Thursday, November 28, 2019

பெரியாரின் மொழியியல் பார்வை குறித்து பெரியார் பார்வை இதழாசிரியர் கவி ஆற்றிய உரை

திருவாரூர் பவுத்திரமாணிக்கம் தெ.வெற்றிச்செல்வன் அவர்களின் வீட்டில் 29.4.2007 அன்று நடந்த பெரியாரியம் குறித்த முக்கூடல் நிகழ்ச்சியில் பெரியாரின் மொழியியல் பார்வை குறித்து பெரியார் பார்வை இதழாசிரியர் கவி ஆற்றிய உரையிலிருந்து...

அனைவருக்கும் வணக்கம். முதலில் முக்கூடல் நிகழ்ச்சியில் என்னை பேக அழைத்த திரு. வெற்றிச்செல்வன் அண்ணன் அவர்களுக்கு எனது நன்றி.
நான் எழுதிய பெரியாரின் மொழிக்கொள்கை அறிவுபூர்வமானது என்ற நூலைப்பற்றி ஒரு விமர்சனக் கூட்டம் வையுங்கள் என்று திரு. வெற்றிச்செல்வன் அவர்களிடம் கூறினேன். அவரும் 10 படிகளை காசு கொடுத்து பெற்றுச் சென்றார். கடைசியில் என்னையே பெரியாரின் மொழியியல் பற்றிப் பேசச் சொல்லிவிட்டார். எனக்கு மேடை பேச்சு அவ்வளவாக வராது. எனது நான் அமர்ந்து கொண்டே பேச அனுமதி வேண்டுகிறேன். (திரு. பொதியவெற்பன் அவர்கள், பெரியார் மாதிரி பேசுங்கள். உட்கார்ந்து கொண்டே பேசுங்கள் என்றார்).

என்னுடைய பெயர் க.விநாயகம். கவி என்று சுருக்கமாக வைத்துக் கொண்டேன். முதலில் இந்திய இலங்கை உடன்பாடு ஏற்பட்ட போது துக்ளக், தினமணி இதழ்களில் வந்த செய்திகளை மறுத்து ஒரு நூல் எழுதினேன். அதன் பிறகு காவிரிச் சிக்கலை மையமாக வைத்து மற்றொரு நூலை எழுதினேன்.
சென்னை பல்கலைக்கழக திராவிட மொழி ஆய்வுக் கருத்தரங்கில் பார்வையாளராக கலந்து கொண்ட போது பாரதிதாசன் திருக்குறளுக்கு உரை எழுதிய சேதி தெரிந்தது. அந்நூலைத் தேடி அலைந்தேன். அதைப்படித்தவுடன்  அந்நூலைச் சுருக்கி சிறிய வடிவில் அச்சிட்டு எனது திருமணத்தன்று அளித்தேன். அதே போல்  வ.உ.சி திருக்குறளுக்கு உரை எழுதிய விவரமும் அறிந்தேன். அந்நூலையும் தேடினேன். திருநெல்வேலி சைவ சித்தாந்த பதிப்பகத்தில் அந்நூலைக் கிடைக்கப்பெற்றேன். அதையும் சுருக்கி சிறு நூலாக வெளியிட்டேன்.

புதுச்சேரியில் பணியாற்றிய போது பல தமிழறிஞர்களின் தொடர்பு கிடைத்தது.  பெரியார் பற்றி ஏதாவது சொன்னால் போது ஏதாவது சொல்லி ஒரு கொட்டு கொட்டுவார்கள். அதற்காவே நான் பெரியார் பார்வை என்ற பெயரில் இதழ் தொடங்கினேன். கடந்த ஏழு வருடமாக நடத்தி வருகிறேன். இதுவரை 42 இதழ்கள் நடத்தியுள்ளேன். டாடாஸ் ரவி, செந்தில் மற்றும் கலைச்செல்வன் போன்றவர்கள் நிதி உதவி அளித்துள்ளார்கள்.  சரி. இப்போது பெரியார் மொழிப் பார்வை பற்றி பேசுவோம். எதிரே ஜீவி இருக்கிறார். எப்போதும் என்னை வேறு பார்வையோடு பார்ப்பவர் . இங்கே இருப்பவர்களில் பெரும்பாலனவர்கள் இடது சாரி சிந்தனைக் கொண்டவர்கள். அறிஞர்கள். உங்கள் முன்னிலையில் எச்சரிக்கையோடு பேசுகிறேன்.

மொழி என்றால் என்ன?  கருத்துக்களை பரிமாறக் கொள்ளப்பயன்படும் ஒரு கருவி. இது எல்லோரும் சொல்கிற ஒரு சேதி. கருவி என்றால் என்ன? ஆயுதமா? அரிவாளா? துப்பாக்கியா? இதற்கு விடையாக பெரியார் இத்துடன் கூடுதலாக ஒன்றைச் சொல்கிறார். மொழி என்பது சப்தம் (ஒலி) என்கிறார். விலங்குகளும் ஒலியை எழுப்புகின்றன. அது ஒலிக்குறிப்பு என்கிறார். அதற்கு உதாரணம் தருகிறார், கோழி தன் குஞ்சுக்கு கருடன், கழுகு போன்றவைகளால் ஆபத்து வரும் போது ஒரு வகையா ஒலியை எழுப்புமாம். உடனே கோழிக்குஞ்சுகள் தாய்க்கோழியிடம் தஞ்சமடைகின்றன என்கிறார். இங்க பெரியார் மற்றவர்களைப் போல் நூல்களில் படித்திருக்கிறேன் என்று சொல்லவில்லை. நான் நேரில் பார்த்திருக்கிறேன் என்கிறார்.

இன்னொன்றையும் கூறுகிறார். குரங்கு, தன் குட்டி குரங்கை அழைக்கும் போது பற்களைக் காட்டி, மேல் உதட்டையும் கீழ் உதட்டையும்  சேர்த்து ஏதோ முணுமுணுப்பது போல் செய்யும். உடனே குட்டி குரங்கு தாய்குரங்குடன் வந்து சேரும் என்கிறார் பெரியார். அடுத்து காக்காவுக்கு சோறு வைத்தால் எல்லா காகங்களையும் கூப்பிட்டு தானும் உண்ணும் என்று சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் பெரியார் சொல்கிறார், அந்த காகம் அந்த சோற்றை உண்டு பார்த்து, அதனால் ஆபத்தில்லை என்றவுடன் மற்ற காகங்களை கூவி அழைக்கிறது என்கிறார் பெரியார்.
மொழி என்றால் சப்தம் என்று கூறிய பின், பல மொழி எப்படி ஏற்பட்டது? என்ற கேள்விக்கும் பெரியார் விடை கூறுகிறார். மக்களிடையே போக்குவரத்து தொடர்பின்மை, மலைகள், ஆறுகள் போன்றவைகளால் பிரிக்கப்படுதல் மற்றும் தட்பவெட்ப நிலை ஆகியவையே காரணம் என்கிறார்.

தட்ப வெப்ப நிலை எப்படி காரணமாக முடியும்?  வடமொழியிலுள்ள ஹ போன்ற எழுத்துக்களை அடிவயிற்றிலிருந்து உச்சரிக்க வேண்டியுள்ளது. இது குளிர் பிரதேசங்களில் உள்ள ஆரிய பார்பனர்களுக்கும் வெள்ளைக்காரர்களுக்கும் எளிதாகிறது. அவர்கள் கொஞ்சி பேசினால் கூட சண்டை போடுவது போலத் தெரிகிறது என்கிறார் பெரியார்.

ஒரு மொழி எவ்வாறு சிறப்படைகிறது என்ற கேள்விக்கு, அம்மொழியில் கிடைக்கும் அறியக் கருத்துக்களாலும் முன்னேற்றக் கருத்துக்களாலும் என்கிறார் பெரியார். ஒரு மொழி எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற போது பெரியார் சொல்கிறார், அது நமது தன்மானத்திற்கு, முன்னேற்றத்திற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும் என்கிறார்.

தமிழை ஏன் சிறந்த மொழி என்பதற்கு பெரியார் சொல்கிறார், அது தகைமைசால் மொழி என்று குறிப்பிடுகிறார். இங்கு தமிழிறஞர்கள் கூடியுள்ளீர்கள். இந்த தகைமைசால் என்ற சொல்லுக்கு பொருள் கூற வேண்டும். பெரியார் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதை மட்டும்  அந்த ஒரு சொல்லை மட்டும் உருவி வைத்துக் கொண்டு பேசுகிறவர்கள் இந்த தகைமைசால் என்ற சொல் குறித்தும் விளக்க வேண்டும்.

தமிழ் மொழி தொன்மையான நாகரிகம் உடைய மொழி. இயற்கையான நமது பழக்க வழக்கத்திற்கு ஏற்றதாக உள்ளது என்று கூறுகிறார். வட மொழி சொற்களை நீக்கிவிட்டால் நம்முடைய பழந்தமிழ் தானாகவே கிடைக்கும் என்கிறார். இங்கு தூய தமிழ், தனித் தமிழ் என்றும் கூறுகிறார்.

ஆரியப்பார்பனர்கள் தங்களது கருத்துக்களைத் திணிப்பதற்கு வடசொற்களை புகுத்தினர். அதனால் தமிழ் மொழி சீரழிந்தது என்கிறார் பெரியார்.
சாதி, திவசம், திதி, கலியாணம் என்று பண்பாட்டு சீரழிவைக் குறிக்கும் சொற்களை கூறுகிறார். அடுத்து மோட்சம், நரகம், ஆத்மா என்ற மூடநம்பிக்கைச் சொற்களை வகைப்படுத்துகிறார் பெரியார். இன்று வரை நாம் இந்தச் சொற்களைதான் பயன்படுத்தி வருகிறோம். அந்த அளவிற்கு ஆரிய பண்பாட்டையும் நாகரிகத்தையும் புகுத்திவிட்டனர்.

தாய்ப்பால் என்ற கருத்தையும் உடைக்கிறார் பெரியார். ஒரு தாய்க்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை தமிழ்நாட்டிலும் மற்றொன்றை வெளிநாட்டிலும் வளருங்கள். தமிழ் நாட்டில் வளர்ந்த குழந்தை தமிழிலும் மத வாதியாகவும் இலண்டனில் வளர்ந்த குழந்தை ஆங்கிலத்திலும் அறிவியல்பூர்வ அறிவைக் கொண்டதாகவும் வளருகிறது என்கிறார். எனவே ஒருவர் சிறப்படைவதற்கு சுற்றுபுறச் சூழலும் காரணம் என்கிறார் பெரியார்.
பெரியாரைப் பற்றிய இன்னொரு குற்றச்சாட்டு 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போரில் இந்தி திணிப்புக்கு ஆதரவாக நடந்து கொண்டார் பெரியார் என்பது. இது அயோக்கியத்தனமான குற்றச்சாட்டு.

அப்போது பெரியார் கூறுகிறார், எந்த பார்ப்பானாவது இந்தி சமஸ்கிருதம், இந்தி வேணும் என்று சொல்கிறானே தவிர அதில் கல்வி படிக்க விரும்புகிறானா? என்று கேட்டுவிட்டு, தமிழையும் இந்தியையும் கூறி சண்டையை ஏற்படுத்தி விட்டு, அவன் ஆங்கிலம் படித்து மேலே மேலே முன்னேறுகிறான் என்கிறார் பெரியார். 1965 இந்தி எதிர்ப்பு போரில் இதுதான் பெரியாரின் நிலைப்பாடு.பேராசிரியர் சுப. வீரபாண்டியன் எழுதிய பெரியாரின் இடது சாரி தமிழ்த் தேசியம் என்ற நூலில் நடுநிலை என்ற பெயரில் இந்த தவறான செய்தியை பதிவு செய்கிறார். இதனால் சோலை மாரியப்பன் கோபித்துக்கொள்ளக் கூடாது.

தமிழ்ப்புலவர்களின் மீதும் தமிழறிஞர்களின் மீதும் பெரியாருக்கு பெருங்கோபம் இருந்தது.  1920 வரை என்னிடம் வாதம் செய்யாத,  கைநீட்டாத புலவர் இல்லை. எனக்கு மீனாட்சி சுந்தரம்பிள்ளையை தெரியாது. ஆனால் எனக்கு உ.வே.சாமிநாதஅய்யரைத் தெரியும். தமிழ்த்தென்றல் திரு.வி.க. வை தெரியும். மறைமலையடிகளைத் தெரியும்.

தமிழைக் கெடுத்தவர்கள், தமிழன் அறிவுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள், சொந்த புத்தி இல்லாதவர்கள், புளுகர்கள் என்பதுதான் தமிழறிஞர்கள் மற்றும் தமிழ்ப்புலவர்களைப்பற்றிய கருத்தாக பெரியாருக்கு இருந்தது. எனவே தமிழறிஞர்கள் பெரியார் சொன்ன தமிழ் காட்டுமிராண்டி மொழி என்ற சொற்றொடரை உருவி எடுத்துக்கொண்டு பெரியார் மீது அவதூறு பேசுகின்றனர்.

தமிழ் எழுத்துக்களைப்பற்றி பெரியார் சொல்வார், ஐ, ஒள ஆகிய இரண்டு எழுத்துகள் நேரடியாக உதவுவதில்லை. இவை உயிர் மெய் எழுத்துக்களாகத்தான் பயன்படுகின்றன என்று ஆய்வு செய்து கூறுகிறார்.தமிழறிஞர்கள் இது குறித்து பேச வேண்டும்.  பெரியாருக்கு தமிழ் எழுத்துக்கள் குறித்து ஒரு கணக்கு இருக்கிறது. மொத்த தனி உருவ எழுத்துக்கள் தமிழில் அதிகம். மொத்த எழுத்துக்களில் 135 எழுத்துக்கள் தனி உருவம் கொண்டுள்ளது. அவற்றை தனியாக ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றை எளிமைப்படுத்த வேண்டும் என்கிறார். ங,ஞ ஆகிய எழுத்துக்கள் மெய் எழுத்து உருவத்தைத் தவிர வேற உருவங்கள் பயன்படுவதில்லை. இப்படியயல்லாம் பெரியார் எழுத்துக்களைப்பற்றியும் கூறுகிறார். இதற்கெல்லாம் தமிழ்மணி பதில் கூற வேண்டும்.
தமிழ் எழுத்துக் கூட்டுவதும், உச்சரிப்பும் அதன் இலக்கணமும் இயற்கையை, இயல்பாகக் கொண்டுள்ளது என்றும் கூறும் பெரியார் அதை செம்மைப்படுத்த வேண்டாமா என்று கேட்கிறார்.

தமிழ் நாட்டிற்கு போதனா மொழியாக, ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்று கூறுகிறார் பெரியார் இதை புரட்சி பெரியார் முழக்கம் 2001 ஆம் இதழில் வெளியிட்டிருக்கிறது. நானும் எனது பெரியார் பார்வை இதழில் வெளியிட்டிருக்கிறேன் என்று வாய்பளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

No comments: