Friday, February 11, 2022

பெரியார் - அ.மார்க்ஸ்

பெரியார் தலித்துகள் முஸ்லிம்கள் தமிழ்த் தேசியர்கள் - அ. மார்க்ஸ் - அடையாளம் வெளியீடு - பக்கங்கள் 175 - விலை ரூ 160/

●  பேராசிரியர் அ. மார்க்ஸ், மார்க்சிய சிந்தனையாளர். மனித உரிமை போராளி. மார்க்சியம், பெரியாரியம், பௌத்தம், கல்வி, இலக்கியம் என பல்வேறு தளங்களில் செயல்படுபவர். சென்ற முப்பதாண்டுகளுக்கு முன்பு, பெரியார் குறித்த அவதூறுகளை தமிழ் தேசியர்களில் சிலரும், தலித் எழுத்தாளர்களில் ஒரு சிலரும் முன் வைத்த போது, அவற்றின் பொய்மைகளை உடனுக்குடன் தனது பதில் கட்டுரைகளால்  தோலுரித்தவர். அந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல் !

● மார்க்ஸின் இந்த கட்டுரைகள் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு காலங்களில் எழுதப்பட்டது. 

பெரியார் தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரியா | பெரியாரும் தலித்துகளும் | பெரியாரும் அயோத்திதாசரும் | பெரியாரும் முஸ்லிம்களும் | திருமணம் குறித்து பெரியார் | கற்பு குறித்து பெரியார் | பெரியாரும் தமிழ்த் தேசியரும் | என்ற பல கட்டுரைகள்.

●  இந்த கட்டுரைகளில் மார்க்ஸ் மிகவும் சிரத்தையுடன் ஆதாரங்களோடு, அவதூறுகளுக்கான பதிலடியை தந்துள்ளார். இந்த நூலில் முக்கியமாக பெரியார் தலித்கள் பற்றியும், பவுத்தம் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் தரப்பட்ட தகவல்கள் வேறு யாரும் இந்த அளவிற்கு சிரத்தையோடு பகிர்ந்தளிக்க வில்லை. அதனாலேயே இந்த நூல் பெரியாரியத்துக்கான பங்களிப்பாக உள்ளது. 

நூலிலிருந்து சில வரலாற்று தகவல்களை காண்போம் :

●  பெரியார் தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர் மாநாடுகள் நடத்தி தலித் பிரச்சினைகளை நோக்கி, மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

" பறையருக்கு மேலாக இருந்தால் போதும் என நினைக்காதீர்கள் ! தீண்டாமையை கைவிடாமல் உங்கள் சாதி இழிவு ஒழியும் என நினைக்காதீர்கள் ! " .... என பிற்படுத்தப்பட்ட மக்களை பார்த்து கடிந்து கொண்டார் !

●  "  உயர் சாதி எனச் சொல்லிக் கொண்டு எவன் குறுக்கே வந்தாலும், பாம்பை அடிப்பது போல அடியுங்கள் ! " .... என தாழ்த்தப்பட்ட மக்களை ஊக்குவித்தார் ! வெறும் பேச்சோடு நிற்காமல், தீண்டாமைக்கு எதிராக போராடி, சிறைக்கும் சென்றார் !

●  இந்துத்துவாவும் பாஜகவும் ஆர்எஸ்எஸ் போன்ற வலது சாரி, பிற்போக்கு சக்திகளும், கையில் எடுக்க முடியாத ஒரு நெருப்புத் துண்டு - பெரியார் ! யாரை நெருங்கினாலும் பெரியாரை நெருங்க முடியாது ! புத்தரை நெருங்கி, புத்த மதத்தை துரத்தி விட்டார்கள் ! அம்பேத்கரை வணங்கி தங்களவராக்க தொடர் முயற்சியில் உள்ளார்கள் !

●   ஆனால் பெரியாரோ - மக்களிடம் உரையாடி, பேசிப்பேசி, பேசியதை எழுதி, எழுதியதை நூல்களாக்கி, பிரசுரித்து, பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக எழுதி, பாதுகாத்து வைத்து விட்டார் தன் கொள்கைகளை ! 

அதனால் தான் பெரியாரை அவதூறு செய்யவும் இயலவில்லை ! அபகரித்து அழிக்கவும் இயலவில்லை !

●  ' பவுத்தம் ஒரு மதமல்ல, புத்தர் ஒரு கடவுளல்ல ' ..என 15.05.1957 அன்று சென்னை மகாபோதி கழகத்தில் நடந்த - 2501 ம் ஆண்டு புத்தர் விழாவில், பெரியார் ஆற்றிய தலைமையுரை மிகச் சிறப்பான ஒன்று ! புத்தர் பற்றியும் இந்து மத அவலம் பற்றியும் இவ்வளவு எளிமையாக பெரியாரால் மட்டுமே விளக்கம் தர முடியும் !

●  " புத்தர் - மகானோ, ரிஷியோ அல்ல ! இந்த தன்மையையே எதிர்த்தவர் புத்தர் ! அந்த காரணத்தினால்தான் இன்று நாம் அவரை கொண்டாடுகிறோம் ! பவுத்தம் என்பது ஒரு மதமல்ல ! ஒரு மதம் என்றால் கண்டிப்பாக அதற்கு ஒரு கடவுள் இருக்க வேண்டும் ! மோட்சம் நரகம் வேண்டும் ! ஆத்மா, பாவ புண்ணியம் அதற்கான தண்டனை இவையெல்லாம் வேண்டும் ! "...

●  " இன்னும் சிறந்த மதத்திற்கு ஒரு கடவுள் போதாது ! அவற்றிற்கு பொண்டாட்டி, பிள்ளைக்குட்டி, வைப்பாட்டி இவை எல்லாம் வேண்டும் ! இப்படியெல்லாம் இருந்தால்தான் அது மதமாகும் ! ஆனால் புத்தரோ - முதலில், கடவுளைப் பற்றி கவலைப் படவேண்டாம், மனிதனைப் பற்றி கவலைப்படு என்று சொல்லி விட்டார் ! மோட்சம் நரகம் இல்லை, ஒழுக்கம் தான் முக்கியமென்று சொல்லி விட்டார் ! இன்னும் அறிவுதான் முக்கியமென சொல்லி விட்டார் ! புத்தியானவர் அதனால் தான் அவர் புத்தர் ! " ....பெரியாரின் தெளிவான சிந்தனைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு !

●  நபிகள் நாயகத்திற்கு விழா எடுத்த ஒரே முஸ்லிம் அல்லாத இந்திய அரசியல் தலைவர் - பெரியார் ஒருவர் தான் ! புத்தரைப் பற்றி பேசியது போல முகமது நபியைப் பற்றியும் அவரது கருத்துக்கள் சிறப்பானவை !

"  முகமது நபியை பற்றி யார் எப்படி எடுத்துக் கொண்டாலும், நான் அவரை ஒரு மனிதர் என்றும்  நம்மை போல இயற்கையாக பிறந்தவர் என்றும் கருதித்தான், அவரைப்பற்றிய விஷயங்களை நான் புகழ்கிறேன் ! "..என தனது நிலையை தெளிவுபடுத்தியுள்ளார். 

●  பெரியார் இஸ்லாம் மதக் கொள்கைகளை முழுவதும் ஒப்புக் கொண்டதாகவோ, அவைகளை சுயமரியாதை கொள்கைகள் என்று அவர் எப்போதும் பேசியதில்லை . அந்த மதத்திலுள்ள மூடநம்பிக்கைகளான - சமாதி வணக்கங்கள், சந்தனக்கூடு, கூண்டு உற்சவம், கொடி வணக்கம், அல்லாசாமி பண்டிகை ஆகியவற்றை பலமுறை கண்டித்துள்ளார்.  இந்து மதத்திலுள்ள தீண்டாமை ஒழிய -    '  நீங்கள் 5 மணிக்கு இஸ்லாமிற்கு மாறினால் - 5.30 மணிக்கே உங்களது தீண்டாமை ஒழிந்து விடும் ' .. என்றளவில் பெரியார் பேசி, இஸ்லாமை ஆதரித்தார் !

●  தற்போது கூட பர்தா அணியும் விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது. இது சம்பந்தமாக பெரியாரின் கருத்துக்களை பாருங்கள். 

"  முகமதிய மதத்தில் கோஷாமுறை, மதச்சின்னம், கடவுள் போன்ற பல கெடுதிகள் இருக்கலாம். அப்படியெல்லாம் கூட நாத்திகர்களுக்கும், பெண்ணுரிமை வாதிகளுக்கும் வேண்டுமானால் இவைகள் வேண்டாத தாக இருக்கலாம் ! ஆனால் தீயர்கள், புலையர்கள், பறையர்கள், நாடோடிகள் என நாயிலும் கேவலமாக இந்து மதத்தால் கருதப்படும் மக்களுக்கு, அதில் என்ன குறைகாண முடியும் ? " ...சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பே பெரியாரின் செயல் திட்டங்களில் முதன்மையானதும் முக்கியமானதுமாகும் ! அவைகளை சிறப்பாக விளக்கம் நூல் இது !

●  பெரியாரியலுக்கு, பேராசிரியர் மார்க்ஸ் எழுதிய இந்த படைப்பு - 

அணிகலமாகவும் இருக்கிறது !

ஆயுதமாகவும் இருக்கிறது !

பொ. நாகராஜன். சென்னை. 11.02.2022.

********************************************

No comments: