Tuesday, September 16, 2014

அயோக்கிய சிகாமணி அருகோ-வின் அண்ட புளுகும் ஆகாசப் புளுகும்-1

காலை 10 மணி. ஈருருளையில் (சைக்கிளில்) நேராக சக்தி மணிப்பொறி யகத்துக்குச் சென்றேன் (சக்தி வாட்ச் கம்பெனி). ஈருருளையை நிறுத்தியவுடன், வாங்க! என்றார் சக்தி. வணக்கமண்ணே! என்று கூறியவாறு கடைக்குள்ளே சென்றேன்.
கடைக்குள் எப்போதும் பல தரப்பட்ட தமிழின உணர்வார்கள் வருவார்கள். கலந்துரையாடுவார்கள். சக்தியும் அதில் கலந்து கொள்வார். வாடிக்கையாளர்கள் வரும்போது அவர்களைக் கவனித்துக் கொண்டே சில நேரங்களில் எங்கள் கலந்துரையாடலில் கலந்து கொள்வார்.
அப்போது தமிழாசிரியர் ஒருவர் வந்தார். சக்தி, ‘வாங்கய்யா!’ என்றார். நானும் ‘வணக்கமய்யா!’ என்றேன். அவரும் ‘வணக்கம்’ என்று கூறிக் கொண்டே கடைக்குள் வந்து என் அருகில் அமர்ந்தார். கையில் ஒரு பொத்தகம் வைத்திருந்தார்.
‘அது என்ன நூல் அய்யா’ என்றேன். ‘எழுகதிர்’ என்று கூறியவாறே என்னிடம் கொடுத்தார். அப்போதே அந்நூலை ஒரு புரட்டு புரட்டினேன். பிறகு நானே பேச்சைத் தொடங்கினேன். ‘அருகோ எப்போதும் பெரியாரைப் பற்றி அவதூறைக் கிளப்பிக் கொண்டே இருக்கிறார். பலமுறை விடை கூறிய பின்பும் அதே அவதூறை அவர் செய்து கொண்டிருக்கிறார்’ என்றேன்.
‘என்ன அவதூறய்யா?’ என்றார் தமிழாசிரியர்.
காலையில் ‘தமிழர் கழகம்’ என்றிருந்த தீர்மானத்தை மாலையில் ‘திராவிடர் கழகம்’ என்று ஈ.வெ.ரா. மாற்றினார் என்று அவதூறாக எழுதியிருக்கிறார். ஏற்கனவே பல முறை இம்மாதிரியாக எழுதியிருக்கிறாரு! அதற்கு பலமுறை விடையும் சொல்லியாச்சய்யா! என்றேன்.
‘அது உண்மைதானய்யா?’ என்றார் தமிழாசிரியர்.
நான், ‘அது உண்மை இல்லை அய்யா. இப்ப பாருங்கய்யா. இந்த ‘எழுகதிர்’ல ( மார்ச்சு 2013) ‘கோவிலூரான்’ என்கிற தலைப்புல ஒரு கட்டுரை வந்திருக்கு. அதில, ‘உள்ளபடி 1944 ஆகஸ்ட் திங்களில் நடைபெற்ற சேலம் மாநாட்டின் காலை நிகழ்ச்சியில் ‘தமிழர் கழகம்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. அன்று மதியம் நடந்த சமபந்தி விருந்தின் போதுதான் சி.பி.சிற்றரசு (சின்ராசு), டார்பிடோ சனார்த்தனம் ஆகிய இரு தெலுங்கர்கள் பெரியாரை நோக்கி, ‘நீர் கன்னட பலிஜா நாயுடு. நாங்கள் தெலுங்கு பலிஜா நாயுடு. நாமும் ஒன்று சேர்ந்து ‘தமிழர்கழகம்’ என்று கட்சியின் பெயரை மாற்றி, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழக்கமிட்டால், நாளை ஒருவேளை தனித்தமிழ்நாடு அமையுமானால், இது தமிழருக்கு மட்டும்தான். தமிழரல்லார் வெளியேறுங்கள் என்று சொன்னால் நாம் என்ன ஆவோம்?’ என்று மடக்க, பெரியாருக்கு உள்ளபடியே ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பதில் நம்பிக்கையிருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? என்னை விட யாரடா தமிழர்? என்று சொல்லி அவர்களை விரட்டியிருக்க வேண்டும்’.
‘ஆனால் என்ன செய்தார். காலைத் தீர்மானத்தை என்னால் மாற்ற இயலாது. அண்ணாத்துரையைப் போய்ப் பிடியுங்கள். அவர் சொல்லுக்குத்தான் இந்த முட்டாள் கூட்டம் மகுடி முன் நாகம் போல் மயங்கிக் கிடக்கிறது. கட்டுப்படும் என்று சொல்ல, அவர்களும் அண்ணாவைப் போய்ப் பார்த்து, ‘தமிழர் கழகம்’ எனும் பெயரையும், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தையும் மாற்ற நீங்கள் தான் வழி செய்ய வேண்டும் என்று கூற, அவரால் கொண்டு வந்து நிறைவேற்றப் பட்டதுதான் ‘திராவிடர் கழகம்’ ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்ற தீர்மானம்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே இது போன்று ‘தென்மொழி’யில் அருகோ கட்டுரை எழுதினார். பிறகு ‘நாம் தமிழர் கட்சி’யின் ஆவணத்தில் இதே அவதூறை கூறியிருந்தார்கள். அதற்கு ‘திராவிடர் விடுதலைக் கழக’த் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள், ‘பொய்யர்கள் இந்தப் புளுகை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கூறி, ‘1944 - இல் பெயர் மாற்றம் செய்யப்படுவதற்கு முன்பே ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ (நீதிக்கட்சி), ‘திராவிடர் சங்கம்’ என்ற பெயரில்தான் தொடங்கப்பட்டது என்பதையும், தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் கிளைகள் ‘இராயப்பேட்டை திராவிடர் சங்கம்’, ‘ஜார்ஜ் டவுன் திராவிடர் சங்கம்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது என்பதையும் அதற்கு முன்பாக 1892-இல் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களால் உருவாக்கப்பட்ட ‘ஆதி திராவிட மகாஜன சபை’ 1894- இல் ‘திராவிட மகாஜன சபை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்றும் பல செய்திகளை எழுதியிருந்தார்’.
‘இருந்த பின்னும் மீண்டும் இப்போது வேறொரு பெயரில், அருகோ பெரியாரை இதே குற்றச்சாட்டை சொல்லி அவதூறு செய்கிறார். ஆனால் 1944- இல் உண்மையில் நடந்தது என்ன? காலையில் ‘தமிழர்கழகம்’ என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டதா? அதற்காக அண்ணல்தங்கோ, கி.ஆ.பெ. விசுவநாதம் போன்றோர் முயன்றார்களா?’
‘அப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை என்பதுதான் உண்மை’ என்றேன்.
‘என்னய்யா இப்படி சொல்றீங்க’ என்றார் தமிழாசிரியர்.
ஆமாய்யா. இது குறித்து 1944 ஆம் ஆண்டு ‘குடியரசு’ இதழ்களில் செய்திகள் விரிவாக கிடைக்கின்றன.
1944 மாநாட்டை நடத்துவதற்கு பல வகைகளில் பி. பாலசுப்ரமணியம், கி.ஆ.பெ. விசுவநாதம், தோழர் நெட்டோ போன்றவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதற்கு காரணம் நீதிக்கட்சியாக இருக்கிறன்ற போது அது பார்ப்பன எதிர்ப்பு இயக்கமாகவும் ஜமீன்தார்களின் கட்சியாக மட்டுமே இருந்தது. அது பெரியாரின் தலைமையில் திராவிடர் கழகமாக மாறும்போது இன்னொரு சுயமரியாதை இயக்கமாக, கடவுள் மறுப்பு இயக்கமாக, தாழ்த்தப்பட்டவர்களுக்கான இயக்கமாக மாறும் என்பதோடு மட்டுமல்லாமல் பட்டம் பதவிகளை துறக்கவும் தேர்தலில் போட்டியிடாத இயக்கமாகவும் இருக்கும் என்பதால் அவர்கள் எதிர்த்தனர்.
தோழர் கி.ஆ.பெ. விசுவநாதமும், பி. பாலசுப்ரமணியமும் ஆதிக்கச் சாதியான வெள்ளாளர் மற்றும் முதலியார் வகுப்பைச் சார்ந்தவர்கள் என்பதால் பார்ப்பன எதிர்ப்பு மட்டும் அவர்களுக்கு உடன்பாடாக இருந்தது. மேலும் அவ்விருவரும் பக்தி பழமாக வாழ்ந்தனர் என்பது அவர்களது வரலாறே கூறும்.
திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றத் தீர்மானம் குறித்து 9.9.1944 ‘குடியரசு’ இதழில் எழுதிய தலையங்கத்தில்,
‘இத்தீர்மானம் முறைப்படி சேலத்தில் 10 மாதங்களுக்கு முன் கூட்டப்பட்ட நிர்வாக சபைக் கூட்டத்தில் - தோழர் இரத்தினசாமி, நெட்டோ அவர்கள் வீற்றிருந்த கூட்டத்தில், நெட்டோ அவர்கள் ஆதரிப்பின் பேரிலேயே, ‘தென் இந்திய நல உரிமைச் சங்கம்’ என்பதை ‘திராவிடர் கழகம்’ என்று அழைக்கப்பட வேண்டும் என்பதாக ஏகமனதாக தீர்மானித்து, இத்தீர்மானத்தை மாகாண பொது மாநாட்டுக்கு இக்கமிட்டி சிபார்சு செய்கிறது என்று தீர்மானித்து இருப்பதோடு, அப்படிக் கூட்டப்படும் மகாண மாநாட்டை சேலத்தில் நடத்த வேண்டும் என்றும் அந்த வினாடி யிலேயே மாநாட்டை அழைத்தவர்கள் இதே தோழர்கள் இரத்தினம் பிள்ளையும் நெட்டோ அவர்களுமே ஆவார்கள்’ என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
மேலும் அத்தலையங்கத்தில், ‘அன்றியும் சேலம் நிர்வாக சபைக் கூட்டத் திற்குப் பிறகு கூட்டப்பட்ட பல ஜில்லா தாலுகா மாநாடுகளில் இத் தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டு காரியலயத்திற்கு அனுப்பப்பட்டிருக்கின்றன’ என்றும் எழுதப்பட்டிருந்தது.
‘அப்படியா!’என்று வியப்பில் ஆழ்ந்தார் தமிழாசிரியர்.
நான், ‘அது மட்டுமல்லய்யா, இன்னும் நிறைய செய்திகள் இருக்கய்யா’ என்று தொடர்ந்தேன்...
நீதிக்கட்சி சுயமரியதை இயக்கமாகவும் சமுதாய இயக்கமாகவும் மாறப் போவதை விரும்பாத தோழர்கள் நெட்டோ, கி.ஆ.பெ. விசுவநாதம், பால சுப்பிரமணியம் போன்றவர்கள் முயன்றனர்.
சேலம் மாநாடு நடைபெறுவதை தடுக்கும் முகமாக தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தனர். இது குறித்து 2.9.44 குடியரசு ஆசிரியவுரையில்,
‘சேலத்துக்கு மாநாட்டை அழைத்தவர்கள் எதிரிகள் வயப்பட்டு கட்சியின் பேரால் மக்களை மிரட்டியும், ஏமாற்றியும் பிழைக்கும் சில மக்களுக்கு ஆளாகி, மாநாடு நடத்தாமல் விட்டுவிட முயற்சித்தார்கள் என்றாலும், சேலம் மகாஜனங்களுக்கு இருந்த ஆர்வத்தால் மாநாடு நடத்தத் தீர்மானிக்கவும் வரவேற்புக் கழகம் அமைக்கவும், நிதி திரட்டவும் ஆன காரியம் செய்யப்பட்டுவிட்டது. இக்காரியத்தை மாநாடு நடத்தப் பயன் படுத்தாமல் மாநாடே எங்கும் நடத்தாதிருக்கப் பயன்படுத்தி, அதாவது தானும் நடத்தாமல் வேறு ஒருவரையும் நடத்த விடாமல் முட்டுக்கட்டை போட பயன்படுத்தப்பட்டு வந்தது...... கடைசியாக, 10.8.1944 ஆம் தேதி பெரியார் சேலம் சென்று வரவேற்புக் கழக அங்கத்தினர் கூட்டம் ஒன்று கூட்டி, அதில் மக்கள் நிலை தெரிந்து வேறு சில காரியதரிசிகளை நியமித்து பணமும் சுமார் ரூ 2000 வசூலுக்கு ஏற்பாடு செய்துவிட்டதை அறிந்த வரவேற்பு தலைவரும் காரியதரிசிகளும் பெரியார் ஜாகைக்கு வந்து, தாங்கள் அக் கூட்டத்திற்கு வராதற்கு ஒவ்வொருவரும் ஒரு சாக்குச் சொல்லி மாநாட்டை 20 ஆம் தேதி நடத்தி விடுகிறோம் என்று உறுதிச் சொல்லி விட்டுச் சென்றார்கள். மறுநாள் பத்திரிகைகளில் மாநாடு 20 ஆம் தேதி நடக்கிறது என்றும், தலைவர், திறப்பாளர், கொடியேற்றுபவர் இன்னார் என்றும் பத்திரிகைகளில் சேதிகள் காணப்பட்டன’.
‘பிறகு, அத்தலைவர் தவிர, கொடியேற்றுபவர், திறப்பவர் ஆனவர்கள் பெயரை மாற்றி வேறு பெயர்கள் வெளியாயின. இந்த நிலையில் அனேக காரியங்கள் திரைமறைவில் செய்யப்பட்டு, வேறு பல எண்ணங்களோடு பல இடம் சுற்றித் திரிந்தும் மாநாட்டை திடீரென்று 27 ஆம் தேதி மாற்றி, எவ்வளவோ செய்து பார்த்தும், என்ன என்னமோ செய்யப்பட்டும் கடைசியாக மாநாடு 27 ஆம் தேதி நடந்தே விட்டது.4000 பிரதிநிதிகள் வெளியூர்களில் இருந்து மாத்திரம் ஏராளமாய் வந்து குவிந்து விட்டார்கள்’.
‘மாநாட்டை தங்கள் இஷ்டப்படி நடத்த தோழர் பாண்டியன் அவர்களை மலைபோல்நம்பி, மாநாட்டுக் கொட்டகைக்குள் யாரையும் விடாமல், தங்களுக்கு வேண்டியவர்களை மாத்திரம் விட்டுக் கொண்டு காரியம் நடத்த நேப்பாளத்து கூர்க்கர்களை மாநாட்டுப் பந்தலின் வாயில்களில் நிறுத்தி, அவர்களை இமய மலை போல் நம்பி கேட்டுக்கு காவல் வைத்து விட்டு, பிரதிநிதி டிக்கட் கொடுப்பதில் ஒவ்வொரு பிரதிநிதியும் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும், அவ்விண்ணப்பத்தின் மீது டிக்கட் கொடுக்க யோசிக்கப்படும் என்றும், மற்றும் என்ன என்னவெல்லாம் செய்யப் பட்டது என்றாலும், தோழர்பாண்டியன் அவர்கள் இக்காரியங்களை வெறுத்து மாநாட்டு காரியதரிசி முதலியவர்களுக்கு கையை விரித்து விட்டதனாலும், கூர்க்காக்கள் விரட்டப்பட்டுவிட்டதினாலும், டெலிகேட் டிக்கட்டுகள் வழக்கம் போல் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. மக்கள் பல இடங்களில் இருந்து பதினாயிரக்கணக்கில் பெருகிய வண்ணம் இருந்ததால் மரியாதையாகவும், நாணயமாகவும், ஒழுங்குமுறைப்படியும் மாநாடு நடக்க வேண்டியதாகி விட்டது ’
என்றெல்லாம் சேலம் மாநாட்டைப்பத்தி எழுதியிருக்காங்கய்யா! என்றேன்.
‘என்னனென்ன தீர்மானம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டதய்யா’ என்று வினா தொடுத்தார் தமிழாசிரியர்.
சேலம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களில் முதன்மையானது என்னென்னா வெள்ளக்காரனால் கொடுக்கப்பட்ட பட்டங்களையும் பதவிகளையும் விட்டுடனும், தேர்தலில்ல கட்சி ஆளுங்க போட்டியிடக் கூடாது அப்படிங்கறதுதான்ய்யா. இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சுதான் நெட்டோ, பால சுப்பிரமணியம் மற்றும் கி.ஆ.பெ. விசுவநாதம் போன்றோர் சண்டைப் போட்டாங்களே தவிர, மத்தபடி தமிழர் கழத்த திராவிடர் கழகமுன்னு என்று பெயரு மாத்திட்டாங்க அப்படிங்கறதுக்காக அல்ல. மேலும், அதே ஆசிரியவுரையில், மாநாட்டில் காலையில் தலைமையுரையில் பெரியார்,..
‘அதிலும் முக்கியமானது என்னவெனில் நான் தென் இந்திய நல உரிமைச் சங்க மாநாட்டு தலைவனாக தலைமை உரை நிகழ்த்துவது என்பது இதுதான் கடைசித் தடவை’ என்று கூறி விட்டு,‘முக்கியமான தீர்மானங்கள் இம்மாநாட்டின் நடைபெற வேண்டி இருப்பதால் சீக்கிரம் உணவருந்திவிட்டு 3 மணிக்கு வர வேண்டு’மென்று கேட்டுக் கொண்டு மாநாட்டு உண்டி ஓய்வு கொடுத்து விட்டார்.
.... தீர்மானங்களைப் பற்றி பேசுமுன், காரியதரிசி தோழர் அண்ணா துரை வரவேற்புக் காரியதரிசி தோழர் நெட்டோவை மாநாட்டுக்கு வந்து தீர்மானங்களைக் கொடுக்கும்படி ஒன்றுக்கு மேற்பட்ட தடவை கேட்டார். தோழர் நெட்டோ, தோழர் பாண்டியனைக் கேட்டுவிட்டு தருவதாகச் சொல்லி கடைசியாக சில தீர்மானங்கள் மாத்திரம் மேஜைக்கு வந்தன....
