Sunday, April 26, 2026

இந்திக் கிளர்ச்சி-3 - பெரியார்

 இந்திக் கிளர்ச்சி-3

இந்தி கட்டாயப் பாடமாக ஆகும் பட்சத்தில் கண்டிப்பாகப் பார்ப்பனரல்லாத பிள்ளைகள் 100-க்கு 90-க்கு மேல் தேர்ச்சியில் தவறிவிடுவதோடு, பார்ப்பனப் பிள்ளைகள் 100-க்கு 100 தேர்ச்சி பெற உதவியாயிருக்கும். ஆகவே, பார்ப்பனரல்லாத பிள்ளைகளை மேல் படிப்பில்லாமல் அழுத்தத்தான் இந்தி ஒரு நல்ல சாதனமாகுமே தவிர-மனித வாழ்க்கைக்கோ அறிவுக்கோ தமிழர்களுக்கு எந்த விதத்திலும் இந்தி இன்றியமையாததாகாது.

கட்டாயப் படிப்பு என்பது நாட்டின், சமூகத்தின் பொதுக் காரியமாகும். அதற்காகச் செலவு செய்யும் நேரம், பணம் ஊக்கம் ஆகியவைகள்-நாட்டின் பொதுச் சொத்தாகும். அப்படிப்பட்டதைக் கொண்டு போய்ப் பாழான-பார்ப்பனச் சூழ்ச்சியான-முட்டாள்தனத்துக்கு வித்தான காரியத்துக்குப் பயன்படுத்துவது என்றால் யார்தான் சம்மதிக்க முடியும்?

‘இந்தி படித்தால் துளசிதாஸ் இராமாயணம் படிக்கலாம்’ என்கிறார், நமது அக்கிரகார பிரதம மந்திரி. ‘இந்தி படித்தால் வடநாட்டில் சுற்றுப்பயணம் செய்யலாம்’ என்கிறார் நமது விபீஷணாழ்வாரான கல்வி மந்திரி. துளசிதாஸ் இராமாயணம் நமக்கு எதற்கு?

கம்பராமாயணம் படித்து முட்டாளாகி, துரோகிகளாகி, சுயமரியாதை இழந்து, எதிரிகளின் கால் அலம்பிக் குடித்து வயிறு வளர்க்கும் ஈன மக்கள் போதாது என்று கருதியா-நமது அக்கிரகார மந்திரி துளசிதாஸ் இராமாயணம் படிக்கச் சொல்கிறார் என்று யோசிக்க வேண்டி இருக்கிறது! கம்ப ராமாயணத்தின் கருப்பொருள் கண்டுபிடித்துப் படித்த மக்களில் 100-க்கு 5 பேருக்காவது சுயமரியாதையோ, சமூகப் பற்றோ, தாய்மொழிப்பற்றோ இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமோ? ஆரிய இராமாயணத்தை நெருப்பிலிட்டுக் கொளுத்த வேண்டும் என்று ஆதியில் நாம் சொன்ன காலத்தில்-இராமாயணக்  கதை ஆபாசமானது. வெறுக்கத் தகுந்தது, கீழ் மக்களின் இயற்கையையும் கெட்ட குணங்களையும் சித்தரிப்பது என்றும், ‘ஆனால், கம்பன் கவித்திறம் ,தமிழின் கலைத் திறம் முதலியவை கம்ப ராமாயணத்தில்-மலத்தில் கிடக்கும் முத்துப் போல் பொதிந்து கிடப்பதால் அதை எரிக்கக் கூடாது’ என்றும் சொன்ன கம்ப ராமாயணக் கருப்பொருள் பண்டிதர்கள்- இன்று ‘பக்கா பட்டரான’ ஆச்சாரியார் துளசிதாஸ் இராமாயணம் படிப்பதற்காக இந்தியைக் குழந்தைகளுக்குக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று சொல்லி, அதற்கு வேண்டிய காரியங்கள் செய்து வரும் போது-மனைவியை மற்றொருவன் சேலையை அவிழ்த்துப் பலாத்காரம் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்த வீரர்கள் கதை போல-இன்று வாய் திறவாமல் அடிமையாய் துரோகியாய், தமிழ் மாதுக்கு மாதுரு துரோகியாய் வீற்றிருக்கும் காரணம் என்ன?

தமிழ் மொழியில் உள்ள புராணங்களின் ஆபாசங்களையும் சூழ்ச்சிகளையும் மக்கள் சுலபமாய் அறிந்து, ஆரிய மதத்திலிருந்து மக்கள் விலகி அதை இழிவுபடுத்தி வருகிறார்கள் என்பதை உணர்ந்தே தமிழை ஒழிக்கவும், இந்தியைப் பரப்பவும் பார்ப்பனர் ஆட்சி முயலுகின்றது. அதை நம் மக்கள் சிறிதும் உணரவில்லை. ஆரிய புராணங்களை - கடவுளின் தன்மைகளை மனிதன் படித்தால் அவன் மனிதன் என்று சொல்லக் கூடிய நிலையை அடைய முடியுமா? சிறுவயதிலேயே குழந்தைகளின் பகுத்தறிவையும், ஆராய்ச்சி உணர்ச்சியையும் பாழ்படுத்த-அதன் எதிரியை இரத்தத்தில் செலுத்துவது போல் அல்லவா இந்தி படிப்பதின் பலன் ஏற்படக் கூடும்? இன்று மனிதணுக்கு அறிவோ தொழில் திறமையோ ஏற்படவேண்டுமானால் ஆங்கில மொழி மூலந்தான் கற்க வசதி இருக்கிறது. நமது தமிழ்ப் பண்டிதர்கள் இராமாயணத்தில் கருப்பொருள் தேடவும், திருவிளையாடல் புராணத்துக்கு77 வது உரை எழுதவும், பெரிய புராணத்துக்கு 113 வது உரையும் தத்துவார்த்தமும் எழுதவுந்தான் தகுதியுடையவர்களாகவும் கவலையுடையவர்களுமாகவே இருக்கின்றார்களே ஒழிய, பகுத்தறிவை அடையத்தக்கதாகவோ, மானத்துடன் பிழைக்க ஒரு தொழில் கற்றுக் கொள்ளத்தக்கதாகவோ இன்று ஒரு புத்தகமும் ஒருவராலும் எழுதப்பட்டதாக இல்லை. சாமி வேதாசலம் என்ணும் மறைமலை அடிகள் இந்தக் கருத்தை மனத்தில் கொண்ட ‘பாவத்துக்காக’ சற்றேறக் குறைய 100-க்கு 75 தமிழ்ப் பண்டிதர்கள்  அடிகளைக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்க முற்பட்டார்கள் என்றால்- தமிழ் படிப்பதனாலாவது தமிழ்த்தாய் பக்தியினாலாவது மனிதணுக்குச் சுயமரியாதை உணர்ச்சியும், பகுத்தறிவு உணர்ச்சியும் வருமா என்று சந்தேகப் பட வேண்டியிருக்கிறது. இன்று தமிழ் நாட்டில் ஒரு ஆரியப்பார்ப்பனர் -நாட்டை மணு ஆட்சிக்குக் கீழ்க் கொண்டு வரும் முயற்சிக்குச் சூழ்ச்சி கர்த்தர்-தமிழ்மொழியை எப்படிப்பரப்புவது, எப்படிமேன்மைப்படுத்துவது என்பதை விட்டுவிட்டு, குழந்தைகளுக்குக் கட்டாயமாக இந்தி கற்பிக்க வேண்டும், துளசிதாஸ் இராமாயணம், மற்ற புராணம் ஆகியவைகள் மூலம் படிக்க வேண்டும் என்று சொல்லுவது என்றால், இந்த நாட்டில் உண்மைத் தமிழ் இரத்தம் ஓடும் மக்கள் ஒருவர் இருவராவது இருக்கிறார்களா? (குடி அரசு 22-8-1937)

இந்தி எதிர்ப்பின் மூலம் தமிழ்மக்கள் வெற்றி பெற வேண்டுமானால், அவன் சரீரத்தில் ஓடும் பார்ப்பன மத உணர்ச்சி இரத்தம் அவ்வளவும் வெளியாக்கப்பட்டுப் புதிய-சுதந்திர அறிவு இரத்தம் பாய்ச்சப்பட்டாக வேண்டும்.

ஏனெனில், பார்ப்பனியம் இன்று இந்தியைத் தமிழ் மக்களுக்குள் கட்டாயமாகப் புகுத்த வேண்டும் என்கின்ற மூர்க்கப் பிடிவாதத்தைக் கொண்டிருப்பதன் உண்மைக் கருத்து என்னவென்றால், அரசியலுக்கு அல்ல; பொருளியலுக்காக அல்ல; அல்லது பார்ப்பனர்களுக்கு வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதற்காக அல்ல. உண்மையான காரணம் என்னவென்றால் இன்று தமிழ் மக்கள் பெரும்பாலோருக்குள் ஏற்பட்ட சுயமரியாதை உணர்ச்சியால் ஆட்டம் கொடுத்திருக்கும் பார்ப்பனீய மத உணர்ச்சியைத் தமிழ் மக்களுக்குள் மறுபடியும் சரியானபடி புகுத்தி -அதைக் கெட்டிப் படுத்தி-பார்ப்பனீயத்துக்குத் தமிழ் மக்களைப் புராணகாலம் போல நிரந்தரமாய் அடிமையாக்குவதற்காகவேயாகும். அதனால்தான், சோழவந்தான் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அதன் தலைவர், ‘இந்தியைக் கட்டாயப் பாடமாக ஆக்கப்படுவதை ஒழித்தால் போதாது. இந்தியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்பதற்கான உள் காரணங்களை ஒழிக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

ஆதலால், ‘இந்திப் போர்’ தமிழ் மக்களுக்கு ஒரு கிடைத்தற்கரிய ‘பாக்கியம்’ என்றே ஒவ்வொரு தமிழ் மகணும் கருத வேண்டும். அது போன்ற ஒரு பயனளிக்கத்தக்க போராட்டம் இனி சுலபத்தில ஏற்படும் என்று எந்தத் தமிழ் மகணும் இலேசில் கருத முடியாது என்பதோடு இது அவ்வளவு சுலபமானதும் அவ்வளவு பெரிய பயனை அளிக்கக்கூடியதுமான ஒரு அரும்பெரும் போராட்டமாகும். (குடியரசு 15-5-1938)

நான் இந்தியை 1924,1925 முதலே எதிர்த்து வருகிறேன். அதற்கு ஆதாரம் ‘குடியரசு’ பத்திரிகையில் பார்க்கலாம். இன்றைய இந்தி எதிர்ப்புத் தோழர்களும் மற்றும் அனேகரும் வெகு நாட்களாகவே தமிழ் நாட்டிற்கு இந்தி ஏன் என்று எதிர்த்து வந்திருக்கிறார்கள்.

இந்தி என்றால் பார்ப்பன மொழி என்றுதான் அர்த்தம். ‘டிக்ஷனரியை’ப் பாருங்கள். பார்ப்பன மொழியை, பார்ப்பனரல்லாதாருக்குக் கட்டாயமாகப் புகுத்தினால் பார்ப்பனரல்லாதாருக்கு வீரமும், அறிவும், மானமும் இருந்தால் ஒப்புக் கொள்ள முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள் (குடியரசு 10-7-1938) 

இந்தி கிளர்ச்சி-4

தலைவரவர்களே! தோழர்களே!

இந்தி மொழி தமிழ் நாடடில் எப்போது இருந்தது? பம்பாயில் எப்போது இருந்தது? வங்காளத்தில் எப்போது இருந்தது இந்தியா 56 தேசமாய் இருந்தபோது 56 மொழிகளின் பேரால்தானே தேசமாய் இருந்தது? அப்போதும் மொத்தத்தில் 56 மொழிகள் இருந்திருக்கும். நாளாக நாளாக ஒரு தேசத்தார் மற்றொரு தேசத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் போதுதான் அன்னிய மொழி புகுத்தப்பட்டுவிடுகிறது. அந்த முறையிலேயே இன்று இந்தியைத் தமிழ் நாட்டில் புகுத்தப் பார்ப்பது தமிழனல்லாத அன்னிய வகுப்பான் இன்று தமிழ்நாட்டில் ஆதிக்கம் பெற்றுவிட்டதினாலேயே ஒழிய வேறில்லை.

ஒரு பொது  மொழி தேர்ந்தெடுக்க மெஜாரிட்டி பலமே போதுமானதாகுமா? மொழி எதற்காக வேண்டும்? பேசுவதற்கு மாத்திரம் தானா? புதிதாக ஒரு மொழியைத் தேர்ந்தெடுப்பதினால் அந்த மொழி பழையது என்றோ, வெகுபேர் பேசுகிறார்கள் என்றோ காரணம் சொல்லித் தெரிந்தெடுப்பது அறிவுடைமையாகாது. அந்த மொழியால் தேச மக்களுக்கு ஏற்படும் பயன் என்ன என்று பார்க்க வேண்டும். புது அறிவு உண்டாகுமா? ஆராய்ச்சிக்குப் பயன் படுமா? முற்போக்கிற்கும் நாகரிகத்துக்கும் பயன்படுமா? சீர்திருத்தத்திற்கு ஏற்றதா, என்றெல்லாம் பார்க்க வேண்டாமா? இவர்கள் சொல்லும் ‘இந்தி’ எதற்காகப் பயன்படும்? தோழர் இராஜகோபாலாச்சாரியாரும்-அதாவது இந்தியைப் பொதுமொழி ஆக்க வேண்டும் என்று சொல்கிறவரும் அவரது சகாக்களும், ‘இந்தியால் துளசிதாஸ் இராமாயணம் படிக்கலாம். சமஸ்கிருதம் சுலபத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்துமத சாஸ்திரம் உணரலாம்’ என்றெல்லாம் சொல்லுகின்றனர். ஆகவே, இந்தி மூலம் மோட்சத்திற்குப் போவதற்கு அணுகூலமாக- ஆத்மார்த்த விஷயங்கள் என்பதற்கு அணுகூலமாகக் காரணம் சொல்லுகிறார்களே ஒழிய, இந்த உலக வழிக்கான காரணம் எதுவும் இந்தியில் இருப்பதாகச் சொல்லவே இல்லை. இராமாயணத்திலும், பாரத்திலும் ஆகாய விமானம் இருக்கிறது. ஆனால் அது மந்திர சக்தியில் ஓடி இருக்கிறது. இங்கிலீஷில் ஆகாய விமானம் இருக்கிறது, அது இயந்திரத்தில் ஓடுகிறது. நமக்கு எது வேண்டும் மந்திர சக்தியா? இயந்திர சக்தியா? (குடி அரசு 26-9-1937)

No comments: