Friday, January 31, 2025

மகாவம்சம்

 இந்தியாவின் இதிகாசங்களான "ராமாயணம்'', "மகாபாரதம்'' போன்றது பாலி மொழியில் எழுதப்பட்ட "மகாவம்சம்'' என்ற நூல். இதை தங்களின் வேத புத்தகம் போல சிங்களர்கள் மதிக்கிறார்கள்.

http://www.paristamil.com/tamilnews/view-news-MjQ2MTE5Nzk2.htm#.UP-U9B1tj8A

இதை தங்கள் "வரலாறு'' என்று சிங்களர்கள் கூறினாலும், நம்ப முடியாத கட்டுக் கதைகளும் இதில் உண்டு.

விஜயன்

இலங்கையில் சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் - இலங்கையின் முதல் சிங்கள மன்னன் விஜயன் என்று மகாவம்சம் கூறுகிறது.

விஜயன் பற்றி மகாவம்சத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:-

"வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் ஒரு காலத்தில் லாலாதேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் பெயர் சிங்கபாகு. இவர் சிங்கத்துக்கும் ஒரு ராஜகுமாரிக்கும் பிறந்தவர்!

பிற்காலத்தில் இவருக்கு உண்மை தெரிகிறது. ஒரு குகையில் இருந்த சிங்கத்தை (தன் தந்தையை) கண்டுபிடித்து தலையை வெட்டி துண்டிக்கிறார்.

சிங்கபாகு, சிகாசிவாலி என்ற பெண்ணை மணந்து அவளை பட்டத்து ராணி ஆக்குகிறார். இவர்களுக்கு 16 முறை இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன! (அதாவது 32 குழந்தைகள்)

இந்தக் குழந்தைகளில் மூத்தவன் விஜயன். அவனை பட்டத்து இளவரசனாக சிங்கபாகு நியமிக்கிறார்.

மக்கள் புகார்

விஜயன் மிகவும் கொடூரமானவன். அவன் செய்த அட்டூழியங்கள் பற்றி, மன்னனிடம் மக்கள் முறையிடுகிறார்கள். மகனைத் திருத்த முயற்சிக்கிறார், சிங்கபாகு. ஆனால் விஜயன் திருந்தவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, மக்களைத் துன்புறுத்துகிறான்.

அவன் அட்டூழியங்கள் எல்லை மீறிப்போனதால், மன்னனிடம் மக்கள் மீண்டும் முறையிடுகிறார்கள். "விஜயனுக்கு மரண தண்டனை விதியுங்கள்'' என்று வற்புறுத்துகிறார்கள்.

இதன் காரணமாக, விஜயனையும், அவன் நண்பர்கள் 700 பேர்களையும் நாடு கடத்துகிறார், மன்னர். இவர்களை மூன்று கப்பல்களில் ஏற்றி, "எங்காவது போய் பிழைத்துக் கொள்ளுங்கள். இனியாவது திருந்தி வாழுங்கள்'' என்று புத்திமதி கூறி அனுப்பி வைக்கிறார். மூன்று கப்பல்களும் இலங்கையை அடைகின்றன.

அடைக்கலம் கொடுத்த அழகி

விஜயன் கப்பலை விட்டு இறங்கி, இலங்கைத் தீவில் காலடி வைக்கிறான். இது கி.மு. 543-ல் நடந்தது.

விஜயன் இறங்கிய இடம் அழகிய இயற்கைக் காட்சிகள் கொண்டது. அங்கு ஒரு மரத்தடியில் குவேனி என்ற பெண் அமர்ந்திருக்கிறாள். இவள் ராட்சச குலத்தைச் சேர்ந்தவள்.

(குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு ஆகும். கவினி என்றால் "பேரழகு படைத்தவள்'' என்று பொருள்.

இலங்கையை ஆண்ட ராவணன் ராட்சதன் என்று கூறப்பட்டதுபோல, குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கிறது, "மகாவம்சம்'')

குவேனியை விஜயன் சந்தித்து அடைக்கலம் கோருகிறான். அவள் அடைக்கலம் அளிக்கிறாள்.

இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறக்கிறார்கள்.

பாண்டிய இளவரசி

விஜயனுடன் இலங்கை சென்ற அவனுடைய 700 நண்பர்களும் பல நகரங்களையும், கிராமங்களையும் உருவாக்குகிறார்கள். அந்தப் பகுதிகளை உள்ளடக்கிய ராஜ்ஜியத்துக்கு மன்னனாகும்படி, விஜயனை கேட்டுக் கொள்கிறார்கள்.

ஆனால், விஜயன் மறுத்து விடுகிறான். "ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளவரசியை நான் மணந்தால்தான், சிம்மாசனம் ஏறமுடியும்'' என்று கூறுகிறான்.

இதன் காரணமாக, விஜயனின் நண்பர்கள் மதுரைக்கு செல்கிறார்கள். மதுரை மன்னனுக்கு முத்துக்கள், தங்க ஆபரணங்கள் முதலியவற்றை பரிசாக வழங்கி, தங்கள் மன்னனான விஜயனுக்கு இளவரசியை மணமுடித்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

இதற்கு பாண்டிய மன்னன் சம்மதிக்கிறார். பாண்டிய இளவரசியுடன், விஜயனின் 700 நண்பர்களுக்கும் 700 பெண்களை தேர்வு செய்து, இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார்.

குவேனியின் கதி

பாண்டிய இளவரசி தன்னை மணப்பதற்கு இசைந்து இலங்கைக்கு வந்து விட்டதை அறிந்து விஜயன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறான்.

குவேனியை அழைத்து, "நான் பாண்டிய ராஜகுமாரியை மணக்கப்போகிறேன். என்னுடைய இரண்டு குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு, இங்கிருந்து போய்விடு'' என்று கூறுகிறான்.

இதனால் வேதனை அடைந்த குவேனி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு "லங்காபுரா'' என்ற இடத்துக்கு போய்விடுகிறாள். இவர்களுடைய வம்சாவளியினர், இலங்கையின் பழங்குடியினராக உள்ள வேட்டுவர்கள்.

திருமணம்

பாண்டிய ராஜகுமாரியை மணந்து கொண்ட விஜயன், அவளுடன் வந்த 700 பெண்களுக்கும் அமைச்சர்களாக உள்ள தன் நண்பர்களை அவரவர் தகுதிக்கு ஏற்ப மணம் முடித்து வைக்கிறான்.

முன்பு கொடியவனாகவும், முரடனாகவும் இருந்த விஜயன் நல்லவனாக திருந்தி, 38 ஆண்டு காலம் தர்மம் தவறாமல் இலங்கையை ஆண்டான். அவனது சந்ததிகளே சிங்களர்கள்.''

இவ்வாறு மகாவம்சம் கூறுகிறது.

தபால் தலை

1956-ல் "விஜயனின் வருகை'' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது.

தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத் தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்த தபால் தலையை வாபஸ் பெறவேண்டும்'' என்று கூறினார்கள்.

இதன் காரணமாக, இந்த தபால் தலையை இலங்கை அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது. ஆனால், அதற்குள் இந்த தபால் தலை உலகம் முழுவதும் பரவி விட்டது

http://www.paristamil.com/tamilnews/view-news-MjQ2MTE5Nzk2.htm#.UP-U9B1tj8A

உ.வே.சாமிநாதய்யர் தமிழ்த்தாத்தாவா? பார்ப்பன தாத்தாவா?

தமிழ்த்தாத்தா? பார்ப்போமா மறுபக்கம்

*****************************************************************

டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் பல தமிழ் நூல்களைத் தேடிக் கண்டுபிடித்துப் பதிப்பித்தார்; தமிழ் வளர்த்த தாத்தா _ சுருக்கமாக, தமிழ்த்தாத்தா(?) என்றெல்லாம் புகழப்படுபவர். இவருக்கு, தாட்சிணாத்திய கலாநிதி, மகாமகோபாத்யாய, டாக்டர் முதலான பட்டங்களும் உண்டு. எல்லாம் சரி! உ.வே.சா.வின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துவிட்டு இவ்வாறெல்லாம் போற்றப்பட்டார். அதேசமயம், இவரது மறுபக்கத்தையும் பார்க்க வேண்டாமா? பார்ப்போமா? பார்ப்போமே! அப்பொழுதுதானே பார்ப்பார் உண்மை புலப்படும். மறுபக்கத்தின் சில பகுதிகளைப் பார்க்கப் போகிறோம்!

தமிழ் மரபுக்குத் தவறான விளக்கம்

தமிழ் மரபும் தமிழ்த்தாத்தாவும்:

தமிழ் மரபுகளுள் ஒன்றுக்கு உ.வே.சா. பின்வருமாறு விளக்கம் தருகிறார்.

ஏழை வேலைக்காரனிடம், சோறு தின்றாயா? என்று கேட்பது மரபு. கனவானிடம் இப்படிக் கேட்பது மரபன்று.

போஜனம் ஆயிற்றா?

நிவேதனம் ஆயிற்றா? என்பதுதான் தமிழ் மரபு.

போஜனம், நிவேதனம் என்ற சமஸ்கிருதச் சொல்லை, ஒரு பணக்காரன், பெரிய மனிதன் ஆகியோரிடம் பயன்படுத்த வேண்டுமாம்! கனவான் என்றால் அவன் பார்ப்பனனாகத்தான் இருக்க வேண்டுமா?

அதுதான் தமிழ் மரபாம்! சொல்கிறார் தமிழ்த்தாத்தா!

உண்மையா-? இது தமிழ் மரபா? நல்ல நகைச்சுவை! கலப்பில்லாத தூய _ தனி வடமொழி _ சமஸ்கிருத மரபு அல்லவா? தமிழ்த்தாத்தாவுக்கு இது ஏன் தெரியாமல் போனது? தெரியாமலா இருக்கும்.

அதுதான் பார்ப்பனப் பண்பு! பார்ப்பன மரபு!

சோறு என்ற சொல்:

ஏழை வேலைக்காரனிடம்தான் சோறு தின்றாயா? _ என்று கேட்க வேண்டுமாம்!

வேலைக்காரன் அதுவும் ஏழை, அவனிடம் மட்டும் சோறு என்ற தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்த வேண்டுமாம்! சோறு என்ற தமிழ்ச்சொல் ஏழை வேலைக்காரனுக்கு மட்டுமே உரியதாம்!

ஏழை என்றாலோ வேலைக்காரன் என்றாலோ அத்துணை இழிவோ?

அதனால் அவனிடம் (அவாள் பார்வையில்) இழிமொழியாகிய சோறு _என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டுமா?

என்ன தலைப்பளு? எத்துணை தமிழ் இழிவு?-

இதைத்தானே பார்ப்பனர் பண்பு என்றார் தந்தை பெரியார்.

இவர்தான் துறவி என்பவரா?

மேலும் சொல்கிறார் உ.வே.சா. துறவியிடம் பிக்ஷை ஆயிற்றா? _ என்று கேட்க வேண்டுமாம்! அதுதான் தமிழ் மரபாம்!

பிக்ஷை என்பது சமஸ்கிருதச் சொல்! அதனைப் பார்ப்பனத் துறவியிடம்தானே சொல்ல முடியும்? சொல்ல வேண்டும்?

தமிழ்த் துறவியிடம் இவ்வாறு வடமொழியில் சொல்ல முடியுமா?

வர்ண - ஆசிரம வல்லாண்மை

துறவி என்றால் (சந்நியாசி) அவர் பார்ப்பனராகத்தான் இருக்க வேண்டுமா?

ஆம்! அப்படித்தான்! அதுதான் வர்ண ஆசிரம தர்மம்! அதன் வல்லாண்மை!

அவர், ஒன்று, கொலைக் குற்றம் சாற்றப் பெற்று நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் காஞ்சி காமகே()டிச் சுப்பிரமணிய பீடாதிபதியாக இருத்தல் வேண்டும். அல்லது வானமாமலை அல்லது அஹோபில மடாதிபதியாக இருக்க வேண்டும். தருமபுர மடாதிபதி துறவியாக முடியுமா? திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் துறவியா? அவர்கள்தாம் அப்படிச் சொல்லிக் கொள்ளலாம். இரண்டும் சைவ சித்தாந்தம் பரப்பும் மடங்கள்.

அடிகளாரிடம் அப்படிக் கேட்போமா?

எல்லாவற்றையும் தள்ளுங்கள்! தந்தை பெரியாரின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நம் குன்றக்குடி குருமகா சன்னிதானம் தமிழ் மாமுனிவர் அவர்களும் அவாள் வர்ண ஆசிரமப்படி துறவியல்லர். அவரிடம் எல்லாம் பிக்ஷை கொண்டீர்களா? என்று எவராவது கேட்பார்களா? கேட்போமா?

உணவு கொண்டீர்களா? என்றுதானே கேட்போம்! அவர் மெய்யான தனித் தகைமைப் பச்சைத் தமிழர் ஆயிற்றே?

பார்ப்பனர் அல்லாத _ நாலாம் ஜாதிச் சூத்திரர் துறவி (சந்யாசி) ஆகமுடியாதே? வேதம் ஒத்துக் கொள்ளாதே? மனுநீதி மறுத்துவிடுமே?

புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் நல்லது!

பிக்ஷை என்ற சமஸ்கிருதச் சொல்லைத்  துறவியிடம் பயன்படுத்த வேண்டும் என்றால், அந்தத் துறவி யாராக இருக்க முடியும்? பச்சைப் பார்ப்பனர் ஆகத்தானே இருக்க முடியும்? இப்பொழுது புரிகிறதா?

புரிந்துகொள்ள வேண்டிய பூணூல் போடாத சன்னிதானங்களுக்கல்லவா சாமிநாதய்யர் சொன்ன சொல்லின் சூட்சுமம் புரிந்திருக்க வேண்டும்?புரிந்து கொள்ளாமல் சைவச் சன்னிதானங்கள் இருக்கின்றனவா? இல்லை, புரிந்தும் புரியாமலேயே இருக்கிறார்களா?

வானொலி உரை வண்ணம்

மேலே, நாம் சொன்ன செய்தி இந்த உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் 21.9.1941இல் திருச்சி வானொலியில் பேசிய பேச்சின் ஒரு பகுதியாகும். இதனை, 6.11.1941 சிவநேசன் இதழ் வெளியிட்டுள்ளது.

வடமொழி அடைமொழிக்கு வக்காலத்து அடைமொழி பற்றி அரசின் எதிர்பார்ப்பு

அன்றைய சென்னை மாகாண (இன்றைய தமிழ்நாடு)த்தில் நீதிக்கட்சி ஆட்சி செய்தபோது, தமிழ் மக்களின் பெயர்களுக்கு முன் சிறீ_எனப் போட்டு வந்ததற்கு மாற்றாக திரு_என்று போடலாமே என்று தமிழ் ஆர்வலர்கள் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். அரசு, இதுபற்றி மக்களின் கருத்தை அறிய விரும்பியது _ எதிர்பார்த்தது.

எம்மை யார் என்று எண்ணி எண்ணி நீர் பார்க்கிறீர்?

சிறீ என்று போடுவதுதான் சரியான அடைமொழி; அப்படித்தான் போட வேண்டும்; அதுதான் சரி என்று கருத்து வெளியிட்டனர் அறிஞர் பலர். இவர்களுள் முதன்மையான இருவரை மட்டுமே இங்கு நாம் சுட்டிக்காட்ட விழைகிறோம்.

அவர்கள் யார் தெரியுமா? திருவாளர்கள்: 1. மு. இராகவய்யங்கார்

2.மகாமகோபாத்யாய. உ.வே. சாமிநாதய்யர்

தமிழினவுணர்வுத் தகையாளர்கள்:

அடைமொழியாக, கட்டாயம் திரு என்பதைத்தான் போடுதல் வேண்டும்; அதுதான் சரி! என்று கருத்து வெளியிட்டனர் பச்சைத் தமிழர்கள் பலர். அவர்களுள் முதன்மையானவர்கள் இருவர்.

அவர்கள், 1. நாவலர். ச. சோமசுந்தர பாரதியார் 2. பண்டிதமணி மு. கதிரேசன் (செட்டியார்)

யார் உண்மையான தமிழ் ஆர்வலர் என்பதை இதன்மூலம் நாம் இனம் கண்டுவிட்டோம் அல்லவா?

பார்த்தீர்களா, தமிழ்த்தாத்தாவின் தமிழ்ப்பற்றினை? உ.வே.சா.வின் மறுபக்கத்தின் மற்றொரு பகுதி இது!

நம்ப வைத்துக் கழுத்தறுத்த நயவஞ்கம்

பாடும் உனை நான் பாடவைத்தேனே!

சங்கீத நினைவு அலைகள் _ என்ற நூலின் ஆசிரியர் எம்.எஸ். சவுந்தரம் அம்மையார்.

திருவாளர் ஏகாம்பரம் சவுந்தரம் கணவரின் உறவினர். இவர், திருவனந்தபுரம் நீதியரசர் இலக்குமணப் பிள்ளை அவர்களின்  நெருங்கிய நண்பர்.

இசைவாணியாகிய இந்த நூலாசிரியரைப் பாடச்சொல்லிக் கேட்க நீதியரசர் விரும்பினார்; அதற்கான ஏற்பாடுகள் செய்தார். சவுந்தரத்திடம் இசை தொடர்பான நுணுக்கங்களை விளக்கிக் கூறினார். பல இராகங்களில் பாடிக் காட்டினார்.

சவுந்தரமும் தன் பாடல்திறனை அவரிடம் பாடிக்காட்டினார்.

பட்டம் கொடுக்கத் திட்டம்

நீதியரசர் இலக்குமணப் பிள்ளைக்குத் தமிழ்த் தியாகய்யர் என்னும் பட்டம் கொடுக்க இசை ஆர்வலர்கள் திட்டமிட்டனர். தெலுங்குத் தியாகய்யர் இசை வல்லுநர் என்றால் நீதியரசர் தம் இசை வல்லமையால் தமிழ்த் தியாகய்யர் என்ற பட்டம் பெறத் தகுதியானவர் என்பது ஆர்வலர்களின் விருப்பம்;

இந்தப் பட்டத்தை யார் மூலம் வழங்குவது?

பட்டம் வழங்க முடிவு செய்தாயிற்று; இதை யார் வழங்குவது? யார் வழங்கினால் சிறப்பாக _ மதிப்பாக இருக்கும்? எனக் கலந்துரையாடினர் அன்பர்கள்.

இறுதியில், தமிழ்ப்புலவரும் தமிழ்த்தாத்தாவும் ஆன உ.வே.சாமிநாதய்யர் மூலம் வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானித்தனர்; முடிவை அவருக்குத் தெரிவித்தனர்; அவரும் வருவதாக இசைந்தார்.

பட்டம் திரு. எம்.எஸ்.இராமசாமி என்பவர் இல்லத்தில் கொடுக்கப்படுவதாக ஏற்பாடு. இசைச்சுவைஞர்கள், ஆர்வலர்கள் அனைவரும் வந்திருந்தனர்.

கேட்டவர் எல்லாம் கிறங்கிப் போதல்:

நீதியரசர் முதலில் பல தமிழ்க் கீர்த்தனங்களை இசைத்திறனோடு வீணையில் மீட்டிக் காட்டினார்; அவர் மகள் இலட்சுமி அவற்றைப் பாடிக் காட்டினார்.

நீதியரசரும் பாடிக் காட்டினார். இவ்வண்ணம், பக்கவாத்தியங்கள் இல்லாமல் 2 மணி நேரம் கேட்டவர்கள் வியந்து மனம் கிறங்கிப் போயினர். நீதியரசர் பாடி முடித்தார்! அடுத்தது பட்டம் வழங்கும் நிகழ்ச்சி!

நீயே உனக்கு என்றும் நிகரானவன்!

உ.வே.சாமிநாதய்யர் பேச எழுந்தார்; என்ன செய்தார்? என்ன பேசினார்? இதோ நூலாசிரியர் சவுந்தரம் அம்மையார் எழுதியதைப் படியுங்கள்:

திரு. உ.வே.சாமிநாதய்யர், தியாகய்யரின் குணங்கள்; அவருக்கு ஏற்பட்ட அரிய சந்தர்ப்பங்கள்; அவருடைய அரிய கீர்த்தனங்கள்; அவர் பாட்டின் சுவைகள்; மேலும், அவர் வால்மீகியின் மறுபிறப்பு; அவர் கீர்த்தனங்கள் இராமாயணத்தை ஒட்டியது; அவருக்கு அவரே ஈடு! அந்தத் தகுதிக்கு யாரும் இணையாக முடியாது! பிறவியும் எடுக்க முடியாது! _ என்று சொல்லிக் கொண்டே போனார். இறுதியாக நீதியரசர் பற்றி, பிள்ளை பெரிய மேதாவி, ஓர் அரிய ஜட்ஜ்; சங்கீதம் பற்றி நன்றாக ஆராய்ச்சி செய்துள்ளார் _ என்று கூறி, உரையை முடித்து அமர்ந்துவிட்டார்.

எவ்வளவு கைதேர்ந்த ஏமாற்றுக்காரர்!

மேலும் நூலாசிரியர் எழுதியதைப் படியுங்கள்.

சிறீ எம்.எஸ்.இராமசாமிக்கும், பிள்ளைக்கும் ஏமாற்றமே! அவரைக் கவுரவப்படுத்தி, பட்டம் அளித்து, அதை பிவீஸீபீ றிணீஜீமீக்ஷீலும் சுதேசமித்திரனிலும் போட வேண்டும் என்று பிவீஸீபீ ரி.ஷிக்ஷீவீஸீவீஸ்ணீணீஸீ, சுதேசமித்திரன் சி.ஸி. ஷிக்ஷீவீஸீவீஸ்ணீணீ மிஹ்மீஸீரீணீக்ஷீ அழைக்கப்பட்டு வந்திருந்தார்கள். பெரிய சிமீக்ஷீவீயீவீநீணீமீ தயார் செய்து உ.வே.சாமிநாதய்யர் கையால் வழங்கிப் பேச வேண்டும் என்று எழுதி வைத்திருந்து கொடுக்கப்படாமலே உ.வே.சாமிநாதய்யர் பேசி மழுப்பி விட்டார்! பாவம்! பெரிய ஏமாற்றம்!!

படித்தீர்களா, சங்கீத நினைவு அலைகள் _ நூலாசிரியர் எழுதியதை?

இலக்குமணப் பிள்ளையின் மார்பில் பூணூல் இல்லையே?

பெரிய தமிழ்ப்புலவர், அறிஞர் உ.வே.சா. ஏன் அப்படிச் செய்தார்? ஏன் அப்படி ஏமாற்றினார்?

நூலாசிரியர் சொல்லவில்லை! நமக்கா தெரியாது?

நீதியரசர் தமிழர்; சூத்திரர்; தியாகய்யர் பார்ப்பனர்; வர்ண தர்மப்படி பிராமணர்.

அப்படிப்பட்ட தியாகய்யருக்கு இணையாக நீதியரசரைக் கருதவில்லை உ.வே.சா.

அதனால், ஏதேதோ தியாகய்யர் பற்றிப் புகழ்பாடி நீதியரசருக்குத் தமிழ்த் தியாகய்யர் பட்டம் தர விரும்பவில்லை?

பட்டமளிப்பு விழாவிலே தியாகய்யர் பற்றி, தம்பட்டம் அடித்து இலக்குமணப் பிள்ளைக்குப் பட்டம் வழங்காமல் அமர்ந்து விட்டதற்குக் காரணம் இப்பொழுது புரிகிறதா?

எல்லாம் பார்ப்பனப் பற்று! பார்ப்பனர் பற்றிப் பெரியார் பேசியதைக் கண்டு கொள்ளாமல் பார்ப்பனர் பற்றிப் பெரிதாகப் பேசித் திரியும் நமது தமிழறிஞர்களுக்கு இது பாடமாக இருக்கட்டும்!

உ.வே.சா. பற்றிய உண்மை!

இப்பொழுது உ.வே.சா. பற்றிய உண்மையை அறிந்து கொண்டிருப்பீர்களே?

இதோடு நிறைவு செய்வதே நமக்குப் பெருமை; பெருந்தகைமை; பெருந்தன்மை; பண்பாடு; நயத்தக்க நாகரிகம்!!

-------------------------- பேராசிரியர் ந.வெற்றியழகன் -----"உண்மை”  ஜூலை 01-15 - 2013 இதழில் எழுதிய கட்டுரை

Tuesday, January 21, 2025

 பொ வேல்சாமி

(சங்ககாலத்திலேயே கல்வியிற்சிறந்து, தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழினம் பிற்காலத்தில் கல்வி மறுக்கப்பட்டுத் திட்டமிட்டுப் பின்னுக்குத் தள்ளப்பட்டது. அவர்கள் மீண்டும் கல்வியறிவு பெறக் கிறித்தவ நிறுவனங்கள் ஆற்றிய பணியை அறிஞர் பேராசிரியர் பொ. வேல்சாமி சான்றுகளோடு தருகிறார்.)

•••••••••••••••••••••••••••••••••••••••••••••

கைநாட்டுத் தமிழர்களுக்கு (1852) கல்விக்கண் திறந்த கிறிஸ்தவ நிறுவனங்களைப் பற்றி…

நண்பர்களே!

மதுரைச் செந்தமிழ்ப் பத்திரிக்கையில் 1906 இல் இராஜகோபாலாச்சாரியார் என்பவர் 19 ஆம் நூற்றாண்டில் தமிழ கத்தில் ”பொதுக்கல்வி“யின் நிலை பற்றிய ஒரு நல்ல கட்டுரையை எழுதி யுள்ளார்.  இன்றைக்குப் படித்தாலும் வியப்பளிக்கக்கூடிய பல செய்திகள் அக்கட்டுரையில் நிறைந்துள்ளன. அவற்றுள் ஒரு குறிப்பிட்ட செய்தியை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். 

1852 ம் ஆண்டுவாக்கில் கிறிஸ்தவ மிஷினரிகள் 1885 பள்ளிகளை நடத்திவந்தனர் என்றும்,  அவற்றில் 38000 மாணவ மாணவிகளும் படித்து வந்தனர் என்றும், இவர்களின் படிப்புச் செலவுக்காக அன்றைய காலக்கட்டத்தில் கிறிஸ்தவர்களால் செலவிடபட்ட தொகை 40000, 30000 (இன்றைய கணக்கில் சொல்வதானால் 120 கோடியும், 100 கோடியும் ) ரூபாய் என்றும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளிகளில் பெரும்பாலானவை தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி பகுதிகளில்தான் இருந்தன என்றும், அதேகாலத்தில் இந்துமதம் சார்ந்த நிறுவனங்கள் எவ்விதமான கல்விப்பணியையும் செய்யவில்லை என்றும் கவலையுடன் கூறப்பட்டுள்ளது.  

அந்தச் செந்தமிழ்ப் பத்திரிக்கையில் எழுதப்பட்டுள்ள பகுதியை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.

தமிழறிஞர் பொ.வேலுசாமி முகநூல் பதிவு(22.1.2020)

Saturday, January 18, 2025

இரண்டாவது பூமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இரண்டாவது பூமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு உயிரினங்கள் வாழ்கின்றனவா? அங்கு நாம் செல்ல எவ்வளவு வருடங்கள் ஆகும். நாம் அங்கு செல்ல சாத்தியமா என்பது பற்றி இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.

கெப்ளர் என்பது ஒரு செயற்கை விண்வெளி தொலைநோக்கி. இந்த தொலைநோக்கியின் வேலை பல ஒளிஆண்டுகள் தொலைவில் இருக்கும் வேற்று கிரகங்களை கண்டுபிடித்து ஆராய்ச்சி செய்வதுதான். அப்படி இந்த தொலைநோக்கி கண்டுபிடித்தது ஒரு வேற்று கிரகம். ஆம் இதன் பெயர்தான் Keplar - 452 b. 

சரி Keplar - 452 b இடம் செல்லலாமா? அப்படி அங்கு செல்ல ஒளியின் வேகத்தில் பயணிக்கக்கூடிய ஒரு விண்கலம் வேண்டும். அப்படி ஒளியின் வேகத்தில் சென்றாலும் இந்த நட்சத்திரத்திடம் செல்ல 1402 வருடங்கள் ஆகும்.1402 வருடங்கள் சென்ற பின்பு நம் சூரியனை போல அச்சு அசலாக ஒரு சூரியன் தெரியும். இதன் நிறை மற்றும் ஒளிரும் தன்மை ஏறக்குறைய நம் சூரியனை போன்று இருக்கும். ஆனால் நம் சூரியனை விட வயதில் மூத்தது. நம் சூரியன் உருவாகி ஏறக்குறைய 460 கோடி வருடங்கள் ஆகியுள்ளது. Keplar - 452  நட்சத்திரத்தின் வயது ஏறத்தாழ 600 கோடி. நம் சூரியனை விட  140 கோடி வருடம் முன்பே Keplar - 452  உருவாகிவிட்டது. இந்த நட்சத்திரமும் நம் சூரியனை போன்ற முதன்மை நட்சத்திரம்தான். 


நம் சூரியனின் வெப்பநிலை எந்த அளவிற்கு உள்ளதோ கிட்டத்தட்ட இந்த Keplar - 452 நட்சத்திரம் அதே அளவு வெப்பநிலையை கொண்டுள்ளது. ஆனால் ஒளிரும் தன்மை நம் சூரியனை விட 20% அதிகம். அதேபோல 3.7% பெரிய நட்சத்திரம். இதனாலதான் Keplar - 452  நட்சத்திரம் நம் சூரியனின் இரட்டை என்று அழைக்கப்படுகிறது. ஒரு நட்சத்திரத்தின் வயது அதிகரித்து கொண்டே போனால் அதன் ஒளிரும் தன்மையில் மாற்றம் ஏற்படும். அதாவது வெளிச்சம் மற்றும் வெப்பநிலை இரண்டுமே குறையும். நம் சூரியனின் தற்போதைய வெப்பநிலை 5778 கெல்வின். Keplar - 452  நட்சத்திரத்தின் வெப்பநிலை 5757 கெல்வின். இந்த நட்சத்திரத்தை ஒரு கோள் சுற்றுகிறது. அந்த கோள்தான் Keplar - 452 b அதுவும் நம் பூமியை போன்றே பாறை கோள். இந்த Keplar - 452 b வாழத்தகுந்த தூரத்தில்தான் Keplar - 452 நட்சத்திரத்தை சுற்றுகிறது. அங்கு ஒரு வருடம் என்பது 385 நாட்கள் ஆகும். கிட்டத்தட்ட நம் பூமியின் ஒரு வருடத்திற்கான நாட்களே ஆகும். 


Keplar - 452 b யின் வெப்பநிலை தோராயமாக  265  கெல்வின். பூமியின் வெப்பநிலை 284 – 285 கெல்வின். வெப்பநிலையிலும் இவை ஒரே இணையாக உள்ளது என்பதுதான் ஆச்சர்யம். சூரியனிலிருந்து நம் பூமி பெரும் வெப்பநிலையை விட Keplar - 452 b அதன் சூரியனிலிருந்து கூடுதலாக  10%  வெப்பநிலையை பெறுகிறது. இது ஒன்றும் பெரிய வித்தியாசமே இல்லை. அதனால் இந்த கிரகம் super earth என்பதில் சந்தேகமேயில்லை. நிறை அடிப்படையில் Keplar - 452 b கிரகம் முறை நம் பூமியைவிட 5 மடங்கு நிறை அதிகம் கொண்டுள்ளது. இந்த கோள் தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது நம் பூமியை போல. நம் சூரியனில் இருந்து பூமி இருக்கும் தொலைவை 1 AU என்பார்கள். இங்கு 1 AU என்பது 1 விண்வெளி அலகு(Astronomical Unit) ஆகும். Keplar - 452 b தன் சூரியனிலிருந்து 1.04 AU தொலைவில் உள்ளது. இதுவும் ஏறத்தாழ நம் பூமியை ஒத்துள்ளது. இதனால்தான் நம் பூமியையும் Keplar - 452 b யையும் இரட்டை என்கிறோம். இப்பொழுது நாம் அந்த கிரகத்திற்கு செல்ல நினைத்து New Horizon Space Craft வேகத்தில் அதாவது மணிக்கு 59,000 km வேகத்தில் சென்றால் நாம் Keplar 452 b இடம் செல்ல 2 கோடியே 60 லட்சம்(2,60,000,00) வருடங்கள் ஆகும். என்ன நண்பர்களே வியப்பாக உள்ளது அல்லவா? ஆம்  இது சாத்தியமே இல்லை. எவ்வளவுதான் பூமியை போன்று அந்த கிரகம் ஒத்துஇருந்தாலும் நாம் வாழ முடிந்தாலும் நாம் அங்கு செல்வதற்கான சாத்தியங்களே இல்லை என்பதுதான் உண்மை. 


என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? இதை பற்றிய உங்கள் கருத்தை எங்கள் பக்கத்தில் பதிவிடுங்கள்.


இப்படிக்கு, 

உங்கள் நடராஜ்

18.1.2021 வியப்பூட்டும் அறிவியல் முகநூல் பதிவு...


Tuesday, January 14, 2025

துக்ளக்கில் சுதா சேஷய்யன்எழுதியதற்கு மறுப்பு


தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

- மஞ்சை வசந்தன்

தமிழரின் பண்பாட்டுச் சிறப்புகளை அழிப்பதிலும் திரிப்பதிலும் ஆரியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதை மாற்றி, சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று திரித்து, சமஸ்கிருத பெயரைத் தமிழ் ஆண்டின் பெயர் என்று திணித்து, தமிழர் பண்பாட்டை அழிக்கின்றனர். 

20.1.2016 ‘துக்ளக்’ இதழில் சுதா சேஷய்யன் என்ற அம்மையார், தன் ஆரிய இனப்பற்றின் உந்துதலால் சித்திரையே தமிழ்ப் புத்தாண்டு என்று சாதிக்க முயற்சிக்கிறார். வலுவான சான்று எதையும் காட்டாது வழக்கமாக ஆரியம் செய்யும் மோசடி வேலையையே இவரும் செய்கிறார். எனவே, அதை மறுத்து உண்மையை உணர்த்த கீழ்க்கண்டவற்றை தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகிறது.

தமிழர்கள் நாள், மாதம் ஆண்டுக் கணக்கீட்டை உலகுக்கு முதன்முதலில் இயற்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டுக் கொடுத்தவர்கள்.

காலையில் சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற ஆகும் காலம் ஒரு நாள்.

மாதம் என்பதற்குத் திங்கள் என்று ஒரு சொல் உண்டு. திங்கள் என்றால் நிலவு. நிலவை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் திங்கள் என்ற பெயர் மாதத்திற்கு வந்தது.

முழுநிலவு தோன்றி மீண்டும் முழு நிலவு தோன்ற ஆகும் காலம் ஒரு மாதம்.
அதேபோல் ஆண்டு என்பது சூரியன் இருப்பை வைத்துத் தமிழர்களால் கணக்கிடப்பட்டது. சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடகோடி முனைக்குச் செல்ல ஆறு மாதம். அது மீண்டும் தென்கோடி முனைக்கு வர ஆறுமாதம். ஆக, தென்கோடி முனையில் தோன்றும் சூரியன் மீண்டும் தென்கோடி முனையை அடைய ஆகும் காலம் ஓர் ஆண்டு என்று கணக்கிட்டனர். (சூரியன் நிலையாகவுள்ளது என்பது அறிவியல் உண்மை. ஆனால் பார்வைக்கு அது இடம் மாறுவதாய்த் தோன்றுவதை வைத்துக் கணக்கிட்டனர்.)

உலகில் முதன்முதலில் ஆண்டுக் கணக்கீட்டை சூரியன் இருப்பை வைத்துக் கணக்கிட்டவர்கள் தமிழர்கள். பின் இதனைப் பின்பற்றியே ஆங்கிலேயர்கள் ஆங்கில ஆண்டை அமைத்தனர்.

சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் நாளே தமிழ் ஆண்டின் பிறப்பு. தமிழரின் புத்தாண்டு அன்றுதான். அந்த நாளே பெரும் பொங்கல் எனப்படும் சூரியத் திருநாள்.

ஆனால், இத்தகு வரலாற்றுச் சிறப்புக்குரிய இத்தமிழ்ப் புத்தாண்டை சித்திரை முதல்நாள் என்று மாற்றி, அதற்கு ஒரு புராணக் கதையை எழுதிச் சேர்த்து, தமிழ்ப் பண்பாட்டை ஒழித்து, ஆரியப் பண்பாட்டை, தமிழ்ப் புத்தாண்டிலும் புகுத்தினர்.

அதாவது, நாரதர் கிருஷ்ணனைப் பார்த்து, “நீர் அறுபதானாயிரம் கோபிகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னியைத் தரக்கூடாதா’’ என்று கேட்டார். அதற்கு கண்ணன், “நான் இல்லாப் பெண்ணை உனக்கு உரியதாக்கிக் கொள்’’ என்று கூற, நாரதர் எல்லா வீடுகளிலும் சென்று பார்த்தபோது, கண்ணன் இல்லாத வீடு கிடைக்காததால், கண்ணன் மீதே காமங்கொண்டு, “நான் பெண்ணாய் மாறி உங்களைப் புணர வேண்டும்’’ என்ற தன் விருப்பத்தை வெளிப்படுத்த, “யமுனையில் குளித்துவிட்டு வாருங்கள்’’ என்று நாரதரைப் பார்த்து கண்ணன் கூற, யமுனையில் குளித்த நாரதர் அழகிய பெண்ணாக மாறினார். அந்த அழகில் மயங்கிய கண்ணன், பெண்ணாயிருந்த நாரதரை அறுபது ஆண்டுகள் புணர்ந்து, அறுபது பிள்ளைகளைப் பெற்றார். அவர்களே, பிரபவ தொடங்கி அட்சய முடிய அறுபது ஆண்டுகள் என்று ஆபாசமான அறுவறுப்பான ஒரு புராணக்கதையைச் சொல்லி, இவற்றைத் தமிழாண்டுகள் என்றனர். தமிழே இல்லாத இந்த அறுபது ஆண்டுகளைத் தமிழ் ஆண்டு என்று திணித்தனர். 

தமிழாண்டு என்றால் தமிழிலல்லவா ஆண்டுப் பெயர் இருக்கும். சமஸ்கிருதத்தில் உள்ள 60 ஆண்டும் எப்படித் தமிழாண்டாகும். சித்திரை தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது ஆரியர் பண்பாட்டின் திணிப்பு. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதே தமிழரின் மரபு!

அடுத்து, அறிவியல் அடிப்படையில், வேளாண் விளைச்சலுக்கு முதன்மைக் காரணமாய் இருக்கும் சூரியனுக்கு நன்றி செலுத்தத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பொங்கல் திருநாளை மகரசங்கராந்தி என்று மாற்றினர் ஆரியப் பார்ப்பனர்கள்.

“சூரியன் தனுசு இராசியில் சஞ்சரிக்கும் காலம். இது தேவர்களுக்கு விடியற்காலம். மகா சங்கிரமே சக்தி எனும் சக்தி தட்சிணாயணம் ஆறு மாதத்தில் மனிதனை மூதேவி உருவாயும், பசுக்களைப் புலி உருவாயும் வருத்தி வந்த நிலையில், அத்துன்பம் ஈஸ்வரானுக்கிரகத்தால் நீங்கியதனால், தை மாதம் முதல் நாள், அக்காலத்து விளைந்த பொருட்களைக் கொண்டு சூரியனை வழிபட்டனர். இதுவே மகர சங்கராந்தி என்று கூறி, பொங்கல் திருநாளை மகா சங்கராந்தி யென்று மாற்றினர்.

சூரியத் திருநாளை மகர சங்கராந்தி என்று மாற்றியதுபோல, மழைத் திருநாளை போகி என்று மாற்றினர்.

மழைத் திருநாள் போகிப் பண்டிகையாக்கப்பட்டது

தமிழர்களிடம் கடவுள் நம்பிக்கை தொன்மைக் காலத்தில் இல்லை. அவர்கள் தங்களுக்குப் பயன்படுகின்றவற்றை, தங்களுக்கு நன்மையும், பாதுகாப்பும் தருகின்றவற்றை மரியாதையின் பொருட்டும், நன்றி செலுத்தவும் வணங்கினர்.

அதனடிப்படையில் மனிதர்களின் இன்பத்திற்கும், இனப் பெருக்கத்திற்கும் காரணமாய் அமைந்த ஆண் பெண் உறுப்புகளை இணைத்து நன்றியும், மரியாதையும் செலுத்தினர். அதுவே பின்னாளில் ஆரியர்களின் திரிபு வேலையால், புராணம் புனையப்பட்டு, சிவலிங்க வழிபாடாக்கப்பட்டது.

அதேபோல் குலப் பெரியோர், வீரர், பத்தினிப் பெண்டிர், நிலத் தலைவர் வழிபாடெல்லாம் அம்மன், முருகன், மாயோன், வருணன் வழிபாடுகளாக மாற்றப்பட்டன.

இதே அடிப்படையில் வேளாண் விளைவிற்குத் துணைநிற்கும் மழை, சூரியன், மாடு, உழைப்பாளிகளை மதிக்க, நன்றி சொல்ல தமிழர்கள் கொண்டாடிய அறிவிற்குகந்த, பண்பாட்டைப் பறைசாற்றும், நன்றி விழாவான பொங்கல் விழாவிலும் தங்கள் மூடக் கருத்துக்களை, சடங்குகளை, புராணங்களைப் புகுத்தினர்.

பொங்கல் என்பது அறுவடைத் திருவிழா. விளைவித்த விளைபொருள் களம் கண்ட மகிழ்வில், அந்த விளைவிற்குக் காரணமானவற்றை மதிக்கும் முகத்தான், முதலில் மழைக்கு நன்றி கூறினர். அது மழைத்திருநாள் ஆகும்.

மழை அன்றைய தினம் பொழியாது என்பதால், மழையின் அடையாளமாக ஒரு சொம்பில் தண்ணீர் வைத்து அதற்கு மரியாதைச் செலுத்தினர்.

ஆனால், ஆரிய பார்ப்பனர்கள் இந்த அர்த்தமுள்ள விழாவில் தங்கள் பண்பாட்டை நுழைத்தனர். மழைக்கு அதிபதி இந்திரன். இந்திரனுக்கு போகி என்று ஒரு பெயர் உண்டு. எனவே, மழைக்குக் காரணமான இந்திரனைக் குறிக்கும் போகி என்ற பெயரை மழைத் திருநாளுக்கு மாற்றாக நுழைத்து, மழைத் திருநாளை போகிப் பண்டிகையாக்கினர்.

மழைக்கதிபதியாக இந்திரன் இருக்க, கரிய மாலை (திருமாலை), மழையின் பலன் பெற்றதற்காக வழிபட மக்களுக்குக் கட்டளையிட்டதால், வருணன் கோபம் கொண்டு பெரும் மழையை பெய்யச் செய்ய, இதனால் உயிரினங்கள் மழையால் பாதிக்கப்பட, கிருஷ்ணன் கோவர்த்தன மலையைக் குடையாய் பிடித்துக் காக்க, இந்திரன் தன் தோல்வியை ஒப்பி வெட்கிக் குனிந்து நிற்க, இந்திரனை மன்னித்து அவனுக்கும் சிறப்பு செய்ய, சங்கராந்திக்கு முதல் நாள் இந்திரன் என்ற போகிக்கு போகிப் பண்டிகை கொண்டாட கிருஷ்ணன் கட்டளையிட்டான். இதுவே போகி என்று புராணக் கதையைக் கூறி, மழைத் திருநாளை போகிப் பண்டிகையாக்கினர்.

போகி என்பதை காலப்போக்கில் போக்குதல் என்று பொருள் கொண்டு, வீட்டிலுள்ள பழைய பொருட்களைக் போக்குதல் என்று முடிவு செய்து, பழைய நூல்கள் உட்பட எல்லாவற்றையும் தெருவிலிட்டு தீ வைத்தனர். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் கொளுத்தப்படுவதால் காற்று மண்டலமே கரும்புகை மண்டலமாக மாறி, மூச்சுக் கோளாறுகளையும், மற்றக் கேடுகளையும் உருவாக்கி வருகிறது.

ஆக, ஆரிய பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பால், அர்த்தமுள்ள மழைப் பண்டிகை, போகிப் பண்டிகையாக மாற்றப்பட்டு, புகைப் பண்டிகையாகி கேடு பயக்கிறது.

பொங்கல் திருநாள்:

பொங்கல் திருநாள், பெரும் பொங்கல் என்று தமிழர்களால் அழைக்கப்படும். இந்த நாள் தமிழரின் முதன்மையான திருநாளும் ஆகும். காரணம், அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது. அன்று பயிர் விளைய அடிப்படைக் காரணியாய் உள்ள சூரியனுக்கு நன்றி செலுத்தினர்.

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்

வேளாண் உற்பத்திக்கு மழை, சூரியன் இவற்றிற்கு அடுத்தது மாடுகள் கட்டாயம்.
காரணம், ஏர் உழப் பயன்படுவதோடு, வேளாண்மைக்குத் தேவையான உரம் கிடைக்கவும் மாட்டுக் கழிவுகள் பயன்படுகிறது என்பதாலும், மாடுகள் உழவனின் தோழன் என்பதாலும், உழவனின் செல்வம் என்கிற சிறப்பாலும் மாடுகளுக்கு ஒரு திருநாள் கொண்டாடினர் தமிழர். இது பண்பாட்டின் அடிப்படையில் நன்றி செலுத்தும் நோக்கில், உதவியாய் அமைந்தவற்றிற்கு உரிய சிறப்பு செய்யும் உணர்வில் உருவாக்கப்பட்டது. மாட்டுப் பொங்கல் தமிழரின் நன்றி கூறும் பண்பாட்டின் அடையாளம்.

ஆனால், இதையும் புராணக் கதையைப் புகுத்தி புரட்டு வேலை செய்து மாற்றினர். இந்திரன் கோபத்தால் கடும் மழை பெய்யச் செய்ததால் மாடுகள் மிகவும் சிரமப்பட்டதாகவும், பின்னர் மனம் மாறி இந்திரன் மழையை நிற்கச் செய்ததால், மறுநாள் மாடுகள் கட்டு அவிழ்த்து விடப்பட மகிழ்ச்சியில் துள்ளிப் பாய்ந்து ஓடினவென்றும், அதுவே மாட்டுப் பொங்கல் ஆனது என்றும் மாட்டுப் பொங்கலின் மாண்பிலும் மடமையைப் புகுத்தினர். தமிழர் பண்பாட்டில் ஆரியப் பண்பாட்டைப் புகுத்தினர்.

காணும் பொங்கல்:

அடுத்த நாள் கொண்டாடப்படும்  காணும் பொங்கல் என்பது வேளாண் உற்பத்திக்காக உழைக்கின்ற உழைப்பாளர்களுக்கு நன்றி சொல்லவும், அவர்களைச் சிறப்பிக்கவும் தமிழர்களால் உருவாக்கப்பட்டு கொண்டாடப்படுவதாகும்.

அன்று உழைப்பாளிகள் நில உரிமையாளர்களைச் சென்று கண்டு, நெல், காய்கறி, துணி போன்றவற்றைப் பெறுவர். நிலத்தின் உரிமையாளர்களும் உழைத்து உற்பத்திப் பெருக்கும் உழைப்பாளிகளை மகிழ்விக்க புத்தாடை, புதுப்பானை, புத்தரிசி, கரும்பு என்று பலதும் வழங்கிச் சிறப்பிப்பர்.

இப்படி உழைப்பாளிகளைச் சிறப்பிக்கத் தமிழர்கள் உருவாக்கிய உழைப்பாளிப் பொங்கல் என்னும் காணும் பொங்கலையும் புராணக் கதைப்புக் கூறி புரட்டினர்; தங்கள் பண்பாட்டைப் புகுத்தினர்.

கோபங் கொண்டு இந்திரன் பொழியச் செய்த பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மழை நின்ற பின் ஒருவரையொருவர் கண்டு பாதிப்பு பற்றி விசாரித்தனர். அதவே காணும் பொங்கல் என்று கதை கட்டி, காரணம் கூறினர். காணும் பொங்கலிலும் ஆரியப் பண்பாட்டை, புராண மடமையைப் புகுத்தினர்.

இந்த உண்மைகளை மறைத்து ஆரிய பார்ப்பனர்கள் தொடர்ந்து சித்திரை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்கின்றனர். சித்திரையில் சூரியன் தலைக்கு நேர் இருக்கும். ஆண்டு தொடங்கும்போது தலைக்கு நேர் இருந்து தொடங்க மாட்டார்கள். நாள் தொடங்கும்போது காலையில் சூரியன் கிழக்கில் உதிப்பதைத்தான் எடுத்துக் கொண்டனர். மாறாக, மதியம் தலைக்கு நேர் சூரியன் இருப்பதை எடுக்கவில்லை. அதேபோல் சூரியன் தென்கோடியிலிருந்து தை மாதம் முதல் நாள் வடக்குநோக்குவதைத்தான் ஆண்டின் தொடக்க மாகக் கொண்டனரே தவிர, சூரியன் தலைக்கு நேர் இருக்கும் சித்திரையை அல்ல.

தமிழர் பண்பாட்டை மாற்றி, மறைத்து, ஆரியப் பண்பாட்டைப் புகுத்துவதில் ஆரிய பார்ப்பனர்கள் எவ்வளவு முனைப்புடன் செயல்படுகிறார்கள் என்பதற்கு ‘துக்ளக்’ இதழும், சுதா சேஷய்யனும் சான்று. தமிழர்கள் இவர்களிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்!
(மஞ்சைவசந்தன், 13.1.2016)

தொண்டுவீராசாமி ஏன் விலகினார்? – கொளத்தூர் மணி

 பெரியாருக்கு எதிரான அடுக்கடுக்கான திரிபுகள் - தொடர் - 5


அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடி யதற்காக பெரியார் இயக்கத்தின் முன்னணித் தலைவராக இருந்த தொண்டு வீராசாமியை – பெரியார் கட்சியில் இருந்து நீக்கினார் என்று பொய்யுரைக்கும் ரவிக்குமார், ஸ்டாலின் ராஜாங்கத்துக்கு ஆதாரங்களுடன் மறுப்பு.

ரவிக்குமாரை ஆசிரியராகக் கொண்டு நெய்வேலியில் இருந்து வெளிவந்த ‘தலித்’ எனும் ஏட்டின் முதல் இதழில் (1997) இளையபெருமாள் அவர்கள் சொன்னதாக வந்திருந்த ஒருசெய்தி குறித்து தோழர் எஸ்.வி. ராஜதுரை அவர்கள் எழுதி, விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘பெரியார்: ஆகஸ்ட் 15’ என்ற நூலில் (1998) 21வது அத்தியாயமாக ‘பெரியாரும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் வெளியாகியிருந்த கட்டுரையின் அடிக்குறிப்பாக எழுதப்பட்டுள்ள ஒரு செய்தி:

“பின்னாளில் ‘தொண்டு’ என்ற பத்திரிக்கையை நடத்திவந்த வீராசாமியைப் பெரியார் 1952இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி (மாயவரம் இரட்டை உறுப்பினர் தொகுதி என்பதே சரி) ரிசர்வு தொகுதியிலிருந்து வெற்றிபெறச் செய்ததுடன் பெரியார் 1952இல் உருவாக்கிய அறக்கட்டளை உறுப்பினராகவும் ஆக்கினார்.

 தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் காரணமாக பெரியாரிடமிருந்து பிரிந்த ‘தொண்டு’ வீராசாமியை அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடியதற்காக கழகத்தி லிருந்து பெரியார் வெளியேற்றினார் என்ற அபத்தமான அருவருக்கத்தக்க குற்றச்சாட்டை பொறுப்புணர்வுமிக்க தலித்தலைவர் இளையபெருமாள் கூறியுள்ளது (தலித்எண்:1. நெய்வேலி 1997) வருந்தத்தக்கது - எஸ்.வி.ஆர்”  என்பதே அவ்வடிக்குறிப்பு.

ஆனால் ‘எழுதாக்கிளவி: வரலாற்று அனுபவங்கள்’ என்ற நூலில் ஸ்டாலின் ராஜாங்கம் “வீராசாமி பெரியாரிடமிருந்து ஏன் விலகினார் என்பதைத் துல்லியமாக அறிய முடிய வில்லை.  ஆனால் எஸ்.வி. ராஜதுரை எழுதிய ‘பெரியார்: ஆகஸ்ட் 15’ (1998)  என்ற நூலில் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாகவே வீராசாமி பிரிந்தார் என்று எழுதிய அவர் அவை எவை என்று கூறாமலேயே முடிக்கிறார்.  அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடியதற்காக பெரியார் வெளியேற்றினார் என்று எல். இளையபெருமாள் கூறிய கருத்தொன்றை அதே இடத்தில் எடுத்துக்காட்டும் எஸ்.வி.ஆர்  “அபத்தமானது; அருவருக்கத்தக்க குற்றச்சாட்டு” என்று கூறுவதோடு மட்டும் முடித்துக்கொள்கிறார்.

இளையபெருமாளின் கூற்று மேற்கொண்டு ஆராயத்தக்கவையாக இருக்கலாம்.  ஆனால், அவரின் கூற்றை அபத்தமானது என்று கூற எந்த ஆதாரத்தையும் எஸ்.வி.ஆர் கூறவில்லை என்பதுதான் விந்தை. எல்.இளையபெருமாளின் குற்றச்சாட்டு பெரியார் மீது விமர்சனம் வைக்கிறது.  எனவே, அதைப்பற்றி கூறவேண்டுமானால் எஸ்.வி.ஆர் அதை மறுப்பதற்கான ஆதாரம் இருக்கவேண்டும். எஸ்.வி.ஆர் ஆதாரம் தரவில்லை. 

 ஆதாரமில்லாவிட்டாலும் அதை மறுக்கவேண்டுமென்ற  ‘அறிவுஜீவித் தன்முனைப்பு’ என்பதைத் தவிர வேறெந்த  ‘நியாயமும்’  எஸ்.வி.ஆரிடம்இல்லை’ -  [எழுதாக்கிளவி: (Kindle Edition  வழிமறிக்கும் வரலாற்று அனுபவங்கள் பக் : 149.150) ]

“அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடியதற்காக (தொண்டு வீராசாமி)  கழகத்திலிருந்து பெரியார் வெளியேற்றினார்” என்று கூறும் “இளையபெருமாளின் கூற்று மேற் கொண்டு ஆராயத்தக்கவையாக இருக்கலாம்”  என்று அது ஒரு அற்ப குற்றச்சாட்டுதானே என்று எளிதாகக் கடந்துசெல்லும் ஸ்டாலின் ராஜாங்கம்,  அதை மறுப்பதற்கான ஆதாரம் தராதது அறிவுஜீவித் தன்முனைப்பு என்பதைத் தவிரவேறெந்த ‘நியாயமும்’ எஸ்.வி.ஆரிடம் இல்லை” என்று  ‘நாட்டாமை’  தீர்ப்பை வழங்கியுள்ளார்.

ஒருசெய்தி குறித்து விமர்சனம் செய்யும்போது “அம்பேத்கர் பிறந்த நாளைக் கொண்டாடியதற்காக (வ.வீராசாமியை)  கழகத்திலிருந்து பெரியார் வெளியேற்றினார்” என்பது எந்த ஆண்டில், எங்கு அம்பேத்கர் விழா கொண்டாடியதற்காக என்பவற்றையாவது கூறியிருக்க வேண்டும்!  அதுகுறித்து ஏதேனும் உரையாடல்,  விசாரணை நடந்ததா?  அல்லது அம்பேத்கர் விழா கொண்டாடி யதைக் கேள்விப்பட்டவுடன் வெளியேற்றப்பட்டு விட்டாரா? என்ற விளக்கமும் இன்றி கூறிய குற்றச் சாட்டை விமர்சித்த எஸ்.வி.ஆர் குறித்து “எல். இளையபெருமாளின் குற்றச்சாட்டு பெரியார் மீது விமர்சனம் வைக்கிறது.  எனவே,  அதைப்பற்றி கூறவேண்டுமானால் அதைமறுப்பதற் கான ஆதாரம் இருக்கவேண்டும். எஸ்.வி.ஆர் ஆதாரம் தரவில்லை”  என்ற குற்றச்சாட்டை எஸ்.வி.ஆர்மீது வைப்பதோடு  ‘அறிவுஜீவித் தன்முனைப்பு’  என்ற தீர்ப்பை மட்டும் கொடுத்திருக்கிறார்.

‘தலித்’ இதழின் நேர்காணலில் “அம்பேத்கர் விழா நடத்தியதற்காக தொண்டு வீராசாமி பெரியார் கட்சியைவிட்டு நீக்கினார்” என்று கூறியதுதான் விவாதத்தின் மையப்பொருள் ஆகிஉள்ளது.

அந்த அடிக்குறிப்பிலேயே ‘தொண்டு’ வீராசாமி 1952இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மாயவரத்தில் (இன்றைய மயிலாடுதுறை) தனிவேட்பாளராக போட்டியிடச் செய்ததோடு (சுயேட்சை)  பெரியாரின், திராவிடர் கழகத்தின் தீவிர பரப்புரையாலும் வெற்றிபெறவும் வைத்தனர் என்பதையும் கூறுகிறது.

அத்தேர்தலில் வீராசாமி அவர்களை உறுதியளித்தபடி ஆதரிக்கவில்லை என்பதை கம்யூனிஸ்ட்கட்சியுடன் முரண்படச்செய்யும் அளவுக்கு பெரியாருக்கு ‘தொண்டு’ வீராசாமிமீதான ஒரு அக்கறை இருந்திருக்கிறது.

12.4.1953 அன்று மதுரையில் நடைபெற்ற தென்பகுதிரயில்வே மென் யூனியன் கிளையின் கூட்டத்தில் (திராவிடர்கழகத்தின் துணை அமைப்பு)  மத்திய சங்கத் தலைவர் எஸ். இராகவானந்தம் (பின்னர் அஇஅதிமுக அமைச்சராக வும் இருந்தார்)  ஆற்றிய உரை 23.4.1953, 26.4.1953  ஆகிய நாளிட்ட ‘விடுதலை’  ஏடுகளில் வெளி வந்துள்ளது.

1952 தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் கொண்டிருந்த உறவும், நட்பும் முறிந்து போவதற்கான காரணங்களை விளக்கியுள்ளார்.

அவரது உரையின் ஒருபகுதி:

 “தேர்தலின் போது பெரியார் அவர்களிடம் இவர்கள் (கம்யூனிஸ்டு கள்) கேட்டுக்கொண்டது என்ன வென்றால், மணலி கந்தசாமி, ஜீவானந்தம், அனந்த நம்பியார், பி.ராமமூர்த்தி உள்ளிட்ட 4,5 கம்யூனிஸ்ட்களை ஆதரித்து வெற்றிபெறச் செய்தால் போது மென்றும், மற்ற இடங்களில் பெரியார் அவர்கள் ஆதரிக்கும் தோழர்களைத் தாங்கள் ஆதரிப்பதாகவும் உறுதி கூறினார்கள்.

ஆனால் பிறகு நடந்துகொண்ட தென்ன? உங்களுக்குத் தெரியும், கம்யூனிஸ்ட் தோழர் அனந்தன் நம்பியார் பார்லிமென்ட்க்கு நின்ற அதே தொகுதியில், ஒதுக்கப்பட்ட தொகுதிக்கு (பட்டியலினத்துக்கு)  எங்கள் சங்க பொதுச் செயலாளர் தோழர் வீராசாமி நின்றார். அவரை ஆதரிப்பதாக வாக்குறுதி கொடுத்த கம்யூனிஸ்டுகள், தாங்கள், ஒதுக்கப் பட்ட அந்த தொகுதியில் நிறுத்தி வைத்த கம்யூனிஸ்ட் அபேட்சகரை (வேட்பாளரை) வாபஸ் வாங்குவதாக உறுதிகூறிக் கொண்டு, வாபஸ் வாங்குவதற்கு முடிவான தேதி முடிகிற வரையிலும் வாபஸ்வாங்காமலே இருந்துவிட்டார்கள்.  ஏதோ அதற்கு சமாதானம் சொல்லி, தங்களால் ஒதுக்கப்பட்ட ஸ்தானத்துக்கு நிறுத்தப்பட்டத் தோழரை Withdrawal  தேதி வரையிலும் வாபஸ் வாங்காமல், வாக்கெடுப்புக்கு சிலநாட்களுக்கு முன்பு வாபஸ்வாங்குவதாக அறிவித்து விட்டு, வாக்கெடுப்பு நேரத்திலும் தங்கள் ஆசாமியின் பெட்டியும் இருக்கும்படி செய்துகொண்டு, தங்கள் தோழர் களுக்கும் மற்றவர்களுக்கும் வழக்கமாக அவர்கள் செய்வார்களே தலைமறைவு வேலைத்திட்டம், அந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில்,  வீராசாமி அவர்களுக்கு ஓட்டு போடாமல், வாபஸ் வாங்கப்பட்ட தங்கள் ஆசாமியின் பெட்டியிலேயே ஓட்டுப்போடும்படி செய்துவந்தார்கள். 

அதன்காரணமாகவே வீராசாமி அவர்களுக்கு விழவேண்டிய ஓட்டுகள் குறைந்து காலியாக இருக்கவேண்டிய வாபஸ் வாங்கிக் கொள்ளப்பட்ட கம்யூனிஸ்ட் பெட்டியில் 80,000  ஓட்டுகளுக்குமேல் விழுந்திருக் கின்றன. சுமார் 20,000 ஓட்டுகள் Invalid (செல்லாதவை) ஆயின.

 வீராசாமிஅவர்கள் தோற்கவேண்டும் என்கிற நோக்கமல்லாமல் வேறு என்னகாரணம் சொல்லமுடியும்? இவ்வளவு துரோகத்திற்குப் பிறகும் எங்கள் பொதுச்செயலாளர் தோழர் வீராசாமி அவர்கள் 10,000 ஓட்டுக்களே அதிகம் பெற்று காங்கிரஸ் மெம்பரிடம் வெற்றி பெற்றாரென்றால் அதற்கும் காரணம் திராவிடர்கழகம் செய்த தீவிரவேலையும், கழகத்திற்கு அங்கேஇருந்த செல்வாக்கும்தான்” என்பதுவே அந்த உரையின் ஒருபகுதியாகும்.

இதன்வழியாக 1952 இல் குடியரசான இந்திய நாடாளுமன்றத்துக்கு நடந்த முதல் தேர்தலில் திராவிடர்கழகம், தனது உறுப்பினரான தோழர் வ.வீராசாமி தனி வேட்பாளராக போட்டியிட்டபோது எவ்வளவு தீவிரமாக ஆதரித்தார்கள் என்பதும், வீராசாமி பெரியார் தொடங்கிய தென்பகுதி ரயில்வேமென் யூனியனின் பொதுச்செயலாளராக இருந்ததையும் நம்மால் அறியமுடிகிறது.

மேலும் அதற்கு முன்னதாகவே 24.3.1945 இல் ‘தொண்டு’ வீராசாமி அவர்களின் முயற்சியில் ‘அம்பேத்கர் மாணவர் இல்லம்’ தொடங்க உதவி செய்துள்ளது. மீனாம்பாள் சிவராஜ் தலைமையில் நடந்த அவ்விழாவில் சிறப்புரையாற்றியவர்கள் தி.பொ. வேதாச்சலமும் எஸ். ராமநாதனும் ஆவர். (குடிஅரசு 7.7.1945).

 தொடர்ந்து17.3.1947  அன்று அம்பேத்கர் மாணவர் இல்லத்தின் இரண்டாவது ஆண்டுவிழா பெரியார் தலைமையில் தி.பொ.வேதாச்சலம், பி.சிவபிச்சை, வ.வீராசாமி ஆகியோரின் சிறப்புரையோடு நடந்துள்ளது. (குடிஅரசு 22.3.1947) இதற்கிடையில் மற்றொரு செய்தியையும் பதிவு செய்தாக வேண்டும்.  கடந்த ஆகஸ்ட் 30ஆம்நாள் முடிவெய்திய ஓய்வுபெற்ற மாண்பமை உயர்நீதிமன்ற நீதிபதி சாமிதுரை அவர்கள் ‘அம்பேத்கர் மாணவர் இல்லம்’ இயங்கியதால் தான் அதில் தங்கிதனது கல்லூரிக்கல்வியைக் கற்கமுடிந்தது”  என்று குறிப்பிட்ட தோடு பின்னர் அந்தஇல்லம் திருச்சி பெரியார்மாளிகையின் ஒருபகுதியில் வாடகை இன்றி நடந்துவந்த செய்தியையும் 2018இல் பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் எடுத்துக்கூறியுள்ளார் என்பதையும் இவற்றோடு பொருத்திப்பார்க்க வேண்டிய செய்தியாகும்.

‘தொண்டு’ வீராசாமி அவர்கள் அம்பேத்கர் மாணவர் இல்லம் மட்டுமின்றி திருத்துறைப்பூண்டியில் ‘பெரியார் ராமசாமி மாணவர் இல்லம்’ என்ற பெயராலும் அடித்தட்டு மாணவர்களுக்கான விடுதி ஒன்றினையும் நடத்தியுள்ளார்.

 6.4.1953 நாளிட்ட ‘விடுதலை’ ஏட்டில் கீழ்கண்ட ஓர் அறிக்கையினை அவர் வெளியிட்டுள்ளார்.

“திருத்துறைப்பூண்டியில் சென்ற ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டு நடந்து வரும் ‘பெரியார் ராமசாமி மாணவர் இல்லத்திற்கு’ சென்னை சர்க்கார் அங்கீகாரம் அளித்துள்ளார்கள் என்பதைப் பெரும்மகிழ்வுடன் அறிவித்துக்கொள்கிறேன்”  என்று தொடங்கும் அந்த அறிக்கை “வ.வீராசாமி, ஸ்தாபகர் - செயலர்”  என்ற பெயரால் வெளியிடப் பட்டுள்ளது.

தொடரும்...

அவதூறு பரப்பு வோருக்கு மறுப்பு (1) - கொளத்தூர்மணி


பெரியார் முடிவெய்தி 50 ஆண்டுகள் கழிந்த பின்னரும் பெரியார் பற்றிய நினைவுகளும், அதனால் ஏற்படும் அதிர்வுகளும் தாக்கங்களும் ஒவ்வொருநாளும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

பாரதிய ஜனதாகட்சி, நாம்தமிழர் கட்சி, தோழர் அல்லது அய்யா பெ.மணியரசன் (நோக்கம் வேறு வேறாகக்கூட இருக்கலாம்) போன்ற விபீசண, அனுமார் கூட்டங்கள் சில வரிகளை உருவிஎடுத்தும், திரித்தும் எப்படியேனும் பெரியாரை, திராவிடத்தை கொச்சைப்படுத்த வேண்டும் என்று செயல்பட்டவண்ணம் உள்ளனர். இவர்களுக்கு தரவுகளைத் தேடும் சிரமத்தை இவர்களது முன்னோடிகளான ரவிக்குமார், குணா, ம.பொ.சி, வ.வே.சு அய்யர் போன்ற பலரின் அன்றைய பதிவுகள் பயன்படுகின்றன.

ஒருமுறை பார்ப்பன பேச்சு அடியாள் எச்.ராஜாவிடம் “பெரியாரைப் படித்திருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு “நான் மணியரசன் எழுதிவருவதைப் படிக்கிறேன்; அதுவே போதும்”என்றான்.

அப்படித்தான் பல வாழ்க்கை வரலாறுகளும்கூட எழுதப்பட்டு வருகின்றன. 

ஓர் எடுத்துக்காட்டாக தோழர் ‘பாலசிங்கம் இராஜேந்திரன்’என்பவர் எழுதி ‘நீலம்’ வெளியீட்டில் “இளையபெருமாள் வாழ்க்கைசரித்திரம்”என்ற நூலும் வெளிவந்துள்ளது. நான் கடந்தமாதம் மதுரையில் கலந்து கொண்ட ஒரு கருத்தரங்கிற்கு முன்னதாக இந்நூலை எழுதிய ஆசிரியருக்குப் பாராட்டுவிழா நடந்தது. அந்த நாளில் அந்த நூல் எனக்குக் கிடைக்கவில்லை, அதன்பின்னர் தோழர் ஒருவர் வழியாக இந்தநூல் அண்மையில்தான் எனக்கு கிடைத்தது.

‘அரசியல் தலைவர்களுடனான உறவும் முரணும்’என்ற தலைப்பிட்ட அந்நூலின் 13வது அத்தியாயத்தில் ஈ.வெ.ரா. பெரியார் என்ற உட்தலைப்பில் சிலசெய்திகள் பதிவாகியுள்ளன.

1948ஆம் ஆண்டு சிந்தாதிரிப்பேட்டையில் இருந்த பெரியார் வீட்டில் அவரை சந்தித்து “எங்களது சமூகம் அனுபவித்து வரும் கொடுமைகளுக்கு இழிதொழில் செய்ய நிர்பந்திப்பதும் ஒரு முக்கியக்காரணமாகும். ஆகையால் எங்களின் இழிதொழில் ஒழிப்புப் போராட்டங்களுக்கு தங்களது ஆதரவைத் தரவேண்டும்”என்று கேட்டார் இளையபெருமாள். 

இதற்கு பெரியார், “உங்களுடைய சமூகத்தவர்கள் இந்த தொழில்களை செய்யவில்லை என்றால், யார் செய்வார்கள்?' என்று கேட்டார்.

(அதன்மீது நூலாசிரியர் தன் கருத்தாக, “பிராமணர்களுக்கு எதிராக அனைத்து சமூகத்தவர்களும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று சொன்ன பெரியார், நடைமுறையில் இப்படிப்பட்ட சாதி இந்துக்குரிய குணத்தையே பெற்றிருந்தார்”என்றும் குறிப்பிட்டுள்ளார்.)

இவை எந்த ஆதாரத்தின்மீது எழுதப்பட்டுள்ளது என்பதற்கு எந்த குறிப்பும் அதில் இல்லை, ஆனாலும் பிற்சேர்க்கையாக “பயன்பட்ட ஆவணங்கள்”என்ற பட்டியல் உள்ளது. அதில் முதலாவதாக குறிப்பிடப்பட்டுள்ள ரவிக்குமார் எழுதிய ‘இளையபெருமாள் – வாழ்வும்பணியும்’ என்ற  2010ஆம் ஆண்டில் வெளியிப்பட்டிருந்த நூல்.

அது என்னிடமே இருந்தது, அதில் தேடினேன். அந்நூல் முழுவதும் இளையபெருமாள் அவர்களின் வரலாற்றை அவரே சொல்வது போன்று எழுதப்பட்டுள்ளது.

நூலாசிரியர் தோழர் ரவிக்குமார் தனது முன்னுரையில் “அவரது 75வது பிறந்தநாளின் போது அவரிடம் பதிவுசெய்யப்பட்ட அவரது சுருக்கமான தன் வரலாற்றை ‘சித்திரைநெருப்பு’ என்ற பெயரில் சிறுநூலாக வெளியிட்டேன்”என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 இந்நூலின்தொடக்கமும்  ‘சித்திரைநெருப்பு’ என்று தான் தலைப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை தோழர் ரவிக்குமார் அவர்கள் முன்னர் வெளியிட்டிருந்த ‘சித்திரைநெருப்பு’ என்ற சிறுநூலின் மறுபதிப்பாக இந்நூல் இருக்கக்கூடும். நூலின் தலைப்பை மட்டும் ‘எல்.இளையபெருமாள் வாழ்வும் பணியும்’என்று மாற்றியிருக்கலாம்.

எப்படியோ, அந்நூலில் உள்ள “பறை அடிப்பது பற்றி”என்ற உட்தலைப்பில் உள்ள பகுதியில் பெரியார் பற்றி அவதூறு பதிவாகியுள்ளது.

“சமூகத்தில் இழித்தொழிலாய் இருக்கின்ற இந்த தொழில்களை ஒழிப்பதற்கு அரசியல்வாதிகள் முன்வரவில்லை. சமூகசீர்திருத்தவாதிகளும் முன்வரவில்லை. ஏன் பெரியார் அவர்களிடமே கேட்டேன். ‘இந்தத் தொழில்களை வேறு யார் செய்வது? இளையபெருமாள், நீயே ஒருமாற்று கூறு’என்று சொன்னார். 1948, டிசம்பர் 20ம்தேதி சிந்தாதிரிப்பேட்டை வீட்டிலே சந்திக்கும்போது சொன்னார்” என்பதுதான் அந்தபகுதி. 

இது ஒரு புனையப்பட்ட பொய்யே ஆகும். எந்த அடிப்படையில் அதனைப் பொய் என்கிறோம்? 

23.11.1946 அன்று திராவிடர்கழக ஏடான ‘விடுதலை’ இதழில் 

'ஜாதியை ஒழிப்பதற்குக் காங்கிரசில் திட்டமில்லை, ஹிந்துமதஸ்தாபனமே காங்கிரஸ் வாணியம்பாடியில் பெரியார் பேச்சு!                 

பறைகள், தப்பட்டைகள் தீக்கரையாயின!' 

எனும் தலைப்பில் ஒரு செய்தி வந்துள்ளது. 

22.11.1946 அன்று வாணியம்பாடி சந்தைப்பேட்டையில் செட்யூல்டுவகுப்பார் பெடரேசனால் ஏற்பாடு செய்யப்பட்டு ஒருகூட்டம் நடைபெற்றுள்ளது.

அப்போது இந்தியாவில் அமைக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவையில், (பெரியார் அந்த உரையில் ‘இந்திய மத்திய அதிகாரசபை’யில் என்கிறார்) முஸ்லீம்லீக்குக்கு ஒதுக்கப்பட்ட 5 இடங்களில் ஒருஇடத்தை செட்யூல்டு வகுப்பார் பெடரேசன் தோழர் ஒருவருக்கு முஸ்லீம்லீக் அளித்தது. அதற்காக ஜனாப் ஜின்னா அவர்களை பாராட்டி நடத்தப்பட்ட கூட்டம் அது.

(அவ்வாறு ஒதுக்கப்பட்ட இடத்தில் நியமிக்கப்பட்டவர் வங்காளத்தைச் சேர்ந்த ஜோகேந்திரநாத் மண்டல் என்பவர். இடைக்கால அமைச்சரவை 2.9.1946ல் அமைக்கப்பட்டபோது காங்கிரசுக்கு இணையான இடங்கள் தங்களுக்கும் ஒதுக்கப்படவேண்டும் என்ற முஸ்லிம்லீக் கோரிக்கை ஏற்கப்படாததால் முஸ்லீம்லீக் பங்கேற்க மறுத்துவிட்டது. அதனால் 12 இடைக்கால அமைச்சர்களும் காங்கிரசாராகவே நியமிக்கப்பட்டனர். வைசிராய் வேவல் அவர்களின் முயற்சியில் மீண்டும் அமைச்சரவை புதுப்பிக்கப்பட்டது. அதில் இந்திய முஸ்லீம்லீக்குக்கு 5 இடங்கள் என்றும், காங்கிரசுக்கு 8 இடங்கள் என்றும் முடிவாகிறது. அவ்வாறு முஸ்லீம்லீக்குக்கு ஒதுக்கப்பட்ட 5 இடங்களில் ஒருஇடத்தைதான் செட்யூல்டு வகுப்பார் பெடரேசன் உறுப்பினர் ஜோகேந்திரநாத் மண்டல் அவர்களுக்கு வழங்கி முகமதுஅலிஜின்னா அவரை இந்தியாவின் சட்ட அமைச்சராக்குகிறார்.

ஜோகேந்திரநாத் மண்டல் என்பவர் யார்?

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களால் 1942 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட 'செட்யூல்டுவகுப்பார் பெடரேசனின்' வங்காள மாகாணத் தலைவரே ஜோகேந்திரநாத்மண்டல் ஆவார்.

அவர் வங்காள மாகாண முஸ்லீம் லீக் தலைமையிலான அமைச்சரவையில் நிதி, பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்தவர் ஆவார்.

இந்தியாவின் அரசியல் நிர்ணயசபைக்கு பம்பாய் மாகாணத்திலிருந்து அம்பேத்கர் அவர்கள் தேர்வாக முடியவில்லை.

வங்காளத்தின் செட்யூல்டுவகுப்பினர், பழங்குடி உறுப்பினர் ஆகியோரின் வாக்குகளை முயன்று பெற்று அரசமைப்பு அவைக்கு அம்பேத்கரை அனுப்பிவைத்தவர் இதே ஜோகேந்திரநாத் என்பவர்தான்.

1947ல் பாகிஸ்தான்பிரிந்தபோது இவர் கிழக்கு வங்காளத்தை சேர்ந்தவர் (கிழக்குபாகிஸ்தான்) என்பதால்,  பாகிஸ்தான் அரசமைப்பு அவையின் தற்காலிகத் தலைவராகவும், பின்னர் பாகிஸ்தானின் சட்டம், நீதித்துறை அமைச்சராகவும், கூடுதல் பொறுப்பாக தொழிலாளர் நலத்துறை, காமன்வெல்த், காஷ்மீர் விவகாரத்துறை அமைச்சராகவும் இருந்தவர். அந்த ஜோகேந்திரநாத் மண்டல் இந்திய இடைக்கால அமைச்சரவையில் சட்டஅமைச்சராக 25.10.1946 அன்று பதவிஏற்றார். பாகிஸ்தான் பிரிவினைவரை அப்பதவியில் தொடர்ந்தார்).

அவ்வாறு செட்யூல்டு வகுப்பார் பெடரேசன் உறுப்பினரான ஜோகேந்திரநாத் மண்டலுக்கு அமைச்சர் பதவியை வழங்கிய ஜனாப் முகமது அலிஜின்னாவை பாராட்டவே நடத்தப்பட்டது அக்கூட்டம்.

அவ்வாறு 22.11.1946 அன்று வாணியம்பாடியில் செட்யூல்டுவகுப்பார் பெடெரேசனால் ஏற்பாடு செய்யப்பட்ட அக்கூட்டத்திற்கு தோழர் ஏகாம்பரம் தலைமை தாங்கினார். தொடர்ந்து செட்யூல்டு வகுப்பார் பெடரேசனின் மாநில செயலாளர்கள் தளபதி பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி, ஆதிமூலம் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து பெரியார் உரையாற்றியுள்ளார். 

அவ்வுரையில் 'இழிவைத் துடைக்க இஸ்லாமியராவதே சிறந்தவழி' என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கூட்டத்தின் முழுஉரையும் 23.11.1946  நாளிட்ட 'விடுதலை' ஏட்டில் வெளிவந்துள்ளது. 

இறுதியில் ‘பறைகள் தீக்கிரை’என்ற உட்தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது.   

பெரியார் (மேடையில் இருந்து இறங்கி மேடையின் எதிரில்) உட்கார்ந்தவுடன் செட்யூல்டுவகுப்புத்  தோழர்கள் தப்பட்டைகள், தாசாக்கள், மத்தளங்கள்  முதலிய பலதரப்பட்ட தோற்கருவிகளுடன் சுமார் 100 பேர்கள் திடீரென்று மேடை அருகே வந்தார்கள். வந்தவுடன் கூட்டத்தில் தடபுடல்  ஏற்பட்டது. பெரியார் அமைதியாய் இருக்கும்படி வேண்டி, அமைதி ஏற்படுத்திய பிறகு, பெரியாரின் முன்னிலையில் அவைகளை போட்டு குவித்துவிட்டு ஒருவர் மேடைமீது ஏறிநின்று, “நாங்கள் பறை அடிப்பதால்தானே பறையர்கள் என்று அழைக்கப்படுகிறோம். இனிமேல் பறை அடிப்பதில்லை. சாவுவீட்டிற்கும், வாழ்வு வீட்டிற்கும், சாமிவீட்டிற்கும் கண்டிப்பாக பறைஅடிப்பதில்லை என்று இப்போது உறுதிசெய்து கொண்டோம்.  அதற்காக அந்தக்கருவிகளை இதோகொளுத்திவிடுகிறோம்”

என்று சொல்லி 4,5  புட்டி மண்ணெண்ணையை ஊற்றி நெருப்பு வைத்தார். நெருப்பு திகு,திகு என்று எரிந்தது. யாவரும் ஆரவாரித்தார்கள்.

“டாக்டர் அம்பேத்கர் அனுமதி வந்ததும் நாங்கள் பெண்டுபிள்ளைகளுடன் மதம் மாறுவோம்”என்று ஒலித்துக் கொண்டு கலைந்து சென்றார்கள் என்பதுவே அந்த செய்தி.

நாடு முழுவதும் பறைகளை எரிக்க பெரியார் வேண்டுகோள் விடுத்த வரலாற்றை  அடுத்த இதழில் பார்ப்போம்.                

(தொடரும்)  நன்றி 'புரட்சி பெரியார் முழக்கம்' 7.9.2023