Monday, September 6, 2021

திருநெல்வேலி எழுச்சி

 

இந்திய விடுதலைப் போராட்டத்தில் திருப்பு முனையான திருநெல்வேலி எழுச்சி

திருநெல்வேலி எழுச்சி நடைபெற்ற நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review

இந்திய தேச விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பு முனையையும், எழுச்சியையும் ஏற்படுத்தியது திருநேல்வேலி மாவட்டம். அன்றைய ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் சுதேசி இயக்கத்தை மிகத் தீவிரமாக நடத்திக் கொண்டிருந்தனர். ஒட்டுமொத்த துணைக்கண்டத்திற்கும் விடுதலைப் போராட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்று முன்னுதாரணமாக இந்த போராட்டம் நடந்து கொண்டிருந்தது. இதனை வ.உ.சிதம்பரனாரும், சுப்ரமணிய சிவாவும் செய்து கொண்டிருந்தனர்.

தீவிரமடைந்த சுதேசி உணர்வு

1905-ம் ஆண்டு இந்தியா முழுவதும் சுதேசி இயக்க உணர்வு தீவிரமாக பரவியது. 1906-ம் ஆண்டு தூத்துக்குடி, கொழும்பு துறைமுகங்களுக்கு இடையே வாடகைக் கப்பல்களை இயக்கும் சுதேசிக் கப்பல் கம்பெனி துவக்கப்பட்டது. அதனை முடக்க பல்வேறு முயற்சிகளை ஆங்கிலேய அரசு செய்து கொண்டிருந்தது.

1908-ம் ஆண்டு வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, ஆகியோர் பங்கேற்ற சுதேசி இயக்க பிரசாரக்கூட்டங்கள் நெல்லையில் நடைபெற்றது. அந்நிய நாட்டுப் பொருட்களை புறக்கணிக்கும்படி தலைவர்கள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

தொழிலாளர் போராட்டத்தை விடுதலைப் போராட்டத்தோடு இணைத்த வ.உ.சி

விடுதலைப் போராட்டம், தொழிலாளர் போராட்டம், அந்நியப் பொருள் புறக்கணிப்பு, சுதேசிக் கப்பல் என்று மாபெரும் ஒருங்கிணைப்போடு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்றனர். இந்த போராட்டத்தை எப்படி முடிவுக்குக் கொண்டு வராலாம் என்று சதிசெய்த ஆங்கிலேய ஆட்சியளர்கள் வ.உசி. மற்றும் சிவாவை கைது செய்யத் திட்டமிட்டனர்.

தொழிலாளர்களின் போராட்டத்தை விடுதலைப் போராட்டத்தின் அங்கமாக ஆக்கி, தொழிலாளர்களை விடுதலை இயக்கத்திலும் பங்கெடுக்கச் செய்தது வ.உ.சிதான் என்பதால் போராட்டம் முடிந்த சில தினங்களில், அதாவது 11.3.1908 அன்று பிரிவு 107-ன் கீழ் வ.உ.சி மற்றும் சிவாவின் மீது வழக்கு பதிய திட்டமிட்டனர்.

தடையை மீறி விபின் சந்திரபால் விடுதலை விழா கொண்டாட்டம்

வங்காளத்து சுதேசி தலைவரான விபின் சந்திரபால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதியை சுயராஜ்ஜிய நாளாக சுதேசி இயக்க வீரர்கள் கொண்டாடினர். திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் தடையை மீறி விபின் சந்திரபால் விடுதலை விழா நடந்தது. அன்று கலெக்டர் அலுவலகத்தின் முன்னால் வ.உ.சி மற்றும் சிவா ஆகியோர் மக்களிடம் நீண்ட உரை நிகழ்த்தினர். தூத்துக்குடியில் விபின் சந்திரபால் விடுதலை விழாவைக் கொண்டாடிவிட்டு நெல்லைக்கு வந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் உள்ளிட்டோர் 1908-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

வ.உ.சி கைதை எதிர்த்து எழுந்த மக்கள் எழுச்சி

வ.உ.சி கைது செய்யப்பட்ட அன்றிரவே, மக்கள் தூங்காமல் வீதிகளில் ’வந்தே மாதரம்’ என்ற முழக்கம் இட்டதாக சுதேசமித்திரன் பதிவு செய்திருக்கிறது. வ.உ.சி கைது செய்யப்பட்ட மறுநாளிலிருந்து கோரல் மில் தொழிலாளர்கள், பெஸ்ட் அண்ட் கம்பெனியின் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். தூத்துக்குடியில் கடைகள் மூடப்பட்டது.

குதிரை வண்டிக்காரர்கள், கசாப்புக் கடைக்காரர்கள், நகர்மன்ற துப்புரவுத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். பொதுக் கூட்டங்கள் தடை செய்யப்பட்ட நிலையிலும், தூத்துக்குடி வண்டிப்பேட்டையில் கூட்டம் கூடி அடையாளம் தெரியாத ஒருவர் பேசினார். அங்கு குவிக்கப்பட்ட போலீசாருக்கு எதிராக மக்கள் கற்களை குவித்து வைத்து எறிந்து தாக்குதல் நடத்தினார்கள். காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.

திருநெல்வேலியில் பற்றி எரிந்த எழுச்சி

தூத்துக்குடியிலிருந்து போராட்டம் திருநெல்வேலிக்கும் பரவியது. ரயில் நிலையத்தை சுற்றி இருந்த கடைகள் மூடப்பட்டன. அதுமட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கானவர்கள் இந்துக் கல்லூரிக்குள்ளும் நுழைந்தார்கள். இந்துக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இணைந்தனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பாளையங்கோட்டையில் இருந்து ரிசர்வ் போலீஸ் படையை வரச் செய்தார்கள். நகர மன்ற அலுவலகத்தை போராட்டக்காரர்கள் இடித்தார்கள். அங்கிருந்த ஆவணங்களைக் கொளுத்தினார்கள். அஞ்சலகங்களில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்கள். நகரமெங்கும் இருந்த மண்ணெண்ணெய் தெருவிளக்குகள் உடைக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் பலியானார்கள்

காவல்துறை கையில் கிடைத்தவர்களையெல்லாம் அடித்தது. நெல்லையில் ஒரு சுதேசி கடை ஊழியர் தாக்கப்பட்டார். அதனால் மேலும் எழுச்சி விரிவடைந்தது. மீண்டும் திருநெல்வேலியிலும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. அதில் நான்கு பேர் கொல்லப்பட்டார்கள். இறந்தவர்களில் ஒருவர் இஸ்லாமியர்.

நாஞ்சில் நாட்டிலும் பரவிய போராட்டம்

ஏற்கனவே வ.உ.சியுடன் கைது செய்யப்பட்ட பத்மநாப ஐயர் திருவாங்கூரில் சுதேசி பிரச்சார இயக்கத்தை ஏற்படுத்தி வைத்திருந்ததால், திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட நாஞ்சில் நாட்டிலும் இந்த போராட்டம் தீவிரமடைந்தது.

நாடாளுமன்றம் வரை எழுப்பப்பட்ட கேள்வி

நெல்லையில் விடுதலை உணர்வுடன் மக்கள் நடத்திய எழுச்சிப் போராட்டத்தில் நால்வர் பலியான நிகழ்வு குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. சென்னை சட்டசபையில் விவாதம் நடந்தது. நகராட்சிக் கட்டிடம் சேதப்படுத்தப்பட்டதால் அப்போதைய நெல்லை நகராட்சி மன்றம் எழுச்சியைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது. கலவரத்தில் ஈடுபட்டதாக 53 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு 37 பேருக்கு சிறைத் தண்டனை கிடைத்தது. பொருட்சேதங்களுக்கு தண்டத் தீர்வை வசூலிக்கப்பட்டது.

நெல்லையில் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து நடத்திய ‘திருநெல்வேலி எழுச்சி’ போராட்டம் பிற்காலத்தில் நடந்த பல போராட்டங்களுக்கு உந்துதலாக இருந்ததாக விடுதலைப் போராட்ட வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

’நெல்லைக் கலவரம்’ என பதிவு செய்த ஆங்கிலேய நகராட்சி

இந்த மாபெரும் மக்கள் போராட்டத்தை அன்றைய ஆங்கிலேய நகராட்சி, ‘நெல்லைக் கலவரம்’ எனப் பதிவு செய்தது. இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்னும் வரலாறு அவர்கள் பார்வையிலேயே எழுதப்பட்டிருந்தது. அதனை காங்கிரஸ் ஆட்சியாளர்கள் கூட மாற்றவில்லை. திமுகவின் ஏ.எல்.சுப்பிரமணியன் மேயராக இருந்தபோது, அந்த வரலாற்றுப் பிழை சரி செய்யப்பட்டு, ‘நெல்லை எழுச்சி தினம்’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments: