Thursday, May 5, 2022

பொ.வேல்சாமி

 பிழையான தகவல்களை உள்ளடக்கிய பேச்சு நிலையாக இருக்குமா..?

நண்பர்களே…

உங்களைச் சந்தித்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. 

திராவிடச் சிறகுகள் என்ற அமைப்பின் சார்பில் கோவையில் நடைபெற்ற நிகழ்வில் 

 தோழர் செந்தலை ந.கவுதமன் அவர்களின் காணொளிப் பேச்சை இன்று பார்த்துக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பேச்சில் அவரால் குறிப்பிடப்படுகின்ற அடிப்படைத் தரவுகளில் பல சரியானவைகளாக இல்லாமல் பிழையாக இருந்தன. சிறந்த வரலாற்று அறிஞர் என்று நண்பர்களால் பாராட்டப்படுகின்ற தோழர் செந்தலை ந கவுதமன் பேச்சைக் கேட்டு அதிர்ந்தேன்.  ஆதாரம் இல்லாத இத்தகைய பேச்சுகளை ஐயா அவர்கள் பேசுவது நியாயமா?

1. சர் வில்லியம் ஜோன்ஸால் (28.09.1746 – 27.04.1794)  வடமொழி நூல்கள் எல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் அவரால் செய்யப்பட்ட அந்த ஆங்கில மொழிபெயர்ப்பு உடனடியாக ஜெர்மன் மொழியிலும் இத்தாலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் இவற்றின் விளைவாக வடமொழி பற்றிய அறிவு ஐரோப்பா முழுமையும் பரவ வாய்ப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் கூறுகின்றார். வில்லியம் ஜோன்ஸ் வடமொழி நூல்கள் எல்லாவற்றையும் மொழிபெயர்க்கவில்லை. அந்தக் காலத்தில் வேதங்கள் உள்பட பல முக்கியமான வடமொழி நூல்களைப் பற்றி ஐரோப்பியர்களுக்கு எதுவும் தெரியாது. வடமொழி நூல்கள் எல்லாவற்றையும் பற்றி ஐரோப்பியர்கள் தெரிந்துகொள்ள தொடங்கிய காலம் என்பது 1847 க்கு பின்னர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வில்லியம் ஜோன்ஸால் மொழிபெயர்க்கப்பட்ட வடமொழிகள்  நூல்கள் 3 மட்டுமே. அவை 1. காளிதாசரின் சாகுந்தலம். 2. கீத கோவிந்தம். 3. மாளவ தரும சாத்திரம் ஆகும். இவருக்கு வடமொழியைக் கற்றுக் கொடுத்த இவருடைய நண்பர் சார்லஸ் வில்கின்சன் “பகவத் கீதை“ மற்றும் “இதோபதேசம்“ என்ற இரண்டு நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இந்தக் காலக்கட்டத்தில் ஐரோப்பியர்கள் அறிந்துகொள்ளத் தொடங்கிய இன்னொரு மொழிபெயர்ப்பு நூல், அவுரங்கசீப்பின் அண்ணன் “தாராசுகோ”வின் முயற்சியால் வடமொழியில் இருந்து பாரசீக மொழியில் மொழிபெயர்க்ப்பட்ட 50 உபநிடதங்கள் ஆகும். இந்த உபநிடதங்கள் முழுமையும் 1801 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது என்றும் இதன் விளைவாக ஐரோப்பா முழுமைக்கும் வடமொழி பற்றிய ஆர்வம் உண்டானதாகவும் “வியத்தகு இந்தியா” (பக்.5 மற்றும் பக்.6) என்னும் நூலில் பேராசிரியர் A.L.பசாம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். நூலின் அந்தப் பகுதியை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். 

2. 1812 இல் எல்லீஸால் திருக்குறள் “முழுமையும்” அச்சிட்டு வெளியிடப்பட்டதாக செந்தலை கவுதமன் கூறுகின்றார். எல்லீஸால் வெளியிடப்பட்டது திருக்குறளின் அறத்துப்பால் மட்டுமே. முழுநூலும் அல்ல என்பது குறி்ப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல திருவள்ளுமாலையையும் நாலடியாரையும் இணைத்து எல்லீஸ் வெளியிட்டதாகத் தோழர் கூறுகின்றார். அப்படி எல்லீஸ் வெளியிடவில்லை. 

                                                                         திருக்குறளின் 110 வது பாடலாகிய “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்..” என்று தொடங்கும் குறளுக்கு விரிவுரை எழுத வந்த பரிமேலழகர் 34 புறநானூற்றுப் பாடல் வரிகளை மேற்கோள் காட்டுகின்றார். அந்த மேற்கோளில் பார்ப்பார் தப்பிய என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பை எல்லீசும் மேற்கோள் காட்டி பிராமணர்களை ”the murder of Brahmans” என்று ஆங்கிலத்திலும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பகுதியை விளக்குவதற்கு புறநானூறு 34 வது பாட்டை மேற்கோள் காட்டுகிறார். அந்த மேற்கோள் உள்ள புறநானூற்று பாடல் வரிகளில் “குரவர் தப்பிய” என்ற வரிகள் உள்ளன. இதே பாடலுக்கு (புறநானூற்றில் 34 வது பாட்டுக்கு) உரை விளக்கம் கூற வந்த “உரைவேந்தர் அவ்வை துரைசாமிபிள்ளை” அவர்கள்,

“குரவர்த் தப்பிய என்பது பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்குமெனத் திருத்தப்பட்டிருக்கிறது. இத்திருத்தம் பரிமேலழகர் காலத்தேயே செய்யப்பட்டுளதென்பது திருக்குறளுரையாற் காணப்படுகிறது.” என்று கூறுகின்றார். இப்படியான தரவுகள் இருக்கின்ற போது  புறநானூற்றுப் பதிப்பில் 34 வது பாட்டில் “பார்ப்பார் தப்பிய” என்று உ.வே.சா திருத்தி விட்டார் என்று செந்தலை கவுதமன் கூறுவதை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது.?

3. செந்தலை கவுதமன் அவர்களின் பேச்சில், ஆறுமுக நாவலர் திருக்குறளைப் பதிப்பிக்கவில்லை என்று கூறுகிறார். 1861 இல் பாண்டித்துரை தேவரின் தந்தையார் பொன்னுசாமி தேவரின் உதவியாலும் வேண்டுகோளின்படியும் திருக்குறள் பரிமேலழகர் உரையின் பிழைநீக்கி பதிப்பித்துள்ளார். தொடர்ந்து அவர் காலத்திலேயே (1875) இரண்டாம் பதிப்பாகவும் திருக்குறள் வெளிவருகிறது. ஆறுமுகநாவலின் மறைவுக்கு பின்னர் (1879) பல பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 1861 இல் ஆறுமுகநாவலரால் முதன் முதலாக வெளியிடப்பட்ட இந்நூலின் 110 பாட்டின் பரிமேலழகர் உரை விளக்கத்தின் புறநானூறு 34 வது பாடல் மேற்கோளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் “பார்ப்பார் தப்பிய” என்ற வரிதான் உள்ளது. அதன் அடிக்குறிப்பில்தான் பாடபேதமாக “குரவர் தப்பிய” என்ற வரியும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 எல்லீஸ் அவர்களும் ஆறுமுகநாவலர் அவர்களும் சமகாலத்தவர்கள் என்பதுபோல  தோழர் பேசுகின்றார். எல்லீஸ் மறைந்தது 1819 ம் ஆண்டு. எல்லீஸ் மறைந்து 3 ஆண்டுகள் கழித்து 1822 இல் ஆறுமுகநாவலர் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  கர்னல் மெக்கன்சியை எல்லீஸ் தமிழ்ச் சுவடிகளைத் திரட்டுவதற்குப் பணி அமர்த்தினார் என்று குறிப்பிடுகின்றார். கர்னல் மெக்கன்சி எல்லீஸால் பணி அமர்த்தப்படவில்லை. கர்னல் மெக்கன்சி தமிழ் ஏட்டுச்சுவடிகள் மட்டுமல்லாது வடமொழிச் சுவடிகள் தெலுங்குச் சுவடிகள் கல்வெட்டுகள் என்று பலவற்றையும் தொகுத்தவர். அவர் தொகுத்த தெலுங்குச் சுவடிகள் தமிழ்ச் சுவடிகளைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

என்னால் குறிப்பிடப்படும் செய்திகளுக்கான ஆதாரங்களின் படங்களை இணைத்துள்ளேன். தோழர்கள் கவனமாகப் பார்க்கவும். 

தோழர் செந்தலை கவுதமன் அவர்களின் காணொளிப் பேச்சையும் இணைத்துள்ளேன். 

நம்முடைய அரசியல் சார்ந்த விருப்பு வெறுப்புகளைக் காட்டுவதற்காக இப்படி ஆதாரம் இல்லாமல் பிழையாகச் சிலர் பேசுவதைக் காண முடிகின்றது. ஆய்வின் அடிப்படையிலான பேச்சுகளை அவதூறுகளைக் கொண்டு நிரப்புவது என்பது தமிழ் ஆய்வுக்கும் தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வுக்கும் நன்மை பயக்குமா? தீமை பயக்குமா? என்பதைத் தோழர்கள் விவாதிக்க வேண்டும்.

https://www.youtube.com/watch?v=XnsUk-GiV9w

No comments: