Sunday, April 26, 2026

பெரியார் 85 - (1963)

 சுமார் 10,15 ஆண்டுகளாக எனது பிறந்த நாள் பாராட்டுக் கூட்டம் (விழா) என்பதில் நான் பாராட்டுதலுக்கு நன்றி செலுத்தும் போது அடுத்த ஆண்டு வேலைத்திட்டம் என்பதாக ஏதாவது ஒரு திட்டத்தை வெளியிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அப்படி வெளியிடுவதில் நான் பெரிதும் சமுதாய சம்பந்தமான குறைபாடுகளை, மத சம்பந்தமான மூட, காட்டுமிராண்டித்தனமான கருத்து, செய்கை ஆகியவைகளைப் போக்குவதற்கு ஏற்றதான திட்டங்களையே வேலைத் திட்டமாகச் சொல்லி (வெளியிட்டு) வந்திருக்கிறேன். அப்படிச் சொல்லி வருவதில் சொல்லுவதற்கேற்ப ஒரு அளவுக்கு அது நிறைவேறும் வண்ணம் கிளர்ச்சியோ, முயற்சியோ கழகத்தின் மூலம் செய்தும் வந்திருக்கிறேன். ஆனால் அவை எல்லாம் நிறைவேற்றம் அடைந்தது என்று சொல்லுவதற்கு இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு சிறு அளவுக்காவது வெற்றியும் வெற்றி முகம் ஏற்பட்டு வருவதுடன், மக்களிடையில் அத் திட்டத்தின் அவசியம் பற்றிய உணர்ச்சி வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறதை நான் உண்மையாகவே உணருகிறேன்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அத்திட்டங்கள் எவ்வளவு புரட்சி கரமானதாக இருந்தாலும் அவற்றில் எதையும் வாயளவில் கூட மறுக்கும் படியான எதிர்ப்புக் காரியங்களை இது வரை நான் எந்தக் கூட்டத்தாராலும் எந்தத் துறையிலாவதும் காணவே இல்லை.

பொதுவாக, பார்ப்பனர்களுடையவும் மத உணர்ச்சியாளருடையவும் வெறுப்பைப் பெற்று வந்திருக்கிறேன் என்பதை நான் மறுக்க வில்லை.  இந்த வெறுப்புத் தன்மை எனது திட்டங்களுக்குப் பாமர மக்களாலும் கூட ஏற்படுவது என்பது அதிசயமாகாது. ஏனெனில், நம் மக்கள் 100-க்கு 90 பேர் எழுத்து வாசனை அற்றவர்கள். படித்த மக்களில் 100-க்கு 99 பேர் மூட நம்பிக்கையில் மூழ்கிப் பேராசை கொண்டவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நமது திட்டங்கள் அவர்களுடைய சுயநலத்திற்குக் கேடு ஏற்பட்டதாகவே கருதி, நம் மீது வெறுப்புக் கொண்டுதான் வந்திருக்கிறார்கள்.

இந்த வெறுப்புக்களை நான் குழந்தைகள் மருந்து சாப்பிட, தங்கள் எதிர்ப்பைக் காட்டுவது போன்றது என்று கருதி `எதிர்ப்பை’-வெறுப்பை இலட்சியம்  செய்யாமல் தொண்டாற்றியே வந்திருக்கிறேன்.

அத் தொண்டுகள் அடியோடு வீணாகிவிட்டன என்று சொல்ல முடியாமல் நாடும், கொடுமைக்கும் மடமைக்கும் ஆளான சமுதாயமும், நல்ல அளவுக்கு முன்னேறியே வருகிறதைப் பார்க்கின்றேன்.

இதற்கு எடுத்துக் காட்டு என்னவென்றால், நாடு, சமுதாயம், முன்னேற்றத்தினால் இன்று எந்தச் சமுதாயத்திற்கு `கேடு’ நெருங்கி வருகிறதோ அந்தச் சமுதாயம் தங்களது கடைசி ஆயுதத்தை இன்று பயன்படுத்த முன் வந்து இருப்பதே போதுமானதாகும்.

சாதாரணமாகச் சொல்லுவதானாலும் கடவுள், மதம் சாதி என்கின்றதான மாயப்பேய்கள் இன்று செத்துப் பிணங்களாகிவிட்டன என்றே சொல்லலாம். இவற்றில் ஈடுபட்டவர்கள், இவற்றால் பயனடைந்தவர்கள் இப்பிணங்களுக்குச் சமாதி கட்டும் வேலையில் தான் இன்று ஈடுபட்டிருக்கிறார்களே ஒழிய, கொஞ்சமாவது உயிர் இருக்கிறதென்று கருதி, யாரும் பிழைக்க வைக்க முயற்சிக்கவில்லை என்றே எனக்கு த் தோன்றுகிறது. என்றாலும் கூட இந்தச் சுயநல-மவுடீகக் கும்பல்கள் மக்களை, சமாதியைக் காட்டி ஏமாற்றிப் பிழைப்பதற்கில்லாமல் மேலும் சில வேலைசெய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை நான் மறைக்கவில்லை.

ஏனென்றால் மக்களின் மடமை அவ்வளவு முதிர்ந்ததாக இருக்கிற படியாலும் எதிரிகள் கடைசி முயற்சி செய்கிறபடியாலும் நமக்கு இப்போது வேலை இல்லை என்ற சொல்லுவதற்கு இல்லை. மற்றும் நமக்கு இன்று மற்றொரு புதிய தொல்லை ஏற்பட்டி ருக்கிறது. அது என்ன தொல்லை என்றால், இது வரை நாம் பார்ப்பனர் தொல்லைக்குப் பரிகாரம் தேடும் பணியில் முனைந்து இருந்தோம். இப்போது நாம் பார்ப்பனர் மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுடையவும் கிறிஸ்துவர்களுடையவும் தொல்லையைச் சுலபமான தொல்லை என்று கருதி விட முடியாது. க·டமான தொல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நான் இந்த 85 வது ஆண்டுக்கு வேலைத் திட்டமாக நமது சமுதாயம், நமது பார்ப் பனரல்லா சமுதாயமாகிய `4-ஆம் சாதி’ `சூத்திரர்’ என்று பார்ப்பனரால் ஆக்கப்பட்டு அதற்கு ஏற்ப இழி மக்களாகவும் கல்வி அறிவற்ற காட்டுமிராண்டி மக்களாகவும் இருக்கச் செய்யப்பட்ட நாம், கல்வி, நல்வாழ்வு, ஆட்சி உரிமை முதலாகியவற்றில் நம் சமுதாயம் (எண்ணிக்கைக்கு ஏற்ப) விகிதாசாரம் அடைய வேண்டும் என்கின்ற சில இலட்சியத்தைப் பெறும்படியான பணியை வேலைத் திட்டமாகக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.

இதை மிகக் கடினமான வேலைத்திட்டம் என்று தான் கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த நாட்டில் பார்ப்பன சமுதாயத்தின் உயிர்-ஜீவநாடியே இதுதான். அதாவது, நம்மை மேற்கண்ட இழிவான அடிமை நிலையில் வைத்து இருப்பதுதான். எப்படி என்றால் ஆட்சியில் நமக்கும் அவர்களுக்கும் சமுதாய எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதாசாரம் ஏற்பட்டு விட்டது என்றால், அந்த நிமிடமே (பார்ப்பான்) `பிராமணன் செத்தான்’ என்று ஆகிவிடும். அதுமாத்திரமல்லாமல், சூத்திரன், இழிமகன், மூடக் காட்டுமிராண்டி மகன் என்பவணும் ஒழிந்தான். சரிநிகர் மனித சமுதாயம் தான் நம் நாட்டில் இருக்கிறது என்பதாக ஆகிவிடும். ஆதலால், இந்த நம் இலட்சியம் நிறைவேற பார்ப்பான் தன்ணுடைய எல்லாவற்றையுமே செலவழித்துப் பார்ப்பான். ஆனதினாலே இந்த நமது இலட்சியம் மிகக் க·டமானது என்று கருதினேன்.

உதாரணமாக, நம்மில் கீழ்த்தரமான மக்களையெல்லாம் பார்ப்பான் இன்று தன்னோடு இணைத்துக் கொண்டு அவர்களையும் நம் சமுதாய நலத்துக்கு எதிரிகளாக ஆக்கி தொல்லை கொடுத்துக் கொண்டு இருந்த பார்ப்பனர், இன்றைய நிலைக்குத் தனக்கு அந்தப் பலம் போதாது என்று கண்டு கொண்டவுடன் புதிய பலத்தை உண்டாக்கிக் கொள்ள முயற்சித்து அதில் வெற்றி பெற்று விட்டனர்.

அந்தப் புதிய பலம் என்னவென்றால் நம் நாட்டில் பார்ப்பனர்களைப் போலவே உள்ள மற்றும் சிறுசிறு (மைனாரிட்டி) வகுப்புகளான முஸ்லிம்களையும் கிறிஸ்த வர்களையும் தன்னோடு சேர்த்துக் கொண்டனர்.

ஆதலால், நாம் இன்று 1. பார்ப்பனர் 2. நம்மில் கீழ்த்தர மக்கள் 3. முஸ்லிம்கள் 4. கிறிஸ்தவர்கள் ஆக இன்று நமக்குச் சமுதாய எதிரிகளாக இந்த நான்கு கூட்டங்கள் (குழுக்கள்) இருக்கின்றன. இந் நால்வரும் ஏற்கனவே நம் சமுதாயத்தைப் பற்றிக் கவலை இல்லாவதவர்கள். மற்றும் இந் நான்கில் மூவர், தம் தம் சமுதாயத் துறையில் நம்மைவிட மேலான நிலைமையில் அரசியல் பொருளாதார இயல், கல்வி இயல், பதவி இயல், மத இயல் முதலியவற்றில் சராசரித் தன்மைக்கு மிகமிக மேலான நிலைமையில் இருப்பவர்கள், வாழ்பவர்கள் என்று சொல்லத் தக்கவர்கள் ஆவார்கள். ஒரு கூட்டத்தினர் நம்முடைய இழிநிலை பற்றியும் ஏன்-தங்களுடைய இழிநிலை பற்றியுங் கூடக் கவலை இல்லாமல் `சோறு-சீலை-காசு’ ஆகிய மூன்றையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டவர்கள் ஆவார்கள். ஆதலால் ஒரு சிறு நலத்திற்கும் தங்களுடைய எதையும் தியாகம் பண்ணவும் துணிவு கொண்ட வர்களாக இருக்கிறார்கள்.

ஆகையால் நமது இலட்சியம் நிறைவேறுவதற்கு இவர்கள் - இந் நான்கு குழுவி னர்களும் பெரும் கேடர்களாக இருக்கும் நிலைமை நமக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலை நம் வளர்ச்சியையும் நம் இன்றைய நல்வாழ்வையும் சிதைத்து விடும் என்றே கருத வேண்டி இருக்கிறது.

இந் நிலை இன்று ஏற்படக் காரணம், இதுவரை இல்லாத அளவுக்கு காமராசர் ஆட்சி காரணமாகத் தமிழ் மக்களாகிய நாம் பெரும் அளவுக்கு முன்னேறி வருகிறோம். இதைச் சிதைக்க வேண்டிய அவசியம் பார்ப்பனருக்கு ஏற்பட்டுவிட்டது. அவர்கள் (பார்ப்பனர்கள்) தனித்து நின்று நம்மை எதிர்த்து அழிக்க முடியாது. ஆதலால், துணை தேட முயன்றார்கள். அம் முயற்சியில் ஏனைய முக் குழுவினர் அவர்களுக்குக் கிடைத்துவிட்டார்கள். ஏனெனில், இவர்களுக்கு எவ்விதக் கொள்கையும் கிடையாது. யாரை அண்டியாவது எப்படி நடந்தாவது தங்கள் நலன் ஒன்றே இலட்சியமாகும். நாம் வகுப்புவாரி உரிமை கேட்கும் போது அந்தப்படி நாம் அடைந்து விட்டால் இவர்கள் நலம் கெடும் என்கின்ற குறை, அச்சம் ஏற்பட்டுவிட்டது. ஆதலால் இவர்கள் எளிதில் பார்ப்பனர் வலையில் பட்டுவிட்டனர்.

மற்றும் ஆச்சாரியார் முஸ்லிம்களை மயக்க கா·மீரை முஸ்லிம்களுக்க (பாகிஸ்தாணுக்கு) கொடுத்துவிட வேண்டியது நியாயம் என்று சொல்லிவிட்டார். இதற்கு முஸ்லிம்கள் நன்றி காட்டும் முகத்தான் இராஜாஜிக்கு இந்தியப் பிரதமர் பதவி கொடுக்க வேண்டும். அவர்தான் அதற்குத் தகுதி உடையவர் என்று பாகிஸ்தான் தலைவர் அயூப்கான் சொல்லி இந்நாட்டு முஸ்லிம்களை ஆச்சாரியாரை ஆதரிக்கச் செய்து விட்டார்.

மற்றும் நமது பகுத்தறிவுக்குக் கிளர்ச்சியும் நேருவின் சோ·யலிசம் கொள்கையும் இஸ்லாம், கிறிஸ்துவ சமுதாயத்திற்கு -அவர்கள் மதத்திற்குக் கேடு வரும் என்ற புரளியைப் பார்ப்பனர் கிளப்பிவிட்டு விட்டார்கள். இதனாலேயே முஸ்லிம்-கிறிஸ்தவ சமுகத் தலைவர்களான திரு. இஸ்மாயில் அவர்களும் திரு. ரத்தினசாமி அவர்களும் இவ்விரு சமுதாயமும் இராஜாஜியை ஆதரிக்க வேண்டும் என்று கட்டளை இட்டுவிட்டார்கள்.

ஆகவே இனி வரும் தேர்தல்களில் இம்மூன்று குழுவினரும் தங்களுக்கு வெற்றி கிடைக்க வகை இல்லை என்று தெரிந்தாலும் நம் மில் இருந்து கொண்டே தங்கள் சுய நலத்துக்கு, நம் இனத்துக்குக் கேடு செய்து வாழ்வது என்ற முடிவில் ஆச்சாரியாரை அண்டி இருக்கும் `கண்ணீர்த் துளிகளை’த்தான் ஆதரிக்க வேண்டும்; எப்படியாவது காமராசரைத் தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்ற சதித் திட்டம் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதன் பயன் என்ன ஆகும் என்றால் இனித் தேர்தல்களில் இரண்டு கட்சிகள்தான் போட்டி! அப்போட்டிகளில் காமராசர் (காங்கிரஸ்) கட்சி, தமிழர்களின் ஓட்டுகளை அதிகமாய் (மெஜாரிட்டியாய்) பெற்றாலும் வட இந்த பார்ப்பனர், முஸ்லிம், கிறிஸ்துவர்கள் ஆகிய முக் குழுவும் எந்தக் கட்சிக்கு ஓட்டு செய்வார்களோ அந்தக் கட்சிதான் ஜெயிக்க முடியும். திருவண்ணாமலைத் தேர்தல் முடிவு அப்படித்தான் ஏற்பட்டது. நம் தமிழ் மக்களின் ஓட்டு நமக்கு அதிகமாய் கிடைத்திருந்தும் இந்த முக் குழுவினர் ஓட்டுகளாலேயே காமராசர் (தமிழர் கட்சி) தோல்வி அடைய வேண்டிய தாயிற்று. அது போலத்தான் இனியும் அவர்கள் 3 பேர்கள் நமக்கு எதிரிகளாகி நம் எதிர்கட்சிக்கு ஓட்டுச் செய்தால் அது நமக்கு பெருங் கேடாகவே முடியும்.

இதற்காகத்தான் இராஜாஜி காங்ககிரஸ் மெஜாரிட்டி சமுதாயக் கட்சி ஆனதால், அதனால் மைனாரிட்டி சமுதாயத்திற்குக் கேடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள மைனாரிட்டி சமுதாயம் ஒன்றாகச் சேர்ந்து கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்று கூறி, கூட்டுச் சேர்த்துக் கொண்டு துணிந்து எதிர்க்கிறார்.

இதற்குப் பரிகாரம் தேடவில்லையானால் நாம் என்னதான் பிரச்சாரம் செய்தாலும் கட்சியைப் பலப்படுத்தினாலும் வெற்றி கிடைப்பது முடியாத காரியமாக ஆனாலும் ஆகிவிடலாம். ஆனதால் மைனாரிட்டி முழு வோட்டினால் மெஜாரிட்டி கெடாமல் இருக்க அவர்களைத் தேர்தலில் ஒதுக்கி விடுவதேதான் நாம் இத் தொல்லையில் இருந்து விலகத்தக்க மார்க்க மாகும். குறைந்தது, அவ்விரு சமுதாயத்திற்குமாவது தனித் தொகுதி கொடுத்து ஒதுக்கி விட்டுவிட்டால் பெரும் அளவிற்குத் தொல்லை ஒழியும் என்பது எனது கருத்து. அதோடு கூடவே வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் என்ணும் பேரால் தமிழர், பார்ப்பனர், முஸ்லிம், கிறிஸ்தவர் என்கின்ற தலைப்பில் அவரவர் சமுதாய எண்ணிக்கைப்படி அரசாங்கத்திற்குள்ள எல்லாத் துறையிலும் இவ்வாறு பிரித்து விட்டால், தமிழ் நாட்டை தமிழ் மக்களைப் பிடித்த எல்லாக் கேடுகளும் ஒழிந்தே போகும்.

ஆகவே இதைத்தான் எனது 85 வது ஆண்டுத் திட்டமாக நான் கொண்டிருக்கிறேன்.

இவற்றிலும் முதலாவது, நம் நாட்டு ஆட்சியில் நாம் அடையவேண்டிய வகுப்பு உரிமைக்குக் கிளர்ச்சி செய்வதை உடனடித் திட்டமாய்க் கொண்டி ருக்கிறேன்.

நம் இயக்கத் தோழர்கள் ஆயத்தமாய் இருக்க வேண்டிக் கொள்ளுகிறேன்.

(85 வது பிறந்த நாள் விழா மலர் 17.9.1963)

No comments: