‘தமிழ்த்தேசிய பெரியார்’, ‘பேராசான்’ பெ.மணியரசன் மீதான நிதி மோசடி குற்றச்சாட்டுகள் – ஒரு பிளாஷ்பேக்.
மனிதகுலத்துக்கான மாபெரும் விடுதலை தத்துவத்தை முன்வைத்த மகத்தான சிந்தனையாளர்கள் பேராசான் கார்ல் மார்க்ஸும் ஏங்கெல்ஸும். தமிழினத்தின் ஒப்பற்ற சுயசிந்தனையாளர் தந்தை பெரியார். மூவரின் பட்டங்களையும் பறித்து மணியரசனுக்கு சூட்டி மகிழ்கிறார் வாசிப்பும் வரலாற்றறிவும் அற்ற சீமான். அதையும் ஏற்று மகிழ்கிறார் மணியரசன்.
ஒரு கட்டுரைக்கு குறிப்பெடுப்பதற்காகப் பழைய புத்தகங்களைத் தேடிக்கொண்டிருந்தபோது கையில் கிடைத்தது 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஒரு சிறு வெளியீடு. அது ‘தமிழ்த்தேசியப் பெரியார்’, ‘பேராசான்’ பெ.ம-வைப் பற்றிய வெளியீடுதான்.
பெ.மவின் தமிழ்த்தேசிய பேரியக்கம், தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியாக இருந்த காலத்தில் மணியரசனின் சர்வதிகாரப் போக்கைக் கண்டித்து எழுத்தாளர் இராசேந்திர சோழன், காஞ்சி அமுதன் உள்ளிட்ட வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 2005ல் கூண்டோடு விலகினர். அப்போது வெளியிடப்பட்டதுதான் ‘த.தே.பொ.க.விலிருந்து விலகியது ஏன்?’ என்னும் வெளியீடு.
இந்த நூலில் எழுத்தாளர் இராசேந்திர சோழன், ‘தமிழ்த்தேசியப் பெரியார்’, ‘பேராசான்’ மணியரசன் மீது முன்வைக்கும் நிதிமோசடி குற்றச்சாட்டுகள்.
· கட்சி வளர்ச்சிக்காக சீட்டு கம்பெனி ஒன்றை ஆரம்பித்திருக்கிறது த.தே.பொ.க திண்டிவனம் வட்டம், மயிலம் கிளை (உலகத்திலேயே தேசிய இன விடுதலை அடைவதற்காக சீட்டுக்கம்பெனி ஆரம்பித்த ஒரே புரட்சிகர அமைப்பு த.தே.பொ.கதான் என்று நினைக்கிறேன்). அங்கிருந்த ஒரு தோழர் திருமண மண்டபம் கட்டுவதற்காக சீட்டுக்கம்பெனி பணத்தை எடுத்து செலவு செய்ய சிக்கலாகியிருக்கிறது. பிறகு திருமண மண்டபத்தை அடமானமாக எழுதி வாங்கி சிக்கலைத் தீர்த்திருக்கிறார்கள்.
மணியரசனின் சர்வதிகாரத்தைக் கண்டித்து இராசேந்திரசோழன் போன்றவர்கள் விலகியபோது, இந்த சீட்டுக்கம்பெனி பிரச்சினைக்கு காரணமே இராசேந்திர சோழன்தான் என்று குற்றம் சாட்டி தோழர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் மணியரசன். இதற்குப் பதில் சொல்லும் இராசேந்திர சோழன், சீட்டுக்கம்பெனி நடக்கும்போதெல்லாம் அதற்கு மணியரசன் மறுப்பு சொல்லாதது மட்டுமல்லாது, அந்த சீட்டுக்கம்பெனி பணத்தை தன் சொந்த தேவைகளுக்கு அவ்வப்போது பயன்படுத்திக்கொண்டதாகவும் குற்றம் சாட்டுகிறார்.
தனது சொந்த ஊரான ஆச்சாம்பட்டியில் புஞ்சை நிலத்தில் மணிலாக்கொட்டை போடுவதற்கும் தன் வீட்டு மாடிக்கு கீற்றுக்கொட்டகை போடுவதற்கும் சீட்டுக்கம்பெனியில் கடன் வாங்கிய ‘தமிழ்த்தேசியப் பெரியார்’, அதன் ஒருபகுதியை மட்டும் திருப்பித் தந்தாராம். மீதியை மயிலம் கிளையே செட்டில் செய்திருக்கிறது.
· தஞ்சையில் கலை நிகழ்ச்சி நடத்தி கட்சி வளர்ச்சிக்காக 40,000 ரூபாய் திரட்டப்பட்டதாம். அந்தக் கட்சி வளர்ச்சி நிதி 40,000 ரூபாயை மணியரசன் சிதம்பரத்தில் வட்டிக்கு விட்டராம் (ஆஹா, என்ன ஒரு புரட்சிகர செயல்!)
பிறகு அதில் சிக்கல் வர அந்தப் பணத்தை வசூல் செய்து அதில் ஆடு வாங்கி வளர்த்தாராம் ‘தமிழ்த்தேசியப் பெரியார்’ மணியரசன்.
· இதுபோக இராசேந்திர சோழனுக்குத் தெரியாமல் மயிலம் கிளை தோழர் பாபுவிடம் அவ்வப்போது பணம் கேட்டுப்பெறுவாராம். ஒருமுறை மணியரசன் இரண்டாயிரம் ரூபாய் கேட்டு, பாபு தர மறுத்ததால் தன் சொந்தக் கட்சித் தோழர் பாபுவுடன் இரண்டு ஆண்டுகள் பேசாமல் இருந்தாராம் ‘பேராசான்’ மணியரசன்.
· இரண்டுமுறை வெளிநாடு சென்ற மணியரசன் முதல்முறை வெளிநாட்டில் அன்பளிப்பாகப் பெற்ற இருபதாயிரம் ரூபாயில் தன் வீட்டுக்குத் தொலைக்காட்சியும் இதர பொருட்களும் வாங்குவதாகக் கூறி செயற்குழுவில் ஒப்புதலும் வாங்கினாராம். அன்பளிப்பாக வந்த இரண்டு கேமராக்களை விலைக்கு விற்று அந்தப் பணம் கட்சி நிதியில் சேர்க்கப்பட்டதாம்.
ஆனால் இரண்டாம் முறை வெளிநாடு சென்று வந்த ‘பேராசான்’ மணியரசன் ‘இந்த முறை இதுதான் வசூல்’ என்று வெளிநாட்டு சாக்லேட்டுகளை மட்டும் செயற்குழுவில் தந்தாராம். ‘புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தங்கள் சக்திக்கு ஏற்ப பொருள்களையோ நிதியையோ தந்திருப்பார்கள். ஆனால் மணியரசன் மறைத்துவிட்டார்’ என்று குற்றம் சாட்டியிருக்கிறார் இராசேந்திர சோழன்.
மேலும் மற்றவர்கள் வசூல் செய்து கட்சி நிகழ்ச்சி நடத்தினால் செலவுபோக கட்சிக்கும் நிதி தருவார்கள். ஆனால் மணியரசனே நிகழ்ச்சி நடத்தும்போது எவ்வளவு வசூல் ஆனாலும் நட்டக்கணக்கே காட்டுகிறார், நிகழ்ச்சிகளில் கட்சிக்குத் தரும் நன்கொடையையும் ‘தமிழர் கண்ணோட்டம்’ சந்தாவையும் முழுமையாக மணியரசன் கட்சிக்கும் இதழுக்கும் தருவதில்லை, யார் யார் சந்தா தந்திருக்கிறார்கள் என்று ‘ஞாபகமாக’ நாட்குறிப்பில் எழுதி, அதை ‘ஞாபக மறதி’யாகத் தொலைத்துவிடுகிறார், நிதிப்பொறுப்புகளைக் கவனிக்க கட்சிக்கு ஒரு பொருளாளரை நியமிக்க மறுத்துவிட்டார் என்றெல்லாம் மணியரசன் மீதான குற்றச்சாட்டுகள் நீள்கின்றன.
இதையெல்லாம் இங்கு குறிப்பிடுவதன் நோக்கம் இப்படி ஒரு ‘சம்பவம்’ நடந்திருக்கிறது என்பதை, அறியாதவர்களுக்கு உணர்த்துவதற்கே தவிர மணியரசன் பெயரைக் கெடுக்கவேண்டும் என்பதற்காக அல்ல. அதைத்தான் ஏற்கெனவே இராசேந்திர சோழனே செய்துவிட்டாரே!
இதில் எது உண்மை, எது பொய் என்பது தெரியாது. ஓர் இயக்கத்திலிருந்து பிரிந்துபோகும்போது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளில் மிகைப்படுத்தல்கள் இருக்கலாம். அதை ஆராய்வது என் நோக்கமும் இல்லை. ஆனால் தகுதிக்கு மீறி ‘தமிழ்த்தேசியப் பெரியார்’, ‘பேராசான்’ என்றெல்லாம் போற்றப்படும் மணியரசன் மீது நிதிமோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர் பெரியாரிஸ்டோ, திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவரோ இல்லை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து மணியரசனுடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்தவர், ‘தமிழ்த்தேசத் தன்னுரிமை’யை இறுதிவரை வலியுறுத்திய தமிழ்த்தேசியவாதி எழுத்தாளர் இராசேந்திர சோழன் என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க பிரிந்தபோது இருதரப்பிலும் முன்வைக்கப்பட்ட பரஸ்பர குற்றச்சாட்டுகளை ஸ்கேன் செய்து, ஜெராக்ஸ் எடுத்து லாவணி பாடுபவர்கள், ‘தமிழ்த்தேசியத்துக்குக் கிடைத்த அரிதினும் அரிதான பெரியார்’, ‘பேராசான்’ மீது இராசேந்திரசோழன் வைத்துள்ள குற்றச்சாட்டுகளையும் இனி பரிசீலிப்பார்கள் என்று நம்புகிறேன்.
நன்றி: எழுத்தாளர் சுகுணா திவாகர்.
No comments:
Post a Comment