இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி-1
முதலாவது, இந்தி மொழி என்றால் என்ன? அதற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் என்ன சம்பந்தம்? அதைப் படித்ததினால் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் பயன் என்ன? என்பவைகளை முதலில் கவனிப்போம். இந்தி மொழி என்பதை அகில இந்திய மொழியாகக் கருத வேண்டும் என்பது பற்றிப் பின்னால் யோசிப்போம்.
இந்தி மொழி படித்த மக்களுக்கு அதனால் ஏற்படும் பயன் என்ன? இதுவரை தமிழ்நாட்டில் காங்கிரஸ் பணத்திலிருந்தும், மற்றும் பொதுமக்களிடமிருந்தும் இந்திக்காக செலவு செய்யப்பட்ட பணத்தில் எவ்வளவு பார்ப்பனரல்லாதார்கள் படித்தார்கள்? அதை எதற்கு உபயோகப்படுத்துகின்றார்கள்? என்பவைகளும் கவனிக்கத் தக்கதாகும்.
இந்திமொழி என்பது தமிழ் மக்களுக்கு விரோதமான ஆரிய மொழியாகும். அதிலுள்ள வாசகங்கள் முழுவதும் ஆரியப் புராணங்களும் மூடப்பழக்க வழக்கங்களும் கொண்டனவும் பார்ப்பனர்களின் உயர்வுக்கு ஏறப்பட்டனவுமாகும். இந்த நாட்டில் இப்போது சமஸ்கிருதம் இருப்பது போலவும் அது உபயோகப்படுவது போலவும்-இந்தி ஒரு சிறிதும் தேவையில்லாததாகும். அப்படியிருந்தாலும் அது ஏதாவது வடநாட்டுக்குப் போய் சொல்லுவதற்கில்லாமல், இதுவரை இந்தி படித்தவர்களில் 100-க்கு 95 பேர் பார்ப்பனர்களே படித்து அந்தப் படிப்பைக் கொண்டு வட நாட்டிற்கு உத்தியோகத்திற்கோ பிச்சைக்கோ சென்று, அதன் மூலம் பார்ப்பனரல்லாதார்களுக்குத் துரோகம் செய்யவே உதவப்பட்டு வருகின்றது. அதற்காகச் சம்பாதித்த பணங்கள் முழுவதும் பார்ப்பன ஆதிக்கத்திலேயே இருந்து வருகின்றது. ஒரு சமயம் பார்ப்பனரல்லாதவர்களும் இந்தி படித்திருப்பதாக வைத்துக் கொண்டாலும் இந்த நாட்டில் அவர்களுக்கு அது என்ன பயனைக் கொடுக்கும்? இது வரை இந்தி படித்த பார்ப்பனரல்லாதாரில் எவராவது அதனால் இன்ன பிரயோஜனம் அடைந்தார்கள் என்று ஏதாவது ஒரு சின்ன உதாரணமாவது காட்ட முடியுமா?
இந்தியாவுக்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும் அல்லது வியாபாரத்திற்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும் ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டுமேயல்லாமல், வேறு மொழியைப்பற்றி யோசிப்பது முட்டாள்தனமோ அல்லது சூழ்ச்சியோதான் ஆகும்.
ஆங்கிலம் உலக மொழி; உலக வர்த்தக-விஞ்…hன மொழி; இந்திய அரசாங்க மொழி; அது மாத்திரமல்லாமல் மூடப்பழக்க வழக்கமும், பார்ப்பனீயமும் இல்லாமல் அவ்வளவும் அடிப்படையான கலைகளை வாசகமாகப் பெற்ற மொழியாகும்.
இவைகள் மாத்திரமல்லாமல், இந்தி உருது முதலியவற்றுக்குத் தாய்மொழியாக உள்ள துருக்கி மொழி கூட, ஆங்கில மொழிக்கும் ஆங்கில எழுத்துக்கும் மதிப்புக் கொடுத்து தனது நாட்டுத் தாய்மொழியாகிய தன்மையே மாற்றிக் கொண்டது, அன்றியும், நமது பிரிட்டி· அரசாங்கம் உள்ளவரை- மேல்நாடுகளின் வர்த்தக உடன்பாடோ, கலை சம்பந்தமோ, கல்வி சம்பந்தமோ உள்ளவரை-ஆங்கிலம் இல்லாமல் முடியவே முடியாது. இப்படி எல்லாம் இருக்க, இதைச் சற்றும் கவனியாமல் இப்போது தமிழ்நாட்டில் இந்தி மொழி பரப்ப வந்திருப்பதென்பது தற்காலம் தமிழ்நாட்டில் உள்ள உணர்ச்சியை ஒழிக்கச் செய்யும் சூழ்ச்சியேயாகும். ஆதலால், இதற்கு எந்தப் பார்ப்பனரல்லாதாராவது பணம் கொடுத்தோ அல்லது ஆதரித்தோ பேசினாலும் அது பெரிய சமூகத் துரோகமாகும். (குடி அரசு - 20-1-1929)
இந்திக் கிளர்ச்சி-2
இந்தி என்பது, பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஏற்படுத்தப்பட்ட புரட்டு, இந்தியாவில் முப்பட்தைந்தரை கோடி மக்கள் இருந்தாலும் பல மொழி, மதம், நாகரிகம், நடை, உடை, பாவனைகளாக இருந்து வருவதை யாரும் மறுக்க முடியாது. அப்படி இருந்தாலும் மக்களுக்குள் மதத்தின் பேராலும், சாதியின் பேராலும். மொழியின் பேராலும் போட்டிகள் நடந்து வருவதும் மறுக்கக் கூடியவை அல்லவென்றே சொல்லுவோம்.
இந்த நிலைமையிலுள்ள சமுகங்களை-பிரிவினைக்கு ஆதாரமாய் இருப்பனவற்றைக் கண்டுபிடித்து. அவைகளை ஒழிக்க முயற்சிக்காமல், கண்மூடித்தனமாய் எல்லோரையும் இந்தி கற்றுக் கொள்ள வேண்டுமென்று அரசியலின் பேரால் நிர்ப்பந்திப்பது எப்படி ஒழுங்காகும்? இந்தி என்பது அனேகமாக வடமொழியின் சார்போ அல்லது திரிபோ ஆகும். இந்த நாட்டில் ஆரியர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட வடமொழிக்கு உயர்வுகொடுக்கப் பலவழிகளிலும் சூழ்ச்சி செய்து உலக வாழ்க்கையில் ஒரு ஒடிந்து போன குண்டூசிக்குப் பயன்படாத மொழியாகிய அவ் வட மொழிக்கு எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டு வருகின்றது என்பது வெகுநாட்களாகத் தமிழ்மக்கள் கவனித்துவரும் சங்கதியாகும். இப்போது மறைமுகமாய் வடமொழியை ஆதரிக்கவும், ஆரிய நாகரிகம்., சமயக் கொள்கை ஆகியவைகளை நிலை நிறுத்தவும் இந்தியை அரசியல் விஷயமாக ஆக்கி, அதைக் கதரைப் போல்-ஏன், கதரைவிட அதிகமாக ஒவ்வொருவருக்குள்ளும் புகுத்தப் பார்ப்பது, எவ்வளவு வஞ்சகமான காரியம் என்பதை நமது சோணகிரிகள் அனேகர் இன்ணும் உணரவே இல்லை. தமிழ்ப் பண்டிதர்கள் சாம்பலையும் மண்ணையும் குழைத்துச் சூடுபோட்டது போல் மேலெல்லாம் தீட்டிக் கொண்டு-சிவ, சிவ, சிவ என்பதற்கும், ராம, ராம என்பதற்கும் உதவுவார்களே தவிர மற்றபடி நமது மக்கள் மீது. அனாவசியமான ஒரு மொழி-சூழ்ச்சித் திறத்தால் சுமத்தப்படுகிறதே என்கின்ற அறிவும் கவலையும் அவர்கட்குச் சிறிதும் கிடையாது என்றே சொல்லவேண்டியிருக்கின்றது. இன்றையத்தினம் இந்திய மக்களுக்கு அவரவர்கள் சொந்த மொழி தவிர வேறு மொழி தெரிய வேண்டுமானால், அது ஆங்கில மொழி என்றே நான் தைரியமாகச் சொல்லுவேன்.
உலகமே தங்கள் கிராமந்தான் என்று எண்ணிக் கொண்டிருந்த காலம் மலையேறி, இப்போது நிலப்பரப்பு, நீர்ப்பரப்பு, முழுவதும் தெரிந்து-200 கோடி உலக மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் போது, உலகச் செலவாணி மொழி எதோ, அதை மனிதன் அறியாமல், கபீர்தாஸ் இராமாயணத்தைப் படிக்க வேண்டிய இந்தி மொழி எதற்குப் படிக்க வேண்டும் என்று கேட்கிறோம்.
தமிழ் மக்களுக்குச் சுயமரியாதை என்பது பல துறைகளிலும் வரவேண்டியிருப்பதை இந்தியின் ஆதிக்கம் இனியும் அதிகமாய் வலியுறுத்துகின்றது.
தமிழ் மொழியின் பாண்டியத்தியம் என்பது இப்போதே அனேகமாய்ப் பார்ப்பனர்களிடமே இருக்கிறது. தமிழ் மொழியின் சங்கத் தலைவர்கள் பார்ப்பனர்களாய் இருக்கின்றார்கள் என்பதோடு- இந்தப் பார்ப்பனர்கள் தமிழர்களை இந்தி படிக்கக் கட்டாயப்படுத்துகின்றார்கள் என்றால், தமிழ் மொழிக்காரர்களின் சுயமரியாதை எவ்வளவு என்பதைத் தமிழர்களே உணர்வார்களாக!
அரசியல் தத்துவத்தின் பலனாய், தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார் பணத்தில் இந்தி கற்று, இந்தியத் தலைவர்களாகி வடநாட்டுத் தலைவர்களிடமெல்லாம் பார்ப்பனர்களே போய்க் காரியதரிசிகளாய் அமர்ந்து -அவர்களே தென்னாட்டுப் பிரதிநிதிகளாகி, அவர்களது ஆதிக்கத்திற்கே இந்திய அரசியலைத் திரும்பப் பயன்படுத்திக் கொண்டு வருகின்றார்கள்.
ஆகவே, அரசியல் துறையிலிருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் அறிவு இருந்தாலும் அதைப் பார்ப்பனர்களுக்குத் தக்க விலைக்கு விற்றுவிட்டார்கள் என்றாலும்-அரசியலில்லாத பார்ப்பனரல்லாதார்கள் அறிவையாவது தக்க வழியில் உபயோகித்துத் தகுந்த ஏற்பாடு செய்யவேண்டாமா? (குடிஅரசு - 10-5-1931)
No comments:
Post a Comment