Sunday, April 26, 2026

பெரியார் 92- ( 1970)

 எனக்கு வயது 91. ஆண்டுகள் 91 முடிந்து விட்டன. 17.9.1970 வது நாள் முதல் 92-வது ஆண்டு துவங்குகிறது.

91 வது ஆண்டு எனக்கு உற்சாகமாகவே கழித்ததுடன் மனச் சலிப்பு அடைய வேண்டிய அவசியமில்லாமல் இருப்பது மாத்திரமல்லாமல் இருப்பதுடன் வாழ்நாள் தீண்டால் மேலும் பல முன்னேற்றகரமான காரியம் செய்ய வாய்ப்பு ஏற்படலாம் போல் எனக்குத் தோன்றுகிறது.

மக்களிடையில் ஒரு மாறுதலைக் காண்கிறேன். அதுவும் தீவிரமான மாறுதல்களுக்கு இணங்குபவர்கள் போல் மக்களைக் காண்கிறேன்.

அதாவது கடவுள் மதம், சாதி முதலிய விஷயத்தில் மக்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மாறுதலடையப் பக்குவமாய் இருக்கிறார்கள் என்றே காணூகிறேன். இந்த நிலைதான் எனது உற்சாகத்திற்கும் மேலும் இருந்து தொண்டு செய்யலாம் என்ற நம்பிக்கைக்கும் அவாவுக்கும் காரணமாகும்.

இந்த நிலையில், நான் எனது 92-வது பிறந்த நாள் சார்பாக மக்களுக்குத் தெரிவித்துக்கொள்வதெல்லாம், மனம் துணிந்து மேலும் மாறுதலடையுங்கள் என்பதேயாகும். 

நான் இந்த நிலை அடைந்ததற்கும் மக்களை இந்த அளவுக்கு நான் வேண்டுவதற்கும் முக்கியமான காரணம், இந்த இரண்டு மூன்றாண்டுகளாக நமது நாட்டில் நடந்து ஆட்சியாகும்.

நமது நாட்டு ஆட்சியானது பகுத்தறிவு ஆட்சி என்பதோடு எந்தவித மாறுதலுக்கும், எவ்வளவு தூரம் துணிந்து செயலாற்றுவதற்கும் துணிவுள்ள ஆட்சியேயாகும். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு  பொதுவாகவே மக்கள் வாழ்வில் சுபிட்சம் ஏற்பட்டிருக்கிறது. இது இயற்கையின் காரணம் என்றாலும் மக்கள் இன்ப வாழ்வு வாழ்கிறார்கள் என்று திருப்தியடையத்தக்கதாகவே இருந்து வருகிறது. எண்ணத்தில் பெருத்த முன்னேற்றத்தையும் அடைந்து வருகிறார்கள்.

இவற்றை ஏன் பெருமையாகக் குறிப்பிடுகிறேனென்றால், பதவி வெறியால் தூண்டப்பட்ட எதிரிகள்,எதிர்க் கட்சிகள், `தங்கள் சமுதாயத்திற்கு ஆபத்து வந்து விட்டது’ என்று கருதிப் பயந்து கிடக்கும் நம் பிறவி எதிரிகளாகிய பார்ப்பனர்கள் இந்த ஆட்சியை அழிக்கச் செய்த,செய்து வருகிற இமாலயப் பிரயத்தனங்கள் தவிடு பொடியாகி வருவதுடன் எவ்விதத் தடையுமின்றி ஆட்சியின் காரியம் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருப்பதுதான்.

இந்த நிலையில் தான் எனது 92-வது ஆண்டு செய்தியாக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்வது என்ன வென்றால், இந்த ஆட்சியை இன்ணும் ஒரு பத்தாண்டுக்குப் பாதுகாத்து வரவேண்டுமென்பதே ஆகும்.

தேசம் மிருகப் பிராயத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறது. யாரும் எப்படிப்பட்ட வரும் எந்த இழிவான காரியத்தைச் செய்யவும் பயப்படுவதில்லை. ஒழுக்கம், நேர்மை, நாணயம், அமைதி என்பது பெரும்பாலோரிடம் காணமுடிவதில்லை. பொதுவில் பார்த்தால் நமது நாடுதான் இந்தியாவிலேயே பாதுகாப்பான நாடு என்று கருதத் தக்கதாய் இருந்து வருகிறது.

இதற்குக் காரணம் தி.மு.க. ஆட்சிதான் என்று உறுதியாய்க் கூறுகிறேன். எனவே இதற்கு ஏதாவது மாற்றம், ஏற்படுமானால் அதை வேறு எந்த ஆட்சி வந்து மக்களை இன்றைய நிலைக்குக் கேடில்லாமல் ஆள முடியும்?

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இந்த ஆட்சிக்க மாற்றம் ஏற்படுமானால் அடுத்துவர இருப்பது பார்ப்பன ஆட்சிதான்-அதாவது வருணாசிரமத்தை நிலைநிறுத்தும் ஆட்சிதான். இது உறுதி. உறுதியேயாகும். ஏனிப்படிச் சொல்கிறேன் என்றால் இந்தியா முழுவதற்குமே இன்று வருணாசிரமப் பாதுகாப்பு ஆட்சி, கட்சி, மக்கள் என்பவர்கள் அல்லாமல் வேறு கட்சியும் இல்லை. மக்களும் இல்லை. கொள்கையும் இல்லை. காமராசர் பலமற்றுப் போய்விட்டார். அவரது எண்ணங்களும் மாற்றமடைந்து வருகிறது. பார்ப்பனரைத் தஞ்சமடைய வேண்டிய நிலைமைக்கப் போய்க்கொண்டிருக்கிறார். அவரது கட்சியும் (காங்கிரசும்) உருக் குலைந்து விட்டது. அவருக்கு உதவியாளரும் யாரம் தகுதியானவரில்லை. இவை மாத்திரமா? நமது பொது எதிரியான பார்ப்பனத் தலைவர் - நம் சமுதாயத்தை அழித்து ஒழித்துக் கட்ட கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் இராஜாஜி பலம் பெற்று வருகிறார். இதற்குக் காரணம் காங்கிரஸ் பிளவுபட்டதேயாகும்.

இந்த நிலையில் இன்றைய நமது நாட்டு ஆட்சிக்கு ஏதாவது மாறுதல் ஏற்படுமானால் காமராசர் ஆட்சி ஒருநாளும் அந்த இடத்திற்கு வராது; மற்றெது வருமென்றால் பார்ப்பனர் ஆட்சி-இராஜாஜி ஆதிக்க ஆட்சி தான் வரும். அதுவோ வேறு எதுவோ வந்தாலும் பழிவாங்கும் ஆட்சியாய்தானிருக்கும். அல்லது அசல் காலித்தன, பலாத்காரத்தாண்டவ ஆட்சியாகத்தானிருக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். 

ஆகவே எனது 92 ஆம் ஆண்டுச் செய்தி என்பதாக எனது 91 ஆண்டு அணுபவ அறிவைக் கொண்டு சொல்லுகிறேன்.

மக்கள் எல்லோரும் பகுத்தறிவுவாதிகளாக மாறுங்கள்!

எப்பாடு பட்டாவது இன்றைய நம் தி.மு.க. ஆட்சியை இனியும் ஒர பத்தாண்டுக்கு நல்ல பலம் பொருந்திய ஆட்சியாக இருக்கப் பாடுபடுங்கள் என்பதுதான்.

(92 வது பிறந்தநாள் விழா மலர் -17.9.1970

No comments: