Thursday, March 17, 2011

நதி நீர் இணைப்பு - வைகோ நாடாளுமன்றத்தில் பேச்சு -2

கங்கை - காவிரி இணைப்பு!


இந்த அவையிலுள்ள மாண்புமிகு உறுப்பினர்கள் - குறிப்பாக திரு. சிவராஜ் பாட்டீல் போன்ற மூத்த உறுப்பினர்கள் - கங்கை - காவிரி இணைப்பு பற்றிய செய்தி, பத்திரிகைகளில் பெரிதும் அடிபட்டுவந்ததை நினைவிற் கொள்வர் என்று நம்புகிறேன். இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடந்தன; அரசியல் தலைவர்கள் உரையாற்றினார்கள்.

“கங்கை - காவிரி இணைப்பு மூலம் உணர்வு பூர்வமான ஒருமைப்பாடு உருவாகும்” என்று 1960களில் ஏறத்தாழ பத்தாண்டுக் காலம் இந்திய அரசின் அமைச்சராகத் திகழ்ந்தவரும், தலைசிறந்த பொறியியல் வல்லுநருமான டாக்டர் கே.எல். ராவ் கூறியது எனக்கு நினைவுக்கு வருகிறது. கங்கை - காவிரி கால்வாய் ஒருங்கிணைப்புத் திட்டத்தின் தந்தை என்று அவர் போற்றப்பட்டார். அவர் இதுபற்றி தீர்க்கமாக ஆய்வு செய்து தனது திட்டத்தை அளித்தார்.

இந்தத் திட்டத்தில், கங்கை நீரை இந்நாட்டின் தென்கோடி முனைவரைக் கொண்டு செல்ல முடியும் என்றும், அனைத்து ஆறுகளையும் இணைக்க முடியும் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால் என்ன நடந்தது? அந்தத் திட்டத்தை நிபுணர்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டனர். இத்திட்டத்தை நிறைவேற்றுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.

விந்தியமலைகளுக்கு அப்பால் நதிநீரைக் கொண்டு செல்லவேண்டும் என்றும், இதற்கு ஏராளமான மின்விசை தேவைப்படும் என்றும், இதற்கு ஏராளமான பணம் செலவாகும் என்றும் அவர்கள் காரணம் கூறினர். பல்லாயிரம் கோடி ரூபாய் செலவிடுவதைத் தாங்கமுடியாது என்றும் கூறினர். அவர்களது கருத்தையே அரசும் ஏற்றுக் கொண்டது. எனவே, இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

ஆனால், நீர்ப்பாசனத் துறை அமைச்சகம் - தற்போது நீர்வளத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய நீர்வள ஆணையம் இரண்டும் இணைந்து இப்போது டாக்டர் கே.எல். ராவ் வகுத்தளித்த அறிக்கையின் அடிப்படையில், நீர்வள ஆதாரங்கள் மேம்பாட்டுக்கான ஒரு தேசிய முன்னோக்குத் திட்டத்தை வகுத்துள்ளன.

நீர்வள ஆதாரங்களை உகந்த அளவில் பயன்படுத்திக் கொள்வதற்காக, உபரி வடிநிலங்களிலிருந்து நீர்ப்பற்றாக்குறையாகவுள்ள வடி நிலங்களுக்கு உபரி நீரை மாற்றுகிற வகையில் பல்வேறு தீபகற்ப நதிகளையும், இமாலய ஆறுகளையும் ஒன்றோடொன்று இணைக்கலாம் என்று இந்தத் திட்டம் கூறுகிறது. நீர்ச்சம நிலையை நிலைநாட்டுவதற்காகவும், பிற தேசியக் கண்ணோட்டத் திட்டங்களை ஆய்வு செய்வதற்காகவும் 1982 ஜூலையில் ‘தேசிய நீர் மேம்பாட்டு முகவாண்மை’ ( National Water Development Agency ) என்னும் ஒரு தன்னாட்சிக் கழகத்தை இந்திய அரசு நிறுவியது.

அவைத்தலைவர் அவர்களே! முந்தைய நீர்ப்பாசனத் துறை அமைச்சகமும் - தற்போது நீர்வளத்துறை அமைச்சகமும் - மத்திய நீர்வள ஆணையமும், நீர்வள ஆதாரங்கள் மேம்பாட்டுக்கான தேசிய முன்னோக்குத் திட்டத்தை வகுத்தபோது, அத்திட்டத்தில் இரு முக்கிய பகுதிகள் அடங்கியிருந்தன. இதில் முதலாவது, இமாலய நதிகள் மேம்பாடு; இரண்டாவது தீபகற்ப ஆறுகள் மேம்பாடு; அது இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. தீபகற்ப நதிகளையும், இமாலய நதிகளையும் இணைப்பதற்கான திட்டத்தை வகுப்பதற்காக இந்திய அரசு, ஒரு தேசிய நீர்மேம்பாட்டு முகவாண்மையையும், தீபகற்ப மேம்பாட்டு முகவாண்மையையும் நிறுவியது.

இது மிக முக்கியமானதாகும். முதலில், இமாலய ஆறுகளின் மேம்பாடும், இரண்டாவதாக, தீபகற்ப நதிகள் மேம்பாடும், பின்னர் இந்த இமாலய ஆறுகளையும், தீபகற்ப ஆறுகளையும் இணைப்பதும் எடுத்துக் கொள்ளப்படும். 1982இல் தேசிய நீர் மேம்பாட்டு முகவாண்மையை இந்திய அரசு அமைத்தது.

தீபகற்ப ஆறுகள் திட்டம்!

ஐயா! இப்போதைய ஆணைக் கட்டளையின்படி, இந்த இணைப்புகள் பற்றிய செயலாக்கச் சாத்திய அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். இதற்கென, ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் உரிய வகைமுறை செய்யப்பட்டுள்ளது. நான், ‘தீபகற்ப ஆறுகள் திட்டம், இமாலய ஆறுகள் திட்டம்’ஆகிய இரு திட்டங்களைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். தீபகற்ப ஆறுகள் திட்டத்தில்தான் நான் முக்கியமாக அக்கறை கொண்டிருக்கிறேன். ஏனென்றால், இது மகாநதி, கோதாவரி போன்ற அனைத்து ஆறுகளையும் காவிரியுடன் இணைப்பதற்கு வழி செய்கிறது.

மாநிலங்களிடையிலான நதிநீர்ப் பூசல்கள் - அதாவது, பஞ்சாப், அரியாணா, இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கிடையிலான ரவி - பியாஸ் நீர்ப் பூசல்; தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கிடையிலான காவிரி நீர்ப்பூசல் - 1956ஆம் ஆண்டு மாநிலங்களிடை நீர்ப்பூசல்கள் சட்டத்தின் கீழ் நடுவர் தீர்ப்புக்காக அனுப்பப்பட்டுள்ளன.

தலைவர் : இப்போது, அரைமணிநேர விவாதத்தை எடுத்துக் கொள்வோம்.

திரு. வைகோ அவர்களே! உங்கள் உரையை அடுத்த முறை தொடரலாம்.

திரு. வைகோ : அவைத்தலைவரின் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

No comments: