Saturday, December 2, 2023

ஸ்டெர்லைட் எதிர்ப்பு - திருமுருகன் காந்தி

 ‘‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்பது ஒரு சர்வதேசப் பிரச்னை. தூத்துக்குடியில் நடந்த படுகொலை ஒரு சர்வதேசக் குற்றம்’’ என்கிறார் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி. ஐரோப்பிய நாடுகளின் அரசியல் கட்சிகளிடமும், அங்கிருக்கும் அமைப்புகளிடமும் தொடர்ந்து பேசி, கோரிக்கைகளை முன்வைத்து இதை ஒரு சர்வதேசப் பிரச்னையாகக் கொண்டுசெல்லும் வேலைகளில் இறங்கியுள்ளது மே 17 இயக்கம். இதற்காக ஜெர்மனியில் இருக்கும் திருமுருகன் காந்தியைத் தொடர்புகொண்டு பேசினோம்.

‘‘வேதாந்தா என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஒரு நிறுவனம். இப்படிப் பதிவு செய்தால், சில முக்கியமான சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமை விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். ஆனால், வேதாந்தா அதைப் பல நாடுகளிலும் மீறியுள்ளது. ஜெர்மனியில் இருக்கும் ‘டை லிங்க்’ (Die Linke) எனும் முக்கிய அரசியல் கட்சியின் உறுப்பினர் களைச் சந்தித்து ஸ்டெர்லைட் விஷயம் குறித்து எடுத்துரைத்தோம். இந்தப் பிரச்னைகளைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துவிட்டார்கள். உல்லா ஜெல்பெக் (Ulla Jelpke) எனும் ஜெர்மானிய நாடாளுமன்ற உறுப்பினரிடமும் இந்தப் பிரச்னை குறித்து எடுத்துரைத்தோம். இன்னும், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பல அமைப்புகளிடமும் இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து கொண்டு செல்கிறோம். இதையெல்லாம் செய்வதற்கு முக்கியக் காரணம், ஸ்டெர்லைட் படுகொலை குறித்து ஐரோப்பிய நாடுகளின் நாடாளுமன்றங்களிலும், பிரிட்டன் பாராளுமன்றத்திலும் விவாதிக்க வேண்டும் என்பதுதான்’’ என்றார் அவர்.

ஸ்டெர்லைட் பிரச்னையைப் புரிந்து கொள்வதற்கு, நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சம்பவம் இது...

 2012 ஆகஸ்ட் 16-ம் தேதி. தென்னாப்பிரிக்காவின் மரிக்கானா எனும் சிறு நகரம். அந்தப் பகுதியில் தங்கம், வைரம், பிளாட்டினம் உள்பட பல சுரங்கங்களும், உருக்காலைகளும் இயங்குகின்றன. அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சரியான சம்பளம் இல்லை. சூழலுக்கும் உயிருக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் இந்தச் சுரங்கங்களில் சரியான பாதுகாப்பு வசதிகள் இல்லை. எனவே, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சுரங்கத் தொழிலாளர்களும், அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களும் போராடுகிறார்கள். அது லொன்மின் எனும் பிரிட்டிஷ் கம்பெனிக்கு எதிரான போராட்டம். ‘நிறுவனம் இறங்கி வந்து எங்களிடம் பேச வேண்டும். எங்கள் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்’ என்பதுதான் அவர்களின் குரல். 

ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பிட்ட அந்த 16-ம் தேதி, மக்கள் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்தபடி போராட்டப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பாடல்களுக்கு நடுவே துப்பாக்கிக் குண்டுகளின் சத்தம் கேட்கிறது. போராட்டம் உக்கிரமாகிறது. மக்களை அணி பிரிக்கிறது காவல்துறை. சிறு சிறு கும்பலாக அவர்களை ஒதுக்கி துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. பலரைக் குறிவைத்துக் கொல்கிறது. போராட்டத்தை முன்னின்று நடத்திய மெக்சினேனி நொகி என்பவரின் முகத்திலும் கழுத்திலும் 14 குண்டுகள் பாய்ந்தன. மொத்தம் 34 பேர் கொல்லப்பட்டனர். 112 பேர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தனர்.

சமூக விரோதிகள்’ புகுந்தது காவல்துறையைத் தாக்கினர்... பொதுச் சொத்தை சேதப்படுத்தினர்... என தூத்துக்குடியில் சொல்லப்பட்ட அத்தனை கதைகளும் தென்னாப்பிரிக்கா விலும் சொல்லப்பட்டன. ஆனால், சம்பவம் முடிந்த சில நாள்களில் சில வீடியோக்கள் வெளியாகின. போலீஸாரின் அத்துமீறல்களை அவை அம்பலப்படுத்தின. லொன்மின் நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து ஆங்கிலோ அமெரிக்கன் கோல்டு, ஆங்கிலோ அமெரிக்கன் பிளாட்டினம், ஆங்கிலோ கோல்டு ஆஷாந்தி எனப் பல நிறுவனங்களை எதிர்த்துப் போராட்டம் பரவியது. ஆங்கிலோ அமெரிக்கன் கம்பெனிக்கு எதிரான போராட்டத்திலும் ஒரு பெண் உள்பட சிலர் படுகொலை செய்யப்பட்டனர். 

2012-ம் ஆண்டு முழுக்கவே தென்னாப்பிரிக்காவில் இதுபோன்ற போராட்டங்களும் உயிரிழப்புகளும் அதிகம் நிகழ்ந்தன. ஆப்பிரிக்க தேசிய இளைஞர் காங்கிரஸ் இந்த சம்பவங்களை இப்படிக் குறிப்பிடுகிறது... ‘பெரு நிறுவனங்களின் பொறுப்பற்ற, உணர்வற்ற, மனிதநேயமற்ற தன்மையைத்தான் இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. இந்த நிறுவனங்கள் தொழிலாளர்களின் ரத்தத்தையும் வியர்வையையும் கண்ணீரையும் உறிஞ்சி மிகப் பெரிய லாபம் ஈட்டியுள்ளன. அவர்களின் இந்த வளர்ச்சிக்கு உதவிய தொழிலாளர்களின் உயிரை, அதிகார பலத்தைக் கொண்டு ஈவு இரக்கமற்று பறித்திருக்கின்றன. இந்த நிறுவனங்கள் இந்த தேசத்தின் அவமானம்.’

இங்கு சில விஷயங்களைக் கவனிக்கவேண்டியது அவசியம். ஆங்கிலோ அமெரிக்க நிறுவனத்தின் 21 சதவிகித பங்குகள், ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா குழுமத்தின் அதிபர் அனில் அகர்வாலிடம் இருக்கின்றன. மிக முக்கியமான விஷயம்... ஆங்கிலோ அமெரிக்கன் கம்பெனியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஸ்ரீனிவாசன் வேங்கடகிருஷ்ணன், இந்த ஏப்ரல் மாதம் முதல் வேதாந்தா நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிறுவனங்களால் தென்னாப்பிரிக்காவில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கும் தூத்துக்குடி படுகொலைகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

வேதாந்தா குழுமத்துக்கு எதிராக ஜாம்பியா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து உள்பட உலகின் பல நாடுகளிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் சட்டீஸ்கர், ஒடிஷா, கோவா உள்பட பல இடங்களிலும் போராட்டங்கள் நடக்கின்றன.

இந்தப் பிரச்னையை ஐரோப்பாவுக்குக் கொண்டுசெல்ல வேண்டிய அவசியம் என்ன’ என்ற கேள்விக்கும் தெளிவான பதில் வைத்திருக்கிறார் திருமுருகன் காந்தி. ‘‘உலக அளவில் வேதாந்தா நிறுவனம் கனிம வளங்களை எடுப்பதில் மிகப் பெரிய நிறுவனமாக இருக்கிறது. அவர்களை எதிர்க்க பெரிய பலம் வேண்டும். இந்தியாவின் அத்தனை அதிகார மட்டங்களும் வேதாந்தாவுக்கு ஆதரவாகத்தான் செயல் படுகின்றன. அதனால், நமக்கு நீதி கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது. எனவே, இந்தப் பிரச்னையில் சர்வதேச கவனத்தை ஈர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. 

மேலும், வேதாந்தா பிரச்னை இந்தியாவில் இதோடு முடிந்துவிடாது. ‘நிலங்களுக்கு அடியில் இருக்கும் வளங்களைச் சுரண்டி எடுப்பதுதான் எங்கள் நோக்கம்’ என்பதை ஒரு பேட்டியில் அனில் அகர்வால் வெளிப்படையாகக் கூறியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘கெய்ர்ன் லங்கா’ (CAIRN Lanka) எனும் நிறுவனத்தை வாங்கி, இலங்கையில் எண்ணெய் எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது அந்த நிறுவனம். இதேபோல இந்தியாவிலும் ‘கெய்ர்ன் இந்தியா’ (CAIRN India) என்ற நிறுவனம் 2007 முதல் இயங்கி வருகிறது. காவிரி டெல்டா மாவட்டப் பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயுக்களை எடுக்கும் திட்டங்கள், தமிழக கடற்கரைப் பகுதிகளில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைப்பது போன்றவற்றின் பின்னணியில் வேதாந்தாவின் கைகள் இருக்கலாம். தூத்துக்குடியில் திட்டமிட்ட ஒரு படுகொலையை நிகழ்த்தி விட்டு வேதாந்தா நிறுவனம் தப்பிவிட முடியாது. அவர்களை உலகின் மனச்சாட்சிக்கு முன் நாம் நிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது’’ என்று கோபத்துடன் சொல்லி முடிக்கிறார் திருமுருகன் காந்தி. 

- இரா.கலைச்செல்வன்

ஜூனியர்  விகடன்

மே 17 இயக்கத்தின் மீது திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு

மே17 இயக்கத்தின் மீது திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட அவதூறுகளை முன்வைத்து நாம் தமிழரால் பரப்பப்படும் பொய்களை அம்பலப்படுத்த இவ்விவரங்களை வெளியிடுகிறோம்.

ஈழப்படுகொலையில் சர்வதேசத்தின் பங்களிப்பு & ஈழப்படுகொலையை 'இனப்படுகொலையாக வரையரை செய்யலாமா?',  'யாரெல்லாம் இதில் பங்கெடுத்தனர்?', 'அவர்களது நோக்கமென்ன?' என்பது குறித்து 2 சர்வதேச மக்கள் நீதிமன்ற(தீர்ப்பாயம்) அமர்வுகள் நடந்துள்ளன. 

முதல் அமர்வு அயர்லாந்து டப்ளின் நகரில் 2010ல் நடந்தது. ஈழப்படுகொலையில், 'அமெரிக்காவும், இங்கிலாந்தும் பங்கெடுத்தன' என்பது தீர்ப்பாக வெளியிடப்பட்டது.

 'ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையா?' எனவும், 'இதில் பங்கெடுத்த நாடுகள் எவை?' என்பதை 2ம் தீர்ப்பாயத்தில் விசாரிக்க வேண்டுமென தீர்ப்பானது. இத்தீர்ப்பாயத்தில் இந்தியாவிலிருந்து புகழ்பெற்ற 'நீதிபதி சச்சார்',  'அருந்ததிராய்' போன்றோர் பங்களித்தனர். இத்தீர்ப்பாயத்தில்,

இலங்கை செய்த மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால்,  'விடுதலைப்புலிகளே கொலைக்குற்றம், கட்டாயக்கருக்கலைப்பை செய்தனர்' என இந்தியாவிலிருந்து சென்ற பால்நியூமென் ஜனவரி 2010ல் பதிவு செய்தார். 2011ல் இவர் நாம் தமிழர் கட்சியின் சர்வதேச செயல்பாட்டாளராகவும், கர்நாடக மாநில பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். இவரது ஆவணங்கள் தீர்ப்பாயத்தின் பதிவுகளில் இன்றும் உள்ளது. இவரது வாதங்கள் ஆதாரமற்றதென நிராகரிக்கப்பட்டது.

இவ்வாறு பொய் அவதூறுகளை முன்வைத்ததால், ஜெர்மனியின் 'ப்ரேமன்'  நகரில் நடந்த 2வது தீர்ப்பாயத்தில் பால்நியூமென் நிராகரிக்கப்பட்டார்.

'வி.பு இயக்கத்தின்' இதழான 'தமிழ்நெட்'டில் வெளியான எனது பேட்டிகளை கண்டபின்,  என்னை அழைத்ததாக தீர்ப்பாய பொறுப்பாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

2வது தீர்ப்பாயத்தில்

'இங்கிலாந்து, அமெரிக்க மீதான குற்றச்சாட்டு', இனப்படுகொலை சாட்சிகள், ஆவணங்கள் ஆகியவற்றையே விசாரிக்க போதுமான கால அவகாசம் இல்லாததால் எமது ஆதாரங்களை விசாரிக்க இயலாமல் போனது. ஆனால் மே17 இயக்கம் முன்வைத்த ஆதாரங்கள் அடிப்படையில் 'ஈழ இனப்படுகொலையில் இந்தியா பங்களித்ததை' உறுதிசெய்து, 2014-15ல் மூன்றாவது தீர்ப்பாயத்தில் 'இந்தியா மீது விசாரணை' நடத்த முடிவு செய்தது. 'உமர்' என்பவர் ஐ.நா பங்களிப்பை பதிவு செய்ய வந்தார். தீர்ப்பாய தலைவரே முன்னாள் ஐ.நா துணை பொதுசெயலாளர் என்பதால் அக்குற்றச்சாட்டை இனப்படுகொலைக் கானதல்ல என விளக்கி நிராகரித்தார். நான் இந்தியா மீதான குற்றச்சாட்டுகளை முன் வைத்தேன்.

'இந்தியா குற்றவாளி' எனும் தீர்ப்பு முதன்முதலாக சர்வதேச அளவில் இந்திய அரசிற்கும், காங்கிரஸ்க்கும் கிடைத்த மாபெரும் பின்னடைவு. இத்தீர்ப்பின் அடிப்படையில், இந்திய அரசை பல தலைவர்கள் (நாம் தமிழர் தவிர்த்து) குற்றம்சாட்டினர்.

இலங்கை அரசு, சாட்சிகளை மிரட்டுவது, விசா கிடைக்காமல் செய்வது, தாக்குவது/கொலை செய்கிற காரணத்தினால் 'தீர்ப்பாய விவரங்கள், பங்கெடுக்கும் நபர்களின் விவரங்களை' அவசியமின்றி தீர்ப்பாயம் வெளியிடாது.

எனவே இந்தியாவின் மீதான விசாரணை விவரங்களையும் ரகசியமாக வைத்திருந்தது. 

ஆனால் இவ்விவரங்களை விசாரணை துவங்கும் முன்னரே, 'உமர்' சமூக வளைதளங்களில் வெளியிட்டார். மேலும் தீர்ப்பாய பணியில் ஈடுபட்டோர் விவரம், அவர்களது மின்னஞ்சல்களையும் யாருடைய அனுமதியின்றி வெளியிட்டார். முக்கிய ஆவணங்களையும் வெளியிட்டார்.  இது அனைவருக்கும் கடும் நெருக்கடியை கொடுத்தது. இதன்பின் 'இந்திய அரசின் மீதான விசாரணைக்கான தீர்ப்பாயம்' நின்றுபோனது.

இதை செய்தபின்னர், தீர்ப்பாயத்தால் ஒதுக்கப்பட்ட பால்நியூமெனோடு கைகோர்த்து, 'உமர்' ஒரு கூட்டத்தில் மே17 மீது அவதூறுகளை வைத்துவிட்டு ஒதுங்கினார்.

ப்ரேமன் தீர்ப்பாயத்தை நடத்திய விராஜ்மெண்டிஸ், ஜூட்லால்பெர்ணாண்டோ ஆகியோர், 'உமர்' பரப்பிய அவதூறுகளை அறிந்த பின், உடனடியாக மறுப்பு அறிக்கை வெளியிட்டனர். உமர் செய்த அவதூறுகள் ஆதாரமற்றவை என்பதை வெளிப்படுத்தினர். மே17 இயக்கம் மீது சேற்றைவாரி இறைப்பதற்கு கண்டனமும் தெரிவித்தனர். 

இவர்களது அறிக்கை ப்ரேமன் தீர்ப்பாய அதிகாரபூர்வ இணையத்தில் இன்றளவும் உள்ளது. 

(இந்த இணைப்பை முதல் கமெண்டில் பதிவு செய்துள்ளேன்)

இந்திய-காங்கிரஸ் அரசு மீதான விசாரணையை தடுத்துநிறுத்த உதவிய உமரின் பொய்களை பரப்புபவர்கள், வி.புலிகளை அவதூறு செய்த பால்நியூமெனுக்கு தம் கட்சியில் பெரும்பதவி கொடுத்தவர்கள்.

*உமருக்கு நிதியுதவிகளை மே17 தோழர்களே செய்தனர்

*ஈழப்படுகொலை குற்றவாளிகளை பாதுகாக்க நடந்த துரோகங்கள் குறித்து மேலதிக விவரங்களை தேவைப்படும் போது வெளியிடுவோம்.

பொய்கள், கட்டுக்கதைகள், வாய்சவடால் களை நம்பி மே17  இயங்கவில்லை. 

உறங்கிக்கிடந்த உண்மைகளை வெளிப்படுத்தவும், துரோகிகளை அடையாளம் காட்ட வாய்ப்பளித்ததற்கு மனமார்ந்த நன்றி!

இவ்வாறான வாய்ப்புகளை மேலதிகமாக  நாம் தமிழர் கட்சியினர் ஏற்படுத்தித்தர வேண்டுகிறோம்.

Monday, November 27, 2023

திருவாரூர் விடயபுரம் பற்றி சாக்கோட்டை மு. இளங்கோவன்

அண்ணன் மு.இளங்கோவன் அவர்களின் பதிவு....

அன்பு கவி,

எனது பெற்றோர்கள் தனலட்சுமி , முனுசாமி , குழந்தை சுமதியுடன் அரசியல் சட்டத்தை எரித்து சிறை சென்றார்கள் .

தந்தையார் பற்றி கவலையில்லை .. அவர் பல்வேறு போராட்டங்களில் அடிக்கடி சிறை சென்ற அனுபவம் உண்டு.

எனது தாயாருக்கு முதல் முறை. அதை விட என் தங்கை சிறுபிள்ளை .மூன்று மாதங்கள் கழித்து வந்த போது உடம்பு கை கால்களெல்லாம் புண் .கைகள் எல்லாம் சீழ்வடிய பாவமாக இருந்தது. பெண்கள் சிறை தான் . 

சுந்தர லீலா அம்மையார், சுப்புலட்சுமிபதி இன்னும் பலர் எல்லோரும் ஆள் அடையாளம் தெரியாத அளவு உருமாரியே இருந்தார்கள் .

 திருவாரூர் விசயபுரத்தில் தான் அரசியல் சட்டம் எரிக்கப்பட்டது. அப்போது நடந்தது எல்லாம் இன்றும் கூட எனக்கு காட்சியாய்த் தான் இருக்கிறது. 

பெரியவர் அய்யா சிவசங்கரன் அவர்களும் கிடாரங்கொண்டான் ,லட்சுமணன் அண்ணன் அவர்களும் தான் சட்டப் பிரிவின் நகல்களைக் எல்லோருக்கும் கொடுத்தார்கள். நிறைய கூட்டம்.

அங்கே எவருக்குமே போலீஸ் , சிறை என்பது போன்ற சிந்தனை இருந்ததாக தெரியவில்லை. எதோ திருமண வரவேற்பு போல மகிழ்ச்சியோடு இருந்தார்கள் . எல்லோரையும் வேனில் ஏற்றும் போதும் கோஷம் போட்டுக் கொண்டே ஏறினார்கள்.

 அப்போதும் கடைசியாக வேனில் ஏறுவதற்காக சுந்தரலீலா – சிங்கராயர் அவர்கள் நின்று கொண்டு மற்ற பெண்களை ஏற்றி விட்டார்கள்.

 அப்போதுதான் எனது தாயார் கேட்டது "எங்களை ஏன் சார் இப்பவேனில் ஏற்றுகிறீர்கள்?"


"உங்களுக்குத் தெரியாதாம்மா ? சட்டத்தை அவமதிச்சா ஜெயிலுன்னு ?" _ 


"அப்ப இந்த போலீஸ்கார அய்யாவையும் ஏத்துங்க . நாங்க நெருப்பு வச்சோம் .இவரு கீழே புடுங்கி போட்டு பூட்ஸ் காலால மிதிச்சுதான நெருப்பை அணைச்சாரு? பூட்ஸ் காலாலமிதிச்சா அதுவும் அவமதிக்கிறது தான?" என்று சொல்லவும் போலிசார் உட்பட அனைவருமே சிரிக்கவும் சூழலில் வருத்தமே காணவில்லை.


அதை விட ,சிறை மீண்டு வீட்டுக்கு வந்த பின்னும் எனது தாயாரின் பேச்சு முழுவதும் எதோ ஒரு பெரியபோரில் ஒரேஒரு வீரன் 100 பேரை வெற்றி கொண்டது போல் அதையே பேசிக் கொண்டிருந்ததுதான் வியப்பாக இருந்தது.

அப்போது என் தந்தையார் சிறையில் இருந்தார் .அதைப் பற்றியெல்லாம் எனது அம்மா கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. 

இவர்களது " சிறை அனுபவத்தையே "பேச்சாக இருந்தது.

 எனது தங்கையின் புண்கள் ஆறி சரியாக வர நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. 


எல்லோரும் சிறை மீண்டு வந்த பின்னால் ஒரு நாளில் அய்யா அவர்களே ஒவ்வொரு ஊராகச் சென்று பாராட்டு விழா நடத்தினார்கள். 

மேடையில் எனது அம்மாவின் முறை வந்த போது "வாங்கம்மா தனலட்சுமியம்மா .. நீங்க தான் போலீஸ்காரரையும் ஜெயிலுக்கு கூப்பிட்டதா ?" , என்று சிரிக்கவும் எனது தாயாருக்கு முகம் மகிழ்ச்சியை பார்க்க வேண்டுமே ..அடேயப்பா .

. . எனக்கு நானே மண்டைக் கனத்துடன் மகிழ்ச்சியடையும் செய்திகள் . இப்போது உங்களுடன்  பகிர்வு.

நன்றி!

(உட்கார்ந்து யோசித்தால் ஏராளமான பெயர்கள் வரும். கிட்டத்தட்ட எல்லோருமே பின்னாளில் என்னோடு இயக்கத்தில் இருந்தார்கள். எல்லோருமே என்னை விட மிக மூத்தவர்கள் . )

Saturday, November 25, 2023

வைக்கம் போராட்டம் பற்றி பெரியார்

ஆங்கிலேயர் ஆட்சியில் கேரளாவின் வைக்கம் என்ற ஊரில் கோவிலை சுற்றிய தெருக்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடமாட தடை இருந்தது. இந்த சமூக அநீதிக்கு எதிராக டிகே மாதவன் முதன் முதலாக குரல் கொடுத்தார். 1924-ம் ஆண்டு மார்ச் 30-ந் தேதி வைக்கம் போராட்டம் தொடங்கப்பட்டது. பெரும் பிரளயத்தை ஏற்படுத்திய வைக்கம் போராட்டம் வெகுவேகமாக ஒடுக்கப்பட்டும் வந்து. அப்போதுதான் தமிழ்நாட்டு காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த தந்தை பெரியார் வைக்கம் சென்று போராட்டத்துக்கு தலைமை ஏற்று முன்னெடுத்தார்.

வைக்கம் போராட்டம் குறித்து தந்தை பெரியார் எழுதியதாவது:

வைக்கம் போராட்டத்துக்காக நான் வருகிறேன் என்ற விஷயம் தெரிந்து கொண்டு, போலீஸ் கமிஷனர் பிட், இன்னொரு அய்யர் (அவர் பெயர் இப்போது சரியாய் ஞாபகத்திற்கு வரவில்லை. திவான் பேஷ்தாரர் சுப்பிரமணிய அய்யர் என்று நினைக்கிறேன்), ஒரு தாசில்தார் (விசுவநாத அய்யர்) எல்லோரும் என்னைப் படகிலிருந்து நான் இறங்கும் போதே வரவேற்றார்கள். மகாராஜா அவர்கள், எங்களை அவர்கள் சார்பில் வரவேற்று வேண்டிய எல்லா சவுகரியங்களையும் பண்ணித் தரச் சொன்னார் என்று சொல்லி எங்களை வர வேற்றார்கள். இது எனக்குப் பெரும் ஆச்சரியத்தைத் தந்தது என்றாலும், ஏன் மகாராஜா அப்படிச் செய்தார் என்றால் அதற்கு 3 மாதத்திற்கு முன்பு இருந்த இராஜா டெல்லிக்குப் போகிறதற்கு ஈரோடு வழியாக வந்து, ஒரு நாள் ஈரோட்டிலே தங்கிவிட்டு, அடுத்த நாள் டெல்லிக்கு இரயில் ஏறிப் போவது வழக்கம். அப்படி ஈரோட்டிலே தங்கும்போது, அதற்கு வேண்டிய வசதிகளையும், மகாராஜா எங்கள் பங்களாவிலும் தான் தங்க ஏற்பாடு செய்யப்பட் டிருக்கும். அப்படி 3 மாதத்திற்கு முன் வந்தபோது அவருடன் இந்த போலீஸ் அதிகாரி, இன்னும் இராஜாவுக்கு உதவிக்குத் தேவையான எல்லா அதிகாரிகளும் வந்து போனதில் இவர்கள் ஈரோட்டில் என்னை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறவர் களாகவும், நானும் அவர்களை எங்கள் வீட்டிற்கு வந்தபோது, சந்தித்துப் பேசியவர்களாகவும் இருந்திருக்கிறோம். இதனால் மகாராஜா சற்று மரியாதை காட்டினார்.

சத்தியாகிரகத்தைத் தொடர்ந்து நடத்த வந்த என்னை மகாராஜா சார்பில் இந்தப் பெரிய அதிகாரிகளே வரவேற்கின்றார்கள் என்று கண்டதும் இப்பக்கத்தில் பாமர மக்களுக்கு ஒரே மகிழ்ச்சியாக ஆகி விட்டது. என்னை விருந்தினராக மகாராஜா கருதினாலும்கூட நான் பல இடங்களில் சென்று பொதுக் கூட்டம் போட்டு சத்தியாக்கிரகத்தைப் பற்றிப் பேசினேன். காரசாரமாகப் பேசினேன், கீழ்ச்சாதி மக்களான நாம் உள்ளே தெருவில் போவதால் தீட்டுப்பட்டுவிடும், செத்துப் போகும் என்று சொல்லும் வைக்கத்தப்பனைப் போட்டு வேட்டி துவைக்கணும் என்றெல்லாம் கடுமையாகப் பேசினேன். சுற்று வட்டார மக்கள் ஆயிரக்கணக்கில் வைக்கம் வந்து கூடி விட்டார்கள். அது இராஜாவுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. 5, 6 நாள் வரை சும்மா தான் இருந்தார். பலரும் போய் அவரிடத்தில் நான் பேசுவது குறித்து முறையிட்டார்கள். பிறகு இராஜாவினால் சும்மா இருக்க முடியவில்லை.

இப்படி சுமார் 10 நாள் ஆனவுடனேயே, ஒரு போலீசு (சூப்பிரண்ட்) அதிகாரி அவர்கள் அய்யங்கார் - அவர் முயற்சியால் பி.சி.26 படி தடையுத்தரவு போட்டார். அந்நாட்டிலே 26 என்பது இப்போது இங்கே 144 தடையுத்தரவு போன்றது. நானும் சட்டம் மீறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கண்டறிந்தேன். உடனே நான் சட்டத்தை மீறிப் பேசினேன். என்னுடன் (தற்போது காங்கிரசுக்காரராக இருக்கும்) கோவை திரு. அய்யாமுத்து அவர்களும், மற்றும் இருவரும் சட்டம் மீறினோம். எங்களைக் கைது செய்தார்கள். எல்லோருக்கும் ஒரு மாதம் வெறுங்காவல் போட்டார்கள்! என்னை அருவிக்குத்தி என்ற ஊரில் உள்ள ஜெயிலில் (சிறையில்) வைத்தார்கள். அதற்குப் பிறகு என் முதல் மனைவியார் திரு. நாகம்மையாரும் பிறகு நான் வெளியே வந்தவுடன் என் தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாளும் மற்றும் சிலரும் வந்து நாடெல்லாம் சென்று பிரச்சாரம் செய்தார்கள். நான் விடுதலை ஆகி வந்து அதே மாதிரி மறுபடியும் திட்டம் போட்டேன்.

நான் வெளியே வருவதற்குள் இந்தக் கிளர்ச்சிக்கு ஏராளமான அளவில் ஆதரவு பெருகிவிட்டது. மளமளவென்று ஆட்களும் வந்து சேர ஆரம்பித்தனர். ஏராளமான பேர்கள் பல பகுதிகளிலும் சென்று சுற்றுப் பயணம் செய்து தீவிரப் பிரச்சாரம் செய்தார்கள். எதிரிகளும் அடிதடி, காலித்தனம், கலவரங்கள் முதலியவற்றில் ஈடுபட்டு இதை எப்படியாவது ஒடுக்கிவிட வேண்டுமென்று பலவித முயற்சிகளும் செய்து பார்த்தார்கள்.

ஆனால், போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு பெருகிக் கொண்டேயிருந்தது. வெளிநாடுகளிலிருந்து மலையாளிகளும் சாதிக் கொடுமை என்பதைக் கண்டு மனம் துடித்து, அதற்குத் தங்கள் எதிர்ப்பையும் சாதிக் கொடுமைகளை எதிர்த்துச் செய்யப்படும் போராட்டத்திற்குத் தங்கள் ஆதரவையும் காட்டும் வண்ணம் தினம் ரூ.50-60-100 என்று மணியார்டர் அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள்.

பெரிய பந்தல் போட்டு தினசரி போராட்ட வீரர்கள் முகாம் செய்திருந்த வீட்டில் 200-300 பேர் சாப்பிடுவார்கள்! தேங்காயும், மற்ற காய்கறிகளும், மலைமலையாகக் குவிந்து கிடக்கும். பெரிய கலியாண வீடு மாதிரி காரியங்கள் நடைபெறும்.

திரு. இராசகோபாலாச்சாரியார் எனக்குக் கடிதம் எழுதினார். நீ ஏன் நம் நாட்டை விட்டுவிட்டு இன்னொரு நாட்டிலே போய் இரகளை செய்கிறாய்? அது சரியல்ல. அதை விட்டுவிட்டு நீ இங்கு வந்து, நீ விட்டு விட்டுச் சென்ற வேலைகளைக் கவனி என்று. அப்போது இருந்த எஸ். சீனுவாசய்யங்காரும் இப்படித்தான் என்னை வைக்கத்திற்கு வந்தே அழைத்தார்; வரச் சொன்னார். அதே மாதிரி பத்திரிகையிலேயும் எழுதினார்கள். ஆனால், இதற்குள் சத்தியாக்கிரக ஆசிரமத்தில் 1000 பேருக்கு மேல் சேர்ந்தார்கள். தினமும் ஊர் முழுவதும் சத்தியாக்கிரக பஜனையும், தொண்டர்கள் ஊர்வலமும் நடந்து உணர்ச்சி வலுத்து விட்டது.

பஞ்சாபில் சுவாமி சிரத்தானந்தா என்பவர் ஒரு அப்பீல் போட்டார். அதன் பிரகாரம் பஞ்சாபிலேயிருந்து சீக்கியர்கள் 20-30 ஆள்களையும், இரண்டாயிரம் ரூபாயையும் கையிலெடுத்துக் கொண்டு நேரே வைக்கத்துக்கு வந்தார்கள். தாங்கள் சாப்பாட்டுச் செலவை ஏற்றுக் கொண்டு ஆதரவு தருவதற்காக. உடனே இங்கிருந்த பார்ப்பனர்கள் எல்லாரும் சீக்கியர்கள் வந்து, இந்துமதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கிறார்கள் என்றெல்லாம் காந்திக்கு எழுதினார்கள்.

உடனே அதன் பேரில் காந்தியார் துலுக்கன், கிறிஸ்தவன், சீக்கியன் ஆகிய பிற மதக்காரன் எவனும் இதில் கலந்து கொள்ளக் கூடாது என்று எழுதி விட்டார்கள்.

காந்தி எழுதினவுடனே இதில் கலந்திருந்த சீக்கியன், சாயபு, கிறிஸ்தவன் எல்லாரும் போய் விட்டார்கள். அதுபோலவே, தீவிரமாக இதில் ஈடுபட்டு முன்னோடியாக உழைத்த காலஞ்சென்ற ஜோசப் ஜார்ஜீக்கும் இராஜகோபாலாச்சாரியார் கடிதம் எழுதினார். இந்து மதச்சார்புள்ள இந்தக் காரியத்திலே நீ சேர்ந்திருப்பது தப்பு என்றார்.

அதை ஜோசப் ஜார்ஜ் அவர்கள் இலட்சியம் பண்ணாமல் திருப்பி எழுதினார். நான் என் சுயமரியாதையை விட்டுவிட்டு இருக்க மாட்டேன். வேண்டுமானால் என்னை விலக்கி விடுங்கள் என்றார். தற்போதைய நாகர்கோயில் பயோனீர் டிரான்ஸ் போர்ட்டைச் சேர்ந்த சேவு என்பவரும் அண்மையில் காலஞ்சென்ற டாக்டர் எம்.இ. நாயுடு அவர்களும் என்னுடனேயே இருந்து தொடர்ந்து நடத்துவது என்று முடிவு செய்தார்கள். அவர்கள் இதை விட்டுப் போக மாட்டேன் என்று உறுதியாகத் தெரிவித்து விட்டார்கள் என்றாலும், காந்தி சத்தியாக்கிரகத்திற்கு விரோதமாக எழுதிப் பணத்தையும் ஆளையும் தடுத்து விடுவாரோ என்று சிலர் பயப்பட்டார்கள்.

அந்தச் சமயம் சாமி சிரத்தானந்தா அவர்கள் வைக்கம் வந்து தான் பணத்துக்கு வகை செய்வதாகச் சொன்னார். பிறகு காந்தி கட்டளைக்கு விரோதமாவே சத்தியாக்கிரகம் நடந்து வந்தது.

இதற்கிடையில் நடந்த ஒரு நிகழ்ச்சியும் கவனிக்கத்தக்கது. எங்கள் போராட்டத்துக்குப் பெரிய மரியாதையையும், செல்வாக்கையும், தேடிக் கொடுத்துவிட்டது, இந்தக் காந்தி கட்டளை. இந்த சமயத்தில் என்னை மறுபடியும் பிடித்து 6 மாதக் கடினக் காவல் விதித்து ஜெயிலில் போட்டு விட்டார்கள். பிறகு சத்தியாகிரகத்தை நிறுத்து வதற்காகவும், எங்களை அழிப்பதற்காகவும் என்று நான் ஜெயிலில் இருக்கிற சமயத்தில் இந்த நம்பூதிரி பார்ப்பனர்களும், சில வைதீகர்களும் சேர்ந்து கொண்டு சத்துரு சங்கார யாகம் என்னும் ஒன்றை வெகு தடபுடலாக ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து நடத்தினார்கள். ஒரு நாள் நடுச்சாமத்தில் தொடர்ந்து வேட்டுச் சத்தம் கேட்டது. நான் ஜெயிலில் விழித்துக் கொண்டிருந்தேன். ரோந்து வந்தவனைப் பார்த்துக் கேட்டேன், என்ன சேதி? இப்படி வெடிச் சத்தம் கேட்கிறது? இந்தப் பக்கம் ஏதாவது பெரிய திருவிழா நடக்கிறதா? என்று கேட்டேன். அதற்கு அவன் சொன்னான், மகாராஜாவுக்கு உடம்பு சவுக்கியமில்லாமல் இருந்தது. மகாராஜா நேற்று இராத்திரி திருநாடு எழுந்துவிட்டார் என்றான்.

அதாவது ராஜா செத்துப் போனார் என்று சொன்னான். அவ்வளவுதான், மகாராஜா செத்தார் என்றவுடன் எங்களுக்கு ஜெயிலுக்குள்ளாகவே ரொம்ப பெருமை வந்துவிட்டது. அவர்கள் பண்ணிய யாகம் அங்கேயே திருப்பி மகாராஜாவைக் கொன்றுவிட்டது என்றும், அந்த யாகம் சத்தியாக் கிரகக்காரர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும், மக்களிடையே இது ஒரு தனி மதிப்பை ஏற்படுத்திவிட்டது. அதன் பிறகு அரசாங்கம் எங்களையெல்லாம் ராஜாவின் கருமாதியை முன்னிட்டு விடுதலை செய்தனர். எதிரிகள் குரலும், கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிவர ஆரம்பித்தது.

ராணியும் கூப்பிட்டு எங்களோடு ராஜி பண்ணி ஒரு உடன்பாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்தவுடன், அப்போது சமஸ்தானத்தில் திவானாக இருந்த ஒரு பார்ப்பான் என்னிடத்தில் நேரே ராணி பேசக் கூடாது என்று கருதி திரு. இராஜகோபாலாச்சாரிக்குக் கடிதம் எழுதினார். இராகோபாலாச்சாரியும் எங்கே என்னிடத்தில் ராஜி பேசி உடன்பாட்டிற்கு வந்தால் எனக்கு மரியாதையும், புகழும் வந்து விடுமே, அந்த மாதிரி வரக்கூடாது என்று கருதி, இதைக் காந்தியாருக்கே அந்த வாய்ப்பு அளித்து காந்தியின் மூலமே காரியம் நடந்ததாக உலகுக்குக் காட்ட வேண்டுமென்று தந்திரம் செய்து காந்திக்குக் கடிதம் எழுதினார். எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. எப்படியாவது காரியம் வெற்றியானால் போதும்; நமக்கு பேரும் புகழும் வருவது முக்கியமல்ல என்ற கருத்தில் நானும் ஒப்புக் கொண்டேன்.

காந்தியும் புறப்பட்டு வந்தார். ராணியோடு காந்தி பேசினார். ராணி காந்தியோடு பேசியபோது ராணி தெரிவித்தார்கள், நாங்கள் ரோடுகளைத் திறந்து விட்டுப் போகிறோம். ஆனால், அதை விட்டவுடன் நாயக்கர் கோயிலுக்குள் போக உரிமை வேண்டும் என்று கேட்டு ரகளை செய்தால் என்ன செய்வது? அதுதான் தயங்குகிறோம் என்றார்கள். உடனே காந்தி டி.பி.யில் தங்கியிருந்த என்னிடத்தில் வந்து ராணி சொன்னதைச் சொல்லி என்ன சொல்லுகிறாய்? இதை ஒப்புக் கொண்டு விடுவது நல்லது என்றார். நான் சொன்னேன் பப்ளிக் ரோடு திறந்து விடுவது சரி! ஆனால் அதை வைத்துக் கொண்டு கோயிலைத் திறந்து விடும்படி கேட்க மாட்டோம் என்று எப்படி நாம் உறுதியளிப்பது? கோயில் பிரவேசம் என்பது காங்கிரசின் இலட்சியமாக இல்லாவிட்டாலும் எனது இலட்சியம் அதுதானே! அதை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்? வேண்டுமானால் ராணிக்கு ஒரு வார்த்தை சொல்லுங்கள். இப் போதைக்கு அது மாதிரி கிளர்ச்சி எதுவுமிருக்காது. கொஞ்ச நாள் அது பற்றி மக்களுக்கு விளங்கும்படி பிரச்சாரம் செய்து, கலவரத்திற்கு இடமிருக்காது என்று கண்டால்தான் கிளர்ச்சி ஆரம்பிக்கப்படலாம் என்று சொல்லுங்கள் என்று சொன்னேன். அதைக் காந்தி ராணியிடம் சொன்னவுடன் ராணியார் ரோட்டில் யார் வேண்டுமானாலும் நடந்து செல்லலாம் என்று உத்தரவு போட்டு பொது சாலையாக ஆக்கினார்கள். இவ்வாறு பெரியார் எழுதி இருக்கிறார்.

 (புரட்சி பெரியார் முழக்கம், பிப்ரவரி 2019).

Tuesday, November 14, 2023

பெரியார் என அழைத்த பினாங்கு ஜானகி அம்மையார்

 1930 ஆம் ஆண்டிலேயே  “பெரியார்” என்றழைத்த பினாங்கு ஜானகி அம்மையார்.

(முரசொலி பாசறைப்பக்கத்தில் வெளியான என் கட்டுரை-வழக்கறிஞர் அருள்மொழி)

‘கல்வியே பெண்களுக்கு கம்பீரத்தை வழங்கும் ‘ என்ற கருத்தை விடாமல் வலியுறுத்திய பினாங்கு ஜானகி, “ பெண்களுக்கு வேண்டிய சீதனம் யாது ? “ என்ற தலைப்பில்,6.4.1930 அன்று வெளியான குடி அரசு ஏட்டில்  கல்வியின் மேன்மையையும், தந்தை பெரியார் அவர்களின்  ஒப்பற்ற அன்பையும் மனம் நெகிழும்படி எழுதினார் பினாங்கு ஜானகி.

“ உதாரணமாக, நம் திரு.ராமசாமி பெரியார் அவர்கள் இந்நாடு வருவதாக பெரிய ஆர்ப்பாட்டமாக இருந்த காலத்தில் பெரியார் அவர்களைக் காண பெரும் ஆவல் கொண்டிருக்கும் பொழுது,பெரியார் வர இரண்டொரு தினத்திற்கு முன் பிரசவ வேதனையால் நான் ஆஸ்பத்திரி செல்ல நேர்ந்தது.பெரியாரைப் பார்க்க கொடுத்து வைக்காது எங்கு எனது உயிர் போய்விடுமோ! வென்றஞ்சி சஞ்சலப்பட்ட பட்டுக் கொண்டிருக்கையில், பெரியார் அவர்கள் பினாங்கில் இறங்கிய நாளன்று என்னை விசாரித்து எனது ஷேமலாபங்களைக் கேட்டு,ஈப்போவிற்கு அவசரமாகப் போக வேண்டியதிருப்பதால், திரும்புவாயில் என்னைப் பார்ப்பதாய்ச் சொல்லிவிட்டுச் சென்றார் என்றே சேதி கிடைத்தது.இதனிடையில் ஆண்குழந்தை பிறந்து நற்சுகமடைந்தேன். திரும்ப பெரியார் பினாங்கு வந்தவுடன்,பெரியார் அவர்களும் ஶ்ரீமதி மணியம்மையார் அவர்களும் என்னைச் சந்தித்து வாரியெடுத்து, மார்போடணைத்து என் ஷேமங்களைக் கேட்டார்கள். அதன்பின் சுவாமி சிதம்பரனார், திரு பொன்னம்பலனார், ஶ்ரீமான் நடராஜன் இவர்களெல்லோரும் வந்து என் நற்ஷேமங்களைக் கேட்டார்கள்.

 இவர்களெல்லாம் என்னை எதற்காக மதித்து என்ஷேமங்களைக் கேட்க வேண்டும். நான் அவ்வளவு பெரிய பணக்காரியுமல்ல. என் தாய் தகப்பனார்கள் கருணை வைத்து ஏதோ சிறிது கல்வி என்ற ஆபரணத்தை கற்க வைத்ததினால் அன்றோ இப்பெரியார்கள் என்னை மதித்தார்கள்.நானும் ஏதேனும் பித்தளைப் பாத்திரங்களைசீதனமாய்க் கொண்டு சட்டி சுரண்டவும்,அடுப்பூதும் தொழில்களில் மட்டும் இருப்பேனாகில்என்னை அடுப்பங்கரையைத் தவிர வேறு ஒருவரும் மதியார். ஆனபடியால்,பெண்கள் நன்மதிப்பு பெறவேண்டுமானால்,கல்வி என்ற கண்ணிறைந்த ஆபரணத்தை அணியவேண்டும். “

கல்வியின் தேவை பற்றிய இந்தச் சிந்தனை அவரது மனதில் எவ்வளவு ஆழமாக இருந்ததென்றால்  1929 ஆம் ஆண்டு மலேயா சுற்றுப்பயணத்தில்,  தந்தை பெரியாருக்கு எத்தனையோ பேர் பரிசுப் பொருள்களைக் கொடுத்தார்கள். ஆனால் பினாங்கு ஜானகியோ சிறிய எழுத்துக்களைப் படிக்க உதவும்  ‘ஒரு கைப்பிடி போட்ட பூதக்கண்ணாடியை’ தந்தை பெரியாருக்கு வழங்கினார். அதேபோல் நாகம்மையாருக்கு ஒரு் சிறிய  பவுண்டன் பேனா பென்சில் அடங்கிய பெட்டியும் வழங்கினார்.

இக்கட்டுரையில் நமக்கு இன்னொரு செய்தியும் கிடைக்கிறது. 1938 ,நவம்பர் 13 அன்று தந்தை பெரியாரை  ‘பெரியார்’ என்று மட்டுமே அழைக்க வேண்டும்  என்ற தீர்மானத்தை  தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு நிறைவேற்றியது என்பது வரலாறு. அதற்கு பல ஆண்டுகள் முன்பே அவர் ‘பெரியார்’ என்றும் ராமசாமிப் பெரியார் என்றும்  அழைக்கப்பட்டார் என்பதை பினாங்கு ஜானகி அவர்களின் கட்டுரை உறுதி செய்கிறது. 

1940 களில் நடந்த இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் மலேசியாவைக் கைப்பற்றியது. பின்னர் அவர்களை வெளியேற்றி மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சி வந்தபோது சீன மக்களில் ஒரு குழுவினர் அரசை எதிர்த்து கிளர்ச்சியும் கொரில்லா யுத்தமும் நடத்தினர். அதனால்1948  ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு மலேசியாவில் அவசர நிலையை அறிவித்தது. அது 1960 ஆம் ஆண்டு வரை நீடித்தது. மக்கள் கடுமையான சட்ட திட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் எதிர்கொண்டார்கள். அந்த சூழ்நிலையில் திடீரென்று அப்பாவு பண்டிதரும் ஜானகி அம்மையாரும் நேரில் விசாரணைக்கு வரவேண்டுமென்று அரசு அதிகாரிகள் அழைத்தனர். விசாரணையில் அவர்கள் எதிர்கொண்ட கேள்வி “ எதற்காக உங்கள்  மகனுக்கு சன்யாட்சென் என்று பெயர் வைத்தீர்கள் ?” என்பதுதான்.

“ நாங்கள் பகுத்தறிவாளர்கள். சமூக சீர்திருத்தவாதிகள்.அதனால் எங்கள் மூத்த மகனுக்கு சமரசம் என்றும் மகளுக்கு சம தர்மம் என்றும்   பெயரிட்டோம்.மூன்றாவது மகனுக்கு, இந்தியாவில் பெண்கள் கணவனின் சிதையிலே  உடன்கட்டை ஏற்றப்பட்ட கொடுமையை எதிர்த்துப் போராடிய  இராஜாராம் மோகன்ராய் பெயரை வைத்தோம். கடைசி மகனுக்கு சீனத்து சீர்திருத்தவாதியும் புதிய சீனத்தின் தந்தை என்று  பாராட்டப்பட்டவருமான சன்யாட்சென் பெயரை வைத்தோம். “ என்று ஜானகியும் அப்பாவு பண்டிதரும் கொடுத்த விளக்கத்தை ஏற்று அவர்களை தொல்லை செய்யாமல் விட்டது பிரிட்டிஷ் ஆட்சி. எந்த ஆதிக்கத்திற்கும் அஞ்சாத அப்பாவு ஜானகி இணையர்கள் தொடர்ந்து இயக்கப்பணியை ஆற்றினார்கள். 

1954 ஆம் ஆண்டு தந்தை பெரியார்,அன்னை மணியம்மையார் மற்றும் தோழர்களுடன் மலேசிய நாட்டில் கொள்கைப் பிரச்சாரம்  மேற்கொண்டபோது மிகச் சிறப்பாக கூட்டங்களை நடத்தி தந்தை பெரியாருக்கும் உடன் வந்த தோழர்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பை வழங்கினர் அப்பாவு பண்டிதரும்  ஜானகி அம்மையாரும் . 

சித்த வைத்தியம் செய்வதில் புகழ்பெற்றவராக விளங்கிய அப்பாவு பண்டிதர் தமிழகத்தில் சிலகாலம் தங்கி இருந்தார். அப்போது அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவர்களின் முயற்சிகளைத் தாண்டி உடல் நலிவுற்று  26.1.59 அன்று  இறந்துவிட்டார். சென்னையில் நடைபெற்ற அவரது இறுதி நிகழ்வில  தந்தை பெரியார் அவர்கள் பங்கேற்று ஜானகி அம்மையாருக்கு  ஆறுதல் கூறினார்.

அப்பாவு பண்டிதரின் மறைவு ஜானகி அம்மையாருக்கு மிகப்பெரும் இழப்பு., ஒத்த கொள்கையால் இணைந்த முப்பதாண்டுகால சுயமரியாதை மணவாழ்வு முடிவுற்ற பின்னும் ஜானகி அம்மையார் திராவிட இயக்க வீராங்கனையாகவே வாழ்ந்தார். தன்  பிள்ளைகள்  பகுத்தறிவு நெறியுடன் வாழவேண்டும் என்று வலியுறுத்தினார். தாயும் தந்தையுமாய் தானே பிள்ளைகளுக்கு வழிகாட்டினார்.அனைவருக்கும்  சுயமரியாதைத் திருமணமே நடத்தினார். முதுமையிலும் இயன்றவரை கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

அவரது தொண்டினை மறவாது, 2004 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் திராவிடர் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்க மலேசியா சென்றிருந்தபோது ஜானகி அம்மையாரை நேரில் சந்தித்து அவரை நலம் விசாரித்தார்.. முதுமையினால் சோர்வுற்ற போதும் தளராத கொள்கை உறுதியுடன் அவருடன் உரையாடினார் ஜானகி அம்மையார்.  கல்வியே பெண்ணுக்கு கம்பீரம் என்று இளம்வயதிலேயே எடுத்துரைத்த ஜானகி அம்மையாரின் வாழ்வு 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிவுற்றது. அந்த வாழ்க்கை தரும் படிப்பினைகளுக்கு முடிவேது .?

Sunday, November 12, 2023

சிலம்பு பற்றி பெரியார்

 சிலம்பு பற்றிய பெரியாரின் பார்வை

“இந்த அம்மாளின் ( கண்ணகி ) கற்பைப் பற்றிச் சொல்வதாயி ருந்தால், தேவடியாள் வீட்டுக்குக் கணவன் போனதை அறிந்த போது, அந்தத் தேவடியாளை ஏதாவது செய்திருக்க வேண்டும். தாசி மாதவி, கோவலன் கண்ணகியின் கணவன் என்று தெரிந்து அவனை அனுபவிக்கிறாள். தேவடியாளுக்கு இதுவா தர்மம்? அப்படிப் பட்டவளுக்குக் கண்ணகி பொருள் கொடுக்க வசதி செய்யலாமா? கோவலன் ஒழுக்கமற்றவன். தாசி ஒழுக்கமற்றவள். கண்ணகி மடப்பெண்” என்று கடிந்து கொள்கிறார். சிலப்பதிகாரத்தின் சிறப்புகளைப் புகழ்ந்திட முனைவோரைப் பார்த்து “இந்தப் பிரச்சார பிரம் மாக்களின் மாப்பிள்ளைமார்கள் தேவடியாள் வீட்டில் போய் இருந்தால் இவர்கள் பெண்கள் தாசி வீட்டிற்குப் பணம் நகை எல்லாம் அனுப்பச் சம்மதிப்பார்களா?” 

கண்ணகி மதுரையை எரித்ததைப் பற்றிச் சொல்லும் போது, “இந்த அம்மாளுக்குக் கோபம் வந்ததும் தன் மார்பைத் திருகி எறிகிறாள். இது என்ன புத்தி! மார்பைக் கையால் திருகினால் அது வந்துவிடுமா? இந்தப்படி நடந்த சங்கதியும் அனுபவமும் சிலப்பதிகாரம் தவிர வேறு எதிலும் எங்கும் காணக் கிடைக்கவில்லை. அந்தப்படி திருகிப் பிடுங்கின மார்பு (முலை) வீசி எறிந்தால் அது நெருப்புப் பற்றிக் கொள்ளுமா? அதில் பாஸ்பரஸ் இருக்குமா? இந்த மூடநம்பிக்கைக் கற்ப னையானது என்ன பயனைக் கொடுக்கிறது? இதனால் கண்ணகிக்கு வீரம் இருந்ததாகக் கூறமுடியுமா?”

“இராமன் பார்ப்பான் - ஆகவே சூத்திரனைக் கொன்றான் என்பது இராமாயணம். பார்ப்பானை மட்டும் காப்பாற்ற வேண்டும் என்பது சிலப்பதிகாரம். எவ்வளவு முட்டாள் தனமான கொடுமை செய்தாலும் பார்ப்பனர்களைக் காப்பாற்றினால் அவள் பதிவிரதை ஆகிவிடுவான் என்பது சிலப்பதிகாரம். பாண்டியன் விசாரணை செய்து அவனுக்குக் கிடைத்த உண்மையின் மீது கோவலனுக்குத் தண்டனை விதித்தான். ஆனால் கண்ணகி ஒரு விசாரணையும் செய்யாமல் ஒரு குற்றமும் காணாமல் நிரபராதிகளான மக்களை, பெண்களைச் சுட்டு எரித்துக் கொன்றாள். அவள் வணங்கத்தக்கவள், கற்புக்கரசி தெய்வமானவள். பாண்டியன் குற்றவாளி. இதுதானே சிலப்பதிகாரக் கதை. இதுதான் தமிழர் பண்பாம்! எவ்வளவு முட்டாள்தனம் ?

Saturday, November 11, 2023

சமரச சன்மார்க்கம் - பெரியார்

 சமரச சன்மார்கம்.

                           புரட்சியாளர் பெரியார்.

அக்கிராசனர் அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே!

சமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக்கூடியதே தவிர காரியத்தில் நடக்க முடியாததாகும். ஏனெனில், எது எது சமரச சன்மார்க்கம் என்கிறோமோ அவற்றிற்கு நேர் விரோதமாகவே மனித வாழ்க்கை அமைக்கப்பட்டிருக்கின்றது. இது நம் நாட்டில் மட்டுமல்ல; உலகம் முழுவதிலும் இவ்வாறே அமைக்கப் பட்டிருக்கின்றது.

முதலாவது கடவுள், மதம், விதி, சாதி, பணம், தொழில் முதலியவைகள் இயற்கைக்கு மாத்திரமான சமரச சன்மார்க்கமல்லாமல் - நியாய பூர்வமான சமரச சன்மார்க்கத்திற்கும் விரோதமாய் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் ஒருவன் சமரச சன்மார்க்கத்தைப் பற்றிப் பேசவேண்டுமானால் மேற்கண்ட கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு சமரச சன்மார்க்கம் ஏற்படவேண்டும் என்கின்ற முறையில் யோக்கியர்களாலோ, அறிவாளிகளாலோ பேசமுடியாது. ஏனெனில், அவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட தத்துவத்தில் அமைக்கப்பட்டிருப் பவைகளாகும்; அதோடு மாத்திரமல்லாமல், சமரசமும் சன்மார்க்கமும் கூடாது என்னும் தத்துவத்தின்மீதே அமைக்கப் பட்டுள்ளவைகளாகும்.

மேற்கண்டவை சம்பந்தமான கட்டுப்பாடுகளையெல்லாம் அடியோடு அழிப்பதுதான் சமரச சன்மார்க்கம் என்று சொல்வேன். இது உங்களில் பலருக்கும் உங்கள் பாதிரிமார்கள், எஜமானர்கள், அக்கம் பக்கச் சாதியார்கள், சாமிகள், மதக்காரர்கள் ஆகியவர்களுக்கு வருத்தமாயும் விரோதமானவைகளா யும் இருக்கும். நான் உண்மையான சமரச சன்மார்க்கம் அடைந்த தேசத்தார் - அடைந்த சமூகத்தார் அடைந்த தனிமனிதர்கள் யார்யாரைக் கருதுகின்றேனோ அவர்கள் எல்லாம் மேற்கண்ட இடையூறானவைகளைத் தகர்த்தெறிந்துதான் சமரச சன்மார்க்கம் அடைந்தார்கள்; இவைகளில் சிறிது தாட்சண்யப்பட்டவர்கள் கூட தோல்வியடைந்து விட்டார்கள்.

கடவுளையும், மதத்தையும், பணக்காரனையும் வைத்து சமரச சன்மார்க்கம் செய்ய முடியாதென்று கருதித்தான் இரஷியர்கள் பாதிரிமார்கள் தொல்லைகளை யும், சர்ச்சுகளையும் பணக்காரத் தன்மைகளையும் அழித்துத்தான் சமரசம் பெற்றார்கள்.

தற்போதைய இரஷியச் சரித்திரத்தில் சமரசத்திற்குப் பாதிரிமார்கள் எதிரி களென்றே தீர்மானிக்கப்பட்டு, அவர்களை அழித்துவிட்டார்கள். அழித்து விட்டார்கள் என்றால் கொன்றுவிட்டார்கள் என்பது கருத்தல்ல. ஏதோ சிலரை, அதாவது சமரசத்திற்கு எதிர்ப்பிரச்சாரம் செய்தவர்களில் சிலரைத்தவிர மற்றவர்களைப் பட்டாளத்தில் சேரச் செய்தார்கள்; சிலரை விவசாயத்தில் போட்டார்கள்; சிலரை வைத்தியத்தில் போட்டார்கள்; வேறு காரியங்களுக்கு உதவாதவர்களைக் காவல் காக்கப் போட்டார்கள். அது போலவே, சர்ச்சுகளைத் தொழிற்சாலை, பள்ளிக் கூடம் முதலியவைகளாக மாற்றினார்கள். இவைகளுக்கு உதவாத போக்குவரத்துக்கு இடையூறான வைகளை இடித்தார்கள். பணக்காரர்களின் சொத்தைப் பிடுங்கிப் பொதுஜன சொத்தாக்கி, பூமி இல்லாதவர் களுக்குப் பூமி, தொழிலில்லாதவர்களுக்குத் தொழில்; படிப்பில்லாதவர் களுக்குப் படிப்பு முதலாகியவைகள் கொடுப்பதற்கு உபயோகப்படுத் தினார்கள். கலியாண முறையை ஒழித்துப் பெண் அடிமையை நீக்கினார்கள். கண்டபடிப் பன்றிகளைப் போல் பிள்ளை பெறும் முறையை நிறுத்தச்செய்து, அளவுபடுத்தி ஆண் பெண் இன்ப வாழ்க்கைக்கு வழி செய்தார்கள். இன்னும் பல காரியங்கள் செய்தார்கள்.

 ஆனால், நமக்கு இவை பொருந்துமா என்று சிலர் கேட்பார்கள். யார் கேட்பார்களென்றால், பணக்காரன், பாதிரி, உயர்ந்த சாதிக்காரன், அரசன் ஆகியவர்கள்தான் கேட்பார்கள். இவர்கள் நமது நாட்டு ஜனத் தொகையில் 100க்கு 5 அல்லது 6 பேர்களே இருப்பார்கள். ஆதலால் குறைந்த எண்ணிக்கை யுடையவர்கள் - அதிலும் தங்கள் சுயநலத்திற்கு என்று சில கட்டுப்பாடுகள் இருக்கவேண்டுமென்றால் யார் சம்மதிப்பார்கள்? முதலாவது, இவர்கள் ஆதிக்கத்தை ஒப்புக்கொள்ளுகிறீர்களா? இருக்கவேண்டும் என்று சொல்லு கின்றீர்களா? என்ன சொல்லுகின்றீர்கள்?

 ஆகவே, கடவுள், மதம், பணக்காரன் இம்மூன்றும் இன்றே ஒழிய வேண்டும் என்கின்ற ஆத்திரமுமில்லை. ஏனெனில், இன்னும் அனேக நாடுகள் இருக்கின்றன அவை இப்போதுதான் முயற்சிக்கின்றன. ஆகையால், வரிசைக் கிரமத்தில் அந்த முறை நமக்கு வரும் என்கின்ற தைரியம் உண்டு. ஆனால், இங்கு மற்ற நாட்டில் இல்லாத சாதி முறை என்பது இச் சன்மார்க்கத்திற்கு விரோதமாய் இருக்கின்றது. அதை அழித்தே ஆகவேண்டும். நீங்கள் இவற்றிற்கெல்லாம் எத்தனைக் காலமாய் அடங்கி வந்திருக் கிறீர்கள்? என்ன பலன் அடைந்துள்ளீர்கள்? இன்றைய நிலையேதான் உங்கள் வாழ்க்கையின் பலன் என்று நினைத்தால், எதற்காக நாளைய தினம் வரை உயிருடன் இருக்கின்றீர்கள்?

மனிதன் வாழ ஏதாவது இலட்சியம் இருக்கவேண்டும். சும்மா அரைத்த மாவை அரைத்துக் கொண்டிருப்பதுபோல், வெறும் ஆகாரம் உட்கொள்ளவும் உண்டதை மலமாக்கவும் என்பதற்காகவும் அறிவற்ற உயிர்கள் இருக்கின்றனவே! இவை போதாவா? இனி, மனிதன் பகுத்தறிவுள்ளவன் என்றும் பண்டிதன் என்றும், பணக்காரன் என்றும் சொல்லிக்கொண்டு கடவுளை அடையும் மார்க்கங்களையும் பின்பற்றி, கடவுளென்று பணத்தையும் நேரத்தையும் ஊக்கத்தையும் செலவு செய்கின்ற மனிதனும் - நல்ல ஆகார வஸ்துக்களை மலமாக்குவதற்காக வாழவேண்டுமா? இவ்வித மனித சமூகம் அழிந்து போவது ஜீவகாருண்யத்தை உத்தேசித்தாவது மிகவும் அவசியம்.

உங்கள் இலட்சியங்களை அடைய முயலுங்கள்; மற்றொரு பிறவிக்கு என்று அயோக்கியர்களின் வார்த்தைகளை நம்பி எதிர்பார்த்துக்கொண்டு வீணாய் ஏமாந்து போகாதீர்கள். முன்பிறவி சங்கதி ஏதாவது ஒன்று, உங்கள் சரீரத்திலிருந்து உதிர்ந்த ஒரு மயிர்த்துண்டாவது உங்களுக்கு இந்தப் பிறப்பில் ஞாபகமிருந்தால் அல்லவா இந்தப் பிறவியின் காரியங்களை அடுத்த பிறவியில் அனுபவிக்க முடியப் போகின்றது? அன்றியும், கடவுள் உங்களை இப்படிச் செய்துவிட்டார் என்று முட்டாள்தனமாய்க் கருதி உங்கள் துன்பத்தை நிலை நிறுத்தாதீர்கள்! உணர்ச்சியும் அறிவும் அற்ற சோம்பேறிகளுக்குத்தான் கடவுள்செயல் பொருத்தமாக இருக்கும். நீங்கள் ஏன் சோம்பேறியாய் இருக்கின்றீர்கள்!

 கடவுளுக்குக் கோயில்கட்டி, உருப்படிகளை அதிகமாக்கி நமது குறைகளையும் கஷ்டங்களையும் முறையிட்டு, முறையிட்டு அழுதுவந்ததுபோதும். இனி அந்தப்பக்கம் திரும்பிப் பாராதீர்கள். உங்கள் அறிவையும் மனிதத் தன்மையையும் திரும்பிப் பாருங்கள்; அது சொல்கின்றபடி நடவுங்கள்; அதனிடம் நம்பிக்கை வையுங்கள். ஆகையால், மற்றநாட்டு வர்த்தமானங்களை உணர்ந்து நீங்கள் நடுநிலைமையில் இருந்து உங்கள் அறிவுக்கே பூசை போட்டீர்களானால், வந்துவிட்டது அன்றே சமரசம்! சன்மார்க்கம்! விடுதலை! இதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை.

(பெருந்துறை சமீபம் கிரேநகரில், 26.1.1931இல் சொற்பொழிவு. குடிஅரசு, 19.2.1931)

Friday, November 10, 2023

'நிர்வாணம்' குறித்து பெரியார்

 நிர்வாணம் என்பது என்ன? பெரியாரின் விளக்கம் ஆக முக்கியமான ஒன்று

- பேரா. அ. மார்க்ஸ்

(தந்தை பெரியார் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது நிர்வாண சங்கம் ஒன்றில் பங்கேற்ற  முழு நிர்வாணப் புகைப்படம் ஒன்று உண்டு. அது குறித்து அல்ல இந்தப் பதிவு.  இது ”நிர்வாணம்” என்கிற தத்துவார்த்தக் கோட்பாடு குறித்த பெரியாரிய விளக்கம்.)

பெரியார் ஈ.வெ.ரா அவர்களை எல்லோரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கடவுள் மறுப்பாளர் (Atheist) என்று மட்டுமே நினைத்துக் கொண்டுள்ளனர். அது மிகவும் தவறு. அது அவரைச் சுருக்கிப் பார்ப்பது.          அவர் கடவுள் மறுப்பாளரும்தான். ஆனால் அவரின் பரிமாணங்கள் இன்னும் பல. கற்பு, தேசியம், ஒழுக்கம், சாதி, மதம், கடவுள் எனப் புனிதமாகக் கட்டமைக்கபட்ட அனைத்தையும் எதிர்த்தவர். பல்லாயிரக் கணக்கான மக்கள் என்ன நினைப்பார்களோ என எண்ணாமல் அவற்றை விமர்சித்தவர். 

தன்னை அவர் ஒரு “நிர்வாணமான” சிந்தனையாளன் என்றார். இந்திய அவைதிக மதங்களான பௌத்தம், சமணம் முதலானவை முன்வைத்த “நிர்வாணம்” எனும் கருத்தை அவர் , 

"ஏற்கனவே சமூகம் நம் சிந்தனையிலும், நம்பிக்கைகளிலும் திணித்துள்ள அபத்தங்களை நீக்கி நிர்வாணம் ஆக்கிக் கொள்வது” 

எனும் கருத்தில் மொழிந்தார். அதாவது “நிர்வாணமான சிந்தனை” உடன் ஒவ்வொன்றையும் அணுக வேண்டும் என்றார். அதாவது சமூகம் நம் மீது திணித்துள்ள (மூட) நம்பிக்கைகளை ஒதுக்கிவிட்டு ஒவ்வொன்றையும் (எடுத்துக்காட்டாகக் ‘கற்பு’) உன் சுய சிந்தனையுடன் அணுக வேண்டும் என்றார்.

”பற்றறுத்தல்” – என்பதற்கும் அவர் புதிய பொருளை முன்மொழிந்தார்: மூன்று பற்றுக்களை நாம் விட்டொழிக்க வேண்டும் என்றார். அவை : 

”தேசாபிமானம், பாஷாபிமானம், மதாபிமானம்” – 

அதாவது தேசப்பற்று, மொழிப்பற்று, மதப் பற்று – இவற்றை விட்டொழிக்க வேண்டும் என்றார். மொத்தத்தில் அவர் எந்தப் பற்றையுமே ஏற்கவில்லை.

தேசம் என்பதை அவர் ஒரு “கற்பிதம்” என்றார். Nation என்பதை ஆண்டர்சன் போன்ற நவீன சிந்தனையாளர்கள் சில ஆண்டுகளுக்கு முன் “Imagined Community” எனச் சொன்னதை அறிவோம். ஒரு முக்கியமான கருத்தாக்கமாக இன்றளவும் உலகெங்கும் கருதப்படுகிறது. ”தேசம் ஒரு கற்பிதம்” என்பதன் ஊடாகப் பெரியார் அதை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே சொன்னார். “நான் ஒரு தேசத் துரோகி” என்றும் சொல்லிக் கொண்டார். 

இந்த நாட்டுக்கு “காந்தி தேசம்” என்று பெயர் வைக்க வேண்டும் எனச் சொன்னர். ஆம். காந்தியை மிகச் சரியாக மதிப்பிட்டார்.

காலமெல்லாம் ”பகுத்தறிவு” பற்றிப் பேசி வந்த அவர் 

அதையும் de-construct பண்ணத் தயங்கவில்லை. 

‘'பகுத்தறிவு, ஒழுக்கம், தியாகம், பொது நன்மை, பொது நோக்கு… எல்லாமே வெங்காயங்கள்தான்” - -என்றும் அவர் கூறியது உண்டு. 

தமிழை அவர் ”காட்டுமிராண்டி மொழி” என்றதை நீங்கள் அறிவீர்கள். 

காலமெல்லாம் பகுத்தறிவு குறித்துப் பேசிய அவர்தான்: “ இந்தப் பகுத்தறிவை வைத்துக் கொண்டு மனிதன் என்ன பண்ணினான்?” – என்றும் கேட்டார்.

“தன் பிள்ளை குட்டி, பேத்தி, பிதுர் ஆகிய பிந்திய சந்ததிகளைப் பற்றிய முட்டாள்தனமான கவலை பகுத்தறிவுள்ள மனிதனுக்குத்தான் இருக்கிறதே ஒழிய பகுத்தறிவு இல்லாதவைகளுக்கு இல்லை…. பகுத்தறிவில்லாத எந்த ஜீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தின் உழைப்பில் வாழ்வதில்லை (அதாவது சுரண்டுவது இல்லை), தன் இனத்தின் மீது சவாரி செய்வது இல்லை.”

--- தோழர்களே! பெரியார் நாம் நினைப்பதுபோல அத்தனை எளிதானவர் இல்லை. அவர் ஒரு Philosopher, அதே நேரத்தில் களத்தில் இருந்தவர்.

Wednesday, November 8, 2023

“நாஸ்திகத்”திற்கு முதல் வெற்றி தந்தை பெரியார் நமது மாகாணச் சுயமரியாதை மகாநாடு செங்கற்பட்டில் நடந்த பிறகு நமது பார்ப்பனர்கள் அம்மகாநாட்டுத் தீர்மானங்களைத் திரித்துக் கூறியும், பல கூலிகளை விட்டு விஷமப் பிரசாரம் செய்யச் செய்தும் வருவதோடு அதையே இவ்வருஷத்திய தேர்தல் பிரசாரமாக வைத்துக் கொள்ளலாம் எனவும் கருதி சில காலிகளுக்குப் பணஉதவி செய்து உசுப்படுத்திவிட்டு வேடிக்கை பார்ப்பது யாவரும் அறிந்ததாகும். இந்தப்படி காலிகள் மூலம் செய்யப்படும் விஷமப் பிரசாரம் இப்பார்ப்பனர்களுக்கு எவ்வளவு தூரம் பயன்பெறும் என்பதற்குச் சமீபத்தில் ஒரு சரியான பரீiக்ஷ நடத்திப் பார்த்தாகிவிட்டது. அதாவது, சென்னைப் பச்சையப்பன் தர்ம ட்ரஸ்டிகளில் ஒரு பார்ப்பன ட்ரஸ்டியின் ஸ்தானம், அதாவது ‘சுதேசமித்திரன்’ ‘இந்து’ ஆகிய பத்திரிகைகளில் பத்திராதிபரான திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் என்கின்ற ஒரு பார்ப்பனரின் ஸ்தானம் காலாவதி ஆனதும் அந்த ஸ்தானத்திற்கு மறுபடியும் திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் போட்டி போட தைரியமில்லாமல் விட்டுவிட்டதால் மற்றொரு பார்ப்பனராகிய அதாவது காலித்தனத்திலும், திரு.ரங்கசாமி அய்யங்காரை விட பார்ப்பனத்திமிரிலும், சூழ்ச்சியிலும் தலைசிறந்து விளங்கும் திரு.புர்ரா சத்தியநாராயணா அய்யர் என்ற பார்ப்பனரை நிறுத்தி வேலை செய்தார்கள். ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக திரு.ஏ. இராமசாமி முதலியார் நின்றார். இந்தத் தேர்தலில் முக்கியமாகப் பார்ப்பனர்களே பெரும் பான்மையான ஓட்டர்களாயிருந்தும், ஒருபக்கம் பார்ப்பனரல்லாத பிரமுகர்களில் ஒருவரான திரு.சி. டாக்டர். நடேச முதலியாரும் அவரது சகபாடிகளும் திரு.புர்ரா அய்யருக்கே தங்கள் ஓட்டுச்செய்தும் மற்றவர்களின் ஓட்டுகளைச் சேகரித்துக் கொடுத்தும், மற்றொரு பக்கம் சில பார்ப்பனர்கள் செங்கற்பட்டு மகாநாட்டுத் தீர்மானங்களைப் பற்றிக் காலித் தனமாய்க் கூலிகளை விட்டு, திரு. ராமசாமி முதலியாருக்கு எதிரியாய் இழிபிரசாரம் செய்தும் கடைசியாக திரு.ராமசாமி முதலியாரே வெற்றி பெற்றார். ஏனென்றால் இந்தக் காலிப் பிரசாரத்தையும் சூழ்ச்சியையும் சென்னைக் கார்ப்பரேஷன் மீட்டிங்கில் திரு.புர்ரா நடந்து கொண்ட மாதிரியையும் பார்த்த பிறகே சில பார்ப்பனர்கள் தைரியமாக வெளிவந்து வெளிப்படையாகவே திரு.ராமசாமி முதலியாருக்குத் தங்கள் ஓட்டுகளைக் கொடுத்தார்கள். இதிலிருந்து சுயமரியாதைப் பிரசாரமும் அதன் எதிர் பிரசாரமும் அநேக பார்ப்பனர்களை யோக்கியர்களாகும்படி செய்து கொண்டும் வருகின்றது என்பதும் வெளிப்படை. எனவே சுயமரியாதை இயக்கத்தாலும் செங்கற்பட்டு மகாநாட்டுத் தீர்மானங்களாலும் “நாஸ்திகம் ஏற்பட்டுவிட்டது,” “கடவுள்கள் ஒழிந்து போய்விட்டன” என்று சொல்லிக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்கக் கூலி வாங்கிக் கொண்டு புறப்பட்ட வீரர்களும், அவர்களுக்குக் கூலி கொடுத்த தலைவர்களும், இதிலிருந்தே பாடம் கற்றுக் கொண்டிருக்கவும், அதாவது ஜஸ்டிஸ் கட்சியின் “ஜீவநாடி” என்பவராகிய திரு.ராமசாமி முதலியார் அவர்கள் பார்ப்பனத் தொகுதி என்று சொல்லப்பட்ட, “செனட்” தொகுதியில் ஒரு சரியான பார்ப்பனரோடு நின்று பல பார்ப்பனரல்லாதார் விரோதமாய் நடந்தும், வெற்றி பெற்றார் என்றால் “நாஸ்திக”த்திற்கு, அதாவது செங்கற்பட்டுத் தீர்மானத்திற்கு முதல் வெற்றி அதுவும் சென்னையிலேயே ஏற்பட்டுவிட்டது என்பதிலிருந்து ஆஸ்திகப் பூச்சாண்டியின் மிரட்டல் இனிப் பலிக்காது என்பதை உணர்ந்து கொள்ளலாம். குடி அரசு - கட்டுரை - 07.04.1929 #நாஸ்திகத்திற்குமுதல்வெற்றி.

“நாஸ்திகத்”திற்கு முதல் வெற்றி

-தந்தை பெரியார்

நமது மாகாணச் சுயமரியாதை மகாநாடு செங்கற்பட்டில் நடந்த பிறகு நமது பார்ப்பனர்கள் அம்மகாநாட்டுத் தீர்மானங்களைத் திரித்துக் கூறியும், பல கூலிகளை விட்டு விஷமப் பிரசாரம் செய்யச் செய்தும் வருவதோடு அதையே இவ்வருஷத்திய தேர்தல் பிரசாரமாக வைத்துக் கொள்ளலாம் எனவும் கருதி சில காலிகளுக்குப் பணஉதவி செய்து உசுப்படுத்திவிட்டு வேடிக்கை பார்ப்பது யாவரும் அறிந்ததாகும். இந்தப்படி காலிகள் மூலம் செய்யப்படும் விஷமப் பிரசாரம் இப்பார்ப்பனர்களுக்கு எவ்வளவு தூரம் பயன்பெறும் என்பதற்குச் சமீபத்தில் ஒரு சரியான பரீiக்ஷ நடத்திப் பார்த்தாகிவிட்டது.

அதாவது, சென்னைப் பச்சையப்பன் தர்ம ட்ரஸ்டிகளில் ஒரு பார்ப்பன ட்ரஸ்டியின் ஸ்தானம், அதாவது ‘சுதேசமித்திரன்’ ‘இந்து’ ஆகிய பத்திரிகைகளில் பத்திராதிபரான திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் என்கின்ற ஒரு பார்ப்பனரின் ஸ்தானம் காலாவதி ஆனதும் அந்த ஸ்தானத்திற்கு மறுபடியும் திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் போட்டி போட தைரியமில்லாமல் விட்டுவிட்டதால் மற்றொரு பார்ப்பனராகிய அதாவது காலித்தனத்திலும், திரு.ரங்கசாமி அய்யங்காரை விட பார்ப்பனத்திமிரிலும், சூழ்ச்சியிலும் தலைசிறந்து விளங்கும் திரு.புர்ரா சத்தியநாராயணா அய்யர் என்ற பார்ப்பனரை நிறுத்தி வேலை செய்தார்கள். ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக திரு.ஏ. இராமசாமி முதலியார் நின்றார். 

இந்தத் தேர்தலில் முக்கியமாகப் பார்ப்பனர்களே பெரும் பான்மையான ஓட்டர்களாயிருந்தும், ஒருபக்கம் பார்ப்பனரல்லாத பிரமுகர்களில் ஒருவரான திரு.சி. டாக்டர். நடேச முதலியாரும் அவரது சகபாடிகளும் திரு.புர்ரா அய்யருக்கே தங்கள் ஓட்டுச்செய்தும் மற்றவர்களின் ஓட்டுகளைச் சேகரித்துக் கொடுத்தும், மற்றொரு பக்கம் சில பார்ப்பனர்கள் செங்கற்பட்டு மகாநாட்டுத் தீர்மானங்களைப் பற்றிக் காலித் தனமாய்க் கூலிகளை விட்டு, திரு. ராமசாமி முதலியாருக்கு எதிரியாய் இழிபிரசாரம் செய்தும் கடைசியாக திரு.ராமசாமி முதலியாரே வெற்றி பெற்றார். 

ஏனென்றால் இந்தக் காலிப் பிரசாரத்தையும் சூழ்ச்சியையும் சென்னைக் கார்ப்பரேஷன் மீட்டிங்கில் திரு.புர்ரா நடந்து கொண்ட மாதிரியையும் பார்த்த பிறகே சில பார்ப்பனர்கள் தைரியமாக வெளிவந்து வெளிப்படையாகவே திரு.ராமசாமி முதலியாருக்குத் தங்கள் ஓட்டுகளைக் கொடுத்தார்கள். இதிலிருந்து சுயமரியாதைப் பிரசாரமும் அதன் எதிர் பிரசாரமும் அநேக பார்ப்பனர்களை யோக்கியர்களாகும்படி செய்து கொண்டும் வருகின்றது என்பதும் வெளிப்படை.

எனவே சுயமரியாதை இயக்கத்தாலும் செங்கற்பட்டு மகாநாட்டுத் தீர்மானங்களாலும் “நாஸ்திகம் ஏற்பட்டுவிட்டது,” “கடவுள்கள் ஒழிந்து போய்விட்டன” என்று சொல்லிக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்கக் கூலி வாங்கிக் கொண்டு புறப்பட்ட வீரர்களும், அவர்களுக்குக் கூலி கொடுத்த தலைவர்களும், இதிலிருந்தே பாடம் கற்றுக் கொண்டிருக்கவும், அதாவது ஜஸ்டிஸ் கட்சியின் “ஜீவநாடி” என்பவராகிய திரு.ராமசாமி முதலியார் அவர்கள் பார்ப்பனத் தொகுதி என்று சொல்லப்பட்ட, “செனட்” தொகுதியில் ஒரு சரியான பார்ப்பனரோடு நின்று பல பார்ப்பனரல்லாதார் விரோதமாய் நடந்தும், வெற்றி பெற்றார் என்றால் “நாஸ்திக”த்திற்கு, அதாவது செங்கற்பட்டுத் தீர்மானத்திற்கு முதல் வெற்றி அதுவும் சென்னையிலேயே ஏற்பட்டுவிட்டது என்பதிலிருந்து ஆஸ்திகப் பூச்சாண்டியின் மிரட்டல் இனிப் பலிக்காது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

குடி அரசு - கட்டுரை - 07.04.1929


Thursday, October 26, 2023

இந்தியாவில் நவீன கல்விமுறை உருவான பின்னணி - பேரா.அ.மார்க்ஸ்

இந்தியாவில் நவீன கல்வி முறை உருவானதன் பின்னணியும்  : சில வரலாற்று நினைவுகளும்!

******************************

நாளந்தா, விகரம ஷீலம் முதலான பௌத்த கல்விமுறை இன்றைய மிக நவீனமான கல்விமுறையின் முன்னோடி.  பன்னாட்டு / பல்துறை அறிஞர்களும் ஒரு மையத்தில் கூடி பன்முக அறிவு வளர்ச்சியை சாதி, மதக் கொடூர வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்கட் பிரிவினரும் கற்கும் கல்வி முறை அது. சனாதன இந்தியாவில் அது அழித்தொழிக்கப்பட்டது.  மேல் வருணத்தாருக்கே கல்வி. சூத்திரர்களாயின் அவர்கள் இக் கல்விமுறைக்குள் நுழைய முனைந்தால் என்ன நிகழும் என்பதற்கு ஏகலைவன் வரலாறு ஒரு சான்று.  இந்தியக் கல்வி முறையில் இந்த நிலையில் பெரும் புரட்சி எப்போது ஏற்பட்டது?- சற்றே வரலாற்றைப் பின்னோக்கிப் பார்ப்போம்!

***********************************

ஏற்கனவே இது குறித்து சனாதனிகளால் இங்கு புகுத்தப்பட்டுள்ள கருத்துக்களைக் கொஞ்சம் நம் மூளையிலிருந்து கழற்றி எறிந்துவிட்டுத் திறந்த மனத்துடன் நாம் மெக்காலேயின் (தாமஸ் பேபிங்டன் மெக்காலே 1800 – 1859) காலகட்டத்திற்குச் செல்வோம். அவர் இந்தியாவிற்கு வந்து முக்கிய பொறுப்புக்களை ஏற்றுச் செயல்பட்ட காலம் 1834- 1838. அப்போது கப்பல் பயணம்தான். வருவதற்கும் போவதற்கும் பயணக் காலம் குறைந்த பட்சம் 6 மாதங்கள் என வைத்துக் கொண்டாலும் அவர் இங்கிருந்த காலம் சுமார் மூன்று அல்லது மூன்றரை ஆண்டுகள்தான். இந்த மூன்றான்டுகளில் அவர் இங்கு மேற்கொண்ட முக்கிய பணிகள் மூன்று. அவை:

1.புதிய ஆங்கிலக் கல்விச் சட்டம் (1935) இயற்றியது.

2.குற்ற நடைமுறைச் சட்டம் (Criminal Procedure Code) உருவாக்கியது.

 3.ஆங்கிலேயர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டிருந்த வழக்குகளில் மேல்முறையீடு செய்யும் உரிமையை இந்தியர்களுக்கும் அளிக்கும் வகையில் சட்டம் ஒன்று (கறுப்புச் சட்டம்) இயற்றியது ஆகியனவே அவர் இங்கு செய்த பணிகள்.

அவர் வந்த காலகட்டதில் இங்கு கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகம்தான் நடந்து கொண்டிருந்தது. முதல் சுதந்திரப்போர் எனக் கூறப்படும் 1857 பிரிட்டிஷ் எதிர்ப்புப் போருக்கு முந்திய காலகட்டம் அது. அப்போது இங்கு நேரடியான பிரிட்டிஷ் அரசியின் ஆட்சி நடைபெறவில்லை. இந்தியத் துணைக் கண்டம் முழுமையும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவும் இல்லை. ஆங்காங்கு பல்வேறு மொழிகள், பண்பாடுகள், தேச வழமைகள் என்பதாக இந்தியா தொடர்ந்தது.

மெக்காலே இங்கு வருவதற்கு முன்பே ஆங்கிலக் கல்விச்சட்டம் உருவாக்குவதற்கு இங்கொரு குழு உருவாக்கப்பட்டிருந்தது. 10 உறுப்பினர்களைக் கொண்ட அக்குழு இரு சரிபாதிகளாகப் பிரிந்து இரு எதிர் எதிர்க் கருத்துக்களைக் கொண்டிருந்தது. ஒரு குழு அப்போதுள்ள நிலை தொடர்ந்தால் போதுமானது என்றது. அப்போதுள்ள நிலை என்றால் ஒரு பக்கம் சமஸ்கிருதக் கல்வி, இன்னொறு பக்கம் முகலாய ஆட்சிகள் இருந்த பகுதிகளில் பெர்சியன் மற்றும் அரபிக் கல்விகள். மற்றொரு குழு ஆங்கிலக் கல்வியை முன்மொழிந்தது. கல்வித் திட்டம் வகுக்கும் பொறுப்பை ஏற்குமுன் மெக்காலே முதலில் இதற்கொரு முடிவு காணுதல் அவசியம் என்றார்,

இப்போது அன்றைய உலகக் கல்விச் சூழல் எவ்வாறு இருந்தது என்பதைச் சற்றுக் காண்போம். நவீனத்துவம், மறுமலர்ச்சி என்றெல்லாம் சொல்லும் புதிய விழிப்புணர்வு உலகெங்கும் ஏற்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. அப்படியான ஒரு விழிப்புணர்வு உருவாகாத மூட நம்பிக்கைகளின் நாடாக இந்தியா இருந்தது என்பதைத் தனது எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் பலமுறை, ஆம் பலமுறை தந்தை பெரியார் சுட்டிக் காட்டி இருப்பதை நாம் அறிவோம். தத்துவ வளர்ச்சியின் வரலாற்றில் மேலை நாடுகளில் உருவான “அறிவொளிக்காலம்” (Enlightenment) எனப்படும் தத்துவ மறுமலர்ச்சி இங்கு உருவாகவே இல்லை. சங்கரர், இராமானுஜர், மத்வர் ஆகியோருடைய காலத்தோடு இங்கு தத்துவ வளர்ச்சியில் ஒரு தேக்கம் ஏற்பட்டது. பௌத்த தத்துவ வளர்ச்சிகளும் காஞ்சி மற்றும் அமராவதி காலத்துடன் தேக்கமுறுகிறது.

கல்வி வளர்ச்சியைப் பொருத்தமட்டில் குருகுலக் கல்விக்கு மாற்றாக பௌத்தம் உருவாக்கிய நாளந்தா, விக்ரமஷீலம் முதலான பல்கலைக் கழகங்களும் அழிக்கப்பட்டன.

ஆனால் மேலை நாடுகளில் உருவாகியிருந்த அறிவொளிக்கால விழிப்புணர்வு கல்வித்துறையில் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கியது.

முதல் முதலாக நவீன மாதிரியான பல்கலைக் கழகம் என்கிற கருத்தாக்கம் அங்குதான் உருவானது. ஜெர்மனி இதில் முக்கிய பங்கு வகித்தது. புகழ்பெற்ற தத்துவ ஞாநிகள் ஃபிச்டே , ஹம்போல்ட் முதலானோர் அதற்கான Blue Print ஐ உருவாக்கித் தந்த வரலாற்றை லியோடார்ட் விரிவாக விளக்கியுள்ளார் (பார்க்க :எனது பின் நவீனத்துவம் தொடர்பான கட்டுரைகள்).

பல்வேறு புதிய கல்வித்துறைகள் உருவான இச்சூழலில் ஏற்கனவே கல்வி என்றால் லத்தீன் / கிரேக்க மொழிகளில்தான் பயிற்றுவிக்கப்பட வேண்டும் எனும் நிலை அங்கு இவ்வாறு தகர்ந்தது. பதிலாக நவீன மொழிகள் கல்வி மொழிகளாயின.

இங்கும் அப்படியான ஒரு புதிய கல்விமுறை உருவாவது தவிர்க்க இயலாத ஒன்றாக இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சி இங்கு அறிமுகப்படுத்திய நவீன மாற்றங்களின் ஊடாக அது நிகழ்ந்தது. ஆங்கிலேயர்களின் வணிகத் தொடர்பு மற்றும் அதை ஒட்டி மதம் பரப்ப இங்குவந்த கிறிஸ்தவப் பாதிரிமார்கள் உருவாக்கிய கல்விக்கூடங்களின் வழியாக நவீன கல்வி வளர்ச்சி இங்கே அரும்பத் தொடங்கியது. அது சமஸ்கிருதம், பெர்சியன் மொழிகளைத் தவிர்த்து ஆங்கில மொழியை ஊடகமாகக் கொண்டு நவீன கல்வியை இங்கே பெரிய அளவில் அறிமுகப் படுத்தியது.கல்வி முறையில் இங்கு பாரம்பரியமாக இங்கே நிலவிய சாதி, மத வேறுபாடுகள், தீண்டாமை முதலான ஒடுக்குமுறைகள் ஆகியன நிபந்தனையாக்கபடாத ஒரு கல்வி முறையாகவும் அது இருந்தது.

மெக்காலே இந்த இரண்டாவது போக்கை ஆதரித்தார். உயர் கல்வி ஆங்கிலத்திலும் அடிப்படைக் கல்வி ஆங்காங்குள்ள தாய்மொழிகளிலும் இருக்க வேண்டும் என்றார். ஆங்கிலத்தில் கற்கும் கல்வியை அவ்வாறு கற்கும் இந்தியர்கள் தத்தம் தாய்மொழிக்குக் கொண்டு வருவார்கள் எனும் நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார்.

“இந்திய மக்களை எப்போதுமே நமக்கு அடிமைகளாக வைத்துக் கொள்வதற்காக அவர்களை நாம் எப்போதுமே அறிவிலிகளாகவும் தற்குறிகளாகவும் வைத்துக் கொள்ள வேண்டுமா? அல்லது அவர்கள் மத்தியில் உயர் குறிக்கோள்களை நோக்கி ஆசைப்படாத ஒரு அறிவை மட்டும் அவர்களுக்குத் தந்தால் போதும் என்கிறோமா? அல்லது அவர்கள் மத்தியில் உயர் குறிக்கோள்களை விதைத்துவிட்டு அதற்கு வழி இல்லாமல் செய்யப்போகிறோமா? இந்தக் கேள்விகளில் யாதொன்றுக்காவது ‘ஆம்’ என யார் பதிலளிக்கப் போகிறார்கள்? எனினும் இந்த நாட்டு மக்களை உயர் பதவிகளிலிருந்து நிரந்தரமாக விலக்கி வைக்க விரும்பும் யாரும் இதில் ஏதேனும் ஒன்றிற்காகவாவது ‘ஆம்’ எனப் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். எனக்கு அச்சங்கள் இல்லை. கடமையின் பாதை இதோ தெளிவாக நம் முன்… அதுவே பேரறிவின் பாதை…தேசச் செழுமையின் பாதை.. தேசப் பெருமையின் பாதை..”- என்பதாக அவர் உரை அமைந்திருந்தது.

அன்று உருவாகியிருந்த ஒருவகை உலகளாவிய (utilitarian liberal universalism -Rudolphs) போக்குடன் இசைந்ததாக நமது கல்வியை நவீனப்படுத்துவது என்பதாக அவரது பார்வை அமைந்தது என்பது இங்கே கவனத்துக்குரியது. “சுவையிலும், ஒழுக்கத்திலும், கருத்துக்களிலும், மதிப்பீடுகளிலும் ஆங்கிலேயத் தன்மை மிக்க” இந்தியர்களையும் இந்தியாவையும் உருவாக்குதல் குறித்து மெக்காலே பேசியதை நாம் இப்படியும் புரிந்து கொள்ள வேண்டும். சாதி, தீண்டாமை, மதம், பல கண்மூடிப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் அடையாளம் காணப்பட்ட இந்தியாவை நவீன உலகிற்கு இட்டுச் செல்லுதல் என்பதான ஒரு நோக்கம் அதில் வெளிப்படுவதை நாம் கவனம் கொள்ள வேண்டும்.

ஆனால் 1850 க்குப் பின் இங்கு நிலைமை மாறியது. நவீன இந்தியாவின் முக்கியமான திருப்பப் புள்ளிகளில் ஒன்று 1857. சிப்பாய்க் கலகம், சிப்பாய்கள் மற்றும் விவசாயிகளின் கிளர்ச்சி, முதல் சுதந்திரப் போர் என்றெல்லாம் பலவாறாகச் சித்திரிக்கப்படும் இந்த எழுச்சி கம்பெனி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததோடன்றி இந்திய ஆளுகை பற்றிய காலனிய அரசின் அணுகல் முறையில் சில முக்கிய மாற்றங்களையும் ஏற்படுத்தியது. வில்லியம் பென்டிக், மெக்காலே, டல்ஹவுசி முதலானோரால் 1830 -50 காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் தாராளப் பொதுமை என்பதிலிருந்து சற்றே பின்வாங்கும் நிலையை விக்டோரியா மகாராணியின் பிரகடனம் (1858) வெளிப்படுத்தியது. 1857 எழுச்சியை அவர்கள் கொடுங் கரங் கொண்டு ஒடுக்கியபோதும் இந்திய மக்களின் எதிர்ப்பின் வன்மை அவர்களின் ஈரக்குலைகளில் நடுக்கத்தையும் ஏற்படுத்தியது.

இனி இந்தியர்களின் தேச வழமைகளில் தலையிடுதல், வாரிசு இல்லை என்றெல்லாம் சொல்லி வன்முறையாக அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளைக் கைப்பற்றல் (doctrine of lapse) என்பதையெல்லாம் கைவிட்டு, வேறுவகை அணுகல் முறைகளைக் கைக்கொண்டு தங்களின் காலனியச் சுரண்டலைத் தொடர்வது என்கிற நிலைக்கு இட்டுச் சென்றது.

விக்டோரியா மகாராணியின் அறிக்கை,

“இனி மதநம்பிக்கை, மற்றும் (அவை சார்ந்த) வழமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தப் பிரிவினருக்கும் சலுகைகள் காட்டுவதோ, இல்லை அவற்றின் அடிப்படையில் ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதோ இருக்காது. எல்லோரும் ஒன்றேபோல சமமான, பாரபட்சமற்ற சட்டப் பாதுகாப்புகளைப் பெறுவர். இனி எமது ஆட்சியின் கீழ் அதிகாரத்தில் உள்ள யாரும் மக்களின் மத நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு வழமைகளில் தலையிடக் கூடாது என உறுதியாக ஆணையிடப்படுவர்” – எனப் பிரகடனப் படுத்தியது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய பொதுமை என்பதான பயன்பாட்டுவாதிகளின் (utilitarian) அணுகல் முறைகளிலிருந்து சற்றே விலகுதல் என 1957 க்குப் பின் பிரிட்டிஷ் அரசு மேற்கொண்ட இந்த நிலைப்பாடு மக்களின் தனித்துவமான மதம் சார்ந்த ஒழுகல் முறைகள், சாதி முதலான பண்பாட்டு அடையாளங்கள் ஆகியன சட்டப் பாதுகாப்புகளுடன் இங்கு தொடர வாய்ப்பாக்கியது. இந்தியச் சனாதனத்துடன் பிரிட்டிஷ் ஆளுகை சமரசம் செய்து கொண்ட பின்னணி இதுதான்.

எனினும் கல்வித்துறையைப் பொருத்தமட்டில் இங்கு பிரிட்டிஷ் ஆட்சியின் ஊடாக உருவான புதிய கல்விமுறையும், ஏராளமான கல்விக்கூடங்களும் பெரிய அளவில் இதுகாறும் கல்வி மறுக்கப்பட்ட அடித்தள மக்கள் கல்வி பெற்று மேலெழ வாய்ப்பளித்தது.

மெக்காலே குறித்த சங்கிகளின் ‘ஃப்ராட்’ பரப்புரைகள்:

மெக்காலே இந்தியாவில் உலகளவில் உருவாகிக் கொண்டிருந்த அறிவு வளர்ச்சிக்கு உரிய வகையில் ஒரு பொதுக்கல்வி முறையை உருவாக்கினார்.

எனினும் சிப்பாய்கள் மற்றும் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட முதல் (1857) புரட்சிக்குப் பின் இந்தியர்களைக் கையாள்வதில் பிரிட்டிஷ் ஆட்சி சில எச்சரிக்கைகளைக் கடை பிடித்தது. அவ்வாறான எச்சரிக்கைகள் எல்லாமே பாராட்டுக்குரியவை அல்ல. குறிப்பாக இங்குள்ள சாதி, தீண்டாமை முதலான தேச வழமைகளில் பிரிட்டிஷ் அரசு தலையிடுவதில்லை என எடுத்த முடிவு அடித்தள மக்களைப் பொருத்த மட்டில் பெரிய இழப்பாகவே இருந்தது.

எனினும் கல்வித்துறையைப் பொருத்தமட்டில் இங்கு பிரிட்டிஷ் ஆட்சியின் ஊடாக உருவான புதிய கல்விமுறையும், ஏராளமான கல்விக்கூடங்களும் பெரிய அளவில் இதுகாறும் கல்வி மறுக்கப்பட்ட அடித்தள மக்கள் கல்வி பெற்று மேலெழ வாய்ப்பளித்தது.

இந்தப் புதிய கல்விமுறைக்கு இணையாக இங்கு இன்னொரு அறிவுப் புரட்சியும் நடந்து கொண்டிருந்தது. வடமொழிகளும் தென்மொழிகளும் முற்றிலும் வெவ்வேறான தனித்தன்மைகள் கொண்டவை என்கிற ஆய்வுகள், சிந்து வெளி அகழ்வுகள் முதலியன இந்திய மக்களிடையே புதிய விழிப்புணர்வுகளை உருவாக்கின.

அச்சுக்கலையின் ஊடாக இதுகாறும் அழிந்துகொண்டும் அழிக்கப்பட்டுக் கொண்டும் இருந்த தமிழ் சிரமண நூல்களில் எஞ்சியவை காப்பாற்றப்பட்டன.

புதிய கல்விமுறை இங்கு ஏற்படுத்திய விழிப்புணர்வுக்குச் சான்றாக ஒரு வரலாற்று நிகழ்வை முந்திய கட்டுரை ஒன்றில் நான் குறிப்பிட்டுள்ளேன். அறிஞர் உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள் தனது ஆசான் மாயவரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் குருகுலக் கல்வி பயின்றது குறித்து மிக விரிவாக எழுதியுள்ளார். அறுபதாயிரம் பாடல்கள் இயற்றியவர் என அறியப்படும் மீனாட்சி சுந்தரனாரிடம் கல்வி கற்றுத்தேறிய உ.வெ,சா அடுத்து அன்று புதிய ஆங்கில முறை நவீனக் கல்லூரியாக உருவாகியிருந்த குடந்தை அரசு கல்லூரியில் பணியில் சேர்ந்த பின்னர்தான் சீவகசிந்தாமணி முதலான சிரமண மரபில் வந்த பெருங்காப்பியங்கள் முதலானவற்றின் இருப்பையே அறிகிறார். பல ஆண்டுகள் பாரம்பரியக் கல்வியைக் கற்றிருந்தபோதிலும் அவற்றை அவரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பதை அவரது தன்வரலாற்றிலிருந்து நாம் அறிகிறோம்.


Monday, October 23, 2023

வரலாற்றின் வேர்கள்

 வரலாற்றின் வேர்கள்  -1                          -அண்ணாமலை சுகுமாரன்

கடந்த காலத்தின் இரத்தக்கறை படிந்த அடிச்சுவடுகளைப் பற்றியும் , அவ்வப்போது நடைபெற்ற போர்கள், அதில் அடைந்த வெற்றிகள் ,ஆக்கிரமித்த நாடுகள் இவைகளைப்பற்றி விவரிப்பதும் , வெற்றிபெற்ற மன்னர்களின் கீர்த்தியை சொல்வதும்தான் வரலாறு என்ற பொதுவான புரிதல் இருந்தாலும், வரலாறு (History) என்ற சொல் இறந்த காலத்தைப் பற்றிய தகவல்கள் விவரிப்பது என்னும் பொருளிலேயே பொதுப்படையாகப் பயன்படுகிறது.

ஆயினும் வரலாறு என்பது மன்னர்களைப்பற்றி மட்டும் இல்லாமல், அது அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த சாமான்ய மக்களைப்பற்றியும், அவர்களின் பொருளாதாரம், வாழ்வியல் முறைமைகள், கல்வி, இலக்கியம், பண்பாடு, மொழி என அனைத்தையும் விளக்குவதாக இருக்கவேண்டும். இந்த வரலாற்றை கணிக்க தக்க சான்றுகள் வேண்டும் .

ஆதாரங்கள் எனும் உறுதியான கற்களால் கட்டமைக்கப்பட்டதே வரலாறு .

வரலாறு தற்போது தொல்லியல் என அறிவுப்பூர்வமானதொரு விஞஞானம் போல் ஆகிவிட்டது . அதன் ஆய்வுக்கு இப்போது பல்வேறு துறைசார்ந்த அறிவும் அவசியமாகிவிட்டது .


தொல்லியல் என்பது, வரலாறு ,மானிடவியல், கலாச்சாரம் , பொருளாதாரம் இனவரலாறு, நீரடி தொல்லியல்,என பல்வேறு துறைகளின் அறிவு தேவைப்படுகிறது .

தொல்லியல் எதிர்கால மனித வாழ்க்கைக்கு ஒரு செய்தியை எப்போதும் கூறிவருகிறது. கடந்த காலத்தைப் பொறுத்தே வருங்காலம் அமைகிறது .

இப்போது வாழும் வாழ்க்கையின் விதை கடந்த காலத்தில்தான் இருக்கிறது .வரலாற்றை நிர்ணயிக்க சான்றுகள் மிக அவசியம் .

நமது நாட்டைப்பொறுத்தவரை சான்றுகளை போற்றிப்பாதுக்காக்க நாம் எப்போதும் கவனம் செலுத்தியதில்லை .

மேலும் இந்தியாவின் வரலாறு என்பது முகமதியர்களின் படையெடுப்பிலிருந்துதான் அறியப்பட்டிருந்தது. அதற்கு முன் இந்தப் பகுதியில் என்ன நடந்தது என்பதைப் பற்றி ஒரு தகவலும் இல்லை.

அலெக்சாண்டர், 326 BCயில் இந்தியாவுக்குப் படையெடுத்து வந்தார் என்ற ஒரு குறிப்பு மட்டுமே இருந்தது. அதற்கு முன்னும் பின்னும் ஒன்றும் தெரியாது. தமிழ் நாட்டிலோ இன்னமும் மோசம் தஞ்சை பெரியக்கோயிலே கரிகால் சோழன் கட்டியது என்று ஒரு கதை நிலவிவந்ததாக பொன்னியின் செல்வன் எனும் ஒரு குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒரு செய்தி விவாதத்தில் இருந்தது நினைவிருக்கிறது .

ஒவ்வொரு கோவிலுக்கும் பின்புலத்தில் ஒரு புராணக் கதை நம்ப முடியாதபடி இருக்கும் . வரலாற்று செய்தி அதில் மறைந்து கிடக்கும் .நெல் மணியை சேர்க்க ஆரபித்த குதிரில் நெல்லை விட பதர்கள் அதிகம் ஆனது போல் புராண கற்பனையில் வரலாற்று உண்மைகள் மறைந்து போயின .நெல் மணிகள் காணாமல் மறைந்து போயின .

திருப்பணி என்றபெயரில் நமது கோவில்களில் இடம்பெற்றிருந்த வரலாற்று ஆதாரங்களான கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டு வீசியெறியப்பட்டன .இன்னமும் தமிழ் நாட்டில் இதே நிலைதான் தொடருவது தான் வேதனைக்குரியது. மற்றொரு புறம் வேறு பலர் அறியாமையால் அவற்றை அழித்துக்கொண்டும் இருந்திருக்கிறார்கள். இந்த அழிப்பு, ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன்பாகவே தொடங்கிவிட்டது. இந்தியாவிற்குள் நுழைந்த முகமதியர்கள், நிறைய சேதங்கள் ஏற்படுத்தினார்கள். 

குதூப் மினார் இருந்த இடத்தில் 27 கோயில்கள் இருந்தனவாம். மதுராவில் நிறைய சிற்பங்கள் இருந்ததாகச் சீனப் பயணி சொல்லியிருக்கிறார். 

1857இன் சிப்பாய்க் கலகத்திற்குப் பிறகு ஆங்கிலேயர்கள் தங்கள் பங்கை அழிவில் செய்திருக்கிறார்கள். 

பல பழைய கோட்டைகள் ராணுவக் கிடங்காகவும், சில ராணுவ மருத்துவமனையாகவும், ராணுவ பேக்கரியாகவும், பயன்பட்டிருக்கின்றன. தாஜ் மஹால் விருந்து நடத்தும் இடமாக இருந்திருக்கிறது . தாஜ் மஹாலின் ஒரு பகுதி, தேன்நிலவுக்கு வந்தவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. ஆனால், இன்றுவரை இந்த சேதப்படுத்துதல்கள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றன?

இன்றும் பல கோட்டைகள் சுற்றுலா விடுதிகளாக சுதந்திர இந்தியாவிலும் இருக்கின்றன. (உதயகிரி) தரங்கம்பாடியில் இருக்கும் டேனிஷ் கோட்டை 30 ஆண்டுகளுக்கு முன் அரசாங்க ஒய்வு விடுதியாகப் பயன்பட்டதை நானே பார்த்திருக்கிறேன். பல அரண்மனைகள் தமிழ் நாட்டில் இன்னமும் அரசு அலுவலகங்களாக இருந்து வருகிறது .

இந்த நிலையில்தான் இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்ற வந்த வெள்ளையர்களில் சிலர், இந்தியாவைப் பற்றி அறிந்து கொள்வதில் தீவிரம் காட்டினர். அவர்கள் வந்தது என்னவோ வேறு வேலைக்கு ஆயினும் கம்பெனியின் ஆதரவு என்பதெல்லாம் இத்தகைய ஆய்வுகளுக்கு இல்லை; என்றபோதிலும் , இவர்கள் தங்களுடைய சொந்த ஆர்வத்தின் பேரில் இந்திய வரலாற்று சான்றுகளைப் பற்றிய ஆராய்ச்சியைச் தொடர்ந்திருக்கிறார்கள்.

அப்போது இருந்த காலகட்டத்தில் இந்தியர்களுக்கு நாகரீகம் எதுவும் கிடையாது. பிரிட்டிஷ் வருகைக்குப் பிறகுதான் எல்லாமே என்று எழுதிவைத்ததோடு , இந்தியர்கள் மனதில் ஒருவகை தாழ்வு மனப்பான்மையை குடி கொள்ளச் செய்தார்கள்.

அந்த நிலையில் சில கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்ற வந்த வெள்ளையர்களில் உள்ள மனசாட்சியுள்ள சிலர் தொல்லியல் சான்றுகளை மேலும் அழிவிலிருந்து காத்து இந்தியாவின் வரலாறு எனும் கட்டிடம் எழ உதவி செய்தனர் .

அத்தகையோரை பரவலாக அறியச் செய்வது வரலாற்றை அறிவதில் மிக முக்கியமானதாகும்.முதலில் வரலாறு உருவாக உதவி செய்த அயல் நாட்டினரைப் பற்றியும், அதனைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற முக்கிய தொல்லியல் நிகழ்வுகளையும் அதற்கு உறுதுணையாக இருந்த இந்தியா முழுவதும் இருந்த வரலாற்று ஆர்வலர்களைப் பற்றியும் அறிஞர்களையும் அறிமுகம் செய்யும் விதமாகவும் முக்கியமாக தமிழ் நாட்டில் வாழ்ந்த திருவாளர்கள் நீலகண்ட சாஸ்திரி அவர்கள், க. அப்பாதுரை அவர்கள் சதாசிவ பண்டாரத்தார் முதல் ஐராவதம் மகாதேவன் அவர்கள், நாகசாமிஅவர்கள், ராஜமாணிக்கனார்அவர்கள், புலவர் ராசு அவர்கள் ,நடன காசிநாதன் அவர்கள் ,தியாக சத்தியமூர்த்தி அவர்கள் குடவாசல் பாலசுப்ரமணியன் அவர்கள் , குடந்தை சேதுராமன்  அவர்கள், பத்மாவதி அவர்கள் போன்ற இன்னுமும் உழைத்துக் கொண்டிருக்கும் பலரையும், சொல்லாமல் விடுபட்ட இன்னமும் பலரை அறிமுகப்படுத்தும் தொடர் இது .

வாசகர்களாகிய உங்கள் ஆதரவு இருக்கும்வரை இத்தொடர் தொடர்ந்து வரும் .

பகுதி 1- அயல் நாட்டு அறிஞர்கள்

சர் வில்லியம் ஜோன்ஸ்

1746 இல் பிறந்த சர் வில்லியம் ஜோன்ஸ் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் சட்டம் பயின்று வக்கீலானார். வாரன் ஹேஸ்டிங் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தபோது 1783இல் கல்கத்தா உச்சநீதிமனறத்திற்கு நீதிபதியாக இந்தியா வந்தார், 

அவர் கிரேக்கம், இலத்தீன், பாரசீகம், ஹீப்ரு அரேபிய மொழிகளை சிறிய வயதிலேயே கற்றறிந்தார். இந்தியாவிற்கு வந்தபின் இந்தியாவின் பழம் மொழிகளில் ஒன்றான சம்ஸ்கிருதத்தைப் பற்றி அறிந்த பின்பு அதன் மீது ஆர்வம் ஏற்பட்டது.

அவர் அப்போது கல்கத்தாவில் பணிபுரிந்ததால்பெருமைமிகு  தமிழ் பற்றி அறியும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை 

தனக்கு சம்ஸ்கிருதம் போதிக்க ஓர் வங்காள பிராமண சம்ஸ்கிருத ஆசிரியர் ராம் லக்‌ஷ்ன் கவிபூசன் என்பவரை தேர்ந்தெடுத்தார். அந்த கவிபூசன் கல்கத்தாவில் நெருக்கடியான மக்கள் குடியிருப்பில் வசித்துவந்தார். அங்கே சென்று சர்.வில்லியம் ஜோன்ஸ் சம்ஸ்கிருதம் கற்றுவந்தார் . தினமும் வகுப்பு முடிந்ததும் ‘மிலேச்சன்’ உட்கார்ந்த இடத்தை தண்ணீர்விட்டு சுத்தம் செய்வாரம் அந்த ஆசிரியர். இதைப் பார்த்த வில்லியம் ஜோன்ஸ்க்கு அது பெரிய விஷயமாகப்பட வில்லையாம் ஆசிரியர்கள் செய்யும் ஒரு சடங்கு என்று நினைத்துக்கொண்டாராம்.

பின்னர் சம்ஸ்கிருதத்தில் அவர் தேர்ச்சி பெற்றபின்பு பல நூல்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். அதில் அபிக்ஞான சாகுந்தலம் என்பது முக்கியமானது. அவருக்கு ஏற்கனவே கிரேக்கம் இலத்தீன் மொழி ஞானம் இருப்பதால் சம்ஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன் மொழிகளுக்குள்ள ஒற்றுமையை ஆராய்ச்சி செய்தார். இலத்தீன் மொழியைவிட சம்ஸ்கிருதம் கிரேக்க மொழியுடன் நிறைய ஒற்றுமையிருக்கிறது, இந்த மூன்று மொழிகளிலும் ஒன்றிலிருந்து பிரிந்தவை என்று ஆய்வின் முடிவில் கண்டறிந்தார்.தென்னிந்தியா பற்றி அப்போது அவர்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லை .

வங்காளத்திற்கு நீதிபதியாக வந்த ஜோன்ஸ், அங்கே வந்த பதினாராவது வாரத்தில் 1784இல் ஏசியாட்டிக் சொசைட்டியைத் தொடங்குகிறார். 

சொசைட்டியின் நோக்கம், இந்தியாவில் இருக்கும் சகல விஷயங்களைப் பற்றியும் பதிவு செய்வது. மொழி, வானவியல் சாஸ்திரம், அறிவியல், மருத்துவம், நீதி, வரலாறு, புவியியல், விவசாயம், வணிகம், இசை, கட்டிடக்கலை, கவிதை இப்படி பல விஷயங்களைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை திரட்டுவதே அவர்களுடைய எண்ணம். மனிதனின் கால் பதியாத நாகரீகம் இல்லாத வனம் போன்ற ஒரு அடர்த்தியான இருட்டில் இருந்த பிரதேசமாக அவர்கள் இந்தியாவை நினைத்திருந்தார்கள் . எனவே கிடைத்த அத்தனையையும் ஆவணப்படுத்த – இந்தியாவெங்கும் அங்கங்கே இருந்த வெள்ளையர்கள் தாங்கள் கண்டதை ஏசியாட்டிக் சொசைட்டிக்கு கட்டுரைகளாக அனுப்பினார்கள். ஜோன்ஸ் இதையெல்லாம் தொகுத்து, முதல் தொகுப்பை 1789இல் வெளியிட்டார்.

ஜோன்ஸின் தனிப்பட்ட ஆர்வம் சமஸ்கிருத மொழியில் இருந்தது. அவர் சமஸ்கிருதத்தை இலத்தீன் கிரேக்க மொழிகளோடு ஒப்பிட்டார். சமஸ்கிருதக் கடவுளர்களையும் அவர் கிரேக்க கடவுளர்களுக்கு ஒப்பிட்டார். சமஸ்கிருத காப்பியங்களை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்தார். காளிதாஸரின் சாகுந்தலத்தை 1788இல் மொழிபெயர்த்து வெளியிட்டார். இந்தியாவுக்கு அவர் கொடுத்த கொடை, மெகஸ்தனிஸின் இந்தியாவைப் பற்றிய குறிப்பை ஆராய்ந்து இந்தியாவின் நீண்ட வரலாற்றை எழுதத் துவங்குவதற்கான ஒரு தொடக்கப் புள்ளியைக் கொடுத்தது.அவரே தென்னிந்தியாவிற்கும் வந்திருந்தால்  வரலாற்றின் பார்வை வேறுமாதிரி அமைந்திருக்கும் .

அலெக்ஸாண்டரின் படையெடுப்புக்குப்பின் மெகஸ்தனிஸ் இந்தப் பக்கம் வந்திருக்கிறார். அவர் தன்னுடைய குறிப்பில், கங்கையை எர்ரானாபொஸ் (Erranaboas) சந்திக்கும் இடமான பாலிபொத்ராவில் சாண்ட்ராகோட்டஸ் என்ற அரசன் இருந்தான் என்று எழுதியிருக்கிறார். இதில் உடனடியாகத் தெரிந்த விஷயம் கங்கை மட்டுமே. ஆனால், அதில் கலக்கும் எர்ரானாபொஸ் என்ற நதி பற்றி எந்தக் குறிப்பும் இந்தியாவில் இல்லை. வேறு ஏதோ ஒரு நதியை அப்படிக் குறிப்பிடுகிறார்.

ஒருவேளை அது சரஸ்வதி போல் தடம் இல்லாமல் போன ஒரு நதியாக இருக்கலாமோ ?

அடுத்தது, பாலிபொத்ரா: அந்தப் பெயருக்கு நெருக்கமான பெயராக இருப்பது பாடலிபுத்திரா என்ற தற்போதைய பாட்னா. ஒருவழியாக அந்தப் பக்கம் முன்பொரு காலத்தில் ஓடிய நதியைத்தான் கிரேக்க மொழியில் எர்ரானாபொஸ் என்று சொல்கிறார் என்று கண்டுபிடித்தாயிற்று. ஆனால், சாண்ட்ராகோட்டஸ்? சமஸ்கிருத மொழியிலிருந்து எடுக்கப்பட்ட அரசர்கள் பட்டியலில் அப்படி ஒரு பெயர் இல்லை. ஆனால் சந்திரகுப்தர் என்ற பெயர் நெருக்கமாக இருப்பதைக் கண்டு, கிரேக்க பயணி சந்திரகுப்தரின் பாடலிபுத்திரத்திற்குத்தான் வந்திருக்க வேண்டும் என்று முடிவாகிறது. ஆசியாவில் அலெக்சாண்டருக்கு பின்னால் வந்த செலூக்கஸின் அரசவையில் இருந்தவர் மெகஸ்தனிஸ். செலூக்கஸ் 312BCயில் பாபிலோன் திரும்பிச் சென்றதாக குறிப்பிருக்கிறது. ஆகவே, சந்திர குப்தரின் காலம் அலெக்சாண்டரின் இந்தியப் படையெடுப்புக்கும் (326 BC), 312 BCக்கும் இடைப்பட்டதாகும் என்று முடிவாகிறது. வரலாறே தெரியாத இடத்தில் இதுவொரு பெரிய முன்னேற்றம்.

இவ்வாறு இந்திய வரலாறுக்கு சர் வில்லியம் ஜோன்ஸ் ஒரு நல்ல துவக்கத்தையும் , உலகின் கவனத்தை இந்திய வரலாற்றின்மேல் திருப்ப ஒரு முக்கிய காரணமாகவும் இருந்தார் .அவரைத்தொடர்ந்து பல ஐரோப்பியர்களுக்கு இந்திய வரலாற்றின் மேல் ஒரு ஆர்வம் தோன்றியது வரலாற்றின் ஆய்வில் பலருக்கு ஆர்வம் எழ சர் வில்லியம் ஜோன்ஸ் முக்கிய காரணமாக விளங்குகிறார்

2) சார்லஸ் வில்கின்ஸ்

சார்லஸ் வில்கின்ஸ் ஒரு சிறந்த சம்ஸ்கிருத அறிஞர் இவர் வில்லியம் ஜோன்ஸ்அவர்களின் நண்பர் இவர் கல்கத்தாவுக்கு 1770 ஆம் ஆண்டு இந்தியா வந்தார் .

சமஸ்கிருதம் பற்றிய ஆழமான புலமை பெற்ற ஆங்கிலேயர்களின் இவரே முதன்மையானவர் எனலாம். குப்தர்களின் கால எழுத்தைக் கண்டுபிடித்ததில் இவரது பணி முக்கியமானது . இது இந்தியாவின் கல்வெட்டு இயலில் மிக முக்கியமானதாக அமைந்தது .

அந்தக்காலகட்டத்தில் உலகில் ஒரு நம்பிக்கை மக்கள் மத்தியில் ஆழமாக இருந்தது அது உலகின் அனைத்து மொழிகளும் ஹீப்ரு மொழியில் இருந்து தோன்றியது என்பதே .

இந்தியாவில் வந்து இவர் செய்த ஆய்வுகளுக்குப்பின் பாரசீகமும் ஐரோப்பிய மொழிகளும் ஒரே மூதாதையரிடம் இருந்து தோன்றியது என நிறுவினார்.

அண்ணாமலை சுகுமாரன்15/12/2016  மீள்பதிவு  15/10/2023

Sunday, October 15, 2023

எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட வரலாறு- தராசு ஷ்யாம்

தமிழகத்தின் இரு பெரும் திராவிடக் கட்சிகளில் ஒன்றான அ. இ. அ. தி. மு. க.வின்  பொன்விழா துவக்கம் 2021 அக்டோபர் 17. 

அதன் அரை நூற்றாண்டு கால திசை வழிப் பயணம் என்ன? இனி அதன் போக்கு எப்படி அமையும்? 

அண்ணா திமுக பிறந்த 1972 அக்டோபர் 17ஆம் தேதிக்கு முந்தைய அரசியல் களம் படு சூடு.  தமிழக சட்ட மன்றத்தைக் கலைத்து 1971 பார்லிமென்ட் தேர்தலுடன் முன்கூட்டியே களம் கண்டார்  திமுக தலைவர் கலைஞர்.  அவர் சென்னையிலிருந்து தெற்கு நோக்கிப் புறப்பட்டுப் பரப்புரையில் ஈடுபட்டார்.  பொருளாளர் எம்ஜிஆர் தென்திசையில் இருந்து புறப்பட்டு வடதிசை நோக்கித் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார்.  திட்டமிடலும் ஒருங்கிணைப்பும் அந்த அளவுக்குத் துல்லியம். 

இந்திரா காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், பிரஜா சோஷலிஸ்ட், முஸ்லிம்லீக், போன்றவை திமுக கூட்டணி.  கட்சி வேட்பாளர்கள் நிறைய பேருக்கு எம்ஜிஆர் நிதி உதவியும் செய்தார். அவர்கள் பரப்புரை மேடைகளிலும் பேசினார். பிரசாரம்  முடிந்ததும்  "இதயவீணை" படப்பிடிப்புக்காக அவர் காஷ்மீர் சென்றார் 

மார்ச் மாதம் நடந்த 1971 தேர்தலில் திமுக மகத்தான வெற்றி அடைந்தது. அதன் கூட்டணிக்கு மொத்தம் 205  தொகுதிகள் கிடைத்தன. 203 தொகுதிகளில் களம் கண்ட திமுக தனியாக 184 இடங்களில் வென்றது. 

தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கியதும், எம்ஜிஆர் காஷ்மீரில் இருந்து தனி விமானத்தில் சென்னை திரும்பினார்.  திமுகவின் அமோக வெற்றிக்கு காரணம் யார் என்று பத்திரிகைகள் அலசத் துவங்கின 

எம்ஜிஆர் மந்திரி பதவி கேட்டதாகவும் படங்களில் நடிப்பதை நிறுத்தினால் அவரை அமைச்சராக்குவதாகக்  கலைஞர் சொன்னதாகவும்   சில பத்திரிகைகள் யூகச் செய்தி வெளியிட்டன. திமுகவின் அமோக வெற்றிக்கு எம்ஜிஆர் தான் காரணம் என்று  வேறு சில பத்திரிகைகள் எழுதின. 

சட்டமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரசுக்கு ஒரு இடம் கூட தரப்படவில்லை.  9 எம். பி. தொகுதிகள் மட்டுமே தரப்பட்டன.  எனவே காங்கிரஸ் கட்சியிலும் அதிருப்தி இருந்தது. எம்ஜிஆருக்கு வருமானவரி வழக்குகள் இருந்தன என்றும் அவற்றைப் பயன்படுத்தி இந்திராகாந்தி எம்ஜிஆரைப் பிரித்துத் திமுகவைப் பலவீனப்படுத்த  முயற்சிக்கிறார் என்றும் பத்திரிகைகள் எழுதத் தொடங்கின 

எம்ஜிஆருக்கு வரி பாக்கி என்ற செய்தியைப் படித்த  எம்ஜிஆர் ரசிகர்கள் அவருக்குப்  பணம் அனுப்பத் துவங்கினார்கள் 1972 மார்ச் 3ஆம் தேதி திண்டிவனத்திலிருந்து ஷெரீப் என்ற எம்ஜிஆர் மன்றத் தலைவர் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தன் வீட்டை விற்று பணத்தைக் கொடுப்பதாகக்  கடிதம் எழுதினார்.  ஒவ்வொரு மன்றமும் 100, 200 என்று பணம் அனுப்பத்  துவங்கின.  அவையெல்லாம் பத்திரிகைச் செய்திகளாக மாறின. எம்ஜிஆருக்கு இவ்வளவு பெரிய ஆதரவா என்ற விவாதம் எழுந்தது. 

மத்திய அரசு தமிழகத்துக்குப் போதிய நிதி வழங்குவதில்லை என்று சொல்லி  25 ஆண்டுகளாகத் தமிழகத்தில் அமலில் இருந்த மதுவிலக்குச் சட்டத்தை நீக்க முடிவெடுத்தார் கலைஞர். அன்றைய தி.மு.க. அரசுஆகஸ்ட் 30, 1971-ல் மதுவிலக்கு ஒழிப்பை நடைமுறைப்படுத்தியது.  

தமிழகமெங்கும் தனியார் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ராஜாஜி, காமராஜர் போன்ற தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 1971 செப்டம்பர் 15ல் (அண்ணா பிறந்தநாள்)சத்யா ஸ்டூடியோ பணியாளர்களை அழைத்துக்கொண்டு அண்ணா நினைவிடத்துக்குச் சென்று  மது ஒழிப்புக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர். கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே பனிப்போர் என்று பத்திரிகைகள் எழுதத் துவங்கின.  

அப்போது 1972 மதுரையில் ஆகஸ்ட் 5 6 ஆகிய தேதிகளில் திமுக மாநாடு நடந்தது. மாநாடு முதல்நாள் நிகழ்ச்சியில் திமுக கொடியுடன் எம்ஜிஆர் ஊர்வலத்தில் வருவார். அதைப் பார்க்க  ஏராளமான ரசிகர்கள் காத்திருப்பார்கள்.  

ஆனால் அந்த மாநாட்டில் மு. க. முத்து திமுக கொடியுடன் யானைமீது வந்தார். அது எம்ஜிஆர் மன்றத்தினர் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது. மாநாட்டில்  எம்ஜிஆர் பேசி முடித்ததும், அவர்கள் கலைந்து சென்றனர் அது கலைஞர் மனதில் காயத்தை ஏற்படுத்தியது

எம்ஜிஆர் மன்றங்களுக்கு இடைஞ்சல் தரப்படுவதாகவும்,  அவற்றைக்  கலைத்துவிட்டு மு. க. முத்து மன்றம்  துவங்க வற்புறுத்தல் இருப்பதாகவும் எம்ஜிஆர் மன்றத்தினர் புகார் தெரிவிக்கத்  துவங்கினர் எம்ஜிஆருக்கும் கலைஞருக்கும் மன விரிசல் என்று பத்திரிகைகள்  செய்தி வெளியிட்டன. 

அப்போது 1972 செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் அண்ணா பிறந்தநாள் எம்ஜிஆர் தொகுதியான ஆலந்தூரில் கொண்டாடப்பட்டது.  பேராசிரியர் அன்பழகன் தலைமை.  "மலர் இருந்தால் தான் நார்  மணக்கும்.  நாங்கள் நார்.  நீங்கள் மலர்" என்று எம்ஜிஆரை அவர் புகழ்ந்தார்.  "அண்ணா பாதையிலிருந்து திமுக தடம் மாறிச் செல்வதை அறிந்து நான் வேதனை அடைகிறேன்." என்றார் மக்கள்திலகம். 

இதெல்லாம் கட்சிக்குள் பிரச்னைகளை ஏற்படுத்தியது.  "பொருளாளர் என்ற முறையில் கட்சியின் வரவு செலவுக் கணக்கை ஆய்வு செய்ய வேண்டும்" என்று எம்ஜிஆர் கடிதம் அனுப்பினார்.  "திமுக நிர்வாகப்  பொறுப்பில் இருக்கின்ற அனைவரும் சொத்துக் கணக்கைச்  சமர்ப்பிக்க வேண்டும்"  என்றும் அவர் கூறினார். அது கொதிப்பை மேலும் கூட்டியது. 

இத்தகைய சூழலில் அக்டோபர் முதல் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யா திருமண மண்டபத்தில் (இப்போது அதிமுக தலைமைக் கழகம் அமைந்துள்ள இடம்) சென்னை-செங்கை  மாவட்ட எம்ஜிஆர் மன்ற கூட்டம் நடைபெற்றது.  சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தெய்வசிகாமணி, சிவராமன், அன்றைய சென்னை மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கல்யாணசுந்தரம் ஏற்பாடு. 

எம்ஜிஆர் மன்றத்திற்கான தனிக்கொடி அங்கீகாரம் தான் கூட்டத்தின் நோக்கம். ஆனால்  மக்கள் திலகம் தன் பேச்சில், " நமது கொடி கழகத்தின் இரு வர்ணக் கொடி தான்.  தாய்க்கழகம் வேண்டுமா, சேய் மன்றம் வேண்டுமா என்று கேட்டால் தாய்க்கழகம் தான் வேண்டும் என்பேன். ஒரு தாய் எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்." என்று பேசினார் . எவ்வளவோ வற்புறுத்தியும் தனிக்கொடிக்கு எம்ஜிஆர் சம்மதிக்கவில்லை. 

பின்னணியில் அன்றைய புதுச்சேரி முதல்வர் பரூக் மரைக்காயரின்  சமாதான முயற்சி இருந்தது. அவர் ராமாவரம் தோட்டத்திற்கு நேரில் சென்று கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் சமாதான முயற்சியில் ஈடுபட்டார். " திமுகவில் சமாதானம் ஏற்படுகிறது"  என்று பத்திரிகைகள் எழுதின.  ஆனால் அது நடக்கவில்லை. 

அக்டோபர் முதல் தேதி இப்படிப்பட்ட மனநிலையில் இருந்த மக்கள் திலகம் 16 நாட்களில் தனிக் கட்சி கண்டார்.  தனிக்கொடி கண்டார்.  184 இடங்களைப் பெற்று அசைக்க முடியாத ஆளுங்கட்சியாக இருந்த திமுக சுமார் 16 மாதங்களில் பிளவைச் சந்தித்தது.  எப்படி நடந்தது இந்த வேதியியல் மாற்றம்?

அக்டோபர் மாதம் 10ஆம் தேதி சத்யா ஸ்டூடியோவில் "நேற்று- இன்று-நாளை" படப்பிடிப்பு.  மக்கள்திலகம் அதில் இருந்தார். ஆனால் அன்று திமுக செயற்குழு. அதற்குப் பொருளாளர் எம். ஜி. ஆருக்கு அழைப்பு இல்லை. 

திடீரென்று "தி ஹிண்டு"  ஆங்கிலப் பத்திரிகையின் தலைமை நிருபர் கிருஷ்ணசாமி ராமாவரம் தோட்டத்திற்குப்  போன் பேசினார்.  "தி. மு. க,  செயற்குழுவில் மக்கள் திலகத்தை பொருளாளர் பதவியில் இருந்தும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் சஸ்பெண்ட் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது"  என்ற செய்தியை அவர்தான் முதலில் கூறினார்.  

அதற்கு எம்ஜிஆரின் பதில் என்ன என்று தெரிந்து கொள்ள இந்து பத்திரிக்கை விரும்பியது.  சத்யா அரங்கத்தில் மக்கள் திலகம் சாப்பிட மற்றும் இளைப்பாற தனி அறையும், தனித் தொலைபேசியும்  உண்டு.   எம். ஜி. ஆர்.  தான் அந்தப் போனை எடுப்பார்.  

அந்தத்   தொலைபேசியில் தொடர்புகொண்டு திமுகவிலிருந்து எம். ஜி. ஆர். நீக்கப்பட்ட விஷயம் பற்றிச் சொல்லப்பட்டது.  ஆனால் அவர் சத்தமாகச் சிரித்தார்.  "இந்து பத்திரிக்கையில் பதில் கேட்கிறார்கள்"  என்று அவரிடம் கூறியிருக்கிறார்கள்.  

"நான் பாயாசம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன் என்று சொல்"

இதுதான் எம். ஜி. ஆரின் பதில். அக்டோபர் 11-ஆம் தேதி "தி ஹிண்டு" இதை அப்படியே பிரசுரித்தது.  பாயாசம் என்பது தான் அரசியல் குறியீடு. எம்ஜிஆர்  குறியீடுகளின் குரு. 

அக்டோபர் 11-ஆம் தேதி பெரியார் கலைஞரிடம் பேசினார்.  எம்ஜிஆர் பெரியாரை போய்ப் பார்த்தார்.  அவரது அறிவுரைப்படி மறுநாள் அக்டோபர் 12   நாஞ்சில் மனோகரனும், முரசொலி மாறனும்  எம்ஜிஆரைச்   சந்தித்துப் பேசினார்கள்.  பின்னாட்களில் நாஞ்சிலார் பழைய சம்பவங்களைப் பற்றி என்னிடம் அசை போடுவார்.  

எந்த முயற்சியும் பலன்அளிக்கவில்லை. 1972 அக்டோபர் 14ஆம் தேதி எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். அக்டோபர் 16ஆம் தேதி, எம்.ஜி.ஆரின் தீவிர ஆதரவாளரான உடுமலைப்பேட்டை இஸ்மாயில் என்பவர் தீக்குளித்து உயிர்நீத்தயார்.  

ஏராளமான எம்ஜிஆர் மன்றத்தினர் தாக்கப்பட்டார்கள்.  திமுக அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். எம்ஜிஆர் மன்றத்தின் தலைமைப்  பொறுப்பில் இருந்த முசிறிப் புத்தன், ஓமப்பொடி பிரசாத் உள்ளிட்ட ஏராளமான மன்றத்தினர் ரத்தம் சொட்டச்  சொட்ட ராமாவரம் தோட்டத்திற்கு வந்தார். எம். ஜி. ஆர். மன்றக் கிளைகளைக் கலைக்கச் சொல்லிக் காவல்துறையே நெருக்கடி கொடுத்த சம்பவங்களும் நடந்தன.  

இந்த நிகழ்வுகள் எல்லாம்  எம்ஜிஆர் மனதை மாற்றின.   அக்டோபர் 17ஆம் தேதி அதிமுக உதயமானது. தொண்டர்கள்  தலைவருக்கு அழுத்தம் கொடுத்து உருவாக்கிய கட்சி அதிமுக என்று  வரலாறு அதனால் தான் குறித்து வைத்திருக்கிறது. 

கலைஞர், எம். ஜி. ஆர். ஆகிய இரு தலைவர்களுமே பெரிய ஆளுமைகள். தத்தம் தனித் திறமைகளால் மக்கள் மனங்களை வென்றவர்கள். அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுக பிளவுபட்டுவிடாமல் காப்பாற்றியதில் இருவருக்குமே சம பங்கு உண்டு. 

அரை நூற்றாண்டுக்குப் பிறகு பெரிய தலைவர்களின் அந்தக் கால அரசியல் நகர்வுகளை விமர்சனம் செய்வது பொருத்தம் அல்ல. ஆனாலும் அதிமுகவின் பொன்விழா துவங்கும் நேரத்தில் இந்த வரலாற்றுச் சம்பவங்களை நினைவு கூர்ந்தால் தான் தமிழகத்தின் அடிப்படை அரசியலைப் புரிந்து கொள்ளமுடியும். 

அதிமுகவின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா 1998 ல் கொண்டாடப்பட்டது.  அதற்கான மலரைத் தயாரிக்கும் பொறுப்பை மறைந்த ஜெயலலிதா ஒரு பத்திரிகையாளானாக எனக்கு வழங்கினார். 

இன்னொரு மலர்க் கமிட்டி நாவலர் நெடுஞ்செழியன்  தலைமையில் இயங்கியது. எனவே நான் தயங்கினேன்.   ஆனால் ஜெயலலிதா கொடுத்த உற்சாகத்தால் மலரைத் தயாரித்தேன். திருநெல்வேலியில் மாபெரும் ஊர்வலம். மறுநாள் வெள்ளிவிழாக் கண்காட்சி. மலரை  நாவலர் நெடுஞ்செழியன் வெளியிட்டார். ஜெயலலிதா பெற்றுக்கொண்டார். 

எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால் எம். ஜி. ஆர், ஜெயலலிதா போன்ற அதிமுகவின் மாபெரும் தலைவர்கள் அந்த அளவுக்கு பல்வேறு திறமைகளை அடையாளப்படுத்தினார்கள். இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். கலைஞர் முதல்வராக இருக்கும்போது அதிகாலையிலேயே தினத்தாள்களைப் படித்துவிட்டு நேரடியாகப் பத்திரிக்கையாளர்களோடு போனில் பேசுவார். என்னோடும் அவ்வாறு தொடர்பு கொண்டு தகவல் கேட்டிருக்கிறார். 

அதிமுகவின் இன்னொரு சிறப்பு அம்சம், கட்சியின் தலைமை (பொதுச் செயலாளர்) அடிப்படைத் தொண்டர்களால் தான் முடிவு செய்யப்படவேண்டும் என்ற விதி. அதை மாற்றவே முடியாது என்று ஜெயலலிதா பின்னர் சிறப்புச் சேர்த்து வைத்திருந்தார். 

அதற்கும் காரணங்கள் உண்டு. கட்சியின் பொதுக்குழு கபளீகரம் செய்யப்பட்டுவிட்டால் தன்னை நம்பி வந்த தொண்டர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று எண்ணினார் எம். ஜி. ஆர். அவர்களுக்குப் பாதுகாப்புத் தர அவர் விரும்பினார். அவரது எண்ணத்திற்கு வலுச் சேர்ப்பது போல 1975ல் ஒரு சம்பவம் நடந்தது. 

அப்போது சிதம்பரத்தில் அதிமுக பொதுக்குழு-செயற்குழு கூடியது. எம். ஜி. ஆரைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கச் சிலர் முயற்சித்தனர். அதற்குப் பொதுக்குழு-செயற்குழுவில் தீர்மானம் கொண்டுவரப் போவதாகப் பயங்கரமான செய்திகள் அடிபட்டன.  முசிறிப்புத்தான், அய்யம்பேட்டை அஜீஸ், ஷாகுல் ஹமீது, கோவை மருதாச்சலம் உள்ளிட்ட எம். ஜி. ஆர். மன்றத்தினர் முறியடி முயற்சிகளில் இறங்கினார்கள். 

அதிமுகவைப் பிளவுபடுத்தும் முயற்சிகளை முளையிலேயே கிள்ள  முடிவெடுத்தார் எம். ஜி. ஆர். கட்சியின் அமைப்புச் சட்டம் விதி எண் 20 பலப்படுத்தப்பட்டது. அதன்படி கட்சியின் பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். பொதுக்குழுவுக்கு அந்த அதிகாரம் கிடையாது.  திருத்தப்பட்ட அதிமுக அமைப்புச் சட்டம் 1976 நவம்பர் முதல் அமலுக்கு வந்தது. 

சுருக்கமாகச் சொன்னால் அதிமுக அமைப்புச்சட்டத்தின்படி கொடி பிடிக்கும் தொண்டனே முடிவெடுப்பவன். அதுவே கட்சியின் அடிப்படை. எம். ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அபிலாஷை.  இந்த அடிப்படை மாற்றவியலாதது. (BASIC STRUCTURE) ஆனால் இன்றைய அதிமுகவில் அந்த அடிப்படை தகர்க்கப்பட்டு விட்டது.  ஒருங்கிணைப்பாளர் (ஓபிஎஸ்)இணை ஒருங்கிணைப்பாளர் (எடப்பாடி பழனிச்சாமி) போன்றோர் கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இது குறித்த சிவில் வழக்கு நிலுவையில் உள்ளது. 

அதிமுக, திமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளின் பலம் என்பது அவற்றின் தொண்டர்கள் தான். அதிமுகவின் ஆளுமை இரட்டை இலையும் வசீகரம் மிக்க தலைவர்களான எம். ஜி. ஆரும் ஜெயலலிதாவும் கஷ்டப்பட்டு உருவாக்கி வைத்துள்ள வாக்குவங்கியும் தான் அதிமுக. அதைத் தக்க வைத்துக் கொள்ள ஒற்றுமை அவசியம். வாக்கு அரசியலில் அரவணைப்பு முக்கியம். 

பொன்விழாக் கொண்டாடும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு நமது நல் வாழ்த்துகள்.

Saturday, October 14, 2023

சேரமா தேவி குருகுலம் - பெரியார் பேச்சு

 சேரமா தேவி குருக்குலம்

  - தந்தை பெரியார்

பெரியோர்களே! தாய்மார்களே!

அந்தக் காலத்து எங்கள் சக்திக்கு ஒரு சிறு உதாரணம் சொல்லுகிறேன் - கேளுங்கள்! நான் காங்கிரசுக் காரியதரிசியாயும், தலைவனாயும் இருந்த காலங்களில் தமிழ்நாட்டு வாலிபர்களை தேசிய வீரர்களாக்கவென்று வி.வி.எஸ். அய்யர் என்னும் ஒரு தேசியப் பார்ப்பனர் காங்கிரசை 10,000 ரூபா கேட்டபோது, அதற்கு நானே பிரதானமாய் இருந்து ரூபா அனுமதித்தேன்.

அந்தப் பணம், குருகுலம் என்று ஒரு ஆசிரமம் வைத்து, அதில் பார்ப்பனப் பிள்ளைகளை வீட்டிற்குள் வைத்தும், பார்ப்பனரல்லாத பிள்ளைகளை வெளியில் வைத்தும் சாப்பாடுபோட்டு வருணாசிரம தருமம் கற்றுக் கொடுக்கப் பயன்பட்டதுடன், அதன்பேரால் தமிழ் மக்களிடம் மற்றும் 20, 30 ஆயிரம் ரூபா வசூல் செய்யப்பட்டது. 

அதற்குத் தமிழ்நாடும், நவசக்தியும் ஆதரவு அளித்தன. 

இந்தச் சூழ்ச்சியான அக்கிரமம் சகிக்காமல் நான், முதலியார் அவர்களிடம் மாயவரத்தில் வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டேன்.

 அப்போது அவர்கள் டாக்டர் நாயுடு அவர்கள் பேரில் புகார் சொல்லி, நாயுடு அவர்கள் 'தமிழ்நாடு' பத்திரிகையில் ஆதரிப்பதால் நான் ஆதரிக்கவேண்டியிருக்கின்றது என்றார். இருவரும் நாயுடு அவர்களிடம் தெரிவித்துக் கொண்டோம். அவ்வளவுதான் சங்கதி.

உடனே டாக்டர், குருகுலத்தின்மீது போர்தொடுத்தார். தமிழ்நாட்டுப் பார்ப்பனர் கள் தோழர்கள் இராசகோபாலச்சாரியார், சீனிவாச அய்யங்கார் உள்பட எல்லோரும் நாயுடு அவர்களுக்கு விரோதமாய் எவ்வளவோ தொல்லைகள் விளைவித்தும் பயன்படாமல், கடைசியில் குருகுலம் அடியோடு அழிந்தும் அதில் இப்போது படைக்கள்ளியும், நெருஞ்சில் முள்ளும் வளரும்படி, பாம்பும் பூச்சியும் வாழும்படி ஆகிவிட்டது.

(ஈரோட்டில், 26.11.1933இல் சொற்பொழிவு, புரட்சி 3.12.1933)

Friday, October 13, 2023

மோகன் சி லாசரஸ்

வெளி நாட்டில் இருந்து வரும் மதம் மாற்ற வரும் பணமும் மோகன் சி லாசரஸ்க்குதான்...

இவருக்கு கிறிஸ்தவ மதத்தில் உள்ளவர்கள் அனைவரும் அவர்கள் சம்பாதிப்பதில் எல்லோரும் 10% லாபத்தையும் கொடுக்கணுமாம். இல்லாட்டி கண் குருடாகும்...அது இது என தன் மக்களை மிரட்டுவார்.

குரும்பூர் ரயில்வே நிலைய வெளி இடம் முழுவதையும் குத்தகைக்கு மத்திய அரசு மூலம் மோகன் சி லாசரஸ்தான் பெற்று உள்ளார் 

அப்பகுதியை சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணியின் மாநில நிர்வாகி இவரிடம் எச்சில் பணம் பெற்று வலம் வரும் வலது கரம். அவர்தான் ரயில்வே இட நிர்வாகம் பொறுப்பை லாசரஸ்க்கு குரு ஜியிடம் பேசி வாங்கி கொடுத்தவர்.

இரயில்வே வளாகத்தில் 45 வருட பழமையான ஆனந்த விநாயகர் கோவில் உள்ளது.

அதை அப்புறப்படுத்த ரயில்வே நிர்வாகத்தை வைத்து கோர்ட்டில் வழக்கு போட வைத்து உள்ளவர் மோகன் லாசரஸ். இப்போது சர்ச்சை தொடங்கி விட்டது.JCB இயந்திரம் வரை கொண்டு வந்ததை வழி படும் கொதித்தெழுந்து நிறுத்தினர். காரணம் அவர் சர்ச் பக்கத்தில் கோவில் இருக்கிறது.

இப்போ இந்துக்களும்,கிறிஸ்தவர்களும் இந்த நாசக்கார வன்முறை சிண்டிகேட்களால் வன்ம சண்டை போடணும்.

இப்போ இவர்கள் முட்டாளா?.

மக்கள் முட்டாளா?.

நாட்டில் அரசியல் சிண்டிகேட் மட்டும் அல்ல.

பணம் பறிக்கும் எண்ணத்தில் உள்ள மதவாத சிண்டிகேட் ஏமாற்று கூட்டணிகளை ஒழிக்காமல் தமிழகத்தில் எந்த மதங்களும் நிம்மதி பெற்று வாழவே இயலாது.

நீங்கள் எதிரி என எண்ணும் ஒருவரை விட அருகில் உள்ள துரோகியே நம்மை என்றும் அழிப்பார்கள்.

உணர்ச்சிகளை கட்டுப் படுத்துங்கள்.

வில்லை உடையுங்கள்.

தூத்துக்குடி அரசியல் சூப்பரா மக்களே!!.

தமிழக அரசியல் சிண்டிகேட்,மத சிண்டிகேட் இரண்டுமே ஒன்றுதான்.

பாலசுப்பிரமணியம் ஆதித்தன் T

மோகன் சி லாசரசுக்கு ஆதரவாக துக்ளக் குருமூர்த்தி

குரும்பூர் ஆனந்த விநாயகர் கோவிலை உடைக்க மோகன் சி லாசரஸ்க்கு ஆதரவாக செயல் படும் ஆடிட்டர் குருமூர்த்தி...

திருச்செந்தூர் ரயில் நிலையத்திலும், குரும்பூர் ரயில் நிலையத்திலும் அக்காலத்தில் ரயில்வே அதிகாரிகள் துணையோடு பக்தர்கள் சிறு ஆனந்த விநாயகரை வழி பட்டு வருகின்றனர்.

மெகா சர்ச் ஒன்று குரும்பூரில் கட்டி உள்ளார் மோகன் சி லாசரஸ் .லட்சக்கணக்கில் இங்கு வருபவர்களை வைத்து வசூல் செய்வது வழக்கம்.வெளி நாட்டில் இருந்து வரும் மதம் மாற்ற வரும் பணம் கொண்டு வர துடிப்பாக செயல் படுவதில் ஒருவர் மோகன் சி லாசரஸ்.

குரும்பூர் ரயில்வே நிலையத்தின் வெளி இடம் முழுவதையும் Maintenance செய்வதாக குத்தகைக்கு காங்கிரஸ் காலத்தில் மத்திய அரசு மூலம் மோகன் சி லாசரஸ் வகையறாதான் உரிமை பெற்று உள்ளனர். 

இதற்குள் 45 வருட ஆனந்த வினாயகர் பழமையான கோவில் உள்ளது. சிறு வயது முதல் நான் உள்பட இக்கோவிலுக்கு போகாதவர்கள் இப்பகுதியில் இருக்க வாய்ப்பே இல்லை.

மோகன் சி லாசரஸ் சர்ச் க்கு வரும் வாகனங்களை நிறுத்த இந்த ரயில்வே இடங்கள் பயன் படுத்தப் படுகிறது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வானதி சீனிவாசனை மத்திய ரயில்வே போர்டில் அமர்த்தி இதற்கான காயை நகர்த்திக் கொடுத்தது ஆடிட்டர் குருமூர்த்திதான்.

இதற்கிடையில் பாஜக ஆட்சி வந்த பிறகும் ரயில்வே போர்டு குருமூர்த்தியின் கண் அசைவு செல்வாக்கில் மோகன் சி லாசரஸை அரவணைத்து தொடர்ந்தது.

அது கூட பிரச்சனை இல்லை.

ரயில் நிலைய இடத்தில் ஆனந்த விநாயகர் இருப்பதை கண் உறுத்தவே ரயில்வே நிர்வாகத்தை வைத்தே இதை உடைக்க வழக்கு தொடர வைத்தனர் லாசரஸ் - குருமூர்த்தி மெகா கூட்டணி.

எங்களுக்கு இதற்கும் சம்மந்தம் கிடையாது என்று இந்த வேத விற்பனையாளர்கள் இப்போதும் கூறுவார்கள்.

மோடி ஒழிக என்று குரும்பூர் ரயில்வே நிலைய பார்க்கிங் இடத்தை குத்தகைக்கு எடுத்த ஒருவர் பிரதமர் மோடி ஆட்சியில் பேச இயலும் என்றால் இவரிடம் செல்லம் கொஞ்ச வரும் கில்லாடி ஆடிட்டர் யார் என்று நீங்களே புரிந்தும் கொள்ளலாம்.

பிரதமருக்கே சவால் விடும் இவர்களுக்கு ஆனந்த விநாயகர்தான் முடிவு கட்டுவார் என்று எண்ணுகிறேன்.

கோர்ட் உத்தரவு படி பல நேரங்களில் இக்கோவிலுக்கு இடையூறு வந்தும் ஆனந்த விநாயகர் தன்னைக் காப்பாற்றி உள்ளார்.

நாளை ஆனந்த விநாயகர் கோவிலை உடைப்பதற்காக பல தரப்புகளை தூண்டி JCB வாகனம் வர உள்ளதாக தகவல்கள்.

ஒரு வேளை ஆனந்த விநாயகர் கோவிலுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் ஆடிட்டர் குருமூர்த்தியின் 2000க்கு மேற்பட்ட பினாமி டிரஸ்ட் வண்டவாளங்கள் பிரதமரின் நேரடி பார்வைக்கு கொண்டு சென்று அவரின் இந்தப் பிழைப்புக்கு முற்றுப் புள்ளி வைப்பேன். அதே நேரத்தில் மோகன் லாசரஸின் களவாணித் தனங்கள் அனைத்தும் அலசப்பட்டு அவருக்கு ஆனந்த விநாயகரின் அருளால் முடிவுரை எழுதுவேன் என்று தெளிவாக சொல்லிக் கொள்கிறேன். 

இதை வெற்று வார்த்தைக்காக சொல்லவில்லை.

பணம் பறிக்கும் எண்ணத்தில் உள்ள மதவாத சிண்டிகேட் ஏமாற்று கூட்டணிகளை ஒழிக்காமல் தமிழகத்தில் எந்த மதங்களும் நிம்மதி பெற்று வாழவே இயலாது.

நீங்கள் எதிரி என எண்ணும் ஒருவரை விட அருகில் உள்ள துரோகியே நம்மை என்றும் அழிப்பார்கள். அதற்கு உதாரணம் இவர்கள்.

தமிழக அரசியல் சிண்டிகேட்,

மத சிண்டிகேட் இரண்டுமே ஒன்றுதான்.

முதலமைச்சர் எடப்பாடியார் அமைதி ஏற்படுத்த முயற்சிப்பார் என நம்புகிறேன்.

மீண்டும் சொல்கிறேன்.

குரும்பூர் ஆனந்த விநாயகருக்கு ஏதேனும் தீங்கு ஏற்படின் நீங்கள் இருவரும் எவ்வளவு பெரிய வில்லாளகண்டர்களாக இருந்தாலும் உங்கள் இருவரையும் மக்கள் முன்பாகவும்,பிரதமர் முன்பாகவும்  நிறுத்துவேன். செய்த மர்ம குற்றங்கள் அனைத்தையும் வெளிப்படுத்துவேன்.

விடவே மாட்டேன்.

இது திருச்செந்தூர் முருகன் மேல் ஆணை.

ஓம் ஆனந்த விநாயகரே போற்றி.

வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை.

ஓம் முருகா

படங்கள் கமென்ட்டில் காண்க.

31.05.2018 எனது பதிவின் லிங்க்

https://m.facebook.com/story.php?story_fbid=1020636528094972&id=100004459025108

ஆனந்த விநாயகரை காக்க பகிருங்கள்.

பாலசுப்ரமணியம் ஆதித்தன், 25.6.2018

Thursday, October 12, 2023

கால்டுவெல்லும் மணியரசனும்- பொ.வேலுசாமி

தமிழுக்குப் பெருமைச் சேர்த்த ஆங்கிலேயேர் கால்டுவெல்லும் அவரை ஆதாரங்களின்றி வசை பாடும் தோழர் மணியரசனும்

நண்பர்களே….

19 ம் நூற்றாண்டு வரை தமிழ்மொழியை  சமஸ்கிருதத்தின் துணையின்றி தனித்துவமாக இயங்கத் தகுதியற்ற மொழி என்று தமிழ்நாட்டுக் கல்வியாளர்களும் உலக அறிஞர்களும் எழுதியும் பேசியும் வந்தனர். இத்தகைய கருத்துக்களை விஞ்ஞானரீதியில் மறுத்து, தமிழ் தனித்துவமாக நிற்கும் தகுதியுடைய மொழி என்பது மட்டுமல்ல. உலகின் மிகச் சிறந்த பழைமையும் பெருமையும்  மிக்க மொழிகளான கிரேக்கம் இலத்தீன் போன்றவற்றுடன் ஒப்ப வைத்து பேசப்படும் தகுதியுடைய மொழியென்று (வெறும் வார்த்தைகளால் சொல்லாமல் ) கோட்பாட்டுரீதியான சமூக விஞ்ஞான ஆராய்ச்சியின் வழியாக உலகினருக்கு உணர்த்தியவர் கால்டுவெல்தான்.    அதனை உலக அறிஞர்களும் பிறமொழிகளைச் சார்ந்த இந்திய அறிஞர்களும்  ஒப்புக் கொண்டதையும் இன்றைய வரலாறு நமக்கு உணர்த்துகின்றது. 

இத்தகைய நிலையில் ஒரு பகுதியை  உங்களுக்கு காட்டுவதற்காகத் தமிழ்நாட்டு மொழியியல் அறிஞர்களும் தமிழர்களும்  கால்டுவெல்லைப் பற்றியும் அவர் எழுதிய நூலான திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் பற்றியும் செய்துள்ள ஆய்வுகளின் பட்டியலை உங்களுக்குக் கொடுத்துள்ளேன். அத்துடன் கால்டுவெல்லின் வரலாற்றை மிகச் சிறந்த முறையில் முதுபெரும் தமிழறிஞர் தஞ்சை பள்ளியக்ரஹாரம் கந்தசாமிபிள்ளை அவர்களால் 1958 இல் தமிழ்ப்பொழில் இதழில் எழுதப்பட்ட கட்டுரையின் இணையதள இணைப்பை உங்களுக்கு கொடுத்துள்ளேன். இந்த அரிய கட்டுரையை தயவுசெய்து வாசியுங்கள். 

தமிழுக்கு உலகளவில் பெருமைச் சேர்த்த இத்தகைய அறிஞரை தோழர் மணியரசன் நியாயமற்ற முறையில் வக்கிரமாக அவதூறு செய்கிறார். 

அந்த அவதூறு செய்திகளை உங்களிடம் உண்மைபோல் காட்டுவதற்கு கால்டுவெல் ஆங்கிலத்தில் எழுதிய ஒப்பிலக்கண நூலின் சில வரிகளை மட்டும் பயங்கரமாக வாசித்துக் காட்டுகிறார். 

இந்தச் செய்திகள் எழுதப்பட்டுள்ள பகுதிகள் தமிழிலேயே மிகச் சிறப்பாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.  இதில் கால்டுவெல் அவர்கள் தென்னிந்திய மொழிகளை யெல்லாம் தொகுத்துச் சொல்லுவதற்கு  “திராவிடம்”  என்ற பெயரை ஏன் தேர்ந்தெடுத்தார் எப்படித் தேர்ந்தெடுத்தார் என்பதை விளக்குவதாக  எழுதப்பட்டுள்ளது. 

 அந்த விளக்கங்கள் அனைத்தும் அழகான தமிழில் 300 பக்கத்திற்கு மேல் உள்ளன. 

 அந்தப் பகுதிகளை நீங்கள் எளிமையாக வாசித்து கால்டுவெல்லைப் பற்றிய சரியான தகவல்களை உங்களுக்குள் உருவாக்கிக் கொள்ளுவீர்கள் என்ற நம்பிக்கையில் அந்த நூலின் இணையதள இணைப்பை இத்துடன் இணைத்துள்ளேன். 

கால்டுவெல்லைப் பற்றிய அவதூறுகளில் ஒன்றாக தோழர் மணியரசன் கூறுவது என்னவென்றால்,  பழந்தமிழர்கள் இலங்கைத் தவிர மற்ற நாடுகளுக்கு வணிகம் நிமித்தமாகச் செல்லவில்லை என்று குறிப்பிடுகின்றார். 

ஒரு விசயத்தைக் கவனத்தில் கொள்ளவேண்டுகிறேன். 

பழந்தமிழர்கள் உலகின் பல நாடுகளுடன் தொடர்புக் கொண்டவர்களாக இருந்தனர் என்பதை முதன்முதலாக ஆராய்ந்து சொன்னவர் கால்டுவெல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதற்கு முன்னர் அத்தகைய ஆராய்ச்சிகள் நடைபெறவில்லை.  

“அரிசி, இஞ்சி, மயில்தோகை” போன்ற தமிழ்ச் சொற்கள் கிரேக்கமொழியில் உள்ளதை முதன்முதலாகச் சுட்டிக் காட்டியவர் கால்டுவெல்தான்  என்பதை பல அறிஞர்கள் எழுதியுள்ளனர். 

அத்தகைய பகுதிகளும் இந்த தமிழ் முன்னுரையில் உள்ளன என்பதை நீங்கள் படிக்கும்போது புரிந்து கொள்வீர்கள். 

குறிப்பு

1. நண்பர்களே இன்றைய உலக அரசியல், சமூக சூழல் மனிதத் தன்மையற்று வணிகமயமாகி நாளுக்கு நாள் வளர்ந்து வருவதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. 

இத்தகைய சூழலில் எவ்வளவு பெரிய மனிதர்கள் ஆனாலும் அவர்களால் சொல்லப்படுகின்ற கருத்தை சரியான ஆதாரங்களைத் தேடி ஒப்பிட்டுப் பார்த்து உண்மையென்றால் ஏற்றுக் கொள்வதும் பிழையென்றால் தயங்காமல் தள்ளிவிடுவதுமாகிய அறிவு ஆற்றலைப் பெற்றிருந்தால் மட்டுமே நம்முடைய தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் நம்மை மற்றவர்கள் விலங்குகளைப் போன்று அடிமைகளாக்கி ஆட வைத்து வாழ்வைப் பறித்துக் கொள்வார்கள் என்பதை  இன்றைய நிலையிலும் பல நாட்டுச் செய்திகள் தினமும் நமக்கு  உணர்த்திக் கொண்டிருப்பதை நாம்  அனைவரும் அறிவோம். 

2. கால்டுவெல் எழுதிய 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ' என்ற நூல் மிக அண்மைக்காலம் வரையில் ஆங்கிலத்தில் கூட முழுமையாகப் பதிப்பிக்கப்படவில்லை. 

சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட ஆங்கில பதிப்பும் இத்தகைய குறைபாடு உடையதே. 

 அந்நூலை முழுமையாக இப்பொழுது ”உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்” சிறந்த அறிஞரைக் கொண்டு மொழிபெயர்த்து முடித்துவிட்டது. 

மிக விரைவில் அந்த நூல் விற்பனைக்கு வர உள்ளது. தொல்காப்பியம் பற்றியெல்லாம் கால்டுவெல் எழுதியுள்ள பகுதிகள் இதில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

கால்டுவெல்லின் வாழ்க்கை வரலாற்றை பெரும்புலவர் அறிஞர் பள்ளியக்ரஹாரம் கந்தசாமிபிள்ளை அவர்கள் எழுதி 1958 ல் தமிழ்ப்பொழில் இதழில் வந்த கட்டுரை

https://www.tamildigitallibrary.in/periodicals-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdk0Me&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+Vol.+34%2C+No.+4+%28%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%2C+1958%29#book1/

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

https://www.tamildigitallibrary.in/book-list-view-book?cid=20&id=jZY9lup2kZl6TuXGlZQdjZl9k0Qy&tag=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

தோழர் மணியரசன் பேசியது

https://www.youtube.com/watch?v=Wz8OiVXjtVo

இந்து சமய அறநிலையத் துறை - ஓர் அடிப்படைப் புரிதல்

 இந்துசமய அறநிலையத்துறை 

- அடிப்படை புரிதல்

முதலில் இந்து சமய  அறநிலயத்துறையின் தர்கத்தை (logic) புரிந்து கொள்வோம். 

அறநிலயத்துறையின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள எல்லா கோவில்களும் இல்லை.

பண்டைய காலம் முதல் இன்று வரை 

1) ஒரு தனியாரால் கட்டப்பட்ட கோவில்கள் எதுவும் அறநிலயத்துறையின் கீழ் வருவதில்லை

 (உதா: உங்கள் தெரு முக்கில் உள்ள பிள்ளையார் கோவில், சிலரின் முயற்ச்சியால் உருவான சாய்பாபா கோவில்கள், உங்கள் ஊரில் உள்ள குலதெய்வ கோவில், இப்படி). 

2) அதே போல் ஒரு குழுவால், மடத்தால் கட்டப்பட்ட கோவில்களும் வருவதில்லை. (உதா: காஞ்சி மடம், மதுரை ஆதீனம் இப்படி).

3) எந்தெந்த கோவில்கள் எல்லாம் மன்னராட்சியில் அரசர்களால் கட்டப்பட்டு, அரசால் பராமரிக்கப்பட்டதோ அவைகள் மட்டுமே அந்த மன்னராட்ச்சி முடிந்து மக்களாட்சியிலும் அரசின் வசம் உள்ளது. 

தமிழகம் முழுக்க இலட்சக்கணக்கான கோவில்கள் இருக்கும். அதில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்கள் வெறும் 38ஆயிரத்து  சொச்சம் தான்.

இதே தர்கத்தின் அடிப்படையில் தான் வக்ஃபு வாரியங்களும் அரசால் நடத்தப்படுகின்றன.

வக்ப்பு வாரியங்கள் இந்தியா முழுவதும் அந்தந்த மாநில அரசால் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு, மேலான்மை செய்யப்பட்டு வரப்படுகின்றன.

இஸ்லாமிய மன்னர்களால் கட்டப்பட்ட மசூதிகளையும், அது சார்ந்த சொத்துக்களையும் மேலான்மை செய்வது அந்த வக்ஃபு வாரியங்கள் தான்.

ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் மன்னராட்சி இல்லை என்பதாலும், ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் அரசால் இங்கே சர்ச்சுகள் கட்டப்படவில்லை என்பதாலும் (பல மிசினரிகள் இங்கே வந்து அவரவர்கள் செலவில் கட்டப்பட்டவை, நமது மடங்கள் அவர்கள் செலவில் கட்டிய கோவில்கள் போல) சர்ச்சுகளுக்கு இப்படி அரசாங்க அமைப்பு இல்லை.

அறநிலையத்துறையின் கீழ் 17 சமண கோவில்களும் உள்ளன என்பது உபரி தகவல்.

++++++++++++++++++++++++++++++

"கோவில்களில் பக்தர்கள் கடவுளுக்கு காணிக்கை செலுத்துகிறார்கள். அது அந்த கடவுளுக்கு சொந்தம். அதை அரசு எடுத்து கண்டபடி செலவு செய்வதா??"

இது அறநிலையத்துறையின் மேல் ஒரு சில பிற்போக்குவாதிகளால் வைக்கப்படும் ஒரு கேள்வி.

கோவில்களில் இருந்து வரும் வருமானத்தில் ஒரு ரூபாய் கூட அறநிலயத்துறைக்கு அப்பால், வேறு எதற்கும் செலவு செய்யப்படுவதில்லை.

இன்னும் சொல்லப்போனால் ஒரு கோவிலின் வருமானம் கூட மற்றொரு கோவிலுக்கு செல்லாது. 

*Common good fund*  என்று ஒரு பொது fund உருவாக்கப்பட்டு,  அதிக வருவாய் உள்ள கோவில்களில் இருந்து ஒரு தொகை இதற்கு மாற்றப்படுகிறது. 

அந்த தொகையில் இருந்து தான் குறைந்த வருவாய் உள்ள கோவில்களுக்கான செலவுகள் திட்டமிடப்படுகின்றன. 

அதிக வருவாய், குறைந்த வருவாய் என எப்படி கணக்கெடுக்கிறார்கள்?

ஆண்டு வருமானம் 

1) 10,000 ரூபாய்க்கும் குறைவு,

2) 10 ஆயிரம் - 2.5 லட்சம்

3) 2.5 லட்சம் - 10 லட்சம்

4) 10 லட்சத்துக்கும் மேல்

இதில் (4) இல் வரும் கோவில்களின் எண்ணிக்கை 331 மட்டுமே. 

இந்த 331 கோவில்களின் வருமானத்தில் ஒரு சதவிகிதம் அந்த common good fundக்கு மாற்றப்பட்டு அதன் மூலம் மீதமுள்ள மூன்று categoryயிலும் வரும் 38,300+ கோவில்கள் பராமரிக்கப்படுகின்றன.

கோவில்களின் வருமானத்தில் 'assessible income' என்ற ஒரு குறப்பிட்ட தொகைக்கு 14% வருமான வரி உண்டு.

 அந்த வரி மட்டுமே அரசாங்கத்திற்கு போகிறது. 

அந்த வரியும் கூட அறநிலைய அதிகாரிகளுக்கு சம்பளம் போன்ற அறநிலையத்துறை சார்ந்த administrative செலவுகளுக்குத்தான் செலவு செய்யப்படுகின்றது. 

எனவே கோவில் வருமானங்களை, அரசு ஏன் எடுத்துக்கொள்கிறது என்ற கேள்வி திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி....

Wednesday, October 11, 2023

குத்தூசி குருசாமி நினைவு நாள்

குத்தூசி குருசாமி நினைவு நாள் 11.10.2023

குத்தூசி குருசாமி

பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள குருவிக்கரம்பை கிராமத்தில் 1906 ஏப்ரல் 23இல் பிறந்தார்.

 முதன்முதலாக பெரியாரைச் சந்தித்தபோது அவருக்கு வயது 23. பெரியாரின் குடியரசு இதழில் ‘குத்தூசி’ என்ற பெயரில் சமூக சீர்திருத்த, பகுத்தறிவு சார்ந்த கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். 1929இல் தன்னைப் போன்றே பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட குஞ்சிதம் அம்மையாரை பெரியாரின் தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார். 

தமிழ்நாட்டில் பெரியார் நடத்திவைத்த முதல் சீர்திருத்தத் திருமணம் குத்தூசி குருசாமி - குஞ்சிதம் அம்மையார் திருமணம்தான். 

அக்காலத்தில் பல எதிர்ப்புகளுக்கு இடையேதான் அது நடைபெற்றது.

பெரியார் தலைமையில் சுயமரியாதை இயக்கம் வேர்விட்ட காலத்தில், அவருடன் அறிமுகமாகி, இறுதிவரையில் அவரோடு இணைந்து பயணித்தவர் குத்தூசி குருசாமி.

எழுத்துச் சீர்திருத்தத்தின் முன்னோடி

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து முதன்முதலாகப் பேசியவர் குருசாமி. பெரியாருடன் இதுபற்றி விவாதித்து, புதிய தமிழ் எழுத்து வடிவங்களைக் குடியரசில் முதன்முதலாகப் பயன்படுத்தவும் செய்தார். “இது தமிழ் மொழியின் எழுத்து வடிவத்தை மேலும் செழுமைப்படுத்து

வதுடன், தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்” என்றார். கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடியான சிங்காரவேலர் 1923இல் விவசாயத் தொழிலாளர் இயக்கத்தைக் கட்டமைத்து, 

இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் மே தினத்தை நடத்தியபோது அதில் குருசாமியும் பங்கேற்றார். அப்போது அவர் பதின்பருவ இளைஞர். இடதுசாரி இயக்கத் தலைவர்களுடன் குருசாமி தனது கடைசிக் காலம் வரையில், நெருக்கமான உறவைப் பேணினார்.

1949இல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்ட காலத்தில், பல தலைவர்களுக்குத் தன் வீட்டில் அடைக்கலம் அளித்தார். கைது செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலரைச் சிறைக்குச் சென்று சந்தித்தார் குருசாமி. அதற்கு நன்றி தெரிவித்து அவர்கள் எழுதிய கடிதங்களே, கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் மீது அவர் வைத்திருந்த அன்புக்குச் சான்று.

1952இல் முதன்முதலாக நடந்த பொதுத்தேர்தலில், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார் பெரியார். அந்தத் தேர்தலில் இடதுசாரிகள் வெற்றிபெற்றபோதும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ராஜாஜி ஆட்சியமைத்தார். இதனைக் கண்டித்து ‘கொல்லைப்புற வழியில் ஆச்சாரியார்’ என்று விடுதலையில் எழுதினார் குருசாமி. 

இன்று அரசியல்வாதிகள் சரளமாகப் பயன்படுத்துகிற இந்தச் சொல், முதன்முதலாக அப்போதுதான் அச்சில் பயன்படுத்தப்பட்டது.

‘குடியரசு’, ‘விடுதலை’ ,‘அறிவுப் பாதை’ மற்றும் ‘புதுவை முரசு’ பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதினார் குருசாமி.

பாரதிதாசனுடனான நட்பின் காரணமாக அவரின் முதல் கவிதைத் தொகுதியைப் பிரசுரிக்கும் பொறுப்பையும் ஏற்றார். 

குருசாமியின் மனைவி குஞ்சிதம் தான் பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

குருசாமி, ஆங்கிலத்தில் இருந்து பல்வேறு நூல்களையும், கட்டுரைகளையும் தமிழில் மொழிபெயர்த்தார். 

ஐரோப்பிய அறிஞரான பெட்ரண்ட் ரஸ்ஸலின் புகழ்பெற்ற நூலான ‘நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல’ என்பது அவரது முக்கியமான மொழிபெயர்ப்பு. 

தேர்தல் அரசியலில் ஈடுபடுவது குறித்து பெரியாருடன் கருத்து வேறுபாடு கொண்ட அண்ணா, 1949இல் பெரியார் - மணியம்மை திருமணத்தை முன்வைத்து தனி இயக்கத்தைத் தொடங்க முடிவு செய்தார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது, பிரிவைத் தடுக்க சமரச முயற்சிகளை மேற்கொண்டவர் குருசாமி.

குத்தூசி குருசாமி முன்வைத்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை, அவரது மறைவுக்குப் பிறகு 1978இல் எம்.ஜி.ஆர் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது

தன் வாழ்நாளில் எழுத்துகளிலும், பேச்சுகளிலும் பகுத்தறிவுக் கருத்தியல் சார்ந்து குருசாமி எந்தச் சமரசமும் செய்து

கொண்டதில்லை. சுயமரியாதை இயக்கத்தின் அடையாளமாக இருந்த குருசாமி 1965 அக்டோபர் 11இல் காலமானார்.

இவரின் நூல்களையும், வாழ்க்கை வரலாற்றையும் அவரின் நண்பரான குருவிக்கரம்பை வேலு வெளியிட்டிருக்கிறார். 

Rajamani A.R. அவர்களின் பதிவு

மெக்காலே : பழமைவாதக் கல்வியின் பகைவன்

மெக்காலே: பழமைவாதக் கல்வியின் பகைவன் - முனைவர் இரா. சுப்பிரமணி - சாளரம் வெளியீடு - முதல் பதிப்பு 2023 - பக்கங்கள் 160 - விலை ரூ 180/

*  சமஸ்கிருதமே இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் என்ற போலி பிம்பத்தை 1856ம் ஆண்டு உடைத்தெறிந்தவர் - கால்டுவெல் ! 

அவரது சிறப்பான ஆய்வு நூலான ' திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ' உலகின் கண்களைத் திறந்து வைத்தது ! 

*  சமஸ்கிருதத்தையும், குருகுலத்தையும், வர்ணாசிரத்தையும் நம்பி, உயர் ஜாதி பிள்ளைகளுக்கு மட்டுமே கல்வி என்ற நடைமுறைக்கு 1835ம் ஆண்டு சமாதி கட்டியவர் - மெக்காலே ! 

அவரது ' ஆங்கில வழிக் கல்வி திட்ட முறை ' இந்தியர்களின் கல்விக் கண்ணை திறந்து வைத்தது !

*  யார் இந்த மெக்காலே ?

மெக்காலே அறிமுகப் படுத்திய ஆங்கில வழிக் கல்வி முறை நல்லதை செய்ததா ? அது  குமாஸ்தாக்களை உருவாக்குகின்ற கல்வி முறையா ? இந்தியாவின் அறிவுப் பாரம்பரியத்தை சிதைத்ததா ? அன்றைய இந்தியாவில் கல்வி நிலை என்ன ? ....போன்ற கேள்விகளுக்கு நிறைய நூல்களை ஆராய்ந்து விடை தந்துள்ளார் முனைவர் இரா. சுப்பிரமணி ! 

*  " மெக்காலே என்னும் ஆங்கில அதிகாரியை கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் இந்நூல் உருவாக்கப்படவில்லை. இந்திய தேசத்தின் கல்வி வரலாறு என்பது விருப்பு வெறுப்பற்ற நிலையில் வாசிக்கப்பட வேண்டும் என்பதாக எடுத்துரைக்கவே இந்த நூல் வெளி வந்துள்ளது ! ..." என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகின்றார் நூலாசிரியர் ! 

*  முதலில் ' யார் இந்த மெக்காலே ? ' என்ற கேள்விக்கு ஒரு சுருக்கமான அறிமுகம் இதோ : 

*  தாமஸ் பாபிங்டன் மெக்காலே ( 1800 - 1859 ).

மெக்காலே இங்கிலாந்தில் பிறந்தவர். பள்ளியில் சிறந்த மாணவர். 1818ல் கல்லூரிப் படிப்பு. சட்டம் பயின்றார். 1826ல் வழக்கறிஞரானார். சிறந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். 1830ல் நாடாளுமன்ற உறுப்பினரானார். அடிமைத்தனம், மூடநம்பிக்கை போன்றவற்றை தீவிரமாக எதிர்த்தார். மனிதாபிமான மிக்கவர் !

*  கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்ற இந்தியாவுக்கு 1834ல் சென்று ,1838ல் இங்கிலாந்துக்கு திரும்பினார். உலகின் புகழ்பெற்ற நூலான ' இங்கிலாந்தின் வரலாறு ' நான்கு பாகங்களை எழுதி வெளியிட்டார். 1852ல் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்வானார். 

1859ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி மரணமடைந்தார் ! 

*  இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியை நிர்வகிக்கும் பொறுப்பில் ஆண்டு 1834 முதல் 1838 வரை இருந்தார். அப்போது அவருக்கு தரப்பட்ட முக்கியமான இரண்டு பணிகளை செய்து முடித்தார்.

1) இந்தியத் தண்டனைச் சட்டத்தை உருவாக்கியது !

2) இந்திய மக்களுக்கு எந்த மொழியில் கல்வி பயிற்றுவிப்பது என்ற நீண்ட விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த - ஆங்கில வழிக் கல்வியை சட்ட பூர்வமாக அறிமுகப்படுத்தியது ! 

*  மெக்காலேயின் ஆங்கில வழிக் கல்விமுறையை பரிந்துரைத்த 13 பக்க கல்விக்

 குறிப்பு, இந்தியாவின் கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் பிரபுவிடம் 02.02.1835 அன்று சமர்பிக்கப்பட்டது . அதை ஆங்கிலேய அரசு 07.03.1835 அன்று ஏற்றுக் கொண்டது ! 

*  ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் கல்வி என்ற பெயரால் நடந்த வெட்கக் கேட்டை , மெக்காலே தனது 13 பக்க கல்விக் குறிப்பில் எழுதப்பட்டதிலிருந்து சில தகவல்கள் : 

*  " இங்கிலாந்திலுள்ள ஒரு இலாடக்காரன் கூட ஒப்புக் கொள்ள வெட்கும்படியான மருத்துவ முறைகளும் ; இங்கிலாந்திலுள்ள பாடசாலைகளில் படிக்கும் சின்னஞ்சிறிய சிறுமியருக்கும் நகைப்பை உண்டாக்கும் விபரீதமான வான சாஸ்திரங்களும் ;  முப்பதடி உயரமுள்ள அரசர்கள் அறுபதாயிரம் வருஷம் ஆண்ட வரலாறுகளைக் கொண்ட சரித்திரமும் ; பாற் கடலும், நெய் கடலும் கொண்ட பூகோள சாஸ்திரமும் இங்குக் காணப்படுகின்றன ! " ....

*  மெக்காலே மேலும் சொல்வதைக் கேளுங்கள் :

" இப்படி பலவிதமான முரண்பாடுகளுடன் இந்தியாவில் நிலவி வந்த சமஸ்கிருதக் கல்வி முறை என்பது திட்ட மிட்டு, இந்தியாவை இருளில் வைக்க சிறப்பாகத் திட்டமிட்ட முறையாகும் ( The Sanskrit system of Education would be the best calculated to keep the country in darkness ) " ....மெக்காலேயை சங்கிகள் வெறுப்பதற்கு இது தானே காரணம் ! 

*  மெக்காலேயின் கல்வித் திட்ட நிலைப்பாட்டில் சில கூறுகள் : 

1)  ஆங்கில வழிக் கல்வியை பயிற்று மொழியாக கொள்ள வேண்டும்.

2)  ஆங்கில பள்ளிகளில் தாய் மொழியும் கற்பிக்கப் படவேண்டும்.

3)  இந்து, முஸ்லிம் சமூகப் பிள்ளைகள் ஒன்றாக கல்வி கற்க வேண்டும்.

4)  இந்து பண்டிகையின் போது இஸ்லாமிய பிள்ளைகளுக்கும், இஸ்லாமிய பண்டிகையின் போது இந்து பிள்ளைகளுக்கும் விடுப்பு அளிக்க வேண்டும்.

5)  ஆங்கிலேயர் பிள்ளைகளும் இந்தியர்களின் பிள்ளைகளும் ஒரே பள்ளியில் படிக்க வேண்டும்.

6)  நிற பேதம், சாதி பேதம், சமய பேதம் கல்வி கூடங்களில் இருக்கக் கூடாது.

7)  30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் இருக்க வேண்டும்.

8)  ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பதை தடுக்க வேண்டும்.

9) ‌ ஆசிரியர்களுக்கு நல்ல ஊதியம் வழங்க வேண்டும்.

10) மாணவர்களை மையப்படுத்தியே பள்ளிகளும், கல்வியும், பாடங்களும், கற்பித்தலும் அமைய வேண்டும்.

*  பிராமணர்களின் குருகுல கல்விக்கும், சமஸ்கிருத கல்விக்கும் முடிவுரை கட்டினார் என்பதாலேயே மெக்காலேயை சனாதனிகளும், சாதி வெறியர்களும், சமத்துவத்தை எதிர்ப்பவர்களும், கடுமையாக தொடர்ந்து விமர்ச்சிக்கின்றார்கள் ! 

*  மெக்காலே என்ற அந்த ஆங்கிலேயனின் தீர்க்கமான அறிவின் வெளிச்சத்தின் காரணமாக இந்தியாவில் மத நீக்கல் கல்வி அமலானது ! 

ஒருவேளை அப்படி நடக்காமல் இருந்தால், இந்தியா ஓரு மத வழிப்பட்ட நாடாக மாறி, இன்றைய ஆப்கானிஸ்தான் போல மாறி இருக்கும் என்று சமூகவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் ! 

*  இந்த சிறந்த ஆய்வு நூலை எழுதி நமக்கு வழங்கியுள்ள முனைவர் இரா. சுப்பிரமணி அவர்களை பகுத்தறிவு உலகம் பாராட்ட கடமைப்பட்டுள்ளது ! 

தொட்டாலே தீட்டு என்று தூரத்தில் நிறுத்தியது - வர்ணாசிரமம் ! 

பட்டாலே நூலை அணிந்த பார்ப்பனரை உயர்த்தியது - 

சனாதனம் ! 

மூக்காலே முணுமுணுக்கும் சமஸ்கிருதம் ஆதிக்கத்தின் மொழியானது - ஆரியர்களால்!

மெக்காலே முன்னெடுத்த ஆங்கிலம் அனைவரின் மொழியானது - ஆங்கிலேயர்களால் !

பொ. நாகராஜன்,

பெரியாரிய ஆய்வாளர்,

சென்னை - 09.10.2023

********************************************

Tuesday, September 19, 2023

உடன்கட்டை ஏறுதல் 1798 இல் அய்ரோப்பியர் எழுதியது

உடன்கட்டை ஏறுதல்: நேரில் பார்த்த அனுபவத்தை எழுதி வைத்துள்ள ஐரோப்பியர் ..!

இது 1798ல் எழுதப்பட்டது ..

அவர் பெயர்: Donald Campbell ..

--

பெண் ஒருத்தி, இறந்து போன தன் கணவனோடு சேர்த்து எரிக்கப்படவிருந்த நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றேன் ..

இந்த வேதனை தரும் கொடிய சம்பவத்தை நிகழ்த்தத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இடம்  தஞ்சாவூர் கோட்டையிலிருந்து ஒருமைல் வடக்கே உள்ள காவிரி ஆற்றின் கரை ..

அந்தப் பெண்ணுக்கு 16 வயதிற்கு உள்ளே தான் இருக்கும் ..

வெள்ளை சேலை கட்டி இருந்தாள் ..

தலையிலும் கழுத்தைச் சுற்றிலும் வெள்ளை நிற மல்லிகை பூ சூடி இருந்தாள் ..

அவளைச் சுற்றி 20 பெண்கள் நின்று கொண்டு ஒரு வெள்ளைத் துணியை அவள் தலைக்கு மேல் வெயில் படாமல் பிடித்துக் கொண்டிருந்தார்கள் ..

அங்கிருந்து 20 அடி தள்ளி சில பிராமணர்கள் விறகுக் கட்டைகளால் எட்டடி நீளத்தில் நான்கடி அகலத்தில் சிதை தயாரித்துக் கொண்டிருந்தார்கள் ..

முதலில் மூன்றடி உயரத்திற்கு கம்புகளை செங்குத்தாக நிறுத்தினார்கள் ..

உள்ளே சிறிய மரத்துண்டுகளால் நிரப்பினார்கள் ..

பக்கத்தில் மூங்கில் கழிகளின் மேல் கிடத்தப்பட்டிருந்த இறந்தவருக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும் ..

இறந்தவரின் உடம்பைச் சுற்றி நான்கு பிராமணர்கள் முதல் முறை சூரியனுக்கு எதிர் திசையாகவும் அடுத்த மூன்று முறை சூரிய ஒளி வீசும் திசையிலுமாக சுற்றி வந்தார்கள் ..

இப்போது அவர்கள் தங்களுடைய நீண்ட தலைமுடியை அவிழ்த்து விட்டுக் கொண்டும் உடனே மீண்டும் முடிந்து கொண்டும் ஏதோ மந்திரங்களை உச்சரித்தார்கள் ..

மற்றவர்கள் மந்திரம் சொல்லிக்கொண்டு கையில் இருந்த பச்சை இலையால் தண்ணீரை எடுத்து அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த சாண எருக்களின் மீது தெளித்துக் கொண்டிருந்தார்கள் ..

வடகிழக்கு மூலையில் அமர்ந்திருந்த ஒரு வயதானவர் கையில் இருந்த ஓலைச் சுவடியில் உள்ளதை வாசித்துக் கொண்டிருந்தார் .. 

அந்த சூழலின் அழுத்தமும் சோகமும் தாங்க முடியாமல் அருகில் இருந்தவரிடம் இன்னும் எவ்வளவு நேரம் நடக்கும் என்று கேட்டேன் ..

இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகும் என்று சொல்லவே நான் கோட்டையை நோக்கித் திரும்பினேன் ..

500 கெஜ தூரம் நான் சென்றிருக்கும் பொழுது ஒருவர் என் பின்னாலேயே வந்து திரும்பி வருமாறு அழைத்தார் ..

சடங்கு உடனே நடத்தப்பட இருப்பதாகச் சொன்னார் ..

நான் சென்றபோது அந்தப் பெண்ணை மற்ற பெண்கள் அழைத்துச் சென்று ஆற்றில் குளிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள் .. 

அவள் நெற்றியில் செந்நிறத்தில் ஆறு பென்ஸ் காசு அளவுக்கு பொட்டு வைத்தார்கள் ..

பிறகு ஈரமண் போன்று எனக்குத் தெரிந்த ஏதோ ஒன்றை பிசைந்து அவள்  நெற்றியில் தடவினார்கள் ..

பிறகு அந்தப் பெண் சிதைக்கு  அழைத்து வரப்பட்டு அவள் சிதையைச் சுற்றி மூன்று தடவை நடந்தாள் ..

சிதையில் அவள் கணவன் உடல் ஏற்கனவே ஏற்றி வைக்கப்பட்டிருந்தது .. 

இவள் யாருடைய துணையும் இல்லாமல் தானாகவே அதில் ஏறி தன் கணவன் உடல் அருகில் அமர்ந்தாள் ..

பிறகு தான் அணிந்திருந்த நகைகளின் திருகுகளை,  திருகி கழற்றி அந்த ஆபரணங்களை கையில் எடுத்து மீண்டும் அந்த திருகுகளை பொருத்தி பக்கத்தில் நின்ற இரு பெண்களிடமும் ஆளுக்கு ஒன்றாக கொடுத்தாள் ..

தன் காதில் அணிந்திருந்த ஆபரணங்களையும் அவள் மிகுந்த நிதானத்துடன் திருகை கழற்றி எடுத்து, மீண்டும் திருகை பொருத்தி அந்த பெண்களிடம் பிரித்துக் கொடுத்தார் ..

பிரித்துக் கொடுக்கும் பொழுது ஏதோ சிறிய குழப்பம் ஏற்பட அவள் பொறுமையாக அதை சரியாகப் பிரித்துக் கொடுத்தாள் ..

பிறகு மெதுவாக அப்படியே மல்லாக்க சாய்ந்து படுத்தாள். ஒரு மஞ்சள் துணியால் தன் முகத்தை மூடிய பிறகு புரண்டு தன் கணவருக்கு நெருக்கமாக படுத்து தன் வலதுகையை தூக்கி அவர் மார்பின் மீது வைத்தாள் ..

அதன் பிறகு எந்த அசைவுமின்றி காத்திருந்தார் ..

பிராமணர்கள் இறந்தவரின் வாயில் சிறிது அரிசியையும் மீதி அரிசியை அவள் மீதும் தூவினார்கள் ..

பிறகு சிறிது நீரை இருவர் மீதும் தெளித்தார்கள் .. 

பிறகு ஒரு சிறிய கயிறு கொண்டு இருவரையும் சேர்த்துக் கட்டினார்கள் ..

 பிறகு,இருவர் உடலும் மற்றவர் கண்களில் மறையும் அளவுக்கு மரக்கட்டைகளை சுற்றி அடுக்கினார்கள் ..

குறுக்குவாக்கில் சிறிது கட்டைகளை அடுக்கிய பிறகு ஒரு பாத்திரத்தில் இருந்து எண்ணெய்  போன்ற திரவத்தை அந்த பெண் இருந்த பகுதியில் ஊற்றினார்கள் .. 

பிறகு மீண்டும் கட்டையை அடுக்கினார்கள் .. 

இப்போது வெறும் விறகு குவியலாகவே எனக்குத் தெரிந்தது ..

இதே நேரத்தில் ஒரு பிராமணர் சிதைக்கு அருகே இருந்தவர் அந்தப் பெண்ணின் தலைப்பகுதி அருகே குனிந்து அவளை கூப்பிடுவது போல் சத்தம் கொடுத்தார் ..

ஏதோ அவளிடம் சொல்வது போல சொல்லி பின் எல்லோரையும் பார்த்து சிரித்தார் ..

பிறகு முழுவதுமாக வைக்கோலால் மூடினார்கள் சுற்றிலும் கயிறால் இறுக்கிக் கட்டினார்கள் ..

பிறகு ஒருவர் சிறிது வைக்கோலை எடுத்து அருகில் கனன்று எரிந்து கொண்டிருந்த சாண எருக்களில் பற்ற வைத்து அதை சிதையில் போட்டார் ..

பிறகு தீ நன்றாக பற்றுமாறு விசிறி விட்டார்கள் ..

அப்போது காற்றும் அதே திசையில் வீச தீ வேகமாக பற்றி கொண்டது ..

ஏதோ ஒரு கிறீச்சிடும் ஒலியை நான் கேட்டது மாதிரியும் மற்ற இரைச்சலிடமிருந்து அதை தனிமைப்படுத்தி கேட்காதது மாதிரியும் இருந்தது .. 

சில நிமிடங்களில் அந்த குவியல் சாம்பல் ஆனது ..

நான்  அந்த மொத்த நடவடிக்கைகளையும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன் ..

என் பார்வை முழுவதும் அந்தப் பெண்ணின் மீது தான் இருந்தது ..

இந்த கொடூரமான சடங்கை நடத்தியவர்கள் அதை நிறைவேற்றியதில் பெருமிதம் கொண்டிருந்த மாதிரியும், ஐரோப்பியன் ஒருவன் அதைப் பார்த்துக் கொண்டிருப்பது அவர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதும் கோட்டைக்கு திரும்பிய வழியில் என் சிந்தனையாக இருந்தது ..