Saturday, November 11, 2023

சமரச சன்மார்க்கம் - பெரியார்

 சமரச சன்மார்கம்.

                           புரட்சியாளர் பெரியார்.

அக்கிராசனர் அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே!

சமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக்கூடியதே தவிர காரியத்தில் நடக்க முடியாததாகும். ஏனெனில், எது எது சமரச சன்மார்க்கம் என்கிறோமோ அவற்றிற்கு நேர் விரோதமாகவே மனித வாழ்க்கை அமைக்கப்பட்டிருக்கின்றது. இது நம் நாட்டில் மட்டுமல்ல; உலகம் முழுவதிலும் இவ்வாறே அமைக்கப் பட்டிருக்கின்றது.

முதலாவது கடவுள், மதம், விதி, சாதி, பணம், தொழில் முதலியவைகள் இயற்கைக்கு மாத்திரமான சமரச சன்மார்க்கமல்லாமல் - நியாய பூர்வமான சமரச சன்மார்க்கத்திற்கும் விரோதமாய் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் ஒருவன் சமரச சன்மார்க்கத்தைப் பற்றிப் பேசவேண்டுமானால் மேற்கண்ட கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு சமரச சன்மார்க்கம் ஏற்படவேண்டும் என்கின்ற முறையில் யோக்கியர்களாலோ, அறிவாளிகளாலோ பேசமுடியாது. ஏனெனில், அவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட தத்துவத்தில் அமைக்கப்பட்டிருப் பவைகளாகும்; அதோடு மாத்திரமல்லாமல், சமரசமும் சன்மார்க்கமும் கூடாது என்னும் தத்துவத்தின்மீதே அமைக்கப் பட்டுள்ளவைகளாகும்.

மேற்கண்டவை சம்பந்தமான கட்டுப்பாடுகளையெல்லாம் அடியோடு அழிப்பதுதான் சமரச சன்மார்க்கம் என்று சொல்வேன். இது உங்களில் பலருக்கும் உங்கள் பாதிரிமார்கள், எஜமானர்கள், அக்கம் பக்கச் சாதியார்கள், சாமிகள், மதக்காரர்கள் ஆகியவர்களுக்கு வருத்தமாயும் விரோதமானவைகளா யும் இருக்கும். நான் உண்மையான சமரச சன்மார்க்கம் அடைந்த தேசத்தார் - அடைந்த சமூகத்தார் அடைந்த தனிமனிதர்கள் யார்யாரைக் கருதுகின்றேனோ அவர்கள் எல்லாம் மேற்கண்ட இடையூறானவைகளைத் தகர்த்தெறிந்துதான் சமரச சன்மார்க்கம் அடைந்தார்கள்; இவைகளில் சிறிது தாட்சண்யப்பட்டவர்கள் கூட தோல்வியடைந்து விட்டார்கள்.

கடவுளையும், மதத்தையும், பணக்காரனையும் வைத்து சமரச சன்மார்க்கம் செய்ய முடியாதென்று கருதித்தான் இரஷியர்கள் பாதிரிமார்கள் தொல்லைகளை யும், சர்ச்சுகளையும் பணக்காரத் தன்மைகளையும் அழித்துத்தான் சமரசம் பெற்றார்கள்.

தற்போதைய இரஷியச் சரித்திரத்தில் சமரசத்திற்குப் பாதிரிமார்கள் எதிரி களென்றே தீர்மானிக்கப்பட்டு, அவர்களை அழித்துவிட்டார்கள். அழித்து விட்டார்கள் என்றால் கொன்றுவிட்டார்கள் என்பது கருத்தல்ல. ஏதோ சிலரை, அதாவது சமரசத்திற்கு எதிர்ப்பிரச்சாரம் செய்தவர்களில் சிலரைத்தவிர மற்றவர்களைப் பட்டாளத்தில் சேரச் செய்தார்கள்; சிலரை விவசாயத்தில் போட்டார்கள்; சிலரை வைத்தியத்தில் போட்டார்கள்; வேறு காரியங்களுக்கு உதவாதவர்களைக் காவல் காக்கப் போட்டார்கள். அது போலவே, சர்ச்சுகளைத் தொழிற்சாலை, பள்ளிக் கூடம் முதலியவைகளாக மாற்றினார்கள். இவைகளுக்கு உதவாத போக்குவரத்துக்கு இடையூறான வைகளை இடித்தார்கள். பணக்காரர்களின் சொத்தைப் பிடுங்கிப் பொதுஜன சொத்தாக்கி, பூமி இல்லாதவர் களுக்குப் பூமி, தொழிலில்லாதவர்களுக்குத் தொழில்; படிப்பில்லாதவர் களுக்குப் படிப்பு முதலாகியவைகள் கொடுப்பதற்கு உபயோகப்படுத் தினார்கள். கலியாண முறையை ஒழித்துப் பெண் அடிமையை நீக்கினார்கள். கண்டபடிப் பன்றிகளைப் போல் பிள்ளை பெறும் முறையை நிறுத்தச்செய்து, அளவுபடுத்தி ஆண் பெண் இன்ப வாழ்க்கைக்கு வழி செய்தார்கள். இன்னும் பல காரியங்கள் செய்தார்கள்.

 ஆனால், நமக்கு இவை பொருந்துமா என்று சிலர் கேட்பார்கள். யார் கேட்பார்களென்றால், பணக்காரன், பாதிரி, உயர்ந்த சாதிக்காரன், அரசன் ஆகியவர்கள்தான் கேட்பார்கள். இவர்கள் நமது நாட்டு ஜனத் தொகையில் 100க்கு 5 அல்லது 6 பேர்களே இருப்பார்கள். ஆதலால் குறைந்த எண்ணிக்கை யுடையவர்கள் - அதிலும் தங்கள் சுயநலத்திற்கு என்று சில கட்டுப்பாடுகள் இருக்கவேண்டுமென்றால் யார் சம்மதிப்பார்கள்? முதலாவது, இவர்கள் ஆதிக்கத்தை ஒப்புக்கொள்ளுகிறீர்களா? இருக்கவேண்டும் என்று சொல்லு கின்றீர்களா? என்ன சொல்லுகின்றீர்கள்?

 ஆகவே, கடவுள், மதம், பணக்காரன் இம்மூன்றும் இன்றே ஒழிய வேண்டும் என்கின்ற ஆத்திரமுமில்லை. ஏனெனில், இன்னும் அனேக நாடுகள் இருக்கின்றன அவை இப்போதுதான் முயற்சிக்கின்றன. ஆகையால், வரிசைக் கிரமத்தில் அந்த முறை நமக்கு வரும் என்கின்ற தைரியம் உண்டு. ஆனால், இங்கு மற்ற நாட்டில் இல்லாத சாதி முறை என்பது இச் சன்மார்க்கத்திற்கு விரோதமாய் இருக்கின்றது. அதை அழித்தே ஆகவேண்டும். நீங்கள் இவற்றிற்கெல்லாம் எத்தனைக் காலமாய் அடங்கி வந்திருக் கிறீர்கள்? என்ன பலன் அடைந்துள்ளீர்கள்? இன்றைய நிலையேதான் உங்கள் வாழ்க்கையின் பலன் என்று நினைத்தால், எதற்காக நாளைய தினம் வரை உயிருடன் இருக்கின்றீர்கள்?

மனிதன் வாழ ஏதாவது இலட்சியம் இருக்கவேண்டும். சும்மா அரைத்த மாவை அரைத்துக் கொண்டிருப்பதுபோல், வெறும் ஆகாரம் உட்கொள்ளவும் உண்டதை மலமாக்கவும் என்பதற்காகவும் அறிவற்ற உயிர்கள் இருக்கின்றனவே! இவை போதாவா? இனி, மனிதன் பகுத்தறிவுள்ளவன் என்றும் பண்டிதன் என்றும், பணக்காரன் என்றும் சொல்லிக்கொண்டு கடவுளை அடையும் மார்க்கங்களையும் பின்பற்றி, கடவுளென்று பணத்தையும் நேரத்தையும் ஊக்கத்தையும் செலவு செய்கின்ற மனிதனும் - நல்ல ஆகார வஸ்துக்களை மலமாக்குவதற்காக வாழவேண்டுமா? இவ்வித மனித சமூகம் அழிந்து போவது ஜீவகாருண்யத்தை உத்தேசித்தாவது மிகவும் அவசியம்.

உங்கள் இலட்சியங்களை அடைய முயலுங்கள்; மற்றொரு பிறவிக்கு என்று அயோக்கியர்களின் வார்த்தைகளை நம்பி எதிர்பார்த்துக்கொண்டு வீணாய் ஏமாந்து போகாதீர்கள். முன்பிறவி சங்கதி ஏதாவது ஒன்று, உங்கள் சரீரத்திலிருந்து உதிர்ந்த ஒரு மயிர்த்துண்டாவது உங்களுக்கு இந்தப் பிறப்பில் ஞாபகமிருந்தால் அல்லவா இந்தப் பிறவியின் காரியங்களை அடுத்த பிறவியில் அனுபவிக்க முடியப் போகின்றது? அன்றியும், கடவுள் உங்களை இப்படிச் செய்துவிட்டார் என்று முட்டாள்தனமாய்க் கருதி உங்கள் துன்பத்தை நிலை நிறுத்தாதீர்கள்! உணர்ச்சியும் அறிவும் அற்ற சோம்பேறிகளுக்குத்தான் கடவுள்செயல் பொருத்தமாக இருக்கும். நீங்கள் ஏன் சோம்பேறியாய் இருக்கின்றீர்கள்!

 கடவுளுக்குக் கோயில்கட்டி, உருப்படிகளை அதிகமாக்கி நமது குறைகளையும் கஷ்டங்களையும் முறையிட்டு, முறையிட்டு அழுதுவந்ததுபோதும். இனி அந்தப்பக்கம் திரும்பிப் பாராதீர்கள். உங்கள் அறிவையும் மனிதத் தன்மையையும் திரும்பிப் பாருங்கள்; அது சொல்கின்றபடி நடவுங்கள்; அதனிடம் நம்பிக்கை வையுங்கள். ஆகையால், மற்றநாட்டு வர்த்தமானங்களை உணர்ந்து நீங்கள் நடுநிலைமையில் இருந்து உங்கள் அறிவுக்கே பூசை போட்டீர்களானால், வந்துவிட்டது அன்றே சமரசம்! சன்மார்க்கம்! விடுதலை! இதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை.

(பெருந்துறை சமீபம் கிரேநகரில், 26.1.1931இல் சொற்பொழிவு. குடிஅரசு, 19.2.1931)

No comments: