எனக்கு இன்று முதல் 89-வது வயது தொடங்குகிறது. என் வாழ்வு எவ்வளவோ கவலை, தொல்லை துன்பங்களுக்கு ஆட்பட்டதாய் இருந்தாலும் சராசரி மக்கள் வாழ்க்கைக்குக் குறைந்ததாய் இல்லாமல் மேம்பட்ட வாழ்வாகவே நடந்திருக்கிறது. நான் சிறுவயது முதற்கொண்டே சுதந்திர எண்ணமுடையவனாகவும் நான் சொல்கிறபடி மக்கள் நடக்கவேண்டுமென்கின்ற உணர்ச்சியுள்ளவனாகவுமிருந்தே வாழ்ந்திருக்கிறேனே ஒழிய, மற்றொருவர் சொல்கிறபடி நடக்க வேண்டுமென்கிற எண்ணமற்றவனாகவே இருந்திருக்கிறேன். இன்றைக்கும் அப்படியே இருக்கிறேன். எனது சரித்திரத்தில் எனக்குத் தலைவனே இருந்ததில்லை.
எனது பத்தாவது வயதில் பிரைமரி நான்காவது வகுப்பு பாஸ் செய்து விட்டு வியாபாரத் துறையில் எனது தகப்பனார் மண்டிக் கடையில் கையாளாக ஆகிவிட்டேன். என் குழந்தைப் பருவத்தில் என் தாயாருக்கு உள்ள இரண்டு குழந்தைகளில் நான் இரண்டாவது குழந்தையாக இருக்கும் போது என்னை என் தகப்பனாருடைய சிறிய தாயாருக்கு வளர்த்துக் கொள்ளும் படி `தத்து’ போல் கொடுத்துவிட்டார்கள். அதனால் நான் ஒரு அடங்காப் பிடாரியாகவும், தறுதலை என்று சொல்லும்படியாகவும் சில சமயங்களில் ஒரு நாள் இரண்டு நாள்கூட வீட்டுக்கு வராமல் ஊர் சுற்றிக் கொண்டு திரிபவனாகவும் இருந்திருக்கிறேன். அப்போது என் வளர்ப்புத்தாய் நான் என்னைப் பெற்ற தாய் வீட்டிற்குப் போயிருப்பேனோ என்று தேடாமலும் கவலைப்படாமலும் இருந்து விடுவார்கள். இப்படிப்பட்ட என் சிறுவயதில் இது போன்ற சில பையன்கள் சேர்க்கை எனக்குண்டு. அந்தச் சேர்க்கைக் கூட்டத்திற்கு நான் தான் மேலாளாக (தலைவனாக) இருப்பேன். தெரு சுற்றிக்கொண்டு இருப்பதில் சாதி பார்ப்பதோ, எச்சில், சுத்தம், அசுத்தம் பார்ப்பதோ கிடையாது. எச்சில் பீடியைப் பொறுக்கிவந்து பீடி புகைப்போம். அப்பொழுது குழந்தைகளுக்குச் சாந்தி கழிப்பது என்ற வழக்கம் அதிகம். அமாவாசை, …hயிற்றுக் கிழமை வரும் அமாவாசை மற்றும் சில `விசேஷ’ நாட்களில் சாந்தி கழித்து அந்தச் சாந்திப் பண்டங்களை முச்சந்தியில் கொண்டுவந்து கொட்டிவிட்டுப் போய்விடுவார்கள்.நாங்கள் அவைகளில் உள்ள பண்டங்களைப் பொறுக்கி எடுத்து வந்து பங்கு போட்டுக் கொண்டு சாப்பிடுவோம். பத்து வயதாகி கடைக்குக் கையாளாக ஆனவுடன் இந்த நேசமும் பழக்கமும் மறைந்துவிட்டது. என்றாலும், கடைக்கு வருகிறவர்களுடன் பெரிய வாயாடிபோல் பேசிஅரட்டை அடிப்பதில் பழக்கம் அதிகமாகி, யாரும் என்னை விரும்பும்படி ஆகிவிட்டேன். கடை,வியாபாரம் என்றால் அது தரகுமண்டி வியாபாரம். அதாவது, கிராமத்து மக்கள், மிளகாய்,மஞ்சள் மற்றும் விளைந்த தானியங்கள் முதலியவைகளைக் கொண்டுவந்து எங்கள் கடையில் போட்டு விற்றுக் கொடுக்கச் சொல்லுவார்கள். இது போலவே, சில கிராம வியாபாரிகளும் , கிராமங்களிலும், கிராமச் சந்தைகளிலும் வாங்கிய சரக்குகளை எங்கள் கடையில் போட்டு விற்றுக் கொடுக்கச் சொல்லுவார்கள். இப்படியாக ஒரு நாளைக்குச் சராசரி இருபது பேர், முப்பது பேர் வருவார்கள். சில நாளைக்கு அய்ம்பது பேர் கூட வருவார்கள். இவர்களிடம் அரட்டை அடிப்பதுதான் என் ஒழிந்த நேர வேலை. இந்த அரட்டை எங்கள் கடைக்கும் வீட்டிற்கும் காசு பெற வரும் பக்தர்கள், புலவர்கள், பாகவதர்கள், சன்னியாசிகள் இவர்களிடமும் அவர்கள் வேஷத்தையும் அவர்கள் பேசும் விஷயங்களையும் பற்றிக் கேலி செய்யும் படியும் வளர்ந்துவிட்டது.
இப்படிப்பட்ட அரட்டையும் வாதமும் தான் 1900-இலேயே அதற்கு முன்பே என்னைப் பகுத்தறிவுவாதியாக (நாத்திகனாக) ஆக்கிவிட்டது. அப்படியிருந்தாலும் ஆத்திகமான காரியங்களில் கலந்து கொள்வதில் நான் பின்வாங்குவதில்லை. அதில் ஏற்படும், அதனால் வரும் பெருமைகளை அடைவதில் நான் தவறுவதில்லை. காரணம், அக்காலத்தில் ஈரோட்டில் எங்கள் கடைதான் பெரிய கடை. எங்கள் வீடுதான் பெரியவீடு. எங்கள் தகப்பனார்தான் ஊருக்குப் பெரிய மனிதர். ஒரு அளவுக்குப் பணக்காரருங் கூட. இந்த நிலையில் எல்லாக் காரியங்களிலும் கலந்து கொள்வது போல ஆத்திகக் காரியங்களிலும் கலந்து கொள்வேன்.
நான் தேவஸ்தான கமிட்டி செகரட்டரியாக, தலைவனாக 15 ஆண்டு போல் இருந்திருக்கிறேன். அந்தக் கடமைகளில் நான் தவறவில்லை. ஆனாலும், மக்கள் மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமென்பதிலும் மக்களைப் பகுத்தறிவுவாதிகளாக ஆக்க வேண்டுமென்பதிலும் எனக்கு 1925 ஆம் ஆண்டு முதல் உறுதியான எண்ணமும் ஆசையும் உண்டு. இதற்குக் காரணம், ஆத்திகத்தினால் (கடவுள், மத நம்பிக்கை ஆதிக்கத்தால்) தான் இந்த நாட்டில் சாதி (பார்ப்பான் `பிராமணணாய்’ வாழ்வதும்) அரசியல், மத ஆதிக்கத்தில் பார்ப்பான் இருந்து கொண்டு சமுதாய வளர்ச்சியையும், அறிவு (விஞ்…hன) வளர்ச்சியையும் தடைசெய்து கொண்டு இருக்கிறான் என்பதும் எனது உறுதியான எண்ணம் என்பதோடு, நான் எந்த ஸ்தாபனம் வைத்திருந்தாலும் எந்தக் கட்சியை ஆதரித்தாலும், யாரோடு சேர்ந்தாலும் யாரை விரோதித்தாலும் அவற்றிற்கெல்லாம் இதுவே காரணம். இப்போதும் காங்கிரஸ்காரர் பலரை ஷௌவறுக்கிறேன் என்றாலும் தி.மு.க.காரர் பலரை நேசிக்கிறேன் என்றாலும் இதுவேதான் காரணம். இந்திய சரித்திரத்திலேயே புத்தன், அசோகன் ஆட்சிக்குப் பிறகு நமது நாட்டுக்கு இன்றுதானே பகுத்தறிவாளர் (நாத்திகர்) ஆட்சி ஏற்பட்டிருக்கிறது. இதை ஆத்திகர் எதிர்க்கலாம். ஆனால் பகுத்தறிவாளர் (நாத்திகர்) என்பவர்களின் கடமை என்ன?
அரசியல் `குற்றம் குறை’ என்பது யாருடைய ஆட்சியிலும் எந்த அளவுக்காவது நடந்துதான் தீரும். அக்காலத்தில் ஜஸ்டிஸ் (திராவிடர் கழக) ஆட்சியைக் காங்கிரஸ்காரர்கள் எப்படியெப்படி எல்லாம் எதிர்த்தார்களோ (`தாலியறுத்தார் இராமசாமி முதலியார்’ என்று சொல்லி) அப்படி எல்லாம் இப்போதும் சொல்லுவார்கள்; எதிர்ப்பார்கள்; தப்புப் பிரச்சாரம் செய்வார்கள்; நல்ல காரியம் எதையும் செய்துவிடாமல் தடுப்பார்கள்; கலகம், குழப்பம் செய்வார்கள். நமது மக்களுக்கு அவற்றை உணரும் சக்தியில்லை; இருக்காது.
என்றாலும் இதில் சுயமரியாதை இயக்கத்தார்-திராவிடர் கழகத்தார் கடமை என்ன என்பதை நல்ல வண்ணம் சிந்தித்து நடந்து b.காள்ள வேண்டும். இந்தியாவில் சரிபகுதி காங்கிரசிற்கு எதிர்ப்பாகி விட்டது. என்றாலும், காங்கிரசார் மக்களைத் தங்கள் பக்கம் திருப்ப மக்களிடம் பிரச்சாரம் செய்வதை விட்டுவிட்டு, எதிர்ப்பு ஸ்தாபனங்களை அழிக்கப் பாடுபடுகிறாரகள். இது `தும்பை விட்டு வாலைப் பிடைக்கிற கதை’யாகத்தான் முடியும்.
காங்கிரசார் தங்களைப் பகுதிதறிவுவாதிகள் என்று காட்டிக் கொள்ளாதவரை நாம் எப்படி இன்று காங்கிரசை ஆதரிக்க முடியும்?
தி.மு.க.காரரும் என்ன செய்தாவது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்கின்ற ஆர்வத்தில், தங்கள் இருக்கும் படகில் ஓட்டை ஏற்படி செய்து கொள்வதும் ஒரு வழியென்று நினைப்பார்களானால் அது தங்களைக் காப்பாற்றிக் கொள்வதாகாது. மூழ்கடித்துக் கொள்வதுதானாகும். அவர்கள் முயற்சியில் கூடியவரை சுயமரியாதைக்காரரையும் திராவிடர் கழகத்தாரையும் விரோதித்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; தங்கள் மக்களுக்கு அடக்கத்தைப் போதிக்க வேண்டும்; சிறு தகராறு, கோளாறுகளைச் சிறிது விட்டுக் கொடுத்தாவது பொறுமை காட்டி சரிப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்ணும் இக் கூட்டத்திலும் தங்களை ஒருவருக்கொருவர் விரோதிகள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள்; அது தவறு. இன்று பார்ப்பனரும் காங்கிரசாரும் ஒன்றாகிவிட வில்லையா? ஒருவருக்கொருவர் எவ்வளவு சிபாரிசு! எவ்வளவு ஆதரவு! அந்தப் புத்தி நமக்கு வரவேண்டாமா? தலைவர்களுக்கு மிக்க பொறுப்பு வேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் அடக்கிக் கொண்டுதான் வருகிறேன். ஒரு நாள், இரண்டு நாள் அல்ல. இன்ணும் நாலரை வருடம் இருக்கிறது. அடுத்த எலக்ஷன் எப்படி ஆனாலும் எனக்குக் கவலையில்லை. அதுவரை தி.மு.க. ஆட்சி நல்ல படி நடக்க வேண்டும். பல அரிய காரியங்களைச் செய்ய வேண்டும். கட்டுப்பாடு, ஒற்றுமை, எதிர்க்கட்சியாரிடம் பொறுமை, அடக்கம் வேண்டும். நமதுதோழர்கள் இனி பகுத்தறிவுப் பிரச்சாரத்தில்தான் கவலை கொள்ள வேண்டும். மக்களிடம் இலட்சக் கணக்கில் அவர்கள் பகுத்தறிவுவாதிகள் என்று கையொப்பம் வாங்க வேண்டும். கையொப்பம் வாங்க அலவன்ஸ் கொடுத்துத் தொண்டர்களை நியமிக்க வேண்டும். தங்களுக்கு வேலை இல்லை என்று யாரும் நினைக்கக் கூடாது. இதுதான் நமது நிர்மாணத்திட்டம்.
எனது காயலா சற்றுக் கடினமாதுதான். எளிதில் குணமாகாது. மூத்திர வழியில் கற்கள் இருக்கின்றன. அவை கரைய மாதக் கணக்கில் காலமாகும். ஒரு சமயம் ஆபரேஷன் (அறுவை சிகிச்சை) தேவை இருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் நான் பயப்படவில்லை. எதற்கும் தயாராக இருக்கிறேன். மணியம்மையார் கவனிப்பும் உதவியும் அளவிடற்கரியது. உங்கள் கடமையிலிருந்து தவறாதீர்கள்!
(89வது பிறந்த நாள் விழா மலர் 17.9.1967)
No comments:
Post a Comment