Tuesday, June 10, 2025

தமிழ்த்தேசிய பெரியார்’, ‘பேராசான்’ பெ.மணியரசன் மீதான நிதி மோசடி குற்றச்சாட்டுகள் – ஒரு பிளாஷ்பேக்.

‘தமிழ்த்தேசிய பெரியார்’, ‘பேராசான்’ பெ.மணியரசன் மீதான நிதி மோசடி குற்றச்சாட்டுகள் – ஒரு பிளாஷ்பேக்.

மனிதகுலத்துக்கான மாபெரும் விடுதலை தத்துவத்தை முன்வைத்த மகத்தான சிந்தனையாளர்கள் பேராசான் கார்ல் மார்க்ஸும் ஏங்கெல்ஸும். தமிழினத்தின் ஒப்பற்ற சுயசிந்தனையாளர் தந்தை பெரியார். மூவரின் பட்டங்களையும் பறித்து மணியரசனுக்கு சூட்டி மகிழ்கிறார் வாசிப்பும் வரலாற்றறிவும் அற்ற சீமான்.  அதையும் ஏற்று மகிழ்கிறார் மணியரசன்.

ஒரு கட்டுரைக்கு குறிப்பெடுப்பதற்காகப் பழைய புத்தகங்களைத் தேடிக்கொண்டிருந்தபோது கையில் கிடைத்தது 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஒரு சிறு வெளியீடு. அது ‘தமிழ்த்தேசியப் பெரியார்’, ‘பேராசான்’ பெ.ம-வைப் பற்றிய வெளியீடுதான்.

பெ.மவின் தமிழ்த்தேசிய பேரியக்கம், தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியாக இருந்த காலத்தில் மணியரசனின் சர்வதிகாரப் போக்கைக் கண்டித்து எழுத்தாளர் இராசேந்திர சோழன், காஞ்சி அமுதன் உள்ளிட்ட வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 2005ல் கூண்டோடு விலகினர். அப்போது வெளியிடப்பட்டதுதான் ‘த.தே.பொ.க.விலிருந்து விலகியது ஏன்?’ என்னும் வெளியீடு.

இந்த நூலில் எழுத்தாளர் இராசேந்திர சோழன், ‘தமிழ்த்தேசியப் பெரியார்’, ‘பேராசான்’ மணியரசன் மீது முன்வைக்கும் நிதிமோசடி குற்றச்சாட்டுகள்.


· கட்சி வளர்ச்சிக்காக சீட்டு கம்பெனி ஒன்றை ஆரம்பித்திருக்கிறது த.தே.பொ.க திண்டிவனம் வட்டம், மயிலம் கிளை (உலகத்திலேயே தேசிய இன விடுதலை அடைவதற்காக சீட்டுக்கம்பெனி ஆரம்பித்த ஒரே புரட்சிகர அமைப்பு த.தே.பொ.கதான் என்று நினைக்கிறேன்). அங்கிருந்த ஒரு தோழர் திருமண மண்டபம் கட்டுவதற்காக சீட்டுக்கம்பெனி பணத்தை எடுத்து செலவு செய்ய சிக்கலாகியிருக்கிறது. பிறகு திருமண மண்டபத்தை அடமானமாக எழுதி வாங்கி சிக்கலைத் தீர்த்திருக்கிறார்கள்.

மணியரசனின் சர்வதிகாரத்தைக் கண்டித்து இராசேந்திரசோழன் போன்றவர்கள் விலகியபோது, இந்த சீட்டுக்கம்பெனி பிரச்சினைக்கு காரணமே இராசேந்திர சோழன்தான் என்று குற்றம் சாட்டி தோழர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் மணியரசன். இதற்குப் பதில் சொல்லும் இராசேந்திர சோழன், சீட்டுக்கம்பெனி நடக்கும்போதெல்லாம் அதற்கு மணியரசன் மறுப்பு சொல்லாதது மட்டுமல்லாது, அந்த சீட்டுக்கம்பெனி பணத்தை தன் சொந்த தேவைகளுக்கு அவ்வப்போது பயன்படுத்திக்கொண்டதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

தனது சொந்த ஊரான ஆச்சாம்பட்டியில் புஞ்சை நிலத்தில் மணிலாக்கொட்டை போடுவதற்கும் தன் வீட்டு மாடிக்கு கீற்றுக்கொட்டகை போடுவதற்கும் சீட்டுக்கம்பெனியில் கடன் வாங்கிய ‘தமிழ்த்தேசியப் பெரியார்’, அதன் ஒருபகுதியை மட்டும் திருப்பித் தந்தாராம். மீதியை மயிலம் கிளையே செட்டில் செய்திருக்கிறது.

· தஞ்சையில் கலை நிகழ்ச்சி நடத்தி கட்சி வளர்ச்சிக்காக 40,000 ரூபாய் திரட்டப்பட்டதாம். அந்தக் கட்சி வளர்ச்சி நிதி 40,000 ரூபாயை மணியரசன் சிதம்பரத்தில் வட்டிக்கு விட்டராம் (ஆஹா, என்ன ஒரு புரட்சிகர செயல்!)

பிறகு அதில் சிக்கல் வர அந்தப் பணத்தை வசூல் செய்து அதில் ஆடு வாங்கி வளர்த்தாராம் ‘தமிழ்த்தேசியப் பெரியார்’ மணியரசன்.

· இதுபோக இராசேந்திர சோழனுக்குத் தெரியாமல் மயிலம் கிளை தோழர் பாபுவிடம் அவ்வப்போது பணம் கேட்டுப்பெறுவாராம். ஒருமுறை மணியரசன் இரண்டாயிரம் ரூபாய் கேட்டு, பாபு தர மறுத்ததால் தன் சொந்தக் கட்சித் தோழர் பாபுவுடன்  இரண்டு ஆண்டுகள் பேசாமல் இருந்தாராம் ‘பேராசான்’ மணியரசன்.

· இரண்டுமுறை வெளிநாடு சென்ற மணியரசன் முதல்முறை வெளிநாட்டில் அன்பளிப்பாகப் பெற்ற இருபதாயிரம் ரூபாயில் தன் வீட்டுக்குத் தொலைக்காட்சியும் இதர பொருட்களும் வாங்குவதாகக் கூறி செயற்குழுவில் ஒப்புதலும் வாங்கினாராம். அன்பளிப்பாக வந்த இரண்டு கேமராக்களை விலைக்கு விற்று அந்தப் பணம் கட்சி நிதியில் சேர்க்கப்பட்டதாம்.

ஆனால் இரண்டாம் முறை வெளிநாடு சென்று வந்த ‘பேராசான்’ மணியரசன் ‘இந்த முறை இதுதான் வசூல்’ என்று வெளிநாட்டு சாக்லேட்டுகளை மட்டும் செயற்குழுவில் தந்தாராம். ‘புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தங்கள் சக்திக்கு ஏற்ப பொருள்களையோ நிதியையோ தந்திருப்பார்கள். ஆனால் மணியரசன் மறைத்துவிட்டார்’ என்று குற்றம் சாட்டியிருக்கிறார் இராசேந்திர சோழன்.

மேலும் மற்றவர்கள் வசூல் செய்து கட்சி நிகழ்ச்சி நடத்தினால் செலவுபோக கட்சிக்கும் நிதி தருவார்கள். ஆனால் மணியரசனே நிகழ்ச்சி நடத்தும்போது எவ்வளவு வசூல் ஆனாலும் நட்டக்கணக்கே காட்டுகிறார், நிகழ்ச்சிகளில் கட்சிக்குத் தரும் நன்கொடையையும் ‘தமிழர் கண்ணோட்டம்’ சந்தாவையும் முழுமையாக மணியரசன் கட்சிக்கும் இதழுக்கும் தருவதில்லை, யார் யார் சந்தா தந்திருக்கிறார்கள் என்று ‘ஞாபகமாக’ நாட்குறிப்பில் எழுதி, அதை ‘ஞாபக மறதி’யாகத் தொலைத்துவிடுகிறார், நிதிப்பொறுப்புகளைக் கவனிக்க கட்சிக்கு ஒரு பொருளாளரை நியமிக்க மறுத்துவிட்டார் என்றெல்லாம் மணியரசன் மீதான குற்றச்சாட்டுகள் நீள்கின்றன.

இதையெல்லாம் இங்கு குறிப்பிடுவதன் நோக்கம் இப்படி ஒரு ‘சம்பவம்’ நடந்திருக்கிறது என்பதை, அறியாதவர்களுக்கு உணர்த்துவதற்கே தவிர மணியரசன் பெயரைக் கெடுக்கவேண்டும் என்பதற்காக அல்ல. அதைத்தான் ஏற்கெனவே இராசேந்திர சோழனே செய்துவிட்டாரே!

இதில் எது உண்மை, எது பொய் என்பது தெரியாது. ஓர் இயக்கத்திலிருந்து பிரிந்துபோகும்போது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளில் மிகைப்படுத்தல்கள் இருக்கலாம். அதை ஆராய்வது என் நோக்கமும் இல்லை. ஆனால் தகுதிக்கு மீறி ‘தமிழ்த்தேசியப் பெரியார்’, ‘பேராசான்’ என்றெல்லாம் போற்றப்படும் மணியரசன் மீது நிதிமோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர் பெரியாரிஸ்டோ, திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவரோ இல்லை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து மணியரசனுடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்தவர், ‘தமிழ்த்தேசத் தன்னுரிமை’யை இறுதிவரை வலியுறுத்திய தமிழ்த்தேசியவாதி எழுத்தாளர் இராசேந்திர சோழன் என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க பிரிந்தபோது இருதரப்பிலும் முன்வைக்கப்பட்ட பரஸ்பர குற்றச்சாட்டுகளை ஸ்கேன் செய்து, ஜெராக்ஸ் எடுத்து லாவணி பாடுபவர்கள், ‘தமிழ்த்தேசியத்துக்குக் கிடைத்த அரிதினும் அரிதான பெரியார்’, ‘பேராசான்’ மீது இராசேந்திரசோழன் வைத்துள்ள குற்றச்சாட்டுகளையும் இனி பரிசீலிப்பார்கள் என்று நம்புகிறேன்.

நன்றி: எழுத்தாளர் சுகுணா திவாகர்.

Thursday, April 17, 2025

பூந்தோட்டம்’ என்னும் பகுத்தறிவுத் தோட்டம்!

நடிகை மனோரமா படப்பிடிப்புக்கு எங்கு சென்றாலும், 

காலையில் அருகே இருக்கும் கோயிலுக்குச் செல்வது வழக்கம். 

ஆனால், ஒரு கிராமத்தில் 2, 3 மணி நேரமாய்ச் சுற்றியும் கோயில் தென்படவில்லை. `ஏன், இந்த ஊரில் கோயில் இல்லை’ என ஆச்சர்யத்துடன், அந்த ஊர் தலைவரிடம் விசாரித்தார்.

அதற்கு அந்த ஊர் தலைவர், 

`எங்கள் ஊரில் முன்பு கோயில் இருந்தது. பெரியார் ஒருமுறை எங்கள் ஊருக்கு வந்தார். 

‘இந்த ஊர்ல இத்தன கோயில் இருக்கே? எத்தனை பள்ளிக்கூடம் இருக்கு? எவ்வளவு தற்குறியாவும், கைநாட்டுப் பசங்களாகவும் திரியறீங்க? 

பொம்பளங்கள, புள்ளை பெக்குற மெஷினாட்டம் வச்சிருக்கீங்க! பெண்களைப் படிக்க வச்சிங்கன்னா மொத்த சமுதாயத்தையும் காப்பாத்துவாங்க’ என்று பேசினார். 

உடனே கோயில்கள் எல்லாம் பள்ளிகளாக மாறிவிட்டன. 

இப்போது வீட்டுக்கு ஒரு குழந்தையை ஆசிரியருக்குப் படிக்க வைக்கிறோம். 

அதுவும் பெண் குழந்தையை” என்று கூறியுள்ளார்.

தினமணியின் மகளிர் மலர் ஒன்றில் ஒருமுறை மனோரமா அளித்த நேர்காணலில் சொன்ன தகவல் இது. 

மனோரமா சொன்ன அந்த ஊர், கடலூர் மாவட்டம், சிதம்பரத்திற்கு அருகே உள்ள பூந்தோட்டம் கிராமம்.

மனோரமா கூறியதுபோல, 1945-ஆம் ஆண்டில் பெரியாரும், அண்ணாவும் பூந்தோட்டம் கிராமத்திற்குச் சென்றுள்ளனர். 

அதுகுறித்து, ‘பூந்தோட்டத்தில் ஒரு நாள்’ என அண்ணா `திராவிட நாடு’ இதழில் பதிவு செய்துள்ளார். 

மீண்டும் 1956, 57-இல் சுயமரியாதைத் திருமணங்களை நடத்திவைக்க பூந்தோட்டம் கிராமத்திற்கு பெரியார் சென்றார். 

அப்போது அந்த ஊரில் எல்லா வீடுகளிலும் பெரியார் படம் இருந்தது.

1960-களில் 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அங்கு உருவாகிவிட்டனர். 

அவ்வூரின் மக்கள்தொகையே இன்றும் சராசரியாக 500 பேர்தான். 

இப்போதும் அங்கு கோயில் இல்லை, 

சுயமரியாதைத் திருமணங்கள் தொடர்ந்து நடக்கின்றன. கல்விக்கு முக்கியத்துவம் தருவதும் இப்போதும் தொடர்கின்றது...

`நான் 8-ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோது எங்கள் ஊரில் குளங்களைத் தூர்வாரினார்கள். 

அப்போது உள்ளே கடவுள் சிலைகள் இருந்தன. 

ஆர்வமாக நாங்கள் விசாரித்தபோது, பெரியார் தாக்கத்தால் கோயில்களை அகற்றியபோது, சிலைகளை ஊர் மக்களே குளங்களில் வீசியது தெரியவந்தது.

 எங்கள் தலைமை ஆசிரியருக்கே பெரியார்தான் இங்கு வந்து சுயமரியாதைத் திருமணம் செய்துவைத்தார். பெரியாரால்தான் எங்கள் ஊர் கல்வியில் முன்னேறியது. அவருடைய தாக்கம் இன்னும் எங்கள் ஊரில் இருக்கிறது’’

வழக்கறிஞர் பாண்டியராஜன், கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர், அம்பேத்கர் நூற்றாண்டு இயக்கம்.

`எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாடகக் குழுவில் இருந்த கலைமாமணி பி.எஸ்.தட்சிணாமூர்த்தி குழுவில் நடிக்கவே மனோரமா இங்கு வந்தார். 


பெரியார், அண்ணா மட்டுமல்ல கலைஞர், பேராசிரியர், நாவலர், மதியழகன் போன்றோரும் ‘பூந்தோட்டம்’ வந்துள்ளனர். இப்போது 3-வது தலைமுறை மாறிவிட்டது, அதற்கேற்ப மாற்றங் களும் ஏற்பட்டுவிட்டன. ஆனால், பெரியாரின் சுவடுகள் இன்னும் தொடர்கிறன்றன.’’


பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், சிதம்பரம் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்.

Friday, January 31, 2025

மகாவம்சம்

 இந்தியாவின் இதிகாசங்களான "ராமாயணம்'', "மகாபாரதம்'' போன்றது பாலி மொழியில் எழுதப்பட்ட "மகாவம்சம்'' என்ற நூல். இதை தங்களின் வேத புத்தகம் போல சிங்களர்கள் மதிக்கிறார்கள்.

http://www.paristamil.com/tamilnews/view-news-MjQ2MTE5Nzk2.htm#.UP-U9B1tj8A

இதை தங்கள் "வரலாறு'' என்று சிங்களர்கள் கூறினாலும், நம்ப முடியாத கட்டுக் கதைகளும் இதில் உண்டு.

விஜயன்

இலங்கையில் சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் - இலங்கையின் முதல் சிங்கள மன்னன் விஜயன் என்று மகாவம்சம் கூறுகிறது.

விஜயன் பற்றி மகாவம்சத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:-

"வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் ஒரு காலத்தில் லாலாதேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் பெயர் சிங்கபாகு. இவர் சிங்கத்துக்கும் ஒரு ராஜகுமாரிக்கும் பிறந்தவர்!

பிற்காலத்தில் இவருக்கு உண்மை தெரிகிறது. ஒரு குகையில் இருந்த சிங்கத்தை (தன் தந்தையை) கண்டுபிடித்து தலையை வெட்டி துண்டிக்கிறார்.

சிங்கபாகு, சிகாசிவாலி என்ற பெண்ணை மணந்து அவளை பட்டத்து ராணி ஆக்குகிறார். இவர்களுக்கு 16 முறை இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன! (அதாவது 32 குழந்தைகள்)

இந்தக் குழந்தைகளில் மூத்தவன் விஜயன். அவனை பட்டத்து இளவரசனாக சிங்கபாகு நியமிக்கிறார்.

மக்கள் புகார்

விஜயன் மிகவும் கொடூரமானவன். அவன் செய்த அட்டூழியங்கள் பற்றி, மன்னனிடம் மக்கள் முறையிடுகிறார்கள். மகனைத் திருத்த முயற்சிக்கிறார், சிங்கபாகு. ஆனால் விஜயன் திருந்தவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, மக்களைத் துன்புறுத்துகிறான்.

அவன் அட்டூழியங்கள் எல்லை மீறிப்போனதால், மன்னனிடம் மக்கள் மீண்டும் முறையிடுகிறார்கள். "விஜயனுக்கு மரண தண்டனை விதியுங்கள்'' என்று வற்புறுத்துகிறார்கள்.

இதன் காரணமாக, விஜயனையும், அவன் நண்பர்கள் 700 பேர்களையும் நாடு கடத்துகிறார், மன்னர். இவர்களை மூன்று கப்பல்களில் ஏற்றி, "எங்காவது போய் பிழைத்துக் கொள்ளுங்கள். இனியாவது திருந்தி வாழுங்கள்'' என்று புத்திமதி கூறி அனுப்பி வைக்கிறார். மூன்று கப்பல்களும் இலங்கையை அடைகின்றன.

அடைக்கலம் கொடுத்த அழகி

விஜயன் கப்பலை விட்டு இறங்கி, இலங்கைத் தீவில் காலடி வைக்கிறான். இது கி.மு. 543-ல் நடந்தது.

விஜயன் இறங்கிய இடம் அழகிய இயற்கைக் காட்சிகள் கொண்டது. அங்கு ஒரு மரத்தடியில் குவேனி என்ற பெண் அமர்ந்திருக்கிறாள். இவள் ராட்சச குலத்தைச் சேர்ந்தவள்.

(குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு ஆகும். கவினி என்றால் "பேரழகு படைத்தவள்'' என்று பொருள்.

இலங்கையை ஆண்ட ராவணன் ராட்சதன் என்று கூறப்பட்டதுபோல, குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கிறது, "மகாவம்சம்'')

குவேனியை விஜயன் சந்தித்து அடைக்கலம் கோருகிறான். அவள் அடைக்கலம் அளிக்கிறாள்.

இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறக்கிறார்கள்.

பாண்டிய இளவரசி

விஜயனுடன் இலங்கை சென்ற அவனுடைய 700 நண்பர்களும் பல நகரங்களையும், கிராமங்களையும் உருவாக்குகிறார்கள். அந்தப் பகுதிகளை உள்ளடக்கிய ராஜ்ஜியத்துக்கு மன்னனாகும்படி, விஜயனை கேட்டுக் கொள்கிறார்கள்.

ஆனால், விஜயன் மறுத்து விடுகிறான். "ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளவரசியை நான் மணந்தால்தான், சிம்மாசனம் ஏறமுடியும்'' என்று கூறுகிறான்.

இதன் காரணமாக, விஜயனின் நண்பர்கள் மதுரைக்கு செல்கிறார்கள். மதுரை மன்னனுக்கு முத்துக்கள், தங்க ஆபரணங்கள் முதலியவற்றை பரிசாக வழங்கி, தங்கள் மன்னனான விஜயனுக்கு இளவரசியை மணமுடித்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

இதற்கு பாண்டிய மன்னன் சம்மதிக்கிறார். பாண்டிய இளவரசியுடன், விஜயனின் 700 நண்பர்களுக்கும் 700 பெண்களை தேர்வு செய்து, இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார்.

குவேனியின் கதி

பாண்டிய இளவரசி தன்னை மணப்பதற்கு இசைந்து இலங்கைக்கு வந்து விட்டதை அறிந்து விஜயன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறான்.

குவேனியை அழைத்து, "நான் பாண்டிய ராஜகுமாரியை மணக்கப்போகிறேன். என்னுடைய இரண்டு குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு, இங்கிருந்து போய்விடு'' என்று கூறுகிறான்.

இதனால் வேதனை அடைந்த குவேனி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு "லங்காபுரா'' என்ற இடத்துக்கு போய்விடுகிறாள். இவர்களுடைய வம்சாவளியினர், இலங்கையின் பழங்குடியினராக உள்ள வேட்டுவர்கள்.

திருமணம்

பாண்டிய ராஜகுமாரியை மணந்து கொண்ட விஜயன், அவளுடன் வந்த 700 பெண்களுக்கும் அமைச்சர்களாக உள்ள தன் நண்பர்களை அவரவர் தகுதிக்கு ஏற்ப மணம் முடித்து வைக்கிறான்.

முன்பு கொடியவனாகவும், முரடனாகவும் இருந்த விஜயன் நல்லவனாக திருந்தி, 38 ஆண்டு காலம் தர்மம் தவறாமல் இலங்கையை ஆண்டான். அவனது சந்ததிகளே சிங்களர்கள்.''

இவ்வாறு மகாவம்சம் கூறுகிறது.

தபால் தலை

1956-ல் "விஜயனின் வருகை'' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது.

தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத் தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்த தபால் தலையை வாபஸ் பெறவேண்டும்'' என்று கூறினார்கள்.

இதன் காரணமாக, இந்த தபால் தலையை இலங்கை அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது. ஆனால், அதற்குள் இந்த தபால் தலை உலகம் முழுவதும் பரவி விட்டது

http://www.paristamil.com/tamilnews/view-news-MjQ2MTE5Nzk2.htm#.UP-U9B1tj8A

உ.வே.சாமிநாதய்யர் தமிழ்த்தாத்தாவா? பார்ப்பன தாத்தாவா?

தமிழ்த்தாத்தா? பார்ப்போமா மறுபக்கம்

*****************************************************************

டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் பல தமிழ் நூல்களைத் தேடிக் கண்டுபிடித்துப் பதிப்பித்தார்; தமிழ் வளர்த்த தாத்தா _ சுருக்கமாக, தமிழ்த்தாத்தா(?) என்றெல்லாம் புகழப்படுபவர். இவருக்கு, தாட்சிணாத்திய கலாநிதி, மகாமகோபாத்யாய, டாக்டர் முதலான பட்டங்களும் உண்டு. எல்லாம் சரி! உ.வே.சா.வின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துவிட்டு இவ்வாறெல்லாம் போற்றப்பட்டார். அதேசமயம், இவரது மறுபக்கத்தையும் பார்க்க வேண்டாமா? பார்ப்போமா? பார்ப்போமே! அப்பொழுதுதானே பார்ப்பார் உண்மை புலப்படும். மறுபக்கத்தின் சில பகுதிகளைப் பார்க்கப் போகிறோம்!

தமிழ் மரபுக்குத் தவறான விளக்கம்

தமிழ் மரபும் தமிழ்த்தாத்தாவும்:

தமிழ் மரபுகளுள் ஒன்றுக்கு உ.வே.சா. பின்வருமாறு விளக்கம் தருகிறார்.

ஏழை வேலைக்காரனிடம், சோறு தின்றாயா? என்று கேட்பது மரபு. கனவானிடம் இப்படிக் கேட்பது மரபன்று.

போஜனம் ஆயிற்றா?

நிவேதனம் ஆயிற்றா? என்பதுதான் தமிழ் மரபு.

போஜனம், நிவேதனம் என்ற சமஸ்கிருதச் சொல்லை, ஒரு பணக்காரன், பெரிய மனிதன் ஆகியோரிடம் பயன்படுத்த வேண்டுமாம்! கனவான் என்றால் அவன் பார்ப்பனனாகத்தான் இருக்க வேண்டுமா?

அதுதான் தமிழ் மரபாம்! சொல்கிறார் தமிழ்த்தாத்தா!

உண்மையா-? இது தமிழ் மரபா? நல்ல நகைச்சுவை! கலப்பில்லாத தூய _ தனி வடமொழி _ சமஸ்கிருத மரபு அல்லவா? தமிழ்த்தாத்தாவுக்கு இது ஏன் தெரியாமல் போனது? தெரியாமலா இருக்கும்.

அதுதான் பார்ப்பனப் பண்பு! பார்ப்பன மரபு!

சோறு என்ற சொல்:

ஏழை வேலைக்காரனிடம்தான் சோறு தின்றாயா? _ என்று கேட்க வேண்டுமாம்!

வேலைக்காரன் அதுவும் ஏழை, அவனிடம் மட்டும் சோறு என்ற தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்த வேண்டுமாம்! சோறு என்ற தமிழ்ச்சொல் ஏழை வேலைக்காரனுக்கு மட்டுமே உரியதாம்!

ஏழை என்றாலோ வேலைக்காரன் என்றாலோ அத்துணை இழிவோ?

அதனால் அவனிடம் (அவாள் பார்வையில்) இழிமொழியாகிய சோறு _என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டுமா?

என்ன தலைப்பளு? எத்துணை தமிழ் இழிவு?-

இதைத்தானே பார்ப்பனர் பண்பு என்றார் தந்தை பெரியார்.

இவர்தான் துறவி என்பவரா?

மேலும் சொல்கிறார் உ.வே.சா. துறவியிடம் பிக்ஷை ஆயிற்றா? _ என்று கேட்க வேண்டுமாம்! அதுதான் தமிழ் மரபாம்!

பிக்ஷை என்பது சமஸ்கிருதச் சொல்! அதனைப் பார்ப்பனத் துறவியிடம்தானே சொல்ல முடியும்? சொல்ல வேண்டும்?

தமிழ்த் துறவியிடம் இவ்வாறு வடமொழியில் சொல்ல முடியுமா?

வர்ண - ஆசிரம வல்லாண்மை

துறவி என்றால் (சந்நியாசி) அவர் பார்ப்பனராகத்தான் இருக்க வேண்டுமா?

ஆம்! அப்படித்தான்! அதுதான் வர்ண ஆசிரம தர்மம்! அதன் வல்லாண்மை!

அவர், ஒன்று, கொலைக் குற்றம் சாற்றப் பெற்று நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் காஞ்சி காமகே()டிச் சுப்பிரமணிய பீடாதிபதியாக இருத்தல் வேண்டும். அல்லது வானமாமலை அல்லது அஹோபில மடாதிபதியாக இருக்க வேண்டும். தருமபுர மடாதிபதி துறவியாக முடியுமா? திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் துறவியா? அவர்கள்தாம் அப்படிச் சொல்லிக் கொள்ளலாம். இரண்டும் சைவ சித்தாந்தம் பரப்பும் மடங்கள்.

அடிகளாரிடம் அப்படிக் கேட்போமா?

எல்லாவற்றையும் தள்ளுங்கள்! தந்தை பெரியாரின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நம் குன்றக்குடி குருமகா சன்னிதானம் தமிழ் மாமுனிவர் அவர்களும் அவாள் வர்ண ஆசிரமப்படி துறவியல்லர். அவரிடம் எல்லாம் பிக்ஷை கொண்டீர்களா? என்று எவராவது கேட்பார்களா? கேட்போமா?

உணவு கொண்டீர்களா? என்றுதானே கேட்போம்! அவர் மெய்யான தனித் தகைமைப் பச்சைத் தமிழர் ஆயிற்றே?

பார்ப்பனர் அல்லாத _ நாலாம் ஜாதிச் சூத்திரர் துறவி (சந்யாசி) ஆகமுடியாதே? வேதம் ஒத்துக் கொள்ளாதே? மனுநீதி மறுத்துவிடுமே?

புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் நல்லது!

பிக்ஷை என்ற சமஸ்கிருதச் சொல்லைத்  துறவியிடம் பயன்படுத்த வேண்டும் என்றால், அந்தத் துறவி யாராக இருக்க முடியும்? பச்சைப் பார்ப்பனர் ஆகத்தானே இருக்க முடியும்? இப்பொழுது புரிகிறதா?

புரிந்துகொள்ள வேண்டிய பூணூல் போடாத சன்னிதானங்களுக்கல்லவா சாமிநாதய்யர் சொன்ன சொல்லின் சூட்சுமம் புரிந்திருக்க வேண்டும்?புரிந்து கொள்ளாமல் சைவச் சன்னிதானங்கள் இருக்கின்றனவா? இல்லை, புரிந்தும் புரியாமலேயே இருக்கிறார்களா?

வானொலி உரை வண்ணம்

மேலே, நாம் சொன்ன செய்தி இந்த உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் 21.9.1941இல் திருச்சி வானொலியில் பேசிய பேச்சின் ஒரு பகுதியாகும். இதனை, 6.11.1941 சிவநேசன் இதழ் வெளியிட்டுள்ளது.

வடமொழி அடைமொழிக்கு வக்காலத்து அடைமொழி பற்றி அரசின் எதிர்பார்ப்பு

அன்றைய சென்னை மாகாண (இன்றைய தமிழ்நாடு)த்தில் நீதிக்கட்சி ஆட்சி செய்தபோது, தமிழ் மக்களின் பெயர்களுக்கு முன் சிறீ_எனப் போட்டு வந்ததற்கு மாற்றாக திரு_என்று போடலாமே என்று தமிழ் ஆர்வலர்கள் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். அரசு, இதுபற்றி மக்களின் கருத்தை அறிய விரும்பியது _ எதிர்பார்த்தது.

எம்மை யார் என்று எண்ணி எண்ணி நீர் பார்க்கிறீர்?

சிறீ என்று போடுவதுதான் சரியான அடைமொழி; அப்படித்தான் போட வேண்டும்; அதுதான் சரி என்று கருத்து வெளியிட்டனர் அறிஞர் பலர். இவர்களுள் முதன்மையான இருவரை மட்டுமே இங்கு நாம் சுட்டிக்காட்ட விழைகிறோம்.

அவர்கள் யார் தெரியுமா? திருவாளர்கள்: 1. மு. இராகவய்யங்கார்

2.மகாமகோபாத்யாய. உ.வே. சாமிநாதய்யர்

தமிழினவுணர்வுத் தகையாளர்கள்:

அடைமொழியாக, கட்டாயம் திரு என்பதைத்தான் போடுதல் வேண்டும்; அதுதான் சரி! என்று கருத்து வெளியிட்டனர் பச்சைத் தமிழர்கள் பலர். அவர்களுள் முதன்மையானவர்கள் இருவர்.

அவர்கள், 1. நாவலர். ச. சோமசுந்தர பாரதியார் 2. பண்டிதமணி மு. கதிரேசன் (செட்டியார்)

யார் உண்மையான தமிழ் ஆர்வலர் என்பதை இதன்மூலம் நாம் இனம் கண்டுவிட்டோம் அல்லவா?

பார்த்தீர்களா, தமிழ்த்தாத்தாவின் தமிழ்ப்பற்றினை? உ.வே.சா.வின் மறுபக்கத்தின் மற்றொரு பகுதி இது!

நம்ப வைத்துக் கழுத்தறுத்த நயவஞ்கம்

பாடும் உனை நான் பாடவைத்தேனே!

சங்கீத நினைவு அலைகள் _ என்ற நூலின் ஆசிரியர் எம்.எஸ். சவுந்தரம் அம்மையார்.

திருவாளர் ஏகாம்பரம் சவுந்தரம் கணவரின் உறவினர். இவர், திருவனந்தபுரம் நீதியரசர் இலக்குமணப் பிள்ளை அவர்களின்  நெருங்கிய நண்பர்.

இசைவாணியாகிய இந்த நூலாசிரியரைப் பாடச்சொல்லிக் கேட்க நீதியரசர் விரும்பினார்; அதற்கான ஏற்பாடுகள் செய்தார். சவுந்தரத்திடம் இசை தொடர்பான நுணுக்கங்களை விளக்கிக் கூறினார். பல இராகங்களில் பாடிக் காட்டினார்.

சவுந்தரமும் தன் பாடல்திறனை அவரிடம் பாடிக்காட்டினார்.

பட்டம் கொடுக்கத் திட்டம்

நீதியரசர் இலக்குமணப் பிள்ளைக்குத் தமிழ்த் தியாகய்யர் என்னும் பட்டம் கொடுக்க இசை ஆர்வலர்கள் திட்டமிட்டனர். தெலுங்குத் தியாகய்யர் இசை வல்லுநர் என்றால் நீதியரசர் தம் இசை வல்லமையால் தமிழ்த் தியாகய்யர் என்ற பட்டம் பெறத் தகுதியானவர் என்பது ஆர்வலர்களின் விருப்பம்;

இந்தப் பட்டத்தை யார் மூலம் வழங்குவது?

பட்டம் வழங்க முடிவு செய்தாயிற்று; இதை யார் வழங்குவது? யார் வழங்கினால் சிறப்பாக _ மதிப்பாக இருக்கும்? எனக் கலந்துரையாடினர் அன்பர்கள்.

இறுதியில், தமிழ்ப்புலவரும் தமிழ்த்தாத்தாவும் ஆன உ.வே.சாமிநாதய்யர் மூலம் வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானித்தனர்; முடிவை அவருக்குத் தெரிவித்தனர்; அவரும் வருவதாக இசைந்தார்.

பட்டம் திரு. எம்.எஸ்.இராமசாமி என்பவர் இல்லத்தில் கொடுக்கப்படுவதாக ஏற்பாடு. இசைச்சுவைஞர்கள், ஆர்வலர்கள் அனைவரும் வந்திருந்தனர்.

கேட்டவர் எல்லாம் கிறங்கிப் போதல்:

நீதியரசர் முதலில் பல தமிழ்க் கீர்த்தனங்களை இசைத்திறனோடு வீணையில் மீட்டிக் காட்டினார்; அவர் மகள் இலட்சுமி அவற்றைப் பாடிக் காட்டினார்.

நீதியரசரும் பாடிக் காட்டினார். இவ்வண்ணம், பக்கவாத்தியங்கள் இல்லாமல் 2 மணி நேரம் கேட்டவர்கள் வியந்து மனம் கிறங்கிப் போயினர். நீதியரசர் பாடி முடித்தார்! அடுத்தது பட்டம் வழங்கும் நிகழ்ச்சி!

நீயே உனக்கு என்றும் நிகரானவன்!

உ.வே.சாமிநாதய்யர் பேச எழுந்தார்; என்ன செய்தார்? என்ன பேசினார்? இதோ நூலாசிரியர் சவுந்தரம் அம்மையார் எழுதியதைப் படியுங்கள்:

திரு. உ.வே.சாமிநாதய்யர், தியாகய்யரின் குணங்கள்; அவருக்கு ஏற்பட்ட அரிய சந்தர்ப்பங்கள்; அவருடைய அரிய கீர்த்தனங்கள்; அவர் பாட்டின் சுவைகள்; மேலும், அவர் வால்மீகியின் மறுபிறப்பு; அவர் கீர்த்தனங்கள் இராமாயணத்தை ஒட்டியது; அவருக்கு அவரே ஈடு! அந்தத் தகுதிக்கு யாரும் இணையாக முடியாது! பிறவியும் எடுக்க முடியாது! _ என்று சொல்லிக் கொண்டே போனார். இறுதியாக நீதியரசர் பற்றி, பிள்ளை பெரிய மேதாவி, ஓர் அரிய ஜட்ஜ்; சங்கீதம் பற்றி நன்றாக ஆராய்ச்சி செய்துள்ளார் _ என்று கூறி, உரையை முடித்து அமர்ந்துவிட்டார்.

எவ்வளவு கைதேர்ந்த ஏமாற்றுக்காரர்!

மேலும் நூலாசிரியர் எழுதியதைப் படியுங்கள்.

சிறீ எம்.எஸ்.இராமசாமிக்கும், பிள்ளைக்கும் ஏமாற்றமே! அவரைக் கவுரவப்படுத்தி, பட்டம் அளித்து, அதை பிவீஸீபீ றிணீஜீமீக்ஷீலும் சுதேசமித்திரனிலும் போட வேண்டும் என்று பிவீஸீபீ ரி.ஷிக்ஷீவீஸீவீஸ்ணீணீஸீ, சுதேசமித்திரன் சி.ஸி. ஷிக்ஷீவீஸீவீஸ்ணீணீ மிஹ்மீஸீரீணீக்ஷீ அழைக்கப்பட்டு வந்திருந்தார்கள். பெரிய சிமீக்ஷீவீயீவீநீணீமீ தயார் செய்து உ.வே.சாமிநாதய்யர் கையால் வழங்கிப் பேச வேண்டும் என்று எழுதி வைத்திருந்து கொடுக்கப்படாமலே உ.வே.சாமிநாதய்யர் பேசி மழுப்பி விட்டார்! பாவம்! பெரிய ஏமாற்றம்!!

படித்தீர்களா, சங்கீத நினைவு அலைகள் _ நூலாசிரியர் எழுதியதை?

இலக்குமணப் பிள்ளையின் மார்பில் பூணூல் இல்லையே?

பெரிய தமிழ்ப்புலவர், அறிஞர் உ.வே.சா. ஏன் அப்படிச் செய்தார்? ஏன் அப்படி ஏமாற்றினார்?

நூலாசிரியர் சொல்லவில்லை! நமக்கா தெரியாது?

நீதியரசர் தமிழர்; சூத்திரர்; தியாகய்யர் பார்ப்பனர்; வர்ண தர்மப்படி பிராமணர்.

அப்படிப்பட்ட தியாகய்யருக்கு இணையாக நீதியரசரைக் கருதவில்லை உ.வே.சா.

அதனால், ஏதேதோ தியாகய்யர் பற்றிப் புகழ்பாடி நீதியரசருக்குத் தமிழ்த் தியாகய்யர் பட்டம் தர விரும்பவில்லை?

பட்டமளிப்பு விழாவிலே தியாகய்யர் பற்றி, தம்பட்டம் அடித்து இலக்குமணப் பிள்ளைக்குப் பட்டம் வழங்காமல் அமர்ந்து விட்டதற்குக் காரணம் இப்பொழுது புரிகிறதா?

எல்லாம் பார்ப்பனப் பற்று! பார்ப்பனர் பற்றிப் பெரியார் பேசியதைக் கண்டு கொள்ளாமல் பார்ப்பனர் பற்றிப் பெரிதாகப் பேசித் திரியும் நமது தமிழறிஞர்களுக்கு இது பாடமாக இருக்கட்டும்!

உ.வே.சா. பற்றிய உண்மை!

இப்பொழுது உ.வே.சா. பற்றிய உண்மையை அறிந்து கொண்டிருப்பீர்களே?

இதோடு நிறைவு செய்வதே நமக்குப் பெருமை; பெருந்தகைமை; பெருந்தன்மை; பண்பாடு; நயத்தக்க நாகரிகம்!!

-------------------------- பேராசிரியர் ந.வெற்றியழகன் -----"உண்மை”  ஜூலை 01-15 - 2013 இதழில் எழுதிய கட்டுரை

Tuesday, January 21, 2025

 பொ வேல்சாமி

(சங்ககாலத்திலேயே கல்வியிற்சிறந்து, தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழினம் பிற்காலத்தில் கல்வி மறுக்கப்பட்டுத் திட்டமிட்டுப் பின்னுக்குத் தள்ளப்பட்டது. அவர்கள் மீண்டும் கல்வியறிவு பெறக் கிறித்தவ நிறுவனங்கள் ஆற்றிய பணியை அறிஞர் பேராசிரியர் பொ. வேல்சாமி சான்றுகளோடு தருகிறார்.)

•••••••••••••••••••••••••••••••••••••••••••••

கைநாட்டுத் தமிழர்களுக்கு (1852) கல்விக்கண் திறந்த கிறிஸ்தவ நிறுவனங்களைப் பற்றி…

நண்பர்களே!

மதுரைச் செந்தமிழ்ப் பத்திரிக்கையில் 1906 இல் இராஜகோபாலாச்சாரியார் என்பவர் 19 ஆம் நூற்றாண்டில் தமிழ கத்தில் ”பொதுக்கல்வி“யின் நிலை பற்றிய ஒரு நல்ல கட்டுரையை எழுதி யுள்ளார்.  இன்றைக்குப் படித்தாலும் வியப்பளிக்கக்கூடிய பல செய்திகள் அக்கட்டுரையில் நிறைந்துள்ளன. அவற்றுள் ஒரு குறிப்பிட்ட செய்தியை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். 

1852 ம் ஆண்டுவாக்கில் கிறிஸ்தவ மிஷினரிகள் 1885 பள்ளிகளை நடத்திவந்தனர் என்றும்,  அவற்றில் 38000 மாணவ மாணவிகளும் படித்து வந்தனர் என்றும், இவர்களின் படிப்புச் செலவுக்காக அன்றைய காலக்கட்டத்தில் கிறிஸ்தவர்களால் செலவிடபட்ட தொகை 40000, 30000 (இன்றைய கணக்கில் சொல்வதானால் 120 கோடியும், 100 கோடியும் ) ரூபாய் என்றும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளிகளில் பெரும்பாலானவை தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி பகுதிகளில்தான் இருந்தன என்றும், அதேகாலத்தில் இந்துமதம் சார்ந்த நிறுவனங்கள் எவ்விதமான கல்விப்பணியையும் செய்யவில்லை என்றும் கவலையுடன் கூறப்பட்டுள்ளது.  

அந்தச் செந்தமிழ்ப் பத்திரிக்கையில் எழுதப்பட்டுள்ள பகுதியை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.

தமிழறிஞர் பொ.வேலுசாமி முகநூல் பதிவு(22.1.2020)

Saturday, January 18, 2025

இரண்டாவது பூமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இரண்டாவது பூமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு உயிரினங்கள் வாழ்கின்றனவா? அங்கு நாம் செல்ல எவ்வளவு வருடங்கள் ஆகும். நாம் அங்கு செல்ல சாத்தியமா என்பது பற்றி இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.

கெப்ளர் என்பது ஒரு செயற்கை விண்வெளி தொலைநோக்கி. இந்த தொலைநோக்கியின் வேலை பல ஒளிஆண்டுகள் தொலைவில் இருக்கும் வேற்று கிரகங்களை கண்டுபிடித்து ஆராய்ச்சி செய்வதுதான். அப்படி இந்த தொலைநோக்கி கண்டுபிடித்தது ஒரு வேற்று கிரகம். ஆம் இதன் பெயர்தான் Keplar - 452 b. 

சரி Keplar - 452 b இடம் செல்லலாமா? அப்படி அங்கு செல்ல ஒளியின் வேகத்தில் பயணிக்கக்கூடிய ஒரு விண்கலம் வேண்டும். அப்படி ஒளியின் வேகத்தில் சென்றாலும் இந்த நட்சத்திரத்திடம் செல்ல 1402 வருடங்கள் ஆகும்.1402 வருடங்கள் சென்ற பின்பு நம் சூரியனை போல அச்சு அசலாக ஒரு சூரியன் தெரியும். இதன் நிறை மற்றும் ஒளிரும் தன்மை ஏறக்குறைய நம் சூரியனை போன்று இருக்கும். ஆனால் நம் சூரியனை விட வயதில் மூத்தது. நம் சூரியன் உருவாகி ஏறக்குறைய 460 கோடி வருடங்கள் ஆகியுள்ளது. Keplar - 452  நட்சத்திரத்தின் வயது ஏறத்தாழ 600 கோடி. நம் சூரியனை விட  140 கோடி வருடம் முன்பே Keplar - 452  உருவாகிவிட்டது. இந்த நட்சத்திரமும் நம் சூரியனை போன்ற முதன்மை நட்சத்திரம்தான். 


நம் சூரியனின் வெப்பநிலை எந்த அளவிற்கு உள்ளதோ கிட்டத்தட்ட இந்த Keplar - 452 நட்சத்திரம் அதே அளவு வெப்பநிலையை கொண்டுள்ளது. ஆனால் ஒளிரும் தன்மை நம் சூரியனை விட 20% அதிகம். அதேபோல 3.7% பெரிய நட்சத்திரம். இதனாலதான் Keplar - 452  நட்சத்திரம் நம் சூரியனின் இரட்டை என்று அழைக்கப்படுகிறது. ஒரு நட்சத்திரத்தின் வயது அதிகரித்து கொண்டே போனால் அதன் ஒளிரும் தன்மையில் மாற்றம் ஏற்படும். அதாவது வெளிச்சம் மற்றும் வெப்பநிலை இரண்டுமே குறையும். நம் சூரியனின் தற்போதைய வெப்பநிலை 5778 கெல்வின். Keplar - 452  நட்சத்திரத்தின் வெப்பநிலை 5757 கெல்வின். இந்த நட்சத்திரத்தை ஒரு கோள் சுற்றுகிறது. அந்த கோள்தான் Keplar - 452 b அதுவும் நம் பூமியை போன்றே பாறை கோள். இந்த Keplar - 452 b வாழத்தகுந்த தூரத்தில்தான் Keplar - 452 நட்சத்திரத்தை சுற்றுகிறது. அங்கு ஒரு வருடம் என்பது 385 நாட்கள் ஆகும். கிட்டத்தட்ட நம் பூமியின் ஒரு வருடத்திற்கான நாட்களே ஆகும். 


Keplar - 452 b யின் வெப்பநிலை தோராயமாக  265  கெல்வின். பூமியின் வெப்பநிலை 284 – 285 கெல்வின். வெப்பநிலையிலும் இவை ஒரே இணையாக உள்ளது என்பதுதான் ஆச்சர்யம். சூரியனிலிருந்து நம் பூமி பெரும் வெப்பநிலையை விட Keplar - 452 b அதன் சூரியனிலிருந்து கூடுதலாக  10%  வெப்பநிலையை பெறுகிறது. இது ஒன்றும் பெரிய வித்தியாசமே இல்லை. அதனால் இந்த கிரகம் super earth என்பதில் சந்தேகமேயில்லை. நிறை அடிப்படையில் Keplar - 452 b கிரகம் முறை நம் பூமியைவிட 5 மடங்கு நிறை அதிகம் கொண்டுள்ளது. இந்த கோள் தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது நம் பூமியை போல. நம் சூரியனில் இருந்து பூமி இருக்கும் தொலைவை 1 AU என்பார்கள். இங்கு 1 AU என்பது 1 விண்வெளி அலகு(Astronomical Unit) ஆகும். Keplar - 452 b தன் சூரியனிலிருந்து 1.04 AU தொலைவில் உள்ளது. இதுவும் ஏறத்தாழ நம் பூமியை ஒத்துள்ளது. இதனால்தான் நம் பூமியையும் Keplar - 452 b யையும் இரட்டை என்கிறோம். இப்பொழுது நாம் அந்த கிரகத்திற்கு செல்ல நினைத்து New Horizon Space Craft வேகத்தில் அதாவது மணிக்கு 59,000 km வேகத்தில் சென்றால் நாம் Keplar 452 b இடம் செல்ல 2 கோடியே 60 லட்சம்(2,60,000,00) வருடங்கள் ஆகும். என்ன நண்பர்களே வியப்பாக உள்ளது அல்லவா? ஆம்  இது சாத்தியமே இல்லை. எவ்வளவுதான் பூமியை போன்று அந்த கிரகம் ஒத்துஇருந்தாலும் நாம் வாழ முடிந்தாலும் நாம் அங்கு செல்வதற்கான சாத்தியங்களே இல்லை என்பதுதான் உண்மை. 


என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? இதை பற்றிய உங்கள் கருத்தை எங்கள் பக்கத்தில் பதிவிடுங்கள்.


இப்படிக்கு, 

உங்கள் நடராஜ்

18.1.2021 வியப்பூட்டும் அறிவியல் முகநூல் பதிவு...


Tuesday, January 14, 2025

துக்ளக்கில் சுதா சேஷய்யன்எழுதியதற்கு மறுப்பு


தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

- மஞ்சை வசந்தன்

தமிழரின் பண்பாட்டுச் சிறப்புகளை அழிப்பதிலும் திரிப்பதிலும் ஆரியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதை மாற்றி, சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று திரித்து, சமஸ்கிருத பெயரைத் தமிழ் ஆண்டின் பெயர் என்று திணித்து, தமிழர் பண்பாட்டை அழிக்கின்றனர். 

20.1.2016 ‘துக்ளக்’ இதழில் சுதா சேஷய்யன் என்ற அம்மையார், தன் ஆரிய இனப்பற்றின் உந்துதலால் சித்திரையே தமிழ்ப் புத்தாண்டு என்று சாதிக்க முயற்சிக்கிறார். வலுவான சான்று எதையும் காட்டாது வழக்கமாக ஆரியம் செய்யும் மோசடி வேலையையே இவரும் செய்கிறார். எனவே, அதை மறுத்து உண்மையை உணர்த்த கீழ்க்கண்டவற்றை தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகிறது.

தமிழர்கள் நாள், மாதம் ஆண்டுக் கணக்கீட்டை உலகுக்கு முதன்முதலில் இயற்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டுக் கொடுத்தவர்கள்.

காலையில் சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற ஆகும் காலம் ஒரு நாள்.

மாதம் என்பதற்குத் திங்கள் என்று ஒரு சொல் உண்டு. திங்கள் என்றால் நிலவு. நிலவை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் திங்கள் என்ற பெயர் மாதத்திற்கு வந்தது.

முழுநிலவு தோன்றி மீண்டும் முழு நிலவு தோன்ற ஆகும் காலம் ஒரு மாதம்.
அதேபோல் ஆண்டு என்பது சூரியன் இருப்பை வைத்துத் தமிழர்களால் கணக்கிடப்பட்டது. சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடகோடி முனைக்குச் செல்ல ஆறு மாதம். அது மீண்டும் தென்கோடி முனைக்கு வர ஆறுமாதம். ஆக, தென்கோடி முனையில் தோன்றும் சூரியன் மீண்டும் தென்கோடி முனையை அடைய ஆகும் காலம் ஓர் ஆண்டு என்று கணக்கிட்டனர். (சூரியன் நிலையாகவுள்ளது என்பது அறிவியல் உண்மை. ஆனால் பார்வைக்கு அது இடம் மாறுவதாய்த் தோன்றுவதை வைத்துக் கணக்கிட்டனர்.)

உலகில் முதன்முதலில் ஆண்டுக் கணக்கீட்டை சூரியன் இருப்பை வைத்துக் கணக்கிட்டவர்கள் தமிழர்கள். பின் இதனைப் பின்பற்றியே ஆங்கிலேயர்கள் ஆங்கில ஆண்டை அமைத்தனர்.

சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் நாளே தமிழ் ஆண்டின் பிறப்பு. தமிழரின் புத்தாண்டு அன்றுதான். அந்த நாளே பெரும் பொங்கல் எனப்படும் சூரியத் திருநாள்.

ஆனால், இத்தகு வரலாற்றுச் சிறப்புக்குரிய இத்தமிழ்ப் புத்தாண்டை சித்திரை முதல்நாள் என்று மாற்றி, அதற்கு ஒரு புராணக் கதையை எழுதிச் சேர்த்து, தமிழ்ப் பண்பாட்டை ஒழித்து, ஆரியப் பண்பாட்டை, தமிழ்ப் புத்தாண்டிலும் புகுத்தினர்.

அதாவது, நாரதர் கிருஷ்ணனைப் பார்த்து, “நீர் அறுபதானாயிரம் கோபிகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னியைத் தரக்கூடாதா’’ என்று கேட்டார். அதற்கு கண்ணன், “நான் இல்லாப் பெண்ணை உனக்கு உரியதாக்கிக் கொள்’’ என்று கூற, நாரதர் எல்லா வீடுகளிலும் சென்று பார்த்தபோது, கண்ணன் இல்லாத வீடு கிடைக்காததால், கண்ணன் மீதே காமங்கொண்டு, “நான் பெண்ணாய் மாறி உங்களைப் புணர வேண்டும்’’ என்ற தன் விருப்பத்தை வெளிப்படுத்த, “யமுனையில் குளித்துவிட்டு வாருங்கள்’’ என்று நாரதரைப் பார்த்து கண்ணன் கூற, யமுனையில் குளித்த நாரதர் அழகிய பெண்ணாக மாறினார். அந்த அழகில் மயங்கிய கண்ணன், பெண்ணாயிருந்த நாரதரை அறுபது ஆண்டுகள் புணர்ந்து, அறுபது பிள்ளைகளைப் பெற்றார். அவர்களே, பிரபவ தொடங்கி அட்சய முடிய அறுபது ஆண்டுகள் என்று ஆபாசமான அறுவறுப்பான ஒரு புராணக்கதையைச் சொல்லி, இவற்றைத் தமிழாண்டுகள் என்றனர். தமிழே இல்லாத இந்த அறுபது ஆண்டுகளைத் தமிழ் ஆண்டு என்று திணித்தனர். 

தமிழாண்டு என்றால் தமிழிலல்லவா ஆண்டுப் பெயர் இருக்கும். சமஸ்கிருதத்தில் உள்ள 60 ஆண்டும் எப்படித் தமிழாண்டாகும். சித்திரை தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது ஆரியர் பண்பாட்டின் திணிப்பு. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதே தமிழரின் மரபு!

அடுத்து, அறிவியல் அடிப்படையில், வேளாண் விளைச்சலுக்கு முதன்மைக் காரணமாய் இருக்கும் சூரியனுக்கு நன்றி செலுத்தத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பொங்கல் திருநாளை மகரசங்கராந்தி என்று மாற்றினர் ஆரியப் பார்ப்பனர்கள்.

“சூரியன் தனுசு இராசியில் சஞ்சரிக்கும் காலம். இது தேவர்களுக்கு விடியற்காலம். மகா சங்கிரமே சக்தி எனும் சக்தி தட்சிணாயணம் ஆறு மாதத்தில் மனிதனை மூதேவி உருவாயும், பசுக்களைப் புலி உருவாயும் வருத்தி வந்த நிலையில், அத்துன்பம் ஈஸ்வரானுக்கிரகத்தால் நீங்கியதனால், தை மாதம் முதல் நாள், அக்காலத்து விளைந்த பொருட்களைக் கொண்டு சூரியனை வழிபட்டனர். இதுவே மகர சங்கராந்தி என்று கூறி, பொங்கல் திருநாளை மகா சங்கராந்தி யென்று மாற்றினர்.

சூரியத் திருநாளை மகர சங்கராந்தி என்று மாற்றியதுபோல, மழைத் திருநாளை போகி என்று மாற்றினர்.

மழைத் திருநாள் போகிப் பண்டிகையாக்கப்பட்டது

தமிழர்களிடம் கடவுள் நம்பிக்கை தொன்மைக் காலத்தில் இல்லை. அவர்கள் தங்களுக்குப் பயன்படுகின்றவற்றை, தங்களுக்கு நன்மையும், பாதுகாப்பும் தருகின்றவற்றை மரியாதையின் பொருட்டும், நன்றி செலுத்தவும் வணங்கினர்.

அதனடிப்படையில் மனிதர்களின் இன்பத்திற்கும், இனப் பெருக்கத்திற்கும் காரணமாய் அமைந்த ஆண் பெண் உறுப்புகளை இணைத்து நன்றியும், மரியாதையும் செலுத்தினர். அதுவே பின்னாளில் ஆரியர்களின் திரிபு வேலையால், புராணம் புனையப்பட்டு, சிவலிங்க வழிபாடாக்கப்பட்டது.

அதேபோல் குலப் பெரியோர், வீரர், பத்தினிப் பெண்டிர், நிலத் தலைவர் வழிபாடெல்லாம் அம்மன், முருகன், மாயோன், வருணன் வழிபாடுகளாக மாற்றப்பட்டன.

இதே அடிப்படையில் வேளாண் விளைவிற்குத் துணைநிற்கும் மழை, சூரியன், மாடு, உழைப்பாளிகளை மதிக்க, நன்றி சொல்ல தமிழர்கள் கொண்டாடிய அறிவிற்குகந்த, பண்பாட்டைப் பறைசாற்றும், நன்றி விழாவான பொங்கல் விழாவிலும் தங்கள் மூடக் கருத்துக்களை, சடங்குகளை, புராணங்களைப் புகுத்தினர்.

பொங்கல் என்பது அறுவடைத் திருவிழா. விளைவித்த விளைபொருள் களம் கண்ட மகிழ்வில், அந்த விளைவிற்குக் காரணமானவற்றை மதிக்கும் முகத்தான், முதலில் மழைக்கு நன்றி கூறினர். அது மழைத்திருநாள் ஆகும்.

மழை அன்றைய தினம் பொழியாது என்பதால், மழையின் அடையாளமாக ஒரு சொம்பில் தண்ணீர் வைத்து அதற்கு மரியாதைச் செலுத்தினர்.

ஆனால், ஆரிய பார்ப்பனர்கள் இந்த அர்த்தமுள்ள விழாவில் தங்கள் பண்பாட்டை நுழைத்தனர். மழைக்கு அதிபதி இந்திரன். இந்திரனுக்கு போகி என்று ஒரு பெயர் உண்டு. எனவே, மழைக்குக் காரணமான இந்திரனைக் குறிக்கும் போகி என்ற பெயரை மழைத் திருநாளுக்கு மாற்றாக நுழைத்து, மழைத் திருநாளை போகிப் பண்டிகையாக்கினர்.

மழைக்கதிபதியாக இந்திரன் இருக்க, கரிய மாலை (திருமாலை), மழையின் பலன் பெற்றதற்காக வழிபட மக்களுக்குக் கட்டளையிட்டதால், வருணன் கோபம் கொண்டு பெரும் மழையை பெய்யச் செய்ய, இதனால் உயிரினங்கள் மழையால் பாதிக்கப்பட, கிருஷ்ணன் கோவர்த்தன மலையைக் குடையாய் பிடித்துக் காக்க, இந்திரன் தன் தோல்வியை ஒப்பி வெட்கிக் குனிந்து நிற்க, இந்திரனை மன்னித்து அவனுக்கும் சிறப்பு செய்ய, சங்கராந்திக்கு முதல் நாள் இந்திரன் என்ற போகிக்கு போகிப் பண்டிகை கொண்டாட கிருஷ்ணன் கட்டளையிட்டான். இதுவே போகி என்று புராணக் கதையைக் கூறி, மழைத் திருநாளை போகிப் பண்டிகையாக்கினர்.

போகி என்பதை காலப்போக்கில் போக்குதல் என்று பொருள் கொண்டு, வீட்டிலுள்ள பழைய பொருட்களைக் போக்குதல் என்று முடிவு செய்து, பழைய நூல்கள் உட்பட எல்லாவற்றையும் தெருவிலிட்டு தீ வைத்தனர். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் கொளுத்தப்படுவதால் காற்று மண்டலமே கரும்புகை மண்டலமாக மாறி, மூச்சுக் கோளாறுகளையும், மற்றக் கேடுகளையும் உருவாக்கி வருகிறது.

ஆக, ஆரிய பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பால், அர்த்தமுள்ள மழைப் பண்டிகை, போகிப் பண்டிகையாக மாற்றப்பட்டு, புகைப் பண்டிகையாகி கேடு பயக்கிறது.

பொங்கல் திருநாள்:

பொங்கல் திருநாள், பெரும் பொங்கல் என்று தமிழர்களால் அழைக்கப்படும். இந்த நாள் தமிழரின் முதன்மையான திருநாளும் ஆகும். காரணம், அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது. அன்று பயிர் விளைய அடிப்படைக் காரணியாய் உள்ள சூரியனுக்கு நன்றி செலுத்தினர்.

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்

வேளாண் உற்பத்திக்கு மழை, சூரியன் இவற்றிற்கு அடுத்தது மாடுகள் கட்டாயம்.
காரணம், ஏர் உழப் பயன்படுவதோடு, வேளாண்மைக்குத் தேவையான உரம் கிடைக்கவும் மாட்டுக் கழிவுகள் பயன்படுகிறது என்பதாலும், மாடுகள் உழவனின் தோழன் என்பதாலும், உழவனின் செல்வம் என்கிற சிறப்பாலும் மாடுகளுக்கு ஒரு திருநாள் கொண்டாடினர் தமிழர். இது பண்பாட்டின் அடிப்படையில் நன்றி செலுத்தும் நோக்கில், உதவியாய் அமைந்தவற்றிற்கு உரிய சிறப்பு செய்யும் உணர்வில் உருவாக்கப்பட்டது. மாட்டுப் பொங்கல் தமிழரின் நன்றி கூறும் பண்பாட்டின் அடையாளம்.

ஆனால், இதையும் புராணக் கதையைப் புகுத்தி புரட்டு வேலை செய்து மாற்றினர். இந்திரன் கோபத்தால் கடும் மழை பெய்யச் செய்ததால் மாடுகள் மிகவும் சிரமப்பட்டதாகவும், பின்னர் மனம் மாறி இந்திரன் மழையை நிற்கச் செய்ததால், மறுநாள் மாடுகள் கட்டு அவிழ்த்து விடப்பட மகிழ்ச்சியில் துள்ளிப் பாய்ந்து ஓடினவென்றும், அதுவே மாட்டுப் பொங்கல் ஆனது என்றும் மாட்டுப் பொங்கலின் மாண்பிலும் மடமையைப் புகுத்தினர். தமிழர் பண்பாட்டில் ஆரியப் பண்பாட்டைப் புகுத்தினர்.

காணும் பொங்கல்:

அடுத்த நாள் கொண்டாடப்படும்  காணும் பொங்கல் என்பது வேளாண் உற்பத்திக்காக உழைக்கின்ற உழைப்பாளர்களுக்கு நன்றி சொல்லவும், அவர்களைச் சிறப்பிக்கவும் தமிழர்களால் உருவாக்கப்பட்டு கொண்டாடப்படுவதாகும்.

அன்று உழைப்பாளிகள் நில உரிமையாளர்களைச் சென்று கண்டு, நெல், காய்கறி, துணி போன்றவற்றைப் பெறுவர். நிலத்தின் உரிமையாளர்களும் உழைத்து உற்பத்திப் பெருக்கும் உழைப்பாளிகளை மகிழ்விக்க புத்தாடை, புதுப்பானை, புத்தரிசி, கரும்பு என்று பலதும் வழங்கிச் சிறப்பிப்பர்.

இப்படி உழைப்பாளிகளைச் சிறப்பிக்கத் தமிழர்கள் உருவாக்கிய உழைப்பாளிப் பொங்கல் என்னும் காணும் பொங்கலையும் புராணக் கதைப்புக் கூறி புரட்டினர்; தங்கள் பண்பாட்டைப் புகுத்தினர்.

கோபங் கொண்டு இந்திரன் பொழியச் செய்த பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மழை நின்ற பின் ஒருவரையொருவர் கண்டு பாதிப்பு பற்றி விசாரித்தனர். அதவே காணும் பொங்கல் என்று கதை கட்டி, காரணம் கூறினர். காணும் பொங்கலிலும் ஆரியப் பண்பாட்டை, புராண மடமையைப் புகுத்தினர்.

இந்த உண்மைகளை மறைத்து ஆரிய பார்ப்பனர்கள் தொடர்ந்து சித்திரை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்கின்றனர். சித்திரையில் சூரியன் தலைக்கு நேர் இருக்கும். ஆண்டு தொடங்கும்போது தலைக்கு நேர் இருந்து தொடங்க மாட்டார்கள். நாள் தொடங்கும்போது காலையில் சூரியன் கிழக்கில் உதிப்பதைத்தான் எடுத்துக் கொண்டனர். மாறாக, மதியம் தலைக்கு நேர் சூரியன் இருப்பதை எடுக்கவில்லை. அதேபோல் சூரியன் தென்கோடியிலிருந்து தை மாதம் முதல் நாள் வடக்குநோக்குவதைத்தான் ஆண்டின் தொடக்க மாகக் கொண்டனரே தவிர, சூரியன் தலைக்கு நேர் இருக்கும் சித்திரையை அல்ல.

தமிழர் பண்பாட்டை மாற்றி, மறைத்து, ஆரியப் பண்பாட்டைப் புகுத்துவதில் ஆரிய பார்ப்பனர்கள் எவ்வளவு முனைப்புடன் செயல்படுகிறார்கள் என்பதற்கு ‘துக்ளக்’ இதழும், சுதா சேஷய்யனும் சான்று. தமிழர்கள் இவர்களிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்!
(மஞ்சைவசந்தன், 13.1.2016)