Tuesday, December 31, 2019

அண்ணாவின் விடுதலைப் போர்- திராவிடர் கழகம் - 5


திராவிடர் கழகம்

திராவிடர் கழகமும், பட்டம் பதவிகளை விட்டொழித்துவிட்டு, நாடு மீளவும் கேடு தீரவும் பணிபுரியும் அணி வகுப்பினை அமைக்கும் திட்டமும், உணர்ச்சியும் வேகமும் கொண்ட பல்லாயிரக் கணக்கான திராவிடத் தீரர்கள் ஆதரவைப் பெற்றுவிட்டன. ஒரு குழுவின் வெற்றியயன்று நாம் கருதவில்லை; ஓர் இயக்க வளர்ச்சியிலே முக்கியமான குறிப்பிடத்தக்க ஒரு கட்டம் என்றே கருதுகிறோம். தீவிரமான திட்டங்களை நிறைவேற்றிவிட்டது மனத் திருப்திக் காக அல்ல! திட்டங்களைத் தீட்டிவிட்டு, எட்டி நிற்போராக இருப்பவர்களைப் பற்றிக் கவலையில்லை. அத்தகையவர்களுக்குத் திட்டங்களைப் பற்றியும் கவலையில்லை. ஆனால், கஷ்ட நஷ்டம் ஏற்கும் துணிவுடன் அன்று அங்குக் கூடிய வீரர்கள் கூட்டம் விரும்புவது, விடுதலைப் போரினையேயாகும்! விவேக சிந்தாமணிக்கு விளக்க உரை ஆற்றும் காரியத்திலோ, அந்த அஞ்சா நெஞ்சம் படைத்த ஆயிரமாயிரம் தோழர் களுக்கு அக்கறை கிடையாது. அவர்கள், பட்டம் பதவி கிட்டுமா என்று பக்குவம் பார்த்துப் பொதுவாழ்வு நடத்தும் பண்பினரல்லர்! ‘ஒரு பெரிய, பண்டைப் பெருமை வாய்ந்த இனம் பாழாகி விடுவதா? உலக வரலாற்று ஏடுகளிலே இடம்பெற்ற ஒரு நாடு உதாவக்கரைகளுக்கு உலவுமிடம் ஆவதா?

இந்நிலையை மாற்றப் போரிடாது ஆண்மையாளர் என்ற பெயரைத் தாங்குவதா?’ என்ற தீ உள்ளே கொழுந்துவிட்டு எரியும் கோலத்துடன் கூடிய அந்த வீரர்கள் விரும்புவது, உரிமை! ஆம்! ‘திராவிட நாடு திராவிடருக்கேஎன்ற உரிமையைத்தான் அவர்கள் விரும்புகின்றனர். அந்தக் கண்கள் காட்டிய ஒளி, அவர்கள் அன்று கிளப்பிய ஒலி, தோள்தட்டி, மார்பு நிமிர்த்தி அணி வகுத்து நின்ற காட்சி, ஓர் இனத்தின் எழுச்சியின் அறிகுறியாக, விடுதலைப் படையின் எக்காளமாக, மூலத்தை உணர்ந்தோரின் முழக்கமாக இருந்ததேயன்றி, காருண்ணிய முள்ள சர்க்காருக்கு வாழ்த்துக்கூறி, கனதனவான்களுக்கு நமஸ்காரம் செலுத்தி, சீமான்களும், சீமாட்டிகளும் சேதி கூறிடும் சிங்காரக் கூட்டமாக இல்லை. இதனை நாடு அறிதல் வேண்டும்; நாமும் மனத்திலே பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆளும் கூட்டத்தாரால் அலட்சியப்படுத்தப்பட்டு, மாற்றுக் கட்சிகளால் கேலி செய்யப்பட்டு, ஆரியர்களால் அவமதிக்கப்பட்டு, வடநாட்டவரால் வாட்டப்பட்டு, மண் இழந்து, பொருளைப் பறிகொடுத்து, மருளைத் துணைக்கழைத்து, மார்க்கமின்றி மமதையாளரிடம் மண்டியிட்டுக் கிடக்கும் ஓர் இனம், அன்று, ‘விடுதலை பெற்றுத் தீர வேண்டும் ; அதற்காக நான் உழைப்பேன் ! உயிர் அளிப்பேன்! இடையே இன்பம் என்ற பெயரிலே எதுவரினும் மயங்கிடேன்! போரிடுவேன்! பெற்றால் வெற்றிமாலை, இல்லையேல் சாவு ஓலை!’ என்று பெரியதோர் சூள் உரைத்த சூரர்கள் கூட்டம் அது.

வழக்கமாகக் கூடி, வசீகரமாகப் பேசி, வளையாது குனியாது வாய் வீரம் காட்டிவிட்டு, வாகை சூடியதாக மனப்பால் குடித்துவிட்டு, தோகையர் புடைசூழப் போக பூமிக்குச் செல்லும் சுகபோகிகளின் கூட்டம் அல்ல! வறுமையின் இயல்பைத் தெரிந்தவர்களின் கூட்டம்! பசியும் பட்டினியும் எப்படி இருக்கும் என்பதை அறிவார்கள் பாட்டாளிகள் ; ஆனால், பார்ப்பனியத்தின் பாதத்தைத் தாங்கும் ஏமாளிகளல்லர் ; அந்தப் பார்ப்பனியத்தை மத சமுதாயத் துறைகளிலே முறியடிக்காமலேயே பட்டத்தரசராகிவிட முடியும் என்று கருதும் கோமாளிகளல்லர் ; ஊருக்கு உழைத்து உருமாறிக் கிடக்கும் உத்தமர்கள் கூடினர் அன்று. உறுதியை வெளிப்படுத்தினர், ஊர் ஆள்வோரின் உளமும் உணரும் விதத்திலே. பட்டம் பதவிக்காகவே கொட்டாவி விட்டுக் கிடக்கும் கட்சி என்றிருந்த பழிச் சொல்லை அன்று துடைத்தனர். மணி மீது கிடந்த மாசு துடைக்கப்பட்டது ; ஒளி வெளிவரத் தொடங்கிவிட்டது. பட்டம் ஏன்? பதவி ஏன்? பரங்கியும் பார்ப்பனனும் பார்த்தா, பாராண்ட தமிழனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும்?

கடல் கடந்தவன் தமிழன்! இமயத்தில் புலிக் கொடியைப் பொறித்தவன் தமிழன்!
கடாரத்தைக் கொண்டவன் தமிழன்! ரோம் நகருக்குப் பொன்னாடை விற்றவன் தமிழன்! இலக்கியச் சுவையைக் கண்டவன் தமிழன்! எந்நாடும் வியக்கும் வீரன் தமிழன்! ஏறுநடையுடையான் தமிழன்! இன்னல் கண்டும் புன்னகை புரிவான் தமிழன்! அவனுக்குப் பட்டம் - சோப்பும், சீப்பும், கண்ணாடியும் விற்கவந்து, பின்னர் அரசாள ஆரம்பித்த துரைமார்கள் தருவதா! ஏன்? அந்த நாள் தொட்டு, ஆரியன் தமக்கு இட்டசூத்திரன்என்ற இழிபட்டம் போக்க, சிறு விரலை அசைக்காதவருக்கு, இராவ் பகதூர் எதற்கு? இந்தப் பட்டமும் பதவியும், தமது காலிலே தட்டுப்பட்டால் மட்டுமே எடுத்துக் கொள்ளும் பண்பினர் பலர் உண்டு! ஒரு சிலர் உண்டு, பகலிலே அதுபற்றியே பேச்சு, இரவிலே கனவு, எந்த நேரமும் அந்தச் சிந்தனையே!! அவர்களின் தொகை மிகக் குறைவு! பிரிட்டனின் பாரதிதாசன் எனத் தகும் ­ல்லி என்ற ஆங்கிலக் கவிஞன் கூறினது போல, ‘அவர்கள் சிறுதொகை! நாம் மிகப் பலர்!!’ மிகப் பலர் கூடி, ‘அவர்களை ஒன்று உம் இயல்பை மாற்றிக் கொள்ளுங்கள், அது இயலாது எனின், எமக்குத் தனி வாழ்வு நடத்த வழி செய்து விடுங்கள்என்று கேட்டுக் கொண்டனர், பட்டம் பதவிகளை விட்டு விடுவது என்ற தீர்மானத்தின் கருத்து அதுதான்! தளபதி பாண்டியன் (.பு..சவுந்தர பாண்டியன்) அவர்கள் இத்தீர்மானத்தை ஆதரித்ததுடன், அது நடைமுறைக்கு ஏற்றதாக அமைவதற்கு முக்கியமாக கட்சியிலே ஒழுங்கான அமைப்பு வேலை இருக்க வேண்டும் என்று கூறினார்கள். ‘ஆம்! செய்வோம்என்று கூறினர் அன்பர்கள்.

தமிழகத்தைப் பொறுத்த வரையிலே, தளபதிகள் இசைந்துவிட்டனர், இந்த ஆக்க வேலைக்கு. இதற்கான ஊக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு உணர்ச்சியுள்ள தோழர்களுடையது. இதைக் காரியத்திலே காட்டும்சக்திவாலிபர்களிடம் இருக்கிறது. சிறு கிராமம் முதற்கொண்டு பெரிய நகரம் வரை யிலே செல்லுங்கள், செய்தியைச் சொல்லுங்கள், திராவிடர் கழகத்திலே ஏராள மாகத் தோழர்களைச் சேர்த்துக் காட்டுங்கள். தலைவர்கள் ஆச்சரியப்பட வேண்டும், அந்த அணிவகுப்பைக் கண்டு. ஆரியம் அலற, ஆங்கிலம் உணர ஓர் அணிவகுப்புத் தேவை! விரைவாகத் தேவை! வேலை மிகுதியாக இருக்கிறது. விடுதலை முரசு கொட்டப்பட்டுவிட்டது. இன அரசுக்குப் போர், இறுதிப் போர் நடந்தாக வேண்டும். இன்றே கிளம்புக, திராவிடர் கழகங்களை நிறுவ, பலப்படுத்த!!

ஆந்திரமும், கேரளமும் இந்த வேகத்தைக் காணும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அதற்கான வழிவகையும் நிச்சயம் வகுக்கப்படும்.

இந்நிலையிலே, ‘திராவிடர் கழகம்என்று பெயர் மாற்றியது பிடிக்க வில்லை என்று கூறியும், கட்சியை நடாத்தும் உரிமை எமதே என்று உரைத்துக் கொண்டும், ஒரு சிலர், அறிக்கைகள் விடுவது பற்றி யாரும் கவலைக் கொள்ளத் தேவையில்லை. கூந்தலுள்ளோர் வாரி முடித்துக் கொள்ளட்டும்! நமக்கிருக்கும் வேலையயல்லாம், யாராலாவது, எந்த முறையிலாவது, இன்று நம் இனமிருக்கும் நிலைமை மாறித்திராவிட நாடு திராவிடருக்கேஆக வேண்டும் என்பதுதான். அதைச் செய்யவே நாம், வடு நிரம்பிய உடலும் வைரம் பாய்ந்த  உள்ளமும், சிந்தனை ததும்பும் மனமும், செய்வகை அனுபவமும் தெரிந்த, சிறைக் கோட்டத்துக்கும் வீட்டுக்கும் வித்தியாசமிருப்பதாகவே கருதாத, ஓய்வு அறியாத, ஒரு பெரியாரின் தலைமையிலே கூடி நிற்கிறோம்அவர் களம் பல கண்டவர் ; போர் பல நடத்தியவர்; போக வாழ்வை வெறுத்து ஏழை வாழ்வை நடாத்தி வருபவர். அவருக்கு அநேக தாலமுத்து நடராஜன்கள் கிடைப்பர். புற்றிலிருந்து ஈசல் கிளம்புவது போல வாலிபர்கள் வருகிறார்களே என்று ஆளும் கூட்டம் ஆயாசத்தோடு கூறும் விதத்திலே, வாலிபர்களை வரச் சொல்லும் வசீகரம் அவருக்கு உண்டு. அவர் நமக்குப் போதும். வேறு சிலருக்கு வேறு சிலர் தேவையாம்!! நமக்கு அது பற்றிக் கவலை வேண்டாம். போரிடத் தெரிந்த பெரியார், போர் வீரர்களுக்கு அழைப்பு விடுகிறார். போர் வீரர்கள் வருக! வருக! நமக்கு வேறு அறிக்கை வேண்டாம். தேவையுமில்லை.

உழைக்க வாருங்கள்! பிழைக்கும் வழி என்ன என்று என்னைக் கேட்காதீர் கள்! உங்கள் இனத்தை மீட்க வாருங்கள்! அதற்கு ஏற்ற சக்தி உண்டா? என்று என்னைக் கேட்காதீர்கள்! போருக்கு வாருங்கள்! அது எப்படி முடியும், எப்போது முடியும் என்று என்னைக் கேட்காதீர்கள். இதுவே பெரியாரின் அறிக்கை.

ஓய்வை விரும்புவோர் ஒதுங்கி நிற்கலாம், சாய்வு நாற்காலியினர் சாய்ந்து கிடக்கலாம், பதவிப் பிரியர்கள் பாதையை விட்டு விலகலாம், மானத்தைப் பெற உயிரையும் இழக்கும் மனப் போக்குடையோர் வரலாம்!! 


No comments: