இழிநிலை நீக்க மாநாடு
நண்பர்களே! நாம் நமது நாட்டில் நாலாம் சாதியார்-சூத்திரர்-பார்ப்பனரின் தாசி புத்திரர்கள் என்றும், சில அணுபவங்களில் தீண்டப்படாத, நெருங்கப்படாத இழிபிறவி மக்கள் என்றும் இந்த மத சாஸ்திரங்களில் தர்மமாகவும் ‘இந்து லா’ என்ணும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டும் அதை அணுசரித்தே கோர்ட் தீர்ப்புகளும் இருந்து வருகின்றன. அந்தப்படி அமுல் நடத்தப்பட்டும் வருகின்றன.
இந்த நிலை, இந்த அமைப்பு, இந்த அணுபவம் மாற்றப்பட வேண்டும் என்பது இன்றையத் தமிழர்களின் பெரும்பான்மையோரின் ஆவல்.
இந்த நிலை அரசியல் நிர்வாக சட்டத்திலும், நீதி சட்டத்திலும் இடம் பெற்று இருக்கின்றபடியால், அரசாங்கத்துடன் போராடித்தான் நீக்கிக் கொள்ளத் தக்கதாக இருக்கிறது.
நம் நாடு, முஸ்லிம் ஆட்சியிலோ (அய்ரோப்பிய) கிறிஸ்தவருடைய ஆட்சியிலோ இருக்குமானால் இந்த நிலை வெகுநாளைக்கு முன்னதாகவே ஒழிக்கப்ப;டிருக்கும். அப்படிக்கில்லாமல் (பார்ப்பனருடைய) இந்துக்களுடைய ஆட்சியில் இருப்பதால் இதை ஒழிக்கப்படும் வரையில் மாற்ற முடியாததாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இதற்குக் காரணம் இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள்-கிறிஸ்தவர்கள் தவிர்த்து மற்ற எல்லா மக்களும் அதாவது, பவுத்தர், சீக்கியர், சமணர். பகுத்தறிவுவாதிகள், நாத்திகர் மற்றும் பிள்ளையார் சிலையை உடைத்தவர்கள், இராமாயணம் கொளுத்தியவர்கள், இராமனை முருகனை, வெங்கிடாசலபதியை (கடவுள்களை)ச் செருப்பால் அடித்தவர்கள் முதலிய எல்லோருமே - இந்துக்கள் தான் என்று சட்டமும், சட்ட நிபுணர்களால் கோர்ட் தீர்ப்புகளும் இருக்கின்றன. இந்து என்கின்ற பெயரிலிருந்து விலகிக் கொள்ள நமக்கு உரிமையில்லை; இடமும் இல்லை.
அதனால், உலகம் உள்ளவரை இந்திய ஆட்சியில் தமிழ் நாடு ஆட்சியின் கீழ் குடிமகனாய் இருப்பவர்கள், முஸ்லிம்-கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் யாவருமே சூத்திரர், நாலாம் சாதியார், பார்ப்பனரின் தாசி புத்திரர்கள் என்ணும் தன்மையில் இருக்கிறோம்.
இதோடு கூடவே நம் கோவில்களுக்குப் போகிற எவரும் எந்தக் கோவிலுக்குப் போவதானாலும் சாமி இருக்கிற அறைக்கு (கர்ப்ப கிரகத்திற்கு) வெளியில் நின்றுதான் சாமி தரிசனமோ, மற்றதோ செய்ய வேண்டியிருக்கிறது. காரணம் நாம் கீழ்சாதிக்காரர்கள். நாம் தொட்டால், நெருங்கினால் சாமி தீட்டாகிவிடும். ஆதலால் எட்டி நிற்க வேண்டும். வெளியில் நிற்கிறோம். எனவே, நமக்கு இந்த இழிநிலை போக்கப்பட வேண்டாமா என்பதுதான் நான் நமது மக்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளும் விண்ணப்பம்.
இன்றைய நமது இந்திய ஆட்சிக்கு உட்பட்ட தமிழ் அரசுக்கு இது விஷயத்தில் உள்ள சட்டத்தடைகளை நீக்க சக்தி போதாது. இந்தியாவில் தமிழ்நாடு தவிர்த்த மற்ற நாட்டு மக்கள் அனேகமாக இசைய மாட்டார்கள். என்றாலும் நாம் இந்த இழிவுகளை இனி பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டோம். எப்படியாவது, என்ன செய்தாவது, என்ன க·ட ந·டங்களை ஏற்றாவது அணுபவித்தாவது இந்த இழிநிலையை ஒழித்துக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். இதற்காக, இதுவரை செய்துவந்த பிரச்சாரம் எதுவும் நமக்குப் பயன் அளிக்க வில்லை. ஆதலால், இப்போது நாம் இதற்காக என்றே ஒரு மகாநாடு ‘சூத்திரன்-தாசிமகன் என்கின்ற இழிநிலை நீக்க மாநாடு’ என்ணும் பெயரால் சென்னையிலோ, திருச்சியிலோ ஒரு மாநாடு கூட்டி, அதில் நமது இந்திய அரசாங்கத்திற்கு எதிராக நமது வேண்டுகோள் என்பதாக விளக்கி, ஒரு தீர்மானமும் அந்த வேண்டுகோள் நிறைவேற்றபடவில்லையானால், நமது முயற்சி என்னவென்பது பற்றி ஒரு தீர்மானம் செய்ய உத்தேசித்தும் இருக்கின்றோம்.
இந்த மாநாடு டிசம்பரில் கூடுவதாக என்று. அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் துவக்கி இருக்கிறேன். மாநாடு நடத்தவும் கிளர்ச்சி நடத்தவும் பெருந்தொகை தேவைப்படும். அது நன்கொடை மூலமும், டிக்கெட் விற்பனை மூலமும் மற்றும் பலவழிகளில் சேகரிக்கவும் முயற்சிக்கிறேன்.
தமிழ் நாட்டில் ஆளுங்கட்சியில் உள்ள இயக்கத் தோழர்களும் மற்றும் இந்தக் கொள்கையை ஏற்கும் மற்ற எல்லாக் கட்சித் தோழர்களும் வேண்டிய முயற்சி செய்து உதவ வேண்டுகிறேன் (விடுதலை-14-10-1973)
No comments:
Post a Comment