Wednesday, August 31, 2022

வ.உ.சி. அரசியல் பெருஞ்சொல் - 2

 வ.உ.சிதம்பரனாரின் அரசியல் பெருஞ்சொல் - 2

சுய அரசாட்சி

நல்லாண்மை யயன்ப தொருவற்குத்          தான்பிறந்த

இல்லாண்மை யாக்கிக் கொளல்

என்று நமது முன்னோர் கூறியுள்ளார். 

அதாவது, ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது, தான் பிறந்த தேசத்தின் ஆள்கையைத் தன்னது ஆக்கிக் கொள்ளுதல். சுய அரசாட்சி அடைதலே நமது நோக்கம் என்று நமது காங்கிரஸ் தலைவர்களும் கூறியுள்ளார்கள்.

ஆனால் ‘சுய அரசாட்சி’ என்றால் என்ன? சுய அரசாட்சி எது போலிருக்கும்? என்று அறிவாளிகளும் அடிக்கடி வினவக் கேட்டிருக்கிறேன். அவர் அதனை அறியாமல் வினவுகின்றனரா? அல்லது அறிந்திருந்தும் ஏனையோர் அறிந்திருக்கின்றனரா என்று தெரிந்து கொள்வதற்காக வினவுகின்றனரா? என்பது தெரியவில்லை. 

அது யாதாயினும் ஆகுக. சுய அரசாட்சியைப் பற்றி யான் அறிந்துள்ள வற்றைச் சொல்லுகின்றேன். 

சுய அரசாட்சி நான்கு வகைப்படும்.

1. ஒரு தேசம், தனது மகாஜனங்களால் (தங்கள் குடியுரிமைகளைக் காக்கத் தக்கவர்களென்று) தேர்தெடுக்கப்பெற்ற பிரதிநிதிகளின் ஆலோசனை முடிவுப்படி அம் மகாஜனங்களால் அல்லது, அப்பிரதிநிதிகளால், (தேச அரசாட்சியை நடாத்துவதற்குத் தகுதி வாய்ந்தவன் என்று) தேர்ந்தெடுக்கப் பெற்ற தலைவன் ஒருவனால் ஆளப்படுதல். (‘மகா ஜனங்களால்’ என்பது அவர்களிற் ‘பெரும்பாலார்களால்’ எனவும், ‘பிரதிநிதிகளின்’ என்பது அவர்களிற் ‘பெரும்பாலார்களின்’ எனவும் பொருள்படும். ஆண்பால் பெண்பாலையும் குறிக்கும்). 

இவ்வரசு தன் தேசத்து அகக் காப்பு, புறக்காப்பு, முதலிய காரியங்களிலும் பிற தேசங்களை நட்பு, பகை, நொதுமல் என்னும் மூன்றில் ஒன்றாகக் கொள்ளுதல், முதலிய காரியங்களிலும் பூரண சுதந்திரமும் சவாதீனமுமுடையது. இவ்வரசாட்சி பிரான்ஸ் தேசத்திலும், அமெரிக்கா தேசத்திலும், தற்காலம் நடைபெறுகின்ற அரசாட்சி போன்றது. இதனைக் ‘குடியாட்சி’ (Republic Government) என்று கூறுவர் அறிஞர்.

2. ஒரு தேசம், தனது மகாஜனங்களால் (தங்கள் குடியுரிமைகளைக் காக்கத்தக்கவர்களென்று) தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் ஆலோசனை முடிவுப்படி தன்னை நெடுங்காலம் ஆண்டுவந்த, அல்லது ஆளவந்த அரசன் ஒருவனால் ஆளப்படுதல். 

இவ்வரசும் தன் தேசத்து அகக்காப்பு, புறக்காப்பு, முதலிய காரியங்களிலும், பிற தேசங்களை நட்பு, பகை, நொதுமல் (நொதும்பல் -விருப்பு வெறுப்பின்மை) என்னும் மூன்றில் ஒன்றாகக் கொள்ளுதல் முதலிய காரியங்களிலும் பூரண சுதந்திரமும், சுவாதீன முடையது. இவ்வரசாட்சி இங்கிலாந்து தேசத்திலும், ஜப்பான் தேசத்திலும் தற்காலம் நடைபெறும் அரசாட்சி போன்றது. இதனை ‘கோனாட்சி’ (Monarchical Government)  என்பர் அறிஞர்.

3. ஒரு தேசம், தனது மகாஜனங்களால் (தங்கள் குடியுரிமைகளைக் காக்கத் தக்கவர்களென்று) தேர்ந்தெடுக்கப்பெற்ற பிரதிநிதிகள் ஆலோசனை முடிவுப்படி அம்மகாஜன மக்களால், அல்லது பிரதிநிதிகளால் (தேச அரசாட்சி நடத்துவதற்குத் தகுதி வாய்ந்தவனென்று) தேர்ந்தெடுக்கப்பெற்ற தலைவன் ஒருவனால் ஆளப்படுதல். 

ஆனால் இவ்வரசு தன் தேசத்து அகக்காப்பு, புறக்காப்பு முதலிய காரியங்களில் மாத்திரம் பூரண சுதந்திரமும் சுவாதீனமும் உடையது. 

பிறதேசங்களை நட்பாகவோ, பகையாகவோ, நொதுமலாகவோ கொள்ளுதல், முதலிய காரியங்களில் மேற்கூறிய அரசுகளில் முதலாவது வகை அரசைச் சார்ந்தது. அதன் ஆணைப்படி நடக்கக் கட்டுப்பட்டது. 

இவ்வகையான அரசாட்சி தற்காலம் எந்த தேசத்திலாவது நடைபெறுவதாகத் தெரியவில்லை. 

இதனைச் ‘சார்ந்த குடியாட்சி (Dependent Republican Government) என்பர் அறிஞர்.  

4. ஒரு தேசம், தனது மகாஜனங்களால் (தங்கள் குடியுரிமைகளைக் காக்க தக்கவர்களென்று) தேர்ந்தெடுக்கப்பெற்ற பிரதிநிதிகளின் ஆலோசனை முடிவுப்படி அத்தேசத்தை நெடுங்காலம் ஆண்டு வந்த, ஆள வந்த, அரசன் ஒருவனால் ஆளப்படுதல்.

ஆனால் இவ்வரசு தன் தேசத்து அகக்காப்பு, புறக்காப்பு முதலிய காரியங்களில் மாத்திரம் பூரண சுதந்திரமும், சுவாதீனமுடையது. பிற தேசங்களை நட்பாகவோ, பகையாகவோ, நொது மலாகவோ கொள்ளுதல், முதலிய காரியங்களில் மேற்கூறிய மூவகை அரசு களில் இரண்டாவது வகை அரசைச் சார்ந்து அதன் ஆணைப்படி நடக்கக் கட்டுப்பட்டது. 

இவ்வரசாட்சி ஆஸ்திரேலியா தேசத்திலும், கானடா தேசத்திலும், தென் ஆப்பிரிக்காத் தேசத்திலும் தற்காலம் நடைபெறும் அரசாட்சி போன்றது. 

இதனைச் ‘சார்ந்த கோனாட்சி’(Dependent Monarchical Government) என்பர் அறிஞர். முந்திய அரசு இரண்டும் ‘பேரரசு‘’ எனவும், பிந்திய அரசு இரண்டும் சிற்றரசு எனவும் வழங்கப்படும்.

மகாஜனங்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற பிரதிநிதிகளின் ஆலோசனை முடிவுப்படி நடைபெறா ஆட்சிகள் ‘அரசாட்சி’ என்று சொல்லப்படும் தகுதியுடையன அல்ல. ஆதலால் அவற்றின் கூறுபாடுகள் முதலியவற்றைப் பற்றி இங்குப் பேச வேண்டிய அவசியம் இல்லை.

நாம் விரும்பும் சுய அரசாட்சி

மேற்கூறிய நான்கு வகையான சுய அரசாட்சிகளுள் முன்னைய மூன்றில் ஒன்றை நாம் அடைய வேண்டுமென்று நம் தேசத்தாரில் ஒருவன் சொல்வானானால், அதுவே இந்தியன் பினல்கோடு 124பி பிரிவுப்படி குற்றமாகுமோ என்று யான் அஞ்சுகின்றேன். ஆதலால், அவற்றைப் பற்றி யான் ஒன்றும் பேசாது அம்மூவகை சுய அரசாட்சிகளும் நமக்கு ஆகாதவை என்று தள்ளிவிடுகின்றேன். 

ஆகவே நாம் அடைய விரும்பும் சுய அரசாட்சி மேலே நான்காவது வகையாகக் கூறப்பட்ட சுயஅரசாட்சியே. 

அவ்வரசாட்சி தான் நம் தேசத்தின் தற்கால நிலைமைக்கும் பொருத்தமானதென்று கொள்ளத் தக்கது. 

நம் தேச பக்தர்களிற் சிலர் மேற்கூறிய நான்கு வகை சுய அரசாட்சிகளில் முதலாவது வகை சுய அரசாட்சி ஒன்றே நாம் வேண்டுவது எனக் கூறக் கேட்டிருக்கிறேன். 

அக்கூற்றுத் தற்கொல்லியும் பயனிற் சொல்லும் ஆமென்று யான் கருதுகின்றேன். 

ஆகவே, நாம் அடைய விரும்பும் சுய அரசாட்சி நமது தேசத்து அகப்புறக் காப்புகள் முதலிய காரியங்களில் நாம் பூரண சுதந்திரமும் சுவாதீனமும் உடையவராயும் பிற தேசங்களை நட்பு, பகை, நொதுமல் என்ற மூன்றில் ஒன்றாகக் கொள்ளுதல் முதலிய காரியங்களில் பெரிய பிரிட்டன்  (Great Britain) தேசத்து அரசைச் சார்ந்து அதன் ஆணைப்படி ஒழுகும் கடப்பாடு உடையவராயும் இருக்கும் சுய அரசாட்சியே. 

இத்தகைய அரசாட்சியைச் ‘சுய அரசாட்சி’ எனச் சொல்லலாமோ? எனின், சொல்லலாம். என்னை? 

நமது தேசத்து அகப்புறக்காப்பு முதலிய காரியங்களிலெல்லாம் நாம் பூரண சுதந்திரமும் சுவாதீனமும் உடையவராகலான்.

இச்சுய அரசாட்சிக்கே நாம் தகுதியுடையவரல்லர் என்று நம்மை ஆள்வோரும் நம் கிழவர் சிலரும் கூறுகின்றனர்.

அதற்கு அவர்கள் கூறும் காரணங்களிற் சில வருமாறு:

1. இச்சுய அரசாட்சிக்கு நாம் உண்மையில் தகுதியுடையோராயிருப்பின், அவரவர் தகுதிக்குத் தக்க ஸ்தாபனங்களை அவரவர்க்கு அளிக்கும் சர்வ நியாயாதிபதியான எல்லாம் வல்ல இறைவன் நம்மை நமது தற்கால சுதந்திர மற்ற நிலைமையில் வைத்திருப்பாரா?

2. நம்மிற் பெரும்பாலார் (Majority) பிறர் பொருள்களையும் உரிமை களையும் அபகரிக்க விரும்பாத நடுநிலைமையிலுள்ளரா யிருக்கினறரா? எளியோரை வலியோர் வருத்துங்கால், எளியோருக்கு உதவியாய் வலியோரை எதிர்க்க நம்மிற் பெரும்பாலார் சித்தமாயிருக்கின்றனரா? மதங்களை அழிப்பதிலும், அறங்களை வளர்ப்பதிலும், நம்மிற் பெரும்பாலார் விருப்ப முடையோரா யிருக்கின்றனரா? 

பெருந்தொகையினராயுள்ள ஜாதியார்கள் சிறுதொகையினராயுள்ள ஜாதியார்களைத் தாழ்த்தி, அவமதித்து, வருத்தும் சுபாவத்தை நம்மிற் பெரும்பாலார் விட்டுவிட்டனரா?

3. நாம் சுய அரசாட்சியை அடைவோமாயின், நம் தேசத்தில் சிறு தொகையினராயுள்ள ஜாதியார்களுடையவும் நம்மால் அநியாயமாகத் தாழ்த்தப்பட்டிருக்கிற ஜாதியார்களுடையவும் உரிமைகளையும் சுதந்திரங்களையும் நாம் கவர முற்படோம் என்று அந்த ஜாதியார்கள் நம்புவதற்கு நாம் என்ன செய்திருக்கிறோம்? 

அந்த நம்பிக்கை அவர்களுக்குப் பூரணமாக உண்டாலன்றி, அவர்கள் நம்முடன் சேர்ந்து சுய அரசாட்சி அடைவதற்கு ஒத்துழைப்பார்களா? அவ்விரு வகையான ஜாதியார்கள் என்னென்ன உரிமைகளையும் சுதந்திரங்களையும் அடைய விரும்புகின்றவர்கள் என்றாவது நாம் தெரிந்துள்ளோமா?

4. நம் தேசத்திலுள்ள பல மதஸ்தர்களும் தத்தம் மதச் செயல்கள் பிற மதஸ்தர்களைப் பாதிக்காதவாறு தத்தம் மதக் கோட்பாடுகளைத் திருத்திக் கொண்டனரா? 

இம்மதக் கோட்பாடுகள் மேற்சொல்லியபடி திருத்தப்படாத வரையில் நம்மவர்களுள் நெடுங்காலமாக நடந்து வருகின்ற மதச் சச்சரவு களும் சண்டைகளும் கொலைகளும் நீங்குமா? அவை நீங்காத வரையில் நமக்குள் ஒற்றுமை ஏற்படுமா? அவ்வொற்றுமை ஏற்படாத வரையில் நமக்குச் சுய அரசாட்சி வேண்டுமென்று நம்மை ஆள்வோரிடம் இரக்கவாவது நாம் அருகரா?

 இவர்கள் இவ்வாறு சொல்வதையும் நமது தற்கால நிலைமை யையும் கவனிக்குங்கால், நாம் விரும்பத்தக்கது மேற்கூறிய நான்காவது வகைச் சுய அரசாட்சியேயாம்.

Tuesday, August 30, 2022

வ.உ.சி.தலைமையில் 3வது அரசியல் மாநாடு

 வ.உ.சிதம்பரனார் 151 ஆம் பிறந்த நாள் (5.9.1972).....

1927நவம்பர் மாதம் 5,6 தேதிகளில் 

திருவாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்ற சேலம் 3 வது அரசியல் மாநாடு

சேலம் ஜில்லா 3-வது அரசியல் மாநாட்டின் தலைவர் அவர்களையும் மற்றைய அரசியல் தலைவர்களையும் பிரதிநிதிகளையும் சிறப்புடன் வரவேற்பதற்காக வேண்டிய ஏற்பாடுகள் 2 நாள் முன்னரிருந்தே நடை பெற்றது. நகர் முழுவதும் வளைவுகளாலும் தோரணங்களாலும் அலங்கார மாய் சிங்காரிக்கப்பட்டிருந்தது. மகாநாட்டுத் தலைவர் திரு.வி.ஓ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் காலை 9 மணிக்கு சேலம் டவுன் செவ்வாய்ப் பேட்டை தேர் நிலையிலிருந்து முதல் அக்கிரகாரம் நடை வீதி வழியாய் பாண்டு வாத்தியங் களுடன் ஊர்வலமாய் அழைத்து வரப்பட்டது. 

தலைவர் திரு. சிதம்பரம் பிள்ளை அவர்களும் வரவேற்புக் கமிட்டித் தலைவர் திரு. தம்மண்ண செட்டியார் அவர்களும் முன்னணியிலும் ஈரோடு குடிஅரசு ஆசிரியர் திரு. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள் திரு. ஆர்.கே. ­ண்முகம் செட்டியார் அவர்கள் டாக்டர் வரதராஜலு நாயுடு அவர்கள் பின்னணியிலும் இரண்டு மோட்டார்களில் வரவும், முன்னால் மாணவர்கள் உள்பட பல வாலிப தொண்டர்கள் அணிவகுத்து வழி விலக்கவும், பிரபலஸ்தர் கள் புடைசூழவும், ஊர்வலம் சுமார் 3000 ஜனங்களடங்கிய பெருங் கோஷ்டி யாய் ‘ஜே’ கோ­ங்களுடன் புறப்பட்டு வந்தது. ஊர்வலம் 11 மணி வரையில் நடைபெற்றது. பின்னர் தலைவர்கள் ஜாகைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்கள்.

எலெக்டிரி தியேட்டரில் மகாநாடு ஆரம்பம்

மகாநாடு பகல் 2 மணிக்கு ஆரம்பம் என்றிருந்தாலும் மகாநாடு ஆரம்பமாக மாலை 3 மணி ஆகிவிட்டது. 

தலைவர் வருவதற்கு முன்னர் கொட்டகையில் பிரதிநிதிகளும் விசிட்டர்களும் நிறைந்து விட்டார்கள்.

 தலைவர் கரகோ­த்துடன் வரவேற்கப்பட்டு ஆசனத்தி லமர்ந்தார். மேடையில் பல இடங்களிலிருந்தும் வந்த வரவேற்புக் கமிட்டி அங்கத்தினர்களும் தலைவர் களும் நிறைந்திருந்தார்கள். அவர்களில் கீழ்க்கண்டவர்கள் முக்கியஸ்தர்கள்: திரு. பிஞ்சல சுப்பிரமணிய செட்டியார், ராவ் சாகிப் எல்லப்ப செட்டியார், எம்.எல்.சி., திரு.ஆர்.கே.­ண்முகம் செட்டியார், எம்.எல்.ஏ., திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராஜூலு நாயுடு, திரு. தெண்டபாணி பிள்ளை, திருவாளர்கள் டி.எஸ். ஜெகராஜ் பி.எ.பி.எல்., எம்.சாமிநாதய்யர் பி.ஏ., பி.எல்., கே. சிவசங்கர முதலியார், டாக்டர் ரங்கய்ய நாயுடு, பி.இராஜமாணிக்கம் பண்டாரம், டி.வி. பங்காரு செட்டியார், எ.கே. சுந்தரய்ய செட்டியார், கே.எஸ். அருணாஜலம் செட்டியார், எஸ். பெரியசாமி முதலியார், என்.கே. சடகோப முதலியார், நாமக்கல் உஸ்மான் சாயுபு, புரொபசர் ராமமூர்த்தி, ஆத்தூர் அமீத் சாயபு, ஏ. வையாபுரி பண்டாராம், பூபதி கந்தசாமி பிள்ளை, எஸ்.பி. பொன்னுசாமி முதலியார், கே. மாரிமுத்து முதலியார், பாப்பாபட்டி சின்னமுத்து முதலியார், ராமசந்திர நாயுடு, பி. ஸ்ரீராமலு செட்டியார், பி.எ.பி.எல்., சித்தி ராஜு, கோவிந்தசாமி நாயுடு. சிவப் பெருமாள் பிள்ளை, ஒபிளி செட்டியார், கதிர் செட்டியார், ஜெகநாத செட்டியார், அங்கமுத்து முதலியார், ஏத்தாபூர் நாராயண செட்டியார், பி. சிவராவ் எம்.எஸ்.சி. முதலிய முக்கியஸ்தர்கள் வந்தார்கள்.

முனிசிபல் சேர்மனும் வரவேற்பு கமிட்டித் தலைவருமான எஸ். தம்மண்ண செட்டியார் பிரதிநிதிகளைவரவேற்று தம் பிரசங்கத்தை வாசித்தார். மகா நாட்டுக்கு வரமுடியாதவர்கள் அனுப்பிய தந்திகளை வாசித்தார்.

பின்னர் டாக்டர் நாயுடு அவர்கள்மகாநாட்டுக்குத் தலைமை வகிக்க திரு. வி.ஓ. சிதம்பரம் பிள்ளை அவர்களை பிரேரேபிக்க ராவ்சாகிப் எல்லப்ப செட்டியார் ஆமோதிக்க திருவாளர்கள் வெங்கடாஜல ரெட்டியார் நாமக்கல் உஸ்மான் சாயுபு, எம். சாமிநாத அய்யர், ஆர்.கே. சண்முக செட்டியார், ஈ.வெ. ராமசாமி நாயக்கர் இவர்கள் ஆதரிக்க தலைவர் அவர்கள் கரகோ­த்தினி டையே பதவியையேற்று தமது அக்கிராசனப் பிரசங்கத்தை வாசித்தார்.

குறிப்பு : மற்றைய நடவடிக்கைகளும் அக்கிராசனப் பிரசங்கமும் அடுத்த வாரம் வெளிவரும்.

நிறைவேறிய தீர்மானங்கள்

1. இந்திய சமூக வளர்ச்சிக்கும் சுயராஜ்யம் விரைவில் பெறுவதற்கும், ஜாதி வித்தியாசம் முதலிய சமூக ஊழல்களை ஒழிப்பதில் காங்கிரஸ் தலையிட வேண்டியது அவசியமாயிருப்பதால், அதற்கு அநுகூலமாக காங்கிரஸ் விதிகளை அமைத்து சமூகச் சீர்த்திருத்தம் செய்ய முயலுவதாக காங்கிரஸ் மெம்பர்கள் வாக்குறுதியளிக்குமாறு செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு அபிப்பிராயப்படுகிறது.

2. வரப்போகும் ராயல் கமி­ன் பார்லிமெண்டு மெம்பர்களடங்கிய ஒரு கமி­னாக இருக்குமென்று கேட்டு இந்த மகாநாடு வருந்துவதுடன் போது மானஅளவுக்கு இந்தியப் பிரதிநிதிகள் கமி­னில் இல்லாவிட்டால் தேசத் தாருக்கு கமி­ன் திருப்திகரமாயிருக்காதென்றும் இம்மகாநாடு தீர்மானிக் கிறது.

3. அ) கெளகத்தி காங்கிரஸ் கட்டளைக்கு விரோதமாக சட்டசபை மெம்பர் களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியார் உத்தரவுகள் அனுப்பியதை இந்த மகாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆ) சென்னை காங்கிரஸ் கட்சி மெம்பர்களில் சிலர் மந்திரி பதவி ஒப்புக் கொள்வதற்கு அனுகூலமுடையவராகக் காணப்படுவதால், காங்கிரஸ் கட்சியார் உத்தியோகம் ஒப்புக்கொள்வது தேர்தல் வாக்குறுதிக்கு விரோதமான தென்றும், அடுத்த காங்கிரஸ் உத்தியேகம் ஒப்புக்கொள்ளும்படி தீர்மானம் செய்தால் உத்தியோகம் ஒப்புக் கொள்ள விரும்பும் சட்டசபை மெம்பர்களை ராஜிநாமா செய்யச் சொல்லி மீண்டும் தேர்தலுக்கு நிற்குமாறு தூண்ட வேண்டுமென்றும் இம்மகாநாடு தீர்மானிக்கிறது.

4. ‘காமன் வெல்த்து ஆப் இந்தியா’ மசோதாவைப் பரிசீலனை செய்து அது சர்வஜன சம்மதம் பெற ஏதேனும் திருத்தங்களோ மாற்றங்களோ தேவை யிருந்தால் அவைகளைக் குறிப்பிடுமாறு காங்கிரஸ் ஒரு கமிட்டியை நியமிக்கும் படி இம்மகாநாடு தீர்மானம் செய்கிறது. இந்த மசோதா வி­யத்தில் டாக்டர் பெசண்டு எடுத்துக் கொண்ட அரிய முயற்சிகளை இம்மகாநாடு மிகவும் பாராட்டுகிறது.

5.அ) இந்த நாட்டிலுள்ள ஜனங்களை சமூக வி­யங்களில் அடிமையாக வைப்பதற்குக் காரணமாயிருக்கும் வருணாசிரம தர்மத்தைப் பற்றி மகாத்மா தென்னாட்டுப் பிரயாண காலத்தில் பிரசாரம் செய்ததற்காக இம்மகாநாடு வருந்துகிறது.

ஆ) தீண்டாமை யயாழித்தல், பிறப்பினால் உயர்வு தாழ்வுண்டென்னும் உணர்ச்சியை நீக்கல், முதலியவைகளுக்காக எல்லா இந்துக்களும் பிரசாரம் செய்து சுயமரியாதை உணர்ச்சியை விருத்தி செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு கேட்டுக் கொள்கிறது. தேவையானால் எங்கும் சத்தியாக்கிரக ஆசிர மங்கள் ஸ்தாபனம் செய்ய வேண்டுமென்றும் இந்த மகாநாடு அபிப்பிராயப் படுகிறது.

6. ஆலயங்களில் பூசை செய்யும் உரிமையை சிலர் கைப்பற்றி எல்லா ஜனங்களுக்கும் அவ்வி­யத்திலுள்ள பிறப்புரிமையைப பிடுங்கிக் கொண்ட தினால் இந்த அக்கிரமத்தை நிறுத்தவும் ஆலயத்தில் பூஜை செய்யவும் அதற்காகக் கோயிலுக்குள் போகவும் ஒவ்வொரு இந்துவும் உரிமை பெறச் செய்யவும் இந்துத் தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு தீர்மானிக்கிறது.

7. தமிழ்நடு மாகாண காங்கிரஸ் கமிட்டியார் கங்காணி சபைகள் ஸ்தாபித்து காங்கிரஸ் ஆட்கள் சேர முடியாமல தடை செய்திருப்பதையும் ஒரு கட்சியார் தம் கட்சியாருக்கு மட்டும் ஜில்லா தாலுகா கமிட்டிகளில் ஆதிக்க முண்டாகுமாறு சூழ்ச்சி செய்து வருவதையும் இம்மகாநாடு கண்டிக்கிறது.

8. வகுப்பு வேற்றுமைகளும் ஜாதி வித்தியாசங்களும் இருக்கும்வரை எல்லா சமூகத்தாருக்கும் உத்தியோகமும் மற்றும் பதவிகளும் சமமாகக் கிடைக்கும்படி தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு தீர்மானிக்கிறது.

9. சேலம் ஜில்லாவில் ஒரு பகுதிக்கு மேட்டூர் தேக்கத்திலிருந்து நீர்ப்பாசனத் துக்காக தண்ணீர் விட்டுக் கொடுக்க வேண்டுமென்று இந்த மகாநாடு தீர்மானிக்கிறது.

10. கிராமங்களில் அதிகப்படியான பாடசாலைகளும் சித்த வைத்திய சாலைகளும் ஸ்தாபிக்க வேண்டியதும் எல்லா ஆரம்பப் பள்ளிக்கூடங்களிலும் ஆதிதிராவிடக் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்பிக்க வேண்டியதும் மிகவும் அவசியமென்று இந்த மகாநாடு சர்க்காருக்கு வற்புறுத்துகின்றது. (குடிஅரசு, 18.11.1927)

அரசியல் பெருஞ்சொல் - வ.உ.சி.உரை-1

சேலம் அரசியல் மகாநாட்டில் வ.உ.சிதம்பரனார், 'அரசியல் பெருஞ்சொல்' என்ற தலைப்பில் ஆற்றிய தலைமை உரை...

எனது பெருஞ்சொல்

மூன்றாவது அரசியல் மகாநாடு...

கடவுள் வணக்கம்

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதெற்றுத் தான்முந் துறும்.

என்றபடி எளிமை யுற்றிருக்கா நின்ற எனது நாட்டினை வலிமைப் படுத்துவேன் என்று ஊக்கும் எனக்கு எல்லாம் வல்ல இறைவன் தனது  உடையை இறுக உடுத்துக்கொண்டு எனது வழிகாட்டியாக என் முன் செல்வானாக.

செய்ந்நன்றியறிதல்

எழுமை ஏழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமம் துடைத்தவர் நட்பு

என்றபடி என் நாட்டினை மேம்படுத்தக் கருதி யான் ‘சுதேசிய நீராவிக் கப்பல் சங்க’த்தை நிறுவிய காலத்தில் பல்லாயிரக்கணக்காகப் பொருள் அளித்துத் துணைபுரிந்தும் அவ்வூக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்து வாடிய காலத்தில் வேண்டியவற்றை ஈந்து என் வாட்டத்தைக் களைந்தும், தேசாபிமானமும் என்பால் உளதோ என்று சிலர் ஐயமுறும் இக்காலத்தில் தேசாபிமானத்திற்கே உறைவிடம் என்று சொல்லும்படியான சிறப்பு வாய்ந்த சேலம் ஜில்லாவாசிகள் கூடிய இம்மகாநாட்டின் தலைமைப் பதவியை நல்கி மேன்மையளித்தும், நீங்கள் எனக்குச் செய்த நன்றியை எழுமை எழுபிறப்பும் உள்ளுவேனாக.

என்னைப் பற்றிச் சில சொற்கள்

கல்கத்தா நகரத்தில் நடந்த விசே­ச காங்கிரஸ் மகாநாட்டில் என் தேசீயக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் மாறான கோட்பாடுகள் அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உடனே யான் சென்னைக்கு வந்து, திலகர் சுயாட்சி சங்கத்தின் விசே­ கூட்டம், ஒன்றைக் கூட்டி மேற்கண்ட விசே­க் காங்கிரஸ் மகாநாட்டின் தீர்மானங்களை எல்லாம் கண்டித்து தீர்மானங்களை நிறைவேற்றிப் பத்திரிகைகளிற் பிரசுரித்துவிட்டு யான் காங்கிரஸினின்று விலகி இதுகாறும் ஒடுங்கியிருந்தேன். 

என் கோட்பாடுகளுக்கு மாறான நீதி ஸ்தல பஹிஸ்காரம், கலாசாலை பஹிஸ்காரம், சட்டசபை பஹிஸ்காரம் முதலிய பஹிஸ்காரங்களெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நீங்கிக் காங்கிரஸ் மகாசபை, தனது கல்கத்தா விசே­ மகாநாட்டிற்கு முன்னிருந்த நிலைமைக்கு வந்துவிட்டபடியால் யான் திரும்பிக் காங்கிரஸில் புகலாம் என்று நினைத்தேன்.  

என்னைப் போல காங்கிரஸை விட்டு விலகி நின்ற எனது பிராமணரல்லாத சகோதரர்களில் உண்மையான தேசாபிமானிகள் சிலர் கோவை நகரில் ஒரு விசே­ மகாநாடு கூட்டிப் பிராமணரல்லாதார்களுடைய தேச சேவைக்குக் காங்கிரஸ் மகாசபையைக் கைப்பற்றி ஒரு கருவியாக உபயோகித்தல் இன்றியமையாததென்று தீர்மானித்தார்கள். 

எனக்கும் என் தேசத்திற்கும் நல்லகாலம் பிறந்துவிட்டதென்று கருதினேன். சென்ற பல ஆண்டுகளாக ஒடுங்கியிருந்த யான் எவ்வாறு வெளிவருவதென்று சிந்தித்துக் கவன்று கொண்டிருந்தேன்.

உடுக்கை யிழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு

என்றபடி எனது நண்பர்களாகிய நீங்கள் உங்களுடைய இம் மகா நாட்டிற்குத் தலைமை வகிக்க வேண்டுமென்று எனக்குக் கட்டளை இட்டீர்கள். அக்கட்டளை எனக்கு ‘காலத்தினாற் செய்த நன்றி’யும் ‘பழம் நழுவிப் பாலில் விழுந்தது’ போலும், ஆயிற்று.

‘தேச அரசாட்சியை மீட்பதற்காக தேச ஜனங்கள் சாத்வீக எதிர்ப்பைக் கைக்கொண்டு போராடும் காலத்தில் தேசாபிமானம் இல்லாது புறங்காட்டி ஓடுகின்றீரே’ என்று என்னிடம் கேட்ட ஒரு பாரிஸ்டர் புன்மொழியும் ‘இராஜாங்கத்தாரிடம் கைக்கூலி பெற்றுத் தேசத் துரோகம் செய்து கொண்டிருக்கிறான் சிதம்பரம்பிள்ளை’ என்று பொருள்படும்படி எழுதிய ஒரு பத்திரிகையாசிரியர் புன்மொழியும் இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. தேசாபிமான ஒளி நாளுக்கு நாள் வளர்வதேயன்றிக் குறைவதும் அவிவதும் இல்லை.

 ‘விளக்குப் புகவிருள் சென்றாங்கொருவன் தவத்தின் முன் நில்லாதாம் பாவம்’ என்றபடி தேசாபிமான ஒளிமுன் தேசத்துரோகம் இருள் நில்லாது. இவ்வுண்மையினை அவர் அறிவாராக.

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து

என்று சிலர் என் சென்ற கால ஒடுக்கத்தைப் பற்றிக் கூறும் உயர்மொழியும், ‘பிராமண அபிமானி’ என்று பிராமணரல்லாத சிறுவர் சிலராலும், ‘வஞ்சக சொரூபி’ என்று பிராமணர் ஒருவராலும் அநியாயமாகப் பழிக்கப்பெற்ற ஸ்ரீதிலகருடைய சீடன் வெளிவந்துவிட்டான் என்று பலர் பேசும் உயர் மொழியும் என்னைச் சேரும்படியான நற்காலம் வந்ததற்காக யான் பெரிதும் அக மகிழ்கின்றேன். அந்நற்கால வரவிற்குக் காரணஸ்தர்களாயுள்ள உங்கள் எல்லோரையும் வணங்குகின்றேன்.

அவையடக்கம்

இது போன்ற மகாநாடுகளில் தலைமை வகிக்கும் பெரியார் ஒவ்வொரு வரும் ‘பெருமை பெருமிதமின்மை’, ‘பணியுமாம் என்றும் பெருமை’ என்ற படி தாம் அம்மகாநாட்டின் தலைமை வகித்தற்கு வேண்டிய அறிவும் ஆற்றலும் இல்லாதவரென்று தமது ‘பெருமிதமின்மை’யைக் கூறி யார் யார்க்கும் தாழ்ச்சி சொல்லிப் ‘பெருமையும்’ ‘பெருஞ்சுட்டும்’ பெறுவர். பெரியார்க்கு இலக்கணம் பெருமிதமின்மை கூறலும், யார்யார்க்கும் தாழ்ச்சி சொல்லலும் என்றால், சிறியார்க்கு இலக்கணம் பெருமிதம் கூறலும், யார் யார்க்கும் உயர்ச்சி சொல்லலும் என்பது சொல்லாமலே விளங்கும். 

அது பற்றியன்றோ  ‘சிறுமை பெருமிதம் ஊர்ந்துவிடும்’ எனவும், ‘சிறுமை அணியுமாம் தன்னை வியந்து’ எனவும் கூறியுள்ளார் நம் பெரியார். அவர் வாக்கைப் பின்பற்றிச் சில காரணங்கள் கூறி இம்மகாநாட்டின் தலைமை வகித்ததற்கு யான் தகுதி யுடையோன் என்பதை நிருபிக்கின்றேன்.

 இம்மகாநாடு இந்தியன் நே­னல் காங்கிரசின் ஒரு கிளை. யான் ஒரு இந்தியன். இது சிறந்த தேசாபிமானிகள் கூடியுள்ள மகாநாடு. யானும் தேசாபிமானி என்று சொல்லிப் பெருமை பாராட்டுகின்றவன். 

இம்மகாநாட்டிற் குழுமியள்ளோரிற் பெரும்பாலார் பிராமணரல்லாதார். யானும் ஒரு பிராமணரல்லாதான்.  இந்த ஜில்லா சிறந்த ஒரு தமிழ்நாடு. யானும் சிறந்த ஓர் தமிழன்.

 இம்மகாநாட்டில் முதன்மையாக நிற்போர் வருடக்கணக்கில் சிறைத் தீர்ப்புப் பெற்று வருடக்கணக்கில் சிறையில் வசித்தவர். யானும் ஏககாலத்தில் நடைபெறும் இரண்டு இருபது வருடங்கள் சிறைத் தீர்ப்புப் பெற்று ஒரு நாலரை வருடம் சிறையில் வசித்தவன்.

இம்மகாநாடு உங்கள் எல்லோராலும் மிக நேசிக்கப்பெற்றது. யானும் உங்களால் மிக நேசிக்கப்பெற்றவன். உங்களிற் பலர் உழவும், உபகாரமும் செய்கின்ற உண்மை வேளாளர். யானும் ஜாதி மாத்திரையில் ஒரு வேளாளன். 

உங்களிற் பலர் பலமில்லாத பிற ஜாதியாரைத் தாழ்த்துதலை இயற்கையாக கொண்டுள்ள ஜாதியாரென்று உண்மை தேசாபிமானிகளால் பழிக்கப் படுகின்றவர். யானும் அத்தன்மையான ஜாதியானென்று உண்மைத் தேசாபிமானிகளால் பழிக்கப்படுகின்றவன். 

இப்பல ஒற்றுமைகளால் யான் இம்மகா நாட்டில் தலைமை வகித்ததற்குத் தகுதியுடையோன்.

 ஆயினும், பல வி­யங்களில் என் அபிப்பிராயமும் உங்கள் அபிப்பிராயங்களும் மாறுபடலாம். என் அபிப்பிராயத்தை நீங்கள் கேட்டு, உங்கள் அபிப்பிராயங்களைத் தெரிவித்த பின்னர் யான் எனது அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளுதல் கூடும். ஆதலால் யான் சொல்பவற்றைப் பொறுமையோடு கேட்கும்படியாக உங்களை மிக  வணக்கத்தோடு உங்களைப் பிரார்த்திக்கிறேன்...1

Thursday, July 28, 2022

உண்ணாவிரதத்தை எதிர்த்த பெரியார்

பட்டினியில் எனக்கு நம்பிக்கையில்லை

தந்தை பெரியார்

மற்றும் தோழர் ஜெகதீசனின் பட்டினியைப் பற்றி சிலர் பேசினார்கள். இம்மாதிரி பட்டினியைப் பற்றி எனது அபிப்பிராயம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். பட்டினியில் எந்த விதமான ஆத்மார்த்தம் என்பதோ தெய்வீகம் என்பதோ ஆன தத்துவம் இருக்கிறது என்பதை நான் என்றும் நம்பினதில்லை.

அதனால் எதிரியை மனம் இளகச்செய்து விடலாம் என்பதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. எவ்வித பட்டினியையும் நான் ஆதரித்து அதனால் எந்தக் காரியத்தையும் சாதித்துக் கொள்ளலாம் என்பதாக நான் ஆசைப்பட்டதில்லை. 

தோழர் ஸ்டாலின் தான் தப்பு என்று காரியத்தை ஒழிக்க சரி என்ற பட்ட காரியத்தைச் செய்ய வேண்டுமென்று கருதி அதற்காக ஜீவன்களுக்கு மிக்க அருமையான உயிரைக் கொடுக்க முன் வந்த வீரத்தை மதிக்க வேண்டியது என்பதை மறுக்க முடியாது.

 அன்றியும் தோழர் ஸ்டாலினின் பட்டினியானது காந்தியாரின் பட்டினித் தத்துவத்தை வெளியாக்கவும் தோழர் காந்தியாரின் இனி இம்மாதிரி பட்டினி காரணங்களால் மக்கள் ஏமாந்து போய்விட மாட்டார்கள் என்பதையும் விளக்கவும் அதாவது தோழர் ஸ்டாலின் பட்டினியை காந்தியாரும் காந்தி பக்தர்களும் எப்படி கருதுகிறார்களோ அதுபோலவே இனிமேல் ஏதாவது ஒரு காரியத்துக்கு காந்தியாரும் மற்றவர்களும் பட்டினி இருந்தால் அப்படியே கருதும்படி செய்யவும் இப்பட்டினி பயன்படுவதால் இது ஒரு நல்ல சம்பவம் என்று சொல்ல பின்வாங்கவில்லை.

காந்தியார் விஷமத்தனம்

ஆனால் காந்தியார் தான் பட்டினி இருந்த காலத்தில் அதற்கு அவர் சொல்லிக்கொண்ட காரணங்களும் அதற்காக மற்ற மக்கள் கீழ்ப்படிய வேண்டுமென்று கட்டாயப்படுத்திய செய்கைகளும் உலகம் அறிந்திருந்தும் தோழர் ஸ்டாலின் பட்டினியைப்பற்றி மிக்க விஷமத்தனமாக கொடுத்த அபிப்பிராயத்தை கண்டிக்காமல் இருக்க முடியவில்லை. 

இதிலிருந்தாவது பொது ஜனங்களுக்கு காந்தியாரின் உண்மையான நிலை தெரிய சந்தர்ப்பம் ஏற்பட்டதே என்பதற்காகவும் இந்த பட்டினி வரவேற்கத்தக்கதாகின்றது என்கின்றேன்.

மக்கள் உலகில் இறப்பது இயற்கையானாலும் ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் இறந்தே தீர வேண்டியது முடிவே ஆனாலும் தானாகவே பட்டினி கிடப்பதன் மூலம் சாகத் துணிவது என்பது பொது மக்கள் கவனத்தை இழுக்க மிக்க பயன்படத்தக்கதாய் இருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.

இப்படிப்பட்ட நிலையில் இக்காரியத்துக்காக மனிதத் தன்மைப்படி பரிதாபப்படா விட்டாலும் இதை குறை கூறுவதும் குற்றம் சொல்வதும் சிறிதும் யோக்கியமான காரியம் ஆகாது என்பதை நான் எடுத்துச் சொல்ல வேண்டிய தில்லை.

கடற்கரை சொற்பொழிவு 10.7.1938 குடி அரசு.

Tuesday, July 26, 2022

ரிவோல்ட்

 "ரிவோல்ட்"

திராவிடம் ஊடகங்கள்

  “ரிவோல்ட்” என்னும் ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்றை சென்ற ஆறாம் தேதி செவ்வாய்க் கிழமை பட்டிவீரன்பட்டி திரு. சௌந்திரபாண்டிய நாடார் அவர்களைக் கொண்டு திறப்பு விழா நடத்தி 7 ஆம் தேதி புதன் கிழமை முதல் இதழ் வெளிப்படுத்தி விட்டோம். இனி அதை ஆதரித்து அதன் கொள்கைகளை வெற்றி பெறச் செய்து வைக்க வேண்டியது பொது மக்களின் கடமையாகும்.

“ரிவோல்ட்” பத்திரிகையின் ஆரம்பத்தின் உத்தேசமெல்லாம் நமது நிலைமையையும் கொள்கையையும் தமிழ் மக்கள் தவிர மற்ற மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்கிற ஆவலேயாகும். நமது நிலைமை சென்னை மாகாணத்திலேயே தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய பாஷைகளை நாட்டு பாஷையாகக் கொண்ட பல ஜில்லாக்களுக்கே தெரியவில்லை என்றால் வெளி மாகாணங்களுக்கும் வெளி தேசங்களுக்கும் எப்படித் தெரிந்திருக்க முடியும்?

உதாரணமாக ஒரு சமயத்தில் இந்தியா மந்திரியுடன் திரு. டாக்டர் டி.எம். நாயர் அவர்கள் பேசிக் கொண்டிருந்தபொழுது, “சென்னை பார்ப்பனரல்லாதார்களுக்காக பெரிய உத்தியோகங்கள் அளிக்கப்படவில்லை” என்று சொன்னபோது “திரு. க்ஷ.சூ. சர்மா என்பவர் இந்திய அரசாங்கத்தில் நிர்வாக சபை மெம்பராயிருந்து 6500 ரூபாய் சம்பளம் வாங்குகிறாரே, அது போதாதா” என்று இந்தியா மந்திரி சொன்னாராம். அதற்கு திரு. டாக்டர் நாயர் அவர்கள் "நான் இந்தியாவை விட்டு புறப்படும் வரை திரு. க்ஷ.சூ. சர்மா அவர்கள் பார்ப்பனராயிருந்தார், நான் புறப்பட்ட பிறகு அவர் ஏதாவது பார்ப்பனரல்லாதாராய் விட்டாரோ என்னமோ எனக்குத் தெரியவில்லை. ஆதலால் தயவு செய்து அவர் பார்ப்பனரல்லாதாராக ஆயிருப்பதாய் தங்களுக்கு வந்த செய்தியை காட்டுகிறீர்களா” என்று கேட்டாராம். அதன் பிறகு அந்த இந்தியா மந்திரி திடுக்கிட்டு, “நான் இத்தனை நாளாக அவரை பார்ப்பனரல்லாதார் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்; இப்போது தாங்கள் சொல்வது எனக்கு ஆச்சரியமாய் இருக்கின்றது” என்று சொன்னாராம்.

அதுபோலவே சென்னையில் சென்ற வருடம் நடந்த காங்கிரசுக்கு கல்கத்தாவிலிருந்து வந்த முக்கியஸ்தர்களில் ஒருவரான திரு. கோஸ்வாமி என்கின்றவரோடு நாம் பேசிக் கொண்டிருந்தபோது, “சென்னை மாகாணத்தில் தெருவில் நடக்கக் கூடாதவர்களும், கோவிலுக்குள் போகக் கூடாதவர்களும், தொடக்கூடாதவர்களும், நிழல் மேல் படக்கூடாதவர்களும் இருக்கின்றார்களே, அவர்களைப் பற்றி தங்கள் அரசியல் திட்டத்தில் என்ன கவலை எடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்” என்று கேட்டபோது, அவர் ஆச்சரியப்பட்டு, “அப்படி ஒன்று இருப்பதாக எனக்கு இதுவரை தெரியவே தெரியாது. இது உண்மையா” என்று பக்கத்தில் இருந்த திரு.ஆர். கே. ஷண்முகம் செட்டியாரைக் கேட்டார். அதற்கு திரு.ஷண்முகம் செட்டியார் அவர்கள் சிரித்துக் கொண்டே, “இதற்கு சாக்ஷிக்காக அதிக தூரம் போகாதீர்கள். நானே சில கோவிலுக்குள் போகக் கூடாத ஜாதி என்பதைச் சேர்ந்தவன். ஹைக்கோர்ட்டு வரையில் விவகாரம் செய்து பார்த்தும் எங்களை அந்த கோவிலுக்குள் போகக்கூடாத ஜாதியிலேயே சேர்த்து தீர்ப்பு பெற்று விட்டார்கள். எனவே இனி உங்களுக்கு ஏதாவது சந்தேகம் உண்டா” என்று கேட்டார். பிறகு திரு. கோஸ்வாமி பட்ட ஆச்சரியத்திற்கு அளவே இல்லை.

இதுபோலவே பல உதாரணங்கள் எடுத்துக் காட்டலாம். எனவே நம் நிலையையும் தேவையையும் வெளி நாட்டார்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரியப்படுத்த வேண்டுமானால் தாக்ஷண்யமும் பயமும் சுயநலமும் அற்ற தன்மையில் தைரியமாய் வெளிப்படுத்தக் கூடிய ஒரு சாதனம் இருந்தாக வேண்டும் என்ற கருத்தைக் கொண்டே “ரிவோல்ட்” ஆரம்பித்து விட்டோம். அதன் கொள்கையைப் பற்றி நாம் அதிகமாக சொல்லிக் கொள்ள வேண்டியதில்லை என்றே நினைக்கின்றோம்.

முக்கியமாக அரசியல் துறையில் உழைக்க வேண்டும் என்பது அதன் கவலையல்ல. ஆனால் அரசியல் அயோக்கியத்தனங்களை தைரியமாயும் தாராளமாயும் வெளியாக்கி விடவேண்டும் என்பதே “ரிவோல்ட்”டின் பெருங்கவலைகளில் ஒன்றாகும். அதுபோலவே சாமியைப் பற்றியும் சமயத்தைப் பற்றியும் அதற்கு சிறிதும் கவலையில்லை. ஆனால் அவற்றின் பேரால் நடைபெறும் அயோக்கியத்தனங்களையும் கொடுமைகளையும் அடிமைத்தன்மைகளையும் அறியாமையையும் வெளியாக்குவது எல்லாவற்றையும் விட முக்கியமானது ஆகும்.

சுருக்கமாகவும் மொத்தமாகவும் கூறுமிடத்து இதற்கு முன் ஒரு தடவை அதாவது, “ரிவோல்ட்” பத்திரிகையை அரசாங்கத்தாரிடம் பதிவு செய்து கொண்ட சமயத்தில், அதன் கொள்கை என்ன என்பதாக அரசாங்கத்தார் அறிய விரும்பிய போது தெரிவிக்கப் பட்டதையே மறுமுறையும் தெரிவித்து இதை முடித்து விடுகின்றோம். அதாவது :-

“ரிவோல்ட்” என்ற ஆங்கில வாரப் பத்திரிகை நடத்துவதின் கருத்து, இப்போது நாம் பதிப்பாசிரியராயிருந்து நடத்தும் “குடி அரசு” என்னும் தமிழ் வாரப் பத்திரிகையின் கொள்கைகளையே முக்கியமாய்க் கொண்டு நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ‘ரிவோல்ட்’ என்கின்ற வார்த்தைக்கு எடுத்துக் கொண்ட அர்த்தம் கட்டுப்பாட்டை உடைத்தல் என்பது. அதாவது மனித தர்மத்துக்கும், மனித இயற்கைக்கும் விரோதமாக அரசியலிலானாலும் சரி, மத இயலிலானாலும் சரி, அதிகார இயலிலானாலும் சரி, முதலாளி இயலிலானாலும் சரி, ஆண் இயலிலானாலும் சரி, மற்றும் எவைகளிலானாலும் சரி அவைகளினால் ஏற்படும் இயற்கைக்கும் அறிவுக்கும் மாறுபட்ட கட்டுப்பாடுகளை உடைத்து, உலகமும் அதன் இன்பமும் எல்லோருக்கும் பொது என்பதும் மக்கள் யாவரும் சமம் என்பதுமான கொள்கையை மனசாக்ஷிப்படி சாத்தியமான வழிகளில் பிரசாரம் செய்வதே அதன் நோக்கம் என்பதாகும்.

இதற்கு முக்கிய பத்திராதிபராக திரு. எஸ்.ராமநாதன் எம்.ஏ.பி.எல் அவர்கள் இருந்து வருவார். நாமும் அதில் பங்கு எடுத்து வருவோம். எனவே இதை வாலிப உலகம் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றோம். எம் வாலிப நண்பர்கள் ஆங்காங்குள்ளவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் சந்தாதாரராய்ச் சேருவதுடன் ஒவ்வொருவரும் இது சமயம் மூன்று சந்தாதாரர்களுக்கு குறையாமல் சேர்த்து விட்டு மறு காரியம் பார்ப்பது என்கின்ற உறுதியைக் கொள்ள வேண்டுகின்றோம்.

சந்தா விபரம்

வருட சந்தா ரூ 4 - 0 - 0

மாணாக்கர்களுக்கு ரூ 3 - 0 - 0

வெளிநாட்டிற்கு ரூ 5 - 0 - 0

(விடுதலை 26.07.2022)

Monday, July 18, 2022

காலத்தை வீணடிக்கும் மூட நம்பிக்கை

 காலத்தை வீணடிக்கும் மூடநம்பிக்கை...

................................................................

நல்ல செயல் செய்யக் கூடாத நாட்கள்....

.....................................................................

இராகுகாலம் 1 மாதத்திற்கு.. 1.30 X 30 = 45

ஒரு ஆண்டிற்கு........................ 540 மணி

எமகண்டம் 1 மாதத்திற்கு.... 1.30 x 30 = 45

ஒரு ஆண்டிற்கு....................... 540 மணி

அஷ்டமி (மாதத்திற்கு 2 நாள்)

ஒரு ஆண்டிற்கு...                     48x12 = 576 மணி

நவமி (மாதத்திற்கு 2 நாள்)

ஒரு ஆண்டிற்கு .......................48x12 = 576 மணி

மரணயோகம் 1 மாதத்திற்கு.. 1.30 x 30 = 45

ஒரு ஆண்டிற்கு 540 மணி

கரிநாள் (மாதத்தில் 3 நாட்கள்)

ஒரு ஆண்டிற்கு....                       864 மணி

பிரதமை (பாட்டிமை மாதம் 2 நாட்கள்)

ஒரு ஆண்டிற்கு.....                                   48x12=576 மணி

சூரிய கிரகணம் ஒரு ஆண்டிற்கு

ஒரு நாள்..                                           .. 24 மணி

சந்திரகிரகணம் ஒரு ஆண்டிற்கு

ஒரு நாள்................................                   :24 மணி

மதம் சார்ந்த பண்டிகை ஆண்டிற்கு

33 நாட்கள் ஒரு ஆண்டிற்கு......               33 x 24 =792 மணி

ஆக, மொத்தம்......                                    : 5052 மணி

(5052/24 மணி = 210 நாட்கள்)

ஆக ஆண்டிற்கு 365 நாட்களில் 210 நாட்கள் வீண்.

மத நம்பிக்கை என்ற பேரால் விலை மதிக்கமுடியாத 

நம் நேரம் வீணடிக்கப்படுகிறது.

நம் மூளையில் இடப்பட்ட இந்த விலங்கை முதலில் 

உடையுங்கள்...

வாட்ஸ் அப் பதிவிலிருந்து...

Tuesday, July 12, 2022

டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன்

டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன்

...சு. குமாரதேவன் ...

* தனது ஒன்பதாவது வயதில் (1929) செங்கல்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டில் தன் தந்தையாருடன் கலந்து கொண்டு நாவலர் பார்வையாளராகப் பங்கேற்றார். பின்பு அவர் பேசாத ஊர், பங்கேற்காத இயக்கக் கூட்டங்கள் இல்லை என்ற நிலையை உருவாக்கினார்.

* நாவலர் என்ற அடைமொழி அண்ணா அளித்ததாகும். சமயச் சொற்பொழிவில் சிறந்த ஆறுமுகநாவலர், சபாபதி நாவலர் மற்றும் இலக்கியச் சொற்பொழிவில் நாவலர் சோமசுந்தர பாரதியார் என்று சிலருக்கு மட்டுமே இருந்த பட்டம் நாவலர் நெடுஞ்செழியனுக்குப் பொருந்தியது. இலக்கியம், வரலாறு, சமயம், சட்டம், சமுதாயம் என்று எந்தத் தலைப்பிலும் ஆழமான, பொருட்செறிவான நகைச்சுவையுடன் கூடிய உரை என்பது நாவலரின் தனித்தன்மை. இதனால் அவர் பேச்சைக் கேட்க மக்கள் திரண்டு வந்தனர். கைகளை நீட்டி,குறுக்காக வளைத்து, உயரே தூக்கி ஏற்ற இறக்கத்தோடு பேசுவதை இன்றும் அவர் பேச்சை நேரில் பார்த்துக் கேட்டு ரசித்தவர்கள் அதே ரசனையோடு சொல்வார்கள்.

* ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றம், மூக்கின் கீழே நடுவில் அடர்த்தியாகவும் பக்கவாட்டில் கோடாகவும் செல்லும் ஒரு மாதிரியான மீசை, நீளமான காலர் இல்லாத ஜிப்பா, நீளமான இரு பக்கமும் தவழும் துண்டு என பார்க்க கம்பீரமாக இருப்பார். குறிப்புகள் இல்லாமல் எந்தக் கூட்டத்திலும் பேச மாட்டார். அவர் பேச்சைக் கேட்டவர்கள் அந்தப் பேச்சின் ரீங்காரம் அவர் பெயரைக் கேட்கும் போதும், வாசிக்கும் போதும் உணர்வர்.

* 11-07-1920 இல் பட்டுக்கோட்டை அருகே திருக்கண்ணபுரம் என்ற ஊரில் ராஜகோபாலன் என்ற நீதிக்கட்சி பிரமுகருக்கு நாராயண சாமி என்ற இயற்பெயருடன்  மகனாகப் பிறந்தார். ஒரு தமக்கை, இரு தம்பிகள், ஒரு தங்கை என உடன் பிறந்தோர் அனைவரும் திராவிடர் இயக்கக் கொள்கைளில் பற்றுள்ளோர்.இவர் தம்பி சீனிவாசனும் திராவிடர் இயக்கப்பற்றால் நெடுஞ்செழியன், செழியன் என்று பெயர் மாற்றிக் கொண்டனர். நாவலரின் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவத் தோழர்கள் பேராசிரியர் அன்பழகன் மற்றும் புலவர் நன்னன் ஆகியோர்.அண்ணாமலைப் பல்கலையில் திராவிடர் இயக்கம் காலூன்றக் காரணமானவர்களில் நாவலர் பங்கு அதிகம்.

* இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போதே முதல் மாணவர். இலக்கியம், வரலாறு, அரசியல் விஞ்ஞானம் போன்றவற்றில் எந்தக் கேள்வியைக் -கேட்டாலும் மடை திறந்த வெள்ளம் போல் சொற்பொழி வாற்றுவதில் வல்லவர். நன்றியுரை ஆற்ற நாவலரைத் தான் அழைப்பார்கள். அந்த நன்றியுரை இரண்டரை மணி நேரம் வரை நீளும்.மதுவுண்ட வண்டு போல் மாணவர்கள் மயங்கிக் கேட்பர்.

* நாவலரின் பேச்சைக் கேட்டதிருவாரூர்க் கட்சிக்காரர் ஒருவர், மாணவர்களான நாவலரையும், பேராசிரியர் அன்பழகனையும் அழைத்து பொதுக் கூட்டத்தில் பேச வைத்தார். அவர் வேறு யாருமல்ல., கலைஞர் தான்.

* தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் சிறந்த பேச்சாளராகலாம் என்பதற்கு நாவலர் வாழ்வு சிறந்த உதாரணம்.ஆரம்பத்தில் திக்குவாய்ப் பிரச்சினையால் சரியாகப் பேசமுடியாமல் தவித்த இவருக்கு முறையாகப் பேச்சுப் பயிற்சி தந்தவர் சக மாணவரான க.இராமையா (பின்னாளில் பேராசிரியர் அன்பழகன்).வேகமாகப் பேசும்போது திக்கித் திணறி வார்த்தைகள் வராதபோது 'ங்' என்று ஒரு விதமாக சத்தம் வந்தது. அதையே அவரது பேச்சுப் பாணியாகக்  கொண்டு வெற்றி பெற்றார். பலர் அவர் போல் பேச வேண்டும் என்று பயிற்சி எடுத்தனர்.

* சிதம்பரம் அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தில் சுயமரியாதை இயக்கக் கருத்துக்களைப் பரப்பிய மாணவர்கள் நன்னன், செழியன், அன்பழகன் வரிசை யில் முதன்மைப் பங்கு வகித்தவர் நாவலர்தான். தந்தை பெரியார், அண்ணா, பட்டுக்கோட்டை அழகிரி, சி.பி. சிற்றரசு என்று பல திராவிட இயக்கத்தலைவர்களை அழைத்து சொற்பொழிவாற்ற வைத்தார்.

* பெரியாரைத் தன் கொள்கைத் தலைவராக ஏற்றுக் கொண்டு அவரோடு எம்.ஏ.பட்டம் பெற்றவுடன்  நான்கு ஆண்டுகள் உடனிருந்து பணிபுரிந்தார். சிக்கனத்தில் பெரியாரையும் மிஞ்சும் வாழ்வு வாழ்ந்தார்.

* 1937ல் அண்ணா பற்றி கேள்விப்பட்டு அவரது பேச்சைக் கேட்டு அவரிடம் பழகியது 1943ல் தான். அப்போது தொடங்கிய பழக்கம், 1969 வரை தொய்வின்றித் தொடர்ந்தது. இலக்கியம் பற்றி நாவலரைப் பேசச் சொல்லி அண்ணா கேட்டு இன்புறுவார். ஆரம்பத்தில் படித்தவர்கள் மட்டுமே கேட்டு இன்புற்ற பேச்சு பெரியாரால் பாமரரும் கேட்டு இன்புற மாற்றப்பட்டது.

* கல்லூரிக் காலங்களில் நீண்ட இளம் தாடி, கருப்புநிற புஷ்கோட், ஆறடிக்கும் மேலான உயரம் என்று நாவலரின் தோற்றம் மிக வித்தியாசமாக இருக்கும்.  பேச ஆரம்பித்தால் பல இடங்களில் கலவரமும் வரும். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வெட்டு ஒன்று; துண்டு இரண்டு என்று, தான் சொல்ல வந்த கருத்தைச் சொல்லி விட்டுத்தான் அமர்வார், மாணவரான இளந்தாடி நெடுஞ்செழியன்.

* சங்க இலக்கியங்கள், ராமாயணம், பெரியபுராணம் மற்றும் இலக்கண நூல்களைப் படித்து அதை மனப்பாடமாக உரிய இடத்தில் சொல்லி தன் கொள்கைக்கு மிகப்பெரிய ஆதரவைத் திரட்டுவார் நாவலர். மனப்பாடம் எப்படி செய்வது என்பது பற்றி கேட்டால் முயற்சியும் ஈடுபாடும் இருந்தால் எல்லாம் வரும் என்று சொல்லி அதற்குத் துணையாக சங்க இலக்கியப் பாடலொன்றைக் கூறுவார்.

* பாரதிதாசன் பாடல்களை நாவலர் போல் பட்டி தொட்டி எங்கும் பரப்பியவர் யாரும் இல்லை எனலாம். பேச்சு ஆரம் பிக்கும் போதும், இடையிலும், முடிக்கும் போதும் பாரதிதாசன் பாடல்களை எழுச்சியோடு பாடி, தான் சொல்லவரும் கருத்துக்கு வலுசேர்ப்பார் நாவலர். உணர்ச்சி வயப்பட்டு பாரதிதாசன் பாடல்களை பேசிடும் அழகே தனி. ஆரம்பிக்கும் போதும் இடையிலும் முடிவுறும் போதும் பாரதிதாசன் கவிதைகள் இன்றி முற்றுப்பெறாது அவர் பேச்சு.வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும் என்று முடிக்கும் போது கேட்கும் கூட்டம் உணர்வு பொங்க முழுக்கமிடும் அதிசயம் அவர் பேச்சுக்கும்  உண்டு.

* இடி மழைபோல், அருவி போல் காட்டாற்று வெள்ளம் போல் நாவலர் பேசினாலும் நகைச்சுவை அங்கே இழையோடும். அந்த நகைச்சுவை மாற்றுக் கட்சியினராலும் ரசிக்கப்படும். அப்போதைய அரசியலை இணைத்து அதில் சேர்த்து விட்டு கூட்டம் ரசித்து சிரிக்கும் போது அமைதியாகப் பார்த்து ரசித்து அடுத்த செய்திக்குப் போவார்.

* நாவலரின் தனித்தன்மையான பேச்சைக் கண்டு கேட்டு வியந்த பெரியார், நாவலரை தன்னுடன் சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் சென்றார். அண்ணா அவரது பேச்சை வியந்து நாவலரை நடமாடும் பல்கலைக்கழகம் என்று அழைத்துப் பெருமைப்படுத்தினார். அவர் பேசாத ஊர் இல்லை. அந்தந்த ஊருக்கேற்ப, மக்களின் மனநிலையறிந்து பேசி அடுத்த ஊர் சென்றவுடன் அவர் பேசியதுநகர் முழுவதும் பிரபலமாகி இருக்கும்.

* "சும்மா"என்ற ஒரு வார்த்தையை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு மணி நேரம் நம் வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிக்க வைத்துப் பேசுவார். இது சும்மா பேசியது அல்ல நீங்கள் சிந்திக்கப் பேசியது என்று இறுதியில் ஒரு "பஞ்ச்"வைப்பார்.

*  அண்ணா, நாவலரைப் பொதுச் செயலாளராக்கி 'தம்பி வா' தலைமையேற்க வா. உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறேன் என்று அழைத்தார். தம்பிக்கு எழுதிய பல கடிதங்களில் நாவலரின் பெருமைகளைப் பல படப் புகழ்ந்திருப்பார்.

* 1957ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சேலத்தில் 207 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் நாவலர். நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் அண்ணா "ஒரு தங்கத்தை உங்களுக்கு அளித்தேன் அதைப் பயன்படுத்தாமல் என்னைப்பங்கப்படுத்தி விட்டீர்கள்" என்று வருத்தப்பட்டுப் பேசினார்.

* இலக்கிய உலகிற்கு நாவலர் அளித்த அற்புதமான கொடை அவரது திருக்குறள் உரை, பாவேந்தர் கவிதைகள் திறனாய்வு, திராவிட இயக்க வரலாறு போன்ற நூல்களாகும், திருக்குறளில், நன்கு ஆழங்கால்பட்ட நாவலர், திருக்குறள் மனு தர்மத்திற்கு எதிரான நூல் என்று ஒரு சிறந்த ஆய்வுரையினை அளித்திருப்பார். மதக்கருத்து குறளில் இல்லை என்பதை தனது நெடிய ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளார். இறை, ஊழ், தாமரைக்கண்ணான், இந்திரன் போன்ற இந்துமதம் சம்மந்தமான கருத்துக்கள் உள்ளன என்பதை மறுத்து அவர் சொன்னதற்கு இன்றுவரை யாரா லும் மாற்றுக் கருத்து சொல்ல முடிய வில்லை.

* அரசியல் வாழ்வில் பல மாறுபாடு களை எடுத்திருந்தாலும் அடிப்படை திராவிடர் இயக்கக் கொள்கைளில் இறுதி வரை மாறாமல் இருந்தார் நாவலர்.

* திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியின்  "கீதை யின் மறுபக்கம்"என்ற நூல் அறிமுக விழாவில் அவர் ஆற்றிய ஆய்வுரை போற்றத்தக்க ஒன்று. அந்தப் பேச்சின் ஒலிவடிவம் கேட்போர் கீதை பற்றிய தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வர். ஆணித்தரமாக, தக்க சான்றுகளோடு, சரளமாக அவர் கூறிய கருத்துக்கள் தர்க்கத்தின் இலக்கணம் என்று கூறலாம்.

* தன் அமைச்சர் பதவிக்காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அளிக்கப் பட்ட வரவேற்பை  ஏற்க மறுத்த நாவலர், தனக்கிட்ட பணியான ஆய்வுப் பணியை சிறப்புடன் செய்து முடித்தார். இது அப் போது பலத்த சர்ச்சையை உருவாக்கியது.

அப்பொழுது "சபாஷ் சபாஷ் நெடுஞ்செழியன்" என்று பாராட்டினார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். கோப்புகளைக் கையாள்வதிலும், முடிவெடுப்பதிலும் நாவலர் விரைந்து சட்டத்திற்குட்பட்டு முடிவெடுப்பார்.

* பெரியாரின் அணுக்கத் தொண்டராக இருந்ததால், தன் திருமணத்தைக்கூட திருமணம் முடிந்தவுடன் தான் அறிவித்தார். ஏன் உங்கள் திருமணத்திற்கு என்னை அழைக்கவில்லை என்று கேட்ட தன் நண்பரிடம், எனக்குத் தானே திருமணம் அதில் உங்களுக்கு என்ன வேலை என்று கேட்டு வாயடைத்தார். சிக்கனம் என்பது திருமணத்திலும் இருக்க வேண்டும் என்பது நாவலரின் திடமான கருத்து. 

ஆயிரக்கணக்கான சுய மரியாதைத் திருமணங்களை நடத்திய நாவலர், மதிமுக தலைவர் வைகோ, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் திருமணங்கள் நாவலர் நடத்திய திருமணங்களே.ஆடம்பரமாக நடக்கும் திருமணங்களில் கலந்து கொண்டு ஆடம்பரம் தேவையில்லை என்பதை தன் பாணியில் இடித்தும் காட்டுவார்.

* நாவலர் எழுதிய நூல்களில் "மதமும் மூடநம்பிக்கையும் "

என்ற நூல் மிகச் சிறப்புடையது. தன் வாழ்க்கை வரலாற்றை "என் வாழ்வில் கண்டதும் கேட்டதும் " என்று எழுதினார். ஒரே தலைப்பைப் பலமுறை பேசினாலும், ஒவ்வொருமுறையும் அந்தப் பொருள் பற்றி வித்தியாசமாகக் குறிப்பில்லாமல் பேசமாட்டார்.

 *பகுத்தறிவாளர்கள்

பன்னெடுங்காலம் வாழ்பவர்கள் என்பதற்கு அவர் கூறும் எடுத்துக்காட்டுக்கள், கேட்க மலைப்பாக இருக்கும் இறுதியாக பெரியார் வாழ்ந்தது மிக அதிகம் என்று முடிப்பார். நாவலரும் 80 வயதை தாண்டி 2000ஜனவரி 12ஆம் நாள் மறைந்தார். அதற்கு முன் சென்னை பெரியார் திடலில் 31.12.1999 அன்று திராவிடர் கழகம் நடத்திய புத்தாயிரம் நிகழ்ச்சியில் இறுதியாகக் கலந்து கொண்டு பேசினார். நாவலர் என்னும் பெரியார் தொண்டரின் இறுதிப் பேச்சு பெரியார் திடலில் தான் கடைசியாக முடிவுற்றது.திராவிடர் கழக மேடையில் ஆரம்பமான அவர் பேச்சு அதே மேடையில் இறுதியாக முடிவுற்றது.

* "நாவெல்லாம் தமிழ் மணக்க, செவியெல்லாம் தமிழ் மணக்க, சிந்தையெல்லாம் தமிழ் மணக்க அன்று மேடையேறிய நாவலர் என் நண்பர், தன்மான இயக்கத்தின் தூண் சாய்ந்துவிட்டதே என தமிழகம் புலம்பிட மறைந்து விட்டார். அவர் புகழ் வாழ்க. அவர் பரப்பிய பகுத்தறிவு வெல்க " என்று கலைஞர் தன் இரங்கலுரையில் குறிப்பிட்டார்.

* நீண்டதொரு இரங்கல் அறிக்கை அளித்த ஆசிரியர் கி.வீரமணி பல தகவல்களை அதில் அளித்தார்.

* நாவலர் கொள்கைப்படி எவ்வித மூடச் சடங்கும் இல்லாமல் அவர் இறுதி நிகழ்வு நடந்தது. தன் நீண்ட நாள் நண்பருக்கு ஓடோடி வந்து இறுதி மரியாதை செலுத்தினார் முதல்வர் கலைஞர்.தி.க., தி.மு.க., மதிமுக., கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன. நாவலர் நிறைவான கொள்கை வாழ்வு வாழ்ந்து நிறைந்தார்.

* மனிதன் சிந்திக்க வேண்டும், ஆராய்ச்சி செய்ய வேண்டும் பகுத்தறிந்து பார்க்க வேண்டும். சிந்திக்க மறுப்பவன் 

அவனுக்குத் தானே துரோகியாகிறான். சிந்திக்க அஞ்சுபவன் மூடநம்பிக்கையின் அடிமையாகிறான் என்று நாவலர் பேசிய பேச்சு இன்றும் நம் காதுகளில் ஒலிக்கிறது.

வாழ்க டாக்டர் நாவலர்!