தீர்மானங்கள் அமலுக்கு வந்தால் யார் யார் நிலை குலைந்து விடுமோ, யார் யார் வயிற்றுப் பிழைப்புக்கு வழி அடைத்து விடுமோ அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சகல காரியமும் செய்து விட்டுதான் அடங்குவார்கள். ஆதலால் அவர்கள் அறிக்கையை எவரும் லட்சியம் செய்ய வேண்டியதில்லை.
தோழர்கள் பி. பாலசுப்பிரமணியம், நெட்டோ ஆகியவர்களின் தன்மையைப் பற்றி நாம் சொல்லி யாரும் தெரிந்து கொள்ள வேண்டிய தில்லை.
சர்காரிடம் பட்டம் சிபார்சு செய்யவும், பப்ளிக் பிராசிகூட்டர் வேலை வாங்கிக் கொடுக்கவும் தோழர் பி. பாலசுப்பிரமணியத்திற்கு சக்தி இருக்கிறதென்று அவற்றில் ஆசையுள்ளவர்கள் கருதுகிறார்கள். அதற்கேற்ற வண்ணம் தோழர் பி. பாலசுப்பிரமணியம் காட்டிக் கொள்கிறார். கவர்னரும் அட்வைசரும் பாலசுப்பிரமணியத்திடம் அதிக சிநேகம் என்றும், அதிகாரிகள் பாலசுப்பிரமணியத்தைக் கண்டால் நடுங்குகிறார்கள் என்றும் ஒரு செட்டு பிரச்சாரம் செய்து, பாலசுப்பிரமணியத்துக்கு பணமும், பத்திரங்களும் வாங்கிக் கொடுத்து பங்கு பெறுகிறார்கள் என்பது யாருக்குத் தெரியாது! பட்டத்திலும் உத்தியோகத்திலும் மக்களுக்கு உள்ள ஆசை யார் காதிலும் விழுகும்படி செய்வதில் அதிசியமில்லை. ஆதலால் இதன் பயனாய் ஏற்படுகிற கூட்டு அமைப்பையும் அந்த அமைப்பை தோழர் பாலசுப்பிரமணியம் பயன்படுத்திக் கொள்ளுவதையும் கவனிக்க ஆரம்பித்தால், எந்த கட்சிக்கும் மதிப்போ மானமோ இருக்க முடியாது. நம்மில் சில பெரிய மனிதர்கள் என்பவர்களும் ‘சண்டே அப்சர்வர்’ பத்திரிகையை ‘சினிமா தூது’ பத்திரிகை போல் கண்டு நடுங்கி கப்பம் கட்டி வருகிறார்கள்.
‘இப்படிதாய்யா குடியரசு 2.09.1944 ஆசியர்வுரை பல செய்திகளை சொல்லுது. இன்னொன்னு பாருங்கய்யா. பெயர் மாற்றம் பெயர் மாற்றமுன்னு சொல்லறாங்களே அந்த சிக்கல் என்னய்யான்னு பாத்திங்கின்னா அருகோ மாதிரி ஆளுங்க சொல்ற மாதிரி அண்ணல் தங்கோவும் கி.ஆ.பெ. விசுவநாதமும் கிளப்பவுமுல்ல. அது தமிழர் கழகம், திராவிடர் கழகம் அப்படிங்கிற சிக்கலும் அல்ல’.....
‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்பதை ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் மாற்றுவதற்கு உரிய நோட்டிசு கொடுக்கப்பட வில்லை என்று தான் தோழர் நெட்டோ சிக்கலை கிளப்புகிறாரு. இதுக்கு தோழர் கணேச சங்கரன் என்பவரும் ஆதரவு தெரிவிக்கிறாரு. இதே குடியரசு இதழ் (2.9.44) அறிக்கையில பெரியார் சொல்றாரு....
‘மாநாட்டில் ஜஸ்டிஸ் கட்சிக்கு தென் இந்திய நல உரிமைக் கழகம் என்று இருந்த பெயரை திராவிடர் கழகம் என்று மாற்றப்பட்டது உண்மை தான். ஆனால் அத்தீர்மானம் பொதுக் கூட்டத்தில் பிரேரேபித்து ஆமோதித்தவுடன் இதற்குப் போதிய நோட்டீசு இல்லை என்று மாத்திரம் தோழர் நெட்டோ சொன்னார். அதை தோழர் கணேச சங்கரன் ஆதரித்தார். தலைவர் அதற்கு சமாதானம் சொன்னார்’.
‘அதாவது,‘சேலத்தில் 26.11.43 ஆம் தேதியில் நடந்த றீ.ணூ.ஸி.ய். நிர்வாக சபைக் கூட்டத்தில் பெயர் மாற்றம் நிறைவேற்றப்பட்டு, அதை சேலத்தில் நடக்கும் மாகாண (இந்த) மாநாட்டுக்கு சிபார்சு செய்வதாகவும் தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. அதில் தோழர்கள் நெட்டோ, இரத்தினம் பிள்ளை முதலியவர்களும் இருந்திருக்கிறார்கள். அதன்பின் சுமார் 20- க்கு மேற்பட்ட ஜில்லா, தாலுகா மாநாடுகளில் இது நிறைவேற்றப்பட்டு சேலம் மாநாட்டுக்கு சிபார்சு செய்யப்பட்டு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநாட்டிற்கும் இது பற்றி வெளியூர்களில் இருந்து ஏராளமான தீர்மானங்கள் வந்திருக்கின்றன. அவை தோழர் நெட்டோ அவர்கள் வசமே இன்னமும் இருக்கின்றன’.
‘அன்றியும் தென் இந்தியர் கழகம் என்பதும் திராவிடர் கழகம் என்பதும் ஆதியில் ஏற்படுத்தினவர்கள் கருத்தில் வித்தியாச அருத்தம் கொண்டதல்ல. மக்களுக்கு இன எழுச்சியும் நாட்டு எழுச்சியும் ஏற்படுவதற் கும் திராவிட நாடு கேட்பதற்கு ஆக்கம் அளிப்பதற்கும் ஆகவே இச்சிறு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது’ என்று சொன்னார்.
‘பிரதிநிதிகள் ‘ஓட்டு! ஓட்டு’ என்றார்கள். ஓட்டுக்கு விடப்பட்டது. ஏகமனதாய் நிறைவேறிற்று. அப்போது தோழர் நெட்டோ அவர்களும் இப்போது அறிக்கை விடும் நண்பர்களும் இருந்தார்கள். எதிர்ப்புக்கு நெட்டோவாவது இதர நண்பர்களாவது கை தூக்கியோ ஆட்சே பனையைக் காட்டியோ ஓட்டு கொடுக்கவில்லை. வேறு ஒருவரும் எதிர்ப்புக்கு ஓட்டுக் கொடுக்க வில்லை. இதுதான் பெயர் மாற்றத் தீர்மானத்தினடையவும், அதன் எதிர்ப்பினுடையவும் நடவடிக்கையாகும். நெட்டோ முதலியவர் களால் பத்திரிகைகளுக்கு வந்த சேதிகள் பின்னால் யோசித்துச் சொல்லப் படுபவைகளாகும்’.
என்று நான் பெரியார் கூறியவற்றை விளக்கிக்கிட்டிருக்கும் போது சக்தி அவர்கள், ‘திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் குறித்து பெரியார் ஏதாவது  நேரடியாக விளக்கியிருக்கிறாரா’ அப்படின்னு கேட்டார்.
அதற்கு நான், ‘சேலம் மாநாடு நடப்பதற்கு  இரண்டு மூன்று மாசங்களுக்கு முன்னேயே, அதாவது 17.6.1944 குடியரசு இதழில்லேயே எழுதியிருக்கிறார்’ என்றேன்.
‘விபரமாக சொல்லுங்கய்யா’ என்றார் சக்தி. உடனே நான், ‘பெரியார் அவர்கள்,
இப்போது திராவிடர் என்ற  மாறுதல் ஏன்? இது பலரும் கேட்கக் கூடிய நியாயமான கேள்வியாகும். இதைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் கூற ஆசைப்படுகிறேன்.
இந்த நாட்டு மக்களாகிய நமக்கு ஏராளமான குறைபாடுகள் இருப்பது கண்கூடு. அதை உத்தேசித்தே நமது பெரியோர்கள் 27 ஆண்டுகட்கு முன்னர் நீதிக்கட்சியைத் தோற்றுவித்தார்கள். எனக்கு நன்றாக ஞாபக மிருக்கிறது. இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் நீதிக்கட்சி என்ற பெயர் இருந்ததில்லை. ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ எனப்படுவதுதான் அதன் பெயர். அந்தக் கட்சிக்காக ஏற்பட்ட ஆங்கிலப் பத்திரிக்கையின் பெயர் ‘ஜஸ்டிஸ்’ என்பது. அப் பத்திரிகையின் பெயரே கட்சிக்கு நிலைத்து விட்டது. கட்சியின் தமிழ்ப் பத்திரிக்கைக்கு ‘திராவிடன்’ என்ற பெயரிருந்தும் நம் கட்சிக்கு திராவிடர் கட்சி என்ற பெயர் ஏற்படாமல் ஆங்கிலப் பத்திரிகை யின் பெயராலே கட்சியின் பெயர் வழக்காற்றில் வந்து விட்டதற்குக் காரணம் ஆங்கிலமறிந்தவர்களே அக்காலத்தில் நம் கட்சியில் செல்வாக் கும் ஆதிக்கமும் பெற்றிருந்ததுதான். அந்தக் காலத்தில் இந்தக் கட்சி எந்த மக்களின் நல்வாழ்விற்காக ஏற்பட்டதோ, அந்த மக்களுக்குப் பெயரென்ன என்ற பிரச்சனை எழுந்தது. ஆனால், ‘திராவிடர்’ என்ற பெயருக்கு ஏகோபித்த ஆதரவு கிடைக்காத காரணத்தால், பெரிதும் ஆந்திரர் ஒப்புக் கொள்ளாததால் தென் இந்தியர் என்று ஏற்படுத்திக் கொண்டார்கள்’.
‘தென்னிந்தியர், பார்ப்பனரல்லாதார் என்ற இவ்விரண்டும் ஒன்றுக் கொன்று முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளன. உத்தியோகங் களைப்  பிரித்துக் கொடுப்பதில்  பார்ப்பனரல்லாதார் என்ற பிரிவினை ஒப்புக் கொள்ளப்பட்டதே தவிர, இன உணர்ச்சி ஏற்பட வேண்டிய முறையில்  ஒப்புக் கொள்ளப்படவில்லை. அந்தக் குறைபாடு நம்  மனத்தில் பல நாட்களாகவே இருந்து வருகின்றது. தென் இந்தியப் பெருங்குடி மக்களுக்கு இலட்சியச் சொல் ஒன்றில்லாமல் இருப்பது பெருங்கேடு. இந்தக் காரணத் தாலேயும், அல்லாதார் என்ற பட்டம் நமக்குக் கூடாது என்பதாலேயும், நாமெல்லாரும் ஒரு கூட்டிற்குள் வர வேண்டும் என்பதாலேயும் ஒரு குறிச்சொல் தேவை ; இதைப் பல  நாட்களாகவே நான் கூறி வருகிறேன்....’
என்று பெரியார் விரிவாகக் கூறியிருக்கிறார் அய்யா’ என்றேன்.
‘பேரறிஞர் அண்ணா பெயரில் தீர்மானம் கொண்டுவந்தார் பெரியார்  என்று சொல்லுகிறார்களே’ என்றார் இன்னொரு நண்பர்.
அய்யா! இதற்கு தந்தை பெரியாரே நல்லா விளக்கம் சொல்றாரு...
‘.... கட்சியைத் திராவிடர் கழகம் என்று மாற்றித் திராவிடர் கழகத்தில் கட்சியின் பெயரால் யாரும் தேர்தலுக்கு நிற்கக் கூடாது என்றும், சர்க்கார் தயவில் ஒரு நியமனமும் பெறக் கூடாது என்றும் சேலம் மாநாட்டில் தீர்மானம் போட்டேன்’.
‘அதையறிந்த சிலர் எப்படியாவது கட்சி சேர்த்துக் கொண்டு, கலகம் செய்து கட்சியைக் கலைக்க, என்ன என்னமோ சூழ்ச்சி செய்தார்கள். நான் இந்த மாநாட்டிற்குத் தலைவராக வந்தால் இம்மாதிரி தீர்மானம் கொண்டு வந்து விடுவேன் என்பதாகக் கருதி வேறு ஒருவரைத் தலைவராகப் போடுவது என்றும், என் பெயரை மாநாட்டின் தலைவராகப் பிரேரேபித்துப் போட்டியை ஏற்படுத்தி அதன் மூலம் கலகம் ஏற்படச் செய்வது என்ற அளவிலும் பெரிய சூழ்ச்சி செய்து வைத்திருந்தார்கள். இது தெரிந்து நான் சேலம் மாநாட்டிற்கு வரமாட்டேன் என்று கூறிவிட்டேன். ஏன்? அவர்கள் எல்லாம் பதவியே குறிக்கோளாகக் கொண்டவர்கள். அவர்களுடன் ஏன் சண்டை போட வேண்டும்?....’
‘அதுசமயம் சேலத்திலுள்ள மாநாட்டு வரவேற்பாளர்கள் என்பவர்கள் எல்லாம் சரி வர சேலம் மாநாட்டின் டிக்கெட்டுகளைக் கூட விற்காமல் தங்களுக்கு வேண்டிய ஆட்களாகப் பார்த்து விற்றுவிட்டு மற்றவர் களுக்கெல்லாம் டிக்கெட் தராமல் இருந்து விட்டார்கள்.’
‘இதை அறிந்த தஞ்சை, திருச்சியிலுள்ளவர்கள் ஓர் ஆயிரம் பேருக்கு மேல் சேலம் வந்து, டிக்கெட் கேட்டுத் தரவில்லையயன்று  சண்டை போட்டுக் கொண்டு பெரிய கலவரம் செய்யத் துணிந்து இருந்தார்கள்....’
‘... ஆனால் நான் போகாவிட்டால் கலவரம் ஆகுமே என்ற பயமும் எனக்கு ஏற்பட்டது. எனவே ஒன்றும் செய்யத் தோன்றவில்லை. பிறகு என்னை சேலத்துக்கு அழைத்துச் செல்ல நேரில் ஆளும் வந்தது. திரு. அண்ணாதுரையும், ஈரோடு வந்து சேலம் போகலாம் என்று சொன்னார். ஆட்கள் மிகவும் குறைவு.... அவர்கள் என்னை தோல்வி அடையச் செய்வதற்குச் செய்த ஏற்பாடு பலன் தரவில்லை’.
‘இந்தத் தந்திரத்திற்கு அவர்கள் திரு. அண்ணாதுரையைத் தங்கள் பக்கத்தில் சேர்க்க நம்பி இருந்தார்கள். ஆனால் நிலைமையைப் பார்த்து அண்ணாதுரை, அவர்களை விட்டுவிட்டு நம்மிடம் வந்து நம்மை வரும்படிக் கட்டாயப்படுத்தினார்கள். எனக்கு அது சமயம் அண்ணாதுரை மீதும் சந்தேகம் ஏற்பட்டிருந்தது’.
‘ஆனால் அண்ணாதுரை அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய, அங்குத் தலைவராகப் பிரேரேபிக்கப்பட இருந்த தலைவர், அண்ணா துரைக்கு எழுதி இருந்த ஓர் ரகசியக் கடிதத்தை  எனக்குக் காட்டி, தன்னை நம்பும்படிச் சொன்னார். பிறகு நான் அவரை நம்பியதோடு, அதற்குப் பரிட்சையாக நான் அவரையே சில தீர்மானங்களைப் பிரேரேபிக்கும்படிக் கூறினேன். அவரும் பிரேரேபிக்க ஒப்புக் கொண்டார்’.
‘அதன் மீது நான் சில தீர்மானங்களை எழுதி அண்ணாதுரையிடம் கையயழுத்து வாங்கி, அத்தீர்மானங்களை அச்சுப் போட்டு, அதற்கு அண்ணாதுரை தீர்மானம் என்று பெயர் வைத்து அதை ஈரோடு குடிஅரசு ஆபீசு அச்சகத்தில் அச்சுப் போட்டாலும், காஞ்சிபுரம் திராவிட நாடு அச்சகத்தில் அச்சுப் போட்டதாக அச்சாபீஸ் பேர் போட்டு, உடனடியாகக் காஞ்சிபுரத்திற்குத்  திரு. சண்முக வேலாயுதம் வசம் அனுப்பி, அங்கிருந்து சேலம் வந்ததாகக் காட்டி, சேலம் மாநாட்டில் அண்ணாதுரையே பிரேரேபிக்கச் செய்து எதிர்ப்பே இல்லாமல் ஒரு சிறு திருத்தத்தோடு நிறைவேற்றிக் கொண்டேன்’ என்கிறாரு பெரியார். 
உண்மையிப்படி இருக்க, அருகோ என்னமோ மாநாட்டில் நேராக கலந்து கொண்ட மாதிரியும், கி.ஆ.பெ. விசுவநாதமும் அண்ணல்தங்கோவும் இவருடன் இருந்து கருத்துக்கேட்ட மாதிரியும், காலைத் தீர்மானத்தை என்னால் மாற்ற இயலாது. அண்ணாத்துரையைப் போய்ப் பிடியுங்கள். அவர் சொல்லுக்குத்தான் இந்த முட்டாள் கூட்டம் மகுடி முன் நாகம் போல் மயங்கிக் கிடக்கிறது. கட்டுப்படும் என்று சொல்ல, அவர்களும் அண்ணாவைப் போய்ப் பார்த்து, தமிழர் கழகம் எனும் பெயரையும், தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தையும் மாற்ற நீங்கள் தான் வழி செய்ய வேண்டும் என்று கூற, அவரால் கொண்டு வந்து நிறைவேற்றப் பட்டதுதான் ‘திராவிடர் கழகம்’ ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்ற தீர்மானம் அப்படின்னு அவதூறு செய்றாரு. இதுதான் அண்ட புளுகு ஆகாச புளுகோ?
(தொடரும்) 

No comments: