Tuesday, August 31, 2021

கான்பூர் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட (பார்ப்பனரல்லாதார்) மாநாடு பெரியார் தலைமைப் பேச்சு

கான்பூர் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட (பார்ப்பனரல்லாதார்) மாநாடு பெரியார் தலைமைப் பேச்சு

கான்பூரில் கடந்த டிசம்பர் 29,30,31 ஆகிய தேதிகளில் நடைபெற்ற அகில இந்திய பிற்படுத்தப்பட்ட (பார்ப்பனரல்லாதார்)  இந்து வகுப்பார்  சங்க மாநாட்டிற்குத் தலைமை வகித்த பெரியார். ஈ.வே.ரா. அவர்களின் முன்னுரை  வருமாறு:

அன்புள்ள தோழர்களே!

 உங்களை பெருங்கூட்டமாக இங்கு காணவும், உங்கள் எல்லோரையும் கண்டு பேசவும், அறிமுகப்படுத்திக் கொள்ளவும், சந்தர்ப்பம் ஏற்பட்டதை கொண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.  உங்களுடைய உணர்ச்சியையும், உற்சாகத்தையும், என்னைக் கண்டதும் நீங்கள் செய்த ஆரவாரத்தையும் பார்த்து நான் மிகப் பெருமையடைவதோடு  எனது ஆசையைப் பற்றி மிகவும்  நம்பிக்கை அடைகிறேன். 

மொழி பேதத்தாலும், நம் பழக்க வழக்கங்களாலும், நம் இருவர் நாட்டிற்கும் ஏற்பட்டிருக்கிற அதிக தூரத்தாலும், நாம் ஒருவருக்கொருவர் நெருங்கிப் பழகுவதற்கு இல்லாமலும்  நம் இரு நாட்டார் நலத்திற்காகவும் ஒன்றுபட்டு வேலைசெய்து  போராட்டம் துவக்க முடியாமலும் இருந்து வருகிறோம்.

இவை ஒருபுறம் இருக்க நம் எதிரிகளின் கையாயுதங்களாகிய போலி தேசீயமென்பதும், தேசீய பத்திரிகைகள்  என்பவையும் நம்மை ஒருவருடன் ஒருவர் சேரஒட்டாமல்  செய்வதோடு  நமக்கு எவ்வளவு  கேடு செய்யவேண்டுமோ அவ்வளவையும்  செய்து வருவதல்லாமல் நமது முயற்சிகளையெல்லாம் திரித்துக்கூறி நம்மைப் பிரித்துவைத்து அடக்கி ஆதரவற்றவர்களாக ஆக்கி வருகின்றன. என்றாலும் இன்று ஒரு கூட்டம் வாலிபர்களும் சட்டம் பெற்ற வக்கீல்களும், காவி உடைதரித்த சில சாமியார்களும் எனது கொள்கைகள், ஆசைகள்  சம்பந்தமான பெரும்பாலான பிரச்சினைகளை ஆதரிக்கும் அறிகுறியோடு கிளத்தும் ஒலிகளும் , காட்டும் அன்பும் ஆரவாரமும்  நம் இருவருடைய நிலையும் ஒன்று என்பதையும் , ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்  என்ற முயற்சிகளையும் காண நேர்ந்ததை உண்மையிலேயே  ஒருபெரும்  பேறாகவே  கருதி அளவிலா ஆனந்தம் கொள்ளுகிறேன்.

எப்படி ஒரு அன்னிய அரசாங்கமானது, ஒரு நாட்டு மக்களை தங்கள் நலனுக்கு ஏற்ற வண்ணம் அடக்கி ஆளவேண்டுமானால் பிரிவினை செய்து ஆள வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்டு இருக்கிறதோ,  அதுபோல் இந்த நாட்டிலுள்ள பழங்குடி மக்களாகிய நம்மை ஒரு அன்னியநாட்டு ஆரிய இனமானது நம்நாட்டில் பிரவேசித்து நம்மையே அடக்கி நம்மீது நிரந்தரமாய் ஆதிக்கம் செலுத்துவதற்காகவே  கடவுள் மதம், வேத, சாஸ்திரங்கள் என்பவற்றின்  பேரால் நம்மை பல வகுப்புகளாக பிரித்து வைத்துவிட்டார்கள். இதனால்தான் இந்த நாட்டு பழங்குடி மக்களும் சகல விதத்திலும் செல்வமும் வீரமும் உள்ள சக்தி பொருந்திய பெரும்பான்மையுள்ள  மக்களுமாகிய  நாம், பிற்பட்ட மக்களாகவும், தாழ்த்தப்பட்ட மக்களாகவும், தொடக்கூடாத மக்களாகவும், மனித பிறவி உரிமைக்கு உரியமையாகாத மக்களாகவும்,  நம்முடைய நாட்டிலேயே  நாம் அடிமைகளாய் இருக்கிறோம். இதை நம்மில் இதுவரை ஒரு சிலராவது அறிந்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

கடந்த பல நாட்களாக நம்முடைய ஈன நிலையைக் குறி வைத்து விளக்கிச் சொல்லிக்கொண்டு, சமுதாய சீர்திருத்தம் என்கின்ற பெயரை வைத்து  எத்தனையோ பேர் எவ்வளவோ வேலை செய்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். என்றாலும் அவர்களில் எவரும் வெற்றி பெறாமலே  போய் இருக்கிறார்கள். 

ஏன்னென்றால் அவர்கள் அத்தனை பேரும் இருக்கிற குறைபாடுகளை நீக்க வேண்டும் என்று கருதுகிறார்களே ஒழிய, அவை ஏற்படுவதற்கு அடிப்படையான மூலகாரணம் என்ன என்பதைப்பற்றி சிந்தித்து அதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவேயில்லை. ஆகையால் இன்று நான் சொல்லுவது என்னவென்றால், நமது சமுதாயத்திலுள்ள இழிவுகளையும் குறைபாடுகளையும் ஒழித்து நம்மை  மனிதத் தன்மைக்கு அருகதை உடையவர்களாக  ஆக்கவேண்டும் என்று கருதுகிறவர்கள்  இந்நிலைக்குக் காரணம் என்ன?  எதனால் நாம் இக்கேவலமான நிலையை இந்தப் பகுத்தறிவு சமதர்ம காலத்திலும் சுமந்துகொண்டு இருக்கிறோம்? என்பதைக் கண்டுபிடிக்க முயல வேண்டும் என்பதேயாகும். 

எனக்கு வயது இன்று  67. நான் சென்ற 40 வருஷ காலமாக நமக்குள்ள சமுதாயக் குறைகளையும்,  இழிவுகளையும் ஒழிக்க வேண்டுமென்ற துறையில் உழைத்து  வந்திருக்கிறேன். எனது குடும்பம் ஒரு வைதீகக் குடும்பமாகும். குடும்பத்தில்  எவ்வளவோ  கோவில் கட்டுதல்,  சத்திரம் கட்டுதல், அன்னதானம் செய்தல் முதலிய பல காரியங்கள் செய்திருப்பதோடு,  இத்தருமங்களுக்கு சொத்துக்களும் எழுதி வைத்து இருக்கிறார்கள் என்ற போதிலும், அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த நான் இன்று பல மக்களால் ஒரு புரட்சிக்காரனென்றும் தீவிரக் கிளர்ச்சி செய்கிறவன் என்றும் சொல்லப்படுகிறேன். 

காரணம் என்னவென்றால் நம்முடைய ஈன நிலைமைக்குக் காரணமாய் இருக்கும் அடிப்படையில் நான்  கையை வைப்பதால்தான் அது என்னவெனில் எவ்வளவு  காலத்திற்கு நாம் இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும், இந்து சாஸ்திரம், புராணம், வேதம், இதிகாசம் முதலியவைகளையும் நம்பி பின்பற்றிக் கொண்டு இருக்கிறோமோ அதுவரையில், நாம் தாழ்த்தப்பட்டவர்களாகவும், பிற்படுத்தப்பட்டவர்களாகவும் சம உரிமைக்கு அருகதையற்றவர்களாகவும்  இருப்பதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியவே முடியாது. 

அந்தமாதிரி அவைகளில்  இருந்து வெளியேறாமல் அவைகளை நம்பி பின் பற்றி நடந்து வந்தவர்களில் ஒருவராவது அவர்கள் வேறு வழிகளில் எவ்வளவு முயற்சித்தவர்களாய் இருந்தாலும் எவ்வளவு பெரியவர்களாக  ஆகி இருந்தாலும் அவர்களுக்கு ஏற்பட்ட இழிவிலிருந்து  தப்பித்துக் கொண்டவர்கள் இல்லவே இல்லை என்பதை ஒவ்வொரு சீர்திருத்தவாதி,  என்பவனும் நன்றாக உணரவேண்டும் என்று சொல்லி வருகிறேன். இதனாலேயே  நான் நாத்திகன் என்று கூட சொல்லப்படுகிறேன்.

 தோழர்களே! நான் ஏன் இப்படிச் சொல்லி வருகிறேன் என்றால், ஜாதி முறைகள் என்பவை எல்லாம் இந்து மதத்தினுடைய சிருஷ்டியேயாகும். இந்து கடவுள்கள்  பெயராலும்,  சாஸ்திரங்கள் பெயராலுமே தான் அவை நிலை நிறுத்தப்படுகின்றன.  பகுத்தறிவற்ற சில சமுதாய சீர்திருத்தக்காரர்  என்பவர்கள் இப்படிப்பட்ட கடவுள் மத சாத்திரங்களுக்கும்,  இந்து மதத்திற்கும், வேதாந்தமும், தத்துவார்த்தமும்  சொல்லி இதை ஏற்படுத்தினவர் களுக்கு நல்ல பிள்ளைகளாக  ஆவதற்கு முயற்சிப்பார்கள்.  இந்த அறிவீனமும், மோசமும், தந்திரமும் ஆன காரியங்களால்  தாங்கள் மாத்திரம்   மரியாதையடையலாமே தவிர  சமுதாயத்தின் இழிநிலை போக்க ஒரு கடுகளவும் பயன்படாது. 

ஆகையால்  உங்களுக்கு  முதலாவதாக  நான் என்ன சொல்லுகிறேன் என்றால், நீங்கள் உங்களுடைய  நிலையை  சிறிதாவது மாற்றிக் கொள்ள வேண்டும்  என்று உண்மையாய் ஆசைப்படுவீர்களானால், இந்து மதம் என்பதையும்  அது சம்பந்தப்பட்ட கடவுள்,  மத, புராண, சாஸ்திர, இதிகாசம்  என்பவைகளையும்   உதறித்தள்ளி அவற்றிலிருந்து வெளியாகுங்கள்.  அதைச் சொல்லவேதான்  நான் இவ்வளவு கஷ்டப்பட்டு  இங்கு வந்திருக்கிறேன். 

நீங்கள் அதைச் செய்யவில்லையானால்  இனியும் ஓர் ஆயிரம் ஆண்டிற்குக்கூட நீங்கள்  எப்படிப்பட்ட மாநாடுகளும்,  சங்கங்களும், பிரச்சாரங்களும், கிளர்ச்சிகளும்  நடத்தினாலும், எவ்வளவுதான்  அரசியல் சுதந்திரமும்,  பொருளாதார முன்னேற்றமும், பட்டம் பதவிகளும் பெற்றாலும் உங்கள்  சமுதாயத்திற்குள்ள  இழிவு  நீங்கப்போவதில்லை, இது உறுதி, உறுதி. உங்களுக்குமுன்   முயற்சித்தவர்கள்  செய்த தவறுகளையே நீங்களும்  செய்துகொண்டு இருந்தால்,  உங்கள் வாழ்நாள்களும்  அவர்களைப் போலவே தவறு செய்யத்தான் முடியுமே ஒழிய திருத்தம் காண முடியவே முடியாது.  

மலேரியாக் காய்ச்சலால் அவதிப்படும் மக்கள் கொயீனா சாப்பிடுவதையே அதற்குப் பரிகாரம் என்று கருதுவார்களேயானால்  அம்மக்களுக்கு  மருந்து சாப்பிடுகிற வேலையும், மருந்து வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கிற வேலையும் தான் நடைபெறுமே தவிர, அவர்களுக்கும் அவர்கள் சந்ததிகளுக்கும்  மலேரியா காய்ச்சல் ஏற்படுவது தடுக்கப்படமாட்டாது.

 உண்மையில் மலேரியா காய்ச்சலை ஒழிக்க வேண்டுமானால் மலேரியா காய்ச்சலுக்கு ஆதாரமான, அதை உற்பத்தி செய்கிற கொசுப்பூச்சிகள், விஷக்காற்றுகள் முதலியவைகளை ஒழிக்க வேண்டும்.  இவைகள் ஒழிக்கப்படவேண்டுமானால், மறுபடியும் அவைகள் உற்பத்தியாகாவண்ணம்  கசுமாலங்களையும், குப்பை கூலங்களையும் நெருப்பு  வைத்து எரித்து, அழுக்குத் தண்ணீர் குட்டைகளை மூடி ஆகவேண்டும். அது போலவேதான் நம் சமுதாய இழிவுக்கு  காரணங்களாய் இருக்கிற எப்படிப்பட்ட  மதத்தையும், கடவுள்களையும், ஆதாரங்களையும்  நாம் அடியோடு அறுத்தே தீர வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

இந்து மதத்தையோ, அதுசம்பந்தமான கடவுள், மதம், சாஸ்திரம்,  இதிகாசம், புராணங்களையோ சீர்திருத்தி விடலாம் என்று நினைப்பது வெறும் கனவும் வீண்வேலையும், கடைந்து  எடுத்த முட்டாள் தனமுமேயாகும். 

சரியான வழி,  புத்திசாலித்தனமான  வழி  என்னவென்றால்  அதிலிருந்து  தப்பித்துக் கொள்வதுதான். அதாவது, இந்து மதத்தைவிட்டு நாம் வெளியேறிவிட வேண்டியதுதான்.

அதாவது இந்துமதம் என்பதற்கு வேறு வார்த்தை சொல்ல வேண்டுமானால், ஆரியம், பார்ப்பனீயம் என்றுதான் சொல்ல வேண்டும். உங்களுக்கு சந்தேகமிருந்தால் அகராதி புத்தகங்களையும் அறிஞர்களால், ஆராய்ச்சி நிபுணர்களால் எழுதப்பெற்ற ஆராய்ச்சிக் குறிப்புகளையும், பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். இதை நீங்கள் யாவரும் நன்றாய் ஞாபகத்தில் வையுங்கள். ஆஷாடபூதிகளைக்கண்டு  ஏமாந்துவிடாதீர்கள். 

புத்தர், சங்கரர்,  ராமானுஜர்  போன்றவர்களின் முயற்சிகள் என்னஆயின? புத்தரை ஒழிக்கவே, இராமன், கிருஷ்ணன், இராமாயணம்,  கீதை,  புராணங்கள், அவை சம்பந்தப்பட்ட கோவில்கள் முதலியவை கற்பிக்கப்பட்டன.  இராமாயணத்தையும், கீதையையும், பிற சாத்திரங்களையும், ஆதரித்து பிரச்சாரம் செய்யவே சங்கரர், ராமாநுஜர்கள் முயன்று வந்தார்கள்.  அவர்களைப் பின்பற்றித்தான் ஆழ்வார்களும் நாயன்மார்களும், பக்தர்களும், தாசர்களும், மகாத்மாக்களும், ஆனந்தாக்களும், சுவாமிகளும்  தோன்றின இதை உணர்ந்தவர்கள் தான் இன்று  இந்நாட்டு மனித சமுதாய சீர்திருத்தத்திற்கு ஒரு கடுகளவாவது  தகுதியுடையவர்களாவார்கள். 

 சமீபத்தில் தோழர் அம்பேத்கர் அவர்கள் சென்னையில் வந்திருந்தபோது என்னிடத்தில் இதுசம்பந்தமாக நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததிலிருந்தும், பஞ்சாப்,  லாகூரிலிருந்து,  மண்டலத் தலைவர் சாந்தராம்  அவர்களும், முன்பு  காரியதரியாய் இருந்த ஹரிபவன் அவர்களும் உங்களைப் பற்றி எனக்கு எழுதிய சில கடிதங்களிலிருந்தும், நீங்கள்  நான் சொல்லும் இந்த வார்த்தைகளைப் பொறுமையாய்க் கேட்கக் கூடியவர்களென்றும்., நடு நிலைமையிலிருந்து  கவலையாய் சீர்திருந்தக் கூடியவர்கள் என்றும் தெரிந்ததினால் இவ்வளவு ஆயிரம் பேர் கொண்ட இந்த மாபெரும் கூட்டத்தில்  இதை நான் சொல்லுகிறேன். 

 எங்கள் நாட்டில் நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவனாய் இருந்த 1922ஆவது வருடத்திலேயே ஒரு பெரியமாகாண காங்கிரஸ் மாநாட்டில் இராமாயணம் கொளுத்தப்பட்டால் ஒழிய தீண்டாமை ஒழியாது  என்று சொல்லி இருக்கிறேன்.  வெகு பேர்களுக்கு  அன்று ஆத்திரமாய் இருந்தது.  இன்று எங்கள் நாட்டில் இப்படிப்பேசுவதும், கொளுத்துவதும் சர்வசாதாரணமாய் ஆகிவிட்டது. இராமாயணத்தைக் கொளுத்த  ஒரு கூட்டமும், அதை ஆதரிக்க ஒரு கூட்டமும் தினமும் பொதுக் கூட்டம் கூட்டி பேசி வருகிறார்கள்.

 மற்றும் பதினாயிரக்கணக்கான சுயமரியாதைக்கார்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்றே சொல்லலாம்.  தங்கள் வடமொழிப் பெயர்களை எல்லாம் மாற்றிக் கொண்டார்கள்.  இந்து மத அறிகுறியாய் இருக்கிற சின்னங்களை எல்லாம் விட்டுவிட்டார்கள்.  

உச்சிக்குடுமிகளை எல்லாம் தாங்கள் கத்தரித்துக் கொண்டதுமல்லாமல் பிறருக்கும் கத்தரித்துவிட்டார்கள். அநேகர் புராணப் பண்டிகைகளையும் உற்சவங்களையும் கொண்டாடுவதில்லை. இதற்கு முன்பு ஏழைகள்  பணத்தை வஞ்சித்துக் கொள்ளை அடித்த  பணக்காரர்கள்  இதற்கு முன்பு  கோயில் கட்டி வந்ததை நிறுத்திவிட்டு,  பள்ளிக்கூடம்  முதலிய காரியங்களில்  செலவிட்டு வருகிறார்கள். சென்சசில்  தாங்கள் இந்துக்கள் அல்லவென்று அநேகம் பேர் சொல்லிவிட்டார்கள். 

புராண நாடகங்களையும், சினிமாக்களையும், பஜனைப் பாட்டுகளையும்  ஜனங்கள் வெறுக்கத் தொடங்கி விட்டார்கள்.  கூடிய சீக்கிரத்தில் பெரும் கிளர்ச்சிகள்  செய்து ஜெயிலுக்கும் ஆயிரக்கணக்கான  வாலிபர்கள் போகத்தயாராய் இருக்கிறார்கள். எங்கள் நாட்டார் பலர் எங்கள் திராவிட நாடு, வடநாட்டு சம்பந்தத்திலிருந்து பிரிந்து  தனியாக  இருக்க விரும்பும் முக்கியக் காரணம்கூட,  இந்துமதத்தால்  ஏற்பட்ட இழிவும், ஆரிய ஆதிக்கத்திலிருக்கும் இழிவும் சுரண்டலும் ஒழிய  வேண்டும் என்பதற்குமாகும்.


 தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களாகிய  டாக்டர் அம்பேத்கார், ராவ்பகதூர்  சிவராஜ் போன்றவர்கள்  எல்லாம்,  தாங்கள் இந்து மதஸ்தர்கள்  அல்லவென்றும்,  தாங்கள் இந்துக்கள்  அல்ல என்றும்  தங்கள் சமூகத்தார் இந்து மதத்திலிருந்து விலக வேண்டும் என்றும், 15வருடத்திற்கு  முன்பிருந்தே சொல்லி வருகிறார்கள். இந்து மதத்தை விட்டுவிட்டால் எங்களை  என்ன மதம் என்று சொல்லிக் கொள்வது  என்று கேட்கலாம்.  உங்களுக்கு  துணிவு இருந்து நீங்கள்  வேறு எந்த மதத்தின் பேரை  சொல்லிக் கொண்டால் சமுதாயத்தில் உங்களை தீண்டாமையும்  இழிவும்  அணுகாதோ  அதைச் சொல்லுங்கள், அப்படி சொல்லிக் கொள்வதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்குமானால் நீங்கள் திராவிடர்கள் என்றும், திராவிட  சமயத்தவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளலாம்.   அதிலும் கஷ்டமிருந்தால்  சமரச  சமயத்தார் மனித சமுதாய  ஜீவகாருண்ய சமயத்தார் என்று சொல்லிக் கொள்ளலாம்.  பொருள் இல்லாததும், பித்தலாட்டமானதும்  இழிவையும் அந்நிய  ஆதிக்கத்தையும், சுரண்டலையும்   தருவதுமான ஒரு  கற்பனையான (இந்து) மதத்தின்  பேரைச் சொல்லிக் கொள்வது என்பது வெட்கக் கேடான காரியமாகும். மதம் வேண்டுமானால் மதம் வேண்டும் என்பவர்கள், மதத் தத்துவங்களையும், அவசியத்தையும் ஆராய்ச்சி செய்து பார்த்து ஒரு மதத்தைத் தழுவுவது அவரது அறிவுடைமையாகும்.   அப்படி இல்லாமல்  தான் ஒரு மதத்தில் பிறந்துவிட்டேன் என்பதற்காகவே அதை எப்படி விடுவது என்று சொன்னால் வருணாசிரம தர்மத்தை மற்றொரு முறையில்  பின்பற்றுவதேயாகும்.  பகுத்தறிவுவாதி  என்று சொல்வது  எல்லா மதத்திற்கும்  தாய் மதம் என்று  சொல்லிக் கொள்வதை நீங்கள்  திராவிடர்கள்  என்பதை உணராவிட்டாலும் நீங்கள்  ஆரியர்கள்  அல்ல, ஆரிய சம்பிரதயாத்திற்கு  போடாதவர்கள் அல்ல என்றும்,  ஆரியர்கள் இந்த நாட்டிற்குள் குடியேறி வந்திருக்கும் அந்நிய இனத்தார்கள்  என்றும் அவர்களுடைய ஆதிக்கத்திற்கும் ஏற்பட்ட  மத, சாத்திர, புராண இதிகாசங்களை  சுமந்து கொண்டிருக்கிறதன் பயனாகவே இந்த இழிநிலையில் இருக்கின்றீர்கள் என்றும்  தெரிந்தால் எனக்கு அதுவே போதுமானதாகும். 

தோழர்களே!

 முன்னுரையாக  அதிகநேரம் பேசிவிட்டேன், அநேக  காரியங்கள்  நடக்க வேண்டியிருப்பதால் மாநாட்டு காரிய  நடவடிக்கை ஆனபிறகு  சில வார்த்தைகள் சொல்லுகிறேன். நான் சொன்ன இவற்றை நீங்கள் நன்கு ஆலோசனை செய்தபார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று பேசினார். 

   (குடிஅரசு சொற்பொழிவு 13-01-1945)

கிரஹப்பிரவேசம்

 "கிரஹப்பிரவேசம்"

என்பது_தீட்டு_அகற்ற_செய்யும்_சடங்கு

இந்த வீட்டில் கீழ்சாதிக்காரர்கள் கொத்தனாராக சித்தாளாக வேலை பார்த்திருப்பார்கள் அதனால் தீட்டாகி இருக்கும், அந்தத் தீட்டைப் போக்க பிராமணரை வைத்து மந்திரம் சொல்லிப் பசு மாட்டு மூத்திரம் சாணியைக் கரைத்துத் தெளித்தால் தீட்டுப் போகும் என்றே செய்கிறார்கள். 

அதனை நம்பி உழைக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும் அதேபோல செய்து தான் சார்ந்திருக்கும் உழைக்கும் இனத்தையே இழிவுபடுத்தி பிராமண அடிமையாகிறார்கள்.

மனுதர்மம் அத்தியாயம் 5 சுலோகம் 124 :

"வீடு முதலானவற்றிற்கு சண்டாளாதிகளால் அசுத்தம் நேரிட்டபோது விளக்குதல் மெழுகுதல் கோமூத்திரம் தெளித்தல் கொஞ்சம் மேல் மண்ணை எடுத்துப்போடுதல் பசுமாட்டை ஒரு நாள் வசிக்கும்படிச் செய்தல் இவ்வைந்தினால் அப்பூமி பரிசுத்தப் படுத்தப்படுகிறது."

(சண்டாளாதிகள் - கீழ்சாதிக்காரர்கள்)

உங்கள் வீட்டிலாவது "கிரஹப்பிரவேசம்" எனும் பெயரில் நீங்கள் வசிக்க வீடுகட்டி கொடுத்த தொழிலாளர்களை அவமானப்படுத்தாமல் இருங்கள்...  கடவுள் நம்பிக்கை உடையவராக இருப்பின், கடவுளுக்கும் உங்களுக்கும் இடையில் புரோகிதர் எனும் ஏமாற்றுக்காரனுக்கு இடமளிக்காதீர்கள்... சொந்தங்களையும், நண்பர்களையும் அழைத்து விருந்தளிப்பதோடு முடித்துக் கொள்ளுங்கள்...!

பதிவு - Arulsaravanan S

நாள் - ஜூன் 23 , 2019

நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்க்கி கொலை வழக்கு

 பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர் - கோவிந்த் பன்சாரே - எம்.எம்.கல்புர்கி கொலை வழக்கில் புதிய திருப்பம


தடயவியல் ஆதாரங்களை  இங்கிலாந்துக்கு அனுப்பிட முடிவ

புதுடில்லி, ஆக.26 மத்தியப் புலனாய்வுக்குழு விசாரணை செய்துவருகின்ற பகுத்தறி வாளர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்குகளில் தடயவியல் ஆதாரங்கள் ஆய்வுக்காக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட உள்ளன.

இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையில் உள்ள தடயவியல் வல் லுநர்களின் முடிவுகளைப் பெறுவதற்காக தடயவியல் ஆதாரங்களை இந்த வாரத்தில் அனுப்பிவைப்பதென மத்திய புலனாய்வுக் குழு முடிவு செய்துள்ளது.

மகாராட்டிர மாநிலத்தில் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கருநாடக மாநிலத்தில் எம்.எம்.கல்புர்கி ஆகிய மூன்று பகுத்தறிவாளர்கள் படுகொலை செய்யப்பட்டதில், இந்துத்துவா வலதுசாரிக் குழுவைச் சேர்ந்த கொலையாளிகள் பயன் படுத்திய துப்பாக்கி ஒரே துப்பாக்கியா அல்லது வெவ்வேறா என்பதை கண்டறிய தடயவியல் ஆதாரங்கள் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை தடயவியல் வல்லுநர்களுக்கு மத்திய புலனாய்வுக்குழு அனுப்புகிறது.

பகுத்தறிவாளர்களைக் கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட நாட்டுத் துப்பாக்கி யின் துப்பாக்கிக் குண்டின் 7.65 மி.மீ. காலி ஷெல்கள் மற்றும் காட்ரிஜ்கள் புலனாய்வுக்குழுவினரால் கைப்பற்றப் பட்டன.அவற்றைஸ்காட்லாந்துயார்டு காவல்துறையின் தடயவியல் புலனாய் வுக் குழுவினருக்கு அனுப்பி, பகுத்தறிவா ளர்கள் கொலைகளில் ஒரே ஆயுதமே பயன்படுத்தப்பட்டுள்ளதா என்கிற முடிவு குறித்து கருத்து கேட்கப்பட உள்ளது. 

மத்திய அரசின் தாமதம்

தடயங்கள்மீதான புலனாய்வு மேற் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டு மூன்று மாதங்களாகியும், மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளிப்பதில் காலதாமதம் ஆகி விட்டது என்று மத்திய புலனாய்வுக் குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிந்த்பன்சாரேமற்றும்எம்.எம். கல்புர்கி கொலைகளில் இந்துத்துவா வலதுசாரி அமைப்பாகிய சனாதன்சன்ஸ் தாவின் தொடர்புகள் குறித்து மத்திய புலனாய்வுக்குழு தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது.

கோவிந்த் பன்சாரே கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழுவினரால் கடந்த ஜூன் மாதத்தில் சனாதன்சன்ஸ்தா அமைப் பைச் சேர்ந்தவர் ஒருவர் கைது செய்யப்பட்டு புனே நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.  மற்ற இரண்டு கொலை வழக்குகளான பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர், எம்.எம்.கல்புர்கி ஆகியோர் கொல்லப்பட்ட வழக்குகளில் அவ்வமைப்பு மற்றும் கைது செய்யப்பட்டவர் தொடர்பு குறித்து விசாரணை மேற்கொள்ள காவல்துறையினரின் காவலில் வைத்து வி£ரணை செய்திட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்

ஸ்காட்லாந்து யார்டு தடயவியல் அறிக்கை மத்திய புலனாய்வுத்துறைக்கு கிடைக்க பெற்றதும், அவ்வறிக்கை மத்திய புலனாய்வுக்குழுவால் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்.

2013 ஆம் ஆண்டு நடந்த நரேந்திர தபோல்கர் கொலை வழக்கு மகாராட்டிர காவல்துறையிடமிருந்து மத்திய புலனாய் வுக்குழுவின் விசாரணைக்கு 2014ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதேபோல், மற்ற இரண்டு வழக்குகளையும் மத்தியபுலனாய்வுக்குழுவின் விசாரணைக்கு உட்படுத்தினால், மூன்று வழக்குகளிலும் உள்ள தொடர்பை கண்டறிந்து வெளிப் படுத்த வாய்ப்பாக இருக்கும் என்றும் மத்திய புலனாய்வுத்துறையின் சார்பில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

தோழர் ஏ.ஜி.கே

 தனிவாழ்க்கை- சிறைவாழ்க்கை_ பொதுவாழ்க்கை இவையாவும் இணைந்தவைதான் ஒருமுழுமையான வாழ்க்கை எனும் உறுதிப்பாட்டுடன், உழைக்கும் மக்களின் போராட்ட களமான கீழதஞ்சை மண்ணில் ஏழை எளிய மக்களின் உரிமைகளையும் தன்மானத்தையும் மீட்டு தந்திட சமரசமில்லாமல் போராடிய போராளி"ஏஜிகே" என்று அனைவராலும் அழைக்கப்படுகிற இணைமிகுஅ.கோ.கஸ்தூரி ரெங்கன்.

 1932ல் பிறந்திட்ட அவர் மார்க்ஸிய அணுகுமுறையினையும்,பெரியாரிய கோட்பாடுகளையும் இணைத்து களமாடியகலகக்காரன்.

மாணவப்பருவமாக இருக்கும் போது 1952களிலேயே பெரியாரிய கருத்துக்களில் ஈர்க்கப்பட்ட அ.கோ.க 1957-ல்திராவிடக்கழகப் பேச்சாளராக பரிணாபம் பெறுகிறார்.உழைக்கும் மக்களுக்காக உழைக்கிற அவர் திராவிட விவசாய சங்கத்தின் பணிகளில் தீவிரம் காட்டி மிராசுதாரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் களமாடினார்.

நாகை அவுரித்திடலில் தந்தை பெரியார் தலைமையில் ஒருபொதுக்கூட்டம் அந்த கூட்டத்திற்கு பேரணியும் நடைபெறுவதாக இருந்தது அப்பேரணியை பண்ணையார்கள் சீர்குலைத்து கலவரம் செய்யபோவதாக பெரியாருக்கு வந்தஒதகவலின் பேரில், பெரியார் அகோகவை பேரணியை நெறிபடுத்துமாறு கேட்டுக்கொண்டார் ..அப்பேரணி கிளம்பிய சில மணித்துளிகளிலேயே கலவரத்தை துவக்கிய பண்ணைகளை தன் போராட்ட கள உத்தியால் திணரடிக்கவைத்து ஓடவும் விட்டார்.

இக்கலவர நிகழ்வில் எழுந்திட்ட கருத்து வேறுபாட்டினால் 1962_ல் பொதுவுடமை கட்சியில் இணைந்தார் நிலவுடமை ஆதிக்கத்திற்கெதிராகவும்..பண்ணை ஆதிக்க சுரண்டலுக்கெதிராகவும் ஊர் ஊராக இவர் உழைக்கும் மக்களை சந்தித்தார் போராட்ட தீமூட்டினார்.கீழதஞ்சை மாவட்டம் முழுவதிலும் நிலபிரபுக்களின் ஆதிக்கத்தை எதிர்த்து களப்போராட்டங்களை பரவச்செய்தார்.

குறிப்பாக மைனர்கள் எனப்படுகிற பெரும் மிராசுதாரர்கள், சிக்கல் கோயில் பண்ணைகள், பெருங்கடம்பனூர் சூரிய மூர்த்தி செட்டியார் பண்ணை,மஞ்சக்கொல்லை முதலியார் பண்ணை,பாப்பாகோயில் கோவிந்தராஜ் பிள்ளை பண்ணை,ஆய்மழை ராமதேவர் பண்ணை,தலையாமழை செட்டியார் பண்ணை,வலிவலம் தேசிகர்பண்ணை ,வடவூர்பண்ணை, இரிஞ்சியூர் கோபால கிருஷ்ண நாயுடு போன்ற பண்ணை ஆதிக்கத்தின் வயிற்றில்  நெருப்பை  கனக்க வைத்த கீழத்தஞ்சையின் ஆளுமை போராளியாக இவரே விளங்கினார்.

முக்கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட அகோக பதினான்கு ஆண்டுகள்.... தூக்குதண்டனைபிறகு ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டு சிறைப்படுத்தப்பட்டு சிறையிலிருந்த காலக்கட்டத்தில்  சிறைக்குள்ளும் போராட்ட தீமூட்டினார்."குற்றவாளி இல்லை குற்றம்சாட்டப்பட்டவர்கள்" "சிறைவாசி அல்ல சிறைபடுத்தப்பட்டோர்" "சிறை இல்லம் இல்லை  சிறை அடைப்பான்"என்றார். 1881ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட வெள்ளையர்களின் சிறை விதிமுறைகளே அமலில் இருந்தது.அந்த சிறை விதிமுறைகளை எதிர்த்து தீவிரமாக களமிறங்கினார்.

உணவுமுறை, சிறைப்படுத்தப்பட்டவர்கள் நடத்தப்படும் முறைகள் பரிதாபத்துக்குரியதாக இருந்தது. இதனை எதிர்த்து 1973 -ல் திருச்சி மத்திய சிறையில் சிறைபடுத்தப்பட்டோர் நல உரிமைச்சங்கத்தை தொடங்கினார்.அதனின் கருத்துக்கருவியாக "உரிமைக்குரல் " எனும் கையேட்டையும் துவக்கி 1000 நபர்களை உறுப்பினர்களாக்கினார்.

அங்கே பணிசெய்கிற காவலர்களுக்கும் பணிகள் சம்மந்தமாக கொடுமைகள் இருந்தன இதனை எதிர்த்தும் களமாடினார். 1974 மே-1ல் பல கோரிக்கைகளை வலியுறுத்தி சிறைக்குள் போராட்டத்தை துவக்கினார்.சிறைக்குள்ளிருந்தே அப்போதிருந்த இந்திராகாந்தி எதிர்கட்சி தலைவர் வாஜ்பாய் உள்ளிட்ட ஆயிரம் பேர்களுக்கு மேல் உள்ளிருந்துகொண்டே வலியுறுத்துதல்களையும் தகவல்களையும் அனுப்பி.. சட்டநடவடிக்கைகளிலும் திறன்பட இறங்கி போராட்ட வடிவத்தை நடைமுறைப்படுத்தினார். போராட்டத்தை ஒடுக்க..  போராட்டக்காரர்களை சிறைநிர்வாகம் பலசிறைகளுக்கு பிரித்துப்போட்டது.

அகோக அவர்களை பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றினார்கள்.அங்கும் செவ்வொளி என்கிற கையேடு தொடங்கி போராட்ட களத்தினை விரிவுப்படுத்தினார்.இதன் பயனாகவும் தன்னலமற்ற உழைப்பினாலும் சிறைசாலை வரலாற்றில் ஆங்கிலேய விதிமுறைகள் தடுக்கப்பட்டு புதிய சிறைவிதிகள் புகுத்தப்பட்டது போராட்டம் முழுவெற்றிப் பெற்றது

2000-மாவது ஆண்டில் செழுமைப்படுத்தப்பட்ட மார்க்சியமே பெரியாரியம் என்கிற முழக்கத்தோடு தமிழர் தன்மானப் பேரவை என்கிற இயக்கத்தை தொடங்கி களமாடினார். 

மார்சிய பெரியாரிய கோட்பாடுகளை இணைத்து இயக்கம் கட்டிய தமிழ்தேசியப் போராளி ஆகத்து -10 நாள் நம்மிலிருந்து பிரிந்தார்.

களப்போராட்ட நாயகர் #ஏஜிகே_

--------------------------------------------------------

நன்றி :புகழ்ச்செல்வி மாத இதழ்

The debut of 'Periyar', through a story


The debut of ‘Periyar’, through a story

A.R. Venkatachalapathy

The moniker was first used for the reformer, whose birth anniversary is being observed today, in 1934

The earliest reference in Tamil literature to E.V. Ramasamy as ‘Periyar’ was in Pudumaippithan’s short story, ‘Puthiya Nandan’ (‘The New Nandan’), which appeared in the weekly Manikodi on July 22, 1934. To think of it, it is least surprising that Pudumaippithan was the first writer to refer to the leader as ‘Periyar’, for he was a pioneer modernist, and that the story was carried in Manikodi, the pre-eminent literary journal of the times that provided space for new writing.

‘Puthiya Nandan’ is narrated as a sequel to the well-known story of Nandanar. In the standard version handed down from Sekkizhar’s Periya Puranam (12th century) and fleshed out in Gopalakrishna Bharati’s Nandanar Charithira Keerthanai (mid-19th century), Nandan is a Dalit serf bound to a Brahmin landlord. His devotion for Siva impels him to seek darshan in the Chidambaram temple, out of bounds for him due to his caste position. After many travails and a final ordeal by fire, he becomes one with the lord, and is deified as Thirunalaippovar Nayanar.

Serfdom despite salvation

Pudumaippithan begins his story, set in the same Adhanur village, centuries later: “A long time had passed since Nanda Samban had passed through the cleansing fire to become Nanda Nayanar.” The entire story is narrated in such sentences, brimming with irony and sarcasm. The narrative is fast-paced, reaching its denouement in barely six pages. And as the various allusions make it clear, an understanding and enjoyment of the story is predicated on a knowledge of Sekkizhar and Gopalakrishna Bharati. Pudumaippithan creates new characters, among whom Pavadai is central.

Adhanur is now a sleepy place, blissfully unaware of even the advent of British rule. Nandan’s canonisation notwithstanding, the Dalit quarters, the cheri, have still not attained salvation. Brahmins continue to lease out their lands to the Dalits, as before. The inhabitants remain bound to not only the Brahmin landlords but the absentee British sahibs as well.

A descendant of the Brahmin of Periya Puranam times, the landlord Viswanatha Shrauti is also a pensioned sub-registrar, his loyalties torn between the British empire and the eternal sanatana dharma. His only son, Ramanathan, an MA, captivated by Gandhian ideals, has courted arrest during the civil disobedience movement.

In the cheri lives Karuppan, a blind old man. In his youth, he unknowingly stepped into the pond in the agraharam, and gulped some water. Hell broke loose and Viswanatha Shrauti, then a young man, gave Karuppan such a thrashing that he lost his eyesight. But to make amends, he appointed Karuppan to watch his garden, let him build a hut and arranged his marriage. Karuppan’s firstborn Pavadai is of the same age as the landlord’s son and also his boyhood friend.

One day, Rev. John Iyer, a Vellalar Christian pastor, visits the Adhanur cheri to spread the word of god. Impressed by Pavadai’s intellect, he offers incentives for his conversion. Karuppan has always wished for his son to have English education, and therefore, agrees. Pavadai gets enrolled in school by John Iyer and turns out to be a brilliant student, clearing his school final. More success seems to be in store. But the good father in heaven apparently has other ideas.

John Iyer has a daughter, whose friendship with Pavadai turns into romance. Believing in John Iyer’s preaching about Christianity not entertaining the inequities of the Hindu religion, Pavadai, who now goes by the name of Daniel John, proposes marriage. In response, John Iyer, deploying the choicest casteist slurs, throws him out of his house.

A heartbroken Daniel now turns to Catholicism, and spends some years in a seminary. But ‘the unnatural desires’ of the priests and the claustrophobic atmosphere of the church leave him disillusioned.

Joining hands with Periyar

He then quits the church and joins Periyar’s Self-Respect Movement. Now adopting the name of Comrade Narasingam, he becomes its staunch campaigner.

On returning to Adhanur, Narasingam is overwhelmed by the thought of emancipating his village. Meanwhile, Ramanathan, the Brahmin landlord’s son, too has returned home. Much to his father’s chagrin, he is now involved in ‘Harijan uplift’.

On one moonlit night, Ramanathan hears a splash in the well, and jumps in; it is Karuppan’s daughter. Natural instincts take over, and a remorseful Ramanathan later promises to marry her. However, both the girl and her father dismiss the idea as outlandish.

At this time, Gandhi is on his ‘Harijan tour’ with a planned five-minute stopover in Adhanur. Viswanatha Shrauti is ready to refute Gandhi’s thesis that untouchability has no scriptural sanction. His objective is twofold: to defeat Gandhi’s ideas, and to demonstrate the glories of sanatana dharma to his son.

Comrade Narasingam too wants to confront Gandhi, for not going far enough on the ‘untouchability question’. Now in the know of his sister’s affair, he tries to persuade his father to marry her to Ramanathan but is unable to convince him. A furious Narasingam swears to expose the Brahmin’s deviousness.

A huge crowd mills around the stage. The blind Karuppan stumbles on the path, hoping to catch a glimpse of the Mahatma. Ramanathan, who has made the arrangements for Gandhi’s stopover, and Comrade Narasingam also hurry to the event. At that moment, as the Madras Mail speeds past, the two notice that the old man is on its track. As they attempt to save Karuppan, all three are run over, their blood mixed together. Pudumaippithan concludes by asking: Among the three, who is the ‘New Nandan’?


After the Poona Pact


Periyar’s movement at that time was relatively new, and he had only recently returned from a transformative tour of the Soviet Union and Europe. By this time, he had become a strident critic of Gandhi. The Poona Pact was less than two years old, and had accentuated the differences between Periyar, who backed B.R. Ambedkar, and Gandhi, who in response to Ambedkar’s challenge, had started the Harijan campaign. This set the context for ‘Puthiya Nandan’.

While Pudumaippithan’s sympathies are clear — he can only be on the side of the oppressed — he doesn’t take sides in the story and keeps a critical distance while representing all ideological strands fairly. He refers to E.V. Ramasami as ‘Periyar Ramasami’ — a title few at that time granted to the radical. In November 1932, Periyar had given a call to people to drop honorifics and urged the use of ‘Thozhar’ (Comrade), the appellation by which Pudumaippithan refers to the Narasingam in his story. No wonder C. Rajagopalachari, on reading one of Pudumaippithan’s stories, wondered if the author was not a ‘suna-mana’ or ‘a self-respecter’!

A.R. Venkatachalapathy is a historian of the Dravidian movement (The Hindu, 17.9.2019)

ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் பெரியாரியல் ஆய்வுரை -2

 ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் பெரியாரியல் ஆய்வுரை- 2


பெரியாரை கடவள் மறுப்பாளராக சிலர் பார்க்கலாம். சிலர் பார்ப்பன எதிர்ப்பாளராக பார்க்கலாம். சட்டத்தைக் கொளுத்தியவர், சிலையை உடைத்தவர், இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கண்ணோட்டத்தோடு பார்ப்பார்கள்.

 எல்லாவற்றிற்குமே அடிப்படை என்ன என்பதைப் பற்றி அய்யா அவர்கள் சொல்லுகின்றார்கள்.

சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்ததேன்? என்று அய்யா அவர்கள் சொல்லுகின்றார்கள் :

 இதை ஏறத்தாழ ஒரு 50 ஆண்டுகளுக்கு(1988 இல் ஆசிரியர் இதை பேசுகிறார் -கவி ) முன்னாலே எழுதியிருக்கின்றார்கள். ‘குடிஅரசு’ ஏட்டிலே அய்யா அவர்கள் எழுதிய கட்டுரையை எடுத்து தான், சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன்? என்று ஒரு நூலையே போட்டிருக்கின்றோம்.

அய்யா அவர்கள் தன்னைப் பற்றி சொல்லுகின்றார்கள், ‘எனக்கு சிறுவயது முதற்கொண்டே சாதியோ, மதமோ கிடையாது. அதாவது நான் அனுசரிப்பது கிடையாது’ என்று சொல்லுகின்றார்.

அய்யா அவர்களுடைய குடும்பம் பெரிய வைஷ்ணவக் குடும்பம். அய்யா அவர்களே வட நாமம் போட்ட படம் இருக்கின்றது. போட்டிருக்கின்றார்கள்.

அய்யா அவர்களுடைய குடும்பத்திலே அய்யா அவர்களுக்கு ராமசாமி என்ற பெயர் மட்டும் வைக்கவில்லை, ஒரு நீண்ட பெயரை வைஷ்ணவ முறைப் படி வைத்திருக்கின்றார்கள். அவருடைய அண்ணாருக்கும் கிருஷ்ணன் என்றுதான் பெயர் வைத்திருக்கின்றார்கள்.

அடுத்து அய்யா அவர்கள் சொல்லுகின்றார் :

‘அதுபோலவே கடவுளைப் பற்றி ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டது இல்லை. எந்தக் காலத்திலும் நம்பிக்கையும் வந்ததில்லை. பயமும் வந்த தில்லை.

நான் செய்ய  வேண்டும் என்று கருதிய காரியம் எதையும் கடவுள் கோபிப் பாரே என்றோ, கடவுள் தண்டிப்பாரே என்றோ கருதி எந்தக் காரியத்தையும் செய்யாமல் விட்டிருக்கமாட்டேன்.

 எனது வாழ்நாளில் என்றைக்காவது சாதியையோ, மதத்தையோ, கடவுளையோ உண்மையாக நம்பி இருந்தேனா என்று இன்னமும் யோசிக்கின்றேன்.

 எப்பொழுதிலிருந்து இவைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் யோசித்து, யோசித்துப் பார்க்கிறேன். கண்டுபிடிக்க முடியவே இல்லை. எனது 6 ஆவது வயதில் நான் ‘திண்ணைப் பள்ளிக் கூடத்’திற்கு அனுப்பப்பட்டேன்.

நான் சென்ற அந்த  பள்ளிக் கூடம் டவுனுக்கு சற்று விலகிய தூரத்தில் இருந்தது. இப்பொழுது அது நடு ஊராக ஆயிற்று. பள்ளிக் கூடத்தைச் சுற்றி வாணியச் செட்டியார்களின் வீடுகள் உண்டு. ‘எண்ணெய் செக்குகள்’ சதா ஆடிக் கொண்டிருக்கும். 

மூங்கில் பாய், முறம், கூடை பின்னுகிறவர்கள் குடிசை களில் இருந்து கொண்டு தங்களது வேலைகளைச் செய்வார்கள். சில முஸ்லீம் கள் வீடும் குடிசைகளுக்குப் பக்கத்திலே உண்டு. ஆகவே அப்பள்ளிக் கூடத்தை சூழ்ந்திருந்த மக்கள் வாணியச் செட்டியார்கள், வேதக்காரர்கள், சாயபுகள் ஆகியவர்கள். அந்தக் காலத்தில் இவர்கள் வீட்டில் எவ்வித சாதிக் காரர்களும் உணவு அருந்த மாட்டார்கள் அல்லவா?

ஆகையால் என்  வீட்டார்கள் நான் பள்ளிக்குப் போகும் பொழுது ஞாபக மாய்ச் சொல்லி அனுப்புவார்கள். என்னவென்றால், அங்குள்ள சாதிக்கார்கள் புழங்கக் கூடாத சாதிக்காரர்கள். அவர்கள் வீட்டில் நீ தண்ணீர் குடித்து விடாதே! வேண்டுமானால் வாத்தியார்  வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடி. வாத்தியார் வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடிப்பதில் விசயமிருக்கிறது. ஏனென்று சொன்னால் இவர் பணக்காரர் வீட்டுப் பிள்ளை. வாத்தியார் வீட்டில் தண்ணீர் கேட்டால் கொடுத்து விடுவார்கள்.

அதுபோலவே இரண்டொரு தடவை வாத்தியார் வீட்டில் தண்ணீர் கேட்டேன். வாத்தியார் ஓதுவார் சாதி; மாமிசம் சாப்பிடாத சைவர்கள். அவர்கள் வீட்டு சிறு பெண்  எனக்கு தண்ணீர் கொடுக்கும் பொழுது ஒரு ‘வெங்கல டம்ளரை’ கீழே வைத்து ‘தண்ணீர் ஊற்றிய’ பிறகு எடுத்து, ‘தூக்கி குடி’க்கச் சொல்லும். நான் குடித்த பிறகு (டம்ளரை-கவி) கவிழ்த்து வைக்கச் சொல்லும். அதன் பிறகு அதன் மீது தண்ணீர் ஊற்றி அதை நிமிர்த்தி உள்ளேயும் தண்ணீர் ஊற்றி கழுவி பிறகு உள்ளே எடுத்துச் செல்லும்.

இதற்குள், எனக்கு ‘தூக்கிக் குடி’க்கத் தெரியாது. குடிக்கும் பொழுது அதில் பகுதி தண்ணீர் உடல்மீது விழும். பகுதி தண்ணீர்தான் வாயில் விழும்.

 மூக்கில் விழுந்த தண்ணீரால் புரையேறி தும்மல் வந்து, வாய் தண்ணீர் கீழே விழும். இதைப் பார்த்த அந்தப் பெண் அசிங்கப்படும்’.

எவ்வளவு தெளிவாக அய்யா அவர்கள் வர்ணிக்கிறார் பாருங்கள். 

‘சில சமயம் அந்த பெண் கோபித்து வையும். அதனால் எனக்கு தாகம் ஏற்பட்டாலும் வாத்தியார் வீட்டில் தண்ணீர் கேட்பதில்லை. வாணியஞ் செட்டியார் பிள்ளைகள் வாத்தியார் வீட்டில் தாகத்திற்கு தண்ணீர் கேட்பதில்லை.

பள்ளிக் கூடத்தில் தண்ணீர் தாகம் ஏற்படும் பொழுது வாத்தியாரிடத்தில் ‘பெருவிரலை’ காட்டுவோம்.

 வாத்தியாரும் ‘போய்விட்டு சீக்கிரம் வா’ என்று சொல்லுவார். ஒரு நாள் ஒரு செட்டியார் பையன் தண்ணீர் வேண்டுமென்று பெருவிரலைக் காட்டி வாத்தியாரிடம் கேட்டான். நானும் உடனே தண்ணீர் வேண்டுமென்று வாத்தியாரிடம் பெருவிரலைக் காட்டினேன். இருவரையும் வாத்தியார் அவர்கள் ‘சீக்கிரம் போய்விட்டு வாருங்கள்’ என்று சொன்னார்.

உடனே, ‘ராமா நீ எங்கே ஓடுகிறாய்?’ என்று வாத்தியார் கேட்டார் .

 ‘தண்ணீருக்காக அய்யா’ என்று சொன்னேன். தண்ணீருக்காக அவன் கூட போறியே? என்றார். அதன் பிறகு நான் வாத்தியார் வீட்டிற்குப் போனேன். 

அதாவது ஒரு கூரை வீட்டில் திரைச்சீலையை கட்டிய ஒரு பாகத்தில் வாத்தியார் குடியிருப்பார். நான் தண்ணீர் குடித்துவிட்டு தேகமெல்லாம் நனைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டேன். அடுத்த நாள் தண்ணீர் தாகம் எடுத்த பொழுது - ஒரு செட்டியார் பையன் கூட போக தீர்மானம் பண்ணிக் கொண்டு, அந்த பையனிடம் பேசி வைத்து, அவன் தண்ணீர் குடிக்க பெரு விரலைக் காட்டும் முன்பே நான் ஒரு விரலை, அதாவது ‘ஆள்காட்டி விரலைக்’ காட்டி (சிறுநீர் கழிப்பதற்கு - கவி) வாத்தியாரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு, வாத்தியார் வீட்டுப் பின்புறம் வந்து நின்று கொண்டேன்.

 அடுத்து அந்த பையன் தண்ணீர் குடிக்க வாத்தியாரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு வெளியே வந்தான். நானும் அவனும் அந்தச் செட்டியார் வீட்டிற்கு ஓடினோம்.

 ‘லோட்டா’வில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். சாதாரணமாக எங்கள் வீட்டில் குடிப்பது போல் ‘லோட்டா’ விளிம்பை உதட்டில் வைத்து குடித்தேன். 

அந்த செட்டியார் வீட்டம்மாள் என்னைப் பார்த்து, ‘நீ நாயக்கர் வீட்டு தம்பியா?’ என்றார். நான், ‘ஆமாம்’ என்றேன். ‘இங்கு தண்ணீர் குடிக் கிறாயே! உங்கள் வீட்டில் ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?’ என்றார். ‘சொல்ல மாட்டாங்கோ!’ என்று சொல்லிவிட்டு என் கூட வந்த பையனுடன் கூட ஓடி வந்து விட்டேன்.

அதற்குள் அந்த அம்மா அந்தப் பையனைக் கூப்பிட்டு, ‘டேய் பழனியப்பா! அந்தச் சொம்பை கழுவி வைத்துவிட்டுப் போடா ! ’என்று சொன்னார்கள். அதே மாதிரி  அந்த பையன் லோட்டாவைக் கழுவி வைத்துவிட்டு, வீதியாக முன்புறம் பள்ளிக் கூடத்திற்கு வந்தான். நான் போன வழியிலே பின்புறமாக பள்ளிக் கூடத்திற்கு வந்தேன்.

இதே மாதிரியாக, மற்றொரு சமயம் வேதக்காரர் வீட்டில் தண்ணீர் சாப்பிட்டேன். மெல்ல, மெல்ல அவர்கள் வீட்டில் பலகாரங்களும், பிறகு அவர்கள் வீட்டில் விசேச காலங்களில் செய்யப்படும் காய்கறி பதார்த்தங்களும் கூட சாப்பிடும்படியாக ஆகிவிட்டது. எங்கள் வீட்டிற்கு இந்தச் செய்தி எட்டியது.

 எங்கள் வீட்டில் நல்ல பணம் வருவாய் பெருகி, அப்பொழுதுதான் பார்ப்பனர் களைப் போல ஆச்சார, அனுஷ்டானங்களுடனும் நடக்க ஆரம்பித்தது’

என்று குறிப்பிட்டுள்ளார். 

இதிலே கூட அய்யா அவர்களுடைய நகைச் சுவை உணர்வையும், சமுதாயப் பார்வையையும் நீங்கள் நன்றாகப் பார்க்க வேண்டும்.


நம்முடைய நாட்டிலே ‘பணம் வந்தால் ஆச்சார அனுஷ்டானங்கள் தானே வரும்? தான் மேல் சாதிக்காரன் என்று காட்டக்கூடிய எண்ணம் வரும்’ இதை அய்யா அவர்கள் எவ்வளவு நாசுக்காகப் படம் பிடித்திருக்கிறார்கள் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.


பதிவு: கந்தசாமி விநாயகம்

Saturday, August 28, 2021

நீதிக்கட்சி வளர்த்த அரும் பெருந் தலைவர்கள் - 3

 நீதிக்கட்சி வளர்த்த அரும்பெருந்த் தலைவர்கள்-3

- டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன்

டாக்டர் டி.எம். நாயர் (1868 - 1919)

டாக்டர் டி.எம். நாயர் அவர்கள் பாலக்காட்டு நகருக்கு அருகே உள்ள ‘தாரவாத்’ என்ற ஊரில் 1868 ஆம் ஆண்டு பிறந்தவர். அவரது முழுப் பெயர் தாரவாத் மாதவன் நாயர் என்பதாகும்.

அவர் பாலக்காட்டில் பள்ளிப் படிப்பையயல்லாம் முடித்த பின்னர், சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. தேர்வில் தேறிப் பட்டம் பெற்ற பின்னர் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். மருத்துவக் கல்வியை மேலும் சிறந்த முறையில் பெற விரும்பி 1889 இல் இங்கிலாந்து நாட்டிற்குச் சென்றார். 1894 ஆம் ஆண்டில் அவர் எம்.பி.சி.எம். என்ற உயர்ந்த மருத்துவப் பட்டத்தைப் பெற்றார். பின்னர், சிறிது காலம் பிரைட்டன் நகரில் மருத்துவராகப் பணியாற்றினார்.

 1896 ஆம் ஆண்டில் எடின்பரோ பல்கலைக் கழகத்தில் எம்.டி. பட்டத்தைப் பெற்றார். பின்னர் அவர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில், செவி - மூக்கு - தொண்டை பற்றிய மருத்துவ ஆராய்ச்சியில் ஓராண்டு காலம் ஈடுபட்டார். அப்பொழுது அவர் கிரேக்க மொழியையும் நன்கு கற்றறிந்தார்.

அதன் பிறகு 1897 இல் சென்னைக்குத் திரும்பி வந்து, செவி ‡ மூக்கு‡ தொண்டை பற்றி மருத்துவராகச் சிறந்து விளங்கிப் பெயரோடும் புகழோடும் திகழ்ந்தார். டாக்டர் டி.எம். நாயர் அவர்கள் ஆறரை அடி உயரமுள்ளவராக விளங்கி, எடுப்பான-கவர்ச்சிகரமான-கம்பீரமான தோற்றங் கொண்டவராகத் திகழ்ந்தார். அவரது தோற்றப் பொலிவே பலரையும் அவரிடம் அடக்கவொடுக்க மாக நடந்து கொள்ளச் செய்தது.

டாக்டர் நாயர், ‘ஆண்டி செப்டிக்’ (Anti septic) என்ற பெயரில் மருத்துவ திங்கள் இதழ் ஒன்றை நடத்தினார். சென்னை மாகாணத்தில் தோன்றிய முதல் மருத்துவ இதழ் அதுதான் என்று குறிப்பிடலாம். அவர் ‘மெட்ராஸ் ஸ்டாண்டர்டு’ (Madras Standard) என்ற ஆங்கில நாளேட்டிற்குச் சில காலம் ஆசிரியராக இருந்து பணியாற்றினார்.

டாக்டர் நாயர் இங்கிலாந்திலிருந்து சென்னை வந்து சேர்ந்ததும், தம்மைக் காங்கிரஸ் கட்சியில் ஈடுபடுத்திக் கொண்டார். அவர் இங்கிலாந்தில் இருக்கும் போது தாதாபாய் நெளரோஜிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

டாக்டர் நாயர் 1904 ஆம் ஆண்டில் சென்னை நகராட்சி மன்றத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தொடர்ந்து பல தடவைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 12 ஆண்டு காலம் உறுப்பினராகப் பணியாற்றி வந்தார்.

அவர் நகராட்சி மன்ற, ஊராட்சி மன்ற சீர்திருத்த நடவடிக்கைகளிலும் மிக்க ஆர்வங் காட்டி வந்தார். அவர் 1913 ஆம் ஆண்டிலிருந்து 1915 ஆம் ஆண்டு வரையில் சென்னைச் சட்டமன்றத்தில உறுப்பினராக இருந்து அரும்பணி யாற்றினார். 

பட்டம் பெற்ற டாக்டர்களின் தொழிலை ஒழுங்குபடுத்த, ‘சென்னை மெடிக்கல் ரெஜிஸ்ட்ரே­ன்’(Madras Medical Registration) சட்டத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற உறுதுணையாக இருந்தார்.

டாக்டர் டி.எம். நாயரும், சர்.பி. தியாகராயரும் காங்கிரசுக் கட்சியில் இருக்கும் போதே, பார்ப்பனரல்லதா பெருங்குடி மக்களுக்கான உரிமை வாழ்வு, வாழ்க்கை வசதி வாய்ப்புகள் ஆகியவற்றிற்காகப் பாடுபடுவதில் மிகுந்த நாட்டங் கொண்டிருந்தனர். 

அவ்விருவரின் மனப் போக்குகளை நன்கு அறிந்திருந்த டாக்டர் சி. நடேசனார், அவ்விருவரையும் அணுகித் தாம் நிறுவிய திராவிடர் சங்கத்தின் நோக்கம், கொள்கை, திட்டம் ஆகியவை பற்றி எடுத்துரைத்தார். 

அவ்விருவரும் அவற்றில் மனம் ஒன்றிப் போய், அவற்றிற்கு ஆதரவு அளிக்க முன் வந்தனர். அவர்கள் இருவரும் காங்கிரசுக் கட்சியை விட்டு விலகி வந்து ‘தென் இந்திய(ர்) நலவுரிமைச் சங்கம்’ என்னும் ‘நீதிக் கட்சி’யைத் தோற்றுவிக்கும்படிச் செய்ய டாக்டர் சி. நடேசனார் முழு முதற் காரணமாக அமைந்தார்.

1916 நவம்பர் திங்களில் ‘தென் இந்திய(ர்) நலவுரிமைச் சங்கம்’ என்னும் ‘நீதிக் கட்சி’ அமைந்தவுடன் அதன் வளர்ச்சியை விரிவு படுத்தவும் அதன் செல்வாக்கை வளர்க்கவும் டாக்டர் டி.எம். நாயர், தமது அழுத்தந்திருத்தமான எழுத்தையும், ஆணித்தரமான பேச்சையும் பெரிதும் பயன்படுத்தினார். 

டாக்டர் நாயர் அவர்களைக் காங்கிரசுக்காரர்களும் தன்னாட்சி இயக்கத் தினர்களும் (சுயராஜ்ய கட்சியினர்‡ கவி) கடுமையாக எதிர்த்து வந்தனர். ‘நவசக்தி’ ஆசிரியர் திரு.வி.க. அவர்கள், டாக்டர் நாயரின் கொள்கையையும், போக்கையும் கடுமையாகத் தாக்கி எழுதி வந்தார். 

1917 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்றக் கூட்டமொன்றில், டாக்டர் நாயர் பேசிக் கொண்டிருந்த பொழுது திரு.வி.க. அவர்கள் சில கேள்விகளை எழுப்பினார். டாக்டர் நாயர் அவர்களும் அவற்றிற்குத் தக்க ஆணித்தரமான விடையறுத்தார்.

டாக்டர் நாயர், ‘ஜஸ்டிஸ்’ என்ற ஆங்கில நாளேட்டின் மதிப்புறு பொறுப் பாசிரியராக இருந்து, கருத்து செறிந்த கட்டுரைகள் பலவற்றை வரைந்தார். 1916-க்கும் 1919- க்கும் இடையில் நீதிக்கட்சியின் சார்பாக நடைபெற்ற பல மாநாடுகள் - பொதுக் கூட்டங்கள் - சிறப்புக் கூட்டங்கள் - கருத்தரங்குகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு அழகாகவும் அருமையாகவும் கொள்கை விளக்கம் புரிந்தார். 

அந்தக் காலக் கட்டங்களில் டாக்டர் நாயரின் பேச்சைக் கேட்க ஏராளமான மக்கட் கூட்டம் கூடுவது உண்டு. அவரது வி.பி.ஹால் பேச்சும் ஸ்பர்டாங் ரோடு பேச்சும் வரலாற்றுச் சிறப்புப் பெற்றவைகளாகும். 

இந்தியாவிற்கு எப்படிப்பட்ட அரசியல் சீர்திருத்தம் வழங்க வேண்டும் என்பது பற்றி ஆராய 1917 டிசம்பரில் மாண்டேகு - செம்ஸ்போர்டு சென்னைக்கு வருகை தந்த போது நீதிக்கட்சியின் சார்பாக அவர்களிடம் சாட்சியம் சொல்ல சர். பி.தியாகராயர் அவர்களின் தலைமையில் அமைந்த குழுவில் டாக்டர் டி.எம்.நாயர் முக்கியமானதொரு பங்கு பெற்றிருந்தார். குழுவிடம் வாதங்களை அடுக்கடுக்காக எடுத்துவைத்தார்.

சென்னை மாகாணத்திலுள்ள பார்ப்பனரல்லாதார்க்குத் தனி வாக்குரிமை யுடன் கூடிய அரசியல் சீர்திருத்தம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, டாக்டர் நாயர் 1919 சனவரி 9 ஆம் நாளன்று சென்னை அரசுக்கு நீண்ட விளக்கமாக கடிதம் ஒன்றினை எழுதினார்.

நீதிக்கட்சியின் புதிய அரசியல் சீர்திருத்தம் பற்றிய கொள்கைக்கு இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக டாக்டர் டி.எம். நாயர் 1918 ஆம் ஆண்டில் இலண்டன் போய்ச் சேர்ந்தார். அங்குப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய பல கூட்டங்களில் அவர் பேசியதோடு, ஆங்கில நாளேடுகளில் கட்டுரைகள் பலவற்றை எழுதி வெளி யிட்டார். அவரது முயற்சிகள் ஓரளவுக்குப் பயன் அளித்தன. அவர் சென்னைக் குத் திரும்பி வந்தபோது அவருக்கு மாபெரும் வரவேற்பு கொடுக்கப்பட்டுப் பாராட்டும் வழங்கப்பட்டது.

டாக்டர் நாயர் மீண்டும் 1919 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் பாராளுமன்றக் கூட்டுக் குழுவினைக் கண்டு சாட்சியம் சொல்லுவதாக இருந்தது. அதற்குள் அவரது உடல் நலங்குன்றிப் போகவே அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர் டி.எம். நாயர் 1919 சூலை 17 ஆம் நாள் உடல் நலம் தேறாமல் 51 வயதில் இயற்கை எய்தினார்.

நீதிக்கட்சியின் சார்பாகச் சாட்சியம் சொல்ல சர். ஏ. இராமசாமி முதலியார் தலைமையில் இங்கிலாந்துக்குச் சென்றிருந்த குழுவினர், டாக்டர் நாயரின் மறைவு காரணமாக ஆற்றொணாத் துக்கத்திலும் துயரத்திலும் மூழ்கினர். 

டாக்டர் நாயரின் மறைவுச் செய்தி கேட்டுச் சென்னை மாகாண நீதிக்கட்சித் தலைவர்களும் பார்ப்பனரல்லா பெரு மக்களும் பெரும் துயரம் அடைந்தனர். சர். பி. தியாகராயர் பெருந்துக்கத்தில் ஆழ்ந்தார். அதிலிருந்து அவரால் நீண்ட காலம் மீள முடியவில்லை.

Friday, August 27, 2021

கொளத்தூர் மணி அவர்களின் விடை

 சேலம் தமிழ் சங்கம் சார்பில் பெரியார் அவர்களால் தேவநேயப் பாவாணருக்கு திராவிட மொழி நூல் ஞாயிறு என்ற பட்டம் வழங்கப்பட்டது.

 இந்த படத்தில் வலது பக்கம் அமர்ந்து இருப்பவர் பாரதிதாசன் போலவே இருக்கிறார். 

அவர் பாரதி தாசனா என்று அண்ணன் கொளத்தூர் மணி அவர்களிடம் கேட்டிருந்தேன். அதற்கு அண்ணன் வாட்ஸ் அப்பில் விடையை பதிவிட்டிருந்தார்.... 

நான் அதை படித்து முடிப்பதற்குள்ளாகவே கைப்பேசியில் அழைத்தும் பேசினார்.... 

அவர் அனுப்பிய குறுஞ்செய்தி விடை...

இல்லை. இரத்தினம் பிள்ளை எனும் சேலம் பிரமுகர். நீதிக் கட்சிக்காரர்.  இவர் சேலம் கல்லூரிக்கு ஒரு கட்டிடம் கட்டிக் கொடுத்தார். Rathinam Buildings எனும் பெயர்.

கட்டிடத்தின் திறப்பு விழாவின் போது தான் ஒரு சொத்து பொதுவாக்கப்பட்டால் அவரின் பெயர்  நிலைத்து நிற்கும் என்று பெரியார் பேசினார்.


 பாவாணர் அல்லாமல் நின்று கொண்டிருப்பவர் பேராசிரியர் தி வை சொக்கப்பா ஆவார். திருவாரூரில் அவர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய போது கலைஞரும் திருவாரூர் தங்கராசுவும் அவருடைய மாணவர்கள்.


 சேலம் கல்லூரியின் வரலாற்றுத்துறைத் தலைவர்.  பேராசிரியர்.


 1971 இல் சேலத்தில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவரும் ஆவார். 


ஊர்வலத்தில் பெரியாரோடு தேரில் அமர்ந்து வந்தவர். தனித்தமிழ் ஆர்வலர். அவர் உலகத் தமிழ்க் கழகத்தின்  ஏட்டுக்கு ஆசிரியராயும் இருந்தார்.

 ஆசிரியர் கி. வீரமணி அவர்களின்

பெரியாரியல் ஆய்வுரை..... 1

மானிடப் பற்று

பெரியாரியல் என்பது ஒரு மனிதனுடைய வாழ்வுக்கு அடிப்படையான கருத்துக்கள், பெரியாரியலினுடைய மய்யக் கருத்து என்ன என்பது - இதில் மிக முக்கியமானது. பெரியார் அவர்களுடைய கருத்துக்களை ஏன் பெரியாரியல் என்று தனியே சொல்கிறோம் என்று சொன்னால்- ‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்று புரட்சிக் கவிஞர் அவர்கள் சொன்னார்கள்.

மண்டைச் சுரப்பு சுரந்து கொண்டே  இருக்கும். எடுக்க எடுக்க வற்றாது. எவ்வளவு அதிகமாக எடுக்கின்றோமோ அவ்வளவு அதிகமாக சுரந்து கொண்டு இருக்கும் என்ற நிலையிலே அந்த அளவுக்கு அய்யா அவர்கள் அவ்வளவு ஆழமாகச் சிந்தித்திருக்கின்றார்கள். பெரியார் ஒரு சுய சிந்தனையாளர்.

 தந்தை பெரியார் அவர்கள் ஓரிடத்தில் சொல்லுகின்றார், எனக்கு 8 வயதிலிருந்தே உலக அனுபவம் உண்டு. நான் ‘மண்டி’யிலே மூட்டைகளுக்கு ‘குறி’ போட்ட காலத்திலிருந்து எனக்கு உலக அனுபவம் உண்டு என்று சொல்கின்றார்.

அய்யா அவர்களுடைய திருமணம் சர்ச்சைக்குள்ளான நேரத்திலே (1949- இல்) அறிக்கை ஒன்றை தந்தை பெரியார் எழுதினார்.

‘இந்த மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. யாராவது இந்த மக்களைக் காட்டி மிரட்டலாம் என்றால் அதெல்லாம் முடியாது. மக்கள் என்பவர்கள் சாதாரணமானவர்கள். அவர்களைத் திருத்துவதற்குத்தான் நான் வந்திருக்கிறேனே தவிர, அவர்களுக்கு வழிகாட்டு வதற்குத்தான் நான் வந்திருக்கிறேனே தவிர, அவர்களை என் வழிக்குக் கொண்டு வரத்தான் நான் இருக்கிறேனே தவிர, அவர்கள் என்ன சொல்கிறார் கள் என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை’ 

என்று அய்யா அவர்கள் சொன்னார்கள். 

இந்தத் துணிச்சல் வேறு யாருக்கும் வராது என்பது மட்டுமல்ல ; இப்படி சொல்ல உண்மையான தகுதி பெற்ற தலைவராக தந்தை பெரியார் அவர்கள் விளங்கினார்கள் என்பதுதான் உண்மையான செய்தி.

ஒரு முறை அய்யா அவர்கள் காரைக்குடியிலே ‘சமதர்ம மாநாட்டிலே’ பேசும் பொழுது மக்களைப் பார்த்து சொன்னார் :

‘எல்லோரும் மக்கள் பின்னாலே போவார்கள். நான் உங்களை எல்லாம் என் பின்னாலே அழைத்துச் செல்ல வேண்டும் என்று இருக்கின்றேன். உங்கள் பின்னாலே நான் வந்துவிடுவேன் என்று தயவு செய்து யாரும் நினைக்காதீர்கள். அப்படி யாராவது இருந்தால் அவர்களுடைய கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏன் உங்கள் பின்னாலே நான் வரமாட்டேன் என்று சொல்கின்றேன்? என் பின்னால்தான் நீங்கள் வர வேண்டும் என்று சொல்கின்றேன் என்று சொன்னால், என்ன காரணம்? நீங்கள் எல்லாம் முட்டாள்கள்’.

இப்படியே சொன்னார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கின்ற கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார்.

‘வேண்டுமானால் ஒருவர், இருவர் என்னுடைய பேச்சைக் கேட்டு சிந்திக்கக் கூடியவராக -அறிவாளியாக ஆகியிருக்கலாம். அது விதிவிலக்கு. அந்த விலக்கை விதியாக ஆக்கிக் கொள்ள நான் தயாராக இல்லை. நான் உங்களை முட்டாள் என்று கோபத்தோடு சொல்லவில்லை. நீங்கள் முட்டாள்களாக இருக்கின்றீர்களே என்ற பரிதாபத்தோடு சொல்லுகின்றேன். முட்டாள்தனத்திலிருந்து இந்த மக்களை விடுவிக்க வேண்டுமே என்ற பொறுப்புணர்ச்சியோடு நான் சொல்லுகின்றேன். உங்களைத் திருத்தி என்னுடைய வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்காகத்தான் நான் வந்திருக்கிறேனே தவிர- உங்கள் பின்னாலே நான் வந்தேன் என்று சொன்னால் - எனக்கிருக்கின்ற கொஞ்ச நஞ்ச அறிவும் போய்விடும். ஆகவே தான் நான் அதைப்பற்றி எல்லாம் சிந்திக்காதவன்’ 

என்றார். 

காரைக்குடி - அய்யா அவர்களுடைய உயிருக்கே ஆபத்து எனும் அளவுக்கு எதிர்ப்பு நிறைந்த ஊர். 

அங்கேதான் அய்யா அவர்கள் அப்படிப் பேசினார்கள்.

(பெரியாரியல் பாகம் - 1)

நீதிக்கட்சியை வளர்த்த அரும்பெருந் த் தலைவர்கள் - 2

 நீதிக்கட்சியை வளர்த்த அரும்பெருந் த் தலைவர்கள் - 2

- நாவலர் நெடுஞ்செழியன்

சர். பி. தியாகராயர் (1852-1925)

திராவிட இயக்கத்தின் முன்னோடித் தந்தை என்று போற்றப்படும் சர். பி. தியாகராயர் 1852 ஏப்ரல் 27 ஆம் நாளன்று சென்னைக் கொருக்குப் பேட்டையில் பிறந்தார். சர்.பி. தியாகராயர் அவர்களின் குடும்பம் சென்னை யில் வாணிகத் தொழில் புரிந்த செல்வாக்கு மிகுந்த ஒரு பணக்காரக் குடும்பமாகும். அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டத்தாரியாகத் தேர்வு பெற்றுத் திகழ்ந்தார்.

எப்பொழுதும் தூய வெண்ணிறமான நீண்ட கோட்டு- தார்ப்பாச்சிக் கட்டிய வெள்ளை வேட்டி -எடுப்பான வெண்ணிறத் தலைப்பாகை ஆகியவற்றுடனே காணப்பட்டதால் அவர் எல்லோராலும் ‘வெள்ளுடை வேந்தர்’ என்றே சிறப்பாகவும் பெருமையாகவும் அழைக்கப்பட்டார்.

அவர் தமது முப்பதாவது வயதிலேயே அதாவது 1882 ஆம் ஆண்டிலேயே ‘சென்னை உள்நாட்டினர் சங்கம்’ (Madras Native Association) என்ற பெயரில் அமைப்பு ஒன்றினை ஏற்படுத்தி, அரசியல் பணியாற்றத் தொடங்கினார். இந்தச் சங்கம் பிற்காலத்தில் ‘சென்னை மகாஜன சபை’ என்று பெயர் பெற்றது.

டாக்டர் சி. நடேசனார் வகுத்துத் தந்த பார்ப்பனரல்லாதார் நலம் கருதும் கொள்கை, குறிக்கோள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு டாக்டர் டி.எம். நாயர் அவர்களைத் துணையாக ஏற்றுச் சர். பி.தியாகராயர், 1916 நவம்பர் 20 ஆம் நாள் ‘தென்னிந்திய (ர்) நலவுரிமைச் சங்கம்’(South Indian Liberal Federation என்பதன் மொழியாக்கம் ‘தென்னிந்தியர் நல உரிமை சங்கம்’ -கவி) என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். அந்த சங்கம் ‘நீதி’ (Jusitice)  என்று பொருள்படும் ஆங்கிலப் பெயரில் நாளேடு நடத்தி வந்ததன் காரணமாக, அது ‘நீதிக்கட்சி’ (Justice Party) என்று நாளடைவில் பெயர் பெறலாயிற்று. 

சர். பி.தியாகராயர் அவர்கள் 1916 டிசம்பர் வாக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘கொள்கை விளக்க அறிக்கை’ (Manifesto) ஒன்றினை வெளியிட்டார்.

அவர் சென்னை மாநகர மன்றத்தில் 40 ஆண்டுகாலம் உறுப்பினராகப் பணியாற்றியதோடு மாநகராட்சியின் தலைவராகச் சில ஆண்டுகள் பணிபுரிந்து பெயரோடும் புகழோடும் விளங்கினார். அவர் பச்சையப்பன் அறக் கட்டளையின் அறங்காவலராக இருந்து நீண்ட காலம் அரும்பணிகள் பல ஆற்றினார்.

தியாகராயரின் தொண்டுகளைப் பெரிதும் பாராட்டிய ஆங்கிலேய அரசு அவருக்கு 1909 ஆம் ஆண்டில் ‘இராவ் பகதூர்’ என்ற பட்டத்தையும் 1920 ஆம் ஆண்டில் ‘சர்’ பட்டத்தையும் வழங்கி அவரை மகிழ்வித்தது. சர். பி. தியாகராயர் அவர்களின் விடாமுயற்சியாலும் பேரூக்கத்தாலும் வளர்ச்சியுற்ற நீதிக்கட்சி மக்களின் நம்பிக்கையையும் நன் மதிப்பையும் பெற்று 1921 பொதுத் தேர்தலில் சிறப்பான முறையில் வெற்றி பெற்றுச் சென்னை மாகாண ஆட்சியைக் கைப்பற்றியது. 

மேதகு ஆளுநர் அப்பொழுது  நீதிக்கட்சியின் தலைவராக விளங்கிய சர். பி.தியாகராயரை அழைத்து மாகாண ஆட்சியை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார். சர்.பி.தியாகராயர், தாம் பதவி ஏற்கும் நோக்கத்தைக் கொள்ளாமல் மிக்க பெருந்தன்மையோடு கடலூர் வழக்கறிஞர் திவான் பகதூர் சுப்பராயலு ரெட்டியார் அவர்களை முதலமைச்சர் பொறுப்பை ஏற்குமாறு செய்தார்.

வெள்ளுடை வேந்தர் சர். பி. தியாகராயர் அவர்கள் 1925 ஏப்ரல் 28 ஆம் நாள் அன்று தமது 73 வயதில் இயற்கை எய்தினார். 

அவரது மறைவு திராவிட இயக்கத்தவரிடையே பேரதிர்ச்சியையும் பெருந்துக்கத்தையும் துயரத்தையும் உண்டாக்கியது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவரது தொண்டு களை மிகவாகப் பாராட்டி ‘இந்து’ ஆங்கில நாளேடும் ‘நவசக்தி’ தமிழ்க் கிழமை ஏடும் தலையங்கங்கள் தீட்டி இருந்தன. 

அவர் 1882 முதல் 1923 வரை சென்னை நகராட்சி உறுப்பினராகவும் 1920 முதல் 1923 வரைஅதன் தலைவராகவும் 1919 முதல் 1925 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் பணியாற்றினார். 

நீதிக் கட்சியின் நிறுவனரான சர்.பி. தியாகராயர் அவர்கள் திராவிட இயக்கத்தின் நினைவு அடையாளமாக என்றென்றும் நிலைத்து நிற்கும் பெற்றி வாய்த்தவர் என்று சொன்னால் அது மிகையாகக் கூறுவது ஆகாது.

Thursday, August 26, 2021

நீதிக்கட்சியை வளர்த்த அரும்பெருந் தலைவர்கள் - 1

 நீதிக்கட்சியை வளர்த்த அரும்பெருந் தலைவர்கள்-1

- டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன்


தென்னகத்தில், அறியாமையலும், ஏழ்மையிலும், இல்லாமையிலும் முழ்கி, வாழ்க்கை வசதிகளும் வாய்ப்புகளும் அற்றுக்கிடந்த பார்ப்பனர் அல்லாத மக்களாகிய திராவிடப் பெருங்குடி மக்களைத் தட்டி எழுப்பி, அவர்களுக்கு விளக்கங்கள் தந்து விழிப்புணர்ச்சி ஊட்டி, வழிகாட்டி, அவர்களை நெறிப்படுத்த உயர்நிலைக்குக் கொண்டுவரக் காரணமாக இருந்த, நீதிக்கட்சி என்ற அந்த மாளிகைக்குத் தூண்களாகவும் அந்த ஆலமரத்திற்கு ஆணி வேராகவும், விழுதுகளாகவும் இருந்து பாடுபட்ட பலரில், மிக முக்கியமான ஒரு சிலரையும் மட்டுமாவது சுருக்கமாக, இக்கால இளைய சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்துவது, ஈண்டுப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

டாக்டர் சி. நடேசனார் (1875-1937)

தென்னாட்டில் திராவிட இயக்கம் என்னும் அரசியல் கட்சி, அமைப்பு அளவில் வித்தினை ஊன்றி, அது வேர் கொள்ளவும் இலை விடவும் செய்த பெருமை டாக்டர் சி. நடேசனார் அவர்களையே சாரும். தமிழ்- தெலுங்கு- கன்னடம்- மலையாளம் ஆகியவற்றை இணைத்து ஒரே சொல்லாகக் கூறக் கூடிய ‘திராவிட’ என்ற சொல்லை, ஒரு இயக்கத்திற்கு அமைப்பு அளவில்  பயன்படுத்திக் காட்டியவர் டாக்டர் சி. நடேசனாரே ஆவார்.

 ( ‘பார்ப்பனர் அல்லாதார்’ என்ற எதிர்மறை பெயருக்குப் பதிலாகத்தான் ‘திராவிடர்’ என்ற சொல்லை நடேசனார் பயன்படுத்தியுள்ளார். ஆனால் நாவலர் அவர்கள் 'இடம்' குறித்த சொல்லாக நடேசனார் பயன்படுத்தினார் என்று கூறுகிறார். நாவலர் தி.மு.க.வை சார்ந்தும் அ.தி.மு.க.வை சார்ந்தும் இருந்ததால் அப்படி புரிந்து கொண்டிருக்கக் கூடும் - கவி).

டாக்டர் சி. நடேசனார் 1875 ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணியில் பிறந்தார். அவர் அந்தக் காலத்தில், மருத்துவத் துறையில் உயர்பட்டமாக விளங்கிய எம்.பி.சி.எம். என்ற பட்டத்தைப் பெற்று, மருத்துவராகப் பணி யாற்றியவர். அவர் சென்னைத் திருவல்லிக்கேணி பகுதியில் வாழ்ந்து மிகச் சிறந்த மருத்துவர் என்ற பெயரும் புகழும் பெற்றவர். அவர் திராவிடப் பெருங்குடி மக்களின் நலன் கருதி 1912 ஆம் ஆண்டில் ‘சென்னைத் திராவிடர் சங்கம்’ (Dravidian Association of Madras)  என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினார்.

சென்னைத் திராவிடர் சங்கத்தின் சார்பாக 1912 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் அமைக்கப்பெற்ற பாராளுமன்ற கூட்டுப் பொறுப்புக் குழுவிடம் திராவிடர் நிலையைப் பற்றி எடுத்துச் சொல்ல டாக்டர் சி. நடேசனார் முயற்சியால் சர். கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள் ஒரு பிரதிநிதியாக அனுப்பிவைக்கப்பட்டார்.

டாக்டர் சி. நடேசனார் திராவிடர் ஏழை எளிய மாணவர்க்குப் பயன்படும் வகையில் ‘திராவிடர் இல்லம்’ என்ற பெயரில் மாணவர் விடுதி ஒன்றினை உருவாக்கினார். திராவிடரின் உரிமை நல்வாழ்வுக்காக, டாக்டர் சி. நடேசனார் பரப்பி வந்த கொள்கைளும், கோட்பாடுகளும், திட்டங்களும் புதியதொரு அரசியல் அமைப்பைக் காண, சர். பி. தியாகராயர் அவர்களுக்கும் டாக்டர் டி.எம்.நாயர் அவர்களுக்கும் உறுதுணையாகவும் அடிப்படைகளாகவும் அமைந்தன என்று கூறினால் அது மிகையாகாது. டாக்டர் சி. நடேசனார் இல்லை என்றால், தென் இந்திய  (தென் இந்தியர் -கவி) நலவுரிமைச் சங்கம் என்னும் திராவிட (ர்) இயக்கம் ஏற்பட்டிருக்கவே முடியாது.

‘தென் இந்திய (ர்) நலவுரிமைச் சங்கம்’ வளரவும், பரவவும், செல்வாக்குப் பெறவும், சிறந்து விளங்கவும் டாக்டர் சி. நடேசனார் ஆற்றிய அரும்பெருந் தொண்டுகள் அளப்பரியனவாகும்.

நீதிக்கட்சியின் மூளையாக சர்.பி. தியாகராயரும், அதன் வாயாக டாக்டர் டி.எம். நாயரும், அதன் கைகளாக சர். ஏ. இராமசாமி முதலியாரும், அதன் உடலாகப் பனகல் அரசரும் விளங்கினார்கள் என்றால், டாக்டர் சி. நடேசனார் அவர்கள் அதன் இதயமாகத் திகழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

டாக்டர் சி. நடேசனார் 1920, 1923, 1926, 1931 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்தில் அவர் எப்பொழுதும் நீதிக்கட்சியின் கொள்கைகளுக்காகவும் குறிக்கோள்களுக்காக வும் மட்டுமே பெரிதும் வாதாடி வெற்றிப் பெற்று வந்தார். சட்டமன்ற உறுப்பினரைப் போலவே அவர் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராக மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு அரிய தொண்டுகள் பல ஆற்றினார். 

அவர் பல தொழிற் சங்கங்களில் ஈடுபாடு கொண்டு தொழிலாளர்களின் நலன்களுக்காகப் பெரும் பாடுபட்டார். டாக்டர் சி. நடேசனார் 1937 பிப்ரவரி 18 ஆம் நாள் இயற்கை எய்தினார். 

அவர் ஆற்றிய அரும்பெருந் தொண்டுகளைத் திராவிட இயக்கம் மறத்தற்கியலாது.

Thursday, August 19, 2021

பூம்புகார் சிலப்பதிகாரக் கலைக்கூடம் - கலைஞர்

 'பூம்புகார் சிலப்பதிகாரக் கலைக்கூடம்' பற்றி 

கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தனது 'நெஞ்சுக்குநீதி' இரண்டாம் பாகத்தில் 408-410 பக்கங்களில் எழுதியிருப்பதாவது....

பொதுவாக, ஆறு, கடலுடன் கலக்கும் முகத்துவாரத்திற்குப் புகார் என்பது பெயர். அதன்படி, காவிரி ஆறு கடலுடன் கலக்கும் இடமும் புகார் என்றே வழங்கப்பெற்றது. பின்னர், இந்தப் புகார், பொலிவின் காரணமாகவும், சிறப்பின் காரணமாகவும் பூம்புகார் என்று அழைக்கப் பட்டது.

பிற்காலத்தில் பூம்புகார் என்னும் பெயர் மாறி, காவிரி புகும் பட்டிணம் என்றாகி, அதுவும் நாளடைவில் காவிரிப் பூம்பட்டிணம் என்று பல வாறாக வழங்கப்பெறலாயிற்று.

கழக அரசு பழந்தமிழ்ப் பெயர்களையும், போற்றத் தக்க பழந் தமிழ்ப் பண்பாட்டையும் விடாமல் வலியுறுத்தி வந்ததால், மீண்டும் பூம்புகார் மலர்ந்து, தமிழர்  மனத்தில் மகிழ்ச்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்தத்திட்டமிட்டது.

காவிரிப்பூம்பட்டினம் முப்பெரும் பிரிவுகளாக விளங்கியது.

காவிரிப்பூம்பட்டினத்தில் கடற்கரையோரமாக அமைந்த பகுதி மருவூர்ப்பாக்கம்; நகரமாக அமைந்த பகுதி பட்டினப்பாக்கம். இவ்விரு பாக்கங்களும் இடையே அமைந்த பகுதி நாளங்காடி.

முத்துப் பந்தரும், தோரண வாயிலும் பொன்னும் மணியும் இழைத்த அரிய வேலைப்பாடுகள் உடையவை. கரிகாலன் இவற்றை யயல்லாம் காவிரிப் பூம்பட்டினத்திற்குக் கொண்டுவந்து, ஒன்று சேர்த்துக் கண்கவரும் கொலுமண்டபம் ஒன்றை அமைத்தான். இந்த மண்டபம் புலவர்கள் பாடும் சிறப்பைப் பெற்றது. இதற்கு பட்டிமண்டபம் என்று பெயர்.

பட்டினப்பாக்கத்தில் ஐவகை மன்றங்கள் இருந்தன. அவை, வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம், பூதச் சதுக்கம், பாவை மன்றம் எனும் பெயர் பெற்றிருந்தன.

இவைகள் எல்லாம் அமையப் பெற்ற பூம்புகார் காலத்தின் கோலத்தால் - கடற்கோளுக்கு இரையாகி, மறைந்த நகரங்களில் ஒன்றாகிவிட்டது. அப்படி மறைந்த நகரங்களை மீண்டும் அதே வனப்புடன் காண வேண்டும்‡ கண்ணகி வாழ்ந்த ஊரில் அவளுக்கு நிலையான நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்று நான் பெரிதும் விரும்பினேன். 

சிலப்பதிகாரக் காட்சிகளைச் சிற்பங்களாக வடித்து, அவற்றை ஒரு மண்டபத்திலே அமைத்து, சிலப்பதிகாரக் கதையை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைக்க வேண்டும் என்றும், அதற்காக சிலப்பதிகாரக் கலைக்கூடம் ஒன்றை நிறுவ வேண்டும் என்று திட்டமிட்டேன். அந்தக் கலைக்கூடம் அமைந்துள்ள கட்டடம் எழுநிலை மாடம் என பெயர் பெற்றது. 

சிலப்பதிகாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகளின் அடிப்படையில்தான் இந்தக் கட்டடம் உருவாக்கப் பெற்றிருக்கிறது. நான்கரை லட்ச ரூபாய் செலவில் இந்தக்கலைக்கூடம் அமைக்கப் பட்டது. இதனை 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 17 ஆம் தேதி, அதாவது இந்திர விழா நடந்த சித்திரைப் பெளர்ணமித் திருநாளில் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 

இந்தக் கலைக்கூடத்தில் கண்ணகியின் கதையை விளக்கும் 48 சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இப்படி சிற்பத்தில் ஒரு காப்பிய கதையை வடித்த முதல் கலைக்கூடம் இதுதான்! அதைத் தவிர ஒரே கல்லில் எட்டு அடி உயரம் உள்ள மூன்றரை டன் எடையுள்ள மாதவி சிலை ஒன்றும் அற்புதமாக வடிக்கப்பட்டு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிலைகள் யாவும் மாமல்லப் புரத்திலுள்ள அரசினர் சிற்பக் கலைப் பயிற்சி நிலையத்தில் கணபதி ஸ்தபதி அவர்கள் மேற்பார்வை யில் செய்யப்பட்டதாகும்.

கலைக் கூடம் ஏழு மாடங்கள் கொண்டதாகும். முதல் மாடம் 12 அடி உயரமும், அதன் மேலுள்ள ஒவ்வொரு மாடமும் ஐந்து அடி உயரமும், ஏழாவது மாடத்துக்கு மேலுள்ள கலசப் பகுதி எட்டு அடி உயரமும் கொண்டு மொத்த உயரமும் ஐம்பது அடிக்கு உள்ளதாகும்.

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அறிஞர் அண்ணா பெயரில் விருந்தினர் மாளிகை ஒன்றும் அங்கே அமைக்கப்பட்டது. முத்துச் சிப்பிகள் வடிவிலும், நத்தைகள் வடிவிலும் தங்கும் விடுதிகள் அமைக்கும் பணியும் தொடர்ந்தது.

சென்னையில் உலகத் தமிழ் மாநாடு எந்த அளவிற்கு விழாக் கோலம் கொண்டு நடைபெற்றதோ, அதைப் போலவே ஐந்து இலட்சம் மக்கள் ஊர்வலத்திலும், இரண்டு நாள் விழாவிலே பத்து இலட்சம் மக்களும் கலந்து கொண்டு நடைபெற்றது.

விழாவின் முதல் நிகழ்ச்சியாக பிரம்மாண்டமான ஊர்வலம் ஏப்ரல் திங்கள் 17 ஆம் தேதி காலையில் நடைபெற்றது. ஊர்வலத்தில் 24 அலங்கார வண்டிகள் இடம் பெற்றன.

பிற்பகலில் அங்கே அமைக்கப்பட்டிருந்த முத்துப் பந்தரில் தமிழர் வரலாற்றுக் கருத்தரங்கம் நடைபெற்றது. அதற்கு கி.வா.ஜகந்நாதன் தலைமை வகித்தார். அதில் புலவர் கோவிந்தராசன், நாகசாமி, கவிஞர் சுரதா, செளந்திரராசன், நான் அண்ணன் என அருமையாக அழைத்திட்ட பக்கர் எம்.எல்.சி., செ. கந்தப்பன், இராம. அரங் கண்ணல், சா. கணேசன், ராஜாராம் நாயுடு, புதுவை முதல்வர் பருக் மரைக்காயர் ஆகியோர் உரையாற்றினர்.

அடுத்து கல்வி அமைச்சர் நாவலர் தலைமையில் சிலப்பதிகாரக் கலைக் கூடத்தை நான் திறந்து வைத்தேன். அதன்பின் பூம்புகார் கடற்கரை நிலா முற்றத்தில் நாவலர் தலைமையில் சிறப்பு சொற் பொழிவு நடைபெற்றது. அதில் தவத்திரு அடிகளார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பேராசிரியர் (அன்பழகன்) ஆகியோர் உரையாற்றிய பின் நான் உரையாற்றினேன்.

இரவு கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்ட சிலப்பதிகார நாட்டியம் திருமதி கமலா குழுவினரால் நடத்தப்பட்டது. அதன்பின் நான் எழுதிய சிலப்பதிகார நாடகத்தை கரிகாலன் நாடக மன்றத்தினர் நடத்தினர்.

வெளிநாட்டுப் பயணிகளை கவரத்தக்க வகையில், இத்தகைய ஏற்பாடுகளை செய்ததோடு நின்றுவிடாமல், கலைக் கூடத் திறப்பு விழாவின் போது நான் கூறினேன், ‘இந்த இடத்தில் அழகிய கட்டிடங்கள், எழிலான மாடங்களை அமைப்பது மாத்திரம் தான் கழக அரசின் திட்டமல்ல ; இப்பகுதியில் வாழும் ஏழை எளிய மீனவர் களுக்காக தமிழக அரசு இப்போது தீட்டியிருக்கின்ற ஒரு திட்டத்தை இங்கே நான் வெளியிடுவது நலம் என்று கருதுகின்றேன். 

இந்தப் பூம்புகார் கடற்கரை ஓரத்தில் கிட்டத்தட்ட எழுநூறு மீனவர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் 400 பேர் கட்டு மரத்தை வைத்துக் கொண்டு தொழில் நடத்துபவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் எங்கள் கண்ணீரைத் தீர்க்க நீங்கள் எண்ண மாட்டீர்களா என்று அவர்கள் நினைப்பதற்கு முன் அதைச் செய்துமுடிக்க வேண்டும் என்று கருதும் இந்த அரசு வீட்டு வசதித் துறை வாயிலாக வும் சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரியம் தரும் அனுபவத் தின் அடிப்படையிலும் இங்குள்ள மீனவ மக்களுக்கெல்லாம் விரை வில் அவர்களது குடிசைகளை மாற்றி நல்ல வீடுகள் கட்டித் தரப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியதோடு நின்று விடாமல் நாற்பது இலட்ச ரூபாய் நிதியினை அந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்து அவர்களுக்கு வீடு கட்டித் தந்ததோடு, மீனவர்களுக்கு படகுகளும், நைலான் வலைகளும் வழங்குவதற்கும் ஏற்பாடுகளைச் செய்தேன்.

ஏப்ரல் 18 ஆம் நாள் பூம்புகாரின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலையில் ‘சிலப்பதிகாரத்தில் பெரும் சிறப்புடையது புகார் காண்டமா? மதுரைக் காண்டமா? வஞ்சிக் காண்டமா?’ எனுந் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டி மன்றத்துக்கு மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரான டாக்டர் மு.வ. அவர்கள் நடுவராக இருந்தார். புகார் காண்டமே சிறப்புடையது எனும் தலைப்பில் அவ்வை நடராசன், அறிவுடை நம்பி, கோவை இளஞ்சேரன் ஆகியோரும், மதுரைக் காண்டமே சிறப்புடையத எனும் தலைப்பில் சிலம்பொலி செல்லப்பன், மா.கி.தசரதன், புலவர் பொன்னி வளவன் ஆகியோரும், வஞ்சிக் காண்டமே சிறப்புடையது எனும் தலைப்பில் கா.வேழவேந்தன், புலவர் நன்னன், பேராசிரியர் காந்திமதி நாதன் ஆகியோரும் வாதிட்டனர்.

மாலையில் சிலப்பதிகாரத்தில் பாத்திரப் படைப்பு குறித்து கவியரங்கம் உவமைக் கவிஞர் சுரதா தலைமையில் நடைபெற்றது. பாண்டியனைப் பற்றி கவிஞர் சிக்கந்தரும், செங்குட்டுவனைப் பற்றி கவிஞர் தி.கு.நடராசனும், கண்ணகி பற்றி கவிஞர் முருகு சுந்தரமும், கவுந்தி அடிகள் பற்றி கவிஞர் கொத்தமங்கலம் சுப்புவும், மாதவி பற்றி கவிஞர் ஈரோடு தமிழன்பனும், கோவலன் பற்றி சுகி சிவமும் கவி பாடினர்.

தொடர்ந்து பூம்புகார் நிலா முற்றத்தில் இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமன் அவர்களின் இன்னிசை நடைபெற்றது.

இறுதியாக நான் அனைவருக்கும் நன்றி தெரிவித்து விழா நிறைவுரை ஆற்றினேன். அப்போது ஆண்டுதோறும் பூம்புகார் விழா நடைபெறும் என்று அறிவித்தேன்.

பதிவு: கந்தசாமி விநாயகம்

Saturday, August 7, 2021

பேரா.தி.வ. மெய்கண்டாருடன் ஓர் உரையாடல்

 பேராசிரியர் தி.வ. மெய்கண்டாருடன் ஒரு தொலைபேசி உரையாடல்.....


7.8.2021 காலை 8.40


அய்யா அவர்கள் நடத்தி வந்த 'இளந்தமிழன்' இதழிலிருந்து சில கட்டுரைகளைத் தொகுத்து 620 பக்கங்களில் ஒரு நூலாக்கி அவருடைய பார்வைக்கு அனுப்பி வைத்தேன். எந்த ஒரு மறுமொழியும் இல்லை. தொலைபேசியிலும் பலமுறை தொடர்பு கொண்டேன். அவர் தொலைபேசி அழைப்பையும் ஏற்கவில்லை. ஒரே கவலையாக இருந்தேன். இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. 

இன்று காலை சாப்பிடுவதற்காக எழுந்த போது கைப்பேசி ஒலித்தது. மெய்கண்டார் அழைத்தார். ஒரே மகிழ்ச்சி.....

'அய்யா வணக்கம்' என்றேன் நான்.

'நான் மெய்கண்டார் பேசுகிறேன்' என்றார்.

'நல்லா யிருக்கீங்களா அய்யா ?' என்று கேட்டேன்.

'நல்லா இல்லை' என்றார்.

'துணைவியாரை அருகில் இருந்து பார்த்து கொள்ள வேண்டியதா யிருக்கிறது. எனக்கு வயது 83 முடிந்து 84 ஆகிறது' என்றார். 

'உங்கள் மகன் என்ன படிக்கிறார். உங்கள் துணைவியார் நலமாக இருக்கிறாரா' என்று அக்கறையுடன் கேட்டார்.

'நான் மேல் மாடியில் இருக்கிறேன். உங்கள் புத்தகம் இப்பொழுதுதான் எனக்கு கிடைத்தது. அவர்களிடமிருந்து வாங்குவது பெரும்பாடாயிருக்கிறது' என்றார்.

நான், 'அய்யா நான் தனியார் கூரியரில்தான் அனுப்பினேன். அவர்கள் உங்களிடம் கொடுக்கவில்லையா' என்றேன்.

அவர்கள் கீழே கொடுத்துவிட்டு போய்விட்டார்கள். என்னிடம் வந்து உடனடியாக சேரவில்லை என்று கவலைப்பட்டார்.

'ஏற்கனவே இளந்தமிழன் ஒரு வால்யூம் என் கைக்கு கிடைக்காமல் போய்விட்டது' என்று வேதனைப்பட்டார். 

'நீங்கள் அனுப்பிய நூலை பார்த்தேன். நிறைய  செய்திருக்கிறீர்கள். நீங்கள் டைப் செய்வீர்களா?' என்று கேட்டார்.

நான் 'மருத்துவர்' மாத இதழில் பணிபுரிந்த போது தங்களுக்கு 'இளந்தமிழன்' இதழுக்கு டைப் செய்து கொடுத்திருக்கிறேன் அய்யா என்றேன். (இது 25 ஆண்டுகள் ஆயிற்று).... 

'ஆமாமாம். நாம் அங்குதான் சந்தித்துக் கொண்டோம்' என்று நினைவு படுத்திக் கொண்டார்.

'அய்யா, அய்யாவும் அண்ணாவும் இரட்டைக் குழாய் துப்பாக்கிகள்' என்ற நூலை தட்டச்சு செய்யத் தொடங்கினேன். பின்பு சாமி சிதம்பரனார் பற்றி எழுதிய நூலை தட்டச்சு செய்யத் தொடங்கினேன். பின்பு இளந்தமிழன் இதழிலிருந்து சில கட்டுரைகளை தட்டச்சு செய்ய தொடங்கினேன். 620 பக்கங்கள் ஆகிவிட்டது'.

'ஏற்கனவே இன்னொரு 100 பக்கங்கள் தட்டச்சு செய்து வைத்திருக்கி றேன். கணிணி நிறுவனத்தில் அந்த எழுத்துருக்கள் இல்லாததால் அச்சு எடுக்க முடியவில்லை' என்றேன்.

'இன்னும் நிறைய அபூவர்வமான கட்டுரைகள் இருக்கின்றன. நூறு ஆண்டுகளுக்கு முந்திய செய்திகள் உள்ளன. அவ்வளவும் உண்மை செய்திகள். எல்லாவற்றையும் செய்ய வேண்டும்' என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

நீங்கள் 'பேராசிரியர் தி.வ. மெய்கண்டாரின் எழுத்துகள்' என்று நூலுக்கு தலைப்பிட்டிருக்கிறீர்கள். அதை 'தி.வ.மெய்கண்டார் வெளியிட்ட இளந் தமிழன் இதழிலிருந்து ...' என்று தலைப்பிட வேண்டும் என்றார்.

'என் குடும்பம், பாரம்பரியம் பற்றிய எழுத வேண்டும். அதற்கு 5 ஆண்டுகள் ஆகும்' என்றார்.

'உங்கள் அப்பா பற்றி சிந்தாரிப்பேட்டையில் ஒருவர் எழுதிய கடிதத்தில் உள்ள குறிப்புகளைப் படித்தேன்' என்றேன்.

'ஆமாம். என் பெயரை வைத்து என்னை அடையாளம் கண்டுக் கொண்டார். நான் அவரை சந்திக்க விரும்பினேன். அவர் திடீரென்று மறைந்துவிட்டார்' என்றார் அய்யா மெய்கண்டார்.

'சபாநாயகர் க.இராசாராம் அவர்களிடம் உங்களுக்கு இருந்த நெருக்கம் பற்றி நீங்கள் எழுதிய ஒரு கட்டுரையில் படித்தேன் அய்யா' என்றேன்.

'ஆமாம். இராசாராம் அப்பாவுடன் நல்ல பழக்கம். அதுமட்டுமல்ல, நாமக்கல் கவிஞருடன் நல்ல பழக்கம். பல தமிழறிஞர்களுடன் பழகி இருக்கிறேன். அவற்றை யெல்லாம் வெளியில் சொல்லிக்கொள்ள வில்லை' என்றார்.

'நீங்கள் தயார் செய்த புத்தகத்தில் நிறைய சேர்க்க வேண்டும். ஒழுங்க படுத்த வேண்டும்' என்ற தன் ஆவலைத் தெரிவித்தார் அய்யா மெய்கண்டார்.

'அய்யா என்னிடம் ஒரு பலவீனம் இருக்கிறது. என் கண்ணில் கிடைக்கிற இதழ்களிலிருந்து தட்டச்சு செய்வேன் அய்யா' .

'பெரியார் பற்றிய கட்டுரைகள், ம.பொ.சி. குறித்த கட்டுரைகள் என்று சில வற்றை மட்டும் ஒரு வரிசைப்படுத்தினேன்' என்றேன்.

'பெரியாரின் அபூர்வமான கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறேன். பாரத மாதாவின் பாத விந்தாரங்களைப் போற்றி பராவுகின்றேன் என்ற கட்டுரையை வெளியிட்டேன்'. 

'அண்ணாவின் கதைகள் மற்றும் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய செய்திகள் எல்லாவற்றையும் இளந்தமிழனில் வெளியிட்டிருக்கிறேன்' என்றார்.

'ம.பொ.சி.யின் எல்லைப் போராட்டம், தலைநகர் போராட்டம், மாநில சுயாட்சி போராட்டம் என்று பல செய்திகளை வெளியிட்டிருக்கிறேன்' என்றார்.

'அய்யா, அய்யாவும் அண்ணாவும் இரட்டைக் குழாய் துப்பாக்கிகள்' நூலில் குறிப்பிட்டிருக்கிற நீங்கள் எழுதிய புத்தகங்கள் கிடைக்குமா?' என்று கேட்டேன்..

'நூலாக வெளியிடவில்லை. கட்டுரைகளாக இளந்தமிழனில் வெளியிட்டிருக்கிறேன்' என்றார்.

'ஆமாமய்யா... நான்கு அண்ணாவின் கதைகள் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரை படித்தேன்' என்றேன்.

'கடைசியாக எப்போது இளந்தமிழன் வந்தது?' என்று கேட்டேன்.

'நவம்பர் 2019 இதழோடு இளந்தமிழன் வெளியாவது நின்றுவிட்டது' என்றார்.

'அய்யா மயிலாப்பூரில் நீங்கள் இருந்த அலுவலகம் இருக்கிறதா' என்று கேட்டேன்.

'இருக்கிறது. இருக்கிறது. கவிஞர் வானம்பாடி வைத்திருந்த இடம். இப்போது நான் வாடகை கொடுத்து வைத்திருக்கிறேன்' என்றார்.

'இன்னும் செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இப்போது கூட ஒரு நண்பரை பார்க்க செல்ல வேண்டும். உங்கள் மகனும் துணைவியாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் அல்லவா? நான் விசாரித்ததாகச் சொல்லுங்கள்.

பிறகு பேசுவோம் . நன்றி வணக்கம்' என்று கூறி கைப்பேசி இணைப்பை துண்டித்தார்.

அரைமணி நேர உரையாடல். மனம் நெகிழ்ச்சியாக இருந்தது. கனமாக இருந்தது.

 மலேசியாவிலிருந்து வந்து 7 மாதங்கள் ஆகிவிட்டது. அய்யா மெய்கண்டாருக்காக ஒரு நூலை உருவாக்கிக் கொடுத்தேன். ஆனால் இன்னும் அவர் கைக்கு கிடைக்கவில்லையா? அல்லது அவர் புத்தகம் படிக்கும் நிலையில் இல்லையா என்ற கவலை எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

அய்யா மெய்கண்டாரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சிதம்பரம் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் அவர்களிடம் கூட கேட்டேன். 

இப்போது அந்த மனக்கவலை தீர்ந்துவிட்டது. 


Friday, August 6, 2021

சங்க கால வரலாற்றில் சில பக்கங்கள் - 2

 நான் படித்த நூல்களில் சில பக்கங்கள் -2


சங்க கால தமிழக வரலாற்றில் சில பக்கங்கள் (மயிலை சீனி.வேங்கடசாமி)

கி.பி.470 இல் வச்சிரநந்தி என்னும் ஜைன முனிவர் மதுரையில் ஒரு ‘திரமிள சங்கத்தை’ அமைத்தததைச் சுட்டிக்காட்டி அந்தச் சங்கத்தில் தொல்காப்பிய நூல் இயற்றப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். இது பற்றி இங்கு ஆராய்வோம்.

‘திகம்பர தரிசனம்’ என்னும் ஜைன சமய நூலிலே அதை எழுதிய தேவசேனர் என்பவர், பூஜ்யபாதரின் சீடராகிய வச்சிரநந்தி விக்கிரம ஆண்டு 525 இல் (கி.பி.470 இல்) தென் மதுரையிலே திராவிட சங்கத்தை நிறுவினார் என்று கூறுகிறார்

(Journal of Bombay Branch of Royal Asiatic Society, Vol.XVII, Page 74). 

‘ஸ்ரீ பூஜ்ய பாதஸீஸோ தாவிட ஸங்கஸ்ஸ காரகோ விஷ்டோ

நாமேன வஜ்ஜநந்தீ பாஹுணவேதீ மஹாஸத்தோ’

‘பம்சஸயே சவீஸே விகரமார்யஸ்ஸ மரண பத்தஸ்ஸ

தக்கிண மஹுராஜாதோ தாவிட ஸங்கோ மஹாமஹோ’

இந்தச் செய்தியைக் கொண்டு திரு. எஸ்.வையாபுரி பிள்ளையவர்கள், ‘வச்சிரநந்தியின் பேர்போன சங்கம் கி.பி. 470 இல்அமைக்கப்பட்டது. தொல்காப்பியம் அந்தச் சங்கத்தில் வெளிவந்த நூலாக இருக்கலாம்’ என்றும்,

‘தமிழ் மொழி தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் தரமான முக்கிய நிகழ்ச்சி கி.பி.470 இல் நிகழ்ந்தது. வச்சிரநந்தியின் மேற்பார்வையில் மதுரையில் ஒரு திரமிள சங்கம் அமைக்கப்பட்டதுதான் அந்த நிகழ்ச்சி... முற்காலப் பாண்டியரைப் பற்றிய சாசனங்களில் சின்னமனூர் சிறிய செப்பேட்டுச் சாசனத்தில் மட்டும் (கி.பி. 10 ஆம் நூற்றாண்டு), தலையாலங்கானத்துப் போர்வென்ற நெடுஞ்செழியனுக்குப் பிறகு வந்த ஒரு பாண்டியன் நிறுவிய மதுரைத்தமிழ்ச் சங்கம் குறிப்பிடப்படுகிறது. இது வச்சிரநந்தியின் சங்கத்தைக் குறிப்பிடுவதாக இருக்கலாம்’ என்றும், தாம் ஆங்கிலத்தில் எழுதிய ‘தமிழ் மொழி தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் நூலில் 14 ஆம் பக்கத்திலும், 58,59 ஆம் பக்கங்களிலும் எழுதுகிறார். 

மேலும் அந் நூல் 61 ஆம் பக்கத்தில், 

‘வச்சிரநந்தி சங்கத்தைப் பற்றிச் சரியான சாதனங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அச்சங்கத்தை நிறுவியவுடனே ஒழுக்க நூல்களும் இலக்கண நூல்களும் வெளிவந்திருப்பது அச்சங்கத்தின் பெரிய செயலைக் காட்டுகிறது’ என்று எழுதுகிறார்.

முற்காலத்தில் பாண்டிய மன்னர் அமைத்துத் தமிழராய்ச்சி செய்த தமிழ்ச் சங்கத்தையும் பிற்காலத்தில் வச்சிர நந்தி அமைத்த ஜைனமதப் பிரச்சாரச் சங்கத்தையும் ஒன்றாகப் பொருத்திக் காட்டுகிறர் வையாபுரிப்பிள்ளை. 

பொருத்திக் காட்டுவதுடன் அல்லாமல் தொல்காப்பியர், வச்சிரநந்தி காலத்தில் (கி.பி.470 க்குப் பிறகு) தொல்காப்பிய இலக்கணத்தை எழுதினார் என்றும் கூறுகிறார். இது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடி போடுகிற கதையாக இருக்கிறது.

பாண்டியர் அமைத்த தமிழ்ச்சங்கம் வேறு; வச்சிரநந்தி அமைத்த தமிழ்ச்சங்கம் (திராவிட சங்கம்) வேறு. 

பாண்டியர் அமைத்தது தமிழ் இலக்கிய இலக்கண ஆராய்ச்சிச் சங்கம். வச்சிரநந்தி அமைத்தது ஜைன சமய பிரசாரச் சங்கம். 

இதையறியாமல், வையாபுரிப் பிள்ளை இரண்டு வெவ்வேறு சங்கங்களையும் ஒன்றாக இணைத்துப் பிணைத்துக் குழப்பியிருக்கிறார். சாதாரண அறிவுள்ளவரும் இதனை எளிதில் அறிந்து கொள்ள முடியும். ஆனால், வையாபுரிப் பிள்ளையவர்கள் ஏனோ இவ்வாறு குழப்புகிறார்.

‘தமிழர் வரலாறு’ என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதிய திரு. பி.தி.சீனிவாச அய்யங்கார் அவர்கள் வச்சிர நந்தியின் திராவிட சங்கம் வேறு, பாண்டியரின் தமிழ்ச்சங்கம் வேறு என்று தெளிவாகக் கூறுகிறார்.

 ‘தமிழ்ச் சங்கம் என்று நாம் அறிந்திருக்கிற சங்கம் அன்று இது என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும். இது (வச்சிரநந்தியின் சங்கம்) தமிழ்நாட்டு ஜைனர்கள் தம்முடைய மத தர்மத்தைத் தமது மாணாக்கர்களுக்குக் கற்பிப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்’(P.247, History of the Tamils, P.T.Srinivas Iyengar, Madras, 1927) என்று அவர் எழுதுகிறார்.

இந்த நான்கு பிரிவுகளில் நந்திகணம் பேர்பெற்றது. நந்தி கணத்தில் நாளடைவில் ஜைன முனிவர்கள் தொகை அதிகமாகிவிட்டது. 

ஆகவே, வச்சிரநந்தி முனிவர், கி.பி.470 இல் நந்திகணத்தை (நந்தி சங்கத்தை) இரண்டாகப் பிரித்து இரண்டாவது பிரிவுக்குத் திரமிள சங்கம் (தமிழ் நாட்டுச் சங்கம், தமிழ் ஜைனர் சங்கம்) என்று பெயர் கொடுத்தார். 

நந்தி சங்கத்திலிருந்து திரமிள (திராவிட) சங்கம் ஏற்பட்டது என்பதை மைசூர் நாட்டுச் சாசனம் ஒன்று கூறுகிறது.

‘ஸ்ரீமத் திரமிள ஸங்கேஸ்மிம் நந்தி ஸங்கேஸதி அருங்களா

அன்வயோ பாதி நிஸ்ஸே­ ஸாஸ்த்ர வாராஸி பாரகைஹி’

‘நந்தி சங்கத்ததோடு கூடிய திரமிள சங்கத்து அருங்கலான்வய பிரிவு’ என்பது இதன் பொருள்.

இந்தத் திராவிட ஜைன முனிவர் சங்கத்தின் கொண்டகுண்டான் வயம் என்னும் பிரிவில் புஸ்தககச்சை என்னும் உட்பிரிவைச் சேர்ந்த முனிபட்டாரகர் என்னும் ஜைன முனிவரைக் கர்நாடக நாட்டுச் சாசனம் ஒன்று கூறுகிறது.

திரமிள சங்கத்து அருங்கலான்வயப் பிரிவைச் சேர்ந்த சாந்தி முனி என்பவரை இன்னொரு சாசனம் கூறுகிறது.

திரமிள சங்கத்து அருங்கலான்வயத்து ஸ்ரீபால திரைவித்யர் என்னும் முனிவரை மற்றொரு இன்னொரு சாசனம் கூறுகிறது.

இதிலிருந்து, பாண்டியர் தமிழை வளர்ப்பதற்கு மதுரையில் ஏற்படுத்திய தமிழ்ச்சங்கம் வேறு என்பதும், வச்சிர நந்தி ஜைனசமயத்தை வளர்ப்பதற்காக மதுரையில் நிறுவிய நந்தி சங்கத்தின் பிரிவாகிய திரமிள சங்கம் வேறு என்பதும் உள்ளங்கை நெல்லிக் கனிபோல் விளங்குகிறதல்லவா? 

இது சாதாரண அறிவுடையவருக்கும் நன்கு விளங்குகிறது.

Tuesday, August 3, 2021

சங்க கால வரலாற்றில் சில பக்கங்கள்

 நான் படித்த நூல்களில் சில பக்கங்கள் ...1


சங்க கால தமிழக வரலாற்றில் சில பக்கங்கள் (மயிலை சீனி.வேங்கடசாமி)


சுமேரியரும் திராவிடரும் ஒரு காலத்தில் ஒன்றாக ஒரே இடத்தில் வாழ்ந்தவர் என்று மேல் நாட்டுக் கீழ்நாட்டுச் சரித்திர அறிஞர்கள் கூறுகிறார்கள். 


திராவிடரும் சுமேரியரும் ஒரே இனத்தவர் என்று அவர்கள் எழுதியுள்ளார்கள்.


சுமேரியருக்கும் திராவிடருக்கும் (தமிழர்) முன் ஒரு காலத்தில் ஏதோ ஒரு வகையில் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. 


இதற்குச் சான்றாகச் சுமேரிய நாட்டின் பழைய ஊர்ப் பெயர்கள் உள்ளன. சுமேரிய நாட்டின் முக்கிய பட்டினத்துக்கு ஊர் என்ற பெயர் இருந்தது. இன்னொரு நகரத்துக்கு எருதூர் என்று பெயர் இருநதது. மற்றொரு ஊருக்கு நிப்பூர் என்று பெயர் இருந்தது. ஊர், எருதூர், நிப்பூர் என்னும் பெயர்களில் ஊர் என்னும் திராவிடப் பெயர் அமைந்திருப்பது காண்க. 


ஊர் என்னும் சொல்லுக்குத் தமிழில் என்ன பொருள் உண்டோ அதே பொருள்தான் சுமேரிய மொழியிலும் ஊர் என்னும் சொல்லின் பொருளாக இருந்தது.


மேலும் சுமேரிய மொழியில் அமா, பீடு, ஆள் முதலிய சொற்கள் திராவிட (தமிழ்)ச் சொற்களாகவே காணப்படுகின்றன.


அமா என்னும் சுமேரிய வார்த்தைக்கு அம்மா என்பது பொருள். 


பீடு என்னும் சுமேரிய சொல்லுக்கு வீடு என்பது பொருள்.


ஆள் என்னும் சொல்லுக்கு ஓசை ‘யாழ், ஒலி’ என்னும் பொருள்கள் உள்ளன. ஆள் என்னும் சுமேரியச் சொல் தமிழில் ‘யாழ்’ என்று கூறப்படுகின்றது. தமிழரின் பழைய யாழ் வடிவம் போலவே சுமேரியரின் பழைய யாழ் வடிவமும் இருந்தது. பிற்காலத்தில் சுமேரிய யாழின் பத்தருக்கு முன் பக்கத்தில் எருது தலையின் உருவம் அமைக்கப்பட்டது. ஆனால் சுமேரிய, தமிழரின் இசைக்கருவிக்கு யாழ் (ஆள்) என்றே பெயர் இருந்தது கருதத்தக்கது.


இவ்வாறு திராவிடருக்கும் சுமேரியருக்கும் பழங்காலத்தில் தொடர்பு இருந்ததையறிகிறோம்.


சுமேரிய அரசரின் பட்டியலிலும் சங்க காலப் பாண்டிய மன்னரின் பட்டியலும், கால அளவைப் பொறுத்த மட்டிலும், ஒரே மாதிரி அமைந்திருப்பதும் இங்கு கருதத்தக்கன. 


சுமேரிய அரசரின் சுமேரிய அரசரின் ஆட்சிக்காலம், நம்ப முடியாத அளவு கால எல்லை அதிகப்படியாகக் கூறியுள்ளது. 


போலவே, தமிழ்ச் சங்கங்களில் கூறப்படுகிற பாண்டிய அரசர்களின் ஆட்சிக் கால எல்லையும் அதிகப்படியாகவே கூறப்படுகின்றன. இதிலும் இரண்டு நாட்டுக்கும் ஒரு பொருத்தம் காணப்படுகிறது.


பதிவு: கந்தசாமி விநாயகம்