Sunday, April 26, 2026

பெரியார் 90 - (1968)

 சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களும், தி.மு.க.விலும், காங்கிரசில் உள்ளவர்களும் பகுத்தறிவு, தமிழர் இன உணர்ச்சி உள்ளவர்களும், அரசியல் அதிகாரிகளாய், குமஸ்தாக்களாய், பணியாளர்களாய் உள்ளவர்களில் தமிழர் உணர்ச்சியாளர்களாய் இருப்பவர்களும், தங்கள் தங்கள் வீட்டில், தொழில் மனைகளில், வாகனங்களில் உள்ள கடவுள் மத, புராண, இதிகாசக் கதைகள் முதலியவை சம்பந்தமான உருவப் படங்கள் எதுவானாலும், அவைகளை அப்புறப்படுத்தி விட வேண்டும். கண்டிப்பாய் அப்புறப்படுத்தி விட வேண்டும் என்று மிக்க மரியாதையாய், வணக்கமாய் வேண்டிக் கொள்கிறேன்.

அரசாங்கப் பணிமனையில் தொங்கும் படங்களை எடுத்து விடுங்கள் என்று சொன்னவுடன் எல்லாப் பார்ப்பனர்களுக்கும் எவ்வளவு ஆத்திரம் வந்தது? நீங்கள்தான் பார்த்தீர்களே, இராஜாஜி மிரட்டுகிறார். `மித்திரன்’, `தினமணி’, `இந்து’, `மெயில்’,`எக்ஸ்பிரஸ்’ முதலிய பார்ப்பனப் பத்திரிகைகள் மிரட்டுகின்றன; விஷமப் பிரச்சாரங்கள் செய்கின்றன. இந்த ஒரு பிரச்சனையைக் கொண்டே தி.மு.க. ஆட்சியையே கவிழ்க்கப்பார்க்கின்றனர். ஏன்?

தங்கள் சாதி உயர்வும், நம் சாதி இழிவும் அந்தப் படங்கள் தொங்குவதில் உயிர் வாழ்கின்றன. அவை (படங்கள்) போய்விட்டால் உயர்வு-தாழ்வு போய்விடுமே என்கின்ற கவலைதானே? மற்றபடி அப்படங்களில் என்ன இருக்கின்றது? அவர்கள் சமுதாய உயர்வுக்கு அவர்கள் (பார்ப்பனர்கள்) அவ்வளவு பாடுபடுகின்றார்கள்.

நமக்கு புத்தி-மான ஈன உணர்ச்சி இருக்க வேண்டாமா? அந்தப் படங்களில் கடவுள் இல்லை என்பதற்காக அவற்றை எடுத்து எறியாவிட்டாலும் நமது ஈன நிலை, இழிவு நிலை பார்ப்பான் உயர்வு நிலை அதில் இருக்கிறது என்பதற்காகவாவது அவற்றை நமது அரசியல் பணிமனைகளிலிருந்தும், அதைவிட நமது வீடுகளிலிருந்தும் , தொழில் ஸ்தாபனங்களிலிருந்தும் எடுத்து எறிய வேண்டாமா என்று கேட்கிறேன்.

தோழர்களே! இனியாவது செய்து நீங்கள் இழி சாதி மக்கள் அல்ல என்பதைக் காட்டிக் கொள்ள வேண்டாமா? உங்கள் தாயார், சகோதரி,மனைவி, மகள்கள் பார்ப்பானக்கு வைப்பாட்டி, காமக் கிழத்தி ஆனவர்கள் அல்ல, ஆக வேண்டியவர்கள் அல்ல என்பதைக் காட்டிக் கொள்ள வேண்டாமா?

இதற்காக நான் 45 ஆண்டுகளாகப் பாடுபட்டு வருகின்றேன். அதன் பலன் இதுவாகவாவது (இந்தப் படங்களை அப்புறப்படுத்தவாவது) பயன்பட்டது என்று இருக்க வேண்டாமா?

நம் நல்வாய்ப்பாக தி.மு.க. ஆட்சி ஏற்பட்டது. அதை ஒழியும்படி செய்தீர்கள். ஆனால் பிறகு உங்கள் கதி என்ன ஆவது? நாணும் இனியும் (90-இக்கு மேல்) வாழ முடியுமா? எனக்கு அப்புறம் உங்களுக்கு இதை யார் சொல்லுவார்கள்? தி.மு.க. ஆட்சிக்கு அப்புறம் யார் இந்த உத்தரவு போடுவார்கள்? எல்லோரும் மாறான காரியத்தை அல்லவா செய்வார்கள்! நீங்கள் பழைய நிலைக்குத்தான் போக வேண்டி இருக்கும். ஆகவே எனக்கு 90-வது ஆண்டு பிறந்த நாள் பரிசாக இதையாவது செய்யுங்கள். செய்து காட்டுங்கள் என்று வணங்கிக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

இதுகிடைக்கப் பெற்ற ஒவ்வொருவரும் இதை மற்றவருக்குப் படித்துக் காட்டுங்கள்.

 90-வது பிறந்தநாள் மலர் 17.9.1968

No comments: