Monday, May 30, 2022

பல்லடம் மாணிக்கம் அய்யாவின் நூலகம்

ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் எங்குள்ளது?

சென்னையிலோ, டில்லியிலோ,  கொல்கத்தாவிலோ, டோக்யோவிலோ, சிங்கப்பூரிலோ இல்லை.

#விருத்தாசலத்ததில்தான் இருக்கிறது...

கிடைத்தற்கரிய பழைய நூல்களைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கும் இந்த தமிழ் நூல் காப்பகமே.. ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் இது.

தம் வாழ்நாள் பணியாக இந்த நூலகத்தை நிறுவியுள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே நூல்களைச் சேமித்து வைத்து இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளார்.

இந்த நூலகத்தில் மிகப்பழமையான பல நூல்கள் உள்ளன. 

இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரீஷியஸ் அகராதி, சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரைப் பல் தொகை நூல்களின் முதல் பதிப்புகள், தொல்காப்பியம் முதல் பதிப்பு, கம்பராமாயணத்தின் பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள் எனப் பல முதல் பதிப்பு நூல்கள் அமைந்திருப்பது தமிழ் நூல் காப்பகத்தின் தனிச்சிறப்பு.

திருக்குறளின் அத்தனைப் பதிப்புகளோடு திருக்குறள் தொடர்பான 1500 க்கும் மேற்பட்ட நூல்களும் இங்கு உள்ளன. 

கம்பன், இளங்கோ, பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளின் பல்வேறு பதிப்புகளும் அவை பற்றிய அனைத்து ஆய்வு நூல்களின் தொகுப்பும் உள்ளன.

நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ஆங்கில, தமிழ்க் கலைக்களஞ்சியங்கள், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகள்,  சமைய நூல்கள், சித்தாந்த சாத்திரம், பன்னிரு திருமுறை, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனப் பல பரிமாணங்களில் நூல்கள் வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மறைமலை அடிகள், தெ.பொ.மீ., வையாபுரி, மு.வ.,பாவாணர், ந.சி.கந்தையா, முதலிய ஆய்வு முதல்வர்களின் நுட்பமான ஆய்வு நூல்கள், காந்தியடிகள், காரல்மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார், அண்ணா முதலிய சமுதாய சிந்தனையாளர்களின் அரிய நூல்தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் உலகின் தலை சிற்ந்த திரைப்படங்களின் குறுந்தகடுகள் இசைக் குறுந்தகடுகள் எனப் பல அரிய குறுந்தகடுகளும் அமைந்திருப்பது நூலகத்தின் கூடுதல் சிறப்பு.

தரைத் தளத்தில் நூலகமும் மேல் தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகளும் அமைந்த கலை நயம் மிக்க கட்டடமாகத் திகழ்கிறது இது...

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதன்மைக் கட்டடத்தின் பெரிய தூண்களும், நேப்பாள மன்னர் அரண்மனையை நினைவூட்டும் மேல் முகப்பும் என, தன்னைக் கவர்ந்த வடிவமைப்புகளை பழனிவேல் என்ற பொறியாளரின் உதவியோடு வடிவமைத்துள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்கள்......

நூலகத்திற்கான தனி கட்டிடத்தை 50 இலட்ச ரூபாய் செலவில் 2000ஆம் ஆண்டில் கட்டி முடித்ததோடு நூலகத்தின் முன்புறம் கண்ணைக் கவரும் அழகிய பூங்காவையும்  கலை நுணுக்கத்தோடு உருவாகி வைத்துள்ளார்.

இவரது முயற்சியைப் பாராட்டி பொள்ளாச்சி மகாலிங்கம், பதிப்புச்செம்மல் மெய்யப்பன், பொற்கோ, முனைவர் சுந்தரமூர்த்தி, க.ப.அறவாணன், கவிஞர் புரட்சிதாசன், த.பழமலை, க்ரியா ராமகிருஷ்ணன், விடியல் சிவா, ஆகியோர் தங்கள் சேகரிப்பிலிருந்து பல நூல்களை கொடையளித்துள்ளனர்.

பல்லடம் மாணிக்கம் அவர்கள், 'நிறங்கள்' என்ற கலை இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி பல நூல்களை வெளியிட்டுள்ளார்.

'வள்ளுவம்' என்ற இதழை நடத்தியுள்ளார்.  24 இதழ்களோடு அது நின்று போனாலும் இலக்கிய இதழ்களில் குறிப்பிடத்தகுந்ததாகும்.

தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பல்லடம் மாணிக்கம் தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும், அதன் மூலம் தமிழ் வளர்க்கவேண்டும் என்கிறார். 

பிரபஞ்சன், சிவகாமி, திலகவதி ஆகிய எழுத்தாளர்களுடனான இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிகளும், பெண்கள் இலக்கியச் சந்திப்பு-2007 ஆகிய இலக்கிய நிகழ்வுகளும் தமிழ்நூல் காப்பகத்தில் தான் நடைபெற்றன....

எல்லாவற்றுக்கும் மேலாக ஆசியாவிலேயே பெரிய தனிநபர் நூலகமும் இந்த நூலக காப்பகம்தான்.

Friday, May 27, 2022

பிஜேபி ஒரு பேரபாயம்

பிஜேபி ஒரு பேரபாயம் - மஞ்சை வசந்தன் - திராவிடர் கழக வெளியீடு - பக்கங்கள் 220 - நன்கொடை ரூ 140/

●  இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை சீர் குலைக்கும் விதமாக; பல இன, மொழி, கலாச்சாரங்கள் கொண்ட மக்களை பிரிக்கும் முயற்சியாக; ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே அரசாங்கம் என்ற பாதையில் பயணிக்கும் அரசியல் கட்சி தான் பிஜேபி.

●  அந்த பிஜேபியின் தோற்றம், கொள்கை, செயல்பாடுகளைப் பற்றி மிகவும் தெளிவாக வரலாற்று அடிப்படையில் எடுத்து சொல்லும் ஒரு அரிய நூல் தான் - பெரியாரிய சிந்தனையாளர், எழுத்தாளர், உண்மை இதழின் பொறுப்பாசிரியர், தோழர் மஞ்சை வசந்தன் எழுதிய பிஜேபி ஒரு பேரபாயம் !

●  ' தாயைப் போல பிள்ளை '  என்ற கருத்துக்கு மிகவும் பொருத்தமான உதாரணம் ஆர்எஸ்எஸ் - பிஜேபி உறவு ! பிஜேபியை அறிய வேண்டுமென்றால் அதன் தாய் -  ஆர்எஸ்எஸ்  உருவாக்கத்திலிருந்து துவங்க வேண்டும் ! ஆர்எஸ்எஸ் மரத்தின் வேர் என்றால் - பிஜேபி அதன் கிளை ! ஆர்எஸ்எஸ் கொடிய  கிருமி என்றால் - பிஜேபி அதனால் உண்டாகும் கொடிய நோய் !

●  1925 ம் ஆண்டு ராம நவமியன்று நாக்பூரில் சித்பவன் பார்ப்பனரான டாக்டர் ஹெட்கேவரும் அவரது நான்கு சகாக்களும் சேர்ந்து தோற்றுவித்த அமைப்பு தான் ஆர்எஸ்எஸ் ( Rastria Samayam sevai Sangh ) 

●  ஆரியரும் ( பார்ப்பனர் ) ஆரிய தருமமும் ( வர்ணாசிரம, மநுநீதி ) ஆரிய மொழியும் ( சமஸ்கிருதம் ) ஆரிய நாடும் ( இந்தியா ) இவற்றின் உயர்வுக்காக பாடுபடுவதற்கும், அந்நிய மதத்தவர்களை எதிர்த்து போராடுவதற்கும், அதன் விளைவாக ' இந்து ராஷ்டிரா ' நிறுவச் செய்வதற்காகவும்  தோன்றியதே ஆர்எஸ்எஸ் ! இதுதான் சங்கிகளின் கொள்கை ! இதன் அடிப்படையில் உருவானதே பிஜேபியின் கொள்கை !

●  ஆர்எஸ்எஸ்ஸின் சித்தாந்த குரு, கோல்வல்கர் தனது சிந்தனை கொத்து நூலில் எழுதிய, சங்கிகளின் வேத வாக்கைப் படித்துப் பாருங்கள் :

●  " இந்து ராஷ்டிராவில் வணங்கத்தக்கவர்கள் ஆரிய பார்ப்பனர்களே ! மற்றவர்களெல்லாம் அவர்களது அடிமைகளே ! சூத்திரர்களே ! இழி மக்களே ! " ....

●  " மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தான் இருக்கிறது ! சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வருகின்ற வரை, இந்திக்கே நாம் முன்னுரிமை தந்து, நமது வசதிக்காக ஆட்சி மொழியாக்கி கொள்ள வேண்டும் ! " ...

●  1925ல் ஆர்எஸ்எஸ் தோன்றிய பிறகு 1927ல் நாக்பூரில் பெரிய மதக் கலவரம் நடந்தது. அந்த கலவரத்தில் இந்துக்களுக்கு பாதுகாவலராகவும், முஸ்லீம்களுக்கு எதிராகவும் போராடி, வெற்றி பெற்று அதன் மூலம் நற்பெயரைப் பெற்று, தனது கிளைகளை கொஞ்சம் கொஞ்சமாக ஆர்எஸ்எஸ் பெருக்கியது !

●  அரசியலில் தீவிரம் காட்ட 1930ல் என். பி. கார்வே உருவாக்கியது - இந்து மகாசபை !ஆர்எஸ்எஸ் உடன் அமைப்பு ரீதியான தொடர்பும், கொள்கையும் கொண்டது. இதன் தலைவரில் ஒருவரான டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜி 1931ல் ஜனசங் கட்சியை நிறுவினார். இந்து மகா சபையில் தீவிர பங்காற்றிய நாதுராம் கோட்சே 1948 ஜனவரி 30ம் தேதி மகாத்மா காந்தியை சுட்டு கொன்றவன் !

●  ஜனசங் கட்சி 1977ல் ஜனதா கட்சியில் இணைந்தது. பின்பு 1980ல் வாஜ்பாயும் அத்வானியும் இணைந்து பாரதிய ஜனதா கட்சி என்ற பிஜேபியை துவக்கினார்கள் !

●   ஆர்எஸ்எஸ்ஸின் எல்லா கொள்கைகளுக்கும் அரசியல் வடிவம் கொடுக்கும் இயக்கமாக மாறியது பிஜேபி ! 

அரசியலை இந்து மயமாக்கு - இந்து மதத்தை ராணுவ மயமாக்கு என்ற கொள்கையோடு கட்சி வளர்ந்தது !

●  பிஜேபி தனது அரசியல் கனவை நனவாக்க, இந்துத்துவா கொள்கையின் முக்கிய திட்டமான , ' ராமர் கோயில் ' கட்டும் முயற்சியை முன்னெடுத்து, நாடெங்கும் மதவெறுப்பு கோஷங்களை கிளப்பி, இந்து ஒற்றுமை என்ற போர்வையில், மாற்று மதத்தினரை அச்சுறுத்தும் வகையில் பல இடங்களில் கலவரங்களை அரங்கேற்றி தன்னை வளர்த்து கொண்டது !

●  இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு தினம் - டிசம்பர் 6ம் தேதி  1992 ! அன்று அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து தரை மட்டமாக்கியது இந்துத்துவா - சங் பரிவாரங்கள் ! ஆர்எஸ்எஸ் வழி நடத்த, விஎச்பி, பஜ்ரங் தள், இந்து முன்னணி, சிவசேனா, சாது சமாஜ் மற்றும் பிஜேபி இயக்கங்களின் தொண்டர்களும் குண்டர்களும் அந்த நாசவேலையை செய்து முடித்தார்கள் !

●  ' இந்துத்துவா ஒரு பேரழிவு ' என்பதை இந்திய மக்கள் உணர்ந்த தருணம் அது !  பல இடங்களில் மதக் கலவரங்கள். எங்கெல்லாம் மதக் கலவரங்கள் நடந்ததோ அங்கெல்லாம் பிஜேபி ஆட்சியைப் பிடித்திருக்கின்றது.

●  பிஜேபி ஒரு பேரபாயம் என்ற கருத்தை விளக்குவதற்கு ஆசிரியர் மஞ்சை வசந்தன் நிறைய ஆய்வுகளை மேற் கொண்டிருக்கின்றார். ஆர்எஸ்எஸ் துவக்கம் முதல் அதன் பின்னே இந்து மகா சபையாகி, அதன் பின்னர் ஜன சங்காகி, இறுதியில் பிஜேபியாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது ! 

●  பிஜேபி ஒரு பேரபாயம் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த நூல் ஒரு எச்சரிக்கை மணியாக விளக்கம் தருகிறது ! நூலை சிறப்பாக எழுதியுள்ள ஆசிரியர் மஞ்சை வசந்தன் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் உரித்தவராவார் !

பொ. நாகராஜன்.

பெரியாரிய ஆய்வாளர்.

சென்னை. 27.05.2022.

********************************************

பேரறிவாளன் விடுதலை குறித்து நியூஸ் 7 தொலைக்காட்சியில் வந்த தொகுப்பு

நியூஸ் 7 தொலைக்காட்சி சொன்னது என்ன? 

1991 ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி கொலை வழக்கு, 

30 ஆண்டுகளாக, எந்த முடிவும் எடுக்கப்படாமல், அரசியல் விவாதங்களுக்கு இடையே சிக்கித் தவித்து வந்தது, 

இந்த நிலையில்தான், 

2022 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள், 

எழுவருள் ஒருவரான பேரறிவாளன் விடுதலை என்கின்ற செய்தி வெளியாகி,  

தமிழ்நாடு உட்பட, இந்தியா முழுமையும் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியது. 

பேரறிவாளன் வீட்டிலும் மகிழ்ச்சி வெள்ளம் சூழ்ந்தது. 

என் விடுதலைக்காகப் போராடிய என் தாய்க்கும், அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி

எனக்கூறி, பறை இசைத்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பேரறிவாளன்.

அன்று மாலையில், 

சென்னை வான் ஊர்தி நிலையத்தில், முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்களை, பேரறிவாளனும், அவரது குடும்பத்தினரும் சந்தித்து, நன்றி கூறினர். பேரறிவாளனைக் கட்டி அணைத்து முதல்வர் வரவேற்றார். குடும்பத்தின் சூழ்நிலைகளைக் கேட்டு அறிந்ததாகவும், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்வதாகவும், முதல்வர் உறுதி அளித்ததாக, ஊடகங்களிடம் கூறினார் பேரறிவாளன்.

அடுத்து அவர்கள், முன்னாள் முதல்வர் எடப்பாடியை, அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி கூறினர். 

அடுத்து ஒரு முக்கியமான தலைவரைச் சந்திக்க, பேரறிவாளனின் கால்கள் சென்றன. 

பேரறிவாளன் மட்டும் அல்லாது, 

ஏழு பேரையும் விடுதலை செய்ய, 

தமிழ்நாட்டுக்கும் தில்லிக்கும் மாறி மாறி அலைந்தவர் அவர்.

தூக்கு வரை சென்ற பேரறிவாளன் உட்பட மூவரைக் காப்பாற்றி, விடுதலைத் தீர்ப்பு வந்ததன் பின்னே, உறுதியாய், உறுதுணையாய் இருந்தவர் அவர்தான்; மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்கள் அவை உறுப்பினருமான, நாடாளுமன்றப் புலி என்று அழைக்கப்படுகின்ற வையாபுரி கோபால்சாமி என்கின்ற வைகோ.

மே 19 ஆம் நாள் காலையில், 

சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில், பேரறிவாளனும், அவரது தாயார் அற்புதம் அம்மாளும், ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அப்போது, 

வழக்கின் போக்கு எங்கு தொடங்கியது என்பதில் இருந்து, அந்தப்  பயணம் முடிவுக்கு வந்தது வரை, மனம் விட்டு உரையாடினர். 

இங்கு செய்தியாளர்களிடம் பேரறிவாளன் கூறிய வார்த்தைகளை நாம் கவனிக்க வேண்டி இருக்கின்றது.

இந்த விடுதலைக்கு முழுக்க முழுக்க  அண்ணன் வைகோ அவர்கள்தான் காரணமாக இருந்தார். 

அதற்கு நன்றி கூறுவதற்காகத்தான் வந்தோம். நேற்றைக்கே இங்கு வர நினைத்தோம்; 

ஆனால், நேரம் ஆகி விட்டது. 

இந்தியாவின் தலைசிறந்த வழக்கு உரைஞர் ராம் ஜெத்மலானி, அழைத்துவந்து வாதாடச் செய்தார் வைகோ. 

சிறைக்குச் சென்று கைதிகளைப் பார்க்கின்ற வழக்கம், ராம் ஜெத்மலானிக்குக் கிடையாது. 

ஆனால், வேலூர் சிறைக்கு வந்து எங்களைப் பார்த்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடி, தூக்குத் தண்டனைக்குத் தடை ஆணை பெற்றுக் கொடுத்தார். அதன்பிறகு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றபோது, 

அத்தனை அமர்வுகளிலும் பங்கேற்று வாதாடினார். அவருடைய வாதங்கள்தான் எங்கள் விடுதலைக்கு வழி காட்டியது. 

ராம் ஜெத்மலானி தற்போது உயிருடன் இல்லை; ஆனால், அவர் செய்த உதவியை நாங்கள் என்றைக்கும் மறக்க முடியாது என நன்றிப்பெருக்குடன் பேசினார் பேரறிவாளன்.

எழுவர் விடுதலைக்கான சட்டப் போராட்டம் குறித்து, இரண்டு நிமிடங்களுக்குள் பேரறிவாளன் பேசி முடித்தாலும், 

அவர்கள் இருவருக்கான உறவும், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்காக வைகோ நடத்திய சட்டப் போராட்டங்களும் பல்லாண்டுகள் நீண்டவை. சில நிமிடங்களில் அவற்றைச் சொல்லி முடிக்க முடியாது.

1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் நாள், 

திருபெரும்புதூரில் நிகழ்ந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில், இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட மறுநாள், 

மே 22 ஆம் நாள், திருபெரும்புதூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 

இரண்டு நாள்களுக்குப் பிறகு, 

மத்திய புலன் ஆய்வுத் துறை புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்தது.

இந்த வழக்கின் முதல் கைதாக, 

ஜூன் 11 ஆம் நாள், நளினியின் தாயார் பத்மா, சகோதரர் பாக்கியநாதன் கைது செய்யப்பட்டனர். 

14ஆம் தேதி முருகனும், நளினியும் சென்னை சைதாப்பேட்டையில் கைது செய்யப்பட்டனர். 

 19 ஆம் தேதிதான், பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். 

அதற்குப் பிறகு, விசாரணை வளையம் விரிவு அடையத் தொடங்கியது. 

கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு,

 1992 மே 20 அன்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக, 

சிபிஐ தரப்பில், 55 பக்கங்கள் கொண்ட குற்ற அறிக்கை நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. 

41 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்த நிலையில், 

12 பேர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்கள்.

மூன்று பேர் தலைமறைவு ஆகினர். 

பிடிபட்ட 26 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றம்,

 1998 ஆம் ஆண்டு,ஜனவரி 28 ஆம் நாள், அந்த 26 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்தது. 

அதுவரை இந்தியாவில் இப்படி ஒரு தீர்ப்பை, எந்த நீதிமன்றமும் வழங்கியது இல்லை. 

இதுதான் முதன்முறை.

பழ. நெடுமாறன் தலைமையில் மீட்புக்குழு அமைக்கப்பட்டது. 

முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வீட்டில் கூட்டம் நடத்தப்பட்டது. 

வழக்கு உரைஞர் எம்.நடராஜன் மூலம், 

மேல் முறையீடு செய்யப்பட்டது. 

1998 செப்டெம்பர் முதல், 1999 ஜனவரி வரை ஐந்து மாதங்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. நீதிபதிகள் கே.டி. தாமஸ், டி.பி. வாத்வா, சையத் ஷா முகமது கத்ரி ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.

மே 5 ஆம் நாள் தீர்ப்பு வழங்கினர்.

நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கு மட்டும் மரண தண்டனையை உறுதி செய்தனர். 

ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் மரண தண்டனையை,

 வாழ்நாள் சிறைத்தண்டனையாகக் குறைத்தனர். சண்முகவடிவேலு, குற்றம் அற்றவர் என விடுவிக்கப்பட்டார். 

மீதம் இருந்த 18 பேரும், குறைந்த அளவு குற்றம் செய்ததாகக் கூறி, அவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்ததைக் கருதி, உடனே விடுதலை செய்தனர்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, 

சிபிஐ மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு தள்ளுபடியானது.

அவர்கள் குற்றம் அற்றவர்கள், 

அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று, தொடக்கம் முதலே ஓங்கிக் குரல் கொடுத்து வந்த வைகோ, 

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரையும் எப்படியேனும் விடுதலை செய்து விட வேண்டும் என, 

அதிக உத்வேகத்துடன் இயங்கினார். 

அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களைச் சந்தித்து, நான்கு பேரின் தூக்குத் தண்டனையை, வாழ்நாள் சிறைத்தண்டனையாக மாற்ற உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்தப் பிரச்சினையை இப்போது நாங்கள் கையில் எடுத்தால், அது இந்தியா முழுமையும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். 

ஆனால், நீங்கள் கவலைப்படாதீர்கள்; பார்த்துக் கொள்வோம்; எதற்கும் உள்துறை அமைச்சரைச் சந்தித்து விட்டுச் செல்லுங்கள் என்று 

வைகோவிடம் தெரிவித்தார் வாஜ்பாய்.

அதன்படி, உள்துறை அமைச்சர் அத்வானியையும் சந்தித்து முறையிட்டார் வைகோ. 

இந்தியாவின் பிரதமராக இருந்தவரைக் கொலை செய்த வழக்கு என்பதால், நாங்கள் இதில் தலையிட முடியாது. ஆனால், முடிந்த அளவிற்கு கிடப்பில் வைத்து விடுகின்றோம் என்று தன்னிடம் அத்வானி சொன்னதாக, மேடைகளில் தெரிவித்தார் வைகோ. 

அந்தக் கால தாமதத்தின் மூலம் கிடைத்த இடைவெளிதான், அவர்களுடைய தண்டனைக் குறைப்பிற்கு வழி ஏற்படுத்தியது என்றார் வைகோ.

அதன்பிறகு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும், தமிழக ஆளுநர் ஃபாத்திமா பீவிக்குக் கருணை மனுக்கள் அனுப்பினர். 

ஆனால், ஆளுநர் ஃபாத்திமா பீவி, அதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை; கருணை மனுக்களைத் தள்ளுபடி செய்தார்.

ஆளுநர் அரசைக் கலந்து ஆலோசிக்கவில்லை;  தன்னிச்சையாக முடிவு எடுத்தார் எனக் கூறி, தூக்குத்தண்டனை பெற்றவர்கள் 

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

ஆமாம்; ஆளுநர் தன்னிச்சையாக முடிவு எடுத்தது தவறு; தமிழ்நாடு அமைச்சர் அவை எடுக்கின்ற முடிவின்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும் என அழுத்தம் திருத்தமாக, 

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

அப்போதைய முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில், 2000 ஆவது ஆண்டு ஏப்ரல் 19 ஆம் நாள், தமிழக அமைச்சர்கள் அவை கூடி விவாதித்தது. 

நளினிக்கு மட்டும் தூக்குத்தண்டனையை, 

வாழ்நாள் சிறைத்தண்டனையாக மாற்றி, ஏப்ரல் 24 ஆம் நாள் அரசு ஆணை வெளியிடப்பட்டது. 

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர், 

ஏப்ரல் 26 அன்று குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அனுப்பினர்.

ஆனால், 2000 ஆண்டு முதல், 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவர் பொறுப்பு வகித்த கே.ஆர். நாராயணன், அப்துல் கலாம் ஆகிய இருவரும், அந்தக் கருணை மனுக்களை நிலுவையில் வைத்து இருந்தனர்.

2007 இல் குடியரசுத் தலைவர் பொறுப்பு ஏற்ற பிரதிபா பாட்டீலுக்கும் கருணை மனுக்கள் அனுப்பினர்.

இந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு, வைகோவும், மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி எம்.பி.யும், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தனர்.

ஒன்றிய அமைச்சர்கள் அவை எடுக்கின்ற முடிவுகளுக்கு, குடியரசுத் தலைவர் கட்டுப்பட்டாக வேண்டும் என்பதால், 

பிரதமரைச் சந்தித்தனர்.

மன்மோகன் சிங், உள்துறை அமைச்சரைத் தொடர்பு கொண்டு, 

வைகோவும், கணேசமூர்த்தியும் வருகின்றார்கள்; சந்தியுங்கள் என்று சொன்னார். 

அவர்களும் சந்தித்தனர். 

எந்தக் கவலையும் வேண்டாம்; நல்லது நடக்கும் என்று கூறி, வைகோவுக்கு நம்பிக்கை அளித்தார் உள்துறை அமைச்சர்.

மூவரையும், மரண தண்டனையில் இருந்து காப்பாற்றி விட்டோம் எனக் கருதி, அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார் வைகோ. 

அவர், மூவரையும் விடுதலை செய்து விட்டது போலவே கருதி, சென்னை வந்த அவருக்கு தடபுடல் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 12 ஆம் நாள் காலை, தியாகுவிடம் இருந்து வைகோவுக்கு ஒரு அழைப்பு வந்தது. 

அவர் சொன்ன செய்தியைக் கேட்ட வைகோ, அதிர்ச்சியில் உறைந்து போனார். 

ஆம்; மூவரின் கருணை மனுக்களையும், குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார்; 

தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டு விட்டது என்பதுதான் அந்தச் செய்தி. 

அந்தச் செய்தி வெளியாகி இருந்த ஆங்கில நாளேட்டை வாங்கிப்  படித்து அதிர்ந்து போனார் வைகோ. 

தில்லி வீட்டின் மாடிப்படியில் இருந்து கீழே இறங்கும்போது, தலைசுற்றி மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டார். 

ஏன் இவ்வளவு பதற்றம் என்று கணேசமூர்த்தி கேட்க, பதில் கூற முடியாமல் திணறினார் வைகோ.

அடுத்து என்ன செய்வது? என்று யோசித்தார். 

பிரபல வழக்கு உரைஞர் அந்தி அர்ஜூனாவைச் சந்தித்தார். 

ஆனால், அவர் இந்த வழக்கை எடுத்துக் கொள்ள முடியாது எனக் கூறி விட்டார்.

மூவரும் தூக்கில் போடப்படுகின்ற தேதியை, 

ஆகஸ்ட் 26 ஆம் நாள் அறிவிப்பதாக செய்தி வந்தது. என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்தார் வைகோ. 

ஆகஸ்ட் 20 ஆம் நாள், வேலூர் மத்தியச் சிறைக்குச் சென்று, மூவரையும் சந்தித்தார். 

‘அண்ணா கவலைப்படாதீர்கள்’ என்று அவர்கள் வைகோவுக்கு ஆறுதல் சொன்னார்கள்.

கண்ணீர் வழிய, சிறைக் கம்பிகளுக்கு உள்ளே தன் கையை நுழைத்து, அவர்களுடைய தலைகளை வருடிக் கொடுத்தார் வைகோ.

அவர்கள் மூவரும், செப்டெம்பர் 9 ஆம் நாள் தூக்கில் இடப்படுவார்கள் எனத் தகவல்கள் வெளியாகின. 

தூக்குத் தண்டனையைக் கண்டித்து, காஞ்சிபுரத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டது.

 மல்லை சத்யா, பாலவாக்கம் சோமு ஆகிய மதிமுக முன்னணியினருடன் வைகோ பங்கேற்றார். 

காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த செங்கொடியும் அந்தச் சங்கிலியில், வைகோவுக்கு அருகில்  கைகோர்த்து நின்றார். 

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் உரை ஆற்றிய வைகோ, மூவரையும் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே எனக்கூறி கண்ணீர் வடித்தார். 

அவரது உரை, செங்கொடி உட்படப் பலரது கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

அன்று இரவு, காஞ்சி மக்கள் மன்றத்தின் தலைவி மகேசிடம் பேசிய செங்கொடி, 

வைகோ அண்ணனே இப்படி அழுகின்றாரே, 

இனி அவர்களைக் காப்பாற்ற முடியாதா? என்று கூறி வேதனைப்பட்டு இருக்கின்றார்.

பேரறிவாளன் சாந்தன் முருகன் ஆகியோரைக் காப்பாற்றக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கு உரைஞர்கள் கயல் என்ற அங்கயற்கண்ணி, சுஜாதா, வடிவாம்பாள் ஆகியோர், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில், கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அந்தப் போராட்டத்தில் பங்கு கொள்வதற்காக, காஞ்சி மக்கள் மன்றத்தினரும் வந்திருந்தனர். 

ஆனால், நான் வரவில்லை; நீங்கள் செல்லுங்கள் என்று கூறி அவர்களை அனுப்பி விட்டு, பெட்ரோல் கேனுடன், தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்றார் செங்கொடி. மூவரையும் விடுதலை செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பிய செங்கொடி, பெட்ரோலைத் தன் மேனியில் ஊற்றிக்கொண்டு செந்தழல் ஏகி இறந்தார்.

அப்போது, சேலம் தமிழ்ச் சங்க மேடையில் பேச ஆயத்தம் ஆகிக்கொண்டு இருந்தார் வைகோ. மேடையில் இருந்த வைகோவுக்கு இந்தச் செய்தி வந்தது. தன் பேச்சை நிறுத்திவிட்டு, செங்கொடியின் உடலைப் பார்க்க விரைந்தார் வைகோ.

அடுத்து வேலூர் சென்று கொண்டு இருந்த வைகோவுக்கு அலைபேசி அழைப்பு வந்தது. 

நாங்கள் மும்பைக்கு வந்து, மூத்த வழக்கு உரைஞர்களைச் சந்திக்க முயன்றோம். ஆனால், யாரையும் சந்திக்க முடியவில்லை என்றார், பேரறிவாளனுக்காக வாதாடிக் கொண்டு இருந்த வழக்கு உரைஞர்களுள் ஒருவர்.

இந்த நிலையில், ஒருவரால் மட்டுமே அவர்களைக் காப்பாற்ற முடியும் என்று நம்பினார் வைகோ. 

அவர்தான், உலகப் புகழ் பெற்ற வழக்கு உரைஞர் ராம் ஜெத்மலானி. 

அவர், வைகோவுக்கு நெருங்கிய நண்பர் என்பதால், உடனே அலைபேசியில் அவரைத் தொடர்புகொண்டார் வைகோ.  

ஆனால் அவர் கிடைக்கவில்லை. அவரது தில்லி தொடர்பு கொண்டார் வைகோ. 

ஜெத்மலானி, மும்பையில் இருப்பதாகச் சொன்னார்கள். அங்கே தொடர்பு கொண்டபோது, பெங்களூருவில் இருப்பதாகச் சொன்னார்கள். 

அதன்பிறகு, அவரது மகன் மூலமாக, ஜெத்மலானியைத் தொடர்பு கொண்டு பேசினார் வைகோ. வழக்கு விவரத்தைச் சொன்னார்.

வைகோ, எனக்கு நிறைய வழக்குகள் இருக்கின்றன. இப்போது இந்த வழக்கை எடுத்துக் கொள்ள முடியாது என்றார் ஜெத்மலானி. 

உலகத் தமிழர்கள் சார்பாக, உங்களை மன்றாடிக் கேட்கின்றேன் என்று கெஞ்சினார் வைகோ. 

சரி; என் நண்பர் வைகோவுக்கு வருகிறேன் என்று சொன்னார்.

இதன்பிறகுதான், வழக்கு சூடு பிடிக்கத் தொடங்கியது.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்து அவர் வாதாடியபோது,

“ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் முடிவுக்கு வந்திருந்தன. மூன்று பேரும் கொடுத்த கருணை மனுவை, 

பத்தே நாள்களில் ஆளுநர் தள்ளுபடி செய்து விட்டார்;

அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது;

ஆளுநரின் முடிவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், கருணை மனுவை மீண்டும் பரிசீலிக்க உத்தரவிட்டது;

எனவே, இரண்டாவது முறையாக, கருணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன; இதுகுறித்து, ஐந்து மாதங்களில் முடிவு எடுக்கப்பட்டது;

அதன்பிறகு மூவரும், 2000 ஆம் ஆண்டில், குடியரசுத் தலைவருக்குக் கருணை மனுக்கள் அனுப்பினர்;

அதன் மீது 11 ஆண்டுகள் எந்த முடிவும் எடுக்கவில்லை;

2011 ஆகஸ்ட் 27 அன்றுதான், நிராகரித்து  முடிவு எடுத்தார்; இதற்கு இடையில், மனுதாரர்கள் தரப்பில், ஐந்து முறை நினைவூட்டல் கடிதங்கள் எழுதப்பட்டன;

இவ்வளவு காலதாமதம் என்பது, சட்டத்திற்கும், நீதிக்கும் எதிரானது;

இந்திய அரசு அமைப்புச் சட்டம் பிரிவு 21 இன் கீழ் வழங்கப்பட்டு இருக்கின்ற உரிமைகளுக்கு எதிரானது; அந்தச் சட்டப் பிரிவின்படி, விரைந்து முடிவு எடுத்து அறிவித்து இருக்க வேண்டும்; 

ஆனால், குடியரசுத் தலைவர் 11 ஆண்டுகள் தாமதம் செய்தது, அந்தச் சட்டத்திற்கு எதிரானது. 

இந்த பதினோரு ஆண்டுகளும், மனுதாரர்கள் ஒவ்வொரு நாளும் தாங்க முடியாத வேதனையை அனுபவித்து இருக்கின்றனர்;

உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டு உள்ளனர்;

ஒரு குற்றத்திற்கு ஒரு தண்டனைதான்; 

அவர்கள் தூக்குத் தண்டனைக்கும் மேலான தண்டனையை அனுபவித்து விட்டார்கள்;

எனவே, கருணை மனுவை நிராகரித்து குடியரசுத் தலைவர் பிறப்பித்த ஆணையை, நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்” என

வாதிட்டார் ராம் ஜெத்மலானி.

அவரது அந்த வாதம், அதுவரை யாரும் சிந்திக்காத கோணத்தில் அமைந்தது; 

வரலாற்றுத் திருப்பமாகவும் ஆனது.

அவரது வாதங்களை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், 

தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை வழங்கி ஆணை பிறப்பித்தது.

அப்போது, சென்னை உயர்நீதிமன்ற வாயிலில் தனக்கு நன்றி சொன்னவர்களிடம், 

Not for Me. Thank Vaikoஎனக்கு அல்ல, வைகோவுக்கு நன்றி கூறுங்கள்;அவர்தான் என்னை இங்கு அழைத்து வந்தார் என்றார் ராம் ஜெத்மலானி.

அதன்பிறகு, அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

அங்கே விசாரணை நடைபெற்ற அனைத்து நாள்களிலும், ராம் ஜெத்மலானியும், வைகோவும் ஆஜரானார்கள். 

அங்கேயும் சிறப்பாக வாதாடிய ராம் ஜெத்மலானியை, தூக்குத் தண்டனையை ரத்து செய்து, 

வாழ்நாள் சிறைத்தண்டனையாகக் குறைக்க வைத்தார்.

அந்தத் தீர்ப்பு வெளியான நாளில், 

தில்லியில் ராம் ஜெத்மலானியின் வீட்டுக்குச் சென்று, அவருக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினார் வைகோ. அவரைச் சென்னைக்கு அழைத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராட்டு விழா ஏற்பாடு செய்தார் வைகோ. 

சென்னை வந்த ராம் ஜெத்மலானிக்கு எழுச்சியான வரவேற்பு அளித்தார்.

அந்த விழாவில் பேசிய வைகோ, 

இந்த வழக்கிற்காக, ராம் ஜெத்மலானி பணம் வாங்காமல் வாதாடினார் என்பதைச்சொன்னார். 

இந்தியாவின் மிகச்சிறந்த வழக்குஉரைஞர், மிக அதிகமாக சம்பளம் வாங்கும் வழக்கு உரைஞர், அவர் தங்களுக்காக ஆஜராவாரா என பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த வேளையில், வைகோவின் வேண்டுகோளை ஏற்று அவர் இந்த வழக்கில் வாதாடினார்; அவருக்குத் தமிழர்கள் நன்றிக்கடன் பட்டு இருக்கின்றார்கள் என்றார் வைகோ.

அந்த விழாவில், ராம் ஜெத்மலானி வைகோவைப் புகழ்ந்த வார்த்தைகள், 

பெரியார்தாசன் போன்றோரை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையச் செய்தது.

யாரும் காப்பாற்ற முடியாது: பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு தூக்குத் தண்டனை உறுதி என இந்தியாவே நம்பிக்கொண்டு இருந்தபோது, 

வைகோ என்ற ஒற்றை மனிதன் மேற்கொண்ட விடா முயற்சிகளாலும், துணிச்சலாலும், தூக்குத் தண்டனை தூக்கு எறியப்பட்டது.

அதன்பிறகும் வைகோ விடவில்லை. 

அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். 

நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும்போதெல்லாம், அந்தப் பேட்டிகளிலும் கூட, எழுவர் விடுதலை குறித்துப் பேசி வலியுறுத்தி வந்தார். 

அவர்கள் விடுதலைக்காகப் பல போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தார். 

அவர் பட்ட துயரங்களுக்குப் பரிசாகத்தான் பேரறிவாளனுக்கு விடுதலை கிடைத்து இருக்கின்றது. அவர்கள் தமிழர்கள் என்பதைத் தாண்டி, என் தம்பிகள் என்று மேடைகளில் பேசினார் வைகோ. 

நானும் அதே வேலூர் சிறையில் பொடா சிறைவாசியாக இருந்தபோது, ஒவ்வொரு நாளும் எனக்கு வருகின்ற பழங்களை, அவர்களுக்குத்தான் கொடுத்து வந்தேன். அவர்கள் சமைத்ததை, எனக்குக் கொண்டு வந்து கொடுப்பார்கள். 

சனிக்கிழமைகளில், சிறையில் இலக்கியக் கூட்டங்களும், பட்டிமன்றங்களும் நடத்தினோம் என்பதை எல்லாம் நினைவுகூர்ந்தார் வைகோ.

அத்துடன், எழுவருள் ஒருவரான ரவிச்சந்திரன், வைகோவின் தூரத்து உறவினர் என்பதால், 

வைகோ முயற்சிகள் எடுக்கின்றார் என்று கூற வாய்ப்பு இருப்பதைக் கருதி, 

அவரைச் சந்திக்கவே இல்லை என, வைகோவே கூறினார்.

இளைஞனாக இருந்தபோது தன் வீட்டுக்கு வந்து சென்ற பேரறிவாளன், 

31 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை பெற்று வந்தது வைகோவுக்குப் பெருமகிழ்ச்சி அளித்தது என்றாலும், எஞ்சிய ஆறு பேருக்கும் விடுதலை கிடைக்கும் வரை  அவர் ஓயப் போவது இல்லை. 

காணொளி உரை தட்டச்சு ..அருணகிரி

03.06.2022 நாளிட்ட சங்கொலி வார இதழில் 

முதல் பக்கம் வெளியீடு.

செ.அருள்செல்வன் எழுதியக் கட்டுரைக்கு மறுப்பு

திராவிட இயக்கத்தின் ஆங்கிலக் குரல் என்ற தலைப்பில் தமிழ் இந்துவில் கட்டுரை எழுதிய செ. அருள்செல்வன் அவர்களுக்குச் சில கேள்விகள்.

அண்ணாவின் அரசியல் குரு பி. பாலசுப்பிரமணியம் என்ற தலைப்பில் புத்தகம் எழுதி உள்ளீர்களே அண்ணா எப்போது பி.பா. என்னுடைய அரசியல் குரு என்று எழுதினார் ஆதாரம் காட்ட முடியுமா?

பெரியார் நீதிக்கட்சித் தலைவராக வந்த உடனே பி,பா.அச்சகத்தை அவரிடம் ஒப்படைத்து விட்டதாக எழுதி உள்ளீர்கள்.

பெரியார் நீதிக்கட்சித் தலைவராக தோர்ந்தெடுக்கப்பட்டது. 1938இல் திசம்பர் மாதம் 29,30,31 நாள்களில் சென்னையில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில். 

பி,பா, 1940 முதல் சண்டே அப்சர்வர் இதழில் பெரியாரைத் தாக்கி எழுதி வந்துள்ளரே எப்படி.?.

ராசாசி அவருக்கு சீனத்தூதுவர் பதவி அளித்ததை இவர் பெருந்தன்மையாக மறுத்துவிட்டார் என்று கூறியுள்ளீர்களே அது உண்மையா?

15.7.1950 முதல் இரசாசி நேரு அமைச்சரைவையில் இலாக்கா இல்லாத அமைச்சராக இருந்தாரே தேரியுமா?

வல்லபாய் பட்டேல் இறந்த பிறகுதான் உள்துறை அமைச்சர் பதவி வழக்கப்பட்டது தெரியுமா?

உள்துறை அமைச்சர் எப்படி வெளிநாட்டுத் தூதுவரை நிமிக்க முடியும்?

எல்லாவற்றுக்கும் மேலாக சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் தமிழர் கழகம் என்று பெயர் வைக்கக் கோரினார் என்று எழுதியுள்ளீர்களே அது பொய்யல்லவா?

பி.பா திராவிடர் கழகம் என்ற பெயர் வேண்டாம் பழைய நீதிக்கட்சி என்ற பெயரே வேண்டும் என்று தான் வாதாடியுள்ளார்.

பெரியார் தலைமையை வீழ்த்த வேண்டும் என்று  போரடி தோற்றுப் போன ஒருவருக்கு 1957 தேர்தலில் பெரியார் ஆதரிக்கவில்லை என்று எழுதுவது என்ன நியாயம்?.

குறிப்பு : அருள் செல்வன் அண்ணல் தங்கோவின் பெயரன் எனக்கு நண்பர் தான். பெ.ம.அவர்களோடு இயங்குகிறார்.

வாலாசா வல்லவன் பதிவு

வைகோ ஆற்றிய எழுத்து எனும் கருவறை என்னும் உரை

உலக மனித குல வரலாறு தெரிய வேண்டுமா?

இதோ வைகோ அவர்கள் 'எழுத்து எனும் கருவறை' என்னும் தலைப்பில் 7.8.2010 இல் ஆற்றிய உரையின் ஒரு பகுதி...

மனித குல வரலாற்றில், எழுத்துகள்தாம் தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

எழுத்து எனும் கருவறையில் பிறக்கின்ற உணர்வுகள் எரிமலையாக வெடிக்கின்றன.

அடக்குமுறையை, கொடுங்கோலர்கள் எதிர்ப்பதற்கு, பூட்டப்பட்ட விலங்குகளை உடைத்து எறிவதற்குப் பயன்பட்டன.

மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான் ; அவன் விலங்குகளால் பூட்டப் பட்டுக் கிடக்கிறான்.

‘Man is born free ; but he is everywhere in chains’

இந்த விலங்குகளை உடைப்பது எப்படி?

உடைத்த சம்மட்டிதான் எழுத்து என்கின்ற சம்மட்டி.

அந்தக் கருவறையில் வார்ப்பிக்கப்பட்ட ஆயுதங்கள், சர்வாதிகாரிகளின் கோட்டை, கொத்தளங்களைத் தகர்த்துத் தரைமட்டமாக ஆக்கி இருக்கின்றன.

சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் பற்றி இங்கே சொன்னார்கள். அந்தக் குரல் முழங்கிய இடம், பாரிஸ் பட்டணம்.  அந்த மூல முழக்கத்துக்குக் காரணமான வால்டேர், லூயி மன்னனை எதிர்த்தான் என்பதால், பாஸ்டைல் சிறையில் அடைக்கப்பட்டுக் கிடந்தான். அங்கேதான், சாக்ரடீசின் நூல்களைப் படித்தான். அதை நாடகமாக ஆக்கினான். சிறையிலேயே நூல்களைத் தீட்டினான்.

1778 ஆம் ஆண்டு மே 30 ஆம் நாள், வால்டேர் மறைந்தார். தலை சிறந்த சிந்தனையாளன் இயற்கை எய்தினான். ஆனால், அவன் எழுதிய எழுத்துகள், அவனது சிந்தனைக் கருவறையில் இருந்து புறப்பட்ட படைப்பு கள், அவன் எடுத்து வைத்த முழக்கங்கள், இவையயல்லாம் ஆயுதங் களாகி, மண் குடிசைகளை நிமிர வைத்தன. அடிமைகளின் கைகளில் வாள்களை ஏந்தச் செய்தன.

பாஸ்டைல் சிறைக்கூடம் தகர்த்து எறியப்பட்டது. வெட்டுப் பாறைகளில் தீர்ப்புத் தரப்பட்டது. உடைந்து நொறுங்கி சிதறிக் கிடக்கின்றது பாஸ்டைல் சிறைக்கூடம். ஜூலை 14. 11 ஆண்டுகள் கழித்து, எந்தக் கருவறையில் இருந்து ஆயுதங்களை பேனா முனையிலே தந்தானோ, எந்த பாஸ்டைல் சிறையில் அவன் வைக்கப்பட்டு இருந்தானோ, அந்த சிறை உடைத்து நொறுக்கப்பட்டு, குப்பை மேடு போலக் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.

வால்டேரின் கல்லறை எங்கே இருக்கிறது என்று தேடிக் கண்டுபிடித்துத் தோண்டினார்கள். வால்டேரின் சவப்பெட்டியை எடுத்து வந்தார்கள். பாஸ்டைல் சிறையின் மண் குவியல் கிடக்கிறது அல்லவா, அதற்கு மேலே கொண்டுவந்து வைத்தார்கள். ஆடிப்பாடி ஆனந்தக் களிநடனம் புரிந்தார்கள்.

வால்டேர் உயிரோடு இல்லை ; ஆனால், அவனது எழுத்து உயிரோடு இருந்தது. ஜீவனோடு இருந்தது. சர்வாதிகார மாளிகைகளைத் தரை மட்டமாக ஆக்கியது.

வரலாற்றின் விந்தையான காட்சியைப் பாருங்கள். அதே பாரிஸ் நகரில், பிரெஞ்சுப் புரட்சிக்கு மற்றொரு ஆயுதத்தை வார்ப்பித்துக் கொடுத்தவன் ரூசோ. 

சமுதாய ஒப்பந்தத்தைத் (Social Contract) தந்தவன். அந்த நூலை அவன் எழுதிய போது, எப்படி ஈரோடு என்ற பெயரைச் சேர்த்தே இந்தத் திருவிழாவுக்கு ஸ்டாலின் குணசேகரன் பெயர் சூட்டி இருக்கிறாரோ, அது போல, ரூசோ சென்ற இடமெல்லாம் ஜெனீவாவின் பெயரைச் சேர்த்தே சொல்லிக் கொண்டிருந்தான்.

அந்த ஜெனீவா வீதிகளில், அவனுடைய நூல் தீயிட்டுக் கொளுத்தப் பட்டது. அவமானப்படுத்தப்பட்டான். நாடு கடத்தப்பட்டான். துன்பங்களை அனுபவித்தான். 

ஆனால், அவன் மறைந்ததற்குப் பிறகு, பிரெஞ்சு நாட்டில் புரட்சிக் கொடி ஒளி வீசிய போது, எங்கோ ஒரு மூலையில், யாரும் கேள்வி கேட்பார் அற்ற முறையில் புதைக்கப்பட்டுக் கிடந்த ரூசோவின் கல்லறை யைத் தோண்டி எடுத்து, அவனுடைய சவப்பெட்டியைக் கொண்டுவந்து, மேன்மக்கள் புதைக்கப்பட்ட கல்லறைத் தோட்டத்துக்கு ஊர்வலமாகக் கொண்டுவந்து புதைத்தார்கள்.

எந்த சமுதாய ஒப்பந்தம் நூலைத் தீயிட்டுக் கொளுத்தினார்களோ, அந்த நூலை, அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து எடுத்துக் கொண்டு வந்தார்கள். ரூசோவை அழிக்க முடிந்தது. அவன் தந்த சமுதாய ஒப்பந்தத்தை அழிக்க முடியவில்லை.

இந்த நூல்களை எல்லாம் படித்தேன். அதனால், என் நாட்டின் அடிமை விலங்குகளை உடைத்து எறிய நான் முடிவு எடுத்தேன் என்று சொன்னவன் ஹோ-சி-மின். வியட்நாமின் விடுதலைக்குக் களம் கண்டவன்.

 ‘வால்டேர், ரூசோவின் நூல்கள்தாம், விடுதலை தாகத்தை எனக்குள் ஏற்படுத்தின’ என்று சொன்னான்.

அதைப் போலத்தான், சரித்திரத்தைத் திகைக்க வைத்த புரட்சியைச் சீனத்திலே நடத்திக் காட்டிய மாவோ, 6000 மைல்கள் அடவிகளில் நடந்தானே, மரண வளையத்தை உடைத்து எறிந்துவிட்டுச் சென்றானே, குடியானவர்களைத் திரட்டி ஆயுதம் ஏந்தச் செய்தானே, அவன் ஒரு தலை சிறந்த எழுத்தாளன். அவன் தூக்கிய ஆயுதங்கள் அந்தப் புரட்சியில் வெற்றியைத் தேடித் தந்தது என்று சொல்வதைவிட, இரவு வேளைகளில் எல்லாம் சிமினி விளக்கை வைத்து மாவோ எழுதிய எழுத்துகள்தாம் புரட்சியைத் தூண்டின என்று சொல்லலாம். 

மாவோவின் மற்றொரு முகம் பலர் அறியாதது. 100 மலர்கள் பூக்கட்டும் ; 100 சிந்தனைகள் மலரட்டும் என்பது போல, மாவோ ஒரு சிந்தனையாளன். அவன் தந்தவை, சிந்தனைப் பேரருவி. கன்பூ´யசின் நூல்களைப் படித்தவன்; சன்-யாட்-சென் கருத்து களைப் பார்த்தவன். மார்க்சின் கருத்துகளை உணர்ந்தவன். 

லெனின் வகுத்த பாதையை அறிந்தவன். அதுபோலத் தனக்கு என்று ஒரு பாதையை வகுத்துக் கொண்டு, அதிலே பயணித்தான். செங்கொடியை ஏற்றினான் சீனத்தில். அந்தப் புரட்சிக்கு, அவனுடைய எழுத்துகளும், நூல்களும் துணையாக நின்றன.

அதைப் போலத்தான், பல நூறாண்டுகளாக, விலங்குகளை விடக் கேவலமாக, அடிமைத் தளைகளில் பூட்டப்பட்டு, சிறுகச் சிறுகச் சித்திரவதை செய்யப்பட்டார்களோ நீக்ரோக்கள், அவர்களுக்கும் ஒரு விடியல் வந்தது என்று ஸ்டாலின் குணசேகரன் இங்கே குறிப்பிட்டாரே, அந்த விடியலுக்குக் கையயழுத்து இட்டவன் ஆபிரகாம் லிங்கன். 1863 ஆம் ஆண்டு, ஜனவரி முதல் நாளில் அவன் இட்ட ஒரு கையயழுத்து, அதை அவன் எழுதுகிற போது, ஒரு கணம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

அருகில் இருந்தவர்கள் திகைத்து, என்ன? என்று கேட்டார்கள். இன்று, என் வாழ்வில் மாபெரும் திருநாள். அடிமைமுறையை ஒழிப்பதற்கான பிரகடனத்தில் என் கையயழுத்தை இடப் போகிறேன். பலரோடு கைகுலுக்கிக் களைத்துப் போய் வந்து இருக்கிறேன். சற்றே நடுக்கம் ஏற்பட்டு விட்டாலும், எனது கையயழுத்தில் ஒரு நடுக்கம் தெரிந்தாலும், இந்தப் பிரகடனத்தை வெளியிடுவதில், ஆபிரகாம் லிங்கனுக்குத் தயக்கம் இருந்தது என்று வருங் காலத்தில் யாராவது என்னை விமர்சித்துவிடக் கூடாது என்பதற்காக, நான் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன் என்று லிங்கன் குறிப்பிட்டார்.

வெள்ளை மாளிகையின் தாழ்வாரத்தில் லிங்கன் நடந்து வருகின்ற போது, ஒரு பெண் அவரைச் சந்தித்தார்.

‘பெண்ணே நீ யார்?’ என்று கேட்டார் லிங்கன்

தன் பெயரை அந்தப் பெண் சொன்னார். ஹேரியட் பீச்சர் ஸ்டோவ் என்று சொன்னார்.

‘ஓ நீதானா அந்த பெண்மணி? அமெரிக்க உள்நாட்டு யுத்தத்துக்குக் காரணமான அந்தப் பெண்மணி?’ என்று கேட்டார்.

‘Uncle Toms Cabin’ என்ற ஒரு புத்தகத்தின் மூலமாக, கோடிக் கணக்கான இதயங்களை உலுக்கினார். அடிமை முறையை ஒழிப்பதற்கான அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு இந்த ஒரு நூல்தான் காரணம் என்று ஆபிரகாம் லிங்கன் சொல்லுகிறார்.

எழுத்துகள் எண்ணங்களை உருவாக்குகின்றன, புரட்சியைத் தூண்டுகின்றன. 27 ஆண்டுகள் சிறைக் கொட்டடியில் வாடி வதங்கியவர் மாமனிதர் நெல்சன் மண்டேலா. அவர் ஆயுதம் ஏந்திப் போராடியவர். 

ஆயுதப் போராட்டத்துக்காக ஆள் திரட்டியவர். அதை நியாயப்படுத்தி  நீதிமன்றத்திலே வாதிட்டவர். அவர் சொல்கிறார், ‘என் வாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது ஒரு புத்தகம். அதை எழுதியவர் ஜான் ரஸ்கின். புத்தகத்தின் பெயர் கடையனுக்கும் கடைத்தேற்றம்’.‘Unto the last’ எவ்வளவு வியப்பாக இருக்கிறது?

அதே மண்டேலாவின் மனங்கவர்ந்த தலைவர், போர்பந்தரில் பிறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. 

அண்மையில் அமெரிக்க அதிபர் பாரக் ஓபாமா சொல்லுகிறார், ‘காந்தியைப் பின்பற்றுங்கள்’ என்று. லிங்கனைத் தந்த அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிபர், ஆப்பிரிக்க நாடுகளில் உரையாற்றிவிட்டுச் செல்லுகிறார். அவர் காந்தியைப் பின்பற்றச் சொல்லு கிறார். (சங்கொலி, 20.08.2010).

காந்தியார்தான், ஆகஸ்ட் புரட்சிக்கு அறைகூவல் விடுத்தார். ஆம், நாளை விடிந்தால் ‘ஆகஸ்ட் புரட்சி’ வெடித்த நாள் (ஆகஸ்ட் 8, 1942). ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முழக்கம் கேட்ட நாள். இந்த ஆகஸ்ட் இயக்கத்தைத் தொடங்கிய போது, அண்ணல் காந்தியார் சொன்னார் : ‘என்னுடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையைத் தந்தது, ஜான் ரஸ்கினின், கடையனின் தேற்றம்’.

# விநாயகம் கந்தசாமி

Tuesday, May 17, 2022

தமிழ் நாடு அரசு வெளியிட்ட முக்கியமான தொல்லியல் முடிவுகள்

 தமிழ்நாடு அரசு  மூன்று முக்கியமான தொல்லியல் முடிவுகளை வெளியிட்டது.

- சிவகளை மாணிக்கம்

1. கீழடிக்கு அருகே அகரம் அகழாய்வுத் தளத்தில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை  பைட்டோலித் முறையில் பகுப்பாய்வு செய்ததில், அங்கே நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

 *2. சிவகளை வாழ்விடப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்ததில், அங்கே நீர் சென்றிருக்கக்கூடிய செங்கல் வடிகாலில் நன்னீர் சென்றிருப்பதும்* *தேக்கிவைக்கப்பட்ட நீர்நிலையிலிருந்து இந்த நீர் கொண்டு வரப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.* 

3. மூன்றாவதாக, தமிழ்நாட்டில்  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மயிலாடும்பாறை என்ற இடத்தில் ஈமச்சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் வாழ்விடப் பகுதியிலும் அகழாய்வுகள் மாநிலத் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டன.  இந்தத் தொல்லியல் மேட்டின் வாழ்விடப் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில், 104 செ.மீ. ஆழத்திலும் 130 செ.மீ. ஆழத்திலும் பல இரும்புப் பொருட்கள் கிடைத்தன. 

இந்த இரண்டு அடுக்குகளிலும் இருந்து பல கரிமப் பொருட்களும் கிடைத்தன. இதிலிருந்து இரண்டு கரிம மாதிரிகள் அமெரிக்காவிலுள்ள ப்ளோரிடா மாநிலத்தின் பீட்டா பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு AMS (Accelerator Mass Spectrometry) என்ற முறையில் காலக் கணக்கீடு செய்யப்பட்டு, அதன் முடிவுகள் தற்போது பெறப்பட்டுள்ளன.

அதன்படி, ஒரு கரிமப் பொருளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு. 1615 என்றும் மற்றொரு கரிமப் பொருளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு. 2172 என்றும் தெரியவந்துள்ளது.

இதன்மூலம், தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துவந்தது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாநில தொல்லியல் துறை தெரிவிக்கிறது.

இந்தியாவில் இதுவரை இரும்புக்காலப் பண்பாடு நிலவிய கங்கைச் சமவெளி, கர்நாடக மாநிலம் உள்ளிட்ட 28 இடங்களில் ஏஎம்எஸ் காலக் கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த 28 முடிவுகளிலும் தற்போது கிடைத்துள்ள மயிலாடும்பாறையில் கிடைத்துள்ள ஆண்டுக் கணிப்பே காலத்தால் முந்தியது என்கிறது மாநிலத் தொல்லியல் துறை.

விரிவான கட்டுரை: https://www.bbc.com/tamil/india-61395155

Monday, May 16, 2022

மணியரசனுக்கு கொளத்தூர் மணி பதில்

#அய்யா_பெ_மணியரசன்_அவர்களுக்கு,

#கழகத்_தலைவர்_தோழர்_கொளத்தூர்_மணி_அவர்களின்_பதில் !

கடந்த மே மூன்றாம் நாள், 

புலிகள் - திராவிட முன்னேற்ற கழகம் என்ற எதிரெதிர் விவாதங்கள் குறித்து, திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் இப்படிப்பட்ட தேவையற்ற தரம் தாழ்ந்த விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என்று கூறி விடுக்கப்பட்ட அறிக்கையின் சில வரிகள் மீதான கேள்விகளை எழுப்பி, தோழர் - மன்னியுங்கள் - அய்யா மணியரசன் அவர்கள், "கொளத்தூர் மணியும், சுப.வீ.யும் பிரபாகரன் எதிர்ப்பாளர்களை ஆதரிக்கலாமா?" என்ற தலைப்பில் நீண்டதொரு அறிக்கையை எழுதியுள்ளார்.

இறுதிப்பகுதியில் சில கேள்விகளையும் நம்மை நோக்கி வைத்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியை எதிர்க்கின்ற அளவுக்காவது மோடி ஆட்சியை, இதுவரை திமுக தலைவர் மு க ஸ்டாலின் தொடர்ச்சியாக ஆவேசத்தோடு எதிர்த்ததுண்டா?

அனைத்துக் கட்சி கூட்டத்தைப் புறக்கணித்தது. இதுதான் பாஜக எதிர்ப்பு கூட்டணியா?

தோழர் கொளத்தூர் மணி கட்சி, பாஜக மதவாத எதிர்ப்பு வேலைத் திட்டம் தயாரித்து அதை பரிசீலித்து ஏற்குமாறு ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்குமா?

போன்ற கேள்விகளோடு முடித்திருக்கிறார்.

எப்போதுமே அய்யா பெ. மணியரசன் அவர்கள் கேள்விகளை எழுப்பி விடுவார். நாம் பதில் சொன்னால், அதற்கு எந்த விளக்கமும் எழுதமாட்டார். மாறாக, திசை திருப்பிவிட்டு வேறு ஏதாவது ஒன்றைப் பேசி அதை மறக்கடிக்கச் செய்து விடுவார்.

அது குஷ்பூ - கற்பு பற்றிய விவாதத்தின் போதானாலும் அல்லது 2016 ஆம் ஆண்டில் ஒரு மாத காலம் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மணியரசன் பதில் சொல்லுவாரா? என்று கேட்டு தோழர் வாலாசா வல்லவன் அவர்கள் எழுப்பிய கேள்விகளானாலும் இதுவரை பதிலோ, விளக்கமோ சொன்னதில்லை. 

தமிழறிஞர்கள்தான் சுயமரியாதைத் திருமணத்தை - இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை - தமிழ்நாடு தமிழருக்கே போராட்டத்தைத் தொடங்கி வைத்தவர்கள் என்று பேசியதற்கு, நாம் ஒரு புத்தக வடிவில் பதில் சொல்லி இருந்தாலும், அது குறித்து மூச்சு கூட விட மாட்டார். ஆனால் அவ்வப்போது கேள்விகளை மட்டுமே எழுப்பி தனது தோழர்களை உற்சாகப்படுத்துவதில் மட்டும் மிக மிக உற்சாகமாக இருப்பார்.

நிற்க,

அக்கேள்விகளோடுகூட சில ஆய்வு முடிவுகளையும் அய்யா மணியரசன் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

"கொளத்தூர் மணி, சுப.வீ. போன்றவர்கள் நடைமுறையில் ஒன்றைக் கற்றுக் கொண்டார்கள்; பிரபாகரனை எவ்வளவு புகழ்ந்தாலும், ஈழத்தமிழர்களை எவ்வளவு ஆதரித்தாலும், அவர்களைத் திராவிட தத்துவத்திற்கும் திராவிட அரசியலுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியாது.

பிரபாகரன் என்ற படிமம் தமிழ் தேசியத்தின் வடிவமாகத்தான் காட்சியளிக்கிறது. எனவே பிரபாகரனைத் தூற்றுவோரை அரவணைக்க வேண்டும்" என்ற முடிவுக்குத் தோழர் கொளத்தூர் மணியும், தோழர் சுப.வீ.யும் வந்துவிட்டார்கள் என்று தெரிகிறது" 

என்பது ஓர் ஆய்வு முடிவு

அதைவிடவும், பெரியார் தமிழீழ விடுதலைக்கு ஆதரவு கொடுக்காமல் ஒதுங்கிக் கொள்வதற்காக, தந்திரமாக "நானே இந்தியாவுக்கு அடிமையாக இருக்கிறேன்; ஒரு அடிமை இன்னொரு அடிமையின் விடுதலைக்கு எப்படி உதவ முடியும்" என்று விடை கூறி, ஆதரவு தர மறுத்துள்ளார் என்பதையும் புலனாய்வு செய்து அறிவித்துள்ளார்.

முதல் வரியில் உள்ள 'உதவ முடியும்' என்ற சொல், அடுத்த வரியில் 'ஆதரவு தர மறுத்தார்' என்று மாற்றும் வல்லமை அய்யா மணியரசன் அவர்களைத் தவிர வேறு எவருக்கு வரும்?! 

அந்த காலகட்டத்தில் மட்டுமில்லை; அதற்குப் பின்னரும் ஒரு பத்து ஆண்டுகள் அகில இந்தியாவைத் தொடர்ந்து பேசி வந்த 'தமிழ்த்தேசியர்' 'அய்யா' மணியரசன் அவர்களுக்கு, வேறு சில கேள்விகளை இப்போது முன்வைக்க விரும்புகிறோம்

1) தமிழீழ விடுதலைக்கு ஆதரவுகூட தெரிவிக்காமல் தந்திரமாக ஒதுங்கிக் கொண்ட பெரியாரின் திடலுக்கு 1992 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை ஆணை பிறப்பிக்கப்பட்ட போதும், அவை ஒவ்வொரு முறையும் நீட்டித்த போதும் அந்த தடை ஆணைகளை, 'தமிழீழ விடுதலைப்புலிகள், மே/பா. பெரியார் திடல், சென்னை -7 ' என்ற முகவரிக்கு ஏன் அனுப்பப்படுகிறது?

2) 1983 ஆம் ஆண்டு எதற்காக திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் மதிப்புக்குரிய கி. வீரமணி அவர்கள் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில், அனைத்து கட்சி, தரப்பு, உணர்வாளர்களையும் ஒன்றுதிரட்டி "தமிழீழ விடுதலை மாநாட்டை" இரண்டு நாட்கள் மதுரையில் எப்படி நடத்தினார்?

அந்த மாநாட்டுக்கு முன்னேற்பாடாக தமிழகத்தின் 6 முனைகளிலிருந்து திராவிடர் கழகத் தோழர்களைக் கொண்ட பரப்புரை குழுக்கள் 10 நாட்கள் தமிழகம் முழுதும் முழுதும் நடந்தே பரப்புரையை ஏன் நடத்த வைத்தார்?

3) திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள், எவ்வாறு புலிகளுக்குப் பயிற்சிப் பாசறை க்கான இடங்களை அளித்தும், நிதி திரட்டியும், ஆயுத உற்பத்திக்கு ஆன ஏற்பாடுகளை செய்து கொடுத்தும், தமிழகமெங்கும் ஈழவிடுதலை கண்காட்சிகளையும் ஏன் நடத்தினார்கள்? 

ஜெயவர்த்தனே தில்லிக்கு வந்தபோதும், பெங்களூர் வந்தபோதும் ஏன் போராட்டம் நடத்தினார்கள்?

ஆகிய கேள்விகளுக்கும் விடையளித்து இவை குறித்த ஆய்வு முடிவுகளையும் விரைவில் அறிவிப்பார் என்றும் ஆவலுடன் எதிர் பார்ப்போமாக!

ஒருவேளை, தமிழ்த் தேசியத்தின் மீது அவ்வளவு வெறுப்புடன் இருந்த - தமிழீழ விடுதலைக்கு ஆதரவு தெரிவிக்காமல் தந்திரமாக ஒதுங்கிக் கொண்ட - பெரியார் அறிவித்ததை போல 

"தமிழ்நாடு தமிழருக்கே" என்று அறிவித்துவிட்டும்,

அவரது 'விடுதலை' ஏட்டில் செய்ததைப் போல - 1956-ஆம் ஆண்டிலிருந்து 1976ஆம் ஆண்டு அவசரகால நிலை காலத்தில் தடை செய்கிறவரை ஏட்டின் தலைப்பில் வெளியிட்டு வந்ததைப் போல "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற முழக்கத்தை தன்னுடைய 'தமிழ்தேசிய கண்ணோட்டத்'திலும் அட்டையிலேயே வெளியிட்டுவிட்டும், -

தமிழ்நாடு நீங்கலான இந்திய வரைபடத்தை எரித்துவிட்டும், - இந்தி எதிர்ப்புக்காக இந்திய தேசியக் கொடியை எரித்து விட்டும்,

அந்த ஆய்வு முடிவுகளையும் கேள்விக்கான விடைகளையும் அறிவிப்பார் என்ற உறுதியான நம்பிக்கையோடு, இப்போதைக்கு இந்த அறிக்கையை நிறைவு செய்கிறேன்.

அய்யா மணியரசன் அவர்களுடைய ஆய்வு முடிவுகள், விடை ஆகியவை வந்தாலும் வராவிட்டாலும் ஊரடங்கு காலம் முடிந்ததும், எங்களுடைய ஏடான 'புரட்சிப் பெரியார் முழக்கத்'தின் வழியாக பிறவற்றையும் எழுதுவோம் என்பதைக் கூறி இப்போதைக்கு முடித்துக் கொள்கிறேன்

#கொளத்தூர்_மணி,

#தலைவர்,

#திராவிடர்_விடுதலைக்_கழகம்

15.05.2020