Tuesday, December 31, 2019

அண்ணாவின் விடுதலைப்போர்- அய்ந்து அரசுகள் - 4


அய்ந்து அரசுகள்

ஒரிசா மாநில முன்னாள் அமைச்சர் கோதாவரி மிஸ்ராவுக்கும், தந்தை பெரியார் அவர்களுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் :

பெரியார் : ‘திராவிட நாடுதனி அரசாக அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை பற்றித் தங்கள் கருத்தென்ன?

கோதாவரி மிஸ்ரா : நியாயமான கோரிக்கையே! அந்தந்த இனம் தங்களின் தனி ஆட்சி கோருவதிலே தவறு என்ன இருக்க முடியும்?
பெரியார் : காங்கிரஸ் தலைவர்கள் மறுப்பதன் நோக்கம் என்ன?
மிஸ்ரா : அவர்கள் மறுக்காதது எது? எங்கள் கதையைக் கேட்டால் என்ன சொல்வீரோ?

பெரியார்என்ன? என்ன?

மிஸ்ரா : ஏன் கேட்கிறீர்கள் அந்த வயிற்றெரிச்சலை! எனக்கும் வார்தா வுக்கும் (அங்கே வாழும் காந்தியாருக்கும்) சண்டை ஏற்பட்ட இரகசியம் என்ன தெரியுமா? எல்லாம் நீங்கள் கேட்கிறது போல, என் மாகாண மக்களுக்கு நியாயம் வழங்கும்படி கேட்டதுதான்.

பெரியார் : என்ன கேட்டீர்கள்? ஏன் மறுத்தார்கள்?

மிஸ்ரா : விவரத்தைக் கேளுங்கள். ஒரிசா மாகாணம் ஒரியர்களின் இடம். மிக்க ஏழ்மையான மாகாணம். புதியது. இதற்கென ஏற்பட்டுள்ள எல்லைக் கோரி சரியல்ல. அதனால் பல தொல்லை. எல்லையைத் திருத்தி அமைத்தால், மாகாணத்தின் செல்வநிலை விருத்தி அடையும்.

பெரியார் : ஒரிசாவுக்குச் சொந்தமாக ஏதேனும் இடம், இன்னமும் ஒரிசாவில் சேர்க்கப்படவில்லையோ?

மிஸ்ராஆமாம்! ஜெம்ய­ட்பூர் பிரதேசம் இருக்கிறதே, அது பீகாருக்குச் செல்வமாக இருக்கிறது. ஆனால், அது பெருவாரியாக ஒரியா மக்களே உள்ள இடம், ஒரிசாவுக்கே சொந்தம். அதை பிகாரிலே சேர்த்துவிட்டனர். அதை ஒரிசாவிலே சேர்க்க காங்கிரஸ் தீர்மானிக்க வேண்டுமென்று கெஞ்சினேன், (காந்தியார் வாழும்) வார்தா வரந்தர மறுத்துவிட்டது.

பெரியார்ஏன்?

மிஸ்ராஒருக்காலும் ஜெம்ய­ட்பூர் பிரதேசத்தை, பிகாரிலிருந்து பிரிக்கக் கூடாது என்று பாபு ராஜேந்திர பிரசாத் கூறிவிட்டார், வார்தாவிலே. பிகாருக்கு வருமானம் கெட்டுவிடும். அது பிரசாதுக்குப் பிடிக்கவில்லை. பிரசாதுக்குப் பிடிக்காதது காந்தியாருக்குப் பிடிக்கவில்லை. காந்தியாருக்குப் பிடிக்காதது காங்கிரசுக்குப் பிடிக்குமோ! ஆகவே, எனக்கு வரம் இல்லை! இது மட்டுமா? சிட்டகாங் பிரதேசமிருக்கிறதே, அங்கே பெருவாரியான மக்கள் ஒரியாக்கள். ஆகவே, அந்த இடமும் ஒரிசாவுடனே தான் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதைச் செய்யுங்கள் என்று கேட்டேன். இதையும் மறுத்துவிட்டனர்.

பெரியார்இதற்கு யார் தடை சொன்னது?

மிஸ்ராசுபாஸ் சந்திரபோஸ், நேதாஜி இதை பலமாக எதிர்த்தார். சிட்டகாங், வங்காள மாநிலத்திலே இப்போது இருக்கிறது. அதை இழக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். அப்போது அவர் காந்தியாரின் செல்லப் பிள்ளைகளில் ஒருவராக இருந்தார். ஆகவே, எனக்குஇல்லைதான் கிடைத்தது.

பெரியார் : போசுக்குச் சிட்ட காங் மீது அவ்வளவு ஆசை பிறக்கக் காரணம்?

மிஸ்ரா : காரணமா? வாங்காளத்தில் இந்துக்களும், முஸ்லிம்களும் இருக்கும் வீதம் தெரியுமே உங்களுக்கு. முஸ்லிம்கள் மெஜாரிட்டி என்ற போதிலும், அதிகமான மெஜாரிட்டியல்ல! 56% முஸ்லிம், 44% இந்து என்ற அளவு இருக்கும். சிட்டகாங் ஒரியாக்கள் வாழும் இடம், இந்து பிரதேசம் ; இதை வங்கத்திடமிருந்து பிரித்துவிட்டால், வங்கத்திலே முஸ்லிம்களே மிக மெஜாரிட்டி! பஞ்சாபிலுள்ளது  போன்றாகிவிடும். இந்து ஆதிக்கம் குறையும். எண்ணிக் கையே குறையும். இது சுபாசுக்கு விருப்பமில்லை. சிட்டகாங் போய்விட்டால், வங்களாத்திலே இந்துக்களின் ஆதிக்கம் ஏற்படவே முடியாது. வங்காளமோவந்தே மாதரம்பிறந்த இடம்எனவே வம்புக்கு நிற்கிறது. முஸ்லிமுடன் சரவிடுவதற்காக, இந்து எண்ணிக்கையை அதிகமாகக் காட்ட, சிட்டகாங்கை விட மறுக்கிறார்கள் வங்க இந்துத் தலைவர்கள்.

பெரியார் : இப்படியா இருக்கிறது? பிறகு உங்கள் மாகாணத்தின் கதிதான் என்ன?

மிஸ்ராஇப்போது பூரி ஜகன்னாதர்தான்! என் கிளர்ச்சி வலுத்து ஓரியர்கள் பெருவாரியாக உள்ள இடம், ஒரிசாவுக்கு என்ற திட்டம் நிறைவேறினால் ஒரிசா மாநிலம் முன்னுக்கு வரமுடியும்.

மிகப் பழைய, மிகச் சிறிய மாடி வீட்டிலே, இந்த உரையாடல் நடந்தது, சில ஆண்டுகளுக்கு முன்பு. பண்டிட் கோதாவரி மிஸ்ரா, ஒரிசா மாநில மந்திரியா வதற்கு முன்பு நடந்த உரையாடல், அன்று ஒரிசாவின் நிலைமை விளக்கப் பட்டது போலவே, ஒவ்வொரு மாநிலத்திலும் (சிந்து மற்றும் வடமேற்கு எல்லைப் புறம் தவிர) இந்தப் பிரிவினைக் கிளர்ச்சி சம்பந்தமாகப் பல நிபுணர்கள்இங்கும் இந்தக் கதிதான்!’ என்று முறையிட்டனர்.

பஞ்சாப்! இங்கு மக்கள் பஞ்சாபிகள். ஆனால் சூத்திரக் கயிறு வியாபாரம், ‘பாம்பேவாலாவிடம் இருக்கிறது என்று லாகூரிலே ஒரு பிரபல வியாபாரி கூறினார். அவரும் வெளி மாநிலத்தவரே!

அசாமிலே ஒரு சிமென்ட் கம்பெனியின் ஆரம்ப விழா! அதை ஆதரிக்கும்படி வெளியிடப்பட்ட அறிக்கையிலே, கம்பெனியின் விசே­ குணங்களை விளக்கி இருந்தது. கம்பெனியின் திறமையை விளக்குவதை விட அசாமின் நிலைமை நன்கு விளங்கிற்று அந்த அறிக்கை மூலம்! இந்தக் கம்பெனியின் டைரக்டர்கள் மிக்க திறமைசாலிகள். 5 பேர் வங்காளிகள், 2 அய்ரோப்பியர் என்று அறிக்கை தெரிவித்தது. அசாமிய நாட்டுக் கம்பெனிக்கு வங்க, அய்ரோப்பிய முதலாளிகள்!

பம்பாயின் ஒரு பகுதி, மத்திய மாநிலத்திலே சில இடங்கள் ஆகியவற்றி னைக் கொண்டு விதர்ப்பா என்ற மாநிலத்தை அமைக்க வேண்டு மென்பது மாண்புமிகு ஆனே அவர்களின் கருத்து. அதற்கான கிளர்ச்சியும் இருந்து வருகிறது.

பிகாரிலே வெளி மாநிலத்தாரின் ஆதிக்கத்தையும், உயர்ந்த ஜாதிக்காரர் என்போரின் ஆளுகையையும் ஒழித்து பிகாரின் பூர்வ குடிகளுக்கு உரிமை ஏற்படுத்தி, பிகாரிலே அவர்களின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆதிபாசி இயக்கம் இருக்கிறது. (ஆதிவாசிபூர்வ குடிகள் என்பதுதான் ஆதிபாசி என்பது) இதனைப் பக்குவமாக நடத்திக்கொண்டு வருகிறார்கள்.

நாட்டிலே இன்றுள்ள உணர்ச்சியை, நாட்டின் பெரிய கட்சி என்ற பாத்தியதை கொண்டாடும் காங்கிரஸ் மறைக்கப் பார்க்கிறது என்ற போதிலும், பிரிவினை உரிமை எனும் எண்ணம், எங்கும் தோன்றிவிட்டது. ‘திராவிட நாடுதனிநாடாக வேண்டுமென்ற நமது கிளர்ச்சி, இதிலே ஒரு பகுதி. சர் பிரேஸ்கான் நூன், அலிகார் பல்கலைக் கழக மாணவர் கூட்டத்திலே பேசுகையில், இந்தியா,

1. எல்லைப்புறம், பலுசிஸ்தானம், பஞ்சாப்
2. வங்காளம், அசாம்
3. மத்திய மாகாணம், அய்க்கிய மாகாணம்
4. பம்பாய் (மகாராட்டிரா)
5. திராவிட நாடு (தமிழ்நாடு)

என அய்ந்து அரசுகளாகப் பிரித்து அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார். வெளிநாட்டுப் படை எடுப்பு ஏற்பட்டால் என்ன செய்வதென்று பேசுவோரின் வாயை அடக்கவும் வழியயான்று கூறியுள்ளார். இந்த அய்ந்து அரசுகளும் அனுப்பும் பிரதிநிதிகள் கொண்ட மத்திய சர்க்கார் (அரசு), பாதுகாப்பு, நாணய வாரி முறை ஆகியவற்றை நடத்திவரலாமென்றும் கூறியிருக்கிறார்.

நியூஜிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகியவை தனி அரசு களாக இருத்தல் சாத்தியமாகிறதே, இங்கு அய்ந்து அரசுகள் ஏற்படுவதிலே என்ன தவறு இருக்க முடியும் என்றும் கேட்டிருக்கிறார். அய்ம்பத்தாறு அரசுகள் இருந்தனவாம் இந்து ஆட்சிக்காலத்திலே. புராண, இதிகாசங்களும் ஆரம்பகாலச் சரிதைகளும் இதனை வலியுறுத்துகின்றன. அய்ம்பத்தாறு அரசுகள் கொண்ட பூபாகத்திலே இன்று சர் நூன் கூறும் விதமான அய்ந்து அரசுகளும் கூட இருக்க இந்துத் தலைவர்கள் சம்மதிக்காதது விந்தைதான்!

இப்போது காரணம்- முன்னாளிலே இந்த அய்ம்பத்தாறு அரசுகளும், ஆரியக் கூடங்கள்! ஆகவே அந்த நிலை பாரத மாதாவை வெட்டுவதாகத் தோன்றவில்லை! இப்போது தனி அரசுகள் ஏற்பட்டால், ஆரிய ஆதிக்கம் அழிந்தொழியும். எனவேதான், இன்று தனி அரசுகள் அமையக் கூடாதென்று ஆர்ப்பரிக்கின்றனர்.

எவ்வளவு கடுமையான கூக்குரலைக் கிளப்பினாலுஞ் சரியே ; இந்தப் பிரிவினைக் கிளர்ச்சி அடங்காது. வேரூன்றிவிட்டது. முறைகள் திட்டங்கள் பலப்பல வெளியிடப்படக் கூடும். சர் நூன் கூறிய மத்திய சர்க்கார் என்பதை, இந்திய நேச நாடுகளின் கூட்டுப் பாதுகாப்புக் கழகம் என்ற அளவில் மட்டுமே நாம் ஏற்றுக் கொள்கிறோம். திட்டங்களிலே பலவிதம் விவாதிக்கப்படுவது சகஜமே. ஆனால், அடிப்படையான கோட்பாடு இனி மாய்க்க முடியாதது ஆகி விட்டதைக் காங்கிரஸ் உணர மறுப்பது ஏனோ? யார் மறந்தாலும் இந்தக் கிளர்ச்சி அடங்கிவிடப் போவதில்லை. அறிவாளிகள், இந்தக் கிளர்ச்சி பற்றி அலட்சியமாக இருந்துவிடவும் முடியாது. ‘பாகிஸ்தான் பிரிட்டிஷாரால் தரவும் முடியாது ; முஸ்லிம்கள் அடையவும் முடியாதுஎன்று முப்புரி தரித்த முதியோர் ராமஸ்வாமி சாஸ்திரி முதல் புத்தர் அவதாரமென்று சொல்லும் வார்தா முனிவர், காந்தியடிகள் உள்பட சொன்னார்கள்; மறுத்தார்கள். காலப் போக்கையும் கருத்து வளர்ச்சியையும் உணர மறுக்கும் உன்னதமான உரிமையை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

பலப்பல ஆண்டுகளுக்கு முன்புஎதிரி எப்படி வருவான், எடுத்து வீசு துளசியை எங்கும்என்று கூறினாராமே தஞ்சை மன்னனுக்கு ஒரு கனபாடி, அந்த வாழையடி வாழையாக வந்த திவான் பகதூருக்கு இத்தகைய உரிமை நிச்சயம் உண்டு! கிடக்கட்டும், விழியிருந்தும் வழி தெரியாத இத்தகைய வித்தகர்கள் ஒருபுறம்!

நமது கிளர்ச்சிக் குரல், உள்நாடு, வெளிநாடுகளிலும் கேட்குமாறு செய்ய வேண்டும். எந்தத் திட்டம் வந்தாலும், எத்தனை அரசுகள் அமைக்கப்பட்டாலும், இயற்கை சரிதம், இனப்பண்பு, இலக்கியம், இன்றைய நிலைமை முதலிய எந்த ஆதாரத்தைக் கொண்டு அரசுகள் அமைப்பதானாலும், நர்மதை ஆற்றங் கரையிலிருந்து கன்னியாகுமரி வரையிலே, ‘திராவிடநாடுஅமைக்க வேண்டும் என்பதே நம் கோரிக்கை.


No comments: