Monday, March 28, 2022

சீமான் பற்றி விவேகானந்தன் இராமதாஸ் பதிவு -2

 நீட் கல்யாணசுந்தரம் அனிதாவிற்கு இழைத்த துரோகத்தைப் பற்றி பார்த்தோம்.

காவிரிச் செல்வன் விக்னேசுக்கு நிகழ்ந்த துரோகம் தெரியுமா?

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் காவிரி உரிமைக்காக  செப்டம்பர் 15,, 2016 அன்று மாலை தொடர்வண்டிகளில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தோம். அப்போது ரயிலில் அமர்ந்திருந்த நாம் தமிழர் கட்சி தோழர் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டவாறே, தம்பி ஒருத்தன் தீக்குளிச்சிட்டான் தோழா, போராட்டத்தை பெரிதுபடுத்த வேண்டும், விடக் கூடாது என கத்தினார். பின்னர் அங்கிருந்து மருத்துவமனைக்கு புறப்பட்டோம்.

 காவிரி உரிமைக்காக கடுமையாக போராட வேண்டும் என வலியுறுத்தி, சீமான் அண்ணன் போராட்டத்தை விரிவுபடுத்துவார், தமிழகம் முழுதும் போராட்டங்கள் விரிவடையும் என நம்பி தீக்குளித்தான் நாம் தமிழர் கட்சியில் இருந்த விக்னேஷ்.

சீமானின் உணர்வு கொப்ப்aளிப்பான முகத்தைப் பார்த்தவுடன், அண்ணன் மிகப் பெரிய போராட்டத்தினை அறிவித்து நடத்தப் போகிறார் என்று நினைத்திருந்தேன். 

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிணவறைக்கு வெளியே நாம் தமிழர் கட்சியின் தோழர்கள் கோபத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்தனர். விக்னேசின் உடலை எக்காரணம் கொண்டும் எடுக்க விடமாட்டோம் என கொப்பளித்துக் கொண்டிருந்தனர். பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும் அங்கு கோபத்துடன் குழுமியிருந்தனர். நானும் தோழர்களும் அங்கிருந்தோம்.

வெளியே உணர்வுகள் கொப்பளித்துக் கொண்டிருக்க சீமானோ காவல்துறையிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். இறுதியில் விக்னேசின் உடல் நாம் தமிழர் கட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படும் என அறிவித்தார். அவரின் கட்சி உறுப்பினர் விக்னேஷ் என்பதால் அந்த முடிவை மற்றவர்கள் எதிர்க்கவில்லை.

விக்னேசின் உடலை சென்னை முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்ல வேண்டும் என அனைவரும் நினைத்தனர். ஆனால் சீமான் பேசி முடித்தது வேறாக இருந்தது. ஆம்புலன்சை எடுக்க விடாமல் மறித்து நின்று போரடிய தோழர்களை சீமானுடன் சுற்றும் சிலர் வந்து விலக்கினர். அத்தனை பேரும் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க சீமானின் கட்டளைப்படி ஆம்புலன்ஸ் புறப்பட்டது. முதலில் நம் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்வோம், பின்னர் பெரிய போராட்டங்களை நடத்துவோம் என்றெல்லாம் சீமானுடனே எப்போதும் சுற்றும் சிலர் முழங்கினார்கள்.

ஆம்புலன்ஸ் வேகமாக புறப்பட்ட போது, தோழர்கள் சிலர் விக்னேசுக்கு வீரவணக்கம் என்று முழக்கங்களை எழுப்பினோம். அப்போது சீமானின் அல்லக்கைகள் சிலர் எங்களை தடுத்து முழக்கங்கள் எழுப்பாமல் இருந்தால் தான் உடலையே தருவேன் என காவல்துறை சொல்லியிருக்கிறது. அதனால் எந்த முழக்கமும் போடக் கூடாது என தடுத்தார்கள்.

தமிழினத்துக்காக தன் உயிரை தியாகமாக கொடுத்த விக்னேசின் ஊர்வலம் முத்துக்குமாரின் எழுச்சியைப் போன்றதொரு எழுச்சியை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் விக்னேசின் உடலை ஏற்றிக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் மின்னல் வேகத்தில் சென்னையின் நெடுஞ்சாலைகளில் பறந்தது.

ஆம்புலன்சை பின் தொடர்ந்து வளசரவாக்கத்தை அடைந்தோம். அங்கும் மயான அமைதி நிலவியது. அங்கும் முழக்கமிட அனுமதிக்கப்படவில்லை. மீறி முழக்கமிட்ட தோழர்களுக்கும், காவல்துறை அப்படியெல்லாம் செய்யக் கூடாதென்று சொல்லியிருப்பதாக அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஒரு வயதான முதியவரின் இறுதி நிகழ்வைப் போல விக்னேசின் உடல் அங்கு வைக்கப்பட்டிருந்து. அதே அமைதியுடன் சென்னையிலிருந்து கொண்டு செல்லப்பட்டது. 

தலைநகரில் வைத்து போராடுவது என்ற கோரிக்கைகள் அனைத்தும் தூக்கி எறியப்பட்டு விக்னேசின் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர். அந்த ஊரில் இறுதி ஊர்வலம் நடத்தி வீர முழக்கங்களை இட்டுச் சென்றவர்களின் மத்தியில் விக்னேசின் தியாகம் மீண்டும் சாகடிக்கப்பட்டது. 

சீமானின் மீது எனக்கு கொஞ்ச நஞ்சம் ஒட்டியிருந்த மரியாதையும் சுக்குநூறாய் உடைந்து நொறுங்கிய தருணம் அது. 

அதன் பிறகாவது சீமான் போராட்டங்களை பெரிது படுத்துவார் என நினைத்தேன். சில காலம் கழித்து வழக்கமான வீர வசனங்களுடன் ஒரு வீரவணக்கக் கூட்டம் நடத்தி விக்னேஷ் மறக்கடிக்கப்பட்டான். அதன் பிற்கு முதலாம் ஆண்டு வீரவணக்க கூட்டம் நடத்தப்பட்டது.


முத்துக்குமாரின் மரணத்தின் போது நாம் மட்டும் வலிமையாக இருந்திருந்தால் என்னென்னவோ செய்திருப்போம் என சீமான் சொல்வதெல்லாம் எத்தனை பெரிய பொய்கள் என்பதை அன்றுதான் விரிவாக உணர்ந்து கொண்டேன்.

No comments: