Wednesday, January 24, 2024

வைகோவின் சிறையில் விரிந்த மடல்கள் - 5

 வைகோவின் சிறையில் விரிந்த மடல்கள் - 5

வழக்கு மன்றத்தில் 2002 நவம்பர் 22 ஆம் நாள் தலைவர் வைகோ அவர்களும் மற்ற 8 ம.தி.மு.க. நிர்வாகிகளும் நேர் நிறுத்தப்பட்ட போது, நீதியரசர் நீங்கள் உட்காரலாம் என்று சொன்ன பிறகும் வைகோவும் மற்ற 8 பேரும் நின்று கொண்டிருந்தனர்.  தலைவர் வைகோ அவர்கள் தன் தரப்பு கருத்துகளை பதிவு செய்ய விரும்பினார். நீதியரசரும் அனுமதித்தார். அது குறித்து வைகோ அவர்கள் எழுதியிருப்பதாவது:

"நீதிமன்றத்தில் எங்களை உட்காருமாறு மாண்புமிகு நீதிபதி அவர்கள் கூறினார்கள், தொடர்ந்து நீதிமன்றக் காவல் நீட்டிக்கப் படுவதற்கு வாய்ப்பாக, செப்டம்பர் 4ஆம் நாள், செப்டம்பர் 30ஆம் நாள், அக்டோபர் 4ஆம் நாள் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப் பட்டோம்." அக்டோபர் 9ஆம் நாள் நான் மட்டும் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது கொண்டு வரப்பட்ட போதும் உட்கார்ந்து இருக்க அனுமதிக்கப் பட்டேன்.

ஆனால், அக்டோபர் 28ஆம் நாள் அன்று நீதிமன்றத்தில் நாங்கள்

வழக்கம்போலவே அமர்ந்து இருந்த போது, வழக்கினைக் குறித்த வாதங்கள் தொடர இருந்த வேளையில், 'எழுந்து நிற்குமாறு' மாண்புமிகு நீதிபதி அவர்களால்

அறிவிக்கப்பட்டோம். எழுந்து நின்றோம்.' நம்மிடம் ஏதோ விளக்கம் கேட்கப் போகிறார்கள்' என்றுதான் தொடக்கத்தில் நினைத்தேன். ஆனால் நீதிமன்ற வாதங்கள் முடியும் மட்டும் நாங்கள் நின்று கொண்டே இருக்க வேண்டும் என மாண்புமிகு நீதிபதி அவர்கள் முடிவு செய்துவிட்டதைச் சில மணித்துளிகளிலேயே உணர்ந்து கொண்டேன்.

நீதிமன்றத்தில் இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிவுற்று "காவல் நீட்டிப்பு" அறிவிக்கப்பட இருந்த தருணம் வரையில் ஒன்றரை மணி நேரமும் நின்று கொண்டே இருந்தோம். அதன் பின்னர், "நாங்கள் உட்காரலாம்" எனச் சைகையின் மூலமும், சன்னமான மெல்லிய குரலின் மூலமும் மாண்புமிகு நீதிபதி அவர்கள்தெ ரிவித்தபோது "நாங்கள் உட்காரவில்லை." சட்டத்தின் முன்னர் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை அறிந்தவன் நான். 

இம்முறை நவம்பர் 22ஆம் நாள் நீதிமன்றத்தில் நாங்கள் நின்று கொண்டு இருந்தபோது “உட்காரலாம்" என மாண்புமிகு நீதிபதி அவர்கள் கூறியவுடன், நான் எனது கருத்தைச் சொல்ல அனுமதிக்க வேண்டும் என அவரைப் பார்த்துச் சொன்னபோது அவரும் அனுமதித்தார்.

"இந்த நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 07, செப்டம்பர் 04, செப்டம்பர் 30, அக்டோபர் 04, அக்டோபர் 09. நாள்களில் நாங்கள் உட்கார்ந்து இருக்க அனுமதிக்கப்பட்டோம். ஆனால் திடீரென்று அக்டோபர் 28ஆம் நாள் அன்று நாங்கள் நிற்கவேண்டும் என்று நீங்கள் அறிவித்தீர்கள். அய்ந்து முறையும் உட்கார்ந்து இருக்க அனுமதித்ததன் அடிப்படை என்ன? ஆறாவது முறை நிற்கவேண்டும் எனக் கூறியதன் அடிப்படை என்ன என்பதைச் சிந்தித்துப் பார்க்கும்பொழுது, 'அந்த அடிப்படயின் அணுகுமுறையை" என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. நான் இந்த நீதிமன்றத்தில் எந்தவிதமான தனிப்பட்ட சலுகைகளையும் எதிர்பார்க்கிற அளவுக்கு நீதிமன்ற நடைமுறைகளை அறியாதவன் அல்லன். எங்காவது உட்காருவதற்கு ஒரு நாற்காலி கிடைக்காதா? என்று ஏங்குபவனும் அல்லன்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றங்களுக்குக் கொண்டுவரப் படுகையில், வழக்கு நடைபெறும் நேரங்களில் அவர்கள் அங்கு நிற்பதா?

உட்காருவதா? என்பது குறித்து இந்திய நாட்டின் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக ஒரு வரைமுறையை வகுத்து உள்ளது. மத்தியப் பிரதேச மாநில அரசுக்கும். அவ்தார்சிங் உள்ளிட்ட மற்றவர்களுக்கும் இடையில் நடைபெற்ற சிறப்பு மேல்முறையீட்டு வழக்கில் இக்கேள்வி குறித்து உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்து இருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மாண்புமிகு ஓய்.வி. சந்திரசூட், நீதிபதி மாண்புமிகு டி.ஏ. தேசாய், நீதிபதி மாண்புமிகு அமரேந்திரநாத்சென் ஆகியோர் அமர்ந்த உச்சநீதிமன்ற ஆயம் 1981ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் நாள் அன்று மேலே குறிப்பிட்ட வழக்கில் தெரிவித்த கருத்துகள், 1982 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற வழக்குகள் அறிவிப்புப் புத்தகத்தின் 438ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. அவற்றை இங்கே நான் கூறுவது பொருத்தமானது என்பதால் தெரிவிக்க விரும்புகிறேன்.

விசாரணை நீதிமன்றங்களில் நடைபெறும்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள்உட்கார்ந்து இருக்க அனுமதிக்கப்பட வேண்டும்; சாட்சிகள் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை அடையாளம் காட்ட வேண்டிய கட்டம் போன்ற தேவைகளின்போது மட்டுமே அவர்கள் நிற்கவேண்டும்;

நீதிமன்றங்களில் நீதிபதிகள் நுழைகின்ற வேளைகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், எழுந்து நிற்கும் மரபு தொடரும்" என்றும் உச்சநீதி மன்றம் தெளிவுபடுத்தியது.

எனவே, உச்சநீதிமன்றம் இப்பிரச்சினை குறித்து மிகச்சரியாகத் தெளிவுபடுத்திய பின்னரும் இந்த நீதிமன்றத்தில் கடந்தமுறை நாங்கள் விவாதங்கள் முடியும்வரை நின்று கொண்டு இருக்க வேண்டும்" என்று மாண்புமிகு நீதிபதி அவர்கள் அறிவிக்க வேண்டியதன் காரணம் என்ன? என்பதனையும் - திடீரெனச் சூழ்நிலை மாற்றம் ஏன் என்பதனையும் என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை" என்றேன்.

உடனே மாண்புமிகு நீதிபதி அவர்கள் "நான் பாரபட்சமாக நடத்தவில்லை.

அன்றைய நாளில் (அக்டோபர் 28) அரசுக் குற்றவியல் வழக்கறிஞர் தனது வாதத்தைத் தொடங்கியபோது நீங்கள் அதனைச் செவிமடுக்க வேண்டும் என்பதற்காகவே எழுந்து நிற்கச் சொன்னேன். கொடூரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களைக் கூட நீதிமன்றத்தில் உட்கார அனுமதித்து இருக்கிறேன். அமெரிக்க நீதிமன்றத்தின் நடைமுறைகளையும் நன்கு அறிந்தவன் நான். இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ள கோட்பாட்டினையும் அறிவேன். கொஞ்சம் நினைவுபடுத்திப் பாருங்கள். உங்களை நிற்கச் சொன்னேன். பின்னர் உங்கள் வழக்கறிஞர் தேவதாஸ் அவர்களிடம் நீங்கள் உட்காரலாம் எனக் கூறினேன். நீங்கள் மறுத்துவிட்டீர்கள். (உண்மையில் 1% மணி நேரம் இருதரப்பு வாதங்கள் நடைபெற்று முடிவுற்ற பின்னரே. நீதிமன்றக் காவல் நீட்டிப்பு அறிவிக்கப்பட இருந்தபோதுதான் 'நாங்கள் உட்காரலாம் எனச் சொல்லப் பட்டது) என் முன்னால் நிற்பது யார் என்பதும் எனக்குத் தெரியும் அய்ந்து முறையும் நீதிமன்றத்தில் நான் உட்கார அனுமதித்தது 'சிறப்புச் சலுகையா?' என்று கேட்டீர்கள். நான் சிறப்புச் சலுகை எதுவும் தரவில்லை. இதில் தவறாக நீங்கள் புரிந்துகொண்டு இருப்பது வருந்தத்தக்கது. அம்மாதிரி எண்ணங்களை மாற்றிக் கொள்ளுங்கள்' என்று கூறிணர்கள்".

வழக்கு மன்றத்தில் தனக்கும் தோழர்களுக்கும் அநீதி இழைக்கப்பட்ட போது வெகுண்டு எழுந்து போராடி, அடிப்படை உரிமையை நிலைநாட்டினார் வைகோ.

No comments: