Friday, October 17, 2014

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை – 4

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை – 4

யாழ்ப்பாணத் தமிழறிஞர் .சி.கந்தையா பிள்ளையின் ஆய்வு:

.சி.கந்தையா பிள்ளை அவர்கள் தமது திராவிடமென்றால் என்ன என்ற நூலில்,
மொழி தொடர்பாகவே திராவிடம் என்னும் பெயரை உலகம் அறிந்துள்ளது. திராவிடம் என்னும் இனத்தில் முன்பின் இருபது மொழிகள் அடங்கும். அவைகளுள் நான்கு மொழிகள் தமது பழைய இலக்கியங்களைக் குறித்துப் பெருமை கொள்ள முடியும். இவைகளுள் தமிழ் மொழியில் மாத்திரம் இந்தியாவின் எல்லையையும் கடந்து சென்றுள்ள குறள் போன்ற பழைய இலக்கியங்கள் உள்ளன. திராவிடம் என்னும் பெயர் எங்கு நின்று வந்தது? அதன் ஆதிப் பொருள் யாது?
இப்பெயர் முதல் முதல் குமாரிலபட்டர் காலத்தில் (கி.பி.7 அல்லது 8 ஆம் நூற்றாண்டு) திராவிட நூல் வழக்கில் காணப்படுகிறது. அவர் தென்னிந்தியாவின் கிழக்குக் கரையில் வழங்கும் தெலுங்கு, தமிழ் மொழிகளைக் குறிக்க ஆந்திர திராவிட பாஷா எனக் குறிப்பிட்டுள்ளார். ஆந்திர, திராவிட என்னும் சொற்களின் பொருளை அறிவதற்கு இந்தியாவின் தெற்கே வழங்கும் கன்னடம், மலையாளம் என்னும் பெயர்ப் பொருள்களைப் பற்றியும் நாம் ஆராய்தல் வேண்டும். இவ்விரண்டு பெயர்களும் இட சம்பந்தமாக வழங்கப்பட்டுள்ளன. கனரா, கன்னடா அல்லது கர்நாடக என வழங்கும் பெயர் கர்நாட அல்லது கர்நாடக என்று பிரிகற் சம்கிதையில் எழுதப்பட்டுள்ளது. இப்பெயர் பஞ்சு விளைவதும் தேக்குச் செழித்து வளர்வதுமாகிய கரிய பூமியைக் குறிக்கின்றது. மலையாளம் என்பதற்கு மலைநாடு எனப் பொருள் கொள்ளுதல் வேண்டும். மலையம் என்பது மலையைக் குறிக்கின்றது. ஆகவே கன்னடம், மலையாளம் என்னும் பெயர்கள் இடங்களைக் குறிக்க வழங்கிய பெயர்கள் என்றும் அவை வட மொழிப் பெயர்கள் அல்ல என்றும் விளங்கும். இதனால் முற்கால மக்கள் திராவிடம் என்னும் பெயரையும் அவ்வகையில் பயன்படுத்தினார்கள் என்பது தெளிவாகின்றது.
.சி.கந்தையா பிள்ளை தொடருகிறார்....
"அசோகரின் கல்வெட்டுகளுக்கு முற்பட்ட ஐதரேயப் பிராமணத்தில் ஆந்திரம் என்னும் சொல் தெலுங்கு நாட்டையும் தெலுங்கு மொழியையும் குறிக்க வழங்கப்பட்டுள்ளது. இலக்கிய கால ஆசிரியராகிய பிளினி அதனை ஆந்திரே எனக் குறிப்பிட்டுள்ளார். குமாரிலபட்டர் ஆந்திர மொழியைத் தெற்கே உள்ள தமிழோடு தொடர்புபடுத்தியுள்ளார். தமிழர் தெலுங்கர் என்பதை தெலிங்கர் என்றும், அவர்களின் மொழியைத் தெலுங்கு அல்லது தெலுங்கம் என்றும் வழங்கினர். தெலுங்கம் என்னும் பெயர் வேளாண்மை தொடர்பாக உண்டானது. தெல் அல்லது தெல்லு நீண்ட சதுரமானதும் நாற்புறமும் வரம்புடையதுமாகிய சிறிய வயல் நிலத்தைக் குறிக்கும். தெலுங்கம் என்பது சென்னைக்கும் ஒரிசாவுக்கும் இடையே உள்ள மக்களையும் மொழியையும் குறிக்கவும் வழங்கும்.
அசோகப் பட்டையங்களில் கலிங்கம் என்னும் பெயர் நாட்டையும் மலை நாட்டையும் குறிக்க வழங்கப்பட்டுள்ளது. கல் என்பது கல்லையும் மலையையும் குன்றையும் குறிக்கும். கலிங்கு, கலுங்கு, கலிங்கல் முதலிய சேரி வழக்குச் சொற்கள் நீர்மடையையும் குறிக்கும். கலிங்க நாட்டின் கடற்கரையிலுள்ள ஒரு பட்டினத்துக்குக் கலிங்கப்பட்டினமென்று பெயர். கஞ்சம் மாகாணத்திலுள்ள மலைத் தொடருக்குக் கலிங்க மலைத் தொடர் என்று பெயர். இதனால் ஆந்திரா என்னும் பெயரும் இடத் தொடர்பாக வழங்கப் பட்டதெனக் கொள்ளுதல் தவறாக மாட்டாது. கலிங்கப் பட்டினத்துக்கு மேற்கே 58 கல் தொலைவில் ஆந்திரா என்னும் தெலுங்கு இடம் ஒன்று உள்ளது. இது முற்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய ஓர் இடமாகலாம்.
தெலுங்கு அல்லது கலிங்க நாட்டின் மலைப்பகுதிகளாகிய ஒரிசா மலை களிலிருந்து கிழக்குத் தொடர்ச்சி மலை எட்டும் வரையில் -கோதாவரி ஆற்றிடைக்குறை முதல் தெற்கே கன்னியாகுமரி வரையில் - தட்டையான சமபூமி காணப்படுகிறது. இவ்விடங்கள் கரைப்போக்கு என்னும் பொரு ளில் திராவிடம் என்னும் பெயரால் அறியப்பட்டது. கடற்கரையை ஆள்பவன் திரையன் எனப்பட்டான். இடம் என்பது தெலுங்கில் எடா, எடாமு என வழங்கும். இவை இடைவெளி, பரப்பு, இருக்குமிடம் போன்றவைகளைக் குறிக்கும். திரா-விட (ம்) என்பது மயிலென்பதிலிருந்து தோன்றிய மயிலாபுரி தீவைக் குறிக்கும். இலங்கை என்பதிலிருந்து தோன்றிய இலங்காபுரி என்னும் பெயர்களை ஞாபகப்படுத்துகிறது.
குமாரிலபட்டர் திராவிட என வழங்கியது தமிழ் வழக்கில் திராவிடம் என்று ஆயிற்று. இப்பெயர் தொடக்கத்தில் தமிழரின் நாட்டுக்கும் மொழிக்கும் பெயராய் வழங்கிப் பின் அம்மொழியோடு சம்பந்தப்பட்ட மக்களையும் உணர்த்துவதாயிற்று. தமிழ் சம்பந்தமான மொழி மகராட்டிரம், கூர்ச்சரம் முதலிய நாடுகளில் இன்றும் பேசப்படுகின்றது. அவ்விடங்களுக்குத் தமிழரின் ஒரு பிரிவினர் சென்றிருக்கலாம்.
ஒரிசா மலைகளிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரையிலான தட்டையான சமபூமி என்ற பகுதி கரைப்போக்கு என்னும் பொருளில் திராவிடம் என்னும் பெயரால் அறியப்பட்டது. கடற்கரையை ஆள்பவன் திரையன் எனப்பட்டான். திராவிட என்பது மயிலென்பதிலிருந்து தோன்றிய மயிலாபுரியைக் குறிக்கிறது"
என்றெல்லாம் .சி.கந்தையா பிள்ளை ஆய்வு நோக்கில் கூறிவிட்டார்.
தமிழ் என்ற சொல் எவ்வாறு தமிள என்று ஆயிற்று என்பதையும் திரமிட என்று மாறியதையும் விளக்குவதற்கு அடிப்படையாக ழகரம் என்பதைப் பற்றி தமிழறிஞர் .சி.கந்தையா பிள்ளை பின்வருமாறு கூறுகிறார்:
"ழகரத்துக்குப் பதில் ளகரம் வழங்கியதை நாம் ஆரிய நூல்களில் பார்க்கலாம். சுவேதாம்பரரின் சைன நூல்களிலும், மகாவம்சம் என்னும் இலங்கைப்பாலி நூலிலும் தமிள என்னும் உச்சரிப்புக் காணப்படுகிறது. தமிழன் என்பதன் பன்மை தமிழர். தமிழப் பிள்ளை, தமிழக் கூத்தன் என்னும் கூட்டுச் சொற்களில் தமிழ என்னும் வழக்குக் காணப்படுகிறது. இதனால் ஆரியருக்கு முன்பு தமிழ் என்பதும் நாட்டுக்கே பெயராக வழங்கியதெனத் தெரிகின்றது.
புதிதாக வந்த ஆரியர் திராவிட, தமிழ் என்னும் சொற்களை கையாண்ட முறையினால் அவை ஒரே உற்பத்திக்குரியனவென்று சந்தேகிக்க வேண்டியதாயிற்று. சமக்கிருத நாடகங்களில் (சைனர் பிராகிருதத்தில் எழுதிய நாடகங்களில்) தாவிள என்றும், வராகமிகிரரின் சில கையயழுத்து நூல்களில் (கி.பி.6 ஆம் நூற்றாண்டு) திரமிட(ம்) என்றும், கி.பி. 6 ஆம் நூற்றாண்டுப் பட்டையங்கள் சில வற்றில் திராமிட மென்றும் சொற்கள் காணப்படுகின்றன. புத்த சமயம் சம்பந்தமாகவும் புராணங்கள் சம்பந்தமாகவும் உள்ள பழைய மலையாள மொழி பெயர்ப்புகளிலும் இவ்வாறே காணப்படுகின்றது. இதுவரையும் கூறியவைகளால் தமிழ், திராவிடம் என்னும் சொற்கள் வெவ்வேறு உற்பத்திக்குரியனவென்றும், திராவிடம், தமிழ் என்னும் சொற்கள் பிறமொழிக்குரியவர்களால் கொச்சையாக உச்சரிக்கப்பட்டு வந்தமையின் இரு சொற்களும் ஒரே உற்பத்தியைச் சேர்ந்தனவோ என்னும் மயக்கமும் ஐயப்பாடும் எழுவதாயின வென்றும் புலனாகின்றன"
என்றும் நடுநிலையில் நின்று ஆய்வு செய்திருக்கிறார்.
இந்திய நாடு முழுமையிலும் வாழ்ந்த மக்கள் திராவிடர் என்று கூறி அதிர வைக்கிறார் .சி.கந்தையா பிள்ளை அவர்கள். அவர் தனது திராவிட இந்தியா என்னும் நூலில்,
"சிந்துவெளி நாகரிக காலத்தில் இந்தியா முழுமையிலும் ஒரே மொழியை வழங்கிய ஒரே இன மக்கள் வாழ்ந்தார்கள். அம்மக்கள் திராவிடர் எனப்படுவர். ஆரிய மக்கள் கி.மு. இரண்டாயிரத்தில் அல்லது அதற்குப்பின் இந்திய நாட்டை அடைந்தார்கள். அக்காலத்தில் வடநாடு முழுமையிலும் திராவிட மொழி வழங்கியதென்பதற்குச் சான்று ஆரிய மக்களின் பழைய பாடல்களாகிய வேதங்களில் திராவிடச் செற்கள் பல இருப்பதும் பிறவுமென ஆராய்ச்சியாளர் நன்கு ஆய்ந்து நிறுவியுள்ளார்கள். ஆரியர் வருகைக்கு பின்பே இந்திய நாட்டில் வெவ்வேறு இன மக்கட் கலப்பும் மொழிக் கலப்பும் உண்டாயிற்று. கி.மு. இரண்டாயிரத்தில் வடக்கே இமயத்துக்கும் தெற்கே குமரிக்கும் இடைப்பட்ட பெரு நிலப்பரப்பு திராவிட நாடாக விளங்கிற்றெனத் தெள்ளிதில் அறியக் கிடக்கின்றது.
புதிய மக்களுக்கும் வடக்கே வாழ்ந்து கொண்டிருந்த திராவிட மக்களுக்குமிடையில் போர்கள் நிகழ்ந்தன. ஆரியருடைய வேதப் பாடல்களால் அக்காலத்தில் திராவிடர் உயர்ந்த நாகரிகம் பெற்று விளங்கினார்கள் எனத் தெரிகின்றது. நாகரிகத்தில் உயர்நிலை அடைந்திருந்த திராவிடரை வெல்வது ஆரிய மக்களுக்கு இயலாததாக விருந்தது. நாளடைவில் இரு சாதியாருக் கிடையில் திருமணக் கலப்புகளால் தொடர்புகள் உண்டாயின. திராவிடப் பெண்களை ஆரிய ஆடவரும் ஆரியப் பெண்களைத் திராவிட ஆடவரும் மணந்தனர். திராவிடருடைய சமூகம் தாயாட்சி முறையினது. ஆரியருடைய சமூகம் தந்தை ஆட்சி முறையினது.... இவ்வகையான கலப்புப் பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்தது. விந்திய மலைக்கு வடக்கே உள்ள மக்கள் தம்மை ஆரியர் எனக் கூறிக் கொள்வராயினர். ஆனால் அவர்களிடத்தில் ஆரியக் குலத்தினருக்குரிய குணங்குறிகள் மிகச் சிறிதே காணப்பட்டன.
மக்களிடை கலப்பு உண்டான போது மொழிகளும் கொள்கைகளும் கலப்பவாயின. திராவிட மொழிச் சொற்கள் பல திரித்து வழங்கப்பட்டன.
.... பாரசீகர் வடநாட்டின் சில பகுதிகளை வென்று சில காலம் ஆட்சி நடத்தினார்கள். பின்பு கிரேக்கர் படைஎடுப்பு நேர்ந்தது. பின்பு சித்தியர், மங்கோலியர், அவுணர் முதலிய பல சாதியினர் வடநாட்டின் மீது படையயடுத்து வந்து நாட்டில் சிற்சில பகுதிகளிற் குடியேறி இந்திய மக்களோடு கலந்தார்கள். இதனால் அலக்சாந்தர் படையயடுப்புக் காலம் முதல் மேலும் மக்கட் கலப்பும் மொழிக் கலப்பும் இந்திய நாட்டில் உண்டாயின."
திராவிடர் என்ற இனம் இல்லை; திராவிடம் என்பது மாயை என்பதையெல்லாம் தவிடுபொடியாக்கிய .சி.கந்தையா பிள்ளை அவர்கள் திராவிட நாகரிகத்தின் தொன்மையையும் பின்வருமாறு விளக்குகிறார்.
"திராவிட மக்களின் மிகப் பழைய நாகரிகத்தைப் பற்றி மொகஞ்சதரோ, அரப்பா, சங்குதரோ முதலிய அழிபாட்டு மேடுகளிற் கண்டுபிடிக்கப்பட்ட பழம் பொருள்கள் வெளியிடுகின்றன. அரப்பா மொகஞ்சதரோ முதலிய நகரங்களில் திராவிட மக்கள் வாழ்ந்தார்கள். அக்காலத்தில் அவர்கள் எகிப்தியர், பாபிலோனியர்களை ஒத்த அல்லது அவர்களிலும் உயர்ந்த நாகரிகமுடையவர்களாக வாழ்ந்தார்கள். அக்காலத்தில் இரும்பு பயன்படுத்தப் படவில்லை. நகரங்கள் அமைக்கப் பட்டிருந்தன. வீடுகள் செங்கற்களால் கட்டப்பட்டன. அவைகளுக்கு மாடிகளும் மாடிகளுக்குச் செல்லப் படிக்கட்டுகளுமிருந்தன.... ஒவ்வொரு வீட்டுக்கும் கிணறும் குளிக்கு மறையும் இருந்தன. கழிவு நீர், கால்வாய்கள் வழியாக வீதியிலுள்ள பெரிய கால்வாயில் விழுந்தது. கால்வாய்களில் செங்கற் பதிக்கப் பட்டிருந்தன."
திராவிட மக்களின் நாகரிகச் சிறப்பை .சி.கந்தையா பிள்ளை விளக்கியவுடன் தோழர் பெ.மணியரசன் அவர்களுக்கும் பேராசிரியர் செயராமன் அவர்களுக்கும் கண்ணைக் கட்டுகிறது. எனினும் பேராசிரியர் செயராமன் அவர்கள், தொன்மங்கள் (புராணங்கள்) மிகைப்படுத்தப்பட்டவையாகவும், கட்டுக்கதைகள் நிரம்பியவை யாகவும் இருக்கக் கூடியவை. ஆனால் அவற்றுள் சில வரலாற்றுச் செய்திகள் உள்ளீடாக இருக்கும் என்று கூறிவிட்டு, திராவிட என்ற சொல் மகாபாரதத்தில் வருகிறது என்றும் அது தென்னகப் பகுதியைக் குறிக்கிறது என்றும் சுவர் எழுப்புகிறார். இதற்கு .சி. கந்தையா பிள்ளை அவர்கள்,
"திராவிட மக்களைப் பற்றிய சில குறிப்புகள் வேதங்களிற் காணப்படுகின்றன. பாரதம், இராமாயணம் என்னும் நூல்களில் தென்னாட்டு அரசர்களைப் பற்றியும் தென்னாட்டைப் பற்றியும் சில குறிப்புகள் காணப்படுகின்றன. அந்நூல்கள் காலத்துக்குக் காலம் எழுதிச் சேர்க்கப் பட்டனவாதலின் அவைகளிற் கூறப்படுவன சிறந்த வரலாற்றுச் சான்று களாக மாட்டா. மாபாரதத்தையும் இராமாயணத்தையும் நாம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டைய நூல்கள் எனக் கொள்ளலாம். அந்நூல்களின் எப் பகுதி எக் காலத்தில் செய்யப்பட்டது என்னும் ஐயப்பாடும் உண்டாகின்றது. அவைகளில் கூறப் படும் இந்திய நாட்டின் பிரிவுகள் கி.மு.நாலாம் நூற்றாண்டு வரையில் உறுதியாக அமைந்திருந்தன வென்று கொள்ள லாம். சாதகக் கதைகள் பதினாறு இராச்சியங்களையும் வேறு சில நாடுகளையும் பற்றிக் கூறுகின்றன. அவைகளை எல்லாம் இந்தியப் படமொன்றில் ஒழுங்குப்பட வைத்துப் பார்த்தால் மிகத் தெற்கே உள்ள நாடு கோதாவரிக்குத் தெற்கே போக வில்லை. பழைய பெளத்த இலக்கியங்கள் விந்தியத்திற்குக் கீழே உள்ள நாடுகளைப் பற்றி அறியா.
பாணினிக்குத் தென்னாட்டைப் பற்றி தெரியாது....பாணினிக்கு இரண்டு நூற்றாண்டுகளின் பின் விளங்கிய கார்த்தியாயனர் தென்னாட்டைப் பற்றி அறிந்திருந்தார். பதஞ்சலி காலத்தில் தென்னாடு நன்றாக அறியப் பட்டிருந்தது. பதஞ்சலியின் காலம் கி.மு. 150. கார்த்தியாயனரின் காலம் கி.மு.350. பண்டாக்கரது கொள்கையின்படி பாணினி கி.மு.7 ஆம் நூற்றாண்டில் விளங்கினார். அக் காலத்தில் வட நாட்டவரால் தென்னாடு சிறிதும் அறியப் படாதிருந்தது. மெகஸ்தீனஸ் காலத்தில் தென்னிந் தியாவைப் பற்றி வட நாட்டவர் சிறிது அறிந்திருந்தார்கள். சாணக்கியரின் அர்த்த சாத்திரத்தில் தென்னாட்டைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அசோகரின் கல்வெட்டுகளில் சேர சோழ பாண்டியர் நாடுகள் குறிக்கப் பட்டுள்ளன"
என்று விவரிக்கிறார்.
பெரியார் மூடநம்பிக்கைகளை எதிர்த்து போராடினார் என்றால், அவருக்கு முன்பே பண்டிதர் அயோத்திதாசர் மூடநம்பிக்கைகளை தோலுரித்துள்ளார் என்றும், தமிழ்நாடு தமிழருக்கே கோரிக்கையை பெரியார் எழுப்பினார் என்றால் அதற்கு முன்பே நாவலர் சோமசுந்தர பாரதியார் தான் தமிழ்நாடு பிரிவினை கோரிக்கையை எழுப்பினார் என்றும் குறுக்கு சால் ஓட்டும் போலித் தமிழ்த் தேசியவாதிகள், திராவிடர் என்ற அடையாளக் குறியீட்டுச் சொல் பழைய இலக்கியங்களிலும், தமிழறிஞர்களும் பண்டிதர் அயோத்திதாசர் போன்ற சமூகப் போராளிகளும் பயன்படுத்தியுள்ளனர்; அதை தான் பெரியார் வலிமையாக்கினார் என்று கூற மறுக்கின்றனர்.
திராவிடர் என்று ஓர் இனம் வரலாற்றில் இருந்ததில்லை என்ற தோழர் பெ.மணியரசன் அவர்களுக்கு மறைமலையடிகளும் .சி.கந்தையா பிள்ளை அவர்களும் விரிவாக அறிவியல் முறைப்படியும் வரலாற்றுச் சான்று அடிப்படையிலும் விளக்கம் கூறியுள்ளனர்.

(தொடரும்)

No comments: