Tuesday, December 31, 2019

அறிஞர் அண்ணா -விடுதலைப் போர் -1


விடுதலைப் போர்
- அறிஞர் அண்ணா

அழைப்பு

நாட்டின் விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு, பணிபுரிபவனே, வீரன் - விவேகி. அவனுடைய அறிவும் ஆற்றலும் அந்த அரும்பணிக்கே அர்ப்பணிக்கப்பட வேண்டும்.

உலக வரலாற்றுச் சுவடியிலேயே, தாய்நாட்டின் விடுதலைக்காகப் போரிட்ட மாவீரர்களைப் பற்றிய செய்தியே உன்னதமான பகுதி.

மணிமுடி தரித்து மன்னன் தங்கச் சிங்காசனத்தின் மீது வீற்றிருக்க, நடன  மாந்தர் நடை காட்டி, இடை அசைத்து, அவனுக்கும் அவனை அண்டிப் பிழைக்கும் அலங்காரப் பொம்மைகட்கும் களிப்பூட்ட, அக்காட்சியினை அகவலாகவோ, சிந்து ஆகவோ ஆக்கிடும் புலவனின் கவிதைகளைவிட, தாய் நாட்டின் விடுதலைப் போருக்காகக் களம் புகுந்த காளை, தன் உடலிலே எதிரியின் வாள் பட்டதால் வழிந்தோடும் இரத்தத்தைத் துடைக்கவும் நேரமின்றி, வீரப் போர்ப்புரிந்து கீழே விழும்போதும், ‘என் நாட்டுக்காக நான் ஆற்ற வேண்டிய கடமையைச் செய்வேன். நான் தொடங்கிய பணியைத் தொடர்ந்து நடத்த என் தோழர் வருவர். வாழ்க தாயகம்!’ என்று வீர முழக்க மிடும் ஒலி, இன்பம் ஊட்டக்கூடியது மட்டுமல்ல, மன எழுச்சி தரக்கூடியதுமாம்.

விடுதலைப் போர் முடிவுற்று, அன்னை பாரத தேவி அரியாசனம் ஏறும் இந்நாள், முன்னாள் நடைபெற்ற காதையைக் கூறுகிறாயோ என்று கேட்கத் தோன்றும் நண்பர்கட்கு.
இது முன்னாள் காதையுமல்ல -இந்நாள் நடைபெறும் முடிசூட்டு விழாவினை ஒட்டிய வி­யமுமல்ல. இது, இந்நாள் ஏக்கம் - நாளைய தினம் நடத்தப்பட வேண்டிய பணிக்கான தொடக்கம்.

விடுதலைப் போர் திராவிடத்தின் விடுதலைப் போர் - இந்தியத் துணைக் கண்டத்து விடுதலைப்போர் எனும் பழங்கதை அல்ல.

பரங்கிக்கும் - பனியாவுக்கும் இடையே நடைபெற்ற போர். ஒருவாறு முடிவு பெற்றது -பனியாவுக்குப் பீடம் கிடைத்துவிட்டது. பீடம் ஏறும் பனியாவின் பிடியிலே சிக்கியுள்ள திராவிடம் இனித் தன் விடுதலைக்காகப் போரிட்டாக வேண்டும்.

திராவிடம், வெளிநாட்டானின் பிடியில் மட்டுமல்ல, அறியாமையின் பிடியில் சிக்கிச் சிதைகிறது. இயற்கைச் செல்வத்தை எத்தர்கள் சுரண்டிச் செல்கின்றனர். சிந்தனையையோ, அறியாமையையோ கலை உருவிலே புகுத்திய கயவர் வழி வந்தவர்கள், செல்லென அரித்து வருகின்றனர்.

தேய்ந்து வருகிறது திராவிடம் !
தெருவெலாம் வறுமை தாண்டவமாடுகிறது!
கடல் கடந்த நாடுகளிலே எல்லாம் திராவிடர்
கூலிகள் ஆயினர்!

திராவிடத்தின் இந்நாள் நிலையினை எண்ணிடுவோர், ஒரு பெரும் விடுதலைப் போர் நடத்தியே தீர வேண்டும் என்ற முடிவுக்கு வந்தே தீருவர்.

ஒரு வஞ்சக ஏகாதிபத்தியம் இன்று திராவிடத்தைக் கொஞ்சிக் குலவி சொக்க வைக்கிறது - சேல்விழியும் பாதி மதியும் கொண்ட மங்கை நல்லாளை, செல்வச் செருக்கும் வஞ்சக நினைப்பும் கொண்ட காமுகன், கனிமொழி பேசி ஏய்ப்பது போல்.

பொருளாதார பலமும், பிரசார வசதியும், ஆயுத பலமும், அந்தணரின் ஆசீர்வாத பலமும் அமோகமாகக் கொண்டுள்ள வடநாட்டு ஏகாதிபத்தியத் தொடர்பை அறுத்துக் கொண்டு, முப்புறமும் கடலும், எப்புறமும் வளமும், அதனைப் பயன்படுத்தும் நாலரைக் கோடி மக்களும் கொண்ட திராவிடம் தன்னாட்சி பெற்றாக வேண்டும் - அதுவே விடுதலைப் போரின் குறிக்கோள்!
இந்நூல் உங்கள் பார்வைக்கு மட்டுமல்ல - மாற்றுக் கட்சிக்காரரின் பார்வைக்கும் கூட.
சி.என். அண்ணாதுரை


No comments: