Thursday, March 17, 2011

நதி நீர் இணைப்பு மசோதா - வைகோ நாடாளுமன்றத்தில் பேச்சு -6

வைகோவின் உரையும் வரவேற்பும்

திரு. வைகோ : ஐயா! அதுதான் முதற்படி. ஏறத்தாழ அனைத்து உறுப்பினர்களுமே இந்த மசோதாவை ஆதரித்திருக்கிறார்கள். பஞ்சாப் போன்ற சில மாநிலங்களுக்கு உளமார்ந்த பயமும், கவலையும் உள்ளன.


ஆனால் எதிர்வரும் ஆண்டுகளில், அவர்களும் இதனை ஏற்றுக் கொள்ளும் ஒரு நாள் வரும். ஒருநாள் அரசாங்கமும், இந்த நாடாளுமன்றமும் மாநிலங்களிலே ஓடும் நதிகளை நாட்டுடைமையாக்கும் மசோதாவை நிறைவேற்றுவதை நான் பார்ப்பேன் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.

எனவே, இந்த விவாதத்தில் பங்கு கொண்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நதிநீரை மாநிலங்களிடையே சரி சமமாகப் பகிர்ந்தளிப்பதற்கான நோக்கத்துக்கும், அதனுடன் தொடர்புடைய அல்லது அதற்கு இடைவிளைவான பொருட்பாடுகளுக்கும், மாநிலங்களிடையே ஓடும் ஆறுகளை நாட்டுடைமையாக்குவதற்கும் வகை செய்வதற்கான இந்த மசோதாவின்மீது உரையாற்றிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு எனது உரையை நிறைவு செய்கிறேன்.

(2000 ஆகஸ்ட் 11 அன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் )

மக்களவையில்

வைகோவின் உரையும் - வரவேற்பும்

மாநிலங்களிடையே ஓடுகின்ற நதிகளை நாட்டுடைமையாக்கக் கோரி கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா தாக்கல் செய்திருந்தார். 2000ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் தேதியன்று இந்த மசோதா மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதற்குப் பின்னர் ஜூலை 28-ஆம் தேதி விவாதம் தொடர்ந்தது. ஆகஸ்ட் 11-ஆம் நாள் நிறைவு பெற்றது. இந்த விவாதத்தில் வைகோ பேசும்பொழுது நதிநீர் நாட்டுடைமையாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.

உலக நாடுகள் முழுவதிலும் நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகளையும் அவை தீர்க்கப்பட்ட விதங்களையும் தமது உரையில் எடுத்துக் கூறினார். இந்தியாவில் மாநிலங்களுக்கிடையே ஓடுகின்ற நதிகளின் நீர்ப் பங்கீடு தொடர்பாக நிலவி வருகின்ற பல்வேறு பிரச்சினைகளையும், கங்கை - காவிரி இணைப்பின் முதல் கட்டமாக தென்னக நதிகளை இணைக்க வேண்டுமென்றும், கேரள மாநிலத்தில் மேற்கு நோக்கிப் பாய்ந்து கடலில் வீணாகும் நதிகளின் உபரி நீரைத் தமிழகத்துக்குத் திருப்பிவிட வேண்டுமென்றும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டுமென்றும் தம்முடைய உரையில் கேட்டுக் கொண்டார். மக்களவையின் மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் இந்த மசோதாவை ஆதரிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். ஏறத்தாழ ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல் வைகோ உரையாற்றினார்.

இந்த மசோதாவின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணி சங்கர் அய்யர் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட்ட மசோதாக்களிலேயே சிறந்த மசோதா இது என்று குறிப்பிட்டார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.சி. ஜோஸ் கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாய்ந்து கடலில் வீணாகும் நதிகளின் உபரி நீரைத் தமிழகத்துக்குத் திருப்பிவிட வேண்டுமென்ற திட்டத்தை ஆதரித்துப் பேசினார். அதற்காக வைகோ அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் மசோதாவை ஆதரித்துப் பேசினார்.

பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த கர்பேலா ஸ்வெய்ன், டாக்டர் சுசீல்குமார் இந்தேரா, கிரிதாரிலால் பார்கவா, விஜேந்திரபால் சிங், அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகத்தைச் சேர்ந்த பி.எச். பாண்டியன், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஹரிசங்கர் மகாலே, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டாக்டர் நிதிக்ஷ் சென் குப்தா ஆகியோர் இந்த மசோதாவினை ஆதரித்துப் பேசினர்.

அகாலிதளம் (மான்) கட்சியைச் சேர்ந்த சிம்ரஞ்சித் சிங்மான் எதிர்த்துப் பேசினார். மசோதாவுக்குப் பதிலளித்துப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் அர்ஜ&ன் சேத்தி உறுப்பினர் வைகோவின் இந்த மசோதா வரவேற்கத்தக்கதாகும். மிகச் சிறந்த கருத்துகளை உள்ளடக்கியிருக்கின்றது. இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் பல மாநிலங்கள் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் இல்லை. பல பிரச்சினைகள் உருவாகும். ஆனால், நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு சட்டமியற்றும் - அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டார்.

அமைச்சரின் பதிலுரையைத் தொடர்ந்து பேசிய வைகோ, இரண்டு உறுப்பினர்களைத் தவிர இந்த மசோதாவில் பேசிய மற்ற அனைவருமே ஆதரித்துப் பேசினார்கள். இயற்கை வளங்களையும், செல்வங்களையும் முழுமையாகப் பயன்படுத்தி மொத்த இந்தியாவையும் வளப்படுத்த வேண்டுமென்பதே இந்த மசோதாவின் நோக்கமாகும். கங்கை - காவிரி இணைப்பு தற்போது சாத்தியமில்லாவிட்டாலும், மகாநதி, கோதாவரி ஆகியவற்றின் உபரி நீரை தாமிரபரணி - வைப்பாறு வரை கொண்டு போய் இணைக்க வேண்டும்.

100 கோடி இந்திய மக்களுக்கும் மாநிலங்களிடையே ஓடுகின்ற நதிகள் தேசியமயமாக்கப்படவேண்டும். “கங்கை நதிப்புரத்துக் கோதுமைப்பண்டம்; காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்” என்ற மகாகவி பாரதியின் கனவுகள் நனவாகிட ஒரே வழி நதிகளைத் தேசியமயமாக்குவதுதான். என் கருத்துகளில் பெரும்பாலானவற்றை அரசு ஏற்றுக் கொண்டாலும், சில மாநிலங்களில் பிரச்சினைகள் உருவாகலாம் என்பதால் இந்த மசோதாவைத் தற்போது அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால், எதிர்காலத்தில் இந்த மசோதாவை மத்திய அரசாங்கமே கொண்டு வந்து, அதை அனைத்துக் கட்சியினரும் ஏற்றுக் கொண்டு சட்டமாக்குகின்ற நாள் நிச்சயம் வரும். நான் எதிர்காலத்தையும் வருங்காலத் தலைமுறையையும் எண்ணியே இந்த மசோதாவைக் கொண்டு வந்தேன் என்று குறிப்பிட்டார்.

No comments: