Monday, November 27, 2023

திருவாரூர் விடயபுரம் பற்றி சாக்கோட்டை மு. இளங்கோவன்

அண்ணன் மு.இளங்கோவன் அவர்களின் பதிவு....

அன்பு கவி,

எனது பெற்றோர்கள் தனலட்சுமி , முனுசாமி , குழந்தை சுமதியுடன் அரசியல் சட்டத்தை எரித்து சிறை சென்றார்கள் .

தந்தையார் பற்றி கவலையில்லை .. அவர் பல்வேறு போராட்டங்களில் அடிக்கடி சிறை சென்ற அனுபவம் உண்டு.

எனது தாயாருக்கு முதல் முறை. அதை விட என் தங்கை சிறுபிள்ளை .மூன்று மாதங்கள் கழித்து வந்த போது உடம்பு கை கால்களெல்லாம் புண் .கைகள் எல்லாம் சீழ்வடிய பாவமாக இருந்தது. பெண்கள் சிறை தான் . 

சுந்தர லீலா அம்மையார், சுப்புலட்சுமிபதி இன்னும் பலர் எல்லோரும் ஆள் அடையாளம் தெரியாத அளவு உருமாரியே இருந்தார்கள் .

 திருவாரூர் விசயபுரத்தில் தான் அரசியல் சட்டம் எரிக்கப்பட்டது. அப்போது நடந்தது எல்லாம் இன்றும் கூட எனக்கு காட்சியாய்த் தான் இருக்கிறது. 

பெரியவர் அய்யா சிவசங்கரன் அவர்களும் கிடாரங்கொண்டான் ,லட்சுமணன் அண்ணன் அவர்களும் தான் சட்டப் பிரிவின் நகல்களைக் எல்லோருக்கும் கொடுத்தார்கள். நிறைய கூட்டம்.

அங்கே எவருக்குமே போலீஸ் , சிறை என்பது போன்ற சிந்தனை இருந்ததாக தெரியவில்லை. எதோ திருமண வரவேற்பு போல மகிழ்ச்சியோடு இருந்தார்கள் . எல்லோரையும் வேனில் ஏற்றும் போதும் கோஷம் போட்டுக் கொண்டே ஏறினார்கள்.

 அப்போதும் கடைசியாக வேனில் ஏறுவதற்காக சுந்தரலீலா – சிங்கராயர் அவர்கள் நின்று கொண்டு மற்ற பெண்களை ஏற்றி விட்டார்கள்.

 அப்போதுதான் எனது தாயார் கேட்டது "எங்களை ஏன் சார் இப்பவேனில் ஏற்றுகிறீர்கள்?"


"உங்களுக்குத் தெரியாதாம்மா ? சட்டத்தை அவமதிச்சா ஜெயிலுன்னு ?" _ 


"அப்ப இந்த போலீஸ்கார அய்யாவையும் ஏத்துங்க . நாங்க நெருப்பு வச்சோம் .இவரு கீழே புடுங்கி போட்டு பூட்ஸ் காலால மிதிச்சுதான நெருப்பை அணைச்சாரு? பூட்ஸ் காலாலமிதிச்சா அதுவும் அவமதிக்கிறது தான?" என்று சொல்லவும் போலிசார் உட்பட அனைவருமே சிரிக்கவும் சூழலில் வருத்தமே காணவில்லை.


அதை விட ,சிறை மீண்டு வீட்டுக்கு வந்த பின்னும் எனது தாயாரின் பேச்சு முழுவதும் எதோ ஒரு பெரியபோரில் ஒரேஒரு வீரன் 100 பேரை வெற்றி கொண்டது போல் அதையே பேசிக் கொண்டிருந்ததுதான் வியப்பாக இருந்தது.

அப்போது என் தந்தையார் சிறையில் இருந்தார் .அதைப் பற்றியெல்லாம் எனது அம்மா கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. 

இவர்களது " சிறை அனுபவத்தையே "பேச்சாக இருந்தது.

 எனது தங்கையின் புண்கள் ஆறி சரியாக வர நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. 


எல்லோரும் சிறை மீண்டு வந்த பின்னால் ஒரு நாளில் அய்யா அவர்களே ஒவ்வொரு ஊராகச் சென்று பாராட்டு விழா நடத்தினார்கள். 

மேடையில் எனது அம்மாவின் முறை வந்த போது "வாங்கம்மா தனலட்சுமியம்மா .. நீங்க தான் போலீஸ்காரரையும் ஜெயிலுக்கு கூப்பிட்டதா ?" , என்று சிரிக்கவும் எனது தாயாருக்கு முகம் மகிழ்ச்சியை பார்க்க வேண்டுமே ..அடேயப்பா .

. . எனக்கு நானே மண்டைக் கனத்துடன் மகிழ்ச்சியடையும் செய்திகள் . இப்போது உங்களுடன்  பகிர்வு.

நன்றி!

(உட்கார்ந்து யோசித்தால் ஏராளமான பெயர்கள் வரும். கிட்டத்தட்ட எல்லோருமே பின்னாளில் என்னோடு இயக்கத்தில் இருந்தார்கள். எல்லோருமே என்னை விட மிக மூத்தவர்கள் . )

Saturday, November 25, 2023

வைக்கம் போராட்டம் பற்றி பெரியார்

ஆங்கிலேயர் ஆட்சியில் கேரளாவின் வைக்கம் என்ற ஊரில் கோவிலை சுற்றிய தெருக்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடமாட தடை இருந்தது. இந்த சமூக அநீதிக்கு எதிராக டிகே மாதவன் முதன் முதலாக குரல் கொடுத்தார். 1924-ம் ஆண்டு மார்ச் 30-ந் தேதி வைக்கம் போராட்டம் தொடங்கப்பட்டது. பெரும் பிரளயத்தை ஏற்படுத்திய வைக்கம் போராட்டம் வெகுவேகமாக ஒடுக்கப்பட்டும் வந்து. அப்போதுதான் தமிழ்நாட்டு காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த தந்தை பெரியார் வைக்கம் சென்று போராட்டத்துக்கு தலைமை ஏற்று முன்னெடுத்தார்.

வைக்கம் போராட்டம் குறித்து தந்தை பெரியார் எழுதியதாவது:

வைக்கம் போராட்டத்துக்காக நான் வருகிறேன் என்ற விஷயம் தெரிந்து கொண்டு, போலீஸ் கமிஷனர் பிட், இன்னொரு அய்யர் (அவர் பெயர் இப்போது சரியாய் ஞாபகத்திற்கு வரவில்லை. திவான் பேஷ்தாரர் சுப்பிரமணிய அய்யர் என்று நினைக்கிறேன்), ஒரு தாசில்தார் (விசுவநாத அய்யர்) எல்லோரும் என்னைப் படகிலிருந்து நான் இறங்கும் போதே வரவேற்றார்கள். மகாராஜா அவர்கள், எங்களை அவர்கள் சார்பில் வரவேற்று வேண்டிய எல்லா சவுகரியங்களையும் பண்ணித் தரச் சொன்னார் என்று சொல்லி எங்களை வர வேற்றார்கள். இது எனக்குப் பெரும் ஆச்சரியத்தைத் தந்தது என்றாலும், ஏன் மகாராஜா அப்படிச் செய்தார் என்றால் அதற்கு 3 மாதத்திற்கு முன்பு இருந்த இராஜா டெல்லிக்குப் போகிறதற்கு ஈரோடு வழியாக வந்து, ஒரு நாள் ஈரோட்டிலே தங்கிவிட்டு, அடுத்த நாள் டெல்லிக்கு இரயில் ஏறிப் போவது வழக்கம். அப்படி ஈரோட்டிலே தங்கும்போது, அதற்கு வேண்டிய வசதிகளையும், மகாராஜா எங்கள் பங்களாவிலும் தான் தங்க ஏற்பாடு செய்யப்பட் டிருக்கும். அப்படி 3 மாதத்திற்கு முன் வந்தபோது அவருடன் இந்த போலீஸ் அதிகாரி, இன்னும் இராஜாவுக்கு உதவிக்குத் தேவையான எல்லா அதிகாரிகளும் வந்து போனதில் இவர்கள் ஈரோட்டில் என்னை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறவர் களாகவும், நானும் அவர்களை எங்கள் வீட்டிற்கு வந்தபோது, சந்தித்துப் பேசியவர்களாகவும் இருந்திருக்கிறோம். இதனால் மகாராஜா சற்று மரியாதை காட்டினார்.

சத்தியாகிரகத்தைத் தொடர்ந்து நடத்த வந்த என்னை மகாராஜா சார்பில் இந்தப் பெரிய அதிகாரிகளே வரவேற்கின்றார்கள் என்று கண்டதும் இப்பக்கத்தில் பாமர மக்களுக்கு ஒரே மகிழ்ச்சியாக ஆகி விட்டது. என்னை விருந்தினராக மகாராஜா கருதினாலும்கூட நான் பல இடங்களில் சென்று பொதுக் கூட்டம் போட்டு சத்தியாக்கிரகத்தைப் பற்றிப் பேசினேன். காரசாரமாகப் பேசினேன், கீழ்ச்சாதி மக்களான நாம் உள்ளே தெருவில் போவதால் தீட்டுப்பட்டுவிடும், செத்துப் போகும் என்று சொல்லும் வைக்கத்தப்பனைப் போட்டு வேட்டி துவைக்கணும் என்றெல்லாம் கடுமையாகப் பேசினேன். சுற்று வட்டார மக்கள் ஆயிரக்கணக்கில் வைக்கம் வந்து கூடி விட்டார்கள். அது இராஜாவுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. 5, 6 நாள் வரை சும்மா தான் இருந்தார். பலரும் போய் அவரிடத்தில் நான் பேசுவது குறித்து முறையிட்டார்கள். பிறகு இராஜாவினால் சும்மா இருக்க முடியவில்லை.

இப்படி சுமார் 10 நாள் ஆனவுடனேயே, ஒரு போலீசு (சூப்பிரண்ட்) அதிகாரி அவர்கள் அய்யங்கார் - அவர் முயற்சியால் பி.சி.26 படி தடையுத்தரவு போட்டார். அந்நாட்டிலே 26 என்பது இப்போது இங்கே 144 தடையுத்தரவு போன்றது. நானும் சட்டம் மீறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கண்டறிந்தேன். உடனே நான் சட்டத்தை மீறிப் பேசினேன். என்னுடன் (தற்போது காங்கிரசுக்காரராக இருக்கும்) கோவை திரு. அய்யாமுத்து அவர்களும், மற்றும் இருவரும் சட்டம் மீறினோம். எங்களைக் கைது செய்தார்கள். எல்லோருக்கும் ஒரு மாதம் வெறுங்காவல் போட்டார்கள்! என்னை அருவிக்குத்தி என்ற ஊரில் உள்ள ஜெயிலில் (சிறையில்) வைத்தார்கள். அதற்குப் பிறகு என் முதல் மனைவியார் திரு. நாகம்மையாரும் பிறகு நான் வெளியே வந்தவுடன் என் தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாளும் மற்றும் சிலரும் வந்து நாடெல்லாம் சென்று பிரச்சாரம் செய்தார்கள். நான் விடுதலை ஆகி வந்து அதே மாதிரி மறுபடியும் திட்டம் போட்டேன்.

நான் வெளியே வருவதற்குள் இந்தக் கிளர்ச்சிக்கு ஏராளமான அளவில் ஆதரவு பெருகிவிட்டது. மளமளவென்று ஆட்களும் வந்து சேர ஆரம்பித்தனர். ஏராளமான பேர்கள் பல பகுதிகளிலும் சென்று சுற்றுப் பயணம் செய்து தீவிரப் பிரச்சாரம் செய்தார்கள். எதிரிகளும் அடிதடி, காலித்தனம், கலவரங்கள் முதலியவற்றில் ஈடுபட்டு இதை எப்படியாவது ஒடுக்கிவிட வேண்டுமென்று பலவித முயற்சிகளும் செய்து பார்த்தார்கள்.

ஆனால், போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு பெருகிக் கொண்டேயிருந்தது. வெளிநாடுகளிலிருந்து மலையாளிகளும் சாதிக் கொடுமை என்பதைக் கண்டு மனம் துடித்து, அதற்குத் தங்கள் எதிர்ப்பையும் சாதிக் கொடுமைகளை எதிர்த்துச் செய்யப்படும் போராட்டத்திற்குத் தங்கள் ஆதரவையும் காட்டும் வண்ணம் தினம் ரூ.50-60-100 என்று மணியார்டர் அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள்.

பெரிய பந்தல் போட்டு தினசரி போராட்ட வீரர்கள் முகாம் செய்திருந்த வீட்டில் 200-300 பேர் சாப்பிடுவார்கள்! தேங்காயும், மற்ற காய்கறிகளும், மலைமலையாகக் குவிந்து கிடக்கும். பெரிய கலியாண வீடு மாதிரி காரியங்கள் நடைபெறும்.

திரு. இராசகோபாலாச்சாரியார் எனக்குக் கடிதம் எழுதினார். நீ ஏன் நம் நாட்டை விட்டுவிட்டு இன்னொரு நாட்டிலே போய் இரகளை செய்கிறாய்? அது சரியல்ல. அதை விட்டுவிட்டு நீ இங்கு வந்து, நீ விட்டு விட்டுச் சென்ற வேலைகளைக் கவனி என்று. அப்போது இருந்த எஸ். சீனுவாசய்யங்காரும் இப்படித்தான் என்னை வைக்கத்திற்கு வந்தே அழைத்தார்; வரச் சொன்னார். அதே மாதிரி பத்திரிகையிலேயும் எழுதினார்கள். ஆனால், இதற்குள் சத்தியாக்கிரக ஆசிரமத்தில் 1000 பேருக்கு மேல் சேர்ந்தார்கள். தினமும் ஊர் முழுவதும் சத்தியாக்கிரக பஜனையும், தொண்டர்கள் ஊர்வலமும் நடந்து உணர்ச்சி வலுத்து விட்டது.

பஞ்சாபில் சுவாமி சிரத்தானந்தா என்பவர் ஒரு அப்பீல் போட்டார். அதன் பிரகாரம் பஞ்சாபிலேயிருந்து சீக்கியர்கள் 20-30 ஆள்களையும், இரண்டாயிரம் ரூபாயையும் கையிலெடுத்துக் கொண்டு நேரே வைக்கத்துக்கு வந்தார்கள். தாங்கள் சாப்பாட்டுச் செலவை ஏற்றுக் கொண்டு ஆதரவு தருவதற்காக. உடனே இங்கிருந்த பார்ப்பனர்கள் எல்லாரும் சீக்கியர்கள் வந்து, இந்துமதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கிறார்கள் என்றெல்லாம் காந்திக்கு எழுதினார்கள்.

உடனே அதன் பேரில் காந்தியார் துலுக்கன், கிறிஸ்தவன், சீக்கியன் ஆகிய பிற மதக்காரன் எவனும் இதில் கலந்து கொள்ளக் கூடாது என்று எழுதி விட்டார்கள்.

காந்தி எழுதினவுடனே இதில் கலந்திருந்த சீக்கியன், சாயபு, கிறிஸ்தவன் எல்லாரும் போய் விட்டார்கள். அதுபோலவே, தீவிரமாக இதில் ஈடுபட்டு முன்னோடியாக உழைத்த காலஞ்சென்ற ஜோசப் ஜார்ஜீக்கும் இராஜகோபாலாச்சாரியார் கடிதம் எழுதினார். இந்து மதச்சார்புள்ள இந்தக் காரியத்திலே நீ சேர்ந்திருப்பது தப்பு என்றார்.

அதை ஜோசப் ஜார்ஜ் அவர்கள் இலட்சியம் பண்ணாமல் திருப்பி எழுதினார். நான் என் சுயமரியாதையை விட்டுவிட்டு இருக்க மாட்டேன். வேண்டுமானால் என்னை விலக்கி விடுங்கள் என்றார். தற்போதைய நாகர்கோயில் பயோனீர் டிரான்ஸ் போர்ட்டைச் சேர்ந்த சேவு என்பவரும் அண்மையில் காலஞ்சென்ற டாக்டர் எம்.இ. நாயுடு அவர்களும் என்னுடனேயே இருந்து தொடர்ந்து நடத்துவது என்று முடிவு செய்தார்கள். அவர்கள் இதை விட்டுப் போக மாட்டேன் என்று உறுதியாகத் தெரிவித்து விட்டார்கள் என்றாலும், காந்தி சத்தியாக்கிரகத்திற்கு விரோதமாக எழுதிப் பணத்தையும் ஆளையும் தடுத்து விடுவாரோ என்று சிலர் பயப்பட்டார்கள்.

அந்தச் சமயம் சாமி சிரத்தானந்தா அவர்கள் வைக்கம் வந்து தான் பணத்துக்கு வகை செய்வதாகச் சொன்னார். பிறகு காந்தி கட்டளைக்கு விரோதமாவே சத்தியாக்கிரகம் நடந்து வந்தது.

இதற்கிடையில் நடந்த ஒரு நிகழ்ச்சியும் கவனிக்கத்தக்கது. எங்கள் போராட்டத்துக்குப் பெரிய மரியாதையையும், செல்வாக்கையும், தேடிக் கொடுத்துவிட்டது, இந்தக் காந்தி கட்டளை. இந்த சமயத்தில் என்னை மறுபடியும் பிடித்து 6 மாதக் கடினக் காவல் விதித்து ஜெயிலில் போட்டு விட்டார்கள். பிறகு சத்தியாகிரகத்தை நிறுத்து வதற்காகவும், எங்களை அழிப்பதற்காகவும் என்று நான் ஜெயிலில் இருக்கிற சமயத்தில் இந்த நம்பூதிரி பார்ப்பனர்களும், சில வைதீகர்களும் சேர்ந்து கொண்டு சத்துரு சங்கார யாகம் என்னும் ஒன்றை வெகு தடபுடலாக ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து நடத்தினார்கள். ஒரு நாள் நடுச்சாமத்தில் தொடர்ந்து வேட்டுச் சத்தம் கேட்டது. நான் ஜெயிலில் விழித்துக் கொண்டிருந்தேன். ரோந்து வந்தவனைப் பார்த்துக் கேட்டேன், என்ன சேதி? இப்படி வெடிச் சத்தம் கேட்கிறது? இந்தப் பக்கம் ஏதாவது பெரிய திருவிழா நடக்கிறதா? என்று கேட்டேன். அதற்கு அவன் சொன்னான், மகாராஜாவுக்கு உடம்பு சவுக்கியமில்லாமல் இருந்தது. மகாராஜா நேற்று இராத்திரி திருநாடு எழுந்துவிட்டார் என்றான்.

அதாவது ராஜா செத்துப் போனார் என்று சொன்னான். அவ்வளவுதான், மகாராஜா செத்தார் என்றவுடன் எங்களுக்கு ஜெயிலுக்குள்ளாகவே ரொம்ப பெருமை வந்துவிட்டது. அவர்கள் பண்ணிய யாகம் அங்கேயே திருப்பி மகாராஜாவைக் கொன்றுவிட்டது என்றும், அந்த யாகம் சத்தியாக் கிரகக்காரர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும், மக்களிடையே இது ஒரு தனி மதிப்பை ஏற்படுத்திவிட்டது. அதன் பிறகு அரசாங்கம் எங்களையெல்லாம் ராஜாவின் கருமாதியை முன்னிட்டு விடுதலை செய்தனர். எதிரிகள் குரலும், கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிவர ஆரம்பித்தது.

ராணியும் கூப்பிட்டு எங்களோடு ராஜி பண்ணி ஒரு உடன்பாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்தவுடன், அப்போது சமஸ்தானத்தில் திவானாக இருந்த ஒரு பார்ப்பான் என்னிடத்தில் நேரே ராணி பேசக் கூடாது என்று கருதி திரு. இராஜகோபாலாச்சாரிக்குக் கடிதம் எழுதினார். இராகோபாலாச்சாரியும் எங்கே என்னிடத்தில் ராஜி பேசி உடன்பாட்டிற்கு வந்தால் எனக்கு மரியாதையும், புகழும் வந்து விடுமே, அந்த மாதிரி வரக்கூடாது என்று கருதி, இதைக் காந்தியாருக்கே அந்த வாய்ப்பு அளித்து காந்தியின் மூலமே காரியம் நடந்ததாக உலகுக்குக் காட்ட வேண்டுமென்று தந்திரம் செய்து காந்திக்குக் கடிதம் எழுதினார். எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. எப்படியாவது காரியம் வெற்றியானால் போதும்; நமக்கு பேரும் புகழும் வருவது முக்கியமல்ல என்ற கருத்தில் நானும் ஒப்புக் கொண்டேன்.

காந்தியும் புறப்பட்டு வந்தார். ராணியோடு காந்தி பேசினார். ராணி காந்தியோடு பேசியபோது ராணி தெரிவித்தார்கள், நாங்கள் ரோடுகளைத் திறந்து விட்டுப் போகிறோம். ஆனால், அதை விட்டவுடன் நாயக்கர் கோயிலுக்குள் போக உரிமை வேண்டும் என்று கேட்டு ரகளை செய்தால் என்ன செய்வது? அதுதான் தயங்குகிறோம் என்றார்கள். உடனே காந்தி டி.பி.யில் தங்கியிருந்த என்னிடத்தில் வந்து ராணி சொன்னதைச் சொல்லி என்ன சொல்லுகிறாய்? இதை ஒப்புக் கொண்டு விடுவது நல்லது என்றார். நான் சொன்னேன் பப்ளிக் ரோடு திறந்து விடுவது சரி! ஆனால் அதை வைத்துக் கொண்டு கோயிலைத் திறந்து விடும்படி கேட்க மாட்டோம் என்று எப்படி நாம் உறுதியளிப்பது? கோயில் பிரவேசம் என்பது காங்கிரசின் இலட்சியமாக இல்லாவிட்டாலும் எனது இலட்சியம் அதுதானே! அதை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்? வேண்டுமானால் ராணிக்கு ஒரு வார்த்தை சொல்லுங்கள். இப் போதைக்கு அது மாதிரி கிளர்ச்சி எதுவுமிருக்காது. கொஞ்ச நாள் அது பற்றி மக்களுக்கு விளங்கும்படி பிரச்சாரம் செய்து, கலவரத்திற்கு இடமிருக்காது என்று கண்டால்தான் கிளர்ச்சி ஆரம்பிக்கப்படலாம் என்று சொல்லுங்கள் என்று சொன்னேன். அதைக் காந்தி ராணியிடம் சொன்னவுடன் ராணியார் ரோட்டில் யார் வேண்டுமானாலும் நடந்து செல்லலாம் என்று உத்தரவு போட்டு பொது சாலையாக ஆக்கினார்கள். இவ்வாறு பெரியார் எழுதி இருக்கிறார்.

 (புரட்சி பெரியார் முழக்கம், பிப்ரவரி 2019).

Tuesday, November 14, 2023

பெரியார் என அழைத்த பினாங்கு ஜானகி அம்மையார்

 1930 ஆம் ஆண்டிலேயே  “பெரியார்” என்றழைத்த பினாங்கு ஜானகி அம்மையார்.

(முரசொலி பாசறைப்பக்கத்தில் வெளியான என் கட்டுரை-வழக்கறிஞர் அருள்மொழி)

‘கல்வியே பெண்களுக்கு கம்பீரத்தை வழங்கும் ‘ என்ற கருத்தை விடாமல் வலியுறுத்திய பினாங்கு ஜானகி, “ பெண்களுக்கு வேண்டிய சீதனம் யாது ? “ என்ற தலைப்பில்,6.4.1930 அன்று வெளியான குடி அரசு ஏட்டில்  கல்வியின் மேன்மையையும், தந்தை பெரியார் அவர்களின்  ஒப்பற்ற அன்பையும் மனம் நெகிழும்படி எழுதினார் பினாங்கு ஜானகி.

“ உதாரணமாக, நம் திரு.ராமசாமி பெரியார் அவர்கள் இந்நாடு வருவதாக பெரிய ஆர்ப்பாட்டமாக இருந்த காலத்தில் பெரியார் அவர்களைக் காண பெரும் ஆவல் கொண்டிருக்கும் பொழுது,பெரியார் வர இரண்டொரு தினத்திற்கு முன் பிரசவ வேதனையால் நான் ஆஸ்பத்திரி செல்ல நேர்ந்தது.பெரியாரைப் பார்க்க கொடுத்து வைக்காது எங்கு எனது உயிர் போய்விடுமோ! வென்றஞ்சி சஞ்சலப்பட்ட பட்டுக் கொண்டிருக்கையில், பெரியார் அவர்கள் பினாங்கில் இறங்கிய நாளன்று என்னை விசாரித்து எனது ஷேமலாபங்களைக் கேட்டு,ஈப்போவிற்கு அவசரமாகப் போக வேண்டியதிருப்பதால், திரும்புவாயில் என்னைப் பார்ப்பதாய்ச் சொல்லிவிட்டுச் சென்றார் என்றே சேதி கிடைத்தது.இதனிடையில் ஆண்குழந்தை பிறந்து நற்சுகமடைந்தேன். திரும்ப பெரியார் பினாங்கு வந்தவுடன்,பெரியார் அவர்களும் ஶ்ரீமதி மணியம்மையார் அவர்களும் என்னைச் சந்தித்து வாரியெடுத்து, மார்போடணைத்து என் ஷேமங்களைக் கேட்டார்கள். அதன்பின் சுவாமி சிதம்பரனார், திரு பொன்னம்பலனார், ஶ்ரீமான் நடராஜன் இவர்களெல்லோரும் வந்து என் நற்ஷேமங்களைக் கேட்டார்கள்.

 இவர்களெல்லாம் என்னை எதற்காக மதித்து என்ஷேமங்களைக் கேட்க வேண்டும். நான் அவ்வளவு பெரிய பணக்காரியுமல்ல. என் தாய் தகப்பனார்கள் கருணை வைத்து ஏதோ சிறிது கல்வி என்ற ஆபரணத்தை கற்க வைத்ததினால் அன்றோ இப்பெரியார்கள் என்னை மதித்தார்கள்.நானும் ஏதேனும் பித்தளைப் பாத்திரங்களைசீதனமாய்க் கொண்டு சட்டி சுரண்டவும்,அடுப்பூதும் தொழில்களில் மட்டும் இருப்பேனாகில்என்னை அடுப்பங்கரையைத் தவிர வேறு ஒருவரும் மதியார். ஆனபடியால்,பெண்கள் நன்மதிப்பு பெறவேண்டுமானால்,கல்வி என்ற கண்ணிறைந்த ஆபரணத்தை அணியவேண்டும். “

கல்வியின் தேவை பற்றிய இந்தச் சிந்தனை அவரது மனதில் எவ்வளவு ஆழமாக இருந்ததென்றால்  1929 ஆம் ஆண்டு மலேயா சுற்றுப்பயணத்தில்,  தந்தை பெரியாருக்கு எத்தனையோ பேர் பரிசுப் பொருள்களைக் கொடுத்தார்கள். ஆனால் பினாங்கு ஜானகியோ சிறிய எழுத்துக்களைப் படிக்க உதவும்  ‘ஒரு கைப்பிடி போட்ட பூதக்கண்ணாடியை’ தந்தை பெரியாருக்கு வழங்கினார். அதேபோல் நாகம்மையாருக்கு ஒரு் சிறிய  பவுண்டன் பேனா பென்சில் அடங்கிய பெட்டியும் வழங்கினார்.

இக்கட்டுரையில் நமக்கு இன்னொரு செய்தியும் கிடைக்கிறது. 1938 ,நவம்பர் 13 அன்று தந்தை பெரியாரை  ‘பெரியார்’ என்று மட்டுமே அழைக்க வேண்டும்  என்ற தீர்மானத்தை  தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு நிறைவேற்றியது என்பது வரலாறு. அதற்கு பல ஆண்டுகள் முன்பே அவர் ‘பெரியார்’ என்றும் ராமசாமிப் பெரியார் என்றும்  அழைக்கப்பட்டார் என்பதை பினாங்கு ஜானகி அவர்களின் கட்டுரை உறுதி செய்கிறது. 

1940 களில் நடந்த இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் மலேசியாவைக் கைப்பற்றியது. பின்னர் அவர்களை வெளியேற்றி மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சி வந்தபோது சீன மக்களில் ஒரு குழுவினர் அரசை எதிர்த்து கிளர்ச்சியும் கொரில்லா யுத்தமும் நடத்தினர். அதனால்1948  ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு மலேசியாவில் அவசர நிலையை அறிவித்தது. அது 1960 ஆம் ஆண்டு வரை நீடித்தது. மக்கள் கடுமையான சட்ட திட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் எதிர்கொண்டார்கள். அந்த சூழ்நிலையில் திடீரென்று அப்பாவு பண்டிதரும் ஜானகி அம்மையாரும் நேரில் விசாரணைக்கு வரவேண்டுமென்று அரசு அதிகாரிகள் அழைத்தனர். விசாரணையில் அவர்கள் எதிர்கொண்ட கேள்வி “ எதற்காக உங்கள்  மகனுக்கு சன்யாட்சென் என்று பெயர் வைத்தீர்கள் ?” என்பதுதான்.

“ நாங்கள் பகுத்தறிவாளர்கள். சமூக சீர்திருத்தவாதிகள்.அதனால் எங்கள் மூத்த மகனுக்கு சமரசம் என்றும் மகளுக்கு சம தர்மம் என்றும்   பெயரிட்டோம்.மூன்றாவது மகனுக்கு, இந்தியாவில் பெண்கள் கணவனின் சிதையிலே  உடன்கட்டை ஏற்றப்பட்ட கொடுமையை எதிர்த்துப் போராடிய  இராஜாராம் மோகன்ராய் பெயரை வைத்தோம். கடைசி மகனுக்கு சீனத்து சீர்திருத்தவாதியும் புதிய சீனத்தின் தந்தை என்று  பாராட்டப்பட்டவருமான சன்யாட்சென் பெயரை வைத்தோம். “ என்று ஜானகியும் அப்பாவு பண்டிதரும் கொடுத்த விளக்கத்தை ஏற்று அவர்களை தொல்லை செய்யாமல் விட்டது பிரிட்டிஷ் ஆட்சி. எந்த ஆதிக்கத்திற்கும் அஞ்சாத அப்பாவு ஜானகி இணையர்கள் தொடர்ந்து இயக்கப்பணியை ஆற்றினார்கள். 

1954 ஆம் ஆண்டு தந்தை பெரியார்,அன்னை மணியம்மையார் மற்றும் தோழர்களுடன் மலேசிய நாட்டில் கொள்கைப் பிரச்சாரம்  மேற்கொண்டபோது மிகச் சிறப்பாக கூட்டங்களை நடத்தி தந்தை பெரியாருக்கும் உடன் வந்த தோழர்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பை வழங்கினர் அப்பாவு பண்டிதரும்  ஜானகி அம்மையாரும் . 

சித்த வைத்தியம் செய்வதில் புகழ்பெற்றவராக விளங்கிய அப்பாவு பண்டிதர் தமிழகத்தில் சிலகாலம் தங்கி இருந்தார். அப்போது அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவர்களின் முயற்சிகளைத் தாண்டி உடல் நலிவுற்று  26.1.59 அன்று  இறந்துவிட்டார். சென்னையில் நடைபெற்ற அவரது இறுதி நிகழ்வில  தந்தை பெரியார் அவர்கள் பங்கேற்று ஜானகி அம்மையாருக்கு  ஆறுதல் கூறினார்.

அப்பாவு பண்டிதரின் மறைவு ஜானகி அம்மையாருக்கு மிகப்பெரும் இழப்பு., ஒத்த கொள்கையால் இணைந்த முப்பதாண்டுகால சுயமரியாதை மணவாழ்வு முடிவுற்ற பின்னும் ஜானகி அம்மையார் திராவிட இயக்க வீராங்கனையாகவே வாழ்ந்தார். தன்  பிள்ளைகள்  பகுத்தறிவு நெறியுடன் வாழவேண்டும் என்று வலியுறுத்தினார். தாயும் தந்தையுமாய் தானே பிள்ளைகளுக்கு வழிகாட்டினார்.அனைவருக்கும்  சுயமரியாதைத் திருமணமே நடத்தினார். முதுமையிலும் இயன்றவரை கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

அவரது தொண்டினை மறவாது, 2004 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் திராவிடர் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்க மலேசியா சென்றிருந்தபோது ஜானகி அம்மையாரை நேரில் சந்தித்து அவரை நலம் விசாரித்தார்.. முதுமையினால் சோர்வுற்ற போதும் தளராத கொள்கை உறுதியுடன் அவருடன் உரையாடினார் ஜானகி அம்மையார்.  கல்வியே பெண்ணுக்கு கம்பீரம் என்று இளம்வயதிலேயே எடுத்துரைத்த ஜானகி அம்மையாரின் வாழ்வு 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிவுற்றது. அந்த வாழ்க்கை தரும் படிப்பினைகளுக்கு முடிவேது .?

Sunday, November 12, 2023

சிலம்பு பற்றி பெரியார்

 சிலம்பு பற்றிய பெரியாரின் பார்வை

“இந்த அம்மாளின் ( கண்ணகி ) கற்பைப் பற்றிச் சொல்வதாயி ருந்தால், தேவடியாள் வீட்டுக்குக் கணவன் போனதை அறிந்த போது, அந்தத் தேவடியாளை ஏதாவது செய்திருக்க வேண்டும். தாசி மாதவி, கோவலன் கண்ணகியின் கணவன் என்று தெரிந்து அவனை அனுபவிக்கிறாள். தேவடியாளுக்கு இதுவா தர்மம்? அப்படிப் பட்டவளுக்குக் கண்ணகி பொருள் கொடுக்க வசதி செய்யலாமா? கோவலன் ஒழுக்கமற்றவன். தாசி ஒழுக்கமற்றவள். கண்ணகி மடப்பெண்” என்று கடிந்து கொள்கிறார். சிலப்பதிகாரத்தின் சிறப்புகளைப் புகழ்ந்திட முனைவோரைப் பார்த்து “இந்தப் பிரச்சார பிரம் மாக்களின் மாப்பிள்ளைமார்கள் தேவடியாள் வீட்டில் போய் இருந்தால் இவர்கள் பெண்கள் தாசி வீட்டிற்குப் பணம் நகை எல்லாம் அனுப்பச் சம்மதிப்பார்களா?” 

கண்ணகி மதுரையை எரித்ததைப் பற்றிச் சொல்லும் போது, “இந்த அம்மாளுக்குக் கோபம் வந்ததும் தன் மார்பைத் திருகி எறிகிறாள். இது என்ன புத்தி! மார்பைக் கையால் திருகினால் அது வந்துவிடுமா? இந்தப்படி நடந்த சங்கதியும் அனுபவமும் சிலப்பதிகாரம் தவிர வேறு எதிலும் எங்கும் காணக் கிடைக்கவில்லை. அந்தப்படி திருகிப் பிடுங்கின மார்பு (முலை) வீசி எறிந்தால் அது நெருப்புப் பற்றிக் கொள்ளுமா? அதில் பாஸ்பரஸ் இருக்குமா? இந்த மூடநம்பிக்கைக் கற்ப னையானது என்ன பயனைக் கொடுக்கிறது? இதனால் கண்ணகிக்கு வீரம் இருந்ததாகக் கூறமுடியுமா?”

“இராமன் பார்ப்பான் - ஆகவே சூத்திரனைக் கொன்றான் என்பது இராமாயணம். பார்ப்பானை மட்டும் காப்பாற்ற வேண்டும் என்பது சிலப்பதிகாரம். எவ்வளவு முட்டாள் தனமான கொடுமை செய்தாலும் பார்ப்பனர்களைக் காப்பாற்றினால் அவள் பதிவிரதை ஆகிவிடுவான் என்பது சிலப்பதிகாரம். பாண்டியன் விசாரணை செய்து அவனுக்குக் கிடைத்த உண்மையின் மீது கோவலனுக்குத் தண்டனை விதித்தான். ஆனால் கண்ணகி ஒரு விசாரணையும் செய்யாமல் ஒரு குற்றமும் காணாமல் நிரபராதிகளான மக்களை, பெண்களைச் சுட்டு எரித்துக் கொன்றாள். அவள் வணங்கத்தக்கவள், கற்புக்கரசி தெய்வமானவள். பாண்டியன் குற்றவாளி. இதுதானே சிலப்பதிகாரக் கதை. இதுதான் தமிழர் பண்பாம்! எவ்வளவு முட்டாள்தனம் ?

Saturday, November 11, 2023

சமரச சன்மார்க்கம் - பெரியார்

 சமரச சன்மார்கம்.

                           புரட்சியாளர் பெரியார்.

அக்கிராசனர் அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே!

சமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக்கூடியதே தவிர காரியத்தில் நடக்க முடியாததாகும். ஏனெனில், எது எது சமரச சன்மார்க்கம் என்கிறோமோ அவற்றிற்கு நேர் விரோதமாகவே மனித வாழ்க்கை அமைக்கப்பட்டிருக்கின்றது. இது நம் நாட்டில் மட்டுமல்ல; உலகம் முழுவதிலும் இவ்வாறே அமைக்கப் பட்டிருக்கின்றது.

முதலாவது கடவுள், மதம், விதி, சாதி, பணம், தொழில் முதலியவைகள் இயற்கைக்கு மாத்திரமான சமரச சன்மார்க்கமல்லாமல் - நியாய பூர்வமான சமரச சன்மார்க்கத்திற்கும் விரோதமாய் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் ஒருவன் சமரச சன்மார்க்கத்தைப் பற்றிப் பேசவேண்டுமானால் மேற்கண்ட கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு சமரச சன்மார்க்கம் ஏற்படவேண்டும் என்கின்ற முறையில் யோக்கியர்களாலோ, அறிவாளிகளாலோ பேசமுடியாது. ஏனெனில், அவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட தத்துவத்தில் அமைக்கப்பட்டிருப் பவைகளாகும்; அதோடு மாத்திரமல்லாமல், சமரசமும் சன்மார்க்கமும் கூடாது என்னும் தத்துவத்தின்மீதே அமைக்கப் பட்டுள்ளவைகளாகும்.

மேற்கண்டவை சம்பந்தமான கட்டுப்பாடுகளையெல்லாம் அடியோடு அழிப்பதுதான் சமரச சன்மார்க்கம் என்று சொல்வேன். இது உங்களில் பலருக்கும் உங்கள் பாதிரிமார்கள், எஜமானர்கள், அக்கம் பக்கச் சாதியார்கள், சாமிகள், மதக்காரர்கள் ஆகியவர்களுக்கு வருத்தமாயும் விரோதமானவைகளா யும் இருக்கும். நான் உண்மையான சமரச சன்மார்க்கம் அடைந்த தேசத்தார் - அடைந்த சமூகத்தார் அடைந்த தனிமனிதர்கள் யார்யாரைக் கருதுகின்றேனோ அவர்கள் எல்லாம் மேற்கண்ட இடையூறானவைகளைத் தகர்த்தெறிந்துதான் சமரச சன்மார்க்கம் அடைந்தார்கள்; இவைகளில் சிறிது தாட்சண்யப்பட்டவர்கள் கூட தோல்வியடைந்து விட்டார்கள்.

கடவுளையும், மதத்தையும், பணக்காரனையும் வைத்து சமரச சன்மார்க்கம் செய்ய முடியாதென்று கருதித்தான் இரஷியர்கள் பாதிரிமார்கள் தொல்லைகளை யும், சர்ச்சுகளையும் பணக்காரத் தன்மைகளையும் அழித்துத்தான் சமரசம் பெற்றார்கள்.

தற்போதைய இரஷியச் சரித்திரத்தில் சமரசத்திற்குப் பாதிரிமார்கள் எதிரி களென்றே தீர்மானிக்கப்பட்டு, அவர்களை அழித்துவிட்டார்கள். அழித்து விட்டார்கள் என்றால் கொன்றுவிட்டார்கள் என்பது கருத்தல்ல. ஏதோ சிலரை, அதாவது சமரசத்திற்கு எதிர்ப்பிரச்சாரம் செய்தவர்களில் சிலரைத்தவிர மற்றவர்களைப் பட்டாளத்தில் சேரச் செய்தார்கள்; சிலரை விவசாயத்தில் போட்டார்கள்; சிலரை வைத்தியத்தில் போட்டார்கள்; வேறு காரியங்களுக்கு உதவாதவர்களைக் காவல் காக்கப் போட்டார்கள். அது போலவே, சர்ச்சுகளைத் தொழிற்சாலை, பள்ளிக் கூடம் முதலியவைகளாக மாற்றினார்கள். இவைகளுக்கு உதவாத போக்குவரத்துக்கு இடையூறான வைகளை இடித்தார்கள். பணக்காரர்களின் சொத்தைப் பிடுங்கிப் பொதுஜன சொத்தாக்கி, பூமி இல்லாதவர் களுக்குப் பூமி, தொழிலில்லாதவர்களுக்குத் தொழில்; படிப்பில்லாதவர் களுக்குப் படிப்பு முதலாகியவைகள் கொடுப்பதற்கு உபயோகப்படுத் தினார்கள். கலியாண முறையை ஒழித்துப் பெண் அடிமையை நீக்கினார்கள். கண்டபடிப் பன்றிகளைப் போல் பிள்ளை பெறும் முறையை நிறுத்தச்செய்து, அளவுபடுத்தி ஆண் பெண் இன்ப வாழ்க்கைக்கு வழி செய்தார்கள். இன்னும் பல காரியங்கள் செய்தார்கள்.

 ஆனால், நமக்கு இவை பொருந்துமா என்று சிலர் கேட்பார்கள். யார் கேட்பார்களென்றால், பணக்காரன், பாதிரி, உயர்ந்த சாதிக்காரன், அரசன் ஆகியவர்கள்தான் கேட்பார்கள். இவர்கள் நமது நாட்டு ஜனத் தொகையில் 100க்கு 5 அல்லது 6 பேர்களே இருப்பார்கள். ஆதலால் குறைந்த எண்ணிக்கை யுடையவர்கள் - அதிலும் தங்கள் சுயநலத்திற்கு என்று சில கட்டுப்பாடுகள் இருக்கவேண்டுமென்றால் யார் சம்மதிப்பார்கள்? முதலாவது, இவர்கள் ஆதிக்கத்தை ஒப்புக்கொள்ளுகிறீர்களா? இருக்கவேண்டும் என்று சொல்லு கின்றீர்களா? என்ன சொல்லுகின்றீர்கள்?

 ஆகவே, கடவுள், மதம், பணக்காரன் இம்மூன்றும் இன்றே ஒழிய வேண்டும் என்கின்ற ஆத்திரமுமில்லை. ஏனெனில், இன்னும் அனேக நாடுகள் இருக்கின்றன அவை இப்போதுதான் முயற்சிக்கின்றன. ஆகையால், வரிசைக் கிரமத்தில் அந்த முறை நமக்கு வரும் என்கின்ற தைரியம் உண்டு. ஆனால், இங்கு மற்ற நாட்டில் இல்லாத சாதி முறை என்பது இச் சன்மார்க்கத்திற்கு விரோதமாய் இருக்கின்றது. அதை அழித்தே ஆகவேண்டும். நீங்கள் இவற்றிற்கெல்லாம் எத்தனைக் காலமாய் அடங்கி வந்திருக் கிறீர்கள்? என்ன பலன் அடைந்துள்ளீர்கள்? இன்றைய நிலையேதான் உங்கள் வாழ்க்கையின் பலன் என்று நினைத்தால், எதற்காக நாளைய தினம் வரை உயிருடன் இருக்கின்றீர்கள்?

மனிதன் வாழ ஏதாவது இலட்சியம் இருக்கவேண்டும். சும்மா அரைத்த மாவை அரைத்துக் கொண்டிருப்பதுபோல், வெறும் ஆகாரம் உட்கொள்ளவும் உண்டதை மலமாக்கவும் என்பதற்காகவும் அறிவற்ற உயிர்கள் இருக்கின்றனவே! இவை போதாவா? இனி, மனிதன் பகுத்தறிவுள்ளவன் என்றும் பண்டிதன் என்றும், பணக்காரன் என்றும் சொல்லிக்கொண்டு கடவுளை அடையும் மார்க்கங்களையும் பின்பற்றி, கடவுளென்று பணத்தையும் நேரத்தையும் ஊக்கத்தையும் செலவு செய்கின்ற மனிதனும் - நல்ல ஆகார வஸ்துக்களை மலமாக்குவதற்காக வாழவேண்டுமா? இவ்வித மனித சமூகம் அழிந்து போவது ஜீவகாருண்யத்தை உத்தேசித்தாவது மிகவும் அவசியம்.

உங்கள் இலட்சியங்களை அடைய முயலுங்கள்; மற்றொரு பிறவிக்கு என்று அயோக்கியர்களின் வார்த்தைகளை நம்பி எதிர்பார்த்துக்கொண்டு வீணாய் ஏமாந்து போகாதீர்கள். முன்பிறவி சங்கதி ஏதாவது ஒன்று, உங்கள் சரீரத்திலிருந்து உதிர்ந்த ஒரு மயிர்த்துண்டாவது உங்களுக்கு இந்தப் பிறப்பில் ஞாபகமிருந்தால் அல்லவா இந்தப் பிறவியின் காரியங்களை அடுத்த பிறவியில் அனுபவிக்க முடியப் போகின்றது? அன்றியும், கடவுள் உங்களை இப்படிச் செய்துவிட்டார் என்று முட்டாள்தனமாய்க் கருதி உங்கள் துன்பத்தை நிலை நிறுத்தாதீர்கள்! உணர்ச்சியும் அறிவும் அற்ற சோம்பேறிகளுக்குத்தான் கடவுள்செயல் பொருத்தமாக இருக்கும். நீங்கள் ஏன் சோம்பேறியாய் இருக்கின்றீர்கள்!

 கடவுளுக்குக் கோயில்கட்டி, உருப்படிகளை அதிகமாக்கி நமது குறைகளையும் கஷ்டங்களையும் முறையிட்டு, முறையிட்டு அழுதுவந்ததுபோதும். இனி அந்தப்பக்கம் திரும்பிப் பாராதீர்கள். உங்கள் அறிவையும் மனிதத் தன்மையையும் திரும்பிப் பாருங்கள்; அது சொல்கின்றபடி நடவுங்கள்; அதனிடம் நம்பிக்கை வையுங்கள். ஆகையால், மற்றநாட்டு வர்த்தமானங்களை உணர்ந்து நீங்கள் நடுநிலைமையில் இருந்து உங்கள் அறிவுக்கே பூசை போட்டீர்களானால், வந்துவிட்டது அன்றே சமரசம்! சன்மார்க்கம்! விடுதலை! இதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை.

(பெருந்துறை சமீபம் கிரேநகரில், 26.1.1931இல் சொற்பொழிவு. குடிஅரசு, 19.2.1931)

Friday, November 10, 2023

'நிர்வாணம்' குறித்து பெரியார்

 நிர்வாணம் என்பது என்ன? பெரியாரின் விளக்கம் ஆக முக்கியமான ஒன்று

- பேரா. அ. மார்க்ஸ்

(தந்தை பெரியார் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது நிர்வாண சங்கம் ஒன்றில் பங்கேற்ற  முழு நிர்வாணப் புகைப்படம் ஒன்று உண்டு. அது குறித்து அல்ல இந்தப் பதிவு.  இது ”நிர்வாணம்” என்கிற தத்துவார்த்தக் கோட்பாடு குறித்த பெரியாரிய விளக்கம்.)

பெரியார் ஈ.வெ.ரா அவர்களை எல்லோரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கடவுள் மறுப்பாளர் (Atheist) என்று மட்டுமே நினைத்துக் கொண்டுள்ளனர். அது மிகவும் தவறு. அது அவரைச் சுருக்கிப் பார்ப்பது.          அவர் கடவுள் மறுப்பாளரும்தான். ஆனால் அவரின் பரிமாணங்கள் இன்னும் பல. கற்பு, தேசியம், ஒழுக்கம், சாதி, மதம், கடவுள் எனப் புனிதமாகக் கட்டமைக்கபட்ட அனைத்தையும் எதிர்த்தவர். பல்லாயிரக் கணக்கான மக்கள் என்ன நினைப்பார்களோ என எண்ணாமல் அவற்றை விமர்சித்தவர். 

தன்னை அவர் ஒரு “நிர்வாணமான” சிந்தனையாளன் என்றார். இந்திய அவைதிக மதங்களான பௌத்தம், சமணம் முதலானவை முன்வைத்த “நிர்வாணம்” எனும் கருத்தை அவர் , 

"ஏற்கனவே சமூகம் நம் சிந்தனையிலும், நம்பிக்கைகளிலும் திணித்துள்ள அபத்தங்களை நீக்கி நிர்வாணம் ஆக்கிக் கொள்வது” 

எனும் கருத்தில் மொழிந்தார். அதாவது “நிர்வாணமான சிந்தனை” உடன் ஒவ்வொன்றையும் அணுக வேண்டும் என்றார். அதாவது சமூகம் நம் மீது திணித்துள்ள (மூட) நம்பிக்கைகளை ஒதுக்கிவிட்டு ஒவ்வொன்றையும் (எடுத்துக்காட்டாகக் ‘கற்பு’) உன் சுய சிந்தனையுடன் அணுக வேண்டும் என்றார்.

”பற்றறுத்தல்” – என்பதற்கும் அவர் புதிய பொருளை முன்மொழிந்தார்: மூன்று பற்றுக்களை நாம் விட்டொழிக்க வேண்டும் என்றார். அவை : 

”தேசாபிமானம், பாஷாபிமானம், மதாபிமானம்” – 

அதாவது தேசப்பற்று, மொழிப்பற்று, மதப் பற்று – இவற்றை விட்டொழிக்க வேண்டும் என்றார். மொத்தத்தில் அவர் எந்தப் பற்றையுமே ஏற்கவில்லை.

தேசம் என்பதை அவர் ஒரு “கற்பிதம்” என்றார். Nation என்பதை ஆண்டர்சன் போன்ற நவீன சிந்தனையாளர்கள் சில ஆண்டுகளுக்கு முன் “Imagined Community” எனச் சொன்னதை அறிவோம். ஒரு முக்கியமான கருத்தாக்கமாக இன்றளவும் உலகெங்கும் கருதப்படுகிறது. ”தேசம் ஒரு கற்பிதம்” என்பதன் ஊடாகப் பெரியார் அதை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே சொன்னார். “நான் ஒரு தேசத் துரோகி” என்றும் சொல்லிக் கொண்டார். 

இந்த நாட்டுக்கு “காந்தி தேசம்” என்று பெயர் வைக்க வேண்டும் எனச் சொன்னர். ஆம். காந்தியை மிகச் சரியாக மதிப்பிட்டார்.

காலமெல்லாம் ”பகுத்தறிவு” பற்றிப் பேசி வந்த அவர் 

அதையும் de-construct பண்ணத் தயங்கவில்லை. 

‘'பகுத்தறிவு, ஒழுக்கம், தியாகம், பொது நன்மை, பொது நோக்கு… எல்லாமே வெங்காயங்கள்தான்” - -என்றும் அவர் கூறியது உண்டு. 

தமிழை அவர் ”காட்டுமிராண்டி மொழி” என்றதை நீங்கள் அறிவீர்கள். 

காலமெல்லாம் பகுத்தறிவு குறித்துப் பேசிய அவர்தான்: “ இந்தப் பகுத்தறிவை வைத்துக் கொண்டு மனிதன் என்ன பண்ணினான்?” – என்றும் கேட்டார்.

“தன் பிள்ளை குட்டி, பேத்தி, பிதுர் ஆகிய பிந்திய சந்ததிகளைப் பற்றிய முட்டாள்தனமான கவலை பகுத்தறிவுள்ள மனிதனுக்குத்தான் இருக்கிறதே ஒழிய பகுத்தறிவு இல்லாதவைகளுக்கு இல்லை…. பகுத்தறிவில்லாத எந்த ஜீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தின் உழைப்பில் வாழ்வதில்லை (அதாவது சுரண்டுவது இல்லை), தன் இனத்தின் மீது சவாரி செய்வது இல்லை.”

--- தோழர்களே! பெரியார் நாம் நினைப்பதுபோல அத்தனை எளிதானவர் இல்லை. அவர் ஒரு Philosopher, அதே நேரத்தில் களத்தில் இருந்தவர்.

Wednesday, November 8, 2023

“நாஸ்திகத்”திற்கு முதல் வெற்றி தந்தை பெரியார் நமது மாகாணச் சுயமரியாதை மகாநாடு செங்கற்பட்டில் நடந்த பிறகு நமது பார்ப்பனர்கள் அம்மகாநாட்டுத் தீர்மானங்களைத் திரித்துக் கூறியும், பல கூலிகளை விட்டு விஷமப் பிரசாரம் செய்யச் செய்தும் வருவதோடு அதையே இவ்வருஷத்திய தேர்தல் பிரசாரமாக வைத்துக் கொள்ளலாம் எனவும் கருதி சில காலிகளுக்குப் பணஉதவி செய்து உசுப்படுத்திவிட்டு வேடிக்கை பார்ப்பது யாவரும் அறிந்ததாகும். இந்தப்படி காலிகள் மூலம் செய்யப்படும் விஷமப் பிரசாரம் இப்பார்ப்பனர்களுக்கு எவ்வளவு தூரம் பயன்பெறும் என்பதற்குச் சமீபத்தில் ஒரு சரியான பரீiக்ஷ நடத்திப் பார்த்தாகிவிட்டது. அதாவது, சென்னைப் பச்சையப்பன் தர்ம ட்ரஸ்டிகளில் ஒரு பார்ப்பன ட்ரஸ்டியின் ஸ்தானம், அதாவது ‘சுதேசமித்திரன்’ ‘இந்து’ ஆகிய பத்திரிகைகளில் பத்திராதிபரான திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் என்கின்ற ஒரு பார்ப்பனரின் ஸ்தானம் காலாவதி ஆனதும் அந்த ஸ்தானத்திற்கு மறுபடியும் திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் போட்டி போட தைரியமில்லாமல் விட்டுவிட்டதால் மற்றொரு பார்ப்பனராகிய அதாவது காலித்தனத்திலும், திரு.ரங்கசாமி அய்யங்காரை விட பார்ப்பனத்திமிரிலும், சூழ்ச்சியிலும் தலைசிறந்து விளங்கும் திரு.புர்ரா சத்தியநாராயணா அய்யர் என்ற பார்ப்பனரை நிறுத்தி வேலை செய்தார்கள். ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக திரு.ஏ. இராமசாமி முதலியார் நின்றார். இந்தத் தேர்தலில் முக்கியமாகப் பார்ப்பனர்களே பெரும் பான்மையான ஓட்டர்களாயிருந்தும், ஒருபக்கம் பார்ப்பனரல்லாத பிரமுகர்களில் ஒருவரான திரு.சி. டாக்டர். நடேச முதலியாரும் அவரது சகபாடிகளும் திரு.புர்ரா அய்யருக்கே தங்கள் ஓட்டுச்செய்தும் மற்றவர்களின் ஓட்டுகளைச் சேகரித்துக் கொடுத்தும், மற்றொரு பக்கம் சில பார்ப்பனர்கள் செங்கற்பட்டு மகாநாட்டுத் தீர்மானங்களைப் பற்றிக் காலித் தனமாய்க் கூலிகளை விட்டு, திரு. ராமசாமி முதலியாருக்கு எதிரியாய் இழிபிரசாரம் செய்தும் கடைசியாக திரு.ராமசாமி முதலியாரே வெற்றி பெற்றார். ஏனென்றால் இந்தக் காலிப் பிரசாரத்தையும் சூழ்ச்சியையும் சென்னைக் கார்ப்பரேஷன் மீட்டிங்கில் திரு.புர்ரா நடந்து கொண்ட மாதிரியையும் பார்த்த பிறகே சில பார்ப்பனர்கள் தைரியமாக வெளிவந்து வெளிப்படையாகவே திரு.ராமசாமி முதலியாருக்குத் தங்கள் ஓட்டுகளைக் கொடுத்தார்கள். இதிலிருந்து சுயமரியாதைப் பிரசாரமும் அதன் எதிர் பிரசாரமும் அநேக பார்ப்பனர்களை யோக்கியர்களாகும்படி செய்து கொண்டும் வருகின்றது என்பதும் வெளிப்படை. எனவே சுயமரியாதை இயக்கத்தாலும் செங்கற்பட்டு மகாநாட்டுத் தீர்மானங்களாலும் “நாஸ்திகம் ஏற்பட்டுவிட்டது,” “கடவுள்கள் ஒழிந்து போய்விட்டன” என்று சொல்லிக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்கக் கூலி வாங்கிக் கொண்டு புறப்பட்ட வீரர்களும், அவர்களுக்குக் கூலி கொடுத்த தலைவர்களும், இதிலிருந்தே பாடம் கற்றுக் கொண்டிருக்கவும், அதாவது ஜஸ்டிஸ் கட்சியின் “ஜீவநாடி” என்பவராகிய திரு.ராமசாமி முதலியார் அவர்கள் பார்ப்பனத் தொகுதி என்று சொல்லப்பட்ட, “செனட்” தொகுதியில் ஒரு சரியான பார்ப்பனரோடு நின்று பல பார்ப்பனரல்லாதார் விரோதமாய் நடந்தும், வெற்றி பெற்றார் என்றால் “நாஸ்திக”த்திற்கு, அதாவது செங்கற்பட்டுத் தீர்மானத்திற்கு முதல் வெற்றி அதுவும் சென்னையிலேயே ஏற்பட்டுவிட்டது என்பதிலிருந்து ஆஸ்திகப் பூச்சாண்டியின் மிரட்டல் இனிப் பலிக்காது என்பதை உணர்ந்து கொள்ளலாம். குடி அரசு - கட்டுரை - 07.04.1929 #நாஸ்திகத்திற்குமுதல்வெற்றி.

“நாஸ்திகத்”திற்கு முதல் வெற்றி

-தந்தை பெரியார்

நமது மாகாணச் சுயமரியாதை மகாநாடு செங்கற்பட்டில் நடந்த பிறகு நமது பார்ப்பனர்கள் அம்மகாநாட்டுத் தீர்மானங்களைத் திரித்துக் கூறியும், பல கூலிகளை விட்டு விஷமப் பிரசாரம் செய்யச் செய்தும் வருவதோடு அதையே இவ்வருஷத்திய தேர்தல் பிரசாரமாக வைத்துக் கொள்ளலாம் எனவும் கருதி சில காலிகளுக்குப் பணஉதவி செய்து உசுப்படுத்திவிட்டு வேடிக்கை பார்ப்பது யாவரும் அறிந்ததாகும். இந்தப்படி காலிகள் மூலம் செய்யப்படும் விஷமப் பிரசாரம் இப்பார்ப்பனர்களுக்கு எவ்வளவு தூரம் பயன்பெறும் என்பதற்குச் சமீபத்தில் ஒரு சரியான பரீiக்ஷ நடத்திப் பார்த்தாகிவிட்டது.

அதாவது, சென்னைப் பச்சையப்பன் தர்ம ட்ரஸ்டிகளில் ஒரு பார்ப்பன ட்ரஸ்டியின் ஸ்தானம், அதாவது ‘சுதேசமித்திரன்’ ‘இந்து’ ஆகிய பத்திரிகைகளில் பத்திராதிபரான திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் என்கின்ற ஒரு பார்ப்பனரின் ஸ்தானம் காலாவதி ஆனதும் அந்த ஸ்தானத்திற்கு மறுபடியும் திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் போட்டி போட தைரியமில்லாமல் விட்டுவிட்டதால் மற்றொரு பார்ப்பனராகிய அதாவது காலித்தனத்திலும், திரு.ரங்கசாமி அய்யங்காரை விட பார்ப்பனத்திமிரிலும், சூழ்ச்சியிலும் தலைசிறந்து விளங்கும் திரு.புர்ரா சத்தியநாராயணா அய்யர் என்ற பார்ப்பனரை நிறுத்தி வேலை செய்தார்கள். ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக திரு.ஏ. இராமசாமி முதலியார் நின்றார். 

இந்தத் தேர்தலில் முக்கியமாகப் பார்ப்பனர்களே பெரும் பான்மையான ஓட்டர்களாயிருந்தும், ஒருபக்கம் பார்ப்பனரல்லாத பிரமுகர்களில் ஒருவரான திரு.சி. டாக்டர். நடேச முதலியாரும் அவரது சகபாடிகளும் திரு.புர்ரா அய்யருக்கே தங்கள் ஓட்டுச்செய்தும் மற்றவர்களின் ஓட்டுகளைச் சேகரித்துக் கொடுத்தும், மற்றொரு பக்கம் சில பார்ப்பனர்கள் செங்கற்பட்டு மகாநாட்டுத் தீர்மானங்களைப் பற்றிக் காலித் தனமாய்க் கூலிகளை விட்டு, திரு. ராமசாமி முதலியாருக்கு எதிரியாய் இழிபிரசாரம் செய்தும் கடைசியாக திரு.ராமசாமி முதலியாரே வெற்றி பெற்றார். 

ஏனென்றால் இந்தக் காலிப் பிரசாரத்தையும் சூழ்ச்சியையும் சென்னைக் கார்ப்பரேஷன் மீட்டிங்கில் திரு.புர்ரா நடந்து கொண்ட மாதிரியையும் பார்த்த பிறகே சில பார்ப்பனர்கள் தைரியமாக வெளிவந்து வெளிப்படையாகவே திரு.ராமசாமி முதலியாருக்குத் தங்கள் ஓட்டுகளைக் கொடுத்தார்கள். இதிலிருந்து சுயமரியாதைப் பிரசாரமும் அதன் எதிர் பிரசாரமும் அநேக பார்ப்பனர்களை யோக்கியர்களாகும்படி செய்து கொண்டும் வருகின்றது என்பதும் வெளிப்படை.

எனவே சுயமரியாதை இயக்கத்தாலும் செங்கற்பட்டு மகாநாட்டுத் தீர்மானங்களாலும் “நாஸ்திகம் ஏற்பட்டுவிட்டது,” “கடவுள்கள் ஒழிந்து போய்விட்டன” என்று சொல்லிக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்கக் கூலி வாங்கிக் கொண்டு புறப்பட்ட வீரர்களும், அவர்களுக்குக் கூலி கொடுத்த தலைவர்களும், இதிலிருந்தே பாடம் கற்றுக் கொண்டிருக்கவும், அதாவது ஜஸ்டிஸ் கட்சியின் “ஜீவநாடி” என்பவராகிய திரு.ராமசாமி முதலியார் அவர்கள் பார்ப்பனத் தொகுதி என்று சொல்லப்பட்ட, “செனட்” தொகுதியில் ஒரு சரியான பார்ப்பனரோடு நின்று பல பார்ப்பனரல்லாதார் விரோதமாய் நடந்தும், வெற்றி பெற்றார் என்றால் “நாஸ்திக”த்திற்கு, அதாவது செங்கற்பட்டுத் தீர்மானத்திற்கு முதல் வெற்றி அதுவும் சென்னையிலேயே ஏற்பட்டுவிட்டது என்பதிலிருந்து ஆஸ்திகப் பூச்சாண்டியின் மிரட்டல் இனிப் பலிக்காது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

குடி அரசு - கட்டுரை - 07.04.1929