எனது 90-வது ஆண்டு `பிறந்த நாள் விழா’ மலரில் `எனது நிலை’ என்கின்ற கட்டுரை எழுதும் போது, 91 வது ஆண்ட `பிறந்த நாள் விழா’ மலருக்கு `எனது நிலை’ என்பது பற்றி எழுத வேண்டிய வாய்ப்பு இருக்குமா என்ற சந்தேகத்தில் எழுதினேன். என்றாலும் எப்படியோ 91-வது ஆண்டு `பிறந்த நாள் விழா’ மலருக்கும் `எனது நிலை’ என்பது பற்றி எழுதும் படியான வாய்ப்பு எனக்கு ஏற்பட்டுவிட்டது. அதாவது 90-வது ஆண்டு `பிறந்த நாள் விழா’ மலரில் `எனது நிலை’ என்ற கட்டுரையில் `எனக்கு வயது 90’ உடல் நிலை மிகவும் மோசம்; கைகால் நடுக்கம் அதிகம்; சிறுநீர் கழிக்கும் போது சப்தம் போட்டுக் கொண்டுதான் கழிக்கிறேன். அதாவது, அவ்வளவு வலி; தூக்கம் சரியாய் வருவது இல்லை.
நினைத்த போது உடலில் ஏதாவது ஒரு பாகத்தில் வலியேற்பட்டு சில ஏப்பமோ, காற்றுப் பிரிவோ ஏற்பட்ட பிறகு நோய் விலகுகிறது. உண்ட உணவு சரியானபடி ஜீரணமாவதில்லை; முன்போல் உணவும் சரியாய் உட்கொள்ள முடியவில்லை; எந்த காரியம் பற்றியும் மனத்திற்கு உற்சாகம் ஏற்படுவதில்லை. களைப்பு அடிக்கடி ஏற்படுகிறது; நெஞ்சில் வலி திடீரென்று ஏற்படுவதும் ஏப்பம் வந்த பிறகு குறைவதுமாக இருக்கிறது. எதைப்பற்றியும் சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டு விடுகிறது.
சுருக்கமாகச் சொல்லுவதானால், வாழ்வே வெறுப்பாக இருக்கிறது. என்றாலும் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன். நினைத்தபடி நினைத்த ஊருக்கெல்லாம் என்னை அழைக்காதீர்கள். அந்தப்படி என்னை மக்கள் அழைக்காமல் இருப்பதற்காகவே எனது வழிச் செலவுத் தொகையை ரூ 100-இல் இருந்து ரூ 150 ஆக ஏற்படுத்தி விட்டேன்.
ரூ.100 எனக்கு வண்டிச் செலவு, ரிப்பேர் செலவு, வைத்திய செலவு முதலியவைகளுக்கு அனேகமாகச் சரியாய்ப்போய்விடும். சில சமயங்களில் போதாமல் போகும். ஒரு தடவையில் 2,3 பயணம் ஏற்பட்டால் ஒரு அளவு மீதியாகி,பிரச்சாரத்திற்குப் பயன்படும்.
எனக்கு இனிப் பிரச்சாரத்தில் ஆசை இல்லை. ஒரு வாரப் பத்திரிகை துவக்கி, அதற்கு ஆசிரியனாக இருந்து எழுதிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதில்தான் ஆசை அதிகமாக இருக்கிறது. மற்றும் வெளியாக்கப்பட வேண்டிய விஷயம் அதிகம் இருக்கிறது. இதற்காக எளிதில் காணமுடியாத ஒரு தனி இடத்திற்குப் போகலாமா அல்லது ஈரோட்டிற்கே போய்விடலாமா என்று கூட எண்ணூகிறேன்.
இனி என் ஆயுள் எவ்வளவு இருக்க முடியும் என்பதில் எனக்குக் கவலை இல்லை. இருந்த வரை தொண்டு செய்யலாம் என்றுதான் திட்டம் போடுகிறேன். ஆனால் எதிர்பாராத சம்பவங்கள் நடப்பதும், ஏற்படுவதும் இயற்கையேயாகும். அதுபோல் என் முடிவும் இருக்கலாம்.
பொதுவாக என் மனம் குழப்பமாக இருக்கிறது. துறவி ஆகிவிடுவேனோ என்னமோ’ இந்தப்படி எழுதியிருக்கிறேன். அதை ஊன்றிப்படித்தாலே நான் எழுதியதின் தன்மை விளங்கும்.
இப்போது எனக்கு 90 ஆண்டு முடிந்து 91-வது ஆண்டு நடக்கிறது என்றாலும் 90-வது ஆண்டுக்கும் 91-வது ஆண்டுக்கும் இடையில் ஏற்பட்ட எனது உடல் நிலையின் தன்மை 91-வது ஆண்டு போல் இல்லாமல் 94,95 வது ஆண்டு என்று கருதும் படி அவ்வளவு கிழத்தன்மை ஏற்பட்டுவிட்டது என்று ஆகிவிட்டது. இது உடல் நிலை மாத்திரமல்லாமல் பஞ்சந்திரியங்களோடு புத்தி, மனது, சிந்தனா சக்தி முதலிய தன்மைகளும் மிக்கக் குறைந்து பலவீனப்பட்டு விட்டன.
என்றாலும், இவ்வோராண்டு நாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்தால் எனக்கு மற்ற கருவி காரணாதிகளின் பலக் குறைவு எப்படி இருந்தாலும் மனம் உற்சாகம் அடையும்படியான பல நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன.
முதலாவது நிகழ்ச்சி நமது தி.மு.க. ஆட்சியில் 13 மந்திரிகளில் 13 பேரும் தமிழர்கள் என்பதோடு, 18 அய்க்கோர்ட் ஜட்ஜுகளில் 14 பேர் தமிழர்கள் (பார்ப்பனரல்லாதவர்கள்) டெல்லி ஆதிக்கமில்லாத அதிகாரங்களில் 100-க்கு 500-க்கு மேல் 75 வரை பார்ப்பனரல்லாதவர் இருக்கும்படி ஆகிவிட்டது. அரசியலில் ஆளும் கட்சியிலும் எதிர்க் கட்சியிலும் தலைவர்கள், பணியாளர்கள் யாவருமே 100-க்கு 100-ம் தமிழர்களேயாவார்கள். இதை அணுசரித்தே மற்ற நிலைகளும் மாற்றமடைந்து வருகின்றன. இவ்வளவுக்கும் காரணம் தி.மு.க. ஆட்சி என்றே சொல்லுவேன்.
காங்கிரஸ் மத்திய ஆட்சி ஆதிக்கத்திலும், பச்சையாகப் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் பிளவும், வடநாடு-தென்னாடு என்கின்ற உணர்ச்சியும் காணப்படும் தன்மை உருவாகிவிட்டது. இவையெல்லாம் நம் தமிழர் சமுதாய விடுதலைக்கும், சுயமரியாதைக்கும் நல்ல வெற்றிவாய்ப்பு என்றே சொல்லத் தக்கவையாகும்.
மற்றும், 90 வது `பிறந்த நாள் விழா’ மலரில் `எனது நிலை’ என்ற கட்டுரை முடிவில் `துறவியாய்ப் போய் விடலாமா’ என்று எழுதி இருக்கிறேன். இன்று எனக்கு அப்படி இல்லை. அந்த எழுத்தைப் பார்த்து உயர் காமராசரும் அறி…ர் அணணாவும் எனக்குத் தெரிவித்தது போல், அதாவது `இப்போது உங்களுக்கு எதற்காகக் கவலை? நீங்கள் நினைத்த காரியம் எது நடவாமல் இருக்கிறது? கவலையை விட்டு விடுங்கள்’ என்று சொன்ன சொற்கள் எனக்கு உற்சாகத்தைக் கொடுக்கின்றன.
இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் `விபீஷணப் பரம்பரை’ வளர்ந்து வருவதுதான். இது தமிழரில் சில `சாதிக்கு’ (வகுப்புக்கு) இயற்கை என்றாலும் இது வருந்தத்தக்கதேயாகும். ஆகவே, எனது 90-வது வயதைவிட 91-வது வயது திருப்தியையும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது என்பது என் கருத்து. விபீஷணர்கள் திருந்துவார்களாக.
தி.மு.க. ஆட்சி இனியும் குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது இருக்கும்படி மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். எனக்கு இதற்குமேல் கருத்தும் ஓட வில்லை. எழுதவும் முடியவில்லை.
(91 வது பிறந்த நாள் விழா மலர், 17.9.1969)
No comments:
Post a Comment