Thursday, November 28, 2019

ஆகம பக்தியா ? சுயசாதி உணர்வா?

ஆகம பக்தியா ? சுயசாதி உணர்வா? -    ந. சேதுராமசாமி

விவேகானந்தர் பார்ப்பனப் புரோகிதர்களைப் பற்றிக் கூறியவை......
துர்த்தர்களும் ஏமாற்றுக்காரர்களும் ஆகிய புரோகிதர்கள் எல்லா வகையான மூடநம்பிக்கைகளையும் வேதம் மற்றும் இந்து மதத்தின் சாரம் என்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர். இந்த போக்கிரித்தனம் மிக்க புரோகிதர்களும், அவர்களுடைய முன்னோர்களும் கடந்த நானூறு தலைமுறைகளாக வேதத்தின் ஒரு பகுதியைக் கூட பார்த்ததில்லை. மூடத்தனமிக்க ஆச்சாரங்களைக் கடைப்பிடித்து, அவர்கள் தம்மைத் தாமே அழிநிலைக்குக் கொண்டு வந்துவிட்டனர். கலியுகத்தில்  பிராமணர்களின் வேடத்தில் இருக்கும் இராட்சதர்களிடமிருந்து, மக்களையும், இந்த நாட்டையும் அந்தத் தெய்வம்தான் காப்பாற்ற வேண்டும் (விவேகானந்தரின் முழுப் பேச்சுக்கள் தொகுதி 8, பக்கம் 290, கல்கத்தா 1971)

சட்ட நெறிமுறைகள் கெட்டுக்கிடையன்று. அவை காலத்தின் தேவைக்கேற்ப புதுப்பிக்கப்பட வேண்டும் என்பது மேலோர்கள் ஏற்றுக் கொண்ட மரபாகும். ஆகமங்கள் எந்தக்காலத்தில், யாரால் எழுதப்பட்டு, அவற்றை  காலகாலமாக மக்கள் அனைவரும் மாற்றமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டது யார்?

நீண்ட நெடுங்காலமாக மநுதர்மத்தின் வர்ணாஸ்ரமத்தை ஏற்றுக்கொள்ளாத கம்மாளர்கள் எனப்படும் விஸ்வகர்மா வகுப்பினருக்கும், பிராமணர்களுக்கும் போராட்டம் நடைபெற்று வந்துள்ளது. புரோகித்தில் பிராமணர்களின் மேலாதிக்கத்தை, பாஞ்சாலர்கள் எனப்படும் அய்ந்தொழிலாளர்களாகிய கம்மாளர்கள் ஏற்றுக்கொள்ளாததை சில மாவட்டங்களில் கண்டதாக ஆபி டியுபே தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் . விஸ்வகர்மா சமூகத்தினர் தங்களை விஸ்வபிராமணர்கள் என்று அழைத்துக் கொண்டதுடன், வேத சாஸ்திரங்கள் கற்று, தங்களுக்கு வேண்டிய யாகங்கள், புரோகிதங்களை அவர்களே செய்து கொண்டனர். இதனை வடமொழி நூற்களின் வழி ஆராய்ந்து திரு டி.எம். தெய்வசிகாமணி ஆச்சாரி, அவரது ‘விஸ்வகர்ம பிராமண வம்சப் பிராகாசிகை’ என்ற நூலில் விரிவாகப் பதிவு செய்துள்ளார். கம்மாளர்கள்,  ‘ஆச்சாரி’ மற்றும் ‘செகத்குரு’ பட்டங்களை பெற்றிருந்தனர் என்று குறிப்பிட்டதுடன், கம்மாளர்களின் புரோகிதம் செய்யும் உரிமையை நிலைநாட்ட , பஞ்சாங்கம் குண்டய்யருக்கு எதிராக, சித்தூர் அதாலத் நீதிமன்றத்தில் மார்க்க சகாய ஆச்சாரி தொடர்ந்த வழக்கைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். விஸ்வ பிராமணர்கள் வேதாதிகாரங்களுக்கு உரிமை/தகுதி பெற்றவர்கள் என்றும் அவர்கள் தாங்களே புரோகிதம் செய்து கொள்ளலாம் என்றும், 15.12.1818 இல் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் கி.பி. 1885 இல் 78வது காலண்டர் (கிரிமினல்) வழக்கு எண்கள் 421, 422 இல்  விஸ்வ பிராமணர்கள் எந்தக் கோவிலின் கருவறைக்குள்ளும் சென்று ருத்ராபிஷேகம் செய்வதற்கும் பூசிப்பதற்கும் தகுதி/உரிமை படைத்தவர்கள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கி.பி. 1894 இல் நடைபெற்ற மசூலிப்பட்டினம் வழக்கில் சிவகோடி வீரபத்ரன் என்னும் விஸ்வ பிராமணன், மகா சிவராத்திரி அன்று காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நுழைந்து லிங்காபிஷேகம் செய்ததால், லிங்கம் பரிசுத்தமிழந்தது என்ற வாதம் ஏற்கப்படாமல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையும் திரு.டி.எம்.தெய்வசிகாமணி ஆச்சாரி குறிப்பிட்டுள் ளார். இவ்வழக்கு விசாரணையின் போது, வீரபத்ர ஆச்சாரி அபிஷேகம் செய்யும் போது ஏன் தடுக்கவில்லை என வினா தொடுத்த போது அது வித்தியாசமாகத் தெரியவில்லை என்றே வழக்குத் தொடர்ந்த பிராமணர்கள் தெரிவித்தனர். அதைவிட வேடிக்கை, வீரபத்ர ஆச்சாரி கருவறைக்குள் நுழையும் போதே ஏன் தடுக்க வில்லை என வினா தொடுக்கப்பட்ட போது , அவர்கள் அதற்கு முன்பே இவ்வாறு செய்வது வழக்கமே என பதில் வந்துள்ளது. ஆகவே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இது போன்று பதிமூன்று  வழக்குகளை தனது ஆய்வுப் புத்தகத்தில் திரு. டி.எம். தெய்வசிகாமணி ஆச்சாரி (பின்னாளில் புகழப்பெற்ற மேடைத் தமிழை எழுதியவர்) பட்டியலிட்டுள்ளார். இன்றைக்கும் விஸ்வகர்ம வம்சா வழியினர் புரோகிதம் செய்து வருகின்றனர். யாகம் மற்றும் கும்பாபிஷேகம் செய்கின்றனர். போளூர் வட்டம் காந்தபாளையம் சீனந்தல் மடாலயத்தின் சார்பில் விஸ்வகர்ம மடாதிபதி,  இதற்கென வைதீக பாடசாலையை நடத்திக் கொண்டிருக்கின்றார். மொத்ததில் ஆகம விதிப்படி, வம்சாவழி சிவாச்சாரிய பிராமணர்களே பூஜை செய்து வந்துள்ளனர் என்பது புரட்சிக் கவிஞர் நடையில் ஏமாந்த காலத்தில் ஏற்றங்கொண்டோர் புலிவேடம் போட்ட இடைக்கால வரலாறு என்பது விளங்கும். வம்சா வழி பிறவித் தத்துவத்தைப் பல முனைகளிலும் முன்னிலைப்படுத்திய மனுதர்மமே புறக்கணிக்கப்பட்ட பின்னர், அந்த மனுதர்ம வம்ச வழியாக வந்த ஆகமங்களும் புறக்கணிக்கப்பட வேண்டியவையே.15.12.1818-இல் சித்தூர் அதாலத் நீதிபதி டெக்கர் அளித்த தீர்ப்பில் விவரம்  தெரியாதவர்கள் அவர்களை (பிராமணர்களை) உயர்ந்த சாதி என ஏற்றுக்கொண்டுள்ளனர். பாமர மக்களையும் அறிவுத் தெளிவற்ற அரசர்களையும் ஏமாற்றி தங்களை புரோகிதர்களாக நியமித்துக் கொள்வதில் வெற்றிக்கொண்டுள்ளனர். இப்போது உண்மையைக் கண்டறிந்து அதற்கேற்ப ஆட்சி நடத்த வேண்டியது அரசின் கடமையாகும் என அறிவுறுத்தியுள்ளார். (உண்மை,சூன் 16-30, 2006)(பெரியார் பார்வை 16.02.2007)

No comments: