப்பை ஆராய்ந்து இந்தியாவின் நீண்ட வரலாற்றை எழுதத் துவங்குவதற்கான ஒரு தொடக்கப் புள்ளியைக் கொடுத்தது.அவரே தென்னிந்தியாவிற்கும் வந்திருந்தால்  வரலாற்றின் பார்வை வேறுமாதிரி அமைந்திருக்கும் .

அலெக்ஸாண்டரின் படையெடுப்புக்குப்பின் மெகஸ்தனிஸ் இந்தப் பக்கம் வந்திருக்கிறார். அவர் தன்னுடைய குறிப்பில், கங்கையை எர்ரானாபொஸ் (Erranaboas) சந்திக்கும் இடமான பாலிபொத்ராவில் சாண்ட்ராகோட்டஸ் என்ற அரசன் இருந்தான் என்று எழுதியிருக்கிறார். இதில் உடனடியாகத் தெரிந்த விஷயம் கங்கை மட்டுமே. ஆனால், அதில் கலக்கும் எர்ரானாபொஸ் என்ற நதி பற்றி எந்தக் குறிப்பும் இந்தியாவில் இல்லை. வேறு ஏதோ ஒரு நதியை அப்படிக் குறிப்பிடுகிறார்.

ஒருவேளை அது சரஸ்வதி போல் தடம் இல்லாமல் போன ஒரு நதியாக இருக்கலாமோ ?

அடுத்தது, பாலிபொத்ரா: அந்தப் பெயருக்கு நெருக்கமான பெயராக இருப்பது பாடலிபுத்திரா என்ற தற்போதைய பாட்னா. ஒருவழியாக அந்தப் பக்கம் முன்பொரு காலத்தில் ஓடிய நதியைத்தான் கிரேக்க மொழியில் எர்ரானாபொஸ் என்று சொல்கிறார் என்று கண்டுபிடித்தாயிற்று. ஆனால், சாண்ட்ராகோட்டஸ்? சமஸ்கிருத மொழியிலிருந்து எடுக்கப்பட்ட அரசர்கள் பட்டியலில் அப்படி ஒரு பெயர் இல்லை. ஆனால் சந்திரகுப்தர் என்ற பெயர் நெருக்கமாக இருப்பதைக் கண்டு, கிரேக்க பயணி சந்திரகுப்தரின் பாடலிபுத்திரத்திற்குத்தான் வந்திருக்க வேண்டும் என்று முடிவாகிறது. ஆசியாவில் அலெக்சாண்டருக்கு பின்னால் வந்த செலூக்கஸின் அரசவையில் இருந்தவர் மெகஸ்தனிஸ். செலூக்கஸ் 312BCயில் பாபிலோன் திரும்பிச் சென்றதாக குறிப்பிருக்கிறது. ஆகவே, சந்திர குப்தரின் காலம் அலெக்சாண்டரின் இந்தியப் படையெடுப்புக்கும் (326 BC), 312 BCக்கும் இடைப்பட்டதாகும் என்று முடிவாகிறது. வரலாறே தெரியாத இடத்தில் இதுவொரு பெரிய முன்னேற்றம்.

இவ்வாறு இந்திய வரலாறுக்கு சர் வில்லியம் ஜோன்ஸ் ஒரு நல்ல துவக்கத்தையும் , உலகின் கவனத்தை இந்திய வரலாற்றின்மேல் திருப்ப ஒரு முக்கிய காரணமாகவும் இருந்தார் .அவரைத்தொடர்ந்து பல ஐரோப்பியர்களுக்கு இந்திய வரலாற்றின் மேல் ஒரு ஆர்வம் தோன்றியது வரலாற்றின் ஆய்வில் பலருக்கு ஆர்வம் எழ சர் வில்லியம் ஜோன்ஸ் முக்கிய காரணமாக விளங்குகிறார்

2) சார்லஸ் வில்கின்ஸ்

சார்லஸ் வில்கின்ஸ் ஒரு சிறந்த சம்ஸ்கிருத அறிஞர் இவர் வில்லியம் ஜோன்ஸ்அவர்களின் நண்பர் இவர் கல்கத்தாவுக்கு 1770 ஆம் ஆண்டு இந்தியா வந்தார் .

சமஸ்கிருதம் பற்றிய ஆழமான புலமை பெற்ற ஆங்கிலேயர்களின் இவரே முதன்மையானவர் எனலாம். குப்தர்களின் கால எழுத்தைக் கண்டுபிடித்ததில் இவரது பணி முக்கியமானது . இது இந்தியாவின் கல்வெட்டு இயலில் மிக முக்கியமானதாக அமைந்தது .

அந்தக்காலகட்டத்தில் உலகில் ஒரு நம்பிக்கை மக்கள் மத்தியில் ஆழமாக இருந்தது அது உலகின் அனைத்து மொழிகளும் ஹீப்ரு மொழியில் இருந்து தோன்றியது என்பதே .

இந்தியாவில் வந்து இவர் செய்த ஆய்வுகளுக்குப்பின் பாரசீகமும் ஐரோப்பிய மொழிகளும் ஒரே மூதாதையரிடம் இருந்து தோன்றியது என நிறுவினார்.

அண்ணாமலை சுகுமாரன்15/12/2016  மீள்பதிவு  15/10/2023

Sunday, October 15, 2023

எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட வரலாறு- தராசு ஷ்யாம்

தமிழகத்தின் இரு பெரும் திராவிடக் கட்சிகளில் ஒன்றான அ. இ. அ. தி. மு. க.வின்  பொன்விழா துவக்கம் 2021 அக்டோபர் 17. 

அதன் அரை நூற்றாண்டு கால திசை வழிப் பயணம் என்ன? இனி அதன் போக்கு எப்படி அமையும்? 

அண்ணா திமுக பிறந்த 1972 அக்டோபர் 17ஆம் தேதிக்கு முந்தைய அரசியல் களம் படு சூடு.  தமிழக சட்ட மன்றத்தைக் கலைத்து 1971 பார்லிமென்ட் தேர்தலுடன் முன்கூட்டியே களம் கண்டார்  திமுக தலைவர் கலைஞர்.  அவர் சென்னையிலிருந்து தெற்கு நோக்கிப் புறப்பட்டுப் பரப்புரையில் ஈடுபட்டார்.  பொருளாளர் எம்ஜிஆர் தென்திசையில் இருந்து புறப்பட்டு வடதிசை நோக்கித் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார்.  திட்டமிடலும் ஒருங்கிணைப்பும் அந்த அளவுக்குத் துல்லியம். 

இந்திரா காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், பிரஜா சோஷலிஸ்ட், முஸ்லிம்லீக், போன்றவை திமுக கூட்டணி.  கட்சி வேட்பாளர்கள் நிறைய பேருக்கு எம்ஜிஆர் நிதி உதவியும் செய்தார். அவர்கள் பரப்புரை மேடைகளிலும் பேசினார். பிரசாரம்  முடிந்ததும்  "இதயவீணை" படப்பிடிப்புக்காக அவர் காஷ்மீர் சென்றார் 

மார்ச் மாதம் நடந்த 1971 தேர்தலில் திமுக மகத்தான வெற்றி அடைந்தது. அதன் கூட்டணிக்கு மொத்தம் 205  தொகுதிகள் கிடைத்தன. 203 தொகுதிகளில் களம் கண்ட திமுக தனியாக 184 இடங்களில் வென்றது. 

தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கியதும், எம்ஜிஆர் காஷ்மீரில் இருந்து தனி விமானத்தில் சென்னை திரும்பினார்.  திமுகவின் அமோக வெற்றிக்கு காரணம் யார் என்று பத்திரிகைகள் அலசத் துவங்கின 

எம்ஜிஆர் மந்திரி பதவி கேட்டதாகவும் படங்களில் நடிப்பதை நிறுத்தினால் அவரை அமைச்சராக்குவதாகக்  கலைஞர் சொன்னதாகவும்   சில பத்திரிகைகள் யூகச் செய்தி வெளியிட்டன. திமுகவின் அமோக வெற்றிக்கு எம்ஜிஆர் தான் காரணம் என்று  வேறு சில பத்திரிகைகள் எழுதின. 

சட்டமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரசுக்கு ஒரு இடம் கூட தரப்படவில்லை.  9 எம். பி. தொகுதிகள் மட்டுமே தரப்பட்டன.  எனவே காங்கிரஸ் கட்சியிலும் அதிருப்தி இருந்தது. எம்ஜிஆருக்கு வருமானவரி வழக்குகள் இருந்தன என்றும் அவற்றைப் பயன்படுத்தி இந்திராகாந்தி எம்ஜிஆரைப் பிரித்துத் திமுகவைப் பலவீனப்படுத்த  முயற்சிக்கிறார் என்றும் பத்திரிகைகள் எழுதத் தொடங்கின 

எம்ஜிஆருக்கு வரி பாக்கி என்ற செய்தியைப் படித்த  எம்ஜிஆர் ரசிகர்கள் அவருக்குப்  பணம் அனுப்பத் துவங்கினார்கள் 1972 மார்ச் 3ஆம் தேதி திண்டிவனத்திலிருந்து ஷெரீப் என்ற எம்ஜிஆர் மன்றத் தலைவர் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தன் வீட்டை விற்று பணத்தைக் கொடுப்பதாகக்  கடிதம் எழுதினார்.  ஒவ்வொரு மன்றமும் 100, 200 என்று பணம் அனுப்பத்  துவங்கின.  அவையெல்லாம் பத்திரிகைச் செய்திகளாக மாறின. எம்ஜிஆருக்கு இவ்வளவு பெரிய ஆதரவா என்ற விவாதம் எழுந்தது. 

மத்திய அரசு தமிழகத்துக்குப் போதிய நிதி வழங்குவதில்லை என்று சொல்லி  25 ஆண்டுகளாகத் தமிழகத்தில் அமலில் இருந்த மதுவிலக்குச் சட்டத்தை நீக்க முடிவெடுத்தார் கலைஞர். அன்றைய தி.மு.க. அரசுஆகஸ்ட் 30, 1971-ல் மதுவிலக்கு ஒழிப்பை நடைமுறைப்படுத்தியது.  

தமிழகமெங்கும் தனியார் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ராஜாஜி, காமராஜர் போன்ற தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 1971 செப்டம்பர் 15ல் (அண்ணா பிறந்தநாள்)சத்யா ஸ்டூடியோ பணியாளர்களை அழைத்துக்கொண்டு அண்ணா நினைவிடத்துக்குச் சென்று  மது ஒழிப்புக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர். கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே பனிப்போர் என்று பத்திரிகைகள் எழுதத் துவங்கின.  

அப்போது 1972 மதுரையில் ஆகஸ்ட் 5 6 ஆகிய தேதிகளில் திமுக மாநாடு நடந்தது. மாநாடு முதல்நாள் நிகழ்ச்சியில் திமுக கொடியுடன் எம்ஜிஆர் ஊர்வலத்தில் வருவார். அதைப் பார்க்க  ஏராளமான ரசிகர்கள் காத்திருப்பார்கள்.  

ஆனால் அந்த மாநாட்டில் மு. க. முத்து திமுக கொடியுடன் யானைமீது வந்தார். அது எம்ஜிஆர் மன்றத்தினர் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது. மாநாட்டில்  எம்ஜிஆர் பேசி முடித்ததும், அவர்கள் கலைந்து சென்றனர் அது கலைஞர் மனதில் காயத்தை ஏற்படுத்தியது

எம்ஜிஆர் மன்றங்களுக்கு இடைஞ்சல் தரப்படுவதாகவும்,  அவற்றைக்  கலைத்துவிட்டு மு. க. முத்து மன்றம்  துவங்க வற்புறுத்தல் இருப்பதாகவும் எம்ஜிஆர் மன்றத்தினர் புகார் தெரிவிக்கத்  துவங்கினர் எம்ஜிஆருக்கும் கலைஞருக்கும் மன விரிசல் என்று பத்திரிகைகள்  செய்தி வெளியிட்டன. 

அப்போது 1972 செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் அண்ணா பிறந்தநாள் எம்ஜிஆர் தொகுதியான ஆலந்தூரில் கொண்டாடப்பட்டது.  பேராசிரியர் அன்பழகன் தலைமை.  "மலர் இருந்தால் தான் நார்  மணக்கும்.  நாங்கள் நார்.  நீங்கள் மலர்" என்று எம்ஜிஆரை அவர் புகழ்ந்தார்.  "அண்ணா பாதையிலிருந்து திமுக தடம் மாறிச் செல்வதை அறிந்து நான் வேதனை அடைகிறேன்." என்றார் மக்கள்திலகம். 

இதெல்லாம் கட்சிக்குள் பிரச்னைகளை ஏற்படுத்தியது.  "பொருளாளர் என்ற முறையில் கட்சியின் வரவு செலவுக் கணக்கை ஆய்வு செய்ய வேண்டும்" என்று எம்ஜிஆர் கடிதம் அனுப்பினார்.  "திமுக நிர்வாகப்  பொறுப்பில் இருக்கின்ற அனைவரும் சொத்துக் கணக்கைச்  சமர்ப்பிக்க வேண்டும்"  என்றும் அவர் கூறினார். அது கொதிப்பை மேலும் கூட்டியது. 

இத்தகைய சூழலில் அக்டோபர் முதல் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யா திருமண மண்டபத்தில் (இப்போது அதிமுக தலைமைக் கழகம் அமைந்துள்ள இடம்) சென்னை-செங்கை  மாவட்ட எம்ஜிஆர் மன்ற கூட்டம் நடைபெற்றது.  சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தெய்வசிகாமணி, சிவராமன், அன்றைய சென்னை மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கல்யாணசுந்தரம் ஏற்பாடு. 

எம்ஜிஆர் மன்றத்திற்கான தனிக்கொடி அங்கீகாரம் தான் கூட்டத்தின் நோக்கம். ஆனால்  மக்கள் திலகம் தன் பேச்சில், " நமது கொடி கழகத்தின் இரு வர்ணக் கொடி தான்.  தாய்க்கழகம் வேண்டுமா, சேய் மன்றம் வேண்டுமா என்று கேட்டால் தாய்க்கழகம் தான் வேண்டும் என்பேன். ஒரு தாய் எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்." என்று பேசினார் . எவ்வளவோ வற்புறுத்தியும் தனிக்கொடிக்கு எம்ஜிஆர் சம்மதிக்கவில்லை. 

பின்னணியில் அன்றைய புதுச்சேரி முதல்வர் பரூக் மரைக்காயரின்  சமாதான முயற்சி இருந்தது. அவர் ராமாவரம் தோட்டத்திற்கு நேரில் சென்று கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் சமாதான முயற்சியில் ஈடுபட்டார். " திமுகவில் சமாதானம் ஏற்படுகிறது"  என்று பத்திரிகைகள் எழுதின.  ஆனால் அது நடக்கவில்லை. 

அக்டோபர் முதல் தேதி இப்படிப்பட்ட மனநிலையில் இருந்த மக்கள் திலகம் 16 நாட்களில் தனிக் கட்சி கண்டார்.  தனிக்கொடி கண்டார்.  184 இடங்களைப் பெற்று அசைக்க முடியாத ஆளுங்கட்சியாக இருந்த திமுக சுமார் 16 மாதங்களில் பிளவைச் சந்தித்தது.  எப்படி நடந்தது இந்த வேதியியல் மாற்றம்?

அக்டோபர் மாதம் 10ஆம் தேதி சத்யா ஸ்டூடியோவில் "நேற்று- இன்று-நாளை" படப்பிடிப்பு.  மக்கள்திலகம் அதில் இருந்தார். ஆனால் அன்று திமுக செயற்குழு. அதற்குப் பொருளாளர் எம். ஜி. ஆருக்கு அழைப்பு இல்லை. 

திடீரென்று "தி ஹிண்டு"  ஆங்கிலப் பத்திரிகையின் தலைமை நிருபர் கிருஷ்ணசாமி ராமாவரம் தோட்டத்திற்குப்  போன் பேசினார்.  "தி. மு. க,  செயற்குழுவில் மக்கள் திலகத்தை பொருளாளர் பதவியில் இருந்தும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் சஸ்பெண்ட் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது"  என்ற செய்தியை அவர்தான் முதலில் கூறினார்.  

அதற்கு எம்ஜிஆரின் பதில் என்ன என்று தெரிந்து கொள்ள இந்து பத்திரிக்கை விரும்பியது.  சத்யா அரங்கத்தில் மக்கள் திலகம் சாப்பிட மற்றும் இளைப்பாற தனி அறையும், தனித் தொலைபேசியும்  உண்டு.   எம். ஜி. ஆர்.  தான் அந்தப் போனை எடுப்பார்.  

அந்தத்   தொலைபேசியில் தொடர்புகொண்டு திமுகவிலிருந்து எம். ஜி. ஆர். நீக்கப்பட்ட விஷயம் பற்றிச் சொல்லப்பட்டது.  ஆனால் அவர் சத்தமாகச் சிரித்தார்.  "இந்து பத்திரிக்கையில் பதில் கேட்கிறார்கள்"  என்று அவரிடம் கூறியிருக்கிறார்கள்.  

"நான் பாயாசம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன் என்று சொல்"

இதுதான் எம். ஜி. ஆரின் பதில். அக்டோபர் 11-ஆம் தேதி "தி ஹிண்டு" இதை அப்படியே பிரசுரித்தது.  பாயாசம் என்பது தான் அரசியல் குறியீடு. எம்ஜிஆர்  குறியீடுகளின் குரு. 

அக்டோபர் 11-ஆம் தேதி பெரியார் கலைஞரிடம் பேசினார்.  எம்ஜிஆர் பெரியாரை போய்ப் பார்த்தார்.  அவரது அறிவுரைப்படி மறுநாள் அக்டோபர் 12   நாஞ்சில் மனோகரனும், முரசொலி மாறனும்  எம்ஜிஆரைச்   சந்தித்துப் பேசினார்கள்.  பின்னாட்களில் நாஞ்சிலார் பழைய சம்பவங்களைப் பற்றி என்னிடம் அசை போடுவார்.  

எந்த முயற்சியும் பலன்அளிக்கவில்லை. 1972 அக்டோபர் 14ஆம் தேதி எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். அக்டோபர் 16ஆம் தேதி, எம்.ஜி.ஆரின் தீவிர ஆதரவாளரான உடுமலைப்பேட்டை இஸ்மாயில் என்பவர் தீக்குளித்து உயிர்நீத்தயார்.  

ஏராளமான எம்ஜிஆர் மன்றத்தினர் தாக்கப்பட்டார்கள்.  திமுக அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். எம்ஜிஆர் மன்றத்தின் தலைமைப்  பொறுப்பில் இருந்த முசிறிப் புத்தன், ஓமப்பொடி பிரசாத் உள்ளிட்ட ஏராளமான மன்றத்தினர் ரத்தம் சொட்டச்  சொட்ட ராமாவரம் தோட்டத்திற்கு வந்தார். எம். ஜி. ஆர். மன்றக் கிளைகளைக் கலைக்கச் சொல்லிக் காவல்துறையே நெருக்கடி கொடுத்த சம்பவங்களும் நடந்தன.  

இந்த நிகழ்வுகள் எல்லாம்  எம்ஜிஆர் மனதை மாற்றின.   அக்டோபர் 17ஆம் தேதி அதிமுக உதயமானது. தொண்டர்கள்  தலைவருக்கு அழுத்தம் கொடுத்து உருவாக்கிய கட்சி அதிமுக என்று  வரலாறு அதனால் தான் குறித்து வைத்திருக்கிறது. 

கலைஞர், எம். ஜி. ஆர். ஆகிய இரு தலைவர்களுமே பெரிய ஆளுமைகள். தத்தம் தனித் திறமைகளால் மக்கள் மனங்களை வென்றவர்கள். அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுக பிளவுபட்டுவிடாமல் காப்பாற்றியதில் இருவருக்குமே சம பங்கு உண்டு. 

அரை நூற்றாண்டுக்குப் பிறகு பெரிய தலைவர்களின் அந்தக் கால அரசியல் நகர்வுகளை விமர்சனம் செய்வது பொருத்தம் அல்ல. ஆனாலும் அதிமுகவின் பொன்விழா துவங்கும் நேரத்தில் இந்த வரலாற்றுச் சம்பவங்களை நினைவு கூர்ந்தால் தான் தமிழகத்தின் அடிப்படை அரசியலைப் புரிந்து கொள்ளமுடியும். 

அதிமுகவின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா 1998 ல் கொண்டாடப்பட்டது.  அதற்கான மலரைத் தயாரிக்கும் பொறுப்பை மறைந்த ஜெயலலிதா ஒரு பத்திரிகையாளானாக எனக்கு வழங்கினார். 

இன்னொரு மலர்க் கமிட்டி நாவலர் நெடுஞ்செழியன்  தலைமையில் இயங்கியது. எனவே நான் தயங்கினேன்.   ஆனால் ஜெயலலிதா கொடுத்த உற்சாகத்தால் மலரைத் தயாரித்தேன். திருநெல்வேலியில் மாபெரும் ஊர்வலம். மறுநாள் வெள்ளிவிழாக் கண்காட்சி. மலரை  நாவலர் நெடுஞ்செழியன் வெளியிட்டார். ஜெயலலிதா பெற்றுக்கொண்டார். 

எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால் எம். ஜி. ஆர், ஜெயலலிதா போன்ற அதிமுகவின் மாபெரும் தலைவர்கள் அந்த அளவுக்கு பல்வேறு திறமைகளை அடையாளப்படுத்தினார்கள். இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். கலைஞர் முதல்வராக இருக்கும்போது அதிகாலையிலேயே தினத்தாள்களைப் படித்துவிட்டு நேரடியாகப் பத்திரிக்கையாளர்களோடு போனில் பேசுவார். என்னோடும் அவ்வாறு தொடர்பு கொண்டு தகவல் கேட்டிருக்கிறார். 

அதிமுகவின் இன்னொரு சிறப்பு அம்சம், கட்சியின் தலைமை (பொதுச் செயலாளர்) அடிப்படைத் தொண்டர்களால் தான் முடிவு செய்யப்படவேண்டும் என்ற விதி. அதை மாற்றவே முடியாது என்று ஜெயலலிதா பின்னர் சிறப்புச் சேர்த்து வைத்திருந்தார். 

அதற்கும் காரணங்கள் உண்டு. கட்சியின் பொதுக்குழு கபளீகரம் செய்யப்பட்டுவிட்டால் தன்னை நம்பி வந்த தொண்டர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று எண்ணினார் எம். ஜி. ஆர். அவர்களுக்குப் பாதுகாப்புத் தர அவர் விரும்பினார். அவரது எண்ணத்திற்கு வலுச் சேர்ப்பது போல 1975ல் ஒரு சம்பவம் நடந்தது. 

அப்போது சிதம்பரத்தில் அதிமுக பொதுக்குழு-செயற்குழு கூடியது. எம். ஜி. ஆரைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கச் சிலர் முயற்சித்தனர். அதற்குப் பொதுக்குழு-செயற்குழுவில் தீர்மானம் கொண்டுவரப் போவதாகப் பயங்கரமான செய்திகள் அடிபட்டன.  முசிறிப்புத்தான், அய்யம்பேட்டை அஜீஸ், ஷாகுல் ஹமீது, கோவை மருதாச்சலம் உள்ளிட்ட எம். ஜி. ஆர். மன்றத்தினர் முறியடி முயற்சிகளில் இறங்கினார்கள். 

அதிமுகவைப் பிளவுபடுத்தும் முயற்சிகளை முளையிலேயே கிள்ள  முடிவெடுத்தார் எம். ஜி. ஆர். கட்சியின் அமைப்புச் சட்டம் விதி எண் 20 பலப்படுத்தப்பட்டது. அதன்படி கட்சியின் பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். பொதுக்குழுவுக்கு அந்த அதிகாரம் கிடையாது.  திருத்தப்பட்ட அதிமுக அமைப்புச் சட்டம் 1976 நவம்பர் முதல் அமலுக்கு வந்தது. 

சுருக்கமாகச் சொன்னால் அதிமுக அமைப்புச்சட்டத்தின்படி கொடி பிடிக்கும் தொண்டனே முடிவெடுப்பவன். அதுவே கட்சியின் அடிப்படை. எம். ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அபிலாஷை.  இந்த அடிப்படை மாற்றவியலாதது. (BASIC STRUCTURE) ஆனால் இன்றைய அதிமுகவில் அந்த அடிப்படை தகர்க்கப்பட்டு விட்டது.  ஒருங்கிணைப்பாளர் (ஓபிஎஸ்)இணை ஒருங்கிணைப்பாளர் (எடப்பாடி பழனிச்சாமி) போன்றோர் கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இது குறித்த சிவில் வழக்கு நிலுவையில் உள்ளது. 

அதிமுக, திமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளின் பலம் என்பது அவற்றின் தொண்டர்கள் தான். அதிமுகவின் ஆளுமை இரட்டை இலையும் வசீகரம் மிக்க தலைவர்களான எம். ஜி. ஆரும் ஜெயலலிதாவும் கஷ்டப்பட்டு உருவாக்கி வைத்துள்ள வாக்குவங்கியும் தான் அதிமுக. அதைத் தக்க வைத்துக் கொள்ள ஒற்றுமை அவசியம். வாக்கு அரசியலில் அரவணைப்பு முக்கியம். 

பொன்விழாக் கொண்டாடும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு நமது நல் வாழ்த்துகள்.

Saturday, October 14, 2023

சேரமா தேவி குருகுலம் - பெரியார் பேச்சு

 சேரமா தேவி குருக்குலம்

  - தந்தை பெரியார்

பெரியோர்களே! தாய்மார்களே!

அந்தக் காலத்து எங்கள் சக்திக்கு ஒரு சிறு உதாரணம் சொல்லுகிறேன் - கேளுங்கள்! நான் காங்கிரசுக் காரியதரிசியாயும், தலைவனாயும் இருந்த காலங்களில் தமிழ்நாட்டு வாலிபர்களை தேசிய வீரர்களாக்கவென்று வி.வி.எஸ். அய்யர் என்னும் ஒரு தேசியப் பார்ப்பனர் காங்கிரசை 10,000 ரூபா கேட்டபோது, அதற்கு நானே பிரதானமாய் இருந்து ரூபா அனுமதித்தேன்.

அந்தப் பணம், குருகுலம் என்று ஒரு ஆசிரமம் வைத்து, அதில் பார்ப்பனப் பிள்ளைகளை வீட்டிற்குள் வைத்தும், பார்ப்பனரல்லாத பிள்ளைகளை வெளியில் வைத்தும் சாப்பாடுபோட்டு வருணாசிரம தருமம் கற்றுக் கொடுக்கப் பயன்பட்டதுடன், அதன்பேரால் தமிழ் மக்களிடம் மற்றும் 20, 30 ஆயிரம் ரூபா வசூல் செய்யப்பட்டது. 

அதற்குத் தமிழ்நாடும், நவசக்தியும் ஆதரவு அளித்தன. 

இந்தச் சூழ்ச்சியான அக்கிரமம் சகிக்காமல் நான், முதலியார் அவர்களிடம் மாயவரத்தில் வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டேன்.

 அப்போது அவர்கள் டாக்டர் நாயுடு அவர்கள் பேரில் புகார் சொல்லி, நாயுடு அவர்கள் 'தமிழ்நாடு' பத்திரிகையில் ஆதரிப்பதால் நான் ஆதரிக்கவேண்டியிருக்கின்றது என்றார். இருவரும் நாயுடு அவர்களிடம் தெரிவித்துக் கொண்டோம். அவ்வளவுதான் சங்கதி.

உடனே டாக்டர், குருகுலத்தின்மீது போர்தொடுத்தார். தமிழ்நாட்டுப் பார்ப்பனர் கள் தோழர்கள் இராசகோபாலச்சாரியார், சீனிவாச அய்யங்கார் உள்பட எல்லோரும் நாயுடு அவர்களுக்கு விரோதமாய் எவ்வளவோ தொல்லைகள் விளைவித்தும் பயன்படாமல், கடைசியில் குருகுலம் அடியோடு அழிந்தும் அதில் இப்போது படைக்கள்ளியும், நெருஞ்சில் முள்ளும் வளரும்படி, பாம்பும் பூச்சியும் வாழும்படி ஆகிவிட்டது.

(ஈரோட்டில், 26.11.1933இல் சொற்பொழிவு, புரட்சி 3.12.1933)

Friday, October 13, 2023

மோகன் சி லாசரஸ்

வெளி நாட்டில் இருந்து வரும் மதம் மாற்ற வரும் பணமும் மோகன் சி லாசரஸ்க்குதான்...

இவருக்கு கிறிஸ்தவ மதத்தில் உள்ளவர்கள் அனைவரும் அவர்கள் சம்பாதிப்பதில் எல்லோரும் 10% லாபத்தையும் கொடுக்கணுமாம். இல்லாட்டி கண் குருடாகும்...அது இது என தன் மக்களை மிரட்டுவார்.

குரும்பூர் ரயில்வே நிலைய வெளி இடம் முழுவதையும் குத்தகைக்கு மத்திய அரசு மூலம் மோகன் சி லாசரஸ்தான் பெற்று உள்ளார் 

அப்பகுதியை சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணியின் மாநில நிர்வாகி இவரிடம் எச்சில் பணம் பெற்று வலம் வரும் வலது கரம். அவர்தான் ரயில்வே இட நிர்வாகம் பொறுப்பை லாசரஸ்க்கு குரு ஜியிடம் பேசி வாங்கி கொடுத்தவர்.

இரயில்வே வளாகத்தில் 45 வருட பழமையான ஆனந்த விநாயகர் கோவில் உள்ளது.

அதை அப்புறப்படுத்த ரயில்வே நிர்வாகத்தை வைத்து கோர்ட்டில் வழக்கு போட வைத்து உள்ளவர் மோகன் லாசரஸ். இப்போது சர்ச்சை தொடங்கி விட்டது.JCB இயந்திரம் வரை கொண்டு வந்ததை வழி படும் கொதித்தெழுந்து நிறுத்தினர். காரணம் அவர் சர்ச் பக்கத்தில் கோவில் இருக்கிறது.

இப்போ இந்துக்களும்,கிறிஸ்தவர்களும் இந்த நாசக்கார வன்முறை சிண்டிகேட்களால் வன்ம சண்டை போடணும்.

இப்போ இவர்கள் முட்டாளா?.

மக்கள் முட்டாளா?.

நாட்டில் அரசியல் சிண்டிகேட் மட்டும் அல்ல.

பணம் பறிக்கும் எண்ணத்தில் உள்ள மதவாத சிண்டிகேட் ஏமாற்று கூட்டணிகளை ஒழிக்காமல் தமிழகத்தில் எந்த மதங்களும் நிம்மதி பெற்று வாழவே இயலாது.

நீங்கள் எதிரி என எண்ணும் ஒருவரை விட அருகில் உள்ள துரோகியே நம்மை என்றும் அழிப்பார்கள்.

உணர்ச்சிகளை கட்டுப் படுத்துங்கள்.

வில்லை உடையுங்கள்.

தூத்துக்குடி அரசியல் சூப்பரா மக்களே!!.

தமிழக அரசியல் சிண்டிகேட்,மத சிண்டிகேட் இரண்டுமே ஒன்றுதான்.

பாலசுப்பிரமணியம் ஆதித்தன் T

மோகன் சி லாசரசுக்கு ஆதரவாக துக்ளக் குருமூர்த்தி

குரும்பூர் ஆனந்த விநாயகர் கோவிலை உடைக்க மோகன் சி லாசரஸ்க்கு ஆதரவாக செயல் படும் ஆடிட்டர் குருமூர்த்தி...

திருச்செந்தூர் ரயில் நிலையத்திலும், குரும்பூர் ரயில் நிலையத்திலும் அக்காலத்தில் ரயில்வே அதிகாரிகள் துணையோடு பக்தர்கள் சிறு ஆனந்த விநாயகரை வழி பட்டு வருகின்றனர்.

மெகா சர்ச் ஒன்று குரும்பூரில் கட்டி உள்ளார் மோகன் சி லாசரஸ் .லட்சக்கணக்கில் இங்கு வருபவர்களை வைத்து வசூல் செய்வது வழக்கம்.வெளி நாட்டில் இருந்து வரும் மதம் மாற்ற வரும் பணம் கொண்டு வர துடிப்பாக செயல் படுவதில் ஒருவர் மோகன் சி லாசரஸ்.

குரும்பூர் ரயில்வே நிலையத்தின் வெளி இடம் முழுவதையும் Maintenance செய்வதாக குத்தகைக்கு காங்கிரஸ் காலத்தில் மத்திய அரசு மூலம் மோகன் சி லாசரஸ் வகையறாதான் உரிமை பெற்று உள்ளனர். 

இதற்குள் 45 வருட ஆனந்த வினாயகர் பழமையான கோவில் உள்ளது. சிறு வயது முதல் நான் உள்பட இக்கோவிலுக்கு போகாதவர்கள் இப்பகுதியில் இருக்க வாய்ப்பே இல்லை.

மோகன் சி லாசரஸ் சர்ச் க்கு வரும் வாகனங்களை நிறுத்த இந்த ரயில்வே இடங்கள் பயன் படுத்தப் படுகிறது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வானதி சீனிவாசனை மத்திய ரயில்வே போர்டில் அமர்த்தி இதற்கான காயை நகர்த்திக் கொடுத்தது ஆடிட்டர் குருமூர்த்திதான்.

இதற்கிடையில் பாஜக ஆட்சி வந்த பிறகும் ரயில்வே போர்டு குருமூர்த்தியின் கண் அசைவு செல்வாக்கில் மோகன் சி லாசரஸை அரவணைத்து தொடர்ந்தது.

அது கூட பிரச்சனை இல்லை.

ரயில் நிலைய இடத்தில் ஆனந்த விநாயகர் இருப்பதை கண் உறுத்தவே ரயில்வே நிர்வாகத்தை வைத்தே இதை உடைக்க வழக்கு தொடர வைத்தனர் லாசரஸ் - குருமூர்த்தி மெகா கூட்டணி.

எங்களுக்கு இதற்கும் சம்மந்தம் கிடையாது என்று இந்த வேத விற்பனையாளர்கள் இப்போதும் கூறுவார்கள்.

மோடி ஒழிக என்று குரும்பூர் ரயில்வே நிலைய பார்க்கிங் இடத்தை குத்தகைக்கு எடுத்த ஒருவர் பிரதமர் மோடி ஆட்சியில் பேச இயலும் என்றால் இவரிடம் செல்லம் கொஞ்ச வரும் கில்லாடி ஆடிட்டர் யார் என்று நீங்களே புரிந்தும் கொள்ளலாம்.

பிரதமருக்கே சவால் விடும் இவர்களுக்கு ஆனந்த விநாயகர்தான் முடிவு கட்டுவார் என்று எண்ணுகிறேன்.

கோர்ட் உத்தரவு படி பல நேரங்களில் இக்கோவிலுக்கு இடையூறு வந்தும் ஆனந்த விநாயகர் தன்னைக் காப்பாற்றி உள்ளார்.

நாளை ஆனந்த விநாயகர் கோவிலை உடைப்பதற்காக பல தரப்புகளை தூண்டி JCB வாகனம் வர உள்ளதாக தகவல்கள்.

ஒரு வேளை ஆனந்த விநாயகர் கோவிலுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் ஆடிட்டர் குருமூர்த்தியின் 2000க்கு மேற்பட்ட பினாமி டிரஸ்ட் வண்டவாளங்கள் பிரதமரின் நேரடி பார்வைக்கு கொண்டு சென்று அவரின் இந்தப் பிழைப்புக்கு முற்றுப் புள்ளி வைப்பேன். அதே நேரத்தில் மோகன் லாசரஸின் களவாணித் தனங்கள் அனைத்தும் அலசப்பட்டு அவருக்கு ஆனந்த விநாயகரின் அருளால் முடிவுரை எழுதுவேன் என்று தெளிவாக சொல்லிக் கொள்கிறேன். 

இதை வெற்று வார்த்தைக்காக சொல்லவில்லை.

பணம் பறிக்கும் எண்ணத்தில் உள்ள மதவாத சிண்டிகேட் ஏமாற்று கூட்டணிகளை ஒழிக்காமல் தமிழகத்தில் எந்த மதங்களும் நிம்மதி பெற்று வாழவே இயலாது.

நீங்கள் எதிரி என எண்ணும் ஒருவரை விட அருகில் உள்ள துரோகியே நம்மை என்றும் அழிப்பார்கள். அதற்கு உதாரணம் இவர்கள்.

தமிழக அரசியல் சிண்டிகேட்,

மத சிண்டிகேட் இரண்டுமே ஒன்றுதான்.

முதலமைச்சர் எடப்பாடியார் அமைதி ஏற்படுத்த முயற்சிப்பார் என நம்புகிறேன்.

மீண்டும் சொல்கிறேன்.

குரும்பூர் ஆனந்த விநாயகருக்கு ஏதேனும் தீங்கு ஏற்படின் நீங்கள் இருவரும் எவ்வளவு பெரிய வில்லாளகண்டர்களாக இருந்தாலும் உங்கள் இருவரையும் மக்கள் முன்பாகவும்,பிரதமர் முன்பாகவும்  நிறுத்துவேன். செய்த மர்ம குற்றங்கள் அனைத்தையும் வெளிப்படுத்துவேன்.

விடவே மாட்டேன்.

இது திருச்செந்தூர் முருகன் மேல் ஆணை.

ஓம் ஆனந்த விநாயகரே போற்றி.

வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை.

ஓம் முருகா

படங்கள் கமென்ட்டில் காண்க.

31.05.2018 எனது பதிவின் லிங்க்

https://m.facebook.com/story.php?story_fbid=1020636528094972&id=100004459025108

ஆனந்த விநாயகரை காக்க பகிருங்கள்.

பாலசுப்ரமணியம் ஆதித்தன், 25.6.2018

Thursday, October 12, 2023

கால்டுவெல்லும் மணியரசனும்- பொ.வேலுசாமி

தமிழுக்குப் பெருமைச் சேர்த்த ஆங்கிலேயேர் கால்டுவெல்லும் அவரை ஆதாரங்களின்றி வசை பாடும் தோழர் மணியரசனும்

நண்பர்களே….

19 ம் நூற்றாண்டு வரை தமிழ்மொழியை  சமஸ்கிருதத்தின் துணையின்றி தனித்துவமாக இயங்கத் தகுதியற்ற மொழி என்று தமிழ்நாட்டுக் கல்வியாளர்களும் உலக அறிஞர்களும் எழுதியும் பேசியும் வந்தனர். இத்தகைய கருத்துக்களை விஞ்ஞானரீதியில் மறுத்து, தமிழ் தனித்துவமாக நிற்கும் தகுதியுடைய மொழி என்பது மட்டுமல்ல. உலகின் மிகச் சிறந்த பழைமையும் பெருமையும்  மிக்க மொழிகளான கிரேக்கம் இலத்தீன் போன்றவற்றுடன் ஒப்ப வைத்து பேசப்படும் தகுதியுடைய மொழியென்று (வெறும் வார்த்தைகளால் சொல்லாமல் ) கோட்பாட்டுரீதியான சமூக விஞ்ஞான ஆராய்ச்சியின் வழியாக உலகினருக்கு உணர்த்தியவர் கால்டுவெல்தான்.    அதனை உலக அறிஞர்களும் பிறமொழிகளைச் சார்ந்த இந்திய அறிஞர்களும்  ஒப்புக் கொண்டதையும் இன்றைய வரலாறு நமக்கு உணர்த்துகின்றது. 

இத்தகைய நிலையில் ஒரு பகுதியை  உங்களுக்கு காட்டுவதற்காகத் தமிழ்நாட்டு மொழியியல் அறிஞர்களும் தமிழர்களும்  கால்டுவெல்லைப் பற்றியும் அவர் எழுதிய நூலான திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் பற்றியும் செய்துள்ள ஆய்வுகளின் பட்டியலை உங்களுக்குக் கொடுத்துள்ளேன். அத்துடன் கால்டுவெல்லின் வரலாற்றை மிகச் சிறந்த முறையில் முதுபெரும் தமிழறிஞர் தஞ்சை பள்ளியக்ரஹாரம் கந்தசாமிபிள்ளை அவர்களால் 1958 இல் தமிழ்ப்பொழில் இதழில் எழுதப்பட்ட கட்டுரையின் இணையதள இணைப்பை உங்களுக்கு கொடுத்துள்ளேன். இந்த அரிய கட்டுரையை தயவுசெய்து வாசியுங்கள். 

தமிழுக்கு உலகளவில் பெருமைச் சேர்த்த இத்தகைய அறிஞரை தோழர் மணியரசன் நியாயமற்ற முறையில் வக்கிரமாக அவதூறு செய்கிறார். 

அந்த அவதூறு செய்திகளை உங்களிடம் உண்மைபோல் காட்டுவதற்கு கால்டுவெல் ஆங்கிலத்தில் எழுதிய ஒப்பிலக்கண நூலின் சில வரிகளை மட்டும் பயங்கரமாக வாசித்துக் காட்டுகிறார். 

இந்தச் செய்திகள் எழுதப்பட்டுள்ள பகுதிகள் தமிழிலேயே மிகச் சிறப்பாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.  இதில் கால்டுவெல் அவர்கள் தென்னிந்திய மொழிகளை யெல்லாம் தொகுத்துச் சொல்லுவதற்கு  “திராவிடம்”  என்ற பெயரை ஏன் தேர்ந்தெடுத்தார் எப்படித் தேர்ந்தெடுத்தார் என்பதை விளக்குவதாக  எழுதப்பட்டுள்ளது. 

 அந்த விளக்கங்கள் அனைத்தும் அழகான தமிழில் 300 பக்கத்திற்கு மேல் உள்ளன. 

 அந்தப் பகுதிகளை நீங்கள் எளிமையாக வாசித்து கால்டுவெல்லைப் பற்றிய சரியான தகவல்களை உங்களுக்குள் உருவாக்கிக் கொள்ளுவீர்கள் என்ற நம்பிக்கையில் அந்த நூலின் இணையதள இணைப்பை இத்துடன் இணைத்துள்ளேன். 

கால்டுவெல்லைப் பற்றிய அவதூறுகளில் ஒன்றாக தோழர் மணியரசன் கூறுவது என்னவென்றால்,  பழந்தமிழர்கள் இலங்கைத் தவிர மற்ற நாடுகளுக்கு வணிகம் நிமித்தமாகச் செல்லவில்லை என்று குறிப்பிடுகின்றார். 

ஒரு விசயத்தைக் கவனத்தில் கொள்ளவேண்டுகிறேன். 

பழந்தமிழர்கள் உலகின் பல நாடுகளுடன் தொடர்புக் கொண்டவர்களாக இருந்தனர் என்பதை முதன்முதலாக ஆராய்ந்து சொன்னவர் கால்டுவெல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதற்கு முன்னர் அத்தகைய ஆராய்ச்சிகள் நடைபெறவில்லை.  

“அரிசி, இஞ்சி, மயில்தோகை” போன்ற தமிழ்ச் சொற்கள் கிரேக்கமொழியில் உள்ளதை முதன்முதலாகச் சுட்டிக் காட்டியவர் கால்டுவெல்தான்  என்பதை பல அறிஞர்கள் எழுதியுள்ளனர். 

அத்தகைய பகுதிகளும் இந்த தமிழ் முன்னுரையில் உள்ளன என்பதை நீங்கள் படிக்கும்போது புரிந்து கொள்வீர்கள். 

குறிப்பு

1. நண்பர்களே இன்றைய உலக அரசியல், சமூக சூழல் மனிதத் தன்மையற்று வணிகமயமாகி நாளுக்கு நாள் வளர்ந்து வருவதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. 

இத்தகைய சூழலில் எவ்வளவு பெரிய மனிதர்கள் ஆனாலும் அவர்களால் சொல்லப்படுகின்ற கருத்தை சரியான ஆதாரங்களைத் தேடி ஒப்பிட்டுப் பார்த்து உண்மையென்றால் ஏற்றுக் கொள்வதும் பிழையென்றால் தயங்காமல் தள்ளிவிடுவதுமாகிய அறிவு ஆற்றலைப் பெற்றிருந்தால் மட்டுமே நம்முடைய தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் நம்மை மற்றவர்கள் விலங்குகளைப் போன்று அடிமைகளாக்கி ஆட வைத்து வாழ்வைப் பறித்துக் கொள்வார்கள் என்பதை  இன்றைய நிலையிலும் பல நாட்டுச் செய்திகள் தினமும் நமக்கு  உணர்த்திக் கொண்டிருப்பதை நாம்  அனைவரும் அறிவோம். 

2. கால்டுவெல் எழுதிய 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ' என்ற நூல் மிக அண்மைக்காலம் வரையில் ஆங்கிலத்தில் கூட முழுமையாகப் பதிப்பிக்கப்படவில்லை. 

சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட ஆங்கில பதிப்பும் இத்தகைய குறைபாடு உடையதே. 

 அந்நூலை முழுமையாக இப்பொழுது ”உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்” சிறந்த அறிஞரைக் கொண்டு மொழிபெயர்த்து முடித்துவிட்டது. 

மிக விரைவில் அந்த நூல் விற்பனைக்கு வர உள்ளது. தொல்காப்பியம் பற்றியெல்லாம் கால்டுவெல் எழுதியுள்ள பகுதிகள் இதில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

கால்டுவெல்லின் வாழ்க்கை வரலாற்றை பெரும்புலவர் அறிஞர் பள்ளியக்ரஹாரம் கந்தசாமிபிள்ளை அவர்கள் எழுதி 1958 ல் தமிழ்ப்பொழில் இதழில் வந்த கட்டுரை

https://www.tamildigitallibrary.in/periodicals-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdk0Me&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+Vol.+34%2C+No.+4+%28%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%2C+1958%29#book1/

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

https://www.tamildigitallibrary.in/book-list-view-book?cid=20&id=jZY9lup2kZl6TuXGlZQdjZl9k0Qy&tag=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

தோழர் மணியரசன் பேசியது

https://www.youtube.com/watch?v=Wz8OiVXjtVo

இந்து சமய அறநிலையத் துறை - ஓர் அடிப்படைப் புரிதல்

 இந்துசமய அறநிலையத்துறை 

- அடிப்படை புரிதல்

முதலில் இந்து சமய  அறநிலயத்துறையின் தர்கத்தை (logic) புரிந்து கொள்வோம். 

அறநிலயத்துறையின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள எல்லா கோவில்களும் இல்லை.

பண்டைய காலம் முதல் இன்று வரை 

1) ஒரு தனியாரால் கட்டப்பட்ட கோவில்கள் எதுவும் அறநிலயத்துறையின் கீழ் வருவதில்லை

 (உதா: உங்கள் தெரு முக்கில் உள்ள பிள்ளையார் கோவில், சிலரின் முயற்ச்சியால் உருவான சாய்பாபா கோவில்கள், உங்கள் ஊரில் உள்ள குலதெய்வ கோவில், இப்படி). 

2) அதே போல் ஒரு குழுவால், மடத்தால் கட்டப்பட்ட கோவில்களும் வருவதில்லை. (உதா: காஞ்சி மடம், மதுரை ஆதீனம் இப்படி).

3) எந்தெந்த கோவில்கள் எல்லாம் மன்னராட்சியில் அரசர்களால் கட்டப்பட்டு, அரசால் பராமரிக்கப்பட்டதோ அவைகள் மட்டுமே அந்த மன்னராட்ச்சி முடிந்து மக்களாட்சியிலும் அரசின் வசம் உள்ளது. 

தமிழகம் முழுக்க இலட்சக்கணக்கான கோவில்கள் இருக்கும். அதில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்கள் வெறும் 38ஆயிரத்து  சொச்சம் தான்.

இதே தர்கத்தின் அடிப்படையில் தான் வக்ஃபு வாரியங்களும் அரசால் நடத்தப்படுகின்றன.

வக்ப்பு வாரியங்கள் இந்தியா முழுவதும் அந்தந்த மாநில அரசால் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு, மேலான்மை செய்யப்பட்டு வரப்படுகின்றன.

இஸ்லாமிய மன்னர்களால் கட்டப்பட்ட மசூதிகளையும், அது சார்ந்த சொத்துக்களையும் மேலான்மை செய்வது அந்த வக்ஃபு வாரியங்கள் தான்.

ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் மன்னராட்சி இல்லை என்பதாலும், ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் அரசால் இங்கே சர்ச்சுகள் கட்டப்படவில்லை என்பதாலும் (பல மிசினரிகள் இங்கே வந்து அவரவர்கள் செலவில் கட்டப்பட்டவை, நமது மடங்கள் அவர்கள் செலவில் கட்டிய கோவில்கள் போல) சர்ச்சுகளுக்கு இப்படி அரசாங்க அமைப்பு இல்லை.

அறநிலையத்துறையின் கீழ் 17 சமண கோவில்களும் உள்ளன என்பது உபரி தகவல்.

++++++++++++++++++++++++++++++

"கோவில்களில் பக்தர்கள் கடவுளுக்கு காணிக்கை செலுத்துகிறார்கள். அது அந்த கடவுளுக்கு சொந்தம். அதை அரசு எடுத்து கண்டபடி செலவு செய்வதா??"

இது அறநிலையத்துறையின் மேல் ஒரு சில பிற்போக்குவாதிகளால் வைக்கப்படும் ஒரு கேள்வி.

கோவில்களில் இருந்து வரும் வருமானத்தில் ஒரு ரூபாய் கூட அறநிலயத்துறைக்கு அப்பால், வேறு எதற்கும் செலவு செய்யப்படுவதில்லை.

இன்னும் சொல்லப்போனால் ஒரு கோவிலின் வருமானம் கூட மற்றொரு கோவிலுக்கு செல்லாது. 

*Common good fund*  என்று ஒரு பொது fund உருவாக்கப்பட்டு,  அதிக வருவாய் உள்ள கோவில்களில் இருந்து ஒரு தொகை இதற்கு மாற்றப்படுகிறது. 

அந்த தொகையில் இருந்து தான் குறைந்த வருவாய் உள்ள கோவில்களுக்கான செலவுகள் திட்டமிடப்படுகின்றன. 

அதிக வருவாய், குறைந்த வருவாய் என எப்படி கணக்கெடுக்கிறார்கள்?

ஆண்டு வருமானம் 

1) 10,000 ரூபாய்க்கும் குறைவு,

2) 10 ஆயிரம் - 2.5 லட்சம்

3) 2.5 லட்சம் - 10 லட்சம்

4) 10 லட்சத்துக்கும் மேல்

இதில் (4) இல் வரும் கோவில்களின் எண்ணிக்கை 331 மட்டுமே. 

இந்த 331 கோவில்களின் வருமானத்தில் ஒரு சதவிகிதம் அந்த common good fundக்கு மாற்றப்பட்டு அதன் மூலம் மீதமுள்ள மூன்று categoryயிலும் வரும் 38,300+ கோவில்கள் பராமரிக்கப்படுகின்றன.

கோவில்களின் வருமானத்தில் 'assessible income' என்ற ஒரு குறப்பிட்ட தொகைக்கு 14% வருமான வரி உண்டு.

 அந்த வரி மட்டுமே அரசாங்கத்திற்கு போகிறது. 

அந்த வரியும் கூட அறநிலைய அதிகாரிகளுக்கு சம்பளம் போன்ற அறநிலையத்துறை சார்ந்த administrative செலவுகளுக்குத்தான் செலவு செய்யப்படுகின்றது. 

எனவே கோவில் வருமானங்களை, அரசு ஏன் எடுத்துக்கொள்கிறது என்ற கேள்வி திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி....

Wednesday, October 11, 2023

குத்தூசி குருசாமி நினைவு நாள்

குத்தூசி குருசாமி நினைவு நாள் 11.10.2023

குத்தூசி குருசாமி

பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள குருவிக்கரம்பை கிராமத்தில் 1906 ஏப்ரல் 23இல் பிறந்தார்.

 முதன்முதலாக பெரியாரைச் சந்தித்தபோது அவருக்கு வயது 23. பெரியாரின் குடியரசு இதழில் ‘குத்தூசி’ என்ற பெயரில் சமூக சீர்திருத்த, பகுத்தறிவு சார்ந்த கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். 1929இல் தன்னைப் போன்றே பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட குஞ்சிதம் அம்மையாரை பெரியாரின் தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார். 

தமிழ்நாட்டில் பெரியார் நடத்திவைத்த முதல் சீர்திருத்தத் திருமணம் குத்தூசி குருசாமி - குஞ்சிதம் அம்மையார் திருமணம்தான். 

அக்காலத்தில் பல எதிர்ப்புகளுக்கு இடையேதான் அது நடைபெற்றது.

பெரியார் தலைமையில் சுயமரியாதை இயக்கம் வேர்விட்ட காலத்தில், அவருடன் அறிமுகமாகி, இறுதிவரையில் அவரோடு இணைந்து பயணித்தவர் குத்தூசி குருசாமி.

எழுத்துச் சீர்திருத்தத்தின் முன்னோடி

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து முதன்முதலாகப் பேசியவர் குருசாமி. பெரியாருடன் இதுபற்றி விவாதித்து, புதிய தமிழ் எழுத்து வடிவங்களைக் குடியரசில் முதன்முதலாகப் பயன்படுத்தவும் செய்தார். “இது தமிழ் மொழியின் எழுத்து வடிவத்தை மேலும் செழுமைப்படுத்து

வதுடன், தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்” என்றார். கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடியான சிங்காரவேலர் 1923இல் விவசாயத் தொழிலாளர் இயக்கத்தைக் கட்டமைத்து, 

இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் மே தினத்தை நடத்தியபோது அதில் குருசாமியும் பங்கேற்றார். அப்போது அவர் பதின்பருவ இளைஞர். இடதுசாரி இயக்கத் தலைவர்களுடன் குருசாமி தனது கடைசிக் காலம் வரையில், நெருக்கமான உறவைப் பேணினார்.

1949இல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்ட காலத்தில், பல தலைவர்களுக்குத் தன் வீட்டில் அடைக்கலம் அளித்தார். கைது செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலரைச் சிறைக்குச் சென்று சந்தித்தார் குருசாமி. அதற்கு நன்றி தெரிவித்து அவர்கள் எழுதிய கடிதங்களே, கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் மீது அவர் வைத்திருந்த அன்புக்குச் சான்று.

1952இல் முதன்முதலாக நடந்த பொதுத்தேர்தலில், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார் பெரியார். அந்தத் தேர்தலில் இடதுசாரிகள் வெற்றிபெற்றபோதும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ராஜாஜி ஆட்சியமைத்தார். இதனைக் கண்டித்து ‘கொல்லைப்புற வழியில் ஆச்சாரியார்’ என்று விடுதலையில் எழுதினார் குருசாமி. 

இன்று அரசியல்வாதிகள் சரளமாகப் பயன்படுத்துகிற இந்தச் சொல், முதன்முதலாக அப்போதுதான் அச்சில் பயன்படுத்தப்பட்டது.

‘குடியரசு’, ‘விடுதலை’ ,‘அறிவுப் பாதை’ மற்றும் ‘புதுவை முரசு’ பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதினார் குருசாமி.

பாரதிதாசனுடனான நட்பின் காரணமாக அவரின் முதல் கவிதைத் தொகுதியைப் பிரசுரிக்கும் பொறுப்பையும் ஏற்றார். 

குருசாமியின் மனைவி குஞ்சிதம் தான் பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

குருசாமி, ஆங்கிலத்தில் இருந்து பல்வேறு நூல்களையும், கட்டுரைகளையும் தமிழில் மொழிபெயர்த்தார். 

ஐரோப்பிய அறிஞரான பெட்ரண்ட் ரஸ்ஸலின் புகழ்பெற்ற நூலான ‘நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல’ என்பது அவரது முக்கியமான மொழிபெயர்ப்பு. 

தேர்தல் அரசியலில் ஈடுபடுவது குறித்து பெரியாருடன் கருத்து வேறுபாடு கொண்ட அண்ணா, 1949இல் பெரியார் - மணியம்மை திருமணத்தை முன்வைத்து தனி இயக்கத்தைத் தொடங்க முடிவு செய்தார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது, பிரிவைத் தடுக்க சமரச முயற்சிகளை மேற்கொண்டவர் குருசாமி.

குத்தூசி குருசாமி முன்வைத்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை, அவரது மறைவுக்குப் பிறகு 1978இல் எம்.ஜி.ஆர் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது

தன் வாழ்நாளில் எழுத்துகளிலும், பேச்சுகளிலும் பகுத்தறிவுக் கருத்தியல் சார்ந்து குருசாமி எந்தச் சமரசமும் செய்து

கொண்டதில்லை. சுயமரியாதை இயக்கத்தின் அடையாளமாக இருந்த குருசாமி 1965 அக்டோபர் 11இல் காலமானார்.

இவரின் நூல்களையும், வாழ்க்கை வரலாற்றையும் அவரின் நண்பரான குருவிக்கரம்பை வேலு வெளியிட்டிருக்கிறார். 

Rajamani A.R. அவர்களின் பதிவு

மெக்காலே : பழமைவாதக் கல்வியின் பகைவன்

மெக்காலே: பழமைவாதக் கல்வியின் பகைவன் - முனைவர் இரா. சுப்பிரமணி - சாளரம் வெளியீடு - முதல் பதிப்பு 2023 - பக்கங்கள் 160 - விலை ரூ 180/

*  சமஸ்கிருதமே இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் என்ற போலி பிம்பத்தை 1856ம் ஆண்டு உடைத்தெறிந்தவர் - கால்டுவெல் ! 

அவரது சிறப்பான ஆய்வு நூலான ' திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ' உலகின் கண்களைத் திறந்து வைத்தது ! 

*  சமஸ்கிருதத்தையும், குருகுலத்தையும், வர்ணாசிரத்தையும் நம்பி, உயர் ஜாதி பிள்ளைகளுக்கு மட்டுமே கல்வி என்ற நடைமுறைக்கு 1835ம் ஆண்டு சமாதி கட்டியவர் - மெக்காலே ! 

அவரது ' ஆங்கில வழிக் கல்வி திட்ட முறை ' இந்தியர்களின் கல்விக் கண்ணை திறந்து வைத்தது !

*  யார் இந்த மெக்காலே ?

மெக்காலே அறிமுகப் படுத்திய ஆங்கில வழிக் கல்வி முறை நல்லதை செய்ததா ? அது  குமாஸ்தாக்களை உருவாக்குகின்ற கல்வி முறையா ? இந்தியாவின் அறிவுப் பாரம்பரியத்தை சிதைத்ததா ? அன்றைய இந்தியாவில் கல்வி நிலை என்ன ? ....போன்ற கேள்விகளுக்கு நிறைய நூல்களை ஆராய்ந்து விடை தந்துள்ளார் முனைவர் இரா. சுப்பிரமணி ! 

*  " மெக்காலே என்னும் ஆங்கில அதிகாரியை கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் இந்நூல் உருவாக்கப்படவில்லை. இந்திய தேசத்தின் கல்வி வரலாறு என்பது விருப்பு வெறுப்பற்ற நிலையில் வாசிக்கப்பட வேண்டும் என்பதாக எடுத்துரைக்கவே இந்த நூல் வெளி வந்துள்ளது ! ..." என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகின்றார் நூலாசிரியர் ! 

*  முதலில் ' யார் இந்த மெக்காலே ? ' என்ற கேள்விக்கு ஒரு சுருக்கமான அறிமுகம் இதோ : 

*  தாமஸ் பாபிங்டன் மெக்காலே ( 1800 - 1859 ).

மெக்காலே இங்கிலாந்தில் பிறந்தவர். பள்ளியில் சிறந்த மாணவர். 1818ல் கல்லூரிப் படிப்பு. சட்டம் பயின்றார். 1826ல் வழக்கறிஞரானார். சிறந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். 1830ல் நாடாளுமன்ற உறுப்பினரானார். அடிமைத்தனம், மூடநம்பிக்கை போன்றவற்றை தீவிரமாக எதிர்த்தார். மனிதாபிமான மிக்கவர் !

*  கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்ற இந்தியாவுக்கு 1834ல் சென்று ,1838ல் இங்கிலாந்துக்கு திரும்பினார். உலகின் புகழ்பெற்ற நூலான ' இங்கிலாந்தின் வரலாறு ' நான்கு பாகங்களை எழுதி வெளியிட்டார். 1852ல் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்வானார். 

1859ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி மரணமடைந்தார் ! 

*  இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியை நிர்வகிக்கும் பொறுப்பில் ஆண்டு 1834 முதல் 1838 வரை இருந்தார். அப்போது அவருக்கு தரப்பட்ட முக்கியமான இரண்டு பணிகளை செய்து முடித்தார்.

1) இந்தியத் தண்டனைச் சட்டத்தை உருவாக்கியது !

2) இந்திய மக்களுக்கு எந்த மொழியில் கல்வி பயிற்றுவிப்பது என்ற நீண்ட விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த - ஆங்கில வழிக் கல்வியை சட்ட பூர்வமாக அறிமுகப்படுத்தியது ! 

*  மெக்காலேயின் ஆங்கில வழிக் கல்விமுறையை பரிந்துரைத்த 13 பக்க கல்விக்

 குறிப்பு, இந்தியாவின் கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் பிரபுவிடம் 02.02.1835 அன்று சமர்பிக்கப்பட்டது . அதை ஆங்கிலேய அரசு 07.03.1835 அன்று ஏற்றுக் கொண்டது ! 

*  ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் கல்வி என்ற பெயரால் நடந்த வெட்கக் கேட்டை , மெக்காலே தனது 13 பக்க கல்விக் குறிப்பில் எழுதப்பட்டதிலிருந்து சில தகவல்கள் : 

*  " இங்கிலாந்திலுள்ள ஒரு இலாடக்காரன் கூட ஒப்புக் கொள்ள வெட்கும்படியான மருத்துவ முறைகளும் ; இங்கிலாந்திலுள்ள பாடசாலைகளில் படிக்கும் சின்னஞ்சிறிய சிறுமியருக்கும் நகைப்பை உண்டாக்கும் விபரீதமான வான சாஸ்திரங்களும் ;  முப்பதடி உயரமுள்ள அரசர்கள் அறுபதாயிரம் வருஷம் ஆண்ட வரலாறுகளைக் கொண்ட சரித்திரமும் ; பாற் கடலும், நெய் கடலும் கொண்ட பூகோள சாஸ்திரமும் இங்குக் காணப்படுகின்றன ! " ....

*  மெக்காலே மேலும் சொல்வதைக் கேளுங்கள் :

" இப்படி பலவிதமான முரண்பாடுகளுடன் இந்தியாவில் நிலவி வந்த சமஸ்கிருதக் கல்வி முறை என்பது திட்ட மிட்டு, இந்தியாவை இருளில் வைக்க சிறப்பாகத் திட்டமிட்ட முறையாகும் ( The Sanskrit system of Education would be the best calculated to keep the country in darkness ) " ....மெக்காலேயை சங்கிகள் வெறுப்பதற்கு இது தானே காரணம் ! 

*  மெக்காலேயின் கல்வித் திட்ட நிலைப்பாட்டில் சில கூறுகள் : 

1)  ஆங்கில வழிக் கல்வியை பயிற்று மொழியாக கொள்ள வேண்டும்.

2)  ஆங்கில பள்ளிகளில் தாய் மொழியும் கற்பிக்கப் படவேண்டும்.

3)  இந்து, முஸ்லிம் சமூகப் பிள்ளைகள் ஒன்றாக கல்வி கற்க வேண்டும்.

4)  இந்து பண்டிகையின் போது இஸ்லாமிய பிள்ளைகளுக்கும், இஸ்லாமிய பண்டிகையின் போது இந்து பிள்ளைகளுக்கும் விடுப்பு அளிக்க வேண்டும்.

5)  ஆங்கிலேயர் பிள்ளைகளும் இந்தியர்களின் பிள்ளைகளும் ஒரே பள்ளியில் படிக்க வேண்டும்.

6)  நிற பேதம், சாதி பேதம், சமய பேதம் கல்வி கூடங்களில் இருக்கக் கூடாது.

7)  30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் இருக்க வேண்டும்.

8)  ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பதை தடுக்க வேண்டும்.

9) ‌ ஆசிரியர்களுக்கு நல்ல ஊதியம் வழங்க வேண்டும்.

10) மாணவர்களை மையப்படுத்தியே பள்ளிகளும், கல்வியும், பாடங்களும், கற்பித்தலும் அமைய வேண்டும்.

*  பிராமணர்களின் குருகுல கல்விக்கும், சமஸ்கிருத கல்விக்கும் முடிவுரை கட்டினார் என்பதாலேயே மெக்காலேயை சனாதனிகளும், சாதி வெறியர்களும், சமத்துவத்தை எதிர்ப்பவர்களும், கடுமையாக தொடர்ந்து விமர்ச்சிக்கின்றார்கள் ! 

*  மெக்காலே என்ற அந்த ஆங்கிலேயனின் தீர்க்கமான அறிவின் வெளிச்சத்தின் காரணமாக இந்தியாவில் மத நீக்கல் கல்வி அமலானது ! 

ஒருவேளை அப்படி நடக்காமல் இருந்தால், இந்தியா ஓரு மத வழிப்பட்ட நாடாக மாறி, இன்றைய ஆப்கானிஸ்தான் போல மாறி இருக்கும் என்று சமூகவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் ! 

*  இந்த சிறந்த ஆய்வு நூலை எழுதி நமக்கு வழங்கியுள்ள முனைவர் இரா. சுப்பிரமணி அவர்களை பகுத்தறிவு உலகம் பாராட்ட கடமைப்பட்டுள்ளது ! 

தொட்டாலே தீட்டு என்று தூரத்தில் நிறுத்தியது - வர்ணாசிரமம் ! 

பட்டாலே நூலை அணிந்த பார்ப்பனரை உயர்த்தியது - 

சனாதனம் ! 

மூக்காலே முணுமுணுக்கும் சமஸ்கிருதம் ஆதிக்கத்தின் மொழியானது - ஆரியர்களால்!

மெக்காலே முன்னெடுத்த ஆங்கிலம் அனைவரின் மொழியானது - ஆங்கிலேயர்களால் !

பொ. நாகராஜன்,

பெரியாரிய ஆய்வாளர்,

சென்னை - 09.10.2023

********************************************