Tuesday, October 11, 2022

எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட போது என்ன நடந்தது

 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் . திமுகவிலிருந்து நீக்கப்பட்ட போது, என்ன நடந்தது? 

.....விளக்குகிறார் கவிஞர் கண்ணதாசன்

"இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.

கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.

“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் 'கணக்கு அனுப்ப வேண்டும்' என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.

செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, 

“இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.

நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.

“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.

“தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.

“என்ன?” என்றேன்.

“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.

“இருக்காதே” என்றேன்.

“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.

இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.

அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.

கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.

“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார்” என்றேன்.

“என்ன நினைக்கிறாய்?” என்றார்.

“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.

“பார்த்துக் கொள்ளலாம். என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.

ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.

1971 பொதுத் தேர்தலே சான்று.

அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.

இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.

திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, 


"என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.


ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்‌ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.


இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.


1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.

சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.

ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.

எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.

முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.

அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. 

ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.

ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.

கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.

அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.

இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.

சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.

அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.

அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.

எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.

அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.

எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்..

எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.

மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.

விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.

“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”

– என்றும் அவர் காட்டினார்.

அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.

யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். 

கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.

எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.

ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.

திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.

இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.

ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.

கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.

பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.

கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.

எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.

நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.

இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.

ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.

அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.

ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார்.

இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.

பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்."

- 'நான் பார்த்த அரசியல்' எனும்  கவிஞர் கண்ணதாசன்

பொய்யும் புனைவும் ஆராய்ச்சி ஆகுமா? - பொ.வேல்சாமி

 பொய்யும் புனைவும் ஆராய்ச்சி ஆகுமா..? 

( இதோ பூலான்குறிச்சி கல்வெட்டு )

- பொ.வேல்சாமி 11.10.2021 முகநூல் பதிவு

நண்பர்களே..

தமிழ்நாட்டு வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய கருத்துக்களில் தெளிந்த ஆராய்ச்சியாளர்களைப் போன்று, தோழர் மணியரசனைச் சேர்ந்த சிலர் பொய்மையையும் புளுகு மூட்டைகளையும்  துணிச்சலுடன்  பேசி வருகின்றனர். அத்துடன் நில்லாது என்னால் சரியான ஆதாரங்களுடன் எழுதப்பட்டிருக்கின்ற  பல வரலாற்றுச் செய்திகளின் ஆதாரங்களை மறுக்க முடியாததனால் இவர் எந்த சாதி என்று கேட்டு, கேட்பவர்களையும் படிப்பவர்களையும் திசை திருப்பி விடுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். மேலும் இத்தகையவர்கள் என்னை நோக்கி நீங்கள் என்ன சாதி என்று  கேட்பதைப் போன்று அவர்களை நோக்கி அதே கேள்வியை நான் கேட்டால்  அவர்கள் பதறிப் போய் “சாதியைக் கேட்கிறார்“ “சாதியைக் கேட்கிறார்“ என்று கூக்குரலிட்டு இது என்ன நியாயம், இது என்ன நாகரிகம் என்று பதறுகிறார்கள். அவர்களுக்கு நியாயமாக இருப்பது எனக்கு நியாயமாக இருக்காதா..?

இத்தகைய செயல்களை நியாயப்படுத்தவதற்காக அவர்கள் எந்தவிதமான பொய்யையும் துணிந்து சொல்கின்றனர். தன் எதிரில் நிற்கும் மனிதனுக்கு ஆராயும் ஆறாம் அறிவே இருக்காது ( இந்த கருத்து ஆழமாகப் பதிந்ததனால் பகுத்தறிவு என்ற ஒன்று மனிதனுக்கு இருக்காது, இருக்கவும் கூடாது என்று கதைப் பேசுகின்றனர். ) என்ற நம்பிக்கையுடன் இத்தகையவர்கள் தங்களுக்குத் தோன்றியதை எல்லாம் பேசியும் எழுதியும் வருகின்றனர். அப்படிப்பட்ட சிலரில்  ஒருவர் விட்ட “கப்சா”வின் தரம் என்னவென்று காட்டுவதற்கான ஆதாரங்களை உங்கள் முன் வைக்கிறேன். குறிப்பாக சோழர்காலத்தைப் பற்றி ( இத்தகைய செய்திகள் பாண்டியர்கள் காலத்திலும் நாயக்கர்கள் காலத்திலும் மராட்டியர்கள் காலத்திலும் பிரி்ட்டிஷ்காரர்கள் காலத்திலும் ஏன் சுதந்திரத்திற்கு பின்பும் பல ஊர்களில் இதேபோன்று நடந்து வருவதை நீங்கள் அறிவீர்கள் ) அவர்கள் சொல்லுகின்ற சில விசயங்கள் அப்பட்டமான பொய் என்பதை ஜப்பானிய வரலாற்று அறிஞர் எழுதிய “வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம்” நூலின் பக்கங்களை உங்கள் முன் வைத்துள்ளேன். கூடுதலாக அந்நூலின் இணையதள இணைப்பைக் கொடுத்துள்ளேன்.                                                                                                  

1. . சோழர் காலத்து சமூக அமைப்பைப் பற்றிய இத்தகையவர்களின் பொய்மூட்டைகளை அவிழ்ப்பதற்கு ஜப்பானைச் சேர்ந்த  வரலாற்று அறிஞர் நொபுரு கரஷிமா அவர்கள் சோழர்காலத்தில் வெட்டப்பட்ட நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளை ஆராய்ந்து ஆராய்ச்சி செய்து இந்நூல் வெளியிடப்பட்டது. இத்தகைய அரிய நூலின் பெயர்   “வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம்” என்பதாகும். இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பின் இணையதள இணைப்பை உங்களுக்குக் கொடுக்கின்றேன்.


2. களப்பிரர்களைப் பார்ப்பனர்களுக்கு எதிரானவர்கள் என்று வரலாற்று அறிஞர் நீலகண்ட சாஸ்திரியார் போன்ற பலரும் கொடுத்துள்ள சான்றுகளின் அடிப்படையில் தான் என்னுடைய எழுத்துக்கள் அமைந்துள்ளன. முதலில் அத்தகைய  வரலாற்று அறிஞர்களின் கூற்றுக்களின் வன்மை மென்மையை ஆராய்ந்து விட்டு என் எழுத்துக்களுக்கு வருவதுதான் முறையாக இருக்கும். 

3. வேள்விக்குடி செப்பேடு போன்ற வரலாற்றுப் பதிவுகளின் அடிப்படையில் மேற்கண்ட வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடும் கருத்துக்களை இவர்கள் மனம் போனபடி அவதூறு செய்கின்றனர். அப்படியான நேரத்தில் தங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு சிறிதளவாவது அறிவு இருக்கும் என்று இவர்கள் கருதுவதில்லை போன்று தெரிகிறது.  எப்படியென்றால் “யாப்பருங்கலம்” என்ற நூலில் உள்ள செய்தியை “யாப்பருங்கல காரிகை”யில் உள்ளதாகக் கதைவிடுவார்கள். ( ஏனென்றால் எதிரில் இருந்து கேட்டு கொண்டிருக்கும் மனிதன் ஒரு மோடுமுட்டி என்ற ஒரு வலுவான நம்பிக்கை அவர்களுக்கு உண்டு )  அப்படி ஒரு பொய்யை சொல்லும்போது கூட ஒரு முழுமையான பாடலில் அங்கமாக அமைந்த ஒரு நான்கு வரிகளை  மட்டும் உருவியெடுத்து இதுதான் முழுமையான பாடல்  என்று கதைப்பார்கள்.                  

4. சைவ சித்தாந்தத்தைப் போதிக்கும் சிவஞான போதம் நூலை தமிழர் தத்துவம் என்று உங்களிடம் அவர் கூறுவார். அதே நேரத்தில் அந்த நூலை எழுதிய ஆசிரியர் மெய்க்கண்டார். மெய்க்கண்டாரின் தந்தையின் பெயர்  “அச்சுத களப்பாளர்“ என்ற செய்தியை உங்களுக்குச் சொல்லமாட்டார். ( யாராவது ஒரு வாசகர் மெய்க்கண்டாரின் தந்தையார் அச்சுத களப்பாளர் களப்பிரரா? என்று கேட்டால் இவர்கள் என்ன கூறுவார்கள்.?)                   

5. பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான “ஆசாரக்கோவை” என்ற நூல்  ஆரியர்களின் தர்ம சூத்திரங்களைப் பின்பற்றி கி.பி. 8 ம்  நூற்றாண்டிற்கு பின்பு  எழுதப்பட்டது என்பதையும் அந்தக் காலக்கட்டத்தில் களப்பிரர்கள் ஒழிக்கப்பட்டு 300 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது என்பதை மறைத்துவிட்டு அந்த நூல் களப்பிரர் காலத்தைச் சேர்ந்தது என்று உங்கள் காதுகளில் பூ சுற்றுவார். 

6. இதற்கு மேலும் கேட்டுக் கொண்ருப்பவர்கள் தவறுதலாகச் சிந்தித்து ஏதாவது கேள்வி கேட்டுவிட்டால் என்ன செய்வது என்பதற்காக  “பூலான்குறிச்சி” கல்வெட்டைப் பார்  என்று பயப்படுத்துவார்.  கேட்பவர்களைக் கலக்கிவிடுவார். பயப்படாதீர்கள் அந்தக் கல்வெட்டின் வாசகங்கள் முழுமையும் உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். இன்றைய நிலை வரையிலும் மிகத் தெளிவாக இந்தக் கல்வெட்டை யாராலும் விளக்கமுடியாமல் இருக்கின்றது. ஏனென்றால் அந்தக் கல்வெட்டு முழுமையாகக் கிடைக்கவில்லை. சிதைந்துள்ளது.  எனவே இக்கல்வெட்டைப் பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூறுவதற்கு இடம் ஏற்பட்டுள்ளது.  நீங்கள் உங்களுக்கு சரியென்று தோன்றுகின்ற கருத்தைப் பெறுவதற்காக அந்தக் கல்வெட்டையே ஒரு தொல்லியல் அறிஞருடைய கருத்துக்களுடன் வெளியிடப்பட்ட கல்வெட்டை உங்களுக்கு முன் வைக்கிறேன்.  

குறிப்பு

 கூடிய சீக்கிரம் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் என்னுடைய பதிவு வந்த ஒருசில நாட்களிலேயே இது போன்ற பல நூல்கள் தரவிறக்கம் செய்ய முடியாமல் தடை செய்யப்பட்டுள்ளதைக் கவனிக்க வேண்டுகிறேன். )  


வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் ( அறிஞர் நொபொரு கராஷிமா பல நூற்றுகணக்கான சோழர்கால  கல்வெட்டுகளை கணினி மூலம் ஆராய்ந்து எழுதிய நவீன வரலாற்று நூல் இது ) 

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU6jZhy&tag=%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D#book1/


அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம்  : (பழைய விருத்தியுரையுடன்)

https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8luQy.TVA_BOK_0006096


ஆசாரக் கோவை

https://s://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU6jZhy&tag=%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8kxyy&tag=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88#book1/