Monday, June 20, 2022

திராவிட இயக்க ஆய்வாளர் விநாயகம் கந்தசாமி - பேரா.அ. மார்க்ஸ்

 திராவிடர் இயக்கக் குறிப்புகள்

++++++++++++++++++++++++++++++++++

தோழர் விநாயகம் கந்தசாமி திராவிட இயக்க  ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்கவர். தமிழக திராவிட இயக்கம் மட்டுமல்லாமல் மலேசிய - சிங்கப்பூர் திராவிட இயக்கம் குறித்த வரலாற்றையும் எழுதி வருபவர். 

"திராவிடர் இயக்கக் குறிப்புகள்" - எனும் தலைப்பில் அவர் எழுதி வரும்  குறிப்புகள் முக்கியமானவை. நாம் கவனிக்கத் தவறும் பல அம்சங்களை அவர் கவனப்படுத்தி வருகிறார். திராவிட இயக்கம் குறித்த அவரது இத் தொடரின் 35வது குறிப்பு இது.

திராவிட இயக்கத்தின் மீது பெருந் தாக்குதல் நாலாபுறங்களில் இருந்தும் நடந்து கொண்டிருக்கும் காலம் இது. அதற்கு உரிய மறுப்பையும் எதிர்ப்பையும் முன்வைக்க வேண்டியவர்களும், அதற்கான வசதிகள் உள்ளவர்களும் மௌனம் காப்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் திரaவிட இயக்கம் எனும் பெயருல் இன்றைய திமுகவின் குடும்ப அரசியலுக்கு முட்டுக் கொடுப்பவர்கள்- இத்தனைக்கும் மத்தியில்தான் எந்த உரிமையும் கோராமல், எந்தப் பெருமைக்கும் தன்னை ஆட்படுத்திக் கொள்ளாமல் திராவிட இயக்க வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கும் நம் விநாயகம் கந்தசாமி போன்ற ஒப்பற்ற நண்பர்கள். 


அவரது இந்தத் தொடரைத் தொகுத்து வாசியுங்கள். 

_________________________________________________

திராவிடர் இயக்கக் குறிப்புகள் - 35

விநாயகம் கந்தசாமி.

1953

பிப்ரவரியில் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார், ‘சென்னை தமிழ்நாட்டுக்கே சொந்தமானது’ என்று முழங்கினார்.

பிப்ரவரி 22 இல் W.P.A.சவுந்திர பாண்டியனாரும்,

ஏப்ரல் 22 இல் கைவல்யமும்,

மே 6 இல் R.K. சண்முகம் செட்டியாரும்,

செப்டம்பர் 17 இல் திரு.வி.க.வும்

மற்றும் ஜூன் 30 சாக்கோட்டை எஸ்.ஆர்.சாமியும்,

முத்தையா முதலியார் ஆகியோர் முடிவெய்தியமை

திராவிடர் இயக்கத்துக்கு பேரிழப்புகளாகும்.

நாடெங்கும் ‘கணபதி உருவப்பொம்மை’யை மே 27 இல் ‘புத்தர் விழா’வாகக் கொண்டாடி, பொதுக்கூட்டத்தில் உடைக்கும்படி பெரியார் அறிவுறுத்திட தமிழமெங்கும் பல்லாயிரக்கணக்கான பிள்ளையார் பொம்மை கள் உடைந்து நொறுங்கின.

பெரியார் இரண்டாம் முறையாக ஆகஸ்ட் 1 இல் ரயில் நிலைய பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிக்கும் கிளர்ச்சியை நடத்தினார்.

சுயமரியாதை திருமணம் செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்றம் ஆகஸ்ட் 31 இல் தீர்ப்பளித்தது கண்டு பெரியார் வெகுண்டு எழுந்தார்.

ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டம் ஒழிந்தபாடில்லை. பெரியார் ‘பார்ப்பானே வெளியேறு! திராவிடனே! தயாராயிரு!’ என்று குரல் கொடுத்தார்.

ஆச்சாரியார் ‘திராவிட இயக்கத்தை எறும்பு, மூட்டைப்பூச்சியைப் போல் நசுக்குவேன்!’ என்றார்.

ஆச்சாரியார் கல்வித்துறையில் S.S.L.C. தேர்வில் வடிகட்டும் முறையை மீண்டும் புகுத்தினார்.

‘சலவைத் தொழிலாளி குலத் தொழிலையே செய்ய வேண்டும்’ என்றார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில், அக்டோபர் 10,11 நாட்களில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் ‘கழக ஆண், பெண் அனைவரும் சட்டத்துக்குட்பட்ட கத்தியை வைத்துக்கொள்ளுங்கள்’ என பெரியார் ஆணையிட்டார்.

ஈரோடு சண்முக வேலாயுதம் தொடங்கிய ‘ஈரோட்டுப் பாதை’ வார இதழைப் பெரியார் நவம்பர் 8 இல் தொடங்கி வைத்தார்.

1954

பெரியார் முயற்சியால் ஈரோட்டில் ஜனவரி 24 இல் ‘குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு மாநாடு’ டாக்டர் எஸ்.ஜி. மணவாள ராமானுஜம் தலைமையில் நடை பெற்றது.

இதுபோன்று தமிழகமெங்கும் ‘குலக்கல்வித்திட்ட எதிர்ப்பு மாநாடு’கள் நடைபெற்றன.

நாகையில் மார்ச் 27,28 இல் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தீர்மானித்தபடி ‘குலக்கல்வித்திட்ட எதிர்ப்புப் படை’ நீடாமங்கலம் அ. ஆறுமுகம் தலைமையில் சென்னை நோக்கிப் புறப்பட்டது.

படை சென்னையை அடையுமுன்னே உடல்நலமில்லை என்று காரணம் காட்டி ஆச்சாரியார் மார்ச் 30 இல் முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

பெரியார் ஆதரவுடன் காமராசர் முதலமைச்சராக ஏப்ரல் 14 இல் பதவியேற்று அய்ந்தாவது நாளில் (ஏப்ரல் 18 இல்) குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார்.

நாடெங்கும் ராமாயணத்தை தோலுரித்துக் காட்டும் பிரச்சாரத்தை பெரியார் நடத்த, நடிகவேள் எம்.ஆர். ராதா ‘இராமாயணம்’ நாடகம் நடத்தி அதன் யோக்கியதையை அம்பலப்படுத்தினார்.

நவம்பர் 23 இல் பெரியார், மணியம்மை ஆகியோர் பர்மா, மலேயா சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.

ரங்கூன் புத்தர் மாநாட்டில் கலந்து கொண்டனர். அம்பேத்காரை ரங்கூனில் சந்தித்து உரையாடினார்.

எம்.ஆர்.இராதாவின் இராமாயண நாடக எதிரொலியாக ஆட்சியாளர் டிசம்பர் 21 இல் நாடகக் கட்டுபாடுச் சட்டத்தைக் கொண்டுவந்து நிறை வேற்றினார்.

#திராவிடர்இயக்கக்குறிப்புகள்

கால்டுவெல் மீது ஏன் இந்தக் கசப்பு?

 கால்டுவெல் மீது ஏன் இந்தக் கசப்பு?

அமுதன் அடிகள் கட்டுரை.

தினமணி 19 ஜூன் 2022

கிறித்தவ சமயப் பணியாளராகத் தமிழகம் வந்த கால்டுவெல் (1814-1891) 

தம் பணிகளுக்கு இடையில் கிடைத்த ஓய்வு நேரத்தை வரலாறு, மொழி இயல், அகழ்வு ஆய்வுகள் முதலிய துறைகளில் செலவிட்டார். 

அதன் விளைவாக, 

திராவிட மொழிகளின் ஒப்பு இலக்கண நூலும், திருநெல்வேலி மாவட்ட வரலாறும், 

கொற்கை-காயல் அகழாய்வுகளும் நமக்குக் கிடைத்தன. 

அவர் இயற்றிய ஒப்பு இலக்கண நூலின் காரணமாக 

19-ஆம் நூற்றாண்டில் தமிழ் வளர்த்த பெரியோர்களுள் தலைசிறந்த ஒருவராக அவர் இன்றும் போற்றப்படுகின்றார்.

அவர் இயற்றிய 

"திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பு இலக்கணம்' 1856-ஆம் ஆண்டில் வெளிவந்தது. 

அவராலேயே திருத்தப்பட்டுச் செம்மை யாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு 1875-ஆம் ஆண்டில் வெளிவந்தது. 

ஜே.எல்.வயட், டி.இராமகிருஷ்ண பிள்ளை ஆகிய இருவராலும் திருத்தப்பட்ட 

(160 பக்கங்களுக்கு மேல் நீக்கப்பட்ட பதிப்பு) 

1913-இல் வெளிவந்தது. 

இது மறுபதிப்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. 

இவற்றுள் 1875-ஆம் ஆண்டுப் பதிப்பே கால்டுவெல்லின் ஆய்வை அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தும் நூலாக அறிஞர் பெருமக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. 

இப் பதிப்பைப் பின்பற்றி 2008-ஆம் ஆண்டில் கவிதா சரண் வெளியிட்ட பதிப்பையே நாமும் ஆதாரமாகக் கொள்வோம்.

திராவிட மொழிக் குடும்பம் பற்றிய கருத்தும்,

அது வடமொழிக் குடும்பத்தோடு தொடர்பு அற்றது என்னும் கருத்தும் 

1816-ஆம் ஆண்டிலேயே முன்வைக்கப்பட்டது. 

அன்றைய ஆங்கில அரசில் பணிபுரிந்த பிரான்சிஸ் வைட் எல்லீஸ் என்பவர் 

அவ்வாண்டில் தெலுங்கு இலக்கண நூல் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில் இதுபற்றி விளக்கி உள்ளார்.

இக்கருத்தை மிக விரிவாகவும், விளக்கமாகவும் வகுத்துத் தந்த பெருமை கால்டுவெல்லுக்கு உரியது.

கால்டுவெல்லின் மிக விரிவான ஒப்பு இலக்கண நூலில் நாம் காணும் ஆராய்ச்சி முடிவுகள் அனைத்தையும் முழுமையாக எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என எண்ணுவது தவறு. 

முரண்படும் அறிஞர்கள் தத்தம் வாதங்களை எடுத்து வைத்து, ஆதாரங்களின் அடிப்படையில் தங்கள் கருத்துகளை நிலைநாட்டலாம். 

ஆயினும் அவை அளவை (தருக்க) நூலின் அடிப்படையிலும், திறன் ஆய்வு முறையிலும் அமைந்து இருக்க வேண்டும் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

தமிழ் என்னும் பெயர் தவறு. அதன் சரியான பெயர் "தமிற்' என்றே இருக்க வேண்டும்.

 "ற்' என்னும் எழுத்து காலப்போக்கில் மாறுதலை அடைந்து "ழ்' எழுத்து ஆகி தமிழாகிவிட்டது'' என்கிறார் கால்டுவெல். 

ஆனால் தமிழைத் "தமிற்' என்றதற்கு ஆதாரம் எதுவும் கூறவில்லை'' என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. 

ஆனால், கால்டுவெல் அவ்வாறு எழுதவில்லை என்பதே உண்மை.

தமது நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ள கால்டுவெல் தமிழைப் பெரும்பாலும் "tamiட' என்றே எழுதுகின்றார். ""Tamil  என்னும் பெயரைத் Tamir (தமிழ்) என எழுதுவதே சரி. 

ஆனால் ழகரத்தை (ŗ) ļ (ள) என மாற்றி ஒலித்தால் அது தமிள் எனப் பெரும்பாலும் ஒலிக்கப்படுகின்றது. ஐரோப்பியர்கள் அதைத் தமுல் எனத் தவறாக ஒலிக்கின்றனர்'' என்று கால்டுவெல் எழுதியதைப் பார்க்கும்போது 

எந்தப் பதிப்பைப் பார்த்து அந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது என்று தெரியவில்லை.

தமிழ் எழுத்துகளை ஆங்கிலத்தில் குறிப்பதற்குத் தாம் பயன்படுத்திய எழுத்துப்பெயர்ப்பு (Transliteration) முறை பற்றிக் கால்டுவெல் விளக்கி உள்ளதைக் கவிதாசரண் பதிப்பின் 161-162 பக்கங்களில் காணலாம். 

அதன்படியே தமிழ் எழுத்துகளைத் தமது ஆங்கில நூலில் கால்டுவெல் பயன்படுத்தும் போது 

ல-ஐ, ள-ļ , ழ-ŗ என்பதுபோல சில குறிகளோடு பயன்படுத்துகின்றார். ஆகவே தமிழ் என்பதை Tamir  என்றே பல இடங்களில் எழுதுகின்றார். 

தமிற் என்று அவர் வழங்கவில்லை என்பதுதான் உண்மை.

கால்டுவெல் தமது ஒப்பு இலக்கண விரிவுரைகளில் "உத்தேசமாக,  போன்ற, பார்வைக்கு' எனும் உறுதியற்ற சொற்களை ஆங்கிலத்தில் உபயோகித்து, கற்பனையாக எழுதி உள்ளார் எனப் பொதுவான ஒரு குற்றச்சாட்டு  சிலரால் முன்வைக்கப்படுகின்றது. 

எந்த இடத்தில் கால்டுவெல் இவ்வாறு எழுதியுள்ளார் என்பதை அறிந்தால்தான் அவர் சரியாக எழுதி உள்ளாரா, தவறாக எழுதி உள்ளாரா எனக் கண்டுபிடிக்க இயலும்.  

நூற்றுக்கு நூறு மடங்கு உறுதியில்லாத கருத்தினை எழுதும்போது "

உத்தேசமாக', "போன்ற' - போன்ற சொற்களைப் பயன்படுத்துவதே அறிவுடைமைக்கு அழகாகும் என்பதை யாருமே மறுக்க இயலாது.

தமிழின் ஐவகை இலக்கணத்தில் 

எழுத்து இலக்கணமும் சொல் இலக்கணமுமே 

கால்டுவெல்லால் ஒப்பு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன என்பது 

மற்றொரு குற்றச்சாட்டு. 

எழுத்து இலக்கணத்தையும் சொல் இலக்கணத்தையும் அடிப்படையாகக்கொண்டே மொழிஇயல் இயங்குவது என்பதையும், 

பொருள், யாப்பு ஆகிய இலக்கணங்கள் மொழிஇயல் எல்லைக்குள் மிகுதியும்  இடம் பெறுவது இல்லை என்பதையும் விளக்கத் தேவை இல்லை.

பண்டைய தமிழர்களுக்குச் சமய நூல்கள் கிடையாது'  எனக் கால்டுவெல் எழுதி உள்ளதாகக் கூறப்படுவதும் தவறு.   

தமது நூலின் 142-143 -ஆம் பக்கங்களில் 

தேவாரம், திருவாசகம், திருவிளையாடல் புராணம், திருத்தொண்டர் புராணம், பிரபுலிங்க லீலை முதலிய சைவ சமய நூல்களையும் அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர் முதலிய சைவ சமயக் குரவர்களையும் பற்றிக் 

கால்டுவெல் எழுதியிருப்பது அவர்கள்  கண்ணில் படவில்லை போலும்!

19 ஆம்  நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஐரோப்பாவில் மொழிநூல் (Philology) ஆய்வுகள் தொடங்கின. 

20-ஆம் நூற்றாண்டிலேயே இது மொழியியல் (Linguistics) எனப் பெயர் பெற்றது. 

1814-ஆம் ஆண்டில் பிறந்த கால்டுவெல் தமது இளமையில் பல்கலைக்கழகத்தில் பயின்ற காலம் மொழிநூலின் தொடக்கக் காலம் ஆகும். 

ஆகவே, 20-21-ஆம் நூற்றாண்டுகளில் 

பெருவளர்ச்சி கண்ட மொழி ,யலோடு 

கால்டுவெல் காலத்து மொழிநூலை ஒப்பிடுதல் பொருத்தம் அல்ல. 

(எ-டு: கால்டுவெல் மறைந்த 1891-ஆம் ஆண்டில் பிறந்த வையாபுரிப் பிள்ளையின் மொழிஇயல் கருத்துகளைக் கால்டுவெல்லின் கருத்துகளோடு பொருத்திக் காண முயல்வது பொருந்தாச் செயல் எனச் சொல்ல வேண்டுவது இல்லை).

ஆயினும், தொடக்கக் காலத்தில் தாம் பயின்ற மொழிநூல் அறிவைத் தம் முயற்சியாலேயே பெருக்கிக்கொண்டு ஆறு திருந்திய திராவிட மொழிகள், 

ஆறு திருந்தா மொழிகள் எனப் பன்னிரண்டு மொழிகளை ஆராய்ந்து, 

அத்துடன் கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், சித்தியம் ஆகிய மொழிகளை உறழ்ந்து 

பல மொழியியல் உண்மைகளைக் 

கால்டுவெல் கண்டு அறிந்து உணர்த்திய முறைமை இன்றும் பெருவியப்பைத் தருவதாகும். 

கால்டுவெலின் நூல் வெளிவந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் அது தன்னிகர் அற்ற நூலாகவே மொழிஇயல் துறையில் இடம் பெற்று உள்ளது என்பதை மறுக்க இயலாது.

பிற்காலத்தவராகிய பேராசிரியர்கள் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், சா.சுப்பிரமணியன், வி.அய்.சுப்பிரமணியம், ச.அகத்தியலிங்கம், செ.வை.சண்முகம், ந.குமாரசாமிராஜா, தாமஸ்பரோ, எம்.பி.எமனோ, எஸ்.ஆரோக்கிய நாதன் முதலிய மொழிஇயல் வல்லுநர்களால் 

கால்டுவெல்லின் ஆய்வு முடிவுகளுள் பெரும்பாலானவை இன்றும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பதையும் யாரும் மறுக்க இயலாது.

கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். 

ஆனால் ஆதாரம் காட்டாமல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தல், இருப்பதை இல்லாததாகக் கூறுதல், இல்லாததை இருப்பதாகக் கூறுதல் போன்ற முரண்களை 

அளவை நூலுக்கு ஒவ்வாத வகையில் எழுதுதல், மனம்போன போக்கில் சொற்களைக் கையாளுதல், 

(எ-டு:  "மேற்கத்திய அறிஞர்களும் காலனி மதப் பரப்பாளர்களும் ஆதாரமின்றிப் புனைவதில் கைதேர்ந்தவர்கள்' போன்றவற்றை ஆன்றோரின் கட்டுரையில் காணுதல் அரிது.

திறன் ஆய்வு முறைப்படி

 "காய்தல் உவத்தல் அகற்றி' ஆராய்வதைவிட, கால்டுவெல்லைக் கசப்போடு கண்ணோக்கி அவருக்குத் தமிழ் அறிஞர் உலகில் இருக்கும் மதிப்பையும் மரியாதையையும் எப்பாடு பட்டாவது கெடுத்துவிட வேண்டும் என்பதில் சிலர் உறுதியாக உள்ளனர் என்பதைத்தவிர வேறென்ன சொல்வது?

பன்னிரண்டு திராவிட மொழிகளையும் மொழிஇயல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்த கால்டுவெல், 

அவை ஒரு தனி மொழிக் குடும்பம் என்பதை நிறுவியதோடு, 

அவை வடமொழியுடன் உறவுடையவை அல்ல என உறுதிபட மெய்ப்பித்தார். 

அவ்வகையில் வடமொழியுடன் நீங்காத உறவு கொண்ட பிராமணர்களைத் திராவிடர்களோடு ஒப்பிட்டும் ஆராய்ந்தார். 

இன வகையில் பிராமணர்கள்(ஆரியர்கள்) வேறு, திராவிடர்கள் வேறு எனவும் மெய்ப்பித்தார். 

இன்றுவரை அவரது கருத்தைத் தவறு என அறிஞர்கள் யாரும் மெய்ப்பிக்கவில்லை.

மொழிஇயல், இனவரைவியல் அடிப்படையில் கால்டுவெல்லின் கருத்தைத் தவறென மெய்ப்பிப்பதை விட்டுவிட்டு, 

கால்டுவெல் பிராமணர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையில் பகைமையைத் தோற்றுவித்த துரோகி என்பதுபோல எழுதுவது நகைப்பைத் தருகின்றது. 

அறிவை அறிவால்தான் வெல்ல வேண்டுமே தவிர, பொய்யான (ஆதாரம் இல்லாத) குற்றச்சாட்டுகளால் அல்ல என்பதனை 

கால்டுவெல்லை விமர்சிக்க முற்படுவோர் தெளிவாகப் புரிந்து கொள்வதே அறிவாண்மைக்குப் பொருத்தமானது ஆகும்.


திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்-2

கால்டுவெல் அவர்களின்  திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூல் வாசிப்பின் அனுபவக் குறிப்புகள் -2

தமிழ் நெடுங்கணக்கின் சிறப்புகள்:

தமிழ் நெடுங்கணக்கின் சிறப்புகளாக கீழ்க்கண்டவற்றை கால்டுவெல் அவர்கள் குறிப்பிடுகிறார் :

1.  தெலுங்கு, கன்னட நெடுங்கணக்குகளைப் போன்றே தமிழும், ‘எ’மற்றும் ‘ஒ’ கரத்தின் குறில், நெடில்களைக் குறிக்க தனித்தனி வடிவெழுத்துக்களைப் பெற்றிருக்கிறது. இந்த குறில், நெடில் வடிவெழுத்துக்களைப் பிரித்துக்காட்டும் குறிகள் முதன்முதலாக பெச்சி பாதிரியாரால் இணைக்கப்பட்டன.

2. ‘ழ்இ’,  ‘ல்ழ்இ’ என்ற அரை உயிர்களைக் குறிக்கும் சமஸ்கிருத ஒலிகளை யயாத்த ஒலிகளை குறிக்கும் வரிவடியழுழுத்துகள் தமிழில் இல்லை என்கிறார் கால்டுவெல். மேலும் சமஸ்கிருத அனுஸ்வரா ஒலிகளையும் தமிழ் நெடுங்கணக்கு மேற்கொள்வதில்லை என்கிறார்.

3. தமிழில் மூக்கெழுத்துகள் மிகவும் உறுதியானவை. தனித்தியங்கும் ஒலிகளை உடையவை. இவற்றில் இயற்கையான ஒலியை உடையது ‘மகர ஒலி’ ஒன்றே என்கிறார் கால்டுவெல்.

‘ம’கரத்தைத் தொடர்ந்து, ‘க’ வரும் போது, ‘ம’கரம் மெல்லின மெய்யாகிய ‘ங’ வாக மாறுகின்றது என்கிறார் கால்டுவெல்.

மகரத்தைத் தொடர்ந்து ‘ச’வும், ‘ட’வும், ‘த’வும் வந்தால் அம்மகரம் முறையே ‘ஞ’ வாகவும், ‘ண’ வாகவும், ‘ந’ வாகவும் மாறுகின்றது என்கிறார் கால்டுவெல்.

இதில் ‘ச’ வை ‘அண்ண எழுத்து’ என்றும், ‘ட’ வை ‘நாவெழுத்து’ என்றும் ‘த’வை ‘பல்லெழுத்து’ என்றும் குறிப்பிடுகிறார் கால்டுவெல்.

4. தெலுங்கு மொழிக்கே உரிய ‘அரை அனுஸ்வரா’ எழுத்தையயாட்டிய எழுத்து எதுவும்தமிழில் இல்லை என்றும் வல்லின மெய் எழுத்துகளின் முன், அவற்றிக்கினமான மெல்லின மெய் எழுத்துகளை அமைத்து, அவ் வல்லின மெய் எழுத்துகளின் வன்மையயாலியைக் குறைத்து இனிய ஒலியாக மாற்றுவதே அரை அனுஸ்வார ஒலித் தோற்றம் ,  அம்முறை தமிழில் பெரிதும் மேற்கொள்ளப்படுகிறது என்கிறார் கால்டுவெல்.

5. சமஸ்கிருதத்தில் காணப்பெறும் வலிய ஒலிகளுள் எதையும் கடன் வாங்கியது கிடையாது. தனித்து இயங்கும் இயல்புடைய ‘ஹகர’ ஒலியையும் தமிழ் ஏற்றுக் கொள்வதில்லை என்கிறார்.

சமஸ்கிருத ‘விஸர்க்க’த்தை ஒத்த அரை உயிரும், அரை மெய்யுமாகக் கருதப்படும் ஆய்தம் என்ற எழுத்தை தமிழ் கொண்டுள்ளது என்கிறார்.

மேலும், சமஸ்கிருத மிடற்றுஒலி, ‘ஹ’கரம் போல ஒலிக்கப்பெறுகின்றது. அது பெரும்பாலும் செய்யுள்களில் மட்டும் இடம் பெறுகின்றது. அது புலவர்களுக்காக பயனின்றி தோற்றுவிக்கப்பட்ட எழுத்து  (விஸர்க்கம்) என்கிறார் கால்டுவெல்.

சமஸ்கிருதம், தன் மெய் எழுத்துகளை தேவநாகரி வர்க்க முறையைக் கையாண்டு வகைப்படுத்தி வரிசை படுத்தியுள்ளது. அதே முறையையே தமிழும் கையாண்டுள்ளது என்கிறார் கால்டுவெல்.

தமிழ் நெடுங்கணக்கு, முதல் வரிசையாகிய மிடற்று எழுத்துகளில், ‘க’ வையும், அதற்கு அடுத்து மூக்கெழுத்தாகிய ‘ங’ வையும் மேற்கொண்டு, இடையில் உள்ள ‘கஹ’,‘க’, ‘கஹ’ என்ற எழுத்துகளை நீக்கிவிட்டது.

இரண்டாம் வரிசையாகிய அண்ணவெழுத்துகளில் ‘ச’ வையும், அதற்கு இன மூக்கெழுத்தாகிய ‘ஞ’வையும் மேற்கொண்டு, ‘சஹ’,‘ ஐ’, ‘ஐஹ’ எழுத்துகளை நீக்கிவிட்டது.

மூன்றாவது வரிசையாகிய தலைவளி எழுத்துகளில் ‘ட’வும், அதற்கு இன மூக்கெழுத்தாகிய ‘ண’வையும் மேற்கொண்டு, ‘டஹ’,‘ ட’, ‘டஹ’ எழுத்துகளை நீக்கிவிட்டது.

நான்காவது வரிசையாகிய வல்லெழுத்துகளில் ‘த’வையும், அதற்கின மூக்கெழுத்தாகிய ‘ந’ வையும் மேற்கொண்டு, ‘தஹ’, ‘த’, ‘தஹ’ எழுத்துகளை நீக்கிவிட்டது.

ஐந்தாவது வரிசையாகிய இதழ் எழுத்துகளில், ‘ப’ வையும் அதற்கு இன மூக்கெழுத்தாகிய ‘ம’வையும் மேற்கொண்டு, ‘பஹ’, ‘ப’, ‘பஹ’ எழுத்துகளை நீக்கிவிட்டது.

இவ்வாறு தேவநாகரியின் ‘ஹகர’ ஒலி மெய் எழுத்துகளை அறவே தமிழ் நீக்கிவிட்டது என்றும் அந் நெடுங்கணக்கின் மெல்லொலி மெய் எழுத்துகளையும் நீக்கிவிட்டது என்றும் கூறுகிறார் கால்டுவெல்.

தமிழில், வடிவெழுத்து ஒன்றே ஓர் இடத்தில் வல்லொலி உடையதாகவும் மற்றொர் இடத்தில் மெல்லொலி உடையதாகவும், தமிழுக்கே உரிய ஒலி முறைப்படி குறிக்க மேற்கொள்ளப்படுகின்றது என்றும் அவ்வடிவெழுத்து தேவநாகரி வர்க்கத்தின் முதல் எழுத்தாகிய வல்லொலி எழுத்து என்றும் கூறுகிறார் கால்டுவெல்.

தேவ நாகரி எழுத்துகளோடு வேறு நான்கு எழுத்துகளையும் தமிழ் இணைத்துக் கொண்டுள்ளது என்று கூறும் கால்டுவெல், இடையின ‘ழ’, வல்லின ‘ற’, லகர, ரகர ஒலிக்கலவை என்று கருதப்படும் இடையின ‘ள’, மெல்லின ‘ன’ ஆகிய நான்கு எழுத்துகளையும் குறிப்பிடுகிறார்.

‘இஸ்’ என்ற ஒலியைத் தரும் சமஸ்கிருத எழுத்துகள் எவையும் தமிழ் நெடுங்கணக்கில் இடம் பெறவில்லை. சமஸ்கிருதச் சொற்களை ஒலிக்கும் போதும், எழுதும் போதும் தமிழ், ‘­’, ‘ஸ’ என்ற ஒலிகளை மேற்கொண்டாலும் இவ்வெழுத்துகள் பழந்தமிழ் இலக்கணத்திலோ, இலக்கியத்திலோ இடம் பெறவில்லை என்றும் தமிழ் நெடுங்கணக்கிலும் இடம் பெறவில்லை என்றும் கூறுகிறார் கால்டுவெல்.

சமஸ்கிருத 'ஸ' என்ற எழுத்து தமிழில் என்றும் இடம் பெற்றதில்லை என்றும் சமஸ்கிருத ‘ச’ என்ற ஒலியோடு ஒத்த ஒலியை உடையதும் தனித்து எழுதினால் ‘ஸ’ எனவும், இணைத்து எழுதினால் ‘ச’ எனவும் ஒலிக்கப் பெறும் ‘ச’கரமே தமிழில் ஆளப்படுகிறது என்கிறார் கால்டுவெல்.

திராவிட ஒலிப்பு முறை:

தமிழ் நெடுங்கணக்குகளின் வரிசை, அமைப்பு முறை விளக்கிய கால்டுவெல் திராவிட வடிவெழுத்துகளின் ஒலிப்பு முறைகளை உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் என்ற பகுப்பு முறையில் விரிவாக விளக்குகிறார்.

1. உயிர் எழுத்துகள் :  தமிழ் உயிர் எழுத்துகளில் ‘அ’கர ஒலியே கடினமான ஒலி என்றும் அதனால் அது பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. சில இடங்களில் ‘எ’ எனவும் மாறுகிறது என்றும் கூறுகிறார் கால்டுவெல்.

 அதற்கு எடுத்துக் காட்டாக, சமஸ்கிருத ‘பலம்’, தமிழில் ‘பெலம்’ எனவும், ‘ஜபம்’, ‘செபம்’ எனவும் மாறுவதை கூறுகிறார்.

ஈற்றில் வரும் ‘அ’கரம் தமிழில் ‘ஐ’ காரமாக மாறுகிறது. கன்னடத்தில் அது பொதுவாக ‘எ’கரமாக மாறுகிறது என்கிறார்.

மலையாளத்தில் இன்றும் ‘அ’கரம், வழக்குத் தமிழில் பெரும்பாலும் ‘ஐ’காரமாகவும், தெலுங்கில் ‘இ’கரமாகவும், கன்னடததில் ‘உ’கரமாகவும் மாறுகிறது என்கிறார் கால்டுவெல்.

‘அவ’ என்னும் சுட்டு, தமிழில் ‘அவை’ எனவும் தெலுங்கில் ‘அவி’ எனவும், கன்னடத்தில் ‘அவு’ எனவும் மலையாளத்தில் ‘அவ’ என்றே வருகிறது என்கிறார்.  

இதுதான் ‘ஈற்று அ’ என்று ஒலிப்பு முறை எப்படி மாறுகின்றது என்பதை விளக்குகிறது.

குறில் ‘அ’ இரண்டு இணைவதால் ‘ஆ’ தோன்றுகிறது. அது செய்யுளில் ஒ என மாறுகிறது. எடுத்துக்காட்டாக, விண் + அ+வ்+அர் = விண்ணவர், விண்ணோர்.

கன்னடத்தில் குறில் ‘அ’கரமும் ‘ஒ’கரமாக மாறும்.

சமஸ்கிருத உயர்திணைப் பெண்மையைக் குறிக்க வரும் ‘ஈற்று ஆ’, தமிழில் ‘ஐ’ என மாறும் என்கிறார் கால்டுவெல். எடுத்துக்காட்டாக விருப்பம் என்ற சொல் சமஸ்கிருத்தில் ‘ஆஸா’, தமிழில் ‘ஆசை’ என்று மாறுகின்றது.

சமஸ்கிருத ‘சித்ரா’, தமிழில் ‘சித்திரை’ என்று திங்கள் ஒன்றின் பெயராக வருகிறது என்றும் எடுத்துக் காட்டுகிறார் கால்டுவெல்.

இதே ‘ஆ’, கன்னடத்தில் ‘எ’என மாறும். எடுத்துக்காட்டாக சமஸ்கிருத ‘கங்கா’ தமிழில் ‘கங்கை’ என்றும், கன்னடத்தில் ‘கங்கெ’ அல்லது ‘கங்கெயு’ என்றும் மாறும் என்கிறார் கால்டுவெல்.

தமிழ் ‘ஐ’ காரம் ‘அ’கரத்தில் இருந்து தோன்றுகின்றது என்றாலும் இவ் ‘ஐ’ கார ஒலி ஒலிக்கும் பொழுது அவ் ‘அ’கர ஒலி அடியோடு மறைந்துபோதல் வியப்பாக உள்ளது என்று நுட்பமாக எடுத்துக் காட்டுகிறார் கால்டுவெல்.

இவ்வொலி, கிரந்த , மலையாள நெடுங்கணக்குகளில் ‘எஎ’ என இரண்டு ‘எ’கர எழுத்துகளாலும், கன்னட நெடுங்கணக்கில் ‘எ’, ‘இ’ என்று ஒலிகளின் கூட்டொலியை அறிவிக்கும் எழுத்து ஒன்றாலும் எழுதப்படுகிறது என்கிறார் கால்டுவெல்.

இரண்டாம் வேற்றுமை உருபு, மலையாளத்தில் ‘எ’ என இருக்க, அது தமிழில் ‘ஐ’ ஆக இருப்பது குறிக்கத் தக்கது என்கிறார் கால்டுவெல்.

தொழிற் பெயர்களின் இறுதி, கன்னடத்தில் ‘எ’ என இருக்க, தமிழில் ‘ஐ’ என இருப்பதும் ஆராயத்தக்கது என்கிறார் கால்டுவெல்.

‘இ’,‘ ஈ’ இவை குறித்து கூறத்தக்கன எதுவும் இல்லை என்று கூறும் கால்டுவெல்,  திராவிட மொழிகளில் ‘ஊ’ காரம் நிலைத்து நிற்கும் ஆற்றல் வாய்ந்தது என்றாலும், குறில் ‘உ’, உயிர் எழுத்துகள் எல்லாவற்றிலும் மிக மிக மென்மையானதும் எளிமையானதும் ஆகும் என்கிறார்.

ஒலித்துணை, ஒலி நயம் காரணமாக, பெரும்பாலும் சொற்களின் ஈற்றில் மேற்கொள்ளப்படுகிறது என்றும் கூறுகிறார் கால்டுவெல்.

தெலுங்கு இலக்கண நடையில் ஒவ்வொரு சொல்லும் ‘உயிர் ஈறாகவே’ முடிதல் வேண்டும். உயிர் ஈற்று இல்லாமல் போகின்ற போது, ஈற்று மெய்யயழுத்துடன் ‘உ’கரம் இணைக்கப்படும் முறை சமஸ்கிருத்தில் இருந்து வந்த முறை என்கிறார் கால்டுவெல்.

‘மகர’ ஈற்றுச் சமஸ்கிருத அஃறிணைப் பண்புப் பெயர்கள், தெலுங்கில் ‘மு’ என்றே முடிகிறது. எழுதும் போது உகரம் எழுதப்பட்டாலும் ஒலிக்கும் பொழுது பெரும்பாலும் ஒலிக்கப்படுவதில்லை என்கிறார் கால்டுவெல்.

கன்னடத்தில் ‘அ’கர ஈறாக முடியும் சொற்களின் ஈற்றிலும் ‘உ’கரம் சேர்க்கப்படவேண்டும்.

எடுத்துக்காட்டாக ‘சில’, ‘பல’ என்ற தமிழ்ச் சொற்கள், கன்னடத்தில் ‘கெலவு’, ‘பலவு’ என வருகிறது என்று எடுத்துக்காட்டுகிறார் கால்டுவெல்.

க்,ச்,ட்,த்,ப்,ற் என்ற வல்லின மெய் எழுத்துகளை ஈறாக உடைய சொற்களோடு உகரத்தை இணைக்கும் தமிழ் முறை, கன்னட முறையோடு ஒத்துள்ளது என்கிறார் கால்டுவெல். இவ்வாறு இணைக்கப்படும் உகரம் அளவில் மிகவும் குறைந்து கால் கூறு அளவே ஒலிக்கிறது என்றும் கூறுகிறார்.

தமிழின் இக் ‘குறை உகரம்’ வட மலையாள மொழிகளில் மேலும் குறைக்கப்பட்டுள்ளது. தமிழில் ‘கிழக்கு’ என்பது மலையாளத்தில் ‘கிழக்க’ என்று ஒலிக்கப்படுகிறது. துளு மொழியில் மேலும் விரிவாக ஆளப்படுகிறது என்கிறார் கால்டுவெல்.

தன்னை அடுத்து, குறை உகரமோ அன்றி, ‘அ’கரமோ இணைக்கப்பட்ட ஈற்று வல்லின மெய்கள், சில வேளைகளில் இரட்டிப்பாக ஒலிக்கும் என்றும், ‘சொல்’ என்று பொருள் தரும் சமஸ்கிருத ‘வாக்’,  தமிழில் ‘வாக்கு’ என்றும் ‘நீர்’ என்று பொருள்படும் சமஸ்கிருத ‘அப்’, தமிழில் ‘அப்பு’ என்றும் ஒலிக்கும் என்கிறார் கால்டுவெல்.

திராவிட மொழிகள், ‘எ’கர, ‘ஒ’கரக் குற்றுயிர் ஒலிகளைப் பெரும் அளவில் மேற்கொள்கின்றன  என்கிறார் கால்டுவெல்.

எகர, ஒகரங்களின் நெடில்களான, ‘ஏ’கார,‘ஓ’கார ஒலிகளிலிருந்து குற்றுயிர் ஒலிகளைப் பிரித்து, தனி வடிவெழுத்துகளை கொண்டுள்ளது. இவ்வாறு தனிக்குறில்கள் சமஸ்கிருதத்தில் கிடையாது என்கிறார். 

சமஸ்கிருத மொழியில் அறவே இடம் பெறாத இவ்விரு ஒலிகளும், திராவிட மொழிகளில் பெற்றிருக்கும் இன்றியமையாப் பெருநிலை, திராவிட மொழிகள் சமஸ்கிருத மொழியின் தொடர்பற்ற தனி மொழிகளாகும் என்ற உண்மையை உறுதி செய்யத் துணை புரிவதாகும் என்கிறார் கால்டுவெல்.

எகர, ஒகரக் குறில்கள் வரும் இடங்களில் அவற்றிற்கு ஈடாக, ஏகார, ஓகார நெடில்கள் அமைந்த சொற்கள் வந்தால் அவ்விரு சொற்களுக்கும் இடையே தோன்றும் வேற்றுமை, ஒலி நயம் குறித்து வந்ததாக இல்லாமல், சொற்களின் அடிப்படையையே, அச் சொற்களின் பொருளையே மாற்றியமைக்க வந்தாக உள்ளது. எடுத்துக்காட்டாக, ‘தெள்’ என்பது தெளிவைக் குறித்தால், ‘தேள்’ என்பது ஓர் உயிரைக் குறிக்கிறது. ‘கல்’ என்பது மண்ணிற்கு இனமான ஒரு பொருளைக் குறித்தால், ‘கால்’ என்பது உடல் உறுப்புகளுள் ஒன்றைக் குறிக்க வருகிறது என்று எடுத்துக் காட்டுகிறார் கால்டுவெல்.

பழைய திராவிட ஒலி ‘அகர’ ஒலி,‘ எ’கரமாக மாறி, அது மறுவலும்,‘ஐ’ காரமாக மாறும். ‘தலை’ எனப் பொருள்படும் சொல் தெலுங்கு, மலையாளத்தில் ‘தல’ என்றும், கன்னடத்தில் ‘தால’ என்றும் தமிழில் ‘தலை’ என்றும் வருகின்றது.

மலையாளத்தில் வரும் இவ் ‘அ’கரம், இயற்கையானது அன்று. ‘எஇ’ க்களின் திரிபே. ஆகவேதான் மலையாள இரண்டாம் வேற்றுமை உருபாக ‘அ’கரம் வராமல் ‘எ’கரம் வருகிறது என்று பேராசிரியர் குண்டர்ட் கருத்தை மேற்கோள் காட்டுகிறார் கால்டுவெல்.

தமிழில் ‘ஐ’காரத்தைத் தொடர்ந்து மற்றொரு ‘ஐ’காரம் வர, அவ்விரு ‘ஐ’ காரங்களுக்கிடையே, தனி மெய் வரின், முதல் ‘ஐ’ இயல்பாகவே நெடிலாகவும், குறுகிய ஒன்றாகவும் கொண்டு ஒலிக்கப்படும்.

‘உடைமை’ என்ற சொல்லில் வரும் ‘டை’ என்பதில் உள்ள ‘ஐ’, செய்யுட்களில் அலகிடுங்கால் குறுகிய ஒலியுடையதாகவே மதிப்பிடப்படும். இது போன்ற இடங்களில் வரும் ‘ஐ’காரம் தன் பழைய ஒலியாகிய ‘அ’கரம் அல்லது ‘எ’கரத்தை போன்றே ஒலிக்கப்படும். ‘உடைமை’ என்பது சாதாரணமாக ‘உடெமை’ என்றும், ‘உடமை’ என்றும் ஒலிக்கப்படுவதை காணலாம் என்கிறார் கால்டுவெல்.

ஒள என்ற ஈருயிர் இணையயாலி எழுத்து, தமிழிலும் இடம் பெற்றுள்ளது. ஆனால் இது திராவிட இனத்தின் எம் மொழிக்கும் ஓர் உறுப்பாக இருந்ததே இல்லை. இது சமஸ்கிருத நெடுங்கணக்கே ஆகும். சமஸ்கிருத சொற்களை தமிழில் ஒலிக்கவே இது கையாளப்படுகின்றது என்கிறார் கால்டுவெல். அச்சமஸ்கிருத சொற்களை இவ்வெழுத்துகளின் துணையின்றி அ, உ என்ற ஒலிகள் இரண்டும் தனித்தனியே பிரிந்து ஒலிக்க, அவ்விரு உயிர் ஒலிகளுக்கிடையே வகர உடம் படுமெய் வந்து நிற்க, ஒலிக்கவும் பெறும் என்கிறார் கால்டுவெல்.

காரல் மார்க்ஸ் - சில குறிப்புகள் - க. முகிலன்

காரல் மார்க்சு 200வது பிறந்த ஆண்டு

சில குறிப்புகள்: இளம் தோழர்களுக்கு

                                                              க.முகிலன்

காரல் மார்க்சு 1818ஆம் ஆண்டு மே 5ஆம் நாள் செருமனி (பிரஷ்யா) நாட்டில் டிரியர் எனும் சிறிய நகரத்தில் பிறந்தார்.

காரல் மார்க்சு தன் பள்ளிப்படிப்பின் இறுதித் தேர்வில், எதிர்காலப் பணியைத் தேர்வு செய்வது குறித்து ஒரு இளைஞனின் சிந்தனைகள் எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையில், மனித குலத்தின் பெருமைக்காகப் பாடுபடக்கூடிய ஒரு வேலையைத் தீர்மானித்துக் கொண் டால், எவ்வளவு சுமைகளும் நம்மை வளைத்துவிடாது. ஏனெனில் அவை யெல்லாம் அனைவருக்குமான தியாகங்கள். நமக்குக் கிடைக்கப் போகிற மகிழ்ச்சியோ எல்லையற்றது; கஞ்சத் தனமில்லாதது; அகங்கார மற்றது. நமது மகிழ்ச்சி கோடானுகோடி மக்களுக்குச் சொந்தமானது. நமது சாதனைகள் நீடித்து நிற்கும்; என்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். 

உன்னதமான மனிதர்கள் வடிக்கும் கண்ணீரால் நமது சாம்பல் கழுவப்படும் என்று எழுதினார். ஆழ்ந்த கருத்துகளைக் கவிதை நடையில் எழுதும் ஆற்றல் காரல் மார்க்சுக்குப் பள்ளிப் பருவத்திலேயே அமைந்துவிட்டது. மார்க்சு எழுதிய இக்கட்டுரையும் மற்றும் ஆறு கட்டுரைகளும் இன்றும் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளன.

டெமாக்ரிடஸ் மற்றும் எபிகூரசு ஆகியோரின் இயற்கை பற்றிய தத்துவத்தில் வேறுபாடு எனும் தலைப்பில், மார்க்சு தன் முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக் கட்டுரையை எழுதினார். டெமாக்ரிடஸ், எபி கூரசு இருவருமே நாத்திகர்கள். ஆயினும் டெமாக்ரிடசைவிட எபிகூரசின் ஆய்வும், தத்துவமும் உயர்ந்தவை என்பது மார்க்சின் மதிப்பீடாகும். இக்கட்டுரையில் எபிகூரசை, கீழ்க்குறித்துள்ள லுக்ரிடசின் புகழ் மொழிகளை மேற்கோள் காட்டி மார்க்சு பாராட்டியுள்ளார்.

பிணம் போல் கனத்த மதத்தின் சுமை தாங்காமல் மனிதக் கண்ணுக்கும் புலப்படாதபடி மனித வாழ்வு முட்டிபோட்டு ஊர்ந்தது. முரண்டு பிடித்த தனது ஊனக் கண்களை கிரேக்கத்தின் ஒரு மனிதன் உயர்த்தினான். முதலில் முதுகெலும்பை நிமிர்த்தினான். துணிவோடு எதிர்கொண்டான். கடவுள்கள் பற்றிய கதைகள் அவனை நொறுக்கவில்லை. வானத்தின் மின்னல் ஒளியும் இடியும் அவனை அசைக்கவில்லை. அவனது காலடி யில் மதம் வீழ்ந்து நசுங்கியது. அவனது வெற்றியால் நாமெல்லாம் வானமளவுக்கு உயர்ந்தோம்.

1841 ஏப்பிரல் 15 அன்று ஜெனா பல்கலைக்கழகம் காரல் மார்க்சுக்கு முனைவர் பட்டம் வழங்கியது. அப்போது மார்க்சுக்கு அகவை 23.ரைன்லாந்து பகுதியின் தலைநகரான கொலோனில் 1842இல் ரைனிஷி ஷெய்டுங் என்ற நாளேடு தொடங் கப்பட்டது. 1842 மே மாதம் அதில் பத்திரிகைச் சுதந்தரம் பற்றி மார்க்சு நீண்ட கட்டுரை எழுதினார். அக்கட்டுரையில், வாழ்வதற்கும் எழுதுவதற்கும் மனிதன் சம்பாதிக்க  வேண்டும் என்பது உண்மையே. ஆனால் சம்பாதிப் பதற்காகவே அவன் வாழவோ, எழுதவோ கூடாது. எழுத்தாளனுக்கு அவனது எழுத்து ஒரு கருவி அல்ல. அது தன்னளவிலே முடிந்த ஒரு இலக்கு. தேவைப்பட்டால், எழுத்து உயிர்த்திருப்பதற்காகத் தனது உயிரையும் தியாகம் செய்வான் என்று எழுதினார். அதன்படியே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார்.

1842இல் அந்நாளேட்டின் ஆசிரியரானார். பிரடெரிக் எங்கெல்சு இங்கிலாந்தில் இந்நாளேட்டின் நிருபராக இருந்து செய்திகளையும் கட்டுரைகளையும் அனுப்பி வந்தார். மார்க்சும், எங்கெல்சும் நேரில் சந்திப்பதற்கு முன்பே, இந்த நாளேட்டின் மூலம் இருவரும் அறிமுக மாகியிருந்தனர். ரைனிஷி ஷெய்டுங் நாளேட்டிற்கு நான்கு மாதங்களே மார்க்சு ஆசிரியராக இருந்தார். அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகத் திறனாய்வு செய்ததால், அரசு இந்நாளேட்டை வெளியிடுவதற்குத் தடை விதித்துவிட்டது.

1843 சூன் 19 அன்று காரல்மார்க்சும் ஜென்னியும் திருமணம் செய்து கொண்டனர். ஏழு ஆண்டுகளுக்கு மேலான இவர்களின் காதல் திருமணத்தில் முடிந்தது. அப்போது மார்க்சின் அகவை 25. ஜென்னியின் அகவை 29.பிரஷ்யாவில் (செருமனி) இருந்து கொண்டு பத்திரிகை நடத்த முடியாது என்பதால், பாரிசு நகரிலிருந்து அர்னால்டு ரூகே என்பவருடன் இணைந்து புதிய பத்திரிகை நடத்துவதற்காக, மார்க்சும் ஜென்னியும் 1843 அக்டோபரில் பாரிசில் குடியேறினர்.

 1844 சனவரியில் ஜெர்மன்-பிரெஞ்சு வருடாந்திர ஏடு என்ற பெயரில் இரட்டை இதழாக வெளிவந்தது. இதன் ஆசிரியர்கள் அர்னால்டு ரூகே - காரல் மார்க்சு என அட்டையில் குறிக்கப்பட்டிருந்தது. இம்முதல் இதழே இறுதி இதழாகவும் அமைந்துவிட்டது. 

பிரஷ்ய அரசு (ஜெர்மன்) தனது நாட்டுக்குள் இப்பத்திரிகை நுழையத் தடை விதித்தது. மேலும் மார்க்சு தன் சொந்த நாடான பிரஷ்யாவுக்குள் நுழைந்தால் கைது செய்ய ஆணை பிறப்பித்தது.

ஜெர்மன்-பிரெஞ்சு வருடாந்திர ஏடு இதழில் மார்க்சு, ஹெகலின் உரிமையின் தத்துவம் பற்றிய விமர்சனத்திற்குப் பங்களிப்பு: ஓர் அறிமுகம் என்ற கட்டுரையை எழுதியிருந்தார். 13 பக்கங்கள் கொண்ட அக்கட்டுரையில் தான் மார்க்சின் புகழ்பெற்ற - மதம் மக்களுக்கு அபின் எனும் சொற்கோவை இடம்பெற்றுள்ளது. அதன் முழுமையான பத்தி கீழே தரப்பட்டுள்ளது.

மதத்திற்கு எதிரான போராட்டம் என்பது அந்த மதம் எனும் ஆன்மீக வாசனையைக் கொண்டுள்ள உலகத்திற்கு எதிரான மறைமுகப் போராட்டமே! மத ரீதியான துன்பம் என்பது உண்மையான துன்பத்தின் வெளிப்பாடே - உண்மையான துன்பத்துக்கு எதிரான கண்டனமே. மதம் என்பது; ஒடுக்கப்பட்ட சீவனின் பெருமூச்சு; இதயமற்ற உலகின் இதயம்; ஆன்மநேய மற்ற சூழல்களின் ஆன்மநேயம். அது மக்களின் அபின். மக்களின் கற்பிதமான இன்பம் என்கிற மதத்தை ஒழிக்க உண்மையான இன்பத்தைக் கொண்டுவர வேண்டியுள்ளது. நடப்புச் சூழல்கள் பற்றிய மாயைகளைக் கைவிடச் செய்ய, அந்த மாயைகளைத் தாங்கி நிற்கும் சூழல்களைக் கைவிடச் செய்ய வேண்டியுள்ளது. ஆகவே மதம் மீதான விமர்சனம் என்பது மதம் எனும் ஒளி வட்டத்தைக் கொண்ட கண்ணீர் வாழ்வு பற்றிய முதல் விமர்சனமாகும்.

மதம் நீடித்திருப்பதற்கான அடிப்படைச் சூழலை மாற்றாமல், மதத்தை ஒழிக்க முடியாது என்கிற இம் மாபெரும் கருத்தை, மார்க்சு தன் 26ஆம் அகவையில் கண்டறிந்தார் என்பது பெருவியப்புக்குரியதாகும்.

மேலும், இதே கட்டுரையில் மார்க்சின் மற்றொரு புகழ்பெற்ற மேற்கோளும் இடம்பெற்றுள்ளது: ஒரு பௌதிக சக்தியானது இன்னொரு பௌதிக சக்தியா லேயே தூக்கி எறியப்படும். ஆனால் சித்தாந்தமும் கூட ஒரு பௌதிகச் சக்தியாக மாறும் - எப்போது எனில், அது மக்கள் திரளைக் கவ்விப் பிடிக்கும் போது. தத்து வத்துக்கும் நடைமுறைக்கும் இடையிலான தொடர்பையும், தத்துவம் மனிதர்களின் வழியாக மாபெரும் பௌதிகச் சக்தியாக மாறும் என்கிற பேருண்மையையும் மார்க்சு இதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மார்க்சைவிட 14 ஆண்டுகள் மூத்தவரான பாயர் பாக் என்பவர், 1841இல் கிறிஸ்துவத்தின் சாரம் என்கிற நூலை வெளியிட்டார். பொருள் முதல்வாத அடிப்படையில் பாயர்பாக் அந்நூலில் மதத்தை விமர்சனம் செய்திருந்தார். இந்நூலை மார்க்சு வரவேற்றார். ஆயினும் பாயர்பாக் தர்க்க அடிப்படையில்-சிந்தனை அடிப்படையில் மட்டுமே மதத்தை விமர்சனம் செய்திருப்பதை மார்க்சு உணர்ந்தார். பாயர்பாக்கின் தத்துவம் நடைமுறையிலிருந்து விலகி கற்பனை உலகில் நிற்பதால் பயன்படாது என்று எண்ணினார்.

1844இல் பாரிசில் இருந்தபோது பாயர் பாக்கின் நூல் பற்றிய தன் கருத்துகளைக் குறிப்பேட்டில் இரத்தினச் சுருக்கமாய் எழுதினார். இதுவே பாயர்பாக் பற்றிய சூத்திரங்கள் எனப்படுகிறது. இதன் 11வது சூத்திரத்தில் தத்துவ ஞானிகள் பல வகையிலும் உலகை விளக்கி இருக்கிறார்கள். நாம் செய்ய வேண்டியது என்னவோ அதை மாற்றுவதுதான் என்று எழுதி இருந்தார். இக்குறிப்பேட்டை மார்க்சு இறந்தபிறகே எங்கெல்சு கண்டெடுத்தார்; 1888இல் இதை நூலாக வெளியிட்டார். மார்க்சின் கல்லறையில் இந்தச் சொற்றொடர் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது.

பிரஷ்ய அரசின் நெருக்குதல் காரணமாக 1845ஆம் ஆண்டு மார்க்சு குடும்பம் பாரிசிலிருந்து வெளியேற வேண்டும் என்று பிரான்சு அரசு ஆணையிட்டது. அதனால் மார்க்சு குடும்பம் பெல்ஜியத்தின் தலை நகரான பிரஸ்ஸெல்ஸ் நகரில் குடியேறியது. நடப்பு அரசியல் பற்றி மார்க்சு எழுத்து வடிவில் ஏதும் வெளி யிடக் கூடாது என்கிற நிபந்தனையின் பேரில்தான் அந்நாட்டில் அவர் தங்க அனுமதிக்கப்பட்டார்.

இவ்வுலகம் கடவுளால் படைக்கப்பட்டது. கடவுளால் படைக்கப்பட்ட பொருள்களும் உயிரினங்களும் அவை தோன்றிய காலம் முதலாக மாறாமல் நிலைபெற்று இருக்கின்றன என்று மதவாதிகளும் கருத்து முதல் வாதிகளும் கூறிவந்தனர். இதை மறுத்து செருமானிய தத்துவ அறிஞரான ஹெகல் (1770-1830) இவ்வுலகிலும் - இப்பேரண்டத்திலும் உள்ள எல்லாப் பொருள்களும் இயங்கிக் கொண்டும் மாறிக்கொண்டும் இருக்கின்றன. பொருள்களின் இயக்கத்திற்கு அப்பொருள்களுக்குள் பொதிந்துள்ள எதிரெதிர் ஆற்றல்களே - முரண்பாடே காரணம். உலகில் எந்தவொரு பொருளும் தனித்து இருப்பதில்லை. எல்லாப் பொருள்களும் ஒன்றையொன்று சார்ந்து நின்று இயங்குகின்றன என்று அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து அறிவித்தார். இந்தக் கோட்பாடுதான் இயக்கவியல் எனப்படுகிறது. இதுவே மார்க்சியத்தின் அடிப்படையாகும். எனவேதான் ஹெகல் இயக்கவிலின் தந்தை எனப்படுகிறார்.

ஹெகலின் கோட்பாட்டை மார்க்சு, எங்கெல்சு உள்ளிட்ட எண்ணற்ற இளைஞர்கள் தீவிரமாக ஆதரித்தனர். இவர்கள் இளம் ஹெகலியர் என அழைக்கப்பட்டனர். ஆனால் மார்க்சின் ஆய்வுநோக்கு விரிவடைந்தபின், உயர்ந்த படைப்புகளை உருவாக்குவதற்கு அடிப்படையாக இருப்பது மனிதனின் சிந்தனையே என்கிற ஹெகலின் முடிவை மார்க்சு எதிர்த்தார். ஹெகல் இயக்கவியலைத் தலைகீழாக நிறுத்தியுள்ளார். அதை நேராக மாற்றுவதே நம் வேலை என்று மார்க்சு கூறினார்.

ஆனால் மற்ற இளம் ஹெகலியர்கள், ஹெகல் கூறியுள்ளதே சரி என்று கூறி, ஹெகலைத் தலை மேல் வைத்துக் கொண்டாடினர். எனவே இளம் ஹெகலியரின் தத்துவ நிலைபாடுகளுக்கு எதிராக 1845 நவம்பரில் மார்க்சும் எங்கெல்சும் இணைந்து, ஜெர்மானிய சித்தாந்தம் என்ற நூலை எழுதினர். ஆனால் எங்கெல்சின் இறப்புக்குப் பின்னரே, இந் நூலின் சில பகுதிகள் வெளிவந்தன. முழுமையான வடிவில் நூலாக 1930களில் சோவியத் கம்யூனிஸ்டு கட்சியால் வெளியிடப்பட்டது. இந்த நூலில் தான் மார்க்சியத்தின் பிழிவான வரிகளாகத் திகழும் உணர்வு வாழ்நிலையைத் தீர்மானிப்பதில்லை. வாழ்நிலை தான் உணர்வைத் தீர்மானிக்கிறது எனும் வரிகள் இடம்பெற்றன.

சிந்தனையாளன் சூன் 2017

Monday, June 13, 2022

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - கவி

கால்டுவெல் எழுதிய 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' நூலைப் படிக்க முயற்சிப்பது எவ்வளவு இடர்பாடுகள் நிறைந்தது என்பதையும் எவ்வளவு ஆழ்ந்த புலமை வேண்டும் என்பதையும் அறிந்து தற்காலிகமாக படிப்பதை நிறுத்தியுள்ளேன்.

தோற்றுவாய்ப் பகுதியையும் முதற் பாகத்தையும் இயன்றளவு படித்து முடித்துவிட்டேன்.

இரண்டாம் பாகம் படிக்கும்போது திணறிவிட்டேன். படித்ததில்

சில குறிப்புகள்....

1. திராவிட நெடுங்கணக்கு என்ற தலைப்பில், கால்டுவெல் அவர்கள் மூன்று வகையான நெடுங்கணக்குகள் வழக்கில் உள்ளன என்கிறார்.

தெலுங்கு-கன்னட வரி வடிவுகளை ஒரு நெடுங்கணக்கு என்கிறார்.

துளு மொழி, மலையாள வரிவடிவத்தில் எழுதப்பட்டு வந்தன என்றும் தற்போது மங்களுர், ஜெர்மன் மி­ன் பதிப்பகத்தில் வரும் துளு மொழி நூல்கள் கன்னட வரிவடிவுகளைப் பயன்படுத்துகின்றன என்றும் பிரைகில் என்பவர் எழுதிய துளுமொழி இலக்கண நூலும் கன்னட வரிவடிவத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்றும் கூறுகிறார் கால்டுவெல்.

கூ மொழி இலக்கண நூல் ஒரியா வரிவடிவத்தில் காணப்பட்டாலும் தெலுங்கு வரிவடிவே ஏற்புடையது என்கிறார் கால்டுவெல்.

ஏனைய திருந்தா மொழிகள் அனைத்தும் உரோமன் வரிவடிவங்களைப் பயன்படுத்துகின்றன என்றும் கூறுகிறார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட நெடுங்கணக்குகளும் வழக்கொழிந்து போன வரி வடிவங்களும் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்படுத்தப்படும் கிரந்த எழுத்துக்களும், பழைய தேவநாகரி எழுத்துக்களிலிருந்து, அசோகன் கால கல்வெட்டுகளில் காணப்படும் ஒருவகையான எழுத்துகளிலிருந்தோ பிறந்தவை என்றும், பனை ஓலைகளில் எழுத்தாணி கொண்டும் எழுதும் தென்னாட்டு வழக்கம் காரணமாய், மாறி இன்றைய வரிவடிவங்களைப் பெற்றிருக்கின்றன என்கிறார் கால்டுவெல்.

திராவிட வரிவடிவங்கள் மாற்றம் பற்றி பீம்ஸ் என்பவர், ஒரிய மொழிகளின் வரிவடிவங்கள் ஆரியரல்லாத இனமொழிகளின் வடிவெழுத்துக்களோடு (தெலுங்கு, மலையாளம், தமிழ், சிங்களம், பர்மிய மொழிகள்) ஒத்துள்ளன என்றும் பர்மிய வரிவடிவங்கள் வட்டமாக மட்டுமே உள்ளன என்றும் நேர்க்கோடு என்பது கிடையாது என்றும், அசோகன் கையாண்ட வரிவடிவ எழுத்துக்கள் நேர்க்கோடுகளும், கோணங்களும் உடையனவாய் உள்ளன என்றும், அவை சியோனி என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் காணப்படுகின்றன என்றும் கூறுகிறார்.

இதனுடைய தொடர்ச்சி கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமராவதி என்ற இடத்தில் காணப்பட்ட கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இதில் சதுரங்களாக இருந்த வரிவடிவங்கள் அரை வட்டங்களாக மாற்றம் பெறுகின்றன.

இம்மாற்றங்களிலிருந்தே திராவிட, சிங்கள மொழிகளின் நெடுங்கணக்குகள் தொடங்கப்பட்டன.

அடுத்து பர்மா, சயாம் மொழிகளின் வரிவடிவம் பற்றி குறிப்பிடுகின்றார் கால்டுவெல். அதில்,  பர்மா, சயாம் மொழிகளின் வரிவடிவங்களும், கூட்டு எழுத்துக்களில் இரண்டாவது எழுத்திற்குத் தனிவடிவம் தரும் பஸங்கன் முறையும், உயிர் எழுத்துக்களின் வேறுபாட்டைக் குறிக்க, வேறுபாட்டுக்குறிகளை வழங்கும் சந்தங்கன் முறையும், இம்மொழிகள் ஆரிய மொழியின் வழி வந்தன என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது என்கிறார்.

ஜாவா நாட்டு அழகிய வரிவடிவங்களும் அவ்வாறே தோன்றின என்கிறார் கால்டுவெல்.

அடுத்து ஓரிய மொழிக் குறித்து கூறும் கால்டுவெல், எழுதும் ஆற்றலை ஓரியர்கள் வங்காளத்திலிருந்து பெற்றனரா அல்லது மத்திய இந்தியாவிலிருந்து பெற்றனரா என்று தெரியவில்லை என்கிறார். 

மேலும், ஓரியர்களும், வங்காளக் கரையோரப் பகுதியில் வாழும் பிற மொழியாளர்களும், தாலிப்பனை, விசிறிப் பனை, பனை இவற்றின் ஓலைகளில் எழுதுகின்றனர்.

நீண்ட நேர்க்கோடுகளால் ஆன தேவநாகரி எழுத்துக்கள், இப்பனையோலையில் எழுத இயலாது. எழுதினால், எழுத்தாணி பனையோலையை பிளந்து விடும் என்கிறார் கால்டுவெல்.

எழுத்தாணி வலது கையிலும், ஓலை இடக்கையிலும் வைத்து, இடது கைப்பெருவிரல் எழுத்தாணியின் அசைவிற்குக் காரணமாக இருப்பதால் வட்டவடிவ எழுத்துக்களை எழுதுவதற்கு ஏதுவாக இருக்கிறார் என்றும் பீம்ஸ் அவர்களின் குறிப்புகளை எடுத்துக் கூறுகிறார் கால்டுவெல்.

தமிழில் வடிவெழுத்துக்கள் இருந்தன என்பதைக் காட்ட வல்ல அகச்சான்றுகள் கிடைக்கவில்லை என்கிறார் கால்டுவெல்.

பிராம்ணர்கள், தமிழ்நாட்டில் குடியேறுவதற்கு முன்னரே, பண்டைத்தமிழர்கள், எழுத்துக்கலையினை அறிந்திருந்தனர் என்றும், அப்பிராம்மணர்கள் தமிழ்நாட்டிற்கு வந்த போது, தமிழ் வரிவெழுத்துக்களை தங்கள் மொழியாகிய சமஸ்கிருதத்திற்குரிய ஒலிகளை வெளியிடும் ஆற்றல் வாய்ந்த சில வடிவெழுத்துக்களையும் சேர்த்து, தமிழ் எழுத்துக்களையும் சீர்திருத்தினர் என்றும் கிரந்த லிபி அல்லது நூல் எழுத்துக்கள் என்று அவர்களால் அழைக்கப்பட்ட அவ்விணைப்பு எழுத்துக்கல் இருந்தே இன்றையத் தமிழில் வழங்கும் வரிவெழுத்துக்கள் தோற்றுவிக்கப்பட்டன என்றும் எல்லீஸ் கூறியதையும் இங்கு எடுத்துக் கூறுகிறார் கால்டுவெல்.

‘சமஸ்கிருதத்திற்கு முந்திய... தமிழ் வடிவெழுத்துக்கள் இருந்தன என்பது குறித்து ஐயப்பாடு இருக்கிறது. தாய் மொழியில் எழுத்தையும், நூலையும் குறிக்க வழங்கும் தனித்தமிழ்ச் சொற்கள் உள்ளன என்பது உண்மையே யயனினும், பிராம்மணர்கள் இந்நாட்டில் முதன் முதலாகக் குடியேறியதற்கு முற்பட்ட காலத்தில், தமிழில் வடிவெழுத்துக்கள் இருந்தன என்பதைக் காட்ட வல்ல அகச்சான்றுகள் கிடைத்தில’ என்கிறார் கால்டுவெல்.

மேலும், பழைய காலத்துக் கல்வெட்டுகளில் தமிழ் மொழியை வழங்க மேற்கொண்ட பல்வேறு வகை வடிவெழுத்துகள் தொடக்கத்தில் சமஸ்கிருத எழுத்துகளை வழங்க மேற்கொண்ட நெடுங்கணக்கு முறையின் அடிப்படை மீது அமைந்துள்ளனவாகவே தோன்றுகிறது என்கிறார் கால்டுவெல்.

இது தொடர்பாக மீண்டும் எல்லிஸ் அவர்களை மேற்கோள் காட்டுகிறார் கால்டுவெல்.


‘திருவாளர் எல்லீஸ் அவர்களின் கருத்தோடு ஒத்த கருத்து அல்ல என்றாலும் அவர் கருத்தோடு தொடர்புடைய கருத்து ஒன்றைத் திருவாளர் எட்வர்டு தாமஸ் என்பார் வெளியிட்டுள்ளார்’ என்று கூறும் கால்டுவெல், 

‘அசோகன் கல்வெட்டுகளில் காணப்படுபவையும், சமஸ்கிருதம் அல்லது பிராகிருத மொழிகளை வழங்க மேற்கொள்ளப் பயன்பட்டவையும் ஆன மிகப் பழைய வடிவெழுத்துக்கள், திராவிட இனப்பிறப்பை அடிப்படையாகக் கொண்டன என்றும் அவை துரேனியர் (திராவிடர்) மொழிகளின் தேவைகளுக்காகவே தொடக்கத்தில் தோற்றுவிக்கப்பட்டன என்றும்,

 அவை வடமொழி ‘ஹகர’ வொலிகளை ஒலிக்க மேற்கொள்ளப்பட்ட பிராகிருத அல்லது லாட் நெடுங்கணக்குகளாய் பழைய திராவிட வடிவெழுத்துக்கள் மாற்றியமைக்கப்பட்ட காலத்தில்தான் அவற்றின் மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டது’ என்றும் எட்வர்டு தாமஸ் கூறியதை மேற்கோள் காட்டுகிறார் கால்டுவெல்.

லாட் மொழியில் ‘ஏ’காரத்தைக் குறிக்க வழங்கும் வடிவெழுத்தே ‘ஐ’காரத்தைக் குறிக்கவும் வழங்கப்படுகிறது என்றாலும் அந் நெடுங்கணக்கில், ‘எ’கர, ‘ஏ’கார ஒலிகளைக் குறிக்க வரும் வடிவெழுத்துக்களிடையே வேறுபாடு உள்ளது என்கிறார் தாமஸ் என்பதையும் எடுத்துக் காட்டுகிறார் கால்டுவெல்.

கொச்சியில் வாழும் யூதர்களிடத்தும், மலபார் கடற்கரையில் வாழும் சிரியன் கிறித்தவர்களிடத்தும் உள்ள அரசப் பரிசுகள் அடங்கிய பட்டயங்கள் போலும் பழைய தமிழ்க் கல்வெட்டுகளில் காணப்பெறும் தமிழ் வடிவெழுத்துகள் தனியாக ஆராயத் தக்க தகுதியுடையன என்கிறார் கால்டுவெல்.

அக்கல்வெட்டுகள், பல ஆண்டுகளுக்கு முன்னரே, சென்னை இலக்கியக் கழக வெளியீட்டில் வெளியிடப்பெற்று ஆராயப்பட்டுள்ளன. அவற்றில் மலையாள வாடை சிறிது வீசுகிறது எனினும், அவை தமிழிலேயே எழுதப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டுகளில் காணப்பெறும் வடிவெழுத்துகள் சென்னை மாநில அரசியல் அலுவலில் இருந்த, பேராசிரியர் பர்னல் என்பவரால் பம்பாயினின்றும் வெளியாகும் இந்தியன் ஆண்டிகுவரி என்னும் வெளியீட்டின், 1872 ஆம் வெளியீட்டில் அச்சிடப் பெற்றுள்ளன என்ற செய்தியையும் தருகிறார் கால்டுவெல். இந்த பேராசிரியர் பர்னல்தான், தான் கண்டு வெளியிட்ட மிகப் பழைய திராவிட நெடுங்கணக்கு, எகர, ஏகார ஒலிகளை அறிவிக்கும் வடிவெழுத்துகளில் எவ்வித வேறுபாடும்  காட்டுவதில்லை என்றும் அந்நெடுங்கணக்கு அசோகன் கல்வெட்டில் காணப்பெறும் சமஸ்கிருத நெடுங்கணக்கிலிருந்து தோன்றியது என்பதற்கு சான்றாக இதை எடுத்துக் காட்டியவர் என்கிறார் கால்டுவெல்.

அவ்வடிவெழுத்துகள், கொச்சியை சேர்ந்த யூதர்களும், கிறித்துவர்களும் வைத்திருந்த செப்புப் பட்டயங்களிலிருந்து பெயர்த்தெடுத்த படிகளிலிருந்து எடுக்கப்பட்டன என்றும்  அப்பட்டயங்களில் காணப்பெறும் வானநூல் பற்றிய செய்திகளைக் கொண்டு, அப்பட்டயங்களில் ஒன்று கி.பி. 774 ஆம் ஆண்டைச் சேர்ந்ததென முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூடுதல் செய்தியையையும் தருகிறார் கால்டுவெல்.

தென்னாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பழைய கல்வெட்டுகள், இப்பட்டயங்களே யாதலாலும், தமிழ் வடிவெழுத்துகளின் தொன்மை வடிவம் இஃது எனத் தெரிவிப்பன அவையே ஆதலாலும் அப்பட்டயங்கள் வடிவெழுத்தாராய்வார்க்குப் பெரும்பயன் அளிப்பவாகும் என்பதை மேற்கோள் காட்டுகிறார் கால்டுவெல்.

எட்டாம் நூற்றாண்டில் கிடைத்த கல்வெட்டுகள்தான் கால்டுவெல் போன்றவர்களுக்கு கிடைத்த மிகத் தொன்மையான கல்வெட்டுகளாக தெரிந்திருக்கிறது என்பது அவர்களுக்கு தமிழின் தொன்மைக் குறித்து அறிவதில் உள்ள நெருக்கடியை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. 

‘யூதர்களிடத்தும்,சிரியன் கிறித்துவர்களிடத்தும் கிடைக்கும் பட்டயங்களில் காணப்பெறும் தமிழ், மலையாள வடிவெழுத்துகளே, அசோகன் கல்வெட்டுகளில் காணப்பெறும் எழுத்துகளின் பிறப்பிடமாம் என்று முடிவு செய்வதோடு,

தென்னாட்டுக் கல்வெட்டுகளில் காணப்பெறும் வடிவெழுத்துகள் பொய்னீஷ்யாவிலிருந்து செங்கடல் வழியாக வந்த வாணிப மக்களால் கொண்டுவரப்பட்டவை என்பதால், அவை எகிப்து மொழி எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும்,

பழைய தமிழ் நெடுங்கணக்கு, யேமன் என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப் பெற்ற கல்வெட்டுகளில் காணப்பெறும் தென் கிழக்கு அரேபிய மொழியாகிய ஹிம்யாரிடிக் மொழி நெடுங்கணக்கோடு ஒத்துள்ளது என்றும்,

மெய்யயழுத்துகளின் வடிவம், உயிர் எழுத்துகளின் சேர்க்கைக்கேற்ப மாற்றப்படும் இயல்பால், தமிழ் நெடுங்கணக்கு, ஒருவகையில் அந்த ஹிம்யாரிடிக் மொழியோடு பெரிதும் மாறுபட்டு,

அபிசீனியாவில் வழங்கும் செமிடிக் இன மொழிகளுள் ஒன்றாய எதோபிய மொழியின் நெடுங்கணக்கோடு ஒற்றுமை கொண்டுள்ளது என்றும் கருதுகின்றார் பேராசிரியர் பர்னல்’ என்கிறார் கால்டுவெல்.

‘இம்முடிவுகள் மேலும் ஆராய்ந்து நோக்கத்தக்க சிறப்பு வாய்ந்தனவே எனினும், நாமறிந்த இந்தியப் பண்பாட்டு வரலாற்றினை அறிவிக்கும் நிகழ்ச்சிகளோடு தொடர்பற்றனவாகத் தோன்றுகின்றன’ என்று பேராசிரியர் பர்னல் அவர்களோடு முரண் படுகிறார் கால்டுவெல்.

ஆரியர்கள் தோன்றிய இடத்திலேயே தானும் தோன்றி, தென்கோடி வரை பரவி வளர்ந்த இலக்கிய வளத்தைப் போன்றே, கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வழங்கிய அசோகன் கல்வெட்டிற காணப்பெறும் வடிவெழுத்துகளே, பல நூற்றாண்டுக் காலமாகச் சிறிது சிறிதாக மாற்றம் பெற்று, கி.பி. 774 இல் வழக்கில் இருந்ததாக அறியப்பட்ட தமிழ்-மலையாள எழுத்துகளாக மாறின என்ற கொள்கை,

அவ்வசோகன் கல்வெட்டெழுத்துகள், தமிழ்-மலையாள வடிவெழுத்துகளிலிருந்து தோன்றியன அல்லாமல் வேறு இல்லை என்ற கொள்கையிலும் பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது’ என்று முடிக்கிறார் கால்டுவெல்.

‘தமிழ்-மலையாள வடிவெழுத்துகள், இப்பொழுதுள்ள வடிவினும் வேறுபட்ட வடிவங்களைப் பண்டு பெற்றிருந்தன என்பதை ஒப்புக் கொண்டாலும் அவற்றை நிலைநாட்டும் சான்று எதுவும் கிடைக்கவில்லை’ என்றும் கூறுகிறார் கால்டுவெல்.

‘பழைமையுடையவாக அறியப்பட்ட தென்னிந்திய நெடுங்கணக்குகள், அகர, ஆகார, இகர, ஈகார, உகர, ஊகாரம் இவற்றின் குறில், நெடில்களைக் குறிக்கத் தனித்தனி வடிவெழுத்துகளைப் பெற்றிருக்கவும், 

சமஸ்கிருதம், இன்றைய மலையாளம் ஆகிய மொழிகளைப் போல, எகர, ஏகாரங்கள், ஒகர, ஓகாரங்கள் இவற்றின் குறில் நெடில்களைக் குறிக்க, தனித்தனி வடிவெழுத்துகளைப் பெறாது, இரு ஒலிகளையும் குறிக்க ஒரே வடிவெழுத்தைப் பெற்றிருப்பதை நோக்கும் போது,

அந்நெடுங்கணக்கு, சமஸ்கிருத ஒலிகளை அறிவிக்கத் தோற்றுவிக்கப்பட்டவையே அல்லாமல் திராவிட மொழி ஒலிகளைக் குறிக்கத் தோன்றியவை அல்ல என்றே தோன்றுகிறது.

சுருங்கச் சொன்னால், இந்திய வடிவெழுத்துகளின் தோற்றம் - அஃதாவது, அசோகன் நெடுங்கணக்கு, திராவிட நெடுங்கணக்கினின்றும் தோன்றியதா அல்லது திராவிட நெடுங்கணக்கு அசோகன் நெடுங்கணக்கிலிருந்து தோன்றியதா என்பது இன்னமும் முடிவாக உறுதி செய்யப்படவில்லை என்பதே என் கருத்து’ என்று கூறிய கால்டுவெல்,

‘என்றாலும் இப்போதுள்ள நிலையில் திருவாளர் பீம்ஸ் அவர்கள் கொள்கையோடு இணைந்து, பின் முடிவை ஏற்றுக்கொள்ளவே நான் விரும்புகிறேன்’ என்கிறார்.

எட்வர்டு தாமஸ் அவர்கள் வெளியிட்ட ‘இந்தியப் பழமைப் பற்றி பிரின்செப் அவர்கள் எழுதிய கட்டுரைகள்’ என்ற நூலில் இந்திய நெடுங்கணக்குகள பற்றிய செய்திகள் பல காணப்படுகின்றன என்ற குறிப்பையும் தருகிறார் கால்டுவெல்.

‘தமிழ் வடிவெழுத்துகள், தேவநாகிரி எழுத்துக்களோடு எத்துணை வேற்றுமையுடையவாக இருந்தாலும் அதனினும் பன்மடங்கு அதிகமாக இன்றைய தெலுங்கு-கன்னட வடிவெழுத்துகள், தமிழ் வரிவடிவெழுத்துகளோடு பெரிதும் வேற்றுமை யுடையனவாக உள்ளன’ என்கிறார் கால்டுவெல்.

‘ஆனால், தெலுங்கு-கன்னட எழுத்துகளுக்கும் கொச்சிப் பட்டயங்களில் காணப்படும் எழுத்துக்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க ஒற்றுமை நிலவுகின்றது’ என்று கூறும் கால்டுவெல், ‘இன்றைய மலையாள வடிவெழுத்துகள், தமிழ் கிரந்த எழுத்துகளிலிருந்து தோற்றுவிக்கப்பட்டன என்பது உறுதி செய்யபட்ட உண்மையாகும்’ என்றும் அறுதியிட்டுக் கூறுகிறார் கால்டுவெல்.

‘தென்னிந்திய நெடுங்கணக்குகளுக்கும், இன்றைய வட இந்திய நெடுங்கணக்குகளுக்கும் இடையே மிகப் பெரிய வேற்றுமை நிலவுவதற்குக் காரணம்,தென்னிந்திய மொழிகள், வட இந்தியமொழிகளைவிட மிகப் பழைய காலத்திலேயே இலக்கிய வளர்ச்சி பெற்றுவிட்டமையே ஆகும்’ என்கிறார் கால்டுவெல்.

மேலும் கால்டுவெல் அவர்கள், தென்னிந்திய மொழிகள், குகை வடிவ எழுத்துகள் வழக்கிலிருந்த அந்த மிகப் பழைய காலத்திலேயே இலக்கிய வளர்ச்சிப் பெறத் தொடங்விட்டன என்றும், ஆனால் அக்காலத்தில், தேவநாகரி எழுத்துகள் தோன்றிய நேரத்தில் வட இந்திய இலககிய வளர்ச்சி தோன்றியதா என்பதே ஐயம் என்கிறார் கால்டுவெல்.

இங்கு இன்னொரு ஒப்பீட்டையும் செய்கிறார் கால்டுவெல் அவர்கள், அதாவது, தெலுங்கு, கன்னட நெடுங்கணக்குகள் தேவநாகரி முறையில் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. அல்லது, அமைப்புமுறை, தன்மை ஆகிய இவ்விரண்டில் மட்டுமே அவை அவற்றோடு ஒத்துள்ளன என்று கூறலாம் என்கிறார் கால்டுவெல்.

‘சமஸ்கிருத மொழி அறியாத குறில் ‘எ’, குறில் ‘ஒ’, வல்லின ‘ற’ எழுத்துகளையும், வேதகால சமஸ்கிருதத்தில் வழக்கிலிருந்து, இன்றைய சமஸ்கிருதத்தில் வழக்கிறந்து போன,‘ள’ எழுத்தையும் அம்மொழிகள் பெற்றிருப்பதே இவ்விரு இன மொழிகளுக்கும் உள்ள வேற்றுமையாகும்’ என்பதோடு,

 ‘தமிழ், மலையாள மொழிகளுக்கே உரிய ‘ழ’ எழுத்தைப்பழங் கன்னடமும் பெற்றுள்ளது’ என்றும் கூறுகிறார் கால்டுவெல்.

பொதுவாக, மலையாள நெடுங்கணக்கு, புதுக்கன்னட நெடுங்கணக்கோடும், தெலுங்கு நெடுங்கணக்கோடும் ஒத்து நிற்கும் எனினும், தமிழ் மொழிக்கே உரிய ‘ழ’ கரத்தைப் பெற்றிருப்பதும், எகர, ஏகாரங்களைக் குறிக்க ஒரே வடிவெழுத்தையும், ஒகர, ஓகாரங்களைக் குறிக்க ஒரே வடிவெழுத்தையும் பெற்றிருப்பதையும் மலையாளம் அவ்விரு மொழிகளோடு கொண்டுள்ள வேற்றுமையாம் என்கிறார் கால்டுவெல்.

சமஸ்கிருத ‘இஸ்’ ஒலி எழுத்துகளையும், ‘ஹகர’ ஒலி எழுத்துகளையும் சமஸ்கிருதத்திலிருந்து கடன் வாங்கிய சொற்களை யயாலிக்கும் போதும் எழுதும் போதும் மட்டுமே அந்நெடுங்கணக்குகள் இடம் பெறுகின்றன.

சமஸ்கிருத ஆதிக்க வளர்ச்சியால் சிற்சில இடங்களில் சமஸ்கிருதச் சொற்கள் அல்லாத பிற சொற்களை ஒலிக்கும் போதும் அவ்வெழுத்துகள் இடம் பெறத் தொடங்கிவிட்டன என்றாலும், திராவிட ஒலிகளை வெளியிட அவை தேவையற்றவை என்கிறார் கால்டுவெல்.

தமிழ் இலக்கணம், சமஸ்கிருதத் துணை யில்லாமலே முழுதும் ஒழுங்கு செய்யப்பெற்று, பண்படுத்தப் பெற்றுவிட்டமையாலும், சமஸ்கிருத ஒலிப்புமுறை, தமிழர் அறியாத ஒலிப்புமுறை, தமிழர் அறியாத ஒன்று, தமிழில் இடம் பெறாத ஒன்று.

ஆகையால் தமிழ் ஒலிப்பு முறை, தமிழ் நெடுங்கணக்கொன்றின் மூலமாகவே சிறப்பாக அமைந்துவிட்டது. அந்நெடுங்கணக்கு எழுத மேற்கொண்ட பொருள்கள், தோற்றத்தில் சமஸ்கிருதம் போன்றிருப்பினும், அவற்றை எழுதிய முறை அனைத்துமு; தமிழ்த் தன்மையுடையனவே என்றும் அறுதியிட்டுக் கூறுகிறார் கால்டுவெல்.

Tuesday, June 7, 2022

பூப்பு நீராட்டு விழா தேவையா?

பூப்பு நீராட்டு விழா தேவையா?- விமர்சனத்தின் மீதான விமர்சனம் - கட்டுரைகள் 

பி. இரெ. அரசெழிலன் தொகுப்பாளர்

- ஒரு பார்வை -  பொன். குமார் 

பெண்களுக்கு பல பருவம்; பல நிலை. பூப்படைவதும் ஒரு பருவம்; ஒரு நிலை. சிறுமி என்னும் நிலையிலிருந்து ஒரு முன்னேற்றம். பூப்படையும் வரை ஆண், பெண் வேறுபாடு உடலமைப்பில் தெரியாது. பூ பூப்பது போல பூப்பும் இயற்கையானது.

சிறுமிகள் பூப்படையும் போது அவர்களை வீட்டிலிருந்து விலக்கி வைத்து அல்லது வீட்டுக்குள்ளேயே ஓர் ஓரம் ஒதுக்கி வைத்து பதினோராம் நாள் அல்லது வசதிப்பட்ட நாளில் ஊரை, உற்றாரை, சுற்றத்தாரை அழைத்து சடங்கு செய்து பின்னர் வீட்டுக்குள் அனுமதிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. வசதிக்கு ஏற்றாற்போல் நிகழ்த்தப்படுகிறது. ருது மங்கள விழா என்றும் அழைக்கப்படுகிறது.

'பூப்பு நீராட்டு விழா தேவையா?' என ஒரு கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில் கவிஞர்களிடம், அறிஞர்களிடம், வழக்குரைஞர்களிடம், மருத்துவர்களிடம் இருந்து கருத்துக்களைக் கட்டுரைகளாகப் பெற்று ஒரு தொகுப்பாக்கித் தந்துள்ளார் பி.இரெ.அரசெழிலன். "மனித குல வளர்ச்சிப் போக்கில் நாகரிக சமுதாயம், அறிவார்ந்த சமுதாயம் என நமக்கு நாமே மெச்சிக் கொள்கிற இந்த 2011ஆம் ஆண்டிலும் 21ஆம் நூற்றாண்டு கணினி யுகம் என்று வளர்ந்து விட்ட இன்றைய நாளிலும் இது போன்ற மத, மூட விழாக்களைக் கொண்டாடுவதானது நாம் அறிவார்ந்த சமூகத்தினர்தானா என எண்ணிப் பார்க்க வேண்டும்" என 'ஏன் இந்த வெளியீடு?' என்னும் தலைப்பில் எழுதிய முன்னுரையில் வினா எழுப்பியுள்ளார்.


கட்டுரையாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மறுத்துள்ளனர். இருவர் மட்டும் நடுநிலை வகித்துள்ளனர். "அடிமைப்படுத்தும் அடையாளங்கள் என்பதில் அய்யமின்றி ஒட்டு மொத்த பெண் விடுதலை விரும்பிகளும் பூப்பு நீராட்டுச் சடங்குகளை எதிர்க்கிறோம்" என அனைவர் சார்பாகவும் புதிய மாதவி குரல் கொடுத்துள்ளார். "வீட்டுப் பெண்களிடம் வெறும் புலிக் கதையைப் பற்றிப் பேசிப் பேசி பூப்பு நீராட்டு விழா நடத்தாமல் அவளையே புலியாக மாற்றும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு"  

என்று உணர்த்தியுள்ளார் மேசா.முனைவர் நா.நளினி தேவி. "ஊருக்கு மட்டும் அறிவுறுத்தல், மேடை முழக்கம், இயக்க வீச்சு என்று நின்று விடாமல் செயலிலும் எதிர்ப்பைக் காட்ட வேண்டும்" என்று தூண்டியுள்ளார்.

அடுத்து "தன்மதிப்புள்ள பெண்கள், பெற்றோர்கள் யாவரும் பெண்ணை இழிவுபடுத்தும் 'பூப்பு நீராட்டு விழா'வினைத் தம் வாழ்வில் இருந்து தூக்கி எறிய வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார் சா.மா.அறிவுக் கண்ணு. கலை இலக்கியா "இயல்பானவற்றை இயல்போட இருக்க விட்டால் பெண் பிள்ளைக‌ளின் மன அழுத்தம் கொஞ்சம் குறையும், யோசியுங்கள். தேவையற்ற பூப்பு விழாவை நிறுத்துங்கள்" என்று உத்தரவிட்டுள்ளார். "சடங்கு  நடத்துவது காட்டுமிராண்டித் தனம் என்ற சிந்தனை இளைஞர்கள் மத்தியில் பரப்பப்பட வேண்டும்" என்று ஓவியா கூறியுள்ளார். த.பானுமதி ஒரு படி மேலே சென்று "சட்டத்திற்கும் எதிரான ஒரு நிகழ்வாகவும் கருதப்பட வேண்டும்" என்று ஆலோசனை வழங்கியுள்ளார். "அவமானகரமானது" என்று எச்சரித்துள்ளார் அஜிதா.

முங்காரி இதழில் நூலரங்கம் பகுதியில் 'பூப்பு நீராட்டு விழா தேவையா?' என்னும் இத்தொகுப்பின் மீது விமரிசனம் எழுதிய  குன்றம் மு.இராமரத்நம் ஆறு புகார்களை எடுத்துக் கொண்டு குறுக்கு விசாரணை நடத்தியுள்ளார். "பூப்பு நீராட்டு தேவையில்லை என்ற முன் முடிவுக்காரர்கள்" என அனைவரையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து குற்றம் சாட்டியுள்ளார். 

'தீட்டென்று மஞ்சள் நீராட்டு விழா எடுப்பது தேவையில்லை'  என்பதை ஒரு புகாராகக் கூறி அதை மறுத்து தீட்டே என்கிறார். 'தீட்டு என்பது விலக்கத் தக்கது' என்பது மறுப்பிற்குரியது, மாதவிடாய்க் காலத்தில் ரத்தப் போக்கின் காரணமாக பெண்கள் மிகுந்த களைப்பு ஏற்படும் என்பதால் பெண்களுக்கு ஓய்வு தேவை என்றே ஓரிடத்தில் இருக்கச் செய்கிறார்கள். அதற்கு பெயர் விலக்கு அல்ல. ஓய்வு என்கிறார்.

 'விளம்பரப் படுத்தி நீராட்டு விழா நடத்துவது அவமானம்' என்பதையும் ஒரு புகாராக எடுத்துக் கொண்டு பெண்ணின் விவரம் தந்து வரன் தேடுவது போலவும் சுயம்வரம் நடத்துவது போலவும் நீராட்டு விழா நடத்துவதும் ஒன்றே என்கிறார். வரன் தேடுவதும் வரம் நடத்துவதும் பெண்ணுக்கு திருமண வயதான பிறகாகும். மனம் பக்குவப்பட்ட நிலையிலாகும். இதனோடு அதை ஒப்பிடக் கூடாது. பூப்பு நீராட்டுவது சிறிய வயதிலேயே நடத்தப்படுகிறது. முன்பு பால்ய விவாகம் இருந்தது. அதனால் அது தேவையாக இருந்தது. ஊரைத் திரட்டி சொல்ல வேண்டி இருந்தது. தற்கால நிலையில் சிறுமி பூப்படைவதை வெளியில் சொல்ல முடியாது. சொல்லக் கூடாது.

ஆண்வழிச் சமூகம் பெண்ணை பலவீனமாகக் கருதி அடிமைப்படுத்தியே வந்துள்ளது. 'பூப்போடு தொடங்குகிறது பெண்ணை அடக்கி ஆளும் நடவடிக்கை' என்பதும் அவ்வகையில் ஆனதே என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சிறுமியாக இருந்த போது துள்ளித் திரிந்தவள், ஓடி விளையாடியவள் பூப்பு அடைந்த பின்  'அடக்கப்' படுகிறாள். அப்போதிருந்தே பெண்ணடிமை தொடங்குகிறது. 'பாதுகாப்பு நடவடிக்கையாக பெற்றோர்கள் பெண்ணை கட்டுப்பாட்டுக்குள்  வைத்தார்கள்' என 'பழைய பல்லவி'யைப் பாடியுள்ளார். மேலும் 'பெண்ணின் காம உணர்வுக்கு வடிகாலாக தக்க வயதில் அவளுக்குத் தகுதியான மாப்பிள்ளை தேடி மணமுடித்தார்கள்' என்னும் வாதத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது. கற்பு என்பது பொது போல காமமும் பொதுவே. பெண்ணை மட்டும் குற்றம் சாட்டுவது முறையல்ல. சுதந்திரம் தருவதால் பெண்கள் தவறு செய்யவே வாய்ப்புகள் ஏற்படும் என்னும் பொருளில் 'சுதந்திர மனுஷி'  என்னும் கவிதையையே எழுதியுள்ளார். முற்றிலும் தவறானது.

'கற்பு' இது

எங்களைச் சுற்றிக் கிழிக்கப்படும்

கடைசி எல்லைக் கோடு.

கோட்டைத் தாண்டிய நான்

இப்பொழுது சுதந்திர பூமியில்.

தாகம் பசி போல

மோகமும் ஒன்றுதான்.

அதற்கு நான்

சுயேட்சையாக ஆளை

தேர்வு செய்கிறேன். புணர்கிறேன்

அடுத்த தடவைக்கு

அதே ஆள் என்பது அவசியமில்லை

என பெண்ணின் சுதந்திரத்தைத் தவறாக பேசியுள்ளார். இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

ஆண்கள் பெண்களைப் போகப் பொருளாகவும் தான் ஈட்டும் சொத்துக்கு வாரிசுகளை (ஆண் மக்களை) பெற்றுத் தரும் இயந்திரமாகவே நடத்துகிறார்கள் என்பதை மாற்றிக் கூறி பெண்களைக் குறை கூறியுள்ளார். இது வாதத்துக்கு வாதம் போல் உள்ளது. பெண்களுக்கு ஏற்படும் எல்லாத் தொல்லைகளுக்கும் முக்கியக் காரணம் ஆணாதிக்கமே என்பதற்கான மறுப்பும் எதிர்வாதமாகவே உள்ளது. ஒரு முன் முடிவுடனே குன்றம் எழுதியுள்ளார் என்பது வெளிச்சமாகிறது.

தாய் மாமன் சீர் செய்வது ஒரு முறை, வழக்கம். ஆண்களுக்கு சொத்து பெண்களுக்கு சீர் என்பது அப்போதைய நடைமுறை. அதனால் சீர் செய்யப்பட்டது. தற்போது பெண்களுக்கு சொத்தில் பங்குண்டு என்று சட்டமே இயற்றப்பட்டுள்ளது. இதை மறுத்தோ வரவேற்றோ பேசாமல் தாய் மாமன் சீர் பற்றிய செய்தியைக் கூறி விட்டு தாய் மாமனை தரகு மாமாவுடன் ஒப்பிட்டிருப்பது உறவைக் கொச்சப்படுத்தும் முயற்சியாகும்.

பூப்பு நீராட்டு விழா தேவை இல்லை என்று விவாதத்தில் வைக்கப்பட்ட கருத்துக்களை மறுத்து பழமையான வாதத்தையே முன் வைத்த அய்யா குன்றம் அவர்கள் முடிவில் பூப்பு நீராட்டு தேவையா தேவையில்லையா என்பதைக் குறிப்பிடாமல் குடும்பம், கட்டுப்பாடு என்று திசை மாறி சென்றுள்ளார்.

பெண்கள் பூப்படைவது ஓர் இனிமையான நிகழ்வுதான். நீராடுவது தவறில்லை. அதற்காக ஊரை, உற்றாரை, உறவினரைத் திரட்டி நடத்த வேண்டியதில்லை. அக் காலத்தில் நகரம் விரிவடையாத நிலையில் தொழில் நுட்பம் பெருகாத சூழலில் ஒரு கிராமத்திறகுள்ளே நெருங்கிய உறவுகளை வைத்து நடத்தப் பட்டது. உறவுகளைத் திரட்டி நடத்தப்பட்டதாலே பூப்பு நீராட்டு விழாவிற்கு கிராம அளவில் 'தெரட்டி' என்று அழைக்கப்பட்டது. திரட்டியே மருவி தெரட்டி ஆனது. அப்போது பால்ய விவாகமும் நடத்தப்பட்டது. அதனால் உறவுகளுக்குத் தகவல் தெரிவிக்கும் ஒரு நிகழ்வாக இருந்தது. பெண்களுக்கு படிப்பும் மறுக்கப்பட்டது. தற்போது பெண்கள் போதுமான அளவு படிக்கிறார்கள்; படிக்க விரும்புகிறார்கள். பொருளாதார நிலையிலும் தன்னிறைவு அடைகிறார்கள். அதன் பிறகே திருமணம் என்னும் சிந்தனை எழுகிறது. இதனால் சிறுமியாக உள்ள போது பூப்படைவதை நீராட்டு விழா நடத்தி அறிவிக்க வேண்டியதில்லை. ஒன்றும் புரியாத நிலையில் பலர் முன் அமரச் செய்து சடங்கு செய்வது சிறுமியின் மனநிலைக்குள்ளும் ஒரு பாதிப்பை உண்டாக்கும்.

சிற்றிதழ் ஆசிரியாரக இருந்து கொண்டு தமிழ்ச் சிற்றிதழ்ச் சங்கத் தலைவராக பொறுப்பில் பணியாற்றிக் கொண்டு படைப்புகளைத் தந்து கொண்டு படைப்பாளர்களையும் ஊக்குவித்து வரும் குன்றம் மு.இராமரத்நம் பூப்பு நீராட்டு விழா தேவை என்னும் அளவில் எழுதியிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. பெண்களிடையேயும் அவர் மீது ஒரு கோபத்தையே ஏற்படுத்தும். பெண்ணியத்துக்காக பெண்கள் போராடி வரும் வேளையில், ஆண்கள் குரல் கொடுத்து வரும் சூழலில் குன்றம் அவர்களின் போக்கு விவாதத்திற்கு உரியதாக உள்ளது. குன்றம் மு.இராமரத்நம் அவர்கள் தன் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

"ஆணாதிக்க அழுக்குக் கலாச்சாரப் பூச்சுக்கள் சுரண்டி எறியப் பட வேண்டும். இத்தகைய அழிவுப் பூச்சையும் சுரண்டி எறிந்த பின்தான் பெண் மகத்தான மனிதப் பிறவியாக ஒளிர முடியும். அத்தகைய அழிவுப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள இந்த நூல் ஒரு தூண்டுதலாக இருக்கும் என்பதில் அய்யமில்லை" என அணிந்துரையில் பேராசிரியர் சரசுவதி எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. அய்யாவிற்கும் இந்த நூல் ஒரு தூண்டுதலாக அமைய வேண்டும்.

- பொன். குமார் 

கட்டுரை குறித்தகு ன்றம். மு. இராமரத்நம்  கடிதம்     22.11. 2011

அன்புள்ள கவிஞர் பொன். குமார் அவர்களுக்கு அன்பும் நல்வாழ்த்துகளும்.

என் திறனாய்வுக்குத் திறனாய்வு செய்தோர் ஒன்பது பேர். அவர்களுக்கு நான் அறிவித்தபடி பரிசுகள் அளிக்க வேண்டும். 7 பேருக்கு ( நீங்கள் உள்பட) நூல்கள் அனுப்பியாயிற்று. உங்கள் திறனாய்வுதான் ரூ. 100 பரிசுக்கு தேர்வாகியுள்ளது. அதற்கான ரூ. 100/- இன்று அனுப்பப்பட்டுள்ளது. நூல் மேலும் இருவருக்கு அனுப்ப வேண்டும். மேலாண்மை பொன்னுசாமியின் ஊர் முகவரியில் அவர் இல்லை எனத் தெரிகிறது. அவர் சென்னையிலிருந்து எழுதி உள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் அதாவது ( திறனாய்வு அடங்கிய கடிதம்) முகவரி தந்தாரா வெறும் முகாம் என்ற வகையில் சென்னை என குறிப்பிட்டாரா அதை அக்கடிதம் பார்த்துத்தான் தீர்மானிக்க வேண்டும். அதன் ஒரிஜினல் எம்மிடமில்லை. DTP அலுவலகத்தில் உள்ளது. அதை பார்த்தபின்புதான் அனுப்ப வேண்டும் நூல்களை. பொன்னுசாமி என் கவிதைகள் 4 - ப் பற்றி எழுதி இருந்தார். அது அக்டோபர் இதழில் வெளிவந்துவிட்டது. திறனாய்வு பேரில் எதுவும் அனுப்ப வில்லை.

பையனுக்கு முதல் மீசை அதுக்கு விழா நடந்தால் பெண்ணுக்கும் பூப்பு நன்னீராட்டு விழா நடத்தலாம் என்று முடித்துள்ளார்.

எல்லா திறனாய்வும் டிசம்பர் மாத முங்காரியின் இணைப்பாக வரும். செலவுதான். அதற்காக எழுதியவைகளை இருட்டடிப்பு செய்யலாமா?

அன்புள்ள

குன்றம். மு. இராமரத்நம்

Wednesday, June 1, 2022

பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா?

பெரியார் தமிழினத்தின் பகைவரா ? - வாலாசா வல்லவன் - நிமிர் வெளியீடு - முதற் பதிப்பு பிப்ரவரி 2022 - பக்கங்கள் 172 - விலை ₹ 160/

●  தமிழினத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் பெரியார். இன எதிரிகளை அடையாளம் கண்டு அவர்களைப் பற்றி விளக்கம் சொன்னவரும் அவரே ! அவர்களை விலக்கி வைத்தவரும் அவரே ! 

●  தன் வாழ்நாள் காலத்திலேயே எதிரிகளுக்கு அன்றாடம் தனது பேச்சுகளாலும் எழுத்துக்களாலும்  பதிலடி தந்தவர் ! அவைகளை எல்லாம் தனது குடிஅரசு, விடுதலை, உண்மை இதழ்களில் பதிவிட்டு ஆவணம் செய்து விட்டார் ! இந்தியாவிலேயே வேறு எந்த தலைவரும் செய்யாத வரலாற்று சாதனை இது !

●  பெரியாரை ஆதாரமற்ற முறையில் குற்றம் சாட்டி அவதூறுகளை அள்ளி வீசி திருத்தணியை சேர்ந்த ஒருவர், ' தமிழரின் இனப்பகை ஈ.வே.ரா ' என ஈனத்தனமான நூல் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கின்றார். அந்த நூலுக்கு பதிலடி தருவதற்கென்றே இந்த நூலை படைத்துள்ளார் வாலாசா வல்லவன். பெரியாரின் எழுத்துக்களையே தனது ஆதாரமாக எடுத்து வைக்கின்றார் !

●  வாலாசா வல்லவன் தனது முன்னுரையில், " பொய்களுக்கு வரலாற்று ஆவணங்கள் அடிப்படையில் மறுப்பு தெரிவிப்பதே இந்நூலின் நோக்கமாகும் ! ம.பொ.சி மட்டும் தான் சென்னையை மீட்டுக் கொடுத்தவர், ம.பொ.சி இல்லை என்றால் சென்னை, தமிழருக்கு கிடைத்திருக்காது என்ற பொய்யை ஆதார பூர்வமாக மறுப்பது இந்த நூல் ! வடக்கெல்லைப் போராட்டத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் பத்து பேரை முதலமைச்சர் ராஜாஜி சுட்டுக் கொன்றதையும் அதை ம.பொ.சி ஏன் என்று கேட்காததையும் இந்நூல் விவரிக்கின்றது " ...என பல தகவல்களை தருகின்றார் ! 

●  நூலின் உள்ளடக்கமாக வாலாசா வல்லவன் எழுதிய ஏழு கட்டுரைகளின் விவரங்கள் இதோ :

பெரியார் தமிழினத்தின் பகைவரா ? | நீதிக்கட்சி ஆட்சியில் ஆதி திராவிடர்கள் பெற்ற நன்மைகள் | இராசாசி தெலுங்கு பார்ப்பனரே | ம.பொ.சி. தமிழ்த் தேசியத்தை விரும்பினாரா ? | நீதிக்கட்சி பார்ப்பன எதிர்ப்பில் போலியானதா ? | சென்னை மீட்பின் உண்மை வரலாறு | தமிழர்களை சுட்டுக் கொன்றவர் இராசாசி ! அதை ஏன் என்று கேட்காதவர் ம.பொ.சி. |

●  பெரியார் தமிழினத்தின் பகைவரா ? என்ற கட்டுரை வாலாசா வல்லவனின் சிந்தனையாளன் இதழில் நவம்பர் 2015ல் வெளியானது. பெரியாரை அவமானப் படுத்த வேண்டும் என்ற நோக்கோடு, " வடக்கே இருந்த நால் வருணத்தையும் சூத்திரப் பட்டத்தையும், பெரியார் கொண்டு வந்து தமிழர் மேல் சுமத்துகிறார் " ..என்ற குற்றச்சாட்டை வைத்தவருக்கு, அது எவ்வளவு பச்சையான பொய்யும் வரலாற்று திரிபும் என்பதை ஆசிரியர் விளக்குகிறார் !

●  ஆந்திரா எல்லை பிரச்சினை குறித்து திராவிடர் கழக மத்திய நிர்வாக குழு 11.01.1953ல் நிறைவேற்றிய தீர்மானங்கள் முழுவதையும் வெளியிட்டு, அதில் தமிழினத்தின் நலனை பெரியார் எவ்வாறெல்லாம் பாதுகாக்க பாடுபட்டார் என்று பட்டியலிடுகின்றார் ! 

●  ஆந்திரா அன்றைய மதராஸ் மாகாணத்திலிருந்து பிரிந்த  பின்னும், தனக்கென்று ஒரு தலை நகரை உருவாக்கும் வரை, ஆந்திராவுக்கும் சென்னையே தலைநகராக இருக்கட்டும் என்ற கோரிக்கையை அடியோடு எதிர்த்தார் - பெரியார் ! 

●  அதற்கு பெரியார் தந்த உதாரணம் இன்றும் பேசப்படுகிறது - " ஒரு வீட்டில் பாகப் பிரிவினை எல்லாம் செய்யப்பட்ட பிறகு, சமையல் மட்டும் கொஞ்ச நாளைக்கு இங்கே செய்து கொள்ளப் போகிறோம் என்பது என்ன நியாயம் ? ".. இந்த கேள்விக்கு பதில் கிடைக்காததால், அந்த யோசனை கைவிடப்பட்டது ! இதை சொன்ன பெரியார்தான் தமிழினத்தின் பகைவரா ?

●  வாலாசா வல்லவன் எழுதிய இந்த நூல் சிறியதாக இருந்தாலும், வரலாற்று ஆதாரங்களோடு பெரியாரின் கொள்கைகளை விளக்கும் ஆவணமாக வெளிவந்துள்ளது !

நூலைப் படித்து, அறிந்து, ஆராயும் போது -

பெரியார் தமிழினத்தின் பகைவரா ? என்ற கேள்விக்கு 

பெரியார் தமிழினத்தின் தலைவர் ! என்ற பதிலே கிடைக்கும் !

வாலாசா வல்லவனுக்கு நன்றியும் வாழ்த்துகளும் !

பொ. நாகராஜன்,

பெரியாரிய ஆய்வாளர், சென்னை. 01.06.2022.

********************************************