Tuesday, July 5, 2022

அம்பேத்கர் பார்ப்பனப் பெயரா?

 அம்பேத்கர் பார்ப்பனப் பெயரா?

       -கவிஞர் கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

“அம்பேத்கர் என்ற பார்ப்பன ஆசிரியர், பீமாராவ் ராம்ஜி என்ற மாணவன் கல்வியில் மிக உயர்ந்த நிலை அடைவதற்கு மிகப்பெரிய உதவிகளைச் செய்தார். அவருடைய உதவிகள் இல்லாமல் போய் இருந்தால் பீமாராவ் ராம்ஜி உயர்ந்த நிலைக்கு வரவே முடிந்து இருக்காது.

அந்த நன்றியின் வெளிப்பாடாகத்தான் அந்தப் பார்ப்பன ஆசிரியரின் பெயரை தன் குடும்பப் பெயராக பீமாராவ் ராம்ஜி இணைத்துக் கொண்டார்” என்ற ஒரு கருத்து மக்களிடையே வலுவாகப் பரவி உள்ளது. இக்கருத்தைப் பார்ப்பனர்கள்தான் உருவாக்கி, பரப்பி நிலைபெறச் செய்து இருக்கிறார்களே ஒழிய இதில் இம்மி அளவும் உண்மை இல்லை.

இதில் உச்சபட்சக் கொடுமை என்னவென்றால் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களேகூட இதை வலுவாக நம்புகிறார்கள். எவ்வளவு வலுவாக நம்புகிறார்கள் என்றால்  இதைப் பற்றிக் கூறினால் “பார்ப்பன எதிர்ப்பு என்ற பெயரில் உண்மைச் செய்தி களைக்கூட மறுப்பது / எதிர்ப்பது சரி அல்ல” என்று வலு வாக எதிர்வாதம் செய்யும் அளவுக்கு நம்புகிறார்கள்.

இப்படிப்பட்ட பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் “பார்ப் பனர்கள் அம்பேத்கர் போன்ற திறமைசாலிகளை மதிக் கவும் வளர்க்கவும் தவறுவதே இல்லை. பார்ப்பனர்களின் கருணையினால்தான் அம்பேத்கர் இவ்வளவு உயர்ந்த நிலைக்குச் செல்ல முடிந்து இருக்கிறது. ஆகவே பார்ப்பன எதிர்ப்பு என்பது தவறான / நன்றி கொன்ற செயலாகும்” என்ற கருத்தைப் பரப்பி ஜாதியக் கொடு மைகளை நிரந்தரப்படுத்த அவாள்கள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

உண்மையில் அண்ணலின் குடும்பப்பெயர் (Surname)  சக்பால் (Sakpal)  என்பது ஆகும். அவரு டைய சொந்த ஊர் (பிறந்த ஊர் அல்ல) மகராட்டிர மாநிலத்தில், இரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள அம் பாதவே (Ambadawe) என்ற கிராமம் ஆகும்.இதை அம்பேத் (Ambed)  என்று சுருக்கியும் சொல்வார் கள்.

அண்ணலின் தந்தை அண்ணலைப் பள்ளியில் சேர்க்கும்போது, குடும்பப் பெயரைக் கூறவேண்டிய இடத்தில் தன் சொந்த ஊரின் பெயரைக்கூறி இருக்கிறார். பள்ளி நிர்வாகத்தினரோ அம்பாதவே என்று பதிவு செய்வதற்குப் பதிலாக அம்பேத்கர் என்று பதிவு செய்து விட்டனர். இவ்வாறுதான் அம்பேத்கர் என்ற பெயர் அண்ணலுக்கு ஏற்பட்டது, நிலைபெற்றது. 

ஆனால் அம்பேத்கர் மிக உயர்ந்த நிலையை அடைந்த உடன், அவருடைய அத்தனைப் புகழுக்கும் பார்ப்பனர் கள்தான் மூல காரணம் என்று பார்ப்பனர்கள் கொஞ்சம்கூடக் கூச்சமில்லாமல் இரண்டு விதக் கதைகளைக் கட்டி விட்டு உள்ளனர்.

முதல் கதை அண்ணலின் அத்தனை முன்னேற்றத் திற்கும் அம்பேத்கர் என்ற பார்ப்பனர்தான் காரணம் என்றும், அந்த நன்றிக் கட.னுக்காகத்தான், அவருடைய பெயரை தன் குடும்பப் பெயராக அண்ணல் ஏற்றுக் கொண்டார் என்பது. இது நகைப்புக்கு உரிய கற்பனை. 

அண்ணல் தன் முன்னேற்றத்திற்கு உதவிய “அந்தப்” பார்ப்பன ஆசிரியருக்கு நன்றி தெரிவிக்க அப்பெயரை தன் குடும்பப் பெயராக ஏற்றுக்கொண்டு இருந்தால், அது அவர் வளர்ந்து நிலைபெற்றபிறகு அல்லவா நடைபெற்று இருக்கும்? ஆனால் அம்பேத்கர் என்ற பெயர் தொடக்கப்பள்ளிப் பதிவேடுகளிலேயே உள்ளதே? 

அப்படி இருக்கையில் தன் முன்னேற்றங்களுக்குக் காரணமான பார்ப்பன ஆசிரியரின் பெயரை தன் பெயராக ஏற்றுக்கொண்டார் என்று கூறுவது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்?

இரண்டாவது கதை என்னவென்றால் கிருஷ்ண கேசவ் அம்பேத்கர்  (Krishna Keshav Ambedkar) என்ற பார்ப்பன ஆசிரியர் அண்ணலின் அறிவாற்ற லைக் கண்டு, மெச்சி, அன்பின் உச்சத்தில் இருந்து கொண்டு, தன் குடும்பப்பெயரை அண்ணலின் குடும்பப் பெயராக இணைத்தார் என்பது தான். 

ஒரு மாணவனைப் பள்ளியில் சேர்க்கும்போதே தன் குடும்பப் பெயரைக் “கொடையாக” அளிக்கவேண்டும் என்று தோன்றும் அளவுக்கு அவனுடைய அறிவின் ஆழத்தைப் புரிந்து கொண்டு விடமுடியுமா?   

அதுமட்டுமல்ல மகாராட்டிர மாநிலத்தில் உள்ள குடும்பப் பெயர்களில் அம்பேத்கர் என்ற குடும்பப் பெயரே இல்லை என்று தெரியவருகிறது. இல்லாத குடும்பப் பெயரை எப்படி ஒருவர் வைத்துக் கொண்டு இருந்தார் என்ற புதிருக்கு விடை காணவே முடியவில்லை.

ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் அறிவுத்திறன் பார்ப்பனர்களின் அறிவுத்திறனுக்குச் சற்றும் குறைந்தது அல்ல. சொல்லப் போனால் மக்களுக்குத் தேவையான தொழிலைச் செய்வதில் பட்டறிவு இல்லாததால் பார்ப் பனர்களின் அறிவுத்திறன், உழைக்கும் வகுப்பு மக்க ளின் அறிவுத்திறனுக்கு அருகில் நெருங்கி வரவும் முடி யாது. 

ஆகவே ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் அறிவுத் திறன்தான் உயர்ந்ததாக இருக்கும். பார்ப்பனர்களின் அறிவுத் திறன் என்பது வெறும் ஏமாற்று வித்தையே. இந்த ஏமாற்று வித்தையின் வெளிப்பாடுதான் அம்பேத்கர் என்பது பார்ப்பனக் குடும்பப் பெயர் என்று கதைகட்டி இருப்பது. 

அம்பேத்கரின் குடும்ப பெயர் சக்பால். அவருடைய சொந்த ஊர் மகாராட்டிரா மாநிலத்தில் இரத்தினகிரி மாவட்டத்தில்  உள்ள அம்பாதவே. அதை அம்பேத் என்று சுருக்கி வழங்கி வந்துள்ளனர்.

துக்ளக் சில விளக்கங்களைத் தர வேண்டும்

மகாராட்டிராவில் அம்பேத்கர் என்ற குடும்பப் பெயர் கொண்ட பார்ப்பனர்கள் எங்கு உள்ளனர்? அம்பேத்கர் என்ற குடும்பப் பெயரில் மகாராட்டிராவில் யாருமே இல்லை. இருந்தால் அந்தப் பட்டியலை வெளியிடுவார்களா? 

என்றோ எழுதிய பொய்யை தொடர்ந்து எழுதினால் அது உண்மையாகிவிடுமா? அம்பேத்கர் என்ற பெயரில் பார்ப்பனர்களின் குடும்பப் பெயர் இருந்தால் இன்று அதை ஒரு கூட்டம் பெருமையாக பயன்படுத்தி இருக்குமே - ஏன் பயன்படுத்தவில்லை?

பள்ளியில் சேர்க்கும் போதே அவரது தந்தை அம்பேவத் என்றுதான் பெயரோடு சேர்த்துள்ளார், ஆனால் அப்போது பதியப்பட்டபோது தவறுதலாக "கர்" சேர்க்கப்பட்டு பின்னர் அது அம்பேத்கர் என்று ஆகிப் போனது. அதாவது ஒரு மாணவன் பள்ளியில் சேர்க்கும் போதே ஒரு ஆசிரியர் எப்படி தனது குடும்பப்பெயரை அடுத்தவரது பெயருக்குப் பக்கத்தில் போட ஒத்துக் கொள்வார்?

கவிஞர் கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர்,

திராவிடர் கழகம்

No comments